இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : சுதந்திரத்திற்கு முந்தைய நிலை – பாகம் 2 பேரா.பு.அன்பழகன்
பாகம் 2
பிரிட்டிஷ் காலனி அரசு இந்திய விளைநிலங்களுக்கு அதிக அளவில் நிலவரியினை விதித்தனர். ஜமீன்தார் இடைத்தரகர்களாக இருந்துகொண்டு விவசாயிகளிடமிருந்து வரிவசூல் செய்து கொடுத்தனர். நிலம் மூலம் பெரும் வருவாய் பல்வேறு காரணங்களினால் குறைந்திருந்தாலும் குறிப்பிட்ட வரியினைக் கட்டாயம் செலுத்தவேண்டியிருந்தது. ஜமீன்தார்கள் பகுதியில் விவசாயம் செய்தவர்கள் அனைவரும் குத்தகைதாரர்கள். இவர்கள் குத்தகையை ஜமீன்தார்களுக்கு அளித்தனர். இதிலிருந்து ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் அரசுக்கு நில வரியைச் செலுத்தினர். உலகப் பெருமந்தம் 1930களில் ஏற்பட்டபோது 75 விழுக்காடு அளவிற்கு மொத்த நிகர நில உற்பத்தியில் வரியாக வசூல் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் காலனி அரசின் மொத்த வருவாயில் பாதி அளவிற்கு நில வருவாய் மூலம் பெறப்பட்டது. சில பகுதிகளில் அரசுக்கு நேரடியாக வரியினைச் செலுத்தும் ரயத்துவாரிய முறையும் பின்பற்றப்பட்டது. இதில் விதிக்கப்படும் நில வரியானது நிலையானதாக இல்லை. இம்முறையினால் 40 முதல் 50 விழுக்காடு நிலங்கள் ரயத்துவாரிய முறையில் நிலப் பிரபுக்கள் வசம் இருந்தது. அரசுக்குக் கிடைத்த வருமானத்தில் 33 விழுக்காடு இராணுவத்திற்கும், 22 விழுக்காடு நிர்வாகச் செலவிற்கும், எஞ்சியவை கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்றவற்றுக்குச் செலவிடப்பட்டது. கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தை பிரிட்டிஷ் அரசு பின்பற்றியதால் ஏற்றுமதி, இறக்குமதி மீது அதிக வரியினை விதிக்கவில்லை. ஏற்றுமதி பொருட்களில் பெருமளவிற்கு இந்திய வேளாண் பொருட்களின் பங்கிருந்தது. இந்திய பொருளியல் அறிஞரான தாதா பாய் நௌரோஜி தன்னுடைய புத்தகத்தில் (Poverty and Un-British Rule in India) ‘வடிகால் கோட்பாடு’ (Drain Theory) என்பதில் இந்தியாவில் விளையும் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கி இங்கிலாந்தின் செல்வம் பெருகுவதற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது இதனால் இந்தியர்களின் வருமானம் குறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தாதாபாய் நௌரொஜி – செல்வம் வடிந்து செல்லும் கொள்கை இந்தியா 18ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பு பல்வேறு ஆளுகையின் கீழ் இருந்தாலும் உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒருபங்கினை அளித்துவந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கி வந்தனர். இதனைப் பிரிட்டிஷhருக்கு முன்பு பின்பு எனப் பிரித்துப் பார்த்தால். பிரிட்டி~hருக்கு முன்பு, முகலாயர்கள், ஆப்கானியர்கள் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆளுகையில் இந்தியச் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன அல்லது சுரண்டப்பட்டன என்று எடுத்துக்கொண்டாலும், இவை அனைத்தும் இந்தியாவிலேயே ஏதேனும் வடிவத்தில் செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரிட்டி~hரைப் பொருத்தமட்டில் இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் இந்தியர்கள் பெரும் துயருக்கும் ஆங்கிலேயர்கள் செல்வமுடன் வாழவும் வழிவகை செய்யப்பட்டது. இந்த நிலை 1600ல் ஆரம்பித்து 1947வரை நீடித்தது. இதனைத் தாதா பாய் நௌhரொஜி செல்வம் வடிந்து செல்லும் கொள்கை என்று அழைத்தார். இந்தியத் தேசிய உற்பத்தியில் ஒரு பகுதி இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றது என்றும். இது ஆண்டிற்குச் சராசரியாக 12 மில்லியன் பவுண்டு எனவும் கணக்கிட்டார். இதனால் இங்கிலாந்து விழிப்படைந்தது எனக் குறிப்பிட்டார். இதுபோன்று உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடைபெறவில்லை என்றார். இந்தியாவிலிருந்து பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது ஆனால் இதில் வரும் லாபத்தை இந்தியாவில் பகிரவில்லை. இந்திய வருமானம் இங்கிலாந்துக்குச் சென்றதை பல்வேறு முறைகளில் கணக்கிட்டார். 1867ல் 8 மில்லியன் பவுண்டும், 1870ல் 12 மில்லியன் பவுண்டும், 1905ல் 34 மில்லியன் பவுண்டும் இங்கிலாந்திற்குச் சென்றது என்கிறார். இந்தியாவிலிருந்து தேசிய வருமானம் ஆண்டுக்கு 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே இங்கிலாந்திற்குச் சென்றது. ஆயினும் இவை ஆண்டுக்கணக்கில் செல்லும்போது மிகவும் அதிக அளவிலிருந்தது என்றார். இதில் பெரும் பகுதி ஆங்கிலேய சிவில், ராணுவ, ரயில்வே துறைகளில் செலவிடப்பட்டது. இவ்வாறு செல்வம் வடிதலால் இந்தியா ஏழ்மையான நாடாகவும், பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டதாகவும் இருந்தது. மேலும் அதிக அளவிலான ஆங்கிலேயர்கள், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்ந்ததால் இந்தியர்களுக்குக் கிடைக்கவேண்டியதைப் பறித்துக்கொண்டதாகவே கருதமுடியும் என்கிறார். இது இந்திய வறுமைக்கான ஒரு காரணமாக பார்க்கவேண்டியுள்ளது. செல்வம் வடிதலால் இந்தியாவின் மூலதன சேர்க்கைத் தடைப்பட்டுப்போனது. இதனால் இந்தியத் தொழில், வேளாண்மை பாதித்தது. குறிப்பாக வேளாண்மையின் மீது செய்யும் மூலதனம் குறைந்தது இதனால் விளைச்சல் அதிகரிக்கவில்லை. காலணி அரசின் மொத்த வருமானத்தில் பாதி அளவிற்கு நில வருவாயிலிருந்து கிடைத்து வந்தது. இது குறையாமல் இருக்கக் கடுமையான முறைகளைப் பின்பற்றி வரி திரட்டுதலில் ஈடுபட்டனர். இதனால் வேளாண்மை பிரிட்டிஷ் ஆட்சியில் பெரும் நெருக்கடிக்கு ஆளானது. விவசாயிகள் வறுமையில் வாடினர் (Dadabhai |
19ஆம் நூற்றாண்டில் 80 விழுக்காடு மக்கள் வேளாண்மையினைச் சார்த்திருந்தனர். கிராமப்புறங்களில் 75 விழுக்காடு மக்கள் நிலமற்றவர்களாகவும், குத்தகைதாரர்களாகவும், விவசாயக் கூலிகளாகவும் இருந்தனர். குத்தகையின் அளவு விளைச்சலில் 50 முதல் 85 விழுக்காடுவரை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. வேளாண் பயிரிடுதலில் பாரம்பரிய முறைகளையே பின்பற்றினர். ஆதலால் விளைச்சல் அதிக அளவில் கிடைக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடையும்போது 2.5 ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்திருந்தவர்கள் 40 விழுக்காகவும், 5 ஏக்கருக்குக் கீழ் வைத்திருந்தவர்கள் 60 விழுக்காடாகவும் இருந்தனர். விவசாயத்திற்கான நீர் பாசம்; முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய அரசர்கள் பல்வேறு வழிமுறைகளில் தண்ணீரைத் தேக்கி வேளாண்மையினை தழைத்தோங்கச் செய்தனர். ஆனால் காலனி ஆதிகத்தில் இதற்கான முக்கியத்துவம் குறைந்திருந்தது. காலனி அரசில் பல்வேறு குத்தகை, இடைத்தரகர், நில வரி முறைகள் புழக்கத்திலிருந்தது.
காலனி ஆதிக்கத்தினால் விவசாயிகள், கிராமப்புற கைவினைஞர்கள், நெசவாளர்கள் என அனைவரும் பாதித்திருந்தனர். காலனி அரசின் நில வரிக் கொள்கையினால் விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். நில வரி அதிகம் செலுத்தவேண்டியிருந்ததால் பாரம்பரிய பயிர் வகைகளைத் தவிற்று வருமானம் அதிகம் தரக்கூடிய பணப் பயிர்களான கரும்பு, பருத்தி, நிலக்கடலை, புகையிலை ஆகியவை பயிரிட்டனர். நிலவுடைமையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் வணிக நோக்கில் பயிர்செய்யப்பட்டதாகும். இதற்கான முதலீடு அதிகம் தேவைப்பட்டது. இச்செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் அளவிற்கு அதிகமாகக் கடன் பெற்று விவசாயிகள் கடனில் மூழ்கினர். கடனைத் திரும்பச் செலுத்தவும், வட்டி செலுத்தவும் இயலாத நிலைகளில் நிலங்கள் விற்கப்பட்டன. நிலங்கள் பயிர்த்தொழில் செய்யாத வண்டிக்காரர்களின் கைகளுக்குச் சென்றது. நிலவுடைமை முறையானது, விவசாயிகளை விசாயக்கூலிகளாகவும், குத்தகைதாரர்களாகவும் மாற்றியது. நிலமற்ற விவசாயிகள் அதிகரிக்கத் தொடங்கினர். வட்டிக்காரர்கள் (வட்டிக்காரர்கள் என்பவர்கள் மார்வாரிகள், பணியா, செட்டியார் என்ற வகுப்பினராகப் பரவலாக இருந்தனர்) நிலத்தின் மீது முதலீடு செய்யத் தயக்கம் காட்டினர். வட்டி மற்றும் குத்தகை வழியாக வட்டிக்காரர்களுக்கு வருமானம் குவியத் தொடங்கியது. ஆனால் இதன் தொடர்ச்சியாக நுகர்ச்சிக்கான கடன் குறையத் தொடங்கியதால், வட்டிக்குக் கடன் பெறுவது குறைந்தது, வட்டிக்காரர்களின் வருமானம் குறையத்தொடங்கியது. எனவே நிலையான நில உரிமை முறையான ஜமீன்தார் முறை வங்காளத்தில் உருவானது. ரயத்துவாரிய முறை பாம்பே மாகாணத்தில் தோன்றியது. தென்னிந்தியாவில் நிலங்கள் பிராமணர்களிடமிருந்து. சமூகத்தில் கீழ்மட்டத்திலிருந்த ஜாதியினர் தோட்ட வேலைகளுக்குக் கூலியாட்களாக இருந்தனர். உயர் ஜாதியினர் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பிராமணர் அல்லாத உயர் ஜாதியினரிடம் நிலங்கள் கைமாறியது.
பருவமழை பொய்த்த காலத்தில்கூட குறிப்பிட்ட நில வரியினைக் கட்டவேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர். ஜமீன்தாரர்கள் தங்களின் நிலங்களைக் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் வரும் குத்தகையில் வரியினைச் செலுத்திவந்தனர். குத்தகையின் அளவு எக்காரணம் கொண்டும் குறைக்கப்படுவதில்லை. ரயத்துவாரிய முறையில் அரசுக்கு உழவர்கள் நேரடியாக வரியினைச் செலுத்தி வந்தனர். வழிசெலுத்தாத விவசாயிகளின் நிலங்கள், சொத்துகள் (அசையும், அசையா சொத்துகள்) அரசினால் கையகப்படுத்தப்பட்டது (ஜப்தி). இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்தும், வறுமையிலும் தள்ளப்பட்டனர். இவ்விரண்டு முறைகளிலும் விவசாயிகள் கடும் துன்பத்திற்கு ஆளானார்கள். மேலும் காலனி ஆதிக்கத்தில் வணிக நோக்கில் பயிர் செய்ய வலியுறுத்தியதால், விவசாயிகள் உணவல்லா–வேளாண் விளைபொருட்களை விளைவித்தனர். இதனால் தங்களின் உணவுத் தேவையினை நிவர்த்தி செய்ய கடன் வாங்கினர். குத்தகை செலுத்துவதற்கு உற்பத்தியினைத் தவிற்று பணம் செலுத்துவதற்கு பணம் தேவைப்பட்டது. வேளாண் விளைபொருட்கள் சந்தை படுத்துதலுக்கு வெகு தொலைவிற்கு எடுத்துச் செல்ல பணம் தேவைப்பட்டது. பணப்பயிர்கள் பயிர் செய்ய இடுபொருட்கள் வாங்குவதற்குப் பணம் தேவைப்பட்டது. இவ்வாறு பல்வேறு வேளாண் நடவடிக்கைகளுக்குப் பணம் தேவைப்பட்டதால் விவசாயிகள் கடன் பெற்றனர். கடன் வழங்கும் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகரித்ததால் கடனுக்கான அளிப்பும் இருந்தது. நில அடமான முறை, நில உரிமை போன்றவை கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றம், புதிய சட்ட நடைமுறையினால் கடன் குறித்த சட்டப்படி அணுகும் முறை இருந்தது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் இருக்கும் நிலை உருவானது. இதனால் வேளாண்மையில் தேக்க நிலை காணப்பட்டது. கடனைப் பொதுவெளியில் வாங்கினார்கள். 97 விழுக்காடு கடன் அதிக வட்டிக்கு முறைசாரக் கடன் முறையில் பெற்றிருந்தனர். 3 விழுக்காடு மட்டுமே முறைசார் கடனாகப் பெறமுடிந்தது. இவ்வட்டியினைச் செலுத்த இயலாதவர்களின் நிலங்கள் வட்டிக்குக் கொடுத்தவரிடமே அல்லது வசதி படைத்தவர்களிடமே பறிபோனது. இதனால் ஒரு புதிய நிலவுடைமையளர்கள் தோன்றத் தொடங்கியது. தரிசு நிலங்கள் அதிகரித்தது. இது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது.
இந்தியக் கிராமங்களில் பாரம்பரியமாக நிலமற்ற தொழிலாளர் குழுக்கள் இருந்தனர். இவர்கள் சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள ஜாதியினைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். பிரிட்டிஷ்ர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்த முறை நடப்பிலிருந்தது. இவர்கள் நிலபிரபுகளின் அடிமைகளாகவே இருந்து வந்தனர். காலனி ஆதிக்கத்தில் இந்த நிலை குறையத் தொடங்கியது. உயர் வகுப்பினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக கட்டுப்பாடு குறைந்தது. கடன் காரணமாக நிலங்களை இழந்தவர்கள் விவசாயக் கூலிகளாக இருந்தனர். இதனால் வேளாண்மையில் புலம்பெயரும் முறை அதிகரிக்கத் தொடங்கியது. இவர்கள் நகரங்களை நோக்கியும், பிரிட்டிஷ் காலனிக்கு உட்பட்ட நாடுகளில் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும், நகர பணிகளிலும், அரசுத் துறைகளிலும் வேலையில் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்தவர்கள் பெருமளவிற்கு ஆண்களாக இருந்தனர். பெண்கள் சொந்த ஊர்களில் விவசாயம் சார்ந்த வேலைகளைச் செய்ததால், பெண்கள் வேளாண்மையில் அதிக பங்கினை ஏற்றனர். கிராமக் கைவினைஞர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர். இவர்களும் வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
விவசாயிகளின் வறுமையினை மூலதனமாகக்கொண்ட வட்டிக்காரர்கள் பற்றி 1899ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், வட்டிக்காரர்கள் மனிதனும் விலங்கும் சேர்ந்த விசித்திரக் கலவை என்றும், சிங்கத்தின் நகங்களையும் நரியின் மூலையினையும் ஆட்டின் இதயத்தையும் கொண்டவர்கள் என்றும், இவர்கள் பணம் பறிப்பவர்கள், ஏழைகளின் ரத்தத்தை உரிஞ்சும் வெறுக்கத்தக்க அட்டை என்றும் குறிப்பிட்டது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தாமல் போகும்போது இவர்களின் நிலங்கள் பறித்துக்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயம் பார்க்காதவர்கள் கைகளில் நிலங்கள் கைமாறியது. ஆனாலும் இவர்கள் விவசாயிகளுக்குத் தேவைப்படுபவர்கள் ஆவார்கள். இந்த அதிக வட்டியை முறைப்படுத்த முதன்முதலில் 1879ல் தக்காண விவசாயிகள் நிவாரணச் சட்டம் கொண்டுவந்தனர். ஆனாலும் கடன் பிரச்சனையினால் நிலம் விற்பனை செய்யப்படுவது தடுக்க முடியவில்லை. இதனால் நில உரிமையை மாற்றும் அதிகாரத்தைப் பறித்தது. இதன்படி பஞ்சாப் உடைமை மாற்றுச் சட்ட மசோதாவை 1900ல் கொண்டுவரப்பட்டது. தேசியத் தலைவர்கள், நடைமுறையில் இச்சட்டம் விவசாயிகளைக் காக்க இயலவில்லை என்று கருதினர். எனவே விவசாயிகள் வட்டிக்காரர்களிடம் செல்லாமல் மாற்று வழியில் கடன் பெறும் வசதியினை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர். பிரிட்டிஷ் காலனி அரசானது 1903-04ல் அரசு கூட்டுறவுக் கடன் சொசைட்டி தொடர்பான மசோதா கொண்டுவந்தது. இதற்கு விவசாயிகளிடமிருந்து வரவேற்பு இருந்தது. இவ்வாறு பல சட்டங்கள் கொண்டுவந்தும் விவசாயிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர். பி.சி.ரே, ரானடே போன்ற தலைவர்கள் வேளாண்மையில் அதன் தேவையினை விட அதிக அளவில் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கத் தொழில் துறையினை வளர்த்தெடுப்பது அவசியமாகும் என்றும், இதனால் விவசாயிகளுக்கு மாற்று வேலை கிடைக்கும், வாழ்வு நிலை மேம்படும், வறுமை குறையும் என்றனர். நாட்டை தொழில் மயமாக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது (பிபின் சந்திரா 2012).
அதிக அளவிற்கான குத்தகை, நில வரி போன்றவற்றால் விவசாயிகள் வாழ்நிலை பாதிக்கப்பட்டது, பலர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கு ஆதரவான நிலையில் அரசியல் கட்சிகள் போராடத் தொடங்கினர். விவசாயச் சங்கங்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். 1869ல் ஒருவர் 12 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குப் பயிர் செய்திருந்தால் அவர் நில அனுபவ பாத்தியம் வந்துவிடுமென்றும், இதுபோல் நில உரிமையாளர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் குத்தகையினை அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இச்சட்டம் எந்த வகையிலும் நிலப்பிரபு–குத்தகைதாரர்கள் மோதலைக் குறைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வங்காளத்திலும், பீகாரிலும் விவசாயிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எனவே 1883ல் காலனி அரசால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, 12 ஆண்டுகள் நிலத்தை தம்வசம் வைத்திருந்தவர்களுக்கு அதன் உரிமை வழங்கப்படும், இந்த உரிமை பரம்பரையாக வரும், எந்தவித கட்டுப்பாடுமின்றி உள்குத்தகைக்கு விடலாம், குத்தகை மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் (குத்தகையானது மொத்த உற்பத்தியில் 16ல் 5 பங்கிற்குமேல் இருக்கக்கூடாது) என்றது. உடைமை உரிமையற்ற ரயத்து நீக்கப்பட்டால் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஜமீன்தாரர்களின் புகார்களை கவனிக்க எளிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை ஜமீன்தாரர்கள் கடுமையாக எதிர்த்தனர். எனவே இதில் பல மாற்றங்களுடன் 1885ல் சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டம் உண்மையில் உழுபவர்களுக்குச் சாதமாக இல்லை. இதனைத் தொடர்ந்து அவுத் குத்தகைச் சட்டம் 1886ல், வங்காளக் குத்தகைச் சட்டம் 1898ல், மலபார் குத்தகைச் சட்ட மசோதா 1899ல், வடமேற்குக் குத்தகை மசோதா 1901ல் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் இரயில், துறைமுக உள்கட்டமைபுகளைத் தங்களின் சுயலாபத்திற்காகக் காலனி ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்டது. இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் பொருட்கள் பெருமளவிற்கு இரயில்–துறைமுகங்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் உள்நாட்டு உணவுத் தேவையினை நிறைவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. உபரியான உணவு தானியங்களைச் சேமிக்கக் கிடங்குகளும் கட்டமைக்கப்படவில்லை. பஞ்ச காலங்களில் இதனால் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் மாண்டுவிட்டனர். இக்கால கட்டங்களில் பிரிட்டிஷ் அரசு தொன்மை பொருளியல் அறிஞரான ஆடம் ஸ்மித்தின் ‘தலையிடாக் கொள்கை’, ‘கட்டுப்பாடற்ற சந்தை’ கொள்கையினைப் பின்பற்றியது. இதனால் அரசு பஞ்சத்தைப் போக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பஞ்சகாலங்களில் பிழைப்பு தேடி பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்குத் தோட்ட வேலைகள் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர்.
காலனி ஆதிக்கத்தில் வேளாண்மைத் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளானது. இத்துடன் பெரும் பஞ்சங்களும் அவ்வப்போது தோன்றியது. பிரிட்டிஷ் அரசு இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதனால் விவசாய இயக்கங்கள் தோன்றத் துவங்கியது. குத்தகைப் பாதுகாப்பு, நில வாடகையினை குறைத்தல் போன்ற கோரிக்கைகள் இயக்கங்களால் முன்வைக்கப்பட்டது. ஒத்துழையாமை இயக்கம், காலிபத் இயக்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தியது. 1931ல் கராச்சியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகள் விவாதிக்கப்பட்டது. 1935ல் அலகாபாத் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஜமீன்தாரி ஒழிப்பு தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளும், சோசியலிஸ்டுக்களும் விவசாய அமைப்பில் பங்கேற்றனர். ரயத்துவாரிய முறையில் நில உரிமை விவசாயிகளிடம் இருந்ததால் அரசியல் அளவில் ஜமீன்தாரி ஒழிப்பினை முன்னெடுத்தனர் ரயத்துவாரிய முறையினை ஆதரித்தனர். 1936ல் அகில இந்திய விவசாயக் காங்கிரஸ் துவக்கப்பட்டது. 1937ல் நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான கோரிக்கைகள் இடம் பெற்றது.
1937-1939ஆம் ஆண்டுகளுக்கிடையே 28 மாத இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில், இந்திய மாகாணங்களில் வேளாண் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்குப் பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜமீன்தார் ஒழிப்பிற்கு இந்தியா முழுவதும் விவசாயிகள் குரல் கொடுத்தனர். குமரப்பா குழு (காங்கிரஸ் வேளாண்மை சீர்திருத்தக் குழு) அரசுக்குப் பலவேறு வேளாண் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தது. எனவே சுதந்திரம் அடைந்தவுடன் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1960க்கு முன்பு நான்கு முக்கிய வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது அதன்படி 1) இடைத்தரகர்கள் ஒழிப்பு, 2) குத்தகை சீர்திருத்தம் (குத்தகையின் கால அளவு, வாடகைக் குறைப்பு, குத்தகைதாரர்களுக்கு நில உரிமை, 3) நில உச்சவரம்பு, 4) கூட்டுறவு மற்றும் சமுதாய வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனை நிர்வாகச் சீர்திருத்தங்கள் (Institutional reforms) என அழைக்கப்பட்டது. 1960களின் இரண்டாம் பகுதியில் வேளாண் தொழில்நுட்பச் சீர்திருத்தங்கள் (Technological reforms) கொண்டுவரப்பட்டது அதன் முக்கியப் பகுதியாகப் பசுமைப் புரட்சி (ரசாயன உரங்கள், தரமான விதைகள், வேளாண் கருவிகள், நீர்ப்பாசன வசதி) கொண்டுவரப்பட்டது.
நிலவுடைமைச் சிக்கல் இந்திய வேளாண்மையின் மிக முக்கியமானதாக நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. நிலவுடைமையளர்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். முதல் வகை: தங்களது நிலத்தை நேரடியாக சாகுபடி செய்யாமல் மற்றவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பவர்கள். இரண்டாவது வகை: நிலத்தை தங்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் விவசாயக் கூலிகளைக் கொண்டு சாகுபடி செய்வது. மூன்றாவது வகை: நிலத்தை தாங்களாகவே பாடுபட்டு உழைத்து சாகுபடி செய்பவர்கள். இதில் முதல் வகையினரால் வேளாண்மையில் பெரும் சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. எனவே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டது. இந்த முதல் வகையில் ஜமீன்தாரி, ஜாகிரிதாரி, இனாம் போன்றவர்கள் 40 விழுக்காடு சாகுபடி நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர். ரயத்துவாரி முறையில் 60 விழுக்காடு சாகுபடி நிலங்கள் இருந்தது. குத்தகைதாரர்கள் பாதுகாப்பு இன்றியும், அதிக நில வாரம் கொண்டதாகவும் இருந்தது. இந்த இடைத்தரகர்கள் நில வருவாயினைப் பெறுவதற்காகக் காட்டிய ஆர்வம் வேளாண் உற்பத்தி அதிகரிக்க காட்டவில்லை. இவர்கள் குத்தகைதாரர்களிடம் அதிக கெடுபிடியுடன் நடந்துகொண்டனர். எனவே, இம்முறையினை ஒழிக்கச் சட்டங்களைக் கொண்டுவரப்பட்டது (அன்சர் அலி 1972).
இடைத்தரகர்கள் ஒழிப்பிற்கு மிகப்பெரிய எதிர்ப்பினை சந்திக்கவேண்டியிருந்தது. இடைத்தரகர்கள் ஒழிப்பின் மூலமாக 20 மில்லியன் குத்தகைதாரர்கள் நில உரிமையாளர்களாக்கப்பட்டனர். குத்தகையின் அளவு வெகுவாகக் குறைந்தது (1950-51ல் 42 விழுக்காடாக இருந்தது 1960களின் முற்பகுதியில் 20 முதல் 25 விழுக்காடாகக் குறைந்தது. ஜமீன்தார் ஒழிப்பிற்காக அவர்களுக்கு (ஜமீன்தார்களுக்கு) இழப்பீடு தவணை முறையில் நீண்ட கால அடிப்படையில் வழங்கப்பட்டது. பல ஜமீன்தார்கள், ‘சொந்த பயிரிடல்’ (personal cultivation) என்ற அடிப்படையில் நில உரிமையினைத் தக்கவைத்துக் கொண்டனர். இதனால் குத்தகைக்குப் பயிரிட்டவர்கள் பெருமளவிற்கு வெளியேற்றப்பட்டனர். இவர்கள் வேளாண் கூலிகளாக மாறினர். சொந்த பயிரிடல் என்ற அடிப்படையில் முதலாளித்துவப் பயிரிடல் உருவாக்கத் தொடங்கியது. பணப் பயிர்கள் அதிகரிக்க தொடங்கியது. மாநிலங்களின் இடைத்தரகர்கள் ஒழிப்பிற்குப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற காலதாமதம் ஆனது, பல ஜமீன்தார்கள் நீதிமன்றம் சென்றதால் இடைத்தரகர்கள் ஒழிப்பிற்கு நீண்டகாலம் எடுத்துக்கொண்டது. நில வரைபடம் சரியாக இல்லாததும் ஒரு பின்னடைவாக இருந்தது. பெரும், நடுத்தர நிலவுரிமையாளர்கள் உள்–குத்தகைக்கு விடும் செயலில் ஈடுபட்டனர். இதனால் குத்தகைதாரர்கள் பெருகத் தொடங்கினர் (Bipan Chandra et al 2008). இதன் அடிப்படையில் குத்தகைச் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
குத்தகைச் சீர்திருத்தத்தின் முக்கியக் குறிக்கோள்கள் 1) குத்தகை கால வரம்பினை உறுதி செய்தல், 2) நில வாடகையினைக் குறைத்தல், மொத்த நிலத்தின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கிலிருந்து ஆறில் ஒரு பங்குவரை நில உரிமையாளர்களுக்குச் செலுத்தப்படுவது, 3) குத்தகைதாரர்களுக்கு நில உரிமையினைப் பெற்றுக்கொள்ளும் நிலை போன்றவை ஆகும். குத்தகை பெரும்பாலும் வாய்மொழியாகவும், முறைசாரா நிலையிலும் நடைமுறையிலிருந்தது. 1961ல் கணக்கெடுப்பின்படி 82 விழுக்காடு குத்தகைதாரர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தனர். குத்தகைச் சீர்திருத்த சட்டத்தைக் கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் குறிப்பிடத்தக்க வெற்றியினை அடையவில்லை. பெருமளவிற்கானக் குத்தகைதாரர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. குத்தகைதாரர்கள் நில உரிமையாளர்களுக்கு நிலையான (fixed) அளவில் வேளாண் விளைபொருட்களைப் பகிர்வது அல்லது ரொக்கமாக அளிப்பது தொடர்ந்துகொண்டிருந்தது. எனவே நியாயமான குத்தகையினை நிர்ணயிக்க சீர்திருத்தத்திற்கு வழிவகுத்தது. ஆனால் பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஹரியானா மாநிலங்களில் 33.3 லிருந்து 40 விழுக்காடு அளவிற்கு மொத்த உற்பத்தியில் குத்தகை விதிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் 50 விழுக்காடுவரை இது இருந்தது. மற்றோர்புறம் 1960களின் பிற்பகுதியில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் உற்பத்தி, நிலப் பயன்பாடு, குத்தகை அளவு போன்றவை அதிகரித்தது. எனவே குத்தகை சீர்திருத்தம் சிறிய அளவிற்கே வெற்றி கண்டது.
ஜமீன்தார் ஒழிப்பு, குத்தகைச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் போன்ற நிலச் சீர்திருத்தங்களால் விவசாயிகள் முதலீடு செய்வதை அதிகப்படுத்தினர். இதனால் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரித்தது. இச் சீர்திருத்தத்தினால் அதிக அளவிற்கான விவசாயிகள் நில உரிமையாளர்களானார்கள். பல ஜமீன்தார்கள் சொந்த பயிரிடல் நிலைக்குத் திரும்பினர். இதனால் குத்தகைதாரர்கள் பயிர் செய்வதை இழந்தனர். நிலமற்ற விவசாயிகள் பயிரிட நிலம் வழங்கப்பட்டது. குத்தகை அளவு குறைந்தது. முறைசார் கடன் கிடைக்கப்பெற்றனர்.
1950களின் கடைசி ஆண்டுகளில் நில உச்சவரம்பு சட்டம் மாநிலங்களில் இயற்றப்பட்டது. இவ் நில உச்சவரம்பிற்கு சில விதிவிலக்கும் அளிக்கப்பட்டது. நில உச்சவரம்பானது மாநிலங்களுக்கிடையே வேறுபாட்டுடன் காணப்பட்டது. 1970களின் கடைசி ஆண்டுகளில் 2.4 மில்லியன் ஏக்கர் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இது மொத்த சாகுபடி நிலப் பரப்பில் 0.3 விழுக்காடாகும். 1985ல் 7.2 மில்லியன் ஏக்கர் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது இதில் 4.3 மில்லியன் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் 3.3 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர். இதில் 98.2 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களாவார்கள். 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் 4.7 மில்லியன் விவசாயிகள் பயன் அடைந்தனர். இதனால் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை பெருகியது (டீipயn ஊhயனெசய நவ யட 2008).
இந்திய விடுதலைக்கு முன்பு பெரும் பஞ்சங்கள் 18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் உணவு அளிப்பின் பற்றாக்குறையினால் ஏற்பட்டது. பருவமழை பொய்த்தது அதனைத் தொடர்ந்து பயிரிடுவதில் தோல்வி, உணவு விளைபொருட்கள் உற்பத்தியின்மை போன்ற காரணங்களினால் 1769 முதல் 1943ஆம் ஆண்டு முடிய உள்ள காலங்களில் பஞ்சத்தால் சுமார் 30 மில்லியனுக்கு மேல் செத்து மடிந்தனர். எனவே இந்தியா சுதந்திரம் அடைந்தபோது “அதிகம் பயிர் செய்வோம்” என்ற இயக்கம் 1947ல் உதயமானது. 1948ல் வேளாண் சீர்திருத்தத்தின் முக்கியமானதான இடைத்தரகர்கள் ஒழிப்பு நிறைவேற்றப்பட்டது. 1948ல் இந்தியாவின் முதல் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டம் கட்டமைக்கப்பட்டது. வங்கத்தின் துயரம் என்று அழைக்கப்பட்ட தாமோதர் நதியினைப் பல்நோக்கு நிலைக்கானதாக வெள்ளம் தடுப்பு, நீர் பாசம், நீர் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வு, காடு வளர்ப்பு, போன்றவற்றை அடைய அணை கட்டப்பட்டது. உணவுப் பொருட்களின் தேவை அதிகமாகவும் அளிப்பு குறைவாகவும் இருந்தது இதனைப் போக்க 1951ல் பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசு முன்னுரிமை அளித்தது.
இந்தியாவில் மண்ணின் தன்மை குறைந்ததாகவும், கால்நடை உற்பத்தித் திறன் ஒப்பீட்டு அளவில் குறைவான தரத்திலிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை, வேளாண் விளைபொருட்களைச் சந்தை படுத்துதலில் பின்தங்கிய நிலை, விவசாயிகள் உரம், தரமான விதை, வேளாண் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் போதுமான அளவிற்குத் தெளிவில்லாமல் இருந்தது, வேளாண்மையினைச் சார்ந்த மக்கள் அதிக அளவிற்கு வளர்ச்சி அடைந்தால் சாகுபடிக்கான நில பற்றாக்குறை, வேளாண் தொழிளாலர்களின் குறைந்த அளவு கூலி, குறைவான முதலீட்டின் மீதான திரும்ப பெறுதல் போன்றவை இந்திய வேளாண்மையில் காணப்பட்டது. அதேசமயம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகமயமாக்கல் நடைபெற்றது இதனால் வாணிப நோக்கில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. வாணிபநோக்கில் அதிகமாகப் பயிர்செய்த பகுதிகள் வேளாண்மையில் முன்னேற்றம் கண்டிருந்தது. பாரம்பரியப் பயிர் தொழில் முறை குறையத்தொடங்கியது. 1930களில் ஏற்பட்ட உலகப் பெருமந்தம் இந்திய வேளாண்மையினை பாதித்தது. எனவே வேளாண்மையில் பல்வேறு சீர்திருத்தங்களைப் பிரிட்டிஷ் காலனி ஆட்சி கொண்டுவந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வேளாண்மையில் இந்தியா பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதிகமாக வேளாண் உற்பத்தி நடைபெறும் பகுதிகளான சிந்து மாகாணம் பாக்கிஸ்தான் நாட்டிற்கும், கிழக்கு வங்காளம் தற்போதைய பங்களாதேஷ் நாட்டிற்கும் சென்றது. மேலும் இந்தியப் பிரிவினையினால் அதிகமான அகதிகள் பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்தடைந்தனர். இதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது இதனைச் சரிசெய்யத் திட்ட காலங்களில் வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1950களிலிருந்து 1990கள் வரை வேளாண்மை உற்பத்தியினையும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தொடர்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டது. இதற்கான அடிப்படை ஆதாரமான நீர்ப்பாசன கட்டமைப்பினை அதிக அளவில் உருவாக்கப்பட்டது, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேளாண் மேம்பாட்டிற்கு வழிவகை செய்தது. இதன் விளைவு இந்தியா வேளாண்மையில் சுயச்சார்பினை அடைந்துள்ளது. 2000ஆம் ஆண்டுகளிலிருந்து 2010ஆம் ஆண்டுகளில் இடைப்பட்ட காலங்களில் இந்த நோக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு உணவு பாதுகாப்பு என்ற நிலையினை அடையக் கொள்கைகள் வகுக்கப்பட்டது. 2010களின் இறுதியில் இதிலும் மாற்றம் கண்டு வேளாண் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வழிமுறைகளைக் கண்டு வருகிறது. பால், பருப்பு வகைகள், சணல், அரிசி, கோதுமை, பருத்தி, பழங்கள், காய்கறிகள், நறுமண விளைபொருட்கள், மீன், கால்நடைகள் எனப் பலநிலைகளிலும் உலக அளவில் அதிக உற்பத்தி செய்யும் நாடாகத் தற்போது இனம்காணப்படுகிறது. அதேசமயம் அதிக விவசாயிகள் வறுமையில் வாழ்வதும், உலகில் விவசாய தற்கொலைகளின் நாடாக இந்தியா இருப்பதும், அதிக அளவிற்குச் செயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துவதும், அதிக அளவில் குறு–சிறு விவசாயிகளை உடையதாகவும், சராசரி பயிரிடும் நிலம் 1 ஹெக்டேருக்கு கீழ் உள்ளதும், அதிக அளவிற்கான பருவ மழையினைச் சார்ந்து இருப்பதும், நிலத்தடிநீரை அதிகமாக உரிஞ்சப்படுவதும், குறைவான வேளாண்மைக்கான முதலீடு, அதிக அளவில் விவசாயிகள் வேளாண்மையினை விட்டு வெளியேறி வருவதும், வேளாண்மை இலாபமற்ற தொழிலாக மாறிவருவதும் என பல்வேறு அறைகூவல்களை தற்போது இந்திய வேளாண்மை சந்தித்து வருகிறது.