நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்

நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்




தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன் தொடங்கி நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். இத்தகு படைப்பு கண்ணிகளில் எழுத்தாளர் மீனா சுந்தரும் சேருகிறார்.

பழநியில் உள்ள கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் மீனா சுந்தரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு “புலன் கடவுள் “ . கீழத்தஞ்சையில் பிறந்த கதாசிரியர் ,பழநியில் பேராசிரியராக இருக்கிறார் . புலம்பெயர்வு இவரது கதைகளிலும் எதிரொலிக்கிறது .பேராசிரியராக இருப்பினும் இத்தொகுப்பிலுள்ள இவரது படைப்புகள் பெரும்பாலானவை தமிழகத்துக்குள்ளே பிழைப்புக்காக புலம்பெயர்ந்த அடித்தட்டு மக்களைச் சுற்றியே அமைந்துள்ளதை உணரமுடிகிறது..

‘செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை ‘ எனும் கதை , அலுவலகத்தில் நிலவும் , லஞ்ச ஊழல் சூழலின் முடைநாற்றத்தை எடுத்துரைத்து காறி உமிழச் செய்கிறார். இக்கதையை வாசிப்பவர் எவரும் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவாராயின் அவரது மூக்கிலும் மலம் நாற்றத்தை உணர்ந்து ஒதுங்குவார். அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை. ஆனால் மஞ்சள்கொன்றைப் பூவைப் பார்க்கும்போதும் இந்தக் கதையை நினைவுக்கு வரும் ஆபத்துமுண்டு.

‘ பெருகும் வாதையின் துயரநிழல் ‘எனும் இரண்டாவது கதை தாயையும், தங்கையையும் ஸ்கூட்டர் விபத்தில் இழந்த சிறுவனின் எதிர்வினையும், அதன் விளைவாய் தந்தை படும் வாதையையும் , வாசக நெஞ்சுருக எடுத்துரைக்கிறார்.. அடுத்துவரும் , ‘மிதவை’ கிராமத்துப் பண்ணையார், கிராமத்து பொதுக்குளத்தை ஆக்கிரமித்து செய்யும் அக்கிரமத்திற்கு எதிராகப் போராடும் முதிய விவசாயியின் கதை.கீழத் தஞ்சையின் ஈரம் மணக்கிறது. ‘நியதி ‘ கதை, கொய்யாப்பழம் விற்கும் முதிய தம்பதி, அனாதைக் குழந்தைகளைத் வளர்த்து படிக்க வைத்து மேம்படுத்தும் சீலத்தையும் , அவர்கள் இருவரும் கொய்யாபழம் விற்கும் நியதியையும் சொல்கிறது. வாசக மனம் ஆயக்குடி கொய்யப்பழத்தைப் போல இனித்து மணக்கிறது.

இக்கதையைப் போலவே பழநி நகரப்பேருந்து நிலையத்தைக் களமாக வைத்து இயங்கும் இன்னொருகதை ‘ சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று…’ செருப்புத் தைக்கும் தொழிலாளி, தனது மகனைப் படிக்க வைத்து தனது பால்ய நண்பனைப் போல பெரிய அதிகாரியாக உயர்த்தவேண்டும் என்ற லட்சிய ஆவேசத்தில் தனது நண்பனின் நினைவாக இருக்கிறார். ஆனால் சென்னையிலிருந்து வரும் உயரதிகாரியான நண்பன் .பால்யத்தில் உதவிய தன்னையே மதிக்காமல் உதாசினப்படுத்துவதும் அல்லாமல் குடியும் கூத்துமாய் இருக்கிறார். தடமாறிய நண்பனைக் கண்டு சினந்தெழும் வீராவேசம் தான் கதை. ஒடுக்கப்பட்டவரெல்லாம் மனத்தால் ஒடுங்கியவரல்ல என்று சுருக்கென்று சொல்லும் கதை.

‘ உயிர்வேலி’, ‘ நெகிழ் நிலச்சுனை ‘ போன்ற கதைகள் கிராமாந்திர தாய்மார்களின் தாய்மையை இருவேறு கோணங்களில் உருக்கமாகச் சொல்லும் கதைகள். இதேபோல, ‘தீய்மெய் ‘, ‘பாத்தியம் ‘ என்ற இருகதைகளும் தந்தை பாசத்தையும், அர்ப்பணிப்பையும் இரு மாறுபட்ட கோணங்களில் வாசகமனம் நெகிழ எடுத்துரைப்பன . ‘தவிப்பின் மலர்கள் ‘ கதையும் தந்தை மகனுக்கிடையே நிகழும் பாசப்போராட்டத்தை நாகசுரக் கலைஞர் குடும்பத்தைக் களமாகக் கொண்டு சொல்வது. நாகசுரக் கலைஞர் , நாகசுரம் வாசிக்கும்போது அவரது மெய்ப்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மீனாசுந்தர்.

‘புலன் கடவுள் ‘கதை, தேநீரை ரசனையோடு அருந்தும் இளைஞனின் அனுபவத்தை அவனுக்கு அமையும் முரண்பட்ட குடும்பச் சூழலை மெல்லிய நகைச்சுவை மிளிர சுவையாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ’தருணம்’ கதை ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவனது பெற்றோரின் துயரங்களை நெகிழ்வாய் வாசகமனதுக்கு இடம்பெயர்க்கும் கதை.

கதாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் , செய்யுள் வழக்கு, நாடகவழக்கு, உலக வழக்கு என்று சொல்லும்முறை அறிந்தவர் . அவற்றை கதைச்சொல்லும் நடையில் அங்கிங்கெனாதபடி கலந்திருக்கிறார் . காவியத் தன்மையான வர்ணிப்புகளோடு கதைகளைத் தொடங்கினாலும், வாசிப்பை இடறாமல் கதைநிகழ்வுகளை அடுக்கி வாசிப்பை இயல்பாக நகரச் செய்கிறார். கவித்துவமான கதைத் தலைப்புகள் கதையின் உயிர்ப்பான முதன்மை பாத்திரங்களுக்கு முரண் நிலையிலிருந்து அணுகச் செய்கின்றன.இதற்கு ‘மாமிச வெப்பம் ‘ போன்ற கதைகளைச் சுட்டலாம்.

கதையில் சொல்லப்படும் உவமைகளும் ,படிமங்களும் கூட முரண் அழகோடு மிளிர்கிறது. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் , ‘வராக பேரரசன் படைசூழ ஆட்சி செய்வதாகச் சொல்கிறார்.’ கண்ணகி அவிழ்த்த கூந்தலாக விரிந்து நீண்டு செல்கிறது முத்துப்பேட்டை சாலை,’என்கிறார் . ‘கிராமத்து தெருக்கள் மண்புழுக்களாக உழண்டு கிடக்கின்றன ’ ; ‘அதிர்ச்சியின் சவ்வூடுபரவல் ‘ இப்படி நீண்ட பட்டியலிடலாம். எனினும் கதையின் உணர்ச்சிவேகம் குறையாமல் நகர்த்துகிறார் கதைசொல்லி.

மீனாசுந்தர் கல்லூரி பேராசிரியர் என்பதால் , இவர் இன்னும் சிறப்பான கதைகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தர வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை இக்கதைத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது.

– ஜனநேசன்

நூல் : புலன் கடவுள் “ – சிறுகதை
ஆசிரியர் : மீனா சுந்தர்
விலை : ரூ.₹190/-
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




தேநீர் இடைவேளை
*************************
சிறகு விரித்த பறவையாய்…
புத்துணர்வின்…
புதையலாய்… மனம்
தேடிடும்… தேநீர்
இடைவேளையில்…

உன் குவளையைக்
கையிலேந்தத் துடிக்கும்
விரல்களுக்கு மத்தியில்…
உள்ளக் குதூகலம்…
திடம்…மணம்…சுவை
எதிர்பார்க்க…

உள்ளுணர்வின்…
உண்மை உணர்ந்தே…
உத்வேகம் கொண்டே…
பொங்கியெழுந்த
பாலில் புதுச்சட்டை போட்டே…

குவளைக்குள் நடனமாடிக்
கொண்டிருக்கிறாய்…சிந்திய
திவலைக்குள்…சிந்தாத
என் ருசியாய்…

நினைவுகள்
*****************
வாரந்தவறாமல்…
எண்ணெய் வைத்தே…
குளிப்பாட்டுவது போல்…

என்னையும்..நீரால்
கழுவி… எண்ணெய் போட்டு அழகு பார்த்தே…

மெலிந்த சக்கரத்தை காற்றால் நிரப்பி…
கடவுளாய்… வணங்கிய காலமும்…
கண் முன்னே நிற்க…

பட்டும் படாமல்… தொட்டும் தொடாமல்…
ஓரமாய் நிற்க வைத்தே…
உபயோகமில்லாமல் உதாசீனம்
செய்வார்கள் என்று ஒருபோதும்…
நினைத்ததில்லை…

எதிர்திசைச் காற்றை… கடினமாய்
அழுத்தி… சேரும் இடம்… தூரமாக்காமல்
சேர்த்த என்னை இன்று தூரமாக்கிவிட்டார்கள்…

குழந்தைகளை முன்வைத்தே…
அவர்களுக்குக் கொடுத்த…
முக்கியத்துவத்தை… எனக்கும்
கொடுக்க… தவறிவிட்டார்கள்…

வெயிலில் நின்றால்… துருப்பிடிக்கும்
என்றே எண்ணியவர்கள்…
வெயிலே… என் ஆயுளாய்
மாற்றிவிட்டார்கள்…

அழகுக்கோர் அழகாய்… என்னை
அழகுபடுத்தியவர்கள்…
அழுக்கேறி… துருப்பிடிக்கக்
காரணமானார்கள்…

என்னென்ன குற்றம் சொல்ல…
இவர்களை… என் மனக் குமுறல்
அனைத்தும்… சாய்ந்து நிற்கும்
கருங்கல்லிடம் சொல்லி விட்டேன்…

இருந்தும் அது என்ன செய்யும்…
கல்லாய் மாறிய மனித மனம்…
மாறும் காலம் வரும் என்றே…
காத்திருக்கிறேன்… என் ஆயுள்
முடிந்தாலும்… ஆகாய வெளிச்சத்தில்…
காய்ந்து கிடப்பேன்… வளமையான
நினைவுகளுடன்…

– சக்தி ராணி

Introduction to the Book: 'The Stones Rolled' by Pa. Mahalakshmi (Poems) - Coimbatore M. Umamakeswari நூல் அறிமுகம் : பா.மகாலட்சுமியின் ’கூளாங்கற்கள் உருண்ட காலம்’ ( கவிதைகள் ) - கோவை மீ.உமாமகேஸ்வரி

நூல் அறிமுகம் : பா.மகாலட்சுமியின் ’கூழாங்கற்கள் உருண்ட காலம்’ ( கவிதைகள் ) – கோவை மீ.உமாமகேஸ்வரி




பேரிரைச்சலோடு பாய்ந்துவருகிற கடலலைகள்
நொடிப் பொழுதில் தன்னை சுருட்டிக் கொண்டு
புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் மீண்டும் செல்வதைப்
போன்றே பெண்களும் வாழ்ந்தாக
வேண்டுமென ஆண்டாண்டுகாலமாய்
இந்த சமூகம்
வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.

மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற இந்த பழமைவாத சிந்தனைகளையும்,
கழுத்தில் மாட்டப்படுகிற நுகத்தடிகளையும், முதுகில்சுமக்க
நிர்பந்திக்கப்படுகிற கலாச்சார சிலுவைகளையும் இந்த சமூகத்தின் மனசாட்சியின் முன் நிறுத்துகிற கவிதைகள் பொங்கிவழிகிற காலமிது.

புதிய சிந்தனைகளின் வழித்தடங்களாக தங்களை தகவமைத்துக் கொண்ட பெண்களின்
கரங்கள் எழுதிக்கொண்டே இருக்கின்றன.

வாசிப்பாளர்களின் கண்வழி நுழைந்து இதயம் தொடுகிற எளிமையும், வலிமையும் மிக்க
பல கவிதைத்தொகுப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கிற காலமிது.

அந்தக் கவிதைகளின் வரிசையில் ஒன்றாக
கவிஞர் பா.மகாலட்சுமியின் கூழாங்கற்கள் உருண்டகாலம் என்ற கவிதைத் தொகுப்பும் இணைகிறது..

எழுவதும்,வீழ்த்தப்படுவதுமான
சமநீதியற்ற பெண்களின் வாழ்வியலை, அனுபவித்த துயரங்களை, ஆழ்மனதின் ஆசைகளை, மொழியிருந்தும் பேச இயலாமல் புதைத்து வைத்த ரகசியங்களை,
இயற்கைக்கும் பெண்ணுக்குமான தொப்புள் கொடி உறவின் பந்தத்தை, இழந்த காதலின் வலியை, மிக மிக நுட்பமாக தனது நூலில் பதிவுசெய்திருக்கிறார்
கவிஞர் பா. மகாலட்சுமி..

இருண்ட காலத்திலிருந்து வெளிச்சம் உருவி வெளி வருகிற ஒளிரும் கூழாங்கற்களாய் இவரது கவிதைகளும் இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் நடுவில் அல்லாடும் பெண்களின் வாழ்வியலை
அச்சு அசலாக வெளிப்படுத்துகிறது..

“எல்லைகளையும் எண்ணங்களையும் உங்களால் ஊகிக்க இயலாத
பிரபஞ்சப் பெருவழி
பெண் .” நான்
என்ற முழக்கத்தோடும்,

” இது என் உடல் என் வாழ்வு
வேலி தேவையற்றது
உங்கள் சுடு சொற்கள்
ஒரு பொருட்டல்ல எனக்கு
நான் நெருப்பையே நெய்பவள்’
-என்ற இறுமாப்போடும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிற கவிஞர்,

“பெண்களின் ஆழ்மனதை மட்டும் அகழாய்வு செய்து விடாதீர்கள் கிடைக்கக்கூடும்
கொலை செய்யப்பட்ட
அவர்களின் பிணங்களோடு
உங்களின் கைரேகை படிந்த
கூராயுதங்களும்”

-என்று அறச்சீற்றத்தோடு பதிவு செய்து தன் கவிதைகள் நெருப்பில் நெய்யப்பட்டவை என்பதனை உணர்த்துகிறார்.

பற்றி எரிகிற கவிதைகள் மட்டுமல்ல பனித்துளி போல் சில்லிட்டு கிடக்கிற கவிதைகளும் இந்த தொகுப்பில் இருக்கின்றன என்பதனை உணர்த்துவதற்கு,

‘நான்கு அறைகளிலும் அன்பைநிரப்புங்கள்
எடையற்று மிதக்கட்டும் இதயம்’

‘அதிகாலைகளில்
உன் நினைவுகளைப் பருகுவதைவிட
அத்தனை சுவையானதாக இல்லை
தேநீர்’

” என் பாலை
குளிர்ந்த பொழுதொன்றில் தான் உணர்ந்தேன்
உன் வார்த்தை திரவமாகிவிட்டதை”

எனக் காதலாகிக் கசிந்துருகுகிற கவிதை வரிகள் நம்
எடை குறைத்து காற்றில் மிதக்கவைத்து
கவிதைத் தொகுப்பின் தணலை புனலாக்கி நம்மை ஆற்றுப்படுத்துகிறது.

பெண்ணிற்கும் நிலத்திற்குமான தொடர்பு அவள் உயிருக்கும் உடம்பிற்குமான தொடர்பினை ஒத்தது என்பதனை மகாலட்சுமியின் கவிதைகள் அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றன .

விற்று விட நேர்ந்த தனது பூர்வீகத் தோட்டத்தை பார்க்கிறபோது ,
மலையடிவாரக் கட்டாந்தரையில்
அப்பாவின் குரலும்,
பருத்திச் செடியில் வெடித்துச் சிரிக்கிற அண்ணன்முகமும், தலையாட்டும் மூக்குத்தி பூக்களில் அக்காக்களின் சாயலும், தன் மீது வந்து உதிர்கிற வேப்பம் பூக்களில் அம்மாவின் நலம் விசாரிப்பும் உணரப்படுவதாக
உரைக்கிறார் கவிஞர் ..

‘நிலங்கள் கைமாறிக் கொண்டே இருந்தாலும் அழியாமல் இருக்கின்றன வாழ்ந்தவர்களின் வாசனை’
-என்ற வரிகள் நிலமெனும் நல்லாளை
இழந்தவர்களின் அகவலியை உணர்த்துகிறது..

நிலத்தை இழந்தது மட்டுமன்றி
ரசித்து ருசித்து தேநீர் பருகும் வாய்ப்புகூட உழைப்பாளி பெண்களுக்கு
கிடைப்பதில்லை என்பதனை,

“வாய்ப்பதேயில்லை
தேநீர் கோப்பையின்
கடைசிச் சொட்டு வரை
ருசித்துப் பருக
தேயிலை பறிப்பவளுக்கும்
தேநீரை தயார் செய்பவளுக்கும் ”

-என்ற வலிமிகும் வரிகளால் உணர்த்துகிறார் கவிஞர்.

எண்பத்து எட்டு பக்கங்களில்
பதியனிடப்பட்ட
அழுத்தமான கவிதைகளும்,
கவிதைத் தொகுப்பின் மொத்த உணர்வுகளையும் வாசகர்களுக்கு உணர்த்தி விடுகிற முன் அட்டைப்படமும் இந்த தொகுப்பினை
பெண்ணியம் பேசும் சிறந்த படைப்பாக வாசகர்களை உணரவைக்கிறது..வாழ்த்துகிறேன் , தொடர்ந்து எழுதுங்கள்.

– கோவை மீ.உமாமகேஸ்வரி

நூலின் பெயர் : கூழாங்கற்கள் உருண்ட காலம்
( கவிதைகள் )
ஆசிரியர் : பா.மகாலட்சுமி
விலை :120
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2022
வெளியீடு : சொற்கூடு பதிப்பகம்
57, வடிவேல் நகர்
மாவுமில் எதிர்புறம்
நாகமலை புதுக்கோட்டை
மதுரை – 625019
அலைபேசி – 9578250173 , 8778647873

கலா புவன் கவிதை

கலா புவன் கவிதை




ஞாபக  யுத்தங்கள்
என் எதிரே
மேசை மேல்
ஒரு கோப்பைத் தேநீர்
ஆவிபறக்க காத்திருக்கிறது

எதோ ஒரு ஞாபகத்தின்
பின் நான்
அதன் வாலைப்பிடித்துக்கு கொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்

காலச்சுவடுகள்  என் கண்முன்னே விரிய
துன்பங்களும் துயர்களும்
நட்பும் காதலும்
அன்பும் வெறுப்பும்
தொடர் பரிமாணங்களாய்
விசனங்களை வசனங்களாய்
மாற்றிப் போட்ட
நினைவுப் பாதையில்
நடக்க  நடக்க
ஒளிமயமாய் கண்ணுக்கு முன்
பிரகாசக் கதிரவனாய்
தென்படத் தொடங்கிற்று ….

நினைவுக் குளியலில்
குளித்து முடித்து
தலை துவட்டிக் கொண்டு
நான் மீள  வரும் போது
கோப்பைத் தேநீரில்
ஆடை கட்டியிருந்தது
எடுத்துப் போட்டு விட்டு குடித்தேன்

நினைவுச் சாலையோர
செடிகளின் பூக்கள்
மோகன  வாசகங்களை
நுகர வைக்கின்றன
நுகர்ந்து கொண்டே நான்
பயணிக்கிறேன்
சமரசமே சமரின் விடியல்

————கலா புவன் ——–

Punithanin Kavithaigal புனிதனின் கவிதைகள்

புனிதனின் கவிதைகள்




தேநீர் மரம்
**************
வாசல்
வானமாக தெரிகிறது
வானம்
ரோஜா பூக்கள் பூத்த
வாசலாக தோன்றுகிறது

அம்மாவுக்கு அடுக்களையில்
தேநீர் வைக்க
உதவி செய்பவன்
விவசாயம் பொய்த்த பின்
தேநீர் கடையில்
தேநீர் தயாரிப்பவன் ஆகிறான்

போதி மரமாகிறது
தேநீர் கடையில் ஒலிக்கும்
சினிமா பாடல்கள்

ஜென் ஆகிறான்
தேநீர் தயாரிப்பவன்

டென்னிஸ் மட்டையின் ஜென் ஆற்றல்
********************************************
இந்த வருடம்
மஞ்சள் விளைச்சல் குறைவு
உடல் சோர்வு
மன அழுத்தம்
வாதை

அம்மா வழக்கம் போல்
காலையில் தேநீர் தந்தாள்
பட்டாம் பூச்சி
பாறாங்கல்லை கட்டி தூக்குவது போல்
மனம் லேசானது

பிரண்டை சட்னி எப்படி
செய்வது என பேசி கொண்டிருந்தார்கள்
அம்மாவும் சக வேலைக்கார அம்மாவும்

ஒண்டிரெண்டு நகைச்சுவை
அடிக்க முயன்றேன் நானும்

அம்மா வழக்கம் போல்
மதியம் ஒரு மணிக்கு
உறங்குவதற்காய்
கொட்டாவி விட ஆரம்பித்தாள்

அம்மா உறங்க போன பின்
என் கட்டிலில் கிடக்கும்
தலையணையை
வெறுமனே பார்க்க
ஆரம்பித்தேன்

சோர்வுறும் முயற்சியை விட
வாழ்வியல் பயிற்சியே
தேவை என புரிந்தது

Jen Cinema Kavithai By K. Punithan ஜென் சினிமா கவிதை - க. புனிதன்

ஜென் சினிமா கவிதை – க. புனிதன்

நாம் அடைய வேண்டிய
ஊரின் பெயர்
தேநீர் பானம்

இடையில் வரும் சிற்றூர்கள்
குக்கூ
நிலவு
மூதூர்
தென்றல்
சிற்றெறும்புகள்

கோப்பையில்
தேநீர் தயாரிக்க
ஒரு கருப்பு நகைச்சுவை
பாலில் கலந்து
சர்க்கரை தூவும்போது
வெட்டுக் கிளியின் சப்தம்

ஏற்ற இறக்கமான
கோப்பை
அதில் வண்ணத்து பூச்சி போல்
பிடிக்கும் கை பிடி

இரண்டு கரைகள்
பருகும் கடல்
தவறி சிந்திய
தேநீர்த் துளிகள்

கோள்கள்
கோப்பையில்
தன் பிம்பம் தெரியும்
நுரைகள்
ஜென் சினிமா

Koppai Theniee Poem By Sakthi கோப்பைத் தேநீர் கவிதை - சக்தி

கோப்பைத் தேநீர் கவிதை – சக்தி




தித்திக்கும்…சுவையில்
திடமான புத்துணர்ச்சிக்கோர்…
புது வரவாய்…கையில்
சுமக்கும்…ஒரு கோப்பைத் தேநீரில்…
ஆவி பறக்க…

ஆவியின் சூட்டைக் குறைக்க இதழ்குவித்து…
ஊதிய போது…
கோப்பைத் தேநீரில் சில துளிகள்…
சிதறிப் பறக்க…

பறந்த…துளிகள் நீர்த்திவளை போல்
மேசையை அலங்கரிக்க…

தேநீரில் சுவையை நானறியும்
முன்னே…எங்கோ இருந்து பறந்து
வந்த ஈக்களின் கூட்டம் தேநீரின்
சுவையை ருசிபார்த்து…
என் முகம் பார்க்க…

இன்னொரு முறை ஊதி…
அதற்கோர்…பங்கினை மீண்டும் வழங்க… தித்திக்கும் தேநீரில்…
நன்றி சொல்லி பறந்ததே…

தேநீரைப்பருகும் முன்னே…
புத்துணர்வும்… புதுபந்தமும்…
ஒரு கோப்பைத் தேநீரால்…
கண்ட பின்னும்…

ஒவ்வொரு முறையும் ஈக்களின் கூட்டம் எதிர்பார்த்தே…மீண்டும்
ஒரு கோப்பைத் தேநீரை
சுமக்கின்றேன்…

கோப்பைத்தேநீரால் உருவான
புதுவரவைத்தேடியே…

Nadai vandi coffee Poem By Kannan நடை வண்டி காபி கவிதை - கண்ணன்

நடை வண்டி காபி கவிதை – கண்ணன்




நடை வண்டி காபி
*************************
தற்போது தள்ளுவண்டி
‘டீ காபி டீ காபி’
கூவி விற்கிறது
குழந்தை
காற்றில் கைமாறும்
காகிதம்
‘காபி சரியில்லை
என் காசைக் கொடுங்க’
அடுத்த கணமே
திரும்ப வந்தது காசு
குழந்தையின் தராசுமுள்
எப்போதும்
சாய்வதேயில்லை

Thenir Poem by Era Kalaiyarasi இரா. கலையரசியின் தேநீர் கவிதை

தேநீர் கவிதை – இரா. கலையரசி




விடியல் மெல்ல எட்டிப்பார்த்து
இரவின் ரகசியங்களை பேசியபடி
மனிதர்களைக் காண வந்துவிட்டது.
பொட்டிட்டு அலங்கரித்த பால்சட்டி
அக்கினியின் நாக்குகளில் சூடேறியபடி
வாடிக்கையாளரை வரவேற்கிறது.
தேநீரின் சாயத்தை இழுத்து உறிஞ்சிய
வடிகட்டிக்கு சூடு பொறுக்கவில்லை
புகையை விட்டு ஆசுவாசபடுத்தியது.
காதைப் பிடித்துத் தூக்கிய டீ மாஸ்டர்
கண்ணாடிக் குவளைகளில் மாறிமாறி
காற்றில் பறக்கவிட்டு ஆற்றினார்.
மேலே போன தேநீர்த்துளிகள்
குழந்தையென குவளை மடிசேர
நுரையில் முகம் பார்த்தார்.
முதலில் உறிஞ்சிய வாடிக்கையாளர்
பறவைகளின் “க்ரீச்” சத்தம்
பக்கவாட்டில் பின்னிசை பாட
தேநீரை குலுக்கி ஆட்டியபடி
உதட்டுக்கு ஒத்தடம் கொடுத்தனர்.
சில்லரைகள் கல்லாவை நிறைக்க
நெஞ்சுகூட்டில் இதமான சூடு
அன்றைய நாளைத் தொடங்கியது.