சசிகலா திருமால் கவிதை

சசிகலா திருமால் கவிதை




காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்…

ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த
நம் உறவின் நடுவே
அர்த்தமற்ற புரிதல்களால்
மனதில் உண்டான விரிசலினூடே…
புதிதாய் முளைத்தெழுகிறது
பிரிவின் கோடொன்று…

மௌனம் எனும் கோடரி கொண்டு
மனதினைப் பிளக்கின்றாய்
நிராகரிப்பு எனும் ஆயுதமேந்தி
நிற்கும் உன்னிடம்
என் இதயத்தின் வலியுணர்த்த இயலாமல்
வெற்றுச் சடலமென
வீழ்ந்து கிடக்கிறேன் நான்…

உயிர் கொண்ட உறவுகள் ஓர்நாள்
நம்மை உயிரோடு கொல்லும் என்பதை
உணர்த்திச் செல்கிறாய்..
நீ கொடுத்த காதலை ஏற்றுக் கொண்டவள்
நீ கொடுக்கும் காயங்களையும்
ஏற்கத் துணிகின்றேன் இன்று…

என்றேனும் என்நிலை உணர்வாய்
என்ற நம்பிக்கையில்…
காத்திருக்கிறேன் நான்..
உன் மனகசப்புகள் தீரும் வரை
கண்ணீரோடும் கனத்த மனதோடும்…

சசிகலா திருமால்
கும்பகோணம்.

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




இப்போதும் நீ எனக்கு
*************************
மழலைப் பாதப் பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம்
அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமின்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

தாழிட்ட இதயவாசல்
*************************
காதலர் தினமன்று மட்டுமே
சிலாகித்துப் பரிமாறும் நமது அன்பு..
இதுவரை காதல் என்பது போலவே
தான் உச்சிமுகர்கிறேன்..

தொலைவில் நின்று கொண்டு
நலத்தை மட்டுமே சம்பிரதாய காதலாக முன்வைக்கும்
உனது பிரியங்களை
காதலர் தினத்தின் அர்த்தராத்திரிகள்
எனது செவிகளைச் சன்னமாகச் சொல்லி விட்டுப் போகும்..

அந்த ஒற்றைத் திளைப்பிற்காக
ஆண்டு முழுமையும்
தவமிருக்கிறேன் …
விழியும் வழியும் மொழியும் பூக்க……..

இன்றும் நீ தாழிட்ட
இதய வாசல் திறக்கப்படாமல் தான் இருக்கிறது…
சாவியை கையிலேந்தியே..

ஞாயிறில் ஞாயிற்றின் மெத்தனம்
***************************************
முன்னிரவும் பின்னிரவும் பிரிந்து
கற்கலின் கடன் தீர்க்க
ஜன ஜந்துக்கள் ஒன்றும்
காடுகரை
களப்புமேடு
யாவும் தேடித்திரிய
நீலம் பாரித்த வானவள்
அங்கசுத்தி முடித்து
உடுப்பு மாற்ற பரிதவிக்கிறாள்…
வசந்தக்குளிரின் சுகவாசியாக
பஞ்சணையில் கதகதக்கும் கரும்போர்வை நீக்காது
சோம்பல் முறிக்கும் ஆதவனின் நிலைக்கதவு திறக்க வேண்டியே..

பாலியல் பரிசுத்தம்
*************************
பாலியல் பேதமற்ற பரிபாஷணை
இடைமறியாத இங்கிதத்தில்
மாடிமுகப்பிற்கு மகனை விரட்டுகிறாள் அன்னை…

கொஞ்சமும் சூதற்ற சம்பாஷணை
சற்றும் வாதமற்ற மொழியில்
தோழியிடம் அன்பைப் பரிமாறுகிறான் பிள்ளை..

உணர்வு புனிதம்போற்ற
உரிமைநம்பகம் சிறக்க
பாலியல் பரிசுத்தம் பறைசாற்ற
பக்கத்து அறைக்குப் பெயர்கிறாள்
அலைபேசி மகளின் மாற்றாந்தாய்..

கைம்பெண் கடன்
*********************
வாழ்வதையில் வதங்கி
மொழி தொலைத்து
மௌனம் தரித்து
உற்றார் நழுவி
உறவு உதிர்ந்து

அடுக்களை கூடாரவிருந்தாகி
அறுசுவை உணவில் கசப்பாகி
விழிகளுக்கு மட்டிலும் உவர்ப்பாகி
புதியன கழித்து
பழையன புகுத்தும்…
மனிதவிலக்கான..
அவளின் பற்றறுந்த கூடு தான்..
எங்ஙனம் வேகும்…?

இப்போதும் நீ எனக்கு….
***************************
மழலைப் பாதப்பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம் அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமான்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

து.பா.பரமேஸ்வரி
சென்னை

இரா. மதிராஜ் கவிதை

இரா. மதிராஜ் கவிதை




உன்னுடன் பேசிய
ஒரு சில நிமிடங்களே
இன்னும் உயிருடன்
இருக்கின்றன

கண்கள் எழுதிய
கவிதைக் கண்ணீரை
வாசிப்போர் யாரோ ?

வினையே ஆடவர்க்குயிர்
அது காதலாய்
இருந்தாலும்.

தனக்கு எவ்வளவு
வேலையிருத்தாலும்
மற்றவர்களுக்கு
உதவி செய்யும்
உள்ளங்களால்
மட்டுமே
பூமி சுழலுகிறது.

பாக்கு மட்டைகளுக்கான
விளம்பரம் இப்போது
பாலித்தீன் பைகளில்.

நான் எங்கே இருந்தாலும்
இதயம் எப்போதும்
உன்னிடம் மட்டுமே.

விலையுர்ந்த மகிழுந்தில்
சோகப் பாடல்களே
கேட்கின்றன

பரபரப்பான சாலை
ஓரங்களில்
முட்செடி
வேடமிட்டு
ஒளிந்திருக்கும்
இலந்தை.

– இரா. மதிராஜ்

காங்கேயம்
திருப்பூர் மாவட்டம்
அலைப்பேசி
9788475722.

நூல் அறிமுகம்: எச்.எம்.பாறுக்கின் காணாமல் போன சில ஆண்டுகள்.. கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: எச்.எம்.பாறுக்கின் காணாமல் போன சில ஆண்டுகள்.. கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்




நேர்கோட்டு வார்த்தைகள்
பிடிக்காது கவிஞனுக்கு.
பள்ளத்தாக்கொன்றின் அடியாழ கூர் முனையில் இருந்து தொடங்கி,
சமவெளியில் தவழ்ந்தெழுந்து, கால்களிரண்டின் கட்டைவிரலை பூமிக்குள் ஆழப் பதிந்து, எகிறி
வானத்தைப் பிளந்து பால்வெளிக்குள் நுழைந்து.. மிதந்து.. நூறு நூறு சிறகுகளை முளைக்க வைத்து,
அழகான திமிரோடு பறந்தலைந்து,
காட்டு ரோசா செடியின் துளிரிலை மீது பாதம் நோகாமல் அமரும்
வண்ணத்துப் பூச்சியின் வடிவோடு
வார்த்தைகளில் கந்தகக் கரைசலையும்
அமுதத்தின் முதல் மிடறையும் சரிவிகிதத்தில் கலந்து வாசகனை
நித்தம் நித்தம் கொலை செய்யும் பேரன்பு மிகுந்த கொலைகாரனாகவே இருப்பார்கள் கவிஞர்கள்.

அழகான கொலைகாரர்கள் வாசிப்பவர்களின் இருதயத்தின்
அடிப்புறத்தில் அமர்ந்து குதியாட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மனங்களை சமன் குலைக்க செய்வார்கள். தடை உடைப்பார்கள்.. மீறுவார்கள். நூல் பிடித்த கோட்டினை அவர்கள் மனம் ஒரு நாளும் ஏற்காது.
புது விதியினை புது ஒழுக்கத்தை உலகுக்கு ஓங்கிச் செல்வார்கள்.
இப்படியானவர்களைத்தான் கவிஞர் என என் மனது..எண்ணம்.. அதன் இஷ்டப்படி வடிவற்ற வடிவாக வரைந்து வைத்துக் கொண்டிருக்கிறது எனக்குள்.

காணாமல் போன ஆண்டுகளுக்குள் நுழைந்த கவிஞன்
கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் புகுந்து மனசின் கனவுகளையும் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார். நம்பிக்கைகளை வார்த்தைகளுக்குள் நிரப்பிக் கொண்டு துரோகங்களுக்கு அடி கொடுக்கிறார்.
இருப்பின் அவசியத்தை உணர வைத்து
பறத்தலும் தேடலும் தேவை என்பதை கவிதைக்குள் நிறுத்தி இருக்கிறார்.

ஆணவத்தையும் அகங்காரத்தையும்
துரோகத்தையும்
உடன் இருந்துவரோடு அறிந்தவுடன்
என்னை_விடு என்கிற கவிதையில்

கடந்தகால கசறுகளை
கசக்கிப் பிழிந்து
உள்ளத்தை அமுக்கிப் பிழிந்து ஊத்தைகளை
உடுப்பை கழுவுவது போல்
கழுவி

உலரப் போட்டேன்
உள்ளத்தை
உணர்வெனும் கொடியில்
கனமழை வந்து
மீண்டும் அதைக் கழுவ
கண்ணீர் உகுத்தேன்
நன்றி உணர்வோடு

உள்ளத்தில் ஊத்தைகள்
மீண்டும் படாமல்
ஓரத்தில் நடக்கின்றேன்
அங்கு திரும்பி
இங்கு திரும்பி

மூச்சை கவனமாய் விடுகிறேன்
பேச்சை கவனமாய்
நாக்கை கட்டி
இன்னும் நான்
ஓரமாய் நடக்கின்றேன்

நீ கேலி செய்கிறாய்
நீ துள்ளித்துள்ளி
நிமிர்ந்து நடக்கிறாய்
ஏளனமாய் சிரிக்கிறாய்

என்னை விடு
இன்னும் கொஞ்சம்
இந்த ஓரத்தில்
இன்னும் நான் நடக்க

பழைய காலத்திற்குள் புகுந்து
மனதை இளமையாக்கும் உற்சாகமாக்கும் வித்தையை கவிஞர் காலத்தை_எட்டிப்பிடி என்கிற கவிதையில்.

எல்லை கோடுகளுக்கான போர் மண்ணுக்கான போர்
மனித நிலைகள் அனைத்திலுமே
மதத்துக்கான போர்
சாதிக்கான போர்
கௌரவத்துக்கான போர்
போர் அனைத்திலும்…

சுட்டால்
அல்லது வெட்டினால்
குத்திக் குதறினால்
சில்லென்று பாயும் சிவத்த நீர்

நெஞ்சு சிலிர்க்கிறது
உனக்கும் சிவப்பு
எனக்கும் சிவப்பு
சில்லென்று சிவத்த நீர்
என்னை போல் தான் உனக்கும்
ஒரு துடிப்பு
ஒரு படபடப்பு
மூக்கினால் காற்றை வாங்கி
காற்றை விற்றல்

முடிவில்
உன்னை போல் தான் நான்
என்னை போல் தான் நீயும்
ஒரு மண்ணாங்கட்டியாய் கரைதல்

அழகை கொண்டாட வேண்டிய
இந்த மண்ணில்,
இயற்கையை நேசிக்க வேண்டிய
இந்த மண்ணில்
கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டிய
இந்த மண்ணில்
இதற்கா நாம் இருவரும் என்று கேள்வி எழுப்பாமல்
மண்ணாங்கட்டியாய் கரைந்து இருக்கிறார் கவிஞர்.

தலையை சொரிவதை விட்டுவிடு
தலை புழுத்தால் பேன் பாரு
என்று
மண்புழுவுக்கும் மனித புழுவுக்கும்
இனி அஞ்சத் தேவையில்லை
என
அஞ்சுபவர்களிடமும் கெஞ்சுபவர்களிடமும்
மேலாண்மைகோடுகள் என்கிற கவிதையில்

மெல்ல நினை
இருள் விலக நீ கேள்
இதய ஒளி எங்கும் பரவி நீயாகி
கவலை விடு
கால்நீட்டி போடு
என உத்தரவிடுகிறார் கவிஞர்.

#வாசற்படி
என்கிற கவிதையில்
உங்களின் ராசாத்தியையும் ராசாவையும் பார்க்கலாம்.

நான் சிறு புள்ளி
சிறு புள்ளியே
அசைவேன் அசைவேன்
நான் ஓர் அகிலமே
எனை நசுக்க முயலும் போதில்
முள்ளாய் மாறி குத்துவேன்
முறிந்த போதிலும்

அதிகாரத்திற்கு எதிராக கவிதை பாடி இருக்கிறார் கவிஞர்
எளியவர்களின் குரலாக இருந்து.

துளிர் என்ற கவிதையில்
முளைக்கும் போதே கிள்ளி அழித்த எதிராளிகளுக்கு
எதிராக நெஞ்சை நிமிர்த்தி
இன்னும் ஒரு முகமாய் துளித்து இருக்கிறார் கவிஞர் தன்னுடைய தொகுப்பின் முதல் கவிதையில்

நன்றி மறந்தவர்களுக்கு எதிராக
முகம் முழுவதும் நனைய
“ஒரு தரம் காறி துப்ப”
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதனை
இப்படி_செய்துபார் கவிதைக்குள் நம்மை செய்யச் சொல்லி இருப்பார் கவிஞர்.

கவித்துவமும் படிமங்களும் எளிய
வாசகனும் உணர்ந்து கொள்ளும்படி தன் கவிதைகளில் கொடுத்திருக்கிறார் கவிஞர்.
அறிவார்ந்த தளத்தில் மாய உலகத்தில் சஞ்சரிக்கக் கூடியவர்கள்தான் கவிஞர்கள் என்பதற்கு நேர் எதிராக கவிதைகள்.

அன்பு வாழ்த்துக்கள்
கவிஞர் எச்.எம்.பாறூக் அவர்களுக்கு.

தாயதி பதிப்பகத்தின் பனிரெண்டாவது வெளியீடு இது. மிகச் சிறந்த முறையில் கவிதைகளுக்கான மரியாதையோடு உள்பக்கங்களை வடிவமைத்து வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் பதிப்பகத்தார்.

அர்த்தம் மிகுந்த அட்டைப்படத்தோடு அழகாக வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார் றாஷ்மி.

இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.

நூல் : காணாமல் போன சில ஆண்டுகள் (கவிதை தொகுப்பு )
ஆசிரியர் : எச்.எம்.பாறூக்
விலை : இந்தியாவில் ரூபாய் 120 இலங்கையில் ரூபாய் 370
வெளியீடு : தாயதி வெளியீடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

– கருப்பு அன்பரசன்

அந்த நொடி கவிதை – சுதா

அந்த நொடி கவிதை – சுதா




நான் சாக மாட்டேன்…
எனச் சொன்னவள் கருவிழி இரண்டும்
காணாது போய்க் கண்ணீர் கன்னம்
தாண்ட என் கைவிரல்களைப் பிடித்தபடி
காற்றோடு காணாதுபோன நொடி…

பெயர் வைத்தவள் பிணம் என்ற பெயரோடு
செல்கையில் என்னைச் செல்லமாய்
அழைத்த வார்த்தை மட்டும்
என் காதுக்குள் நுழைந்த நொடி…

நான்கு சுவற்றுக்குள்
சூழ்ந்த இருட்டின் மத்தியில்
சத்தமாகக் கதறி அழுத அந்த நொடி…

அன்பு சொந்தம் நட்பு
நம்பிக்கை இப்படியான வார்த்தைகள்
அர்த்தமிழந்து போக…அந்தரத்தில்
நூல் இழையில் தொங்கிய அந்த நொடி…

இங்கு அனைத்திற்கும் பிரதானம் பணம்
என்று உணர்ந்த நொடி…
பலரின் பற்கள் ,
மகிழ்ச்சியில் சிரிப்பதற்கு மட்டுமல்ல…
என்னைக் கொரிப்பதற்கும் காத்திருக்கிறது
என்று உணர்ந்த நொடி…

என் தோளில் கை போட்டு
என் தோல்வியை ரசிக்கும் மனிதரை
அடையாளம் கண்ட அந்த நொடி…

என்னைக் குத்திக் கிழித்துக் கூறு போட்டது
நான் கொடுத்த ஊன்றுகோலால்…

என அறிந்த அந்த நொடி…

இப்படியான நொடிகள் பல
நான் இறந்து இறந்து பிறந்த நொடி…
இப்போதும் பிறந்து விட்டேன் மீண்டும்
இறக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்…
இன்னும் எத்தனை நொடிகள் நான்
இறுதியாக இறப்பதற்குள்
இறந்து பிறப்பேன் என்பதுதான் புதிர்…

ஆனால் ஒவ்வொரு இறப்பும்
என்னை மீண்டும் பிறக்க வைத்தது
ஒவ்வொரு விழுதலும் மீண்டும் எழவைத்து…
அட…இதைவிட சுகம் என்ன…என்ற இந்த நொடி…

– சுதா

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்




சிந்தக் கண்ணீர் இன்றி
வறண்ட நொய்யல்
என் கவிதையில் – அதைச்
சிந்திக் கொண்டிருக்கிறது
சத்தமின்றி

கவிதையில்
எழுத முடியாச் சொற்கள்
என் கண்களும் முகமும் சிவக்கின்றன
தொண்டையை அடைக்கும்
விம்மலின் ஊடே

எழுதி முடித்த பின்
கூர்ந்து கவனித்தேன்
கசிகிறது ரத்தம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றிலிருந்தும்
சொட்டுச் சொட்டாய்

ஆற்றில் வேதிக் கழிவு கலப்போர்- தாயின்
சோற்றில் நஞ்சு கலப்போர்
நீரை உறிஞ்சி விற்போர்
தாய்ப் பாலைத் திருடி விற்போர்
ஆக்ரமித்து அதை நெருங்குவோர்
பெற்ற தாயின் கழுத்தை நெறுக்குவோர்
அடி மணலை அள்ளிச் செல்வோர்
அவளது உயிரையே உருவிச் செல்வோர்
இவரெல்லாம் முறை வைத்து
நொய்யலின் முதுகில் குத்தியதில்
நீரோடு கலந்து ஓடிய ரத்தம் – கவிதையின்
ஒவ்வொரு எழுத்திலும் வடிகிறது

மணலில் ஓடிய நொய்யல் – எங்கள்
மனதிலும் ஓடி – அன்று
சிந்து பாடிய அது – இன்று
நொந்து வாடியது
அன்னையை விற்றுப்
பணம் எண்ணும்
பிணங்களை எண்ணி எண்ணி

பயிருக்கு நீர் தந்த நொய்யல்
நம் உயிருக்கும் தந்த அதை
வரம்பு ஏதுமின்றிச்
சுரண்டிச் சூறையாடிய பின்
நரம்பு அறுந்த அந்த வீணையில்
ஈரம் இழந்த உயிரின் இதயம்
துயரைத் தானே மீட்டும் இனி

காலத்திடம் கேட்க
ஒன்று தான் உண்டு எனக்கு
மரமாக மாற்றி விடு என்னை
நொய்யலின் கரையில் நின்று
காக்கிறேன் கடைசி வரை அதை

அது முடியாது எனில்
நோய் இல் நதி – இன்று
பாயில் சுருண்ட அது
நோயில் விழ – அதைச்
சாவின் விளிம்பில் நிறுத்தியோரை

நீங்காச் சின்னமாய்
நீராய் ஓடிய கற்கண்டை
நினைவுச் சின்னமாக்கிய
நீசரை

காலத்துக்கும்
காணக் கிடைக்கா அமிர்த ஓட்டத்தை
காணக் காண
காணாமல் செய்தோரை
ஓடிக்கொண்டிருந்த
ஓவியத்தைத்
தீவைத்து எரித்தோரை

வணிகம் சார்ந்தோரை
மனிதம் சார்ந்தோராய்

நீரைக் கெடுக்கும் நாசகாரரை
மனிதராய்
மாற்றி விடு

சட்டம் செய்யப்படும் நாளிலேயே
அதன் விலையும் ஓட்டைகளும்
நிர்ணயம் செய்யப்படும் நாட்டிலே
வான் நோக்கிக் கதறும்
என் குரலில் நிறைந்திருக்கிறது
“எத்தனை கொலைகாரர்கள் இங்கே ….
என்னை அவர்களில் ஒருவன் ஆக்கிடாதே” எனும்
என் இயலாமையின் இறைஞ்சல்

ஆதித் சக்திவேல்
கோவை
8903671246

கண்ணீர்த் துளிகளின் கதை சிறுகதை – நந்தகுமார்

கண்ணீர்த் துளிகளின் கதை சிறுகதை – நந்தகுமார்




அன்றொரு நாள் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினேன். வீட்டிற்கு கிளம்பும் முன்பே பழம், காய் என்று மூட்டையை நிரப்பிக் கொடுத்து விட்டனர். மூட்டை பைகளைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையம் வருவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது. பேருந்து நிலையம் மக்கள் கூட்ட மிகுதியோடு காணப்பட்டது.

என் ஊருக்கான பேருந்து வரும் வரை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரமாகியது, பேருந்து வரவே இல்லை. என்னைப் போலவே பலர் பேருந்தின் வரவை எதிர்பார்த்து, கன்னத்தின் மேல் கை வைத்து உட்கார்ந்திருந்தனர்.

பேருந்து வராததைக் கண்டு பலரும் உலக அரசியலையும், உள்ளூர் அரசியலையும் பேச ஆரம்பித்துவிட்டனர், பாட்டிகள் வெற்றிலை போட்டு மென்று கொண்டிருந்தனர்” பேருந்து எப்ப வரும்? எப்ப வரும்? என்று மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்த வேளையில் பேருந்து ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்குள்ளே வந்தது.

பேருந்து நின்றதும், சக பயணிகள் கையில் வைத்திருந்த மஞ்சள்பை, துண்டு, வாட்டர் கேன் என்று இருக்கைக்கு இடம் பிடிக்க ஜன்னல் வழியாக வீசினர். இறங்குபவர்களுக்கு வழி விடாமல் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். “இறங்கியபின் ஏறுங்களேன்! என்ன அவசரம்? என்று பலரும் முணுமுணுத்தபடியே இறங்கினார்.

நடத்துனர் செல்லமுத்து, ‘எல்லோரும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் இறங்குபவர்கள் இறங்கட்டும். பெறவு ஏறுவீங்க!’ என்று அவர் செல்லமாக சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. சற்றே கடிந்து கொண்டு “பஸ் என்ன பறந்தா போகுது. இப்பிடி ஏறுறீங்க” என கூற, ‘அப்படியே பறந்துட்டாலும், நேரத்துக்கு பஸ் வருமா?’ என கூட்டத்தில் இருந்தவர் பேருந்து நிலையமே சிரிக்க ஆரம்பித்துவிட்டது.

இறங்குபவர்கள், ஒருபுறம் சிரமப்பட, ஏறுபவர்கள் ஒரு வழியாக ஏறி அமர்ந்து விட்டனர். பெண்களுக்கு இலவசம் என்பதால் பெண் பயணிகளின் கூட்டம் ஆரவாரமாக காணப்பட்டது. பெண்களுக்கு மட்டும் பேருந்து பயணம் இலவசம். ஆண்களுக்கு பயணம் இலவசம் இல்லையே என்று எனக்கு ஒரு ஆதங்கம். ஆனாலும், என் அம்மாவும் அக்காவும் தங்கையும் இலவசமாக செல்வார்களே என்று மகிழ்ந்து கொள்வேன்.

எப்படியோ ஒரு வழியாக பேருந்தில் கூட்டத்தில் ஒருவனாக ஏறி விட்டேன். ஒருவர் எனக்கு பெருந்தன்மையுடன் உட்கார இருக்கையை தந்தார். அவருக்கு நன்றியை கூற வாயைத் திறந்தேன், அதற்குள் ஒரு பாட்டி என் முன் வந்து, “கண்ணா எனக்கு முட்டி வலி என்னால் நிக்க முடியாது, கொஞ்சம் உட்கார இடம் கொடுப்பா” என்றது.

அப்போதுதான் என் கல்லூரி பேராசிரியர் ஐயா ஒருவர் நினைவுக்கு வந்தார். அவர் ஒருநாள் பாடம் நடத்தும் போது ஏ பாசிட்டிவ் இரத்த வகை கொண்ட நபர்களுக்கு உதவும் பண்பு குறைவாக இருக்கும் என்றார். எனக்கோ ஏ பாசிட்டிவ் பிரிவு. அவர் கூறியது உண்மையோ, பொய்யோ ஏ பாசிட்டிவ் இரத்த வகை பிரிவு உடையவர்களும் உதவும் பண்பு கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க, அந்தப் பாட்டிக்கு இருக்கையை விட்டு விட்டேன்.

கூட்ட நெரிசலில் வியர்வை ஒருபுறமும், தலைவலி ஒருபுறமாகவும் தவித்துக் கொண்டிருந்தேன். தோளில் மாட்டி இருந்த பேக்கை கழற்றிக் கீழே வைத்தேன். சற்றே நிம்மதியாக இருந்தது. கூட்டத்தில் கண்டக்டர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்தார். அப்போதுதான் எந்த வேலையும் எளிமையல்ல என்பது புரிந்தது. பேருந்து மெதுவாக கிளம்பியது. சிறைப்பட்ட காற்று நீங்கி, புது காற்று உள்ளே நுழைந்தது. அந்நிமிடம் ஆழ்கடலில் மூழ்கியவன், கரை சேர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று இருந்தது

சற்றே நின்றபடி கண்ணை மூடினார். “ஏப்பா தம்பி! எங்க போற?” என்று கண்டக்டர் எழுப்பி விட்டார். பின் சில்லறையைக் கொடுத்து பயணச்சீட்டை வாங்கினேன். ஒவ்வொரு நிறுத்தத்திலும் கூட்டம் சற்று குறைந்து கொண்டு வந்தது. எப்படியோ உட்கார ஒரு இருக்கை கிடைத்துவிட்டது. அவ்விரவின் குளிர்ச்சி நிறைந்த காற்றுடன் 90களின் இசை ஒலித்தது. எப்போது வீட்டைச் சென்றடைவோம் என்று மனம் ஏங்கியது

ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. பேருந்தில் இருந்தவர்களின் இரைச்சலால் இளையராஜாவின் இசை மங்கியது. என்ன சத்தம்? ஏன் வெகு நேரமாகியும் பேருந்து நிற்கிறது? என்று எண்ணிக் கண் விழித்தேன்.

“சீக்கிரம் ஏற்று நேரமாகுது” என்று ஒருவரும், “நாங்கல்லாம் ஊடு போய் சேர வேணாமா” என்று மற்றொருவரும் கூறினார்.

ஏன் அப்படி பேசுகிறார்கள் என்று படிக்கட்டிற்கு சென்று பார்த்தேன். அங்கு ஒரு குடிகாரனை, அவனுடைய மனைவியும் மகனும் பேருந்தில் ஏற்ற சிரமப்பட்டு கொண்டிருந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் அவசரப்பட்டு கொண்டிருந்தார்களே தவிர யாரும் உதவி செய்வதாக இல்லை.

“யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா நேரமாகுது” என்று டிரைவர் கூற, நால்வரின் கைகளோடு என்னோடு கையும் உதவிக்கரம் நீட்டியது. அன்று நான் செய்த இரண்டாவது உதவி என்று பெருமிதம் கொண்டேன்.

படிக்கட்டிற்கு அருகிலேயே இருக்கை காலியாக இருந்தது. அதில் அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். சிறுவன் கம்பியைப் பிடித்துக் கொண்டு மௌனமாக நின்று கொண்டிருந்தான்.

எனக்கு அவர்களை முன்பே தெரியும். அந்த நபர் தினக்கூலியாக வேலைக்குச் செல்லும் கட்டிடத் தொழிலாளி, அவனுடைய மனைவி வீட்டைக் காக்கும் சாமானியப் பெண். அதனாலோ என்னவோ கணவனைக் காக்க வந்துவிட்டாள். பள்ளிச் சீருடை கூட மாற்றாமல், அவனது மகன் தன் தந்தையை அழைத்துச் செல்ல அம்மாவுடன் வந்து விட்டான். தந்தையின் தோளில் ஏறி சுற்றும் குழந்தைகளில், தந்தையையே தோளில் சுமக்கும் சிறுவன் அவன்.

“குடிகாரனை, கவுர்மெண்ட் பஸ்ஸில தா கூட்டி வரணுமா? வேற பஸ்ஸே இல்லையா?’ என்று பலரும் பல படியாக பேசியது, அவளுடைய காதில் விழுந்தது. எதையும் பேசாமல் கண்ணை கசக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பின் கண்டக்டர் அவளுக்கு மகளிர் சீட்டையும், கணவனுக்கும் மகனுக்கும் டிக்கெட்டையும் கொடுத்தார். அவள் தன் முந்தானையில் முடித்து வைத்திருந்த 50 ரூபாயை கொடுத்து மீதி சில்லறையை வாங்கி மீண்டும் முந்தானையிலேயே முடித்துக் கொண்டாள்.

பேருந்து வேகமாகச் சென்றது. ஸ்பீடு பிரேக்கில் தூக்கி போட்டது. குடிகார கணவன் ‘குவாக்’என்று வாந்தி எடுத்துவிட்டான். பிறகு என்ன செய்வாள் அவள், தன் முந்தானையிலேயே இருக்கையை சுத்தம் செய்தாள். பல அவமானங்களையும் தாங்கிக்கொண்டு கணவனை தோளில் சாற்றி நிறுத்தத்தில் இறங்கினாள்.

‘ஒரு வழியா குடிகாரன் போய் தொலைந்து விட்டான்’ என்று பலருடைய சிந்தையும் பேச்சும் கேட்டது. சற்றே தூரத்தில் என் வீட்டிற்கான பேருந்து நிறுத்தம் இறங்கிய பின் வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனாலும், அந்த குடிகாரனும் அவனுடைய குடும்பமும் என் சிந்தையில் வந்து கொண்டே இருந்தது.

நாட்கள் கடந்தன. அன்றொரு நாள் அதைப்போலவே, பேருந்து தாமதமாக வந்தது. கூட்ட மிகுதியும் குறையவில்லை இரைச்சல் சத்தத்திற்கு இடையே இளையராஜாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று இசை மங்கியது. அந்த நிறுத்தத்தில் (ஒயின் ஷாப்) குடிகாரன் ஏறினான். அவனுடன் யாரும் இல்லை. சற்றே தெளிவாக இருந்தான். அழுது புலம்பிக்கொண்டே பேருந்தில் ஏறினான்.

அவன் பேசிய வார்த்தைகள் சற்றும் விளங்கவில்லை. என்னவோ என்று இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். குடிகாரனின் நிறுத்தம் வந்தது. திபுதிபுவென்று இறங்கி ஓடி, ஒரு சுவரின் முன் மண்டியிட்டுக் கொண்டு, “ஐயோ! என்ன விட்டுப் போயிட்டியே ” என்று தலையை அடித்துக் கொண்டு அழுதான்.

“ஏன் சுவரை நோக்கி அழுகிறான்” என்ற சுவரை உற்று நோக்கினேன். சுவரில் அவனது மனைவியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. பேருந்து மெதுவாக கிளம்பியது. கண்களில் கண்ணீர் வடிந்தது.

– நந்தகுமார்

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்




பிறழ்
*******
நரகத்தில் தான் வாழ்கிறேன்
நரகம் எனத் தெரிந்து தான் வாழ்கிறேன்
நரகத்தில் உயிரோடு தான் இருக்கிறேன்
நதி என்ற ஒன்று இருந்ததாம் ?
நிரம்பித் ததும்பி நீரென்பது ஓடியதாம் !
நான் படிக்கிற புத்தகத்தில்
இன்னும் என்ன என்னவோ…
வனம் கேவுகிறது
மலைகள் கசிகின்றன
சுடு காற்றாய் பெருமூச்செறிகின்றன மரஞ்செடி கொடிகள்
அழிக்க வேண்டிய சொல்
அன்பைக் குடிக்கும் வெயில்
அதிகாரம்
கபர்குழியில் சாந்தமானான் கவிஞன்
கவிதைகளின் கோபம் கூடுகிறது
காலம் ஒருநாள் கண்ணீர் சிந்தும்
கடந்து செல்கிறான் கவிஞன்
கண்ணீர் வழிய கசிகிறேன்
மனம் காலத்தைத் தூற்றுகிறது
ஆண் சிட்டுக்குருவி சிறு குச்சியைக் கொண்டு வந்தது
பெண் குருவியும் ஒன்று
இரண்டும் கட்டியது காதல்
ஆபத்தில் கை கொடுப்பதல்ல
துக்கத்தில் பகிர்ந்து கொள்வதல்ல
இதயத்தில் இடம் கொடுப்பது நட்பு
காலம் கண்ணீர் வடிக்கிறது
கவிஞனின் ஆன்மாவில் துடிப்படங்கவில்லை
கனவுகளில் நரகம் மெல்ல வளர்கிறது
தியாகம் இங்கே சிரிப்புக்குள்ளாகிறது
களவாணித்தனம் பெருமையோடு போற்றப்படுகிறது
இவர்கள் என்ன ஜனங்கள்?

இது என்னதேசம்.?

தூண்டில்காரனின் தியானம்
***********************************
ஆயுதம் தீர்வல்ல
அகிம்சை தீர்வல்ல

அநியாயங்களை எதிர்க்கும் மக்கள் திரளின் கோபமே தீர்வு
மழை பெய்கிறது
மண் மணம் எழவில்லை
சாக்கடை நாத்தம் சகிக்க முடியவில்லை
முச்சந்தியில் அலங்காரம்
கோலாகல ஊர்வலம்
கடைசியில் கடலில் பிணம்
பறக்க நினைக்கிறேன்
கூர் அம்புகள் குறிபார்க்குமே
பறக்கும் ஆசையோடு நடக்கிறேன்
மார்க்ஸிசம் வேணுமா ?
நக்சலிசம் வேணுமா ?
அடையாள அரசியல் வேணுமா?
விடுதலை அரசியல் வேணும்
எதிரிகளை விட்டு விட்டீர்கள்
தோழர்களோடு மல்லுக்கு நிற்கிறீர்கள்
ஞாபகம் கொள்ளுங்கள்
எதிரி இரக்கமற்றவன்
ஓடிக் கொண்டிருக்கும் ஆறு
ஆடிக் கொண்டிருக்கும் மரம்
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
அன்பை மொழிபெயர்த்தேன்
கணக்கற்ற பூக்கள் பறவைகள்
எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கின
பாழ் நிலத்தின் வழியே பயணிக்கிறேன்
ஆதுரத்துடன் என்னை உற்று நோக்குகிறது
ஏதும் உதவமுடியாத அதன் இயலாமை வெக்கையாய் கமழ்கிறது
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டாதவர்கள்
வேண்டுதலும் வேண்டாமையும் அவரவருக்குரியது.

வசந்ததீபன்

அடையாளங்கள் நிர்மூலமாகும் கவிதை – வசந்ததீபன்

அடையாளங்கள் நிர்மூலமாகும் கவிதை – வசந்ததீபன்




காற்றுக்கு இல்லை
நீருக்கு இல்லை
வானுக்கும் பூமிக்கும் இல்லை
இயற்கை யாவும்
பேதம் பார்ப்பதில்லை
நீ மட்டுமேன்?
எம் வியர்வையில் விளைந்தவைகள்
உன் உடலை.. உயிரை..
காக்க.. பராமரிக்கத் தேவை
ஆனால்
எம் அருகாமை அருவருப்போ…!
எம் தொடுதல் தீட்டோ…!
எம் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி
நீ வெறியாடுவாய்
வல்லுறவில் எம் பெண்களை சிதைத்து
நீ சின்னபின்னாமாக்குவாய்
இழிந்த..ஈனம்.. என்று அடையாளமிடுவாய்..
சேரி என பெயரிட்டு தனி உலகிற்குள்
எம்மைத் தள்ளி பூட்டுவாய்
உன் யாகத்திற்கு எம் இரத்தம்
உன் தாகத்திற்கு எம் கண்ணீர்
உன் தினவுக்கு எம் சந்ததி
உன் மனப் பிறழ்வுக்கு எம் வாழ்வு
உன் அதிகாரம்.. திமிர்..
கொலை மிரட்டல்.. பயமுறுத்தல்.. அராஜகம்… என்பவை
இனியும் கோலோச்சாது
எமக்கு கரங்கள் உண்டு
அவைகளும் ஆயுதங்கள் ஏந்தும்
உன் இதயம் மாமிசத்தாலானது
எம் இதயம் விசப்புகை வீசும் ரணம்
காலம் காலமாய் அடக்கப்பட்டு கொதித்துக் கொண்டிருக்கிறது
எரிமலையாய் வெடிக்கும்
உன் சவமேடுகளில் பூக்களைத் சொரியும்.

– வசந்ததீபன்