கலையின் – கவிதை
வெண்பனியே
வெள்ளிப் போர்வையோ
வைரத் துளியோ
மழைச்சாரலோ
மலையருவி தூரலோவென
கொஞ்சியது போதுமென்று
போகாமல்
சளிப் பிடித்திருக்கென
உழற வைத்து
பிஞ்சு பிள்ளைகளின்
முனகலில் முகம் மலர்வதை
நிறுத்திக் கொள்
முள் பனியே!
– கலை
மானுட உன்னதம் கவிதை – கவிஞர் கவியரசன்
மானுட உன்னதம்
********************
ஆதி என்ற போது ஆடையின்றி நின்றவன்!
இவன்
பிறப்பை அரிது என்ற அவ்வையின் ஆதரவில்
முடிசூடிக் கொண்டவன்!
ஐந்து திணைகளில் திரிந்து
ஐயம் தெளிந்தவன் !
அண்டம் கடந்தும்
ஆளுமையை விதைக்கத் தெரிந்தவன்!
இவன் சூட்டிய பெயரோடு
திரிகின்றன யாவும் !
இவன் சூட மறுத்தாலோ உதிர்ந்து விழும் பூவும்!
சத்தங்களை எழுத்துக்குள்
அடைத்துக் காட்டியவன்!
எழுத்தோடு எண்ணையும் படைத்து நீட்டியவன்!
காலத்தை நெசவு செய்து
சீலை கொய்தவன்!
ககனமெங்கும் சுற்றி வரும்
லீலை செய்தவன்!
சிரிக்கவும் சிந்திக்கவும்
தெரிந்து இருந்தவன்!
மானுடம் சீர்படும் முறையாவும்
அறிந்திருந்தவன்!
ஓரறிவு ஈரறிவு என்னும்
தொடர்ச்சியின் முடிவு!
ஆறறிவு அடைந்ததே மானுடத்தின் வடிவு !
பேரண்ட பெருந்தவமே மானுடம் !
மானுடம் இல்லையேல் கானகம்!
– கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்.
98949 18250
கவிதா பிருத்வியின் – கவிதைகள்
போரற்ற உலகம்
********************
சமாதானமாக மனம் சொல்கிறது ..
போரற்ற உலகம்
நாட்டின் பெருமை
அணு சோதனைகள் நடத்தும்ம
நாடுகளில்..
யுத்தத்தின் சத்தங்கள்
காதில் ஒலிக்கத் துவங்கிவிட்டன..
குண்டுகளின் சப்தத்தில்
கண்விழிக்கும்
கனவுகள் சிதறுகின்றன.
உலகம் உருண்டை தானே!
அன்பில் விடிந்தால்..
பகைமை விலகும்.
அன்பை விதைத்தால்..
மானுடம் விடியும்.
மானுட உன்னதம்
********************
கரு உரு பெற்று
பிறந்த குழந்தை கற்றுத் தருகிறது
மானுட உண்மையை…
மழலையுடன் பழகிப் பாருங்கள்
மகிழ்ச்சியில் மனம் திளைக்கும்…
இந்த நொடி வாழ்க்கையை
வாழ்ந்து உணர்த்துகிறது பிஞ்சுகள்..
இயற்கையிடம் சரணாகதியாகும்
மனதில் அன்பு உதிக்கிறது..
அன்பின் வழி நடக்கிறபோது
மானுட உன்னதம் மலர்கிறது.
– கவிதா பிருத்வி