Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 – சுகந்தி நாடார்



2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

அலிபாபா நிறுவனம் இயற்கை சூழலுக்காக  செய்யும் வேலைகளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இயற்கையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமாக புத்தாக்க எரிசக்திகளைக் கொண்டுவருவதும் ஏற்கனவே சூழவியலில் உள்ள கரிமல வாயுவை சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்திலும் முதலீடு செய்து சுற்றுப்புறத்தையும் சூழ்வியலையும் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் மக்களின் நடத்தையை, குணாதிசியத்தை மாற்றப் போவதாகவும் சீன அலிபாபா நிறுவனம் அறிவித்து உள்ளது. இதில் இருந்து இரு செய்திகளை நாம் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று 2030 ஒரு முக்கியமான ஆண்டு. இரண்டாவது  ஒரு நிறுவனத்தால் மனிதர்களின் குணாதிசியத்தை எளிதில் மாற்ற இயலும். அதற்குத் தேவையான அணுகு முறைகளும்  தரவுகளும் அவர்களிடம் ஏற்கெனவே இருக்கின்றது.  இந்த இரண்டில் இரண்டாவது  கூறப்படும் விஷயம் நாம் அனைவரும் அன்றாடம் அனுபவித்து வருகின்றோம். இன்று நம் ஒவ்வொரு வேலையும் தொழில்நுட்பங்கள் என்ன சொல்கின்றதோ அதை அடிப்படையாக  நம் தினப்படி வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது.  

ஆனால் முதலாவது செய்தி அது என்ன 2030? அந்த ஆண்டில் என்ன அப்படி முக்கியத்துவம்?

2030ம் ஆண்டு இன்று உலக அரசின் செயல்திட்டங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகத்திலும் பங்குசந்தையிலும் பொருளாதார வல்லுநர்களாலும் ஒரு தாரக மந்திரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1990களிலிருந்தே ஐநாசபை மனித எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அப்போதைய புள்ளி விவரங்களில் இருந்து தெரிந்து கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தது. அதன் விளைவாக  நீடித்து இருக்கக் கூடிய வளர்ச்சிக் குறிக்கோள்கள் என்று ஒரு பதினேழு குறிக்கோள்களை ஐநா சபைக் கொண்டு வந்தது. நம் பின்வரும் தலைமுறையினரின் எதிர்காலத் தேவைகளுக்கு எந்த ஒரு பங்கமும் வராமல், இன்றையத் தேவைகளை சந்திக்கும் ஒரு வளர்ச்சி தான் நீடித்து நிற்கக் கூடிய வளர்ச்சியின் சாராம்சம்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

ஏழ்மையில்லா நிலை, பசிக் கொடுமையின்மை, ஆரோக்கியம், வளமான கல்வி, பாலின வேறுபாடு களைவு, தூய்மையான நீரும் சுகாதாரமும், மலிவு விலையில் சுத்தமான ஆற்றல், தனிமனிதனுக்கு நல்ல வேலை, பொருளாதார வளர்ச்சி, சமநிலை, வளங்கள், நீடித்து இருக்கும்படியான பயன்பாட்டைக் கொண்ட சமுதாயம், பொறுப்புணர்வோடு கலந்த நுகர்வும் உற்பத்தியும் சூழவியல் செயல்பாடு நீர்வாழ் உயிரினப்பாதுகாப்பு, நிலவாழ் உயிரினப்பாதுகாப்பு, அமைதி, நீதி இவ்விரண்டையும் மையமாக் கொண்ட  சமுதாய அமைப்பு, இவ்வனைத்து குறிக்கோள்களையும் அடைய கூட்டுறவு முயற்சி ஆகிய 17 குறிக்கோள்களைக் ஐநாசபை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐநாவின் திட்டப்படி இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டியக் காலக்கெடுதான் 2030ம் ஆண்டு.

மேற்கூறிய குறிக்கோள்களை அடைய ஒவ்வோரு நாடும் சட்டங்கள் இயற்றினாலும் பல வியாபாரர நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி சிறந்த நிலையில் இருந்தால் ஒழிய இந்தக் குறிக்கோள்களை அடையமுடியாது. இன்று நிறுவனங்களின் செயல்பாடு எப்படி இருக்கின்றது?

நுகர்வோர் மிண்ணனு பொருட்காட்சி (consumer electronic show- CES 2022) ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்வேகாஸ் நகரில் தற்போது நடந்துகொண்டு இருக்கின்றது. நுகர்வோர் தொழில்நுட்ப அமைப்பு ஒன்று 1967ல் நிறுவப்பட்டு அதன் மூலம் பாமர மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் மின்ணனு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணைந்து மூன்று நாள் பொருட்காட்சியை ஆண்டாண்டுகளாய் நடத்தி வருகின்றது. நுகர்வோர் வாழ்வின் அனைத்து பரிணாமங்களின் இன்று கணினி இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இந்தப் பொருட்காட்சி இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களை அலசி ஆராய்ந்தால் நமது எதிர்காலம் எப்படி இருக்கும்? முக்கியமாக வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பிற்கு நாம் நிச்சயம் வரலாம்.

செயற்கை நுண்ணறிவிலிருந்து முப்பரிமாண அச்சிடுதல் போக்குவரத்து , உடல்நலம், மனநலம், பந்தய விளையாட்டுகள், கேளிக்கைகள், சாதூரியமான நகரம், சாதூரியமான வீடு, விண்வெளி பாளச்சங்கித் தொழில்நுட்பம், மிண்னியியல் செலாவணி என்று பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பொருட்காட்சியில் ஈடுபட்டுள்ளன. கல்வித் தொழில்நுட்பத்திற்கு என்று தனிப்பிரிவு இல்லை என்றாலும் தொய்விக்கும் பொழுது போக்கு IMMERSIVE Entertainment தொழில்நுட்பத்தின் மெய்நிகர் தொழில்நுட்பங்களும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பமும் கல்வி சார்ந்த மின்ணனு சாதனங்களுக்கு அடிப்படையாக அமையும் என்று கொள்ளலாம்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

நேரத்திற்கும் இருப்பிடத்திற்கும் தகுந்தார் போல விளம்பரங்களைக் காட்டும் LG நிறுவனத்தின் CLO இயந்திர மனிதன், organic light-emitting diode என்பதின் சுருக்கமான OLED தொலைக்காட்சிப் பெட்டிகள். தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் BMW மின்சார மகிழுந்து, OMN ipod எனப்படும் சகல வசதிகளும் செயற்கை நுண்ணறிவு இயந்திர வேலையாளும் கொண்ட உல்லாச போக்குவரத்து வாகனம், எந்த ஒரு தளத்தையும் தொலைக்காட்சியாக மாற்றக் கூடிய தொழில்நுட்பம், விளையாடுக்களுக்கெனவே பயன்படும் மடிக்கணினி என்று மின்னணு சாதனங்களின் ஊர்வலம் தொழில்நுட்ப ஆர்வலர்களையும் நிபுணர்களையும் இணைத்து நடக்கின்றது. இவ்வாறாக மொத்தம் 2200 நிறுவனங்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் இந்தப் பொருட்காட்சியின் இணையதளம் தெரிவிக்கின்றது.

இவற்றைப் பார்க்கும்போது, எந்த மாதிரி தொழில்நுட்பம் வருங்காலத்தில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் என்று நம்மால் யோசிக்கமுடியும். ஆனால் அதைவிட முக்கியமாக இந்த சாதனங்கள் எல்லாமே தற்போது பொழுதுபோக்கு அம்சங்களின் ஒரு பகுதியாக உள்ளன என்பதும் நமக்குத் தெரிகின்றது. இன்றைய தலைமுறை நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றையும் புத்தாக்க சிந்தைனையால் தொழில்நுட்பத்தின் உதவியோடு மெருகு ஏற்றிக் கொண்டிருக்கின்றது.

2015ல் ஆப்பிள் நிறுவனம் கணினியையே கைக்கடிகாராமாக்கியது ஒருவர் பயன்படுத்தும் கணினி திறன்பேசி அனைத்தும் அக்கடிகாரத்துடன் இணைந்து செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை இலகுவானதாக மாற்றுவதாக விளம்பரம் செய்து ஆப்பிள் நிறுவனம் அக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது. இன்று உலகம் முழுவதும் ஆப்பிள் ஆண்ட்ரைடு, சாம்சங் தளங்களுக்கு ஏற்ப மூன்று வித திறன் கடிகாரங்களே சந்தையில் உள்ளன. ஆனால் இன்றளவும் ஏறத்தாழ 12.3 million திறன் கடிகாரங்கள் விற்பனையாகியுள்ளன. 

இந்த திறன் கடிகாரங்களை ஒப்பிடும் போது, கணினி சாராத பாரம்பரியக் கைகடிகாரங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இருபதிற்கும் மேல் உள்ளன. இந்தியாவில் மட்டும் 6 கடிகார நிறுவனங்கள் உள்ளன. இக்கடிகாரங்களில் நடக்கும் தொழில்நுட்ப மாற்றத்தைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

இந்த நிறுவனங்களில் கார்ட்டியர் கைக்கெடிகார நிறுவனம் அறிமுகப்படுத்திய மாதிரியில் 1917 வருட முகப்புக் கொண்டு, சூரிய சக்தியில் இயங்கும் மின்கலம் கொண்ட கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. சூரிய ஒளியில் இயங்கும் கைக்கடிகாரங்கள் முன்பே இருந்தாலும், இப்போது கடிகார எண்களில் உள்ளத் துளை வழியாகவும் சூரிய ஒளி சென்று மின்கலத்தை உயிரூட்டும் வகையில் இந்தக் கைக்கடிகாரத்தின் கட்டுமானம் உள்ளது. அதே போல கைகடிகாரத்தின் பட்டையுமே ஆப்பிள் பழத் தோலிலிருந்து பெறபப்ட்ட மூலவளம் 40% பயன் படுத்தபப்டுகின்றது. என்ன ஒரு புத்தாக்க சிந்தனை. இயற்கை வளங்களை காப்பதில் என்ன ஒரு அக்கறை.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

Yankodesign என்ற நிறுவனம் நாம் சிறுவயதில் பயன்படுத்திய walkman போன்றத் தோற்றத்தில் bluetooth ஒலிப்பெருக்கிகளாக அறிமுகப்படுத்தியுள்ளன. அதேபோல இன்றைய திறன் பேசியை tape recorderல் இட்டு பாடவைப்பது போன்ற  walkman ஒலிப்பெருக்கிகளும் வந்துள்ளன. சில ஒலிப்பெருக்கிகளில் திறன்பேசி மின்னேற்றம் செய்வதற்கும் வழி செய்யபட்டுள்ளது. வாழ்க்கை என்ற வட்டம் இதுதான் நம் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னதை அவர்களின் தலைமுறையினர் ஆசையோடு அரவணைக்கின்றனர். 2015ல் 18 வயதில் இருந்த சிறுவன் இப்போதுதான் இதுவரை அனுபவிக்காத ஒன்றைப் புதுமை என்று எண்ணி தன் வாழ்க்கை முறையில் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

இத்தலைமுறையின் குழந்தைகளுக்கு எந்த மாதிரிக் கல்வியை நாம் வழங்க முடியும்? அதற்குத் தயாராக நாம் என்ன செய்ய வேண்டும்? ஐநாவின் குறிக்கோள்களை அடைய அரசும் நிறுவனங்களும்  செயல்பட்டால் போதுமா கல்வி என்ற அமைப்பு என்ன செய்ய வேண்டி இருக்கிறது?

இயற்கை வளங்களைக் காப்பது, மனித வளங்களைக் காப்பது, மருத்துவம் என்று பல துறைகளில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நுகர்வோருக்கு அடையாளம் காட்டும் கலாச்சாரம், நுகர்வோரின் குணாதிசியத்தை மாற்றும் ஒரு வழியாகத்தான் தோன்றுகின்றது. மனித வளமும் தொழில்நுட்பமும் மோதிக் கொள்ளும் நாள் வருமா? அப்படிப்பட்ட ஒரு நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? கை கொடுக்குமா கல்வி 4.0? யோசிக்கலாம்.

இயற்கை வளங்களில்லா உலகில் கல்வி என்பது என்ன?
நாம் இன்று திறன்பேசியை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? ஒரு தொலைபேசியாக, ஒரு கடிகாரமாக, ஒரு நாள் காட்டியாக, ஒரு விலாசப்புத்தகமாக, ஒரு ஆலோசகராக, செய்தித்தாளாக, நம் தொழில்சார்ந்த கணினியாக என்று பலவிதங்களில் பயன்படுத்துகின்றோம். இப்படி எல்லா வழிகளிலும் தகவல்களைப் பெறும் கருவியாக இருக்கும் ஒரு சாதனம் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக மாறிவிடுகின்றது. நாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மின்சாரப் பற்றாக்குறையால் அவதிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போது மின்சாரம் தடைபட்டாலும் நம் வீட்டில் முக்கிய மின்சார சாதனங்கள் தற்காலிகமாக வேலை செய்ய வேண்டிய உபகரணங்களை வாங்கி வைத்து இருக்கின்றோம்.

கருவிகளைப் பயன்படுத்த நமது பழக்க வழக்கங்கள் மாறுகின்றன.  ஒருவருடைய சராசரி நுண்ணறிவு குறைய ஆரம்பிக்கின்றது. நம் வீடுகளில் துவைப்பதற்கு என்று கல் இருக்கும். அவற்றின் இடத்தை சலவை இயந்திரங்களுக்கு நாம் கொடுத்துவிட்டோம். அம்மி உரல் போல துவைக்கும் கல்லும் கூட ஒரு கலாச்சாரத்தின் அடையாளாமாக மாறிவிட்டது.

ஆனாலும் இன்றைய தமிழ்நாட்டில், மின்சார சலவை இயந்திரம் வேலை செய்யாவிட்டால் நம்மில் பலருக்கு நம் துணியை துவைக்கத்தெரியும். அதே அம்மியில் அரைக்கத் தெரியுமா? ஆட்டுக்கல்லில் ஆட்டத் தெரியுமா ஏன்றால்? நம்மில் பலரின் பதில் என்னவாக இருக்கும்?

சுகாதாரமான உடை அணிவதும் நாவுக்கு ருசியாக உணவு உன்பதும் எந்த ஒரு மனிதனின் அடிப்படைத்தேவை. அவற்றைக் கருவிகள் கொண்டு செய்யப்பழகும்போது நாம் நம் உடல்பயிற்சியை மட்டுமல்ல மற்ற ஒரு சில திறன்களையும் இழந்து விடுகின்றோம். மின் இயந்திரங்களை சமையலில் பயன்படுத்தும்போது, நம் வேலை எளிதாகிறது. அதை அடுத்து பொடிகளை வாங்கி சமைக்கின்றோம். அதுவும் குளிர்சாதனப்பெட்டி என்ற  இயந்திரம் வந்து விட்டதால் பல வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறைதான் சமையல், அதை அடுத்து இப்போது வலையொளியில் பார்த்து சமைக்கின்றோம். பாரம்பரிய கிராமக் கலைகளைத் தொலைத்து போல தொலைந்து போன ஒன்று சமையல்கலை. 

எங்கள் வீட்டில் என் குழந்தைகள் நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போது நடந்த கதை ஒன்றைக் கேளுங்கள். நான் அமெரிக்கா வந்ததிலிருந்து மின் இயந்திரத்தில்தான் துணி துவைப்பது. என் குழந்தைகள் இந்தியா வரும்போது மட்டுமே, துவைக்கும் கல்லைப் பார்த்து இருக்கின்றார்கள். அதில் துணி துவைப்பதை ஆச்சரியமாகப் பார்த்து இருக்கின்றார்கள்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

சரி கதைக்கு வருவோம். என் இரண்டாவது பெண் எட்டாம்வகுப்பு படிக்கும்போது அவர்களின் கோடைக்காலக் கல்வியாக மற்ற நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் மூன்று வாரங்களுக்கு உலக சுற்றுப்பயணம் செல்ல முடிவுசெய்தாள். சரி பயணத்திற்குத் தயாராகும் வேளையில் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது, என்னவென்றால் அமெரிக்கா போல இல்லாமல் மற்ற எல்லா நாடுகளிலும் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் அதிகம். ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக யாரிடம்  தனி வாகனங்கள் இருப்பதில்லை. பொது வாகனங்களில் மட்டுமே மற்ற நாடுகளில் பயணிக்க இயலும். அதனால் மாணவர்கள் அவர்களால் கையாளக்கூடிய வகையில் எடை குறைந்த இலகுவான பயணப் பெட்டிகளே எடுத்துவர வேண்டும்.

முடிந்த அளவு ஒருவருக்கு ஒரு பயணப்பெட்டி ஒரு கைப்பை போதும் என்று கூறிவிட்டனர். மூன்று வாரத்திற்கு ஒரேஒரு பெட்டி என்னும்போது தினம் ஒரு ஆடை அணிய இயலாது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வந்தாலே போதுமானது. எடுத்துவரும் துணிகளும் எளிதில் துவைத்து அலசிக் காயப்போடும் வகையில் இருக்கவேண்டும் அவர்கள் தங்கும் இடங்களில் அவர் அவர் துணியை அவர்களேத் துவைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் பயணம் எளிதாக இருக்கும் என்று சொல்லி விட்டனர். 

அடுத்தது என்ன? கையால் துவைக்க சோப்புக் கட்டியைத் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்கு சென்றாலும் சலவை இயந்திரத்திற்கு போடும் சோப்புத்தான் கிடைத்தது. வேறு வழியின்றி அந்த சோப்புத்தூளை வைத்தே துணி துவைக்க சொல்லிக் கொடுக்கவேண்டும். பயணத்தில் இருப்பவர்களாயிற்றே கூடவே வாளியையா கொடுத்து அனுப்பமுடியும். எட்டாவது படிக்கும் பெண் இயந்திரத்தில் அழகாக தன் துணியை துவைத்து எடுத்து வைத்துவிடுவாள், ஆனால் கையால் துவைக்க வேண்டுமேயானால்?

பயண ஏற்பாட்டாளர்கள்  சொல்லித் தந்தபடி ஆரம்பித்தது துணி துவைக்கும் பயிற்சி. துணியைக் கையால் துவைப்பது எப்படி  என்று பட்டியலிட்டு ஒரு காகிதத்தையும் கொடுத்து விட்டார்கள். 

அவள் செய்ய செய்ய நான் அவளை மேற்பார்வையிட வேண்டும் (நான் வேறு ஆசிரியர்கள் சொல்வதை பிறழாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அடிக்கடி புத்தி மதி கூறி இருக்கின்றேன். என் சொல்லைக் கேட்கவா போகிறாள்?. உதடுகளை கடித்து என் வாயை மூடி அவள் செய்வதைக் கவனிக்க ஆரம்பித்தேன். முதலில் நாம் கை கழுவி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணியை ஊறவைத்து பின் அதிலேயே அலச வேண்டும். 

தொட்டியில் நீரை நிரப்பி, சோப்புத்தூளை போடும்வரை இருவருக்குமே ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அதில் துணியை போட்டு ஊறவைக்க வேன்டும் என்ற நிலையில் எங்கள் இருவருக்குமே குமட்டிக் கொண்டு வந்தது. சரி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணி துவைப்பது என்பது முடியாத காரியம் என்று தெரிந்துபோனது. வீட்டில் இருக்கும் தொட்டியிலேயே இவ்வளவு அருவருப்பாக இருக்கும்போது பொதுத்தொட்டியில் துணியை துவைப்பதா ?

கண்டிப்பாக முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து குளிக்கும்போதே அப்படியே துணியை அலசிக் கொள்வது. அப்படி செய்து இரவில் துணியை குளியல் அறையிலேயே வைத்து விட்டு மறுநாள் காலை சென்று பார்த்தால் துனியிலிருந்து ஒரு வாடை மட்டுமல்ல துணி கொஞ்சம்கூட காயவில்லை ஏன் என்றால் துணியை ஈரம் போகப் பிழிய அவளுக்குத் தெரியவில்லை, துணையைப் பிழியாமலே சொட்ட சொட்ட காயப் போட்டு வந்துவிட்டாள்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

இந்தக் கதையை எதற்குச் சொல்கின்றேன் என்றால், இயந்திரத்தை வைத்து ஒரு செயலைச் செய்யப் பழகிய அவளுக்கு அந்த வேலையை இயந்திரம் இல்லாமல் செய்யத்தெரியவில்லை. அதைவிட அந்த வேலையைச்செய்யும் பொறுமை அவளிடம் இல்லை. ஒரு இயந்திரத்தை இயக்கத் தெரிந்த அறிவைக் கொண்டு மட்டுமே அவளுடைய அன்றாட வாழ்க்கை இன்றும் நடக்கிறது.

இந்த இளம் தலைமுறையினர் பொதுவாக இப்படித்தான் இருக்கின்றனர். கணினிகள் சூழந்து அவர்கள் வாழும் வாழ்க்கை, கணினிகளே அவர்களுடைய வாழ்க்கையின் அத்தியாவசியம் ஆகி விடுகிறது. கருவிகளையே நம்பி வாழும் தலைமுறைக்கு  நமக்குப் பிந்தைய தலைமுறையினர் நுண்ணறிவோடு செய்த செயல்கள் ஆச்சிரியத்தைத் தருகின்றன. அவை ஒவ்வோன்றையும் அற்புதமாக நினைக்கின்றனர். அதனாலேயே இன்றைய அவர்களுடைய வாழ்க்கையில் புத்தாக்கம் என்பது  நுண்ணறிவு சார்ந்து செய்யப்படும் செயல்கள்தான். நாளையை தலைமுறை நேற்றைய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்  கருவி என்ற ஒரு பெரியதிரை இடையில் இருக்கின்றதே!

ப்படி யோசித்தால் நம்முடையக் கல்வி என்பது கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது மட்டுமா? இல்லையே? கருவி என்பது மனிதன் செய்யும் வேலைக்கு உதவி புரிய வந்தது தானே? இந்தக் கேள்விகளைப் பார்க்கும்போது இயற்கை சார்ந்த வாழ்க்கைதான் சிறந்தது என்ற முடிவிற்கு நாம் வரலாம். ஆனால் நம்முடைய சுமை தோளாக இருக்க இயற்கை உயிரோடு இருக்குமா? இயற்கையைவிட மேலாக நம் முண்ணோரின் அனுபவ அறிவிற்கும்  நுண்ணறிவிற்குமே 2030ல் பற்றாக்குறை இருக்குமே?

நாம் இன்றிலிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்தான்/ ஆனால் அது மட்டும் போதுமா? நமது நுண்ணறிவை,  கடந்த 200 ஆண்டுகால பட்டறிவை எப்படிக் காப்பது?

உலகில் ஐயாயிரம் வகை தவளைகள் இருக்கின்றனவாம். ஆனால் தவளைகளின் தொகை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. காரணம் அசுத்தமாகிப்போன நீர் நிலைகள். இப்படி எத்தனையோ நாம் கைக்காட்டிக் கொண்டே போகலாம். நம்முடைய வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தவேண்டும் அதே நேரம் செழிப்பான மண்வளம், நீர்வளம் மாசற்ற காற்றும் நம் அடிப்படைத் தேவையல்லவா? ஐநாசபை 2030க்கான திட்டம் கொரானா பெருந்தொற்றினால் ஆட்டம் கண்டிருந்தாலும் அரசாங்கத்தைப்போல, சமுதாயப் பொறுப்புள்ள நிறுவனங்களைப்போல கல்வியாளர்களாகிய நமக்கும் ஐநாவின் பதினேழு குறிக்கோள்களைப் பின்பற்றி ஒரு நல்லுலகைப் படைக்க வேண்டாமா? 

ஒவ்வோரு நாடும் தன் தனித்தன்மை, பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைக் கணினி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுத்தால் போதுமா?  

நாம் இன்று என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?

அதற்குத் தான் கல்வி 4.0. இத்தனை வாரங்களில் கல்வி 4.0ன் தேவைக்கான காரணிகளைப் பலவாறு பார்த்தோம். அடுத்து கல்வி 4.0 என்ன என்பதைப் பார்ப்போம். அதை இன்றே நாம் நம் கல்வி முறையில் எப்படிப் பயன்படுத்துவது என்றும் காணலாம். உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்:

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74 – சுகந்தி நாடார்



என்ன மாதிரியான விழிப்புணர்வு?

சிறந்த  கல்வியின் அடிப்படை உன்னதமான கல்வி வளங்களும் மனிதநேயம் வளர்க்கும் ஆசிரியர்களும். இவை இரண்டும் உருவாக தகவல்தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

விழிப்புணர்வின் அடுத்தப்பக்கம் நமது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள். இணையதளம் என்பதை virtual என்று கூடக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். அப்படி என்றால் 

carried out, accessed, or stored by means of a computer, especially over a network என்று Oxford ஆங்கில அகராதி கூறுகின்றது. இதையே தமிழில் நடைமுறையில் மெய்யான , செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க என்று அகராதி கூறுகின்றது. அதே virtual என்ற சொல்லை கணினிக் கலைச்சொல்லாக பார்க்கும் போது மெய்நிகர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். மெய்நிகர் என்றுதான் கூறுகின்றோமேத் தவிர மெய் என்று சொல்வதில்லை. மெய்க்கு நிகரான ஒன்று மெய்யாகி விட முடியுமா? இதையே தான் Oxford ஆங்கில அகராதியும் not physically existing as such but made by software to appear to do so என்று இன்னோரு விளக்கமும் அளிக்கின்றது. தமிழில் மாயம், மறைமுகம் கற்பனை என்று கூட இச்சொல்லுக்கு பொருள் இருக்கின்றது. இந்த அடிப்படையைக்கூட உணராமல் நாம் இணையத்தில் வரும் தகவல்களை நம்பிச் செயலாற்றிக் கொன்டு இருக்கின்றோம்.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி நார்வே நாட்டில் நோபல் பரிசு பெற்ற இரஷ்ய பிலிப்பைன்ஸ் செய்தித் தொடர்பாளர்கள் தங்களுடைய ஏற்புறையில் இன்றைய செய்திகள் குறித்த கவலையைத் தெரிவித்து உள்ளனர். அதிலும் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ராப்ளர் என்ற செய்தி தளத்தின் முதன்மை மேலாண்மை அலுவலர் மரியா ரேசா சமூக வலைதளங்களில் வரும் செய்திகளைக் குறித்த தன் கவலையைத் தெரிவித்தார். இன்றைய சமூக வலைதள நிறுவனங்களை நேரடியாக குறித்துப் பேசிய அவர் “ செய்தியாளர்களின் இன்னோரு பக்கமாக இருக்கும் தொழில்நுட்பத் தளங்கள், பொய் என்ற கிருமிகள் மூலம் நமது சிந்தனையை ஆக்கிரமித்து, நம்மை ஒருவரை ஒருவரோடு மோத வைத்து மக்களின் மனதில் பயன் கோபம் ஆத்திரம் என்ற விஷ உணர்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். இந்த விஷமச் செய்திகள் நம் உலகத்தை ஒரு அலங்கோலமாக மாற்றி வருகின்றது. தங்களுடைய இலாபத்திற்காக இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் அமெரிக்க தொழில்நுட்பங்களுக்கு எதிராக உண்மையான செய்திகளைப் பரப்ப செய்தியாளர்கள் மிகவும் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். சமூக வலைதளங்களில் நடக்கும் வன்முறை இன்று உலகில் நாம் அனைவரும் அனுபவிக்கும் உண்மையான வன்முறை என்று அவர் சொல்கிறார்.

இன்று உலகில் வலம்வரும் செய்திகளில் பெரும்பான்மையான பங்கு முகநூல் வழியாகத் தான் பகிரப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் உண்மையான மனிதர்களா அல்லது வர்த்தகங்களா என்ற விவரம் முகநூல் நிறுவனத்திற்கு அன்றி வேறு யாருக்கும் தெரியாது. இந்தப் பயனாளர்கள் இடும் செய்திகள் எந்த வகையைச் சார்ந்தவை என்பதும் முகநூலுக்குத் தான் தெரியும். 2021ம் ஆண்டு டிசம்பர் பதினாறாம் தேதி வெளிவந்த அறிக்கையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா (meta) கொடுத்துள்ள அறிக்கையில் பல தனியார் அவதானிப்பு (surveillance) நிறுவனங்கள் ஏறத்தாழ 50000 பயனர்களை தாக்கி அவர்களிடமிருந்து விவரங்களை எடுத்து அதை வைத்து உளவு நடத்தி இருப்பதாக அறிவிக்கைத் தெரிவித்து உள்ளது.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?டிசம்பர் 3ம் தேதி வந்த Reuters செய்தித்தளத்தில் வந்த செய்தியில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அரசியல் செய்தித் தளம் 2020ம் அமெரிக்கத் தேர்தல் பற்றிய பொய்யான செய்திகள், புரளிகளை உண்மை செய்தியாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாகத் தெரியவருகிறது. இது முகநூல் நிறுவனத்திற்குத் தெரிந்திருந்த போதிலும் அவர்கள் செய்திதளத்தைக் கண்டித்த போதும் இந்தத் தளத்திலிருந்துவரும் பொய்யான செய்திகளை முகநூல் நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிகிறது.

நவம்பர் ஒன்பதாம் தேதி முகநூல் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளிவரும் ஒவ்வொரு 10,000 பதிவுகளில் பயனாளர்களை அச்சுறுத்தியும் கோபப்படுத்தியும் மன உளைச்சல் கொடுத்தும் தொந்தரவு கூட பதிவுகள் 14 அல்லது 15 முறை வருகின்றன என்று கூறுகின்றது. இவ்வாறு தவறு இழைக்கும் பயனர்களின் கணக்கை முடக்கியும், அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடுத்தும் வருகிறது முகநூல்.

முகநூல் கொடுக்கும் தண்டனைகளில் முக்கியமானது இம்மாதிரி பதிவுகளைப் பற்றி எச்சரிக்கையை மற்றப் பயனர்களுக்குக் கொடுப்பதும். அப்பதிவுகளை பயனர்கள் பார்க்காதவாறு கீழே தள்ளுவதுமே தவிர இந்தச் செய்திகளை முழுமையாக அவர்களின் தளத்திலிருந்து எடுப்பதில்லை. அப்படியானால் நாம் மின்னியியல் வழி நுகரும் செய்திகளில் எது உண்மையானது? எது பொய்யானது? எது நிகழ்வுகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தபடுகிறது? எது நம் உணர்வுகளைத் தூண்டி செயல்பட வைக்கிறது.

ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கும்?

முகநூலில் வரும் எதிர்மறை செய்திகள் இன்று இணையத்தில் வரும் செய்திகளில் ஒரு எடுத்துக்காட்டுத்தான். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இணையத்தில் வரும் செய்திகள் எப்படிப்பட்டவை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்களை நம்பி இருக்கும் செய்தியாளர்களை நாம் குறை சொல்லமுடியாது. ஒரு செய்தியை எப்படி எவ்வாறு சேகரிப்பது என்ற அடிப்படையில் அல்லவா மாற்றம் கொண்டு வரவேண்டும்? அந்த மாற்றம் கல்வியாலும் கல்வியாளர்களாலும் தான் வரும்.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?
நோபல்பரிசு பெற்ற மரியா ரேசா அவர்களின் கருத்து சரிதானே? இன்றைய முன்ணனி இணைய நிறுவனங்கள் ஒரு பதிப்பகத்தைப் போலத்தானே செயல்படுகின்றன?

சில நாட்களுக்கு முன்னால் வலையோளியாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பதிவில் சொன்ன கருத்துக்களுக்காக கொடுக்கப்பட்ட புகாரை இரத்து செய்யும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உயர்திரு நீதியரசர் ஜீ.ஆர் ஸ்வாமிநாதன் அவர்கள் தன் தீர்ப்புரையில்கூட “எந்த ஒரு வலையோளியாளரோ அல்லது பொதுநல செய்திகளைப் பற்றி கருத்துரைக்கும் சமூகவலைதள பிரபலங்களோ இந்திய அரசு சாசனம் Article 19 (1) (a) படி ஊடகங்களும் செய்தியாளர்களும் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்று கூறுகிறார்.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?
இவ்வாறு மக்கள் நுகரும் அனைத்து செய்திகளிலும் கலப்படம் இருந்தால் என்ன செய்வது? கலப்பட செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளவும், உண்மையானச் செய்திகளை எவ்வாறு கொடுப்பது? கொடுக்கும் செய்திகள் மனிதஉரிமைகள் மீறா வண்ணம் எப்படி அமையவேண்டும் என்று சொல்வதும் கற்றுக் கொடுப்பதும் கல்வி தானே? இன்றையக் கல்வி அப்படிப்பட்ட ஒரு கருவியாக மாணவர்களுக்குப் பயன்படுகின்றதா? இல்லைதானே?

பசி எவ்வாறு ஒரு காலத்தில் போக்ககூடிய ஒரு பிணியாகப் படுத்தபட்டதோ? எப்படி மின்சாரப் பற்றாக்குறை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியத் தேவையாக முதன்மைப் படுத்தப்பட்டதோ அது போல கல்வி முறையில் மாற்றம் இன்றைய இன்றியமையாதத் தேவையாக உள்ளது. கல்விப் புரட்சியில் நம் பொருளாதாரத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா நிலைகளிலும் தன்னிறைவு அடையலாம்.

செய்தித்தாள், வானோலி தொலைக்காட்சி மூலம் வரும் செய்திகளை நாம் வடிகட்டி எடுத்துப் புரிந்துகொள்ள சற்றேனும் கால அவகாசம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் கணினி வழி தகவல் தொழில்நுட்பத்தின் அகோர வடிவமாக, நம்மை வந்து அடையும் இந்த செய்தித் துணுக்குகளின் தாக்கத்தை எவ்வாறு  நேர்மறையாக மாற்ற  முடியும்?  என்ன செய்யலாம்?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 73th Series - Suganthi Nadar. Book Day. Educational poverty கல்வி ஏழ்மை

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73 – சுகந்தி நாடார்



கல்வி ஏழ்மை

இன்றைய கல்வியின் துணைக்கருவிகளாக தொழில்நுட்பம் மிளிர்ந்து  வருகின்றது. அன்றாடம் நடக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் கல்வியாளர்களுக்கு ஒரு சோதனையாகவும் சவாலாகவும் இருக்கின்றது,தொழில்நுட்ப மாற்றங்கள் கண்டிப்பாய் இலவசமாக நமக்குக் கிடைப்பதில்லை. கணினிக் கருவிகளாகட்டும் மென்பொருட்களாகட்டும்  கல்விச்சூழலை இணைக்கும் இணைய இணைப்பு ஆகட்டும் அனைத்துமே நம்மில் பலருக்கு இன்றளவும் ஒரு ஆடம்பரச் செலவாகவே உள்ளது. கல்வி என்ற ஒரு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான உபகரணங்கள் ஒரு குடும்பத்தின் ஆடம்பரச் செலவாக அமையும் போது அங்கே கல்வியின் நிலை என்ன கற்றல் கற்பித்தலில் நிலை என்ன? யோசித்துப் பார்க்கவே உள்ளம் நடுங்குகின்றது.

உலக வங்கிகள் குழுமம் என்ற அமைப்பு வளர்ந்து வரும் நாடுகளின் கல்விநிலைக்கு பண உதவி செய்யும் அமைப்பாகும் IBRD(The International Bank for Reconstruction and Development) IDA(The International Development Association) IFC(The International Finance Corporation) MIGA( The Multilateral Investment Guarantee Agency) ICSID(The International Centre for Settlement of Investment Disputes) ஆகிய உலகின் மிகப்பெரு நிதி நிறுவனங்கள் ஐந்து இணைந்து பின்தங்கிய நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் கல்விக்கான மேம்பாட்டிற்கு உதவி வருகின்றன இக்குழுமத்தின் நோக்கம் 2030ம் ஆண்டுக்குள் உலக ஏழ்மையில் 3% குறைப்பதும் ஒவ்வோரு நாட்டிலும் 40% மக்களின் வருமானத்தை உயர்த்துவதும் ஆகும். உலகில் கல்வியின் தன்மையைக் கண்டறிய 10 வயதுக் குழந்தைகளுக்கு கதை சொல்லி அவர்களின் புரிதல் தன்மையை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகம் முழுவதும் கல்வி ஏழ்மை பாதித்திருக்கின்றது என்று அறிவிக்கின்றது குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது 50% ஏழைநாடுகளில் இந்து 83%விகிதம் என்றும் இவ்வறிக்கைக் கூறுகின்றது.

பேரிடர் காலத்தில் கல்விக்கு ஏற்பட்ட பல்வேறு தடங்கல்களால் இந்தக் குறைபாடு மேலும் 10% அதிகரித்து உள்ளது என்றும். இந்த அதிகரிப்பிற்குக் காரணம் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வே என்றும் இவ்வறிக்கைக் கருதுகின்றது.

உலகம் முழுவதும் இருக்கும் கல்வி ஏழ்மையைப் போக்க இருவழிகள் உண்டு என்று ஐநா சபைக் கூறுகிறது, ஒன்று கல்வி மேம்பாட்டிற்காக உலகின் மிகப்பெரிய கணினி நிறுவனங்கள் முன் வர வேண்டும். இரண்டாவது ஆசிரியர்களுக்கு இணையக் கல்வியில் ஆசிரியர்களுக்கு உதவியும் திறன் மேம்பாடு பயிற்சிகளும் கொடுக்கவேண்டும் இவை இரண்டுமே பொருளாதாரம் சார்ந்தது.

கல்வி ஏழ்மையைப் போக்குவதற்காக தங்கள் இலாபத்தை  நிறுவன ங்கள் அரசாங்கங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுமா அப்படி நிறுவனங்கள் உடன்படிக்கை செய்துகொண்டால் அதில் அவர்களின் சுயநலம்  எவ்வளவு இருக்கும்? கணினிக் கல்வி ஆசிரியர்களுக்கு அவசியமான ஒன்று ஆனால் ஒவ்வோரு நாட்டின் தனித் தன்மையைப் பாதிக்காத வண்ணம் எவ்வாறு அமையும்?  அதற்கான மூலதனம் என்ன?

இன்றையக் கல்வி என்பது பொருளாதாரத்தை சார்ந்தது அல்ல என்று சொன்னாலும் நம் பொருளாதார வளம் வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி நம் கல்வியை சார்ந்து இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ள வேண்டும் அதிலும் எதிர்காலப் பொருளாதாரம் முழுக்க முழுக்க கணினி சார்ந்தது எனும் போது தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வு கண்டிப்பாக தீர்த்து வைத்து வைக்க வேண்டிய ஒரு பிரச்சனை தான் ஆனால் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசமாக இருக்கும் போது சரி செய்ய இயலுமா?

இன்று நிலைவும் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வுகளை தீர்க்கும் முயற்ச்சியில் முதல் படி கணினி பற்றிய விழிப்புணர்வு தான். என்ன மாதிரியான விழிப்புணர்வு?
Essential requirements for internet classroom 73th Series - Suganthi Nadar. Book Day. Educational poverty கல்வி ஏழ்மை
நவீன உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் விட மிக மிக வேகமாக மாறி வருவதும் அசுர வேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் ஒரு தொழில்நுட்பமாக கணினி தொழில்நுட்பம் இருக்கின்றது. அதிலும் தரவுகளின் சிறப்பான சீரான மேலாண்மையும், செயற்கை நுண்ணறிவும் இந்த வேகத்தை ஊக்கப்படுத்தும் உந்து சகதியாக இருக்கின்றன. இந்த உந்து சக்திகளில் மின் எண்ணியியல் செலாவணியும் சேர்ந்து கொண்டு இருக்கின்றது. செயற்கை கோள்கள் அன்றாடப் புழக்கத்திற்கு வரக்கூடியக் காலம் வெகுதூரத்தில் இல்லை.

நம் திறன்பேசிகளில், புகைப்படம் எடுத்து அதை பல கோலங்களில் கோணங்களில் மாற்றி அமைப்பது நமது பொழுது போக்கு என்றால் நம்மையே ஒரு திரைபப்டத்தின் நடடிகர்களாக மாறித் திரைப்படங்களை வெளியிட வைப்பது இன்றைய செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் கணினியால் உருவாக்கபட்ட முகத்தை நமக்கு விருப்பமான ஒருவரின் முகத்தைப் பொறுத்தி அந்த காணொலியில் அவர் இருப்பதாக பொய்யாக ஒரு தோற்றத்தை உருவாக்குக்கும் தொழில்நுட்பம் இணையத்திலும் அலைபேசிகளிலும் பிரபலம் அடைந்து வருகின்றது.

டீப் ஃபேக்ஸ் (deep fakes) என்று அழைக்கப்படும் உணரமுடியாத போலிகள் இன்னும் என்னெனென்ன தாக்கங்களை உருவாக்குமோ?  ஏற்கனவே பல விஷமிகள் புக்சிப் மென்பொருகள் மூலம் பெண்களை பாலியியல் சித்திரவதைக்கு உள்ளாக்குவச்து என்பது ஒரு சமூகநலக்கேடாக இருக்கிறது. இப்போது காணோலியாக வெளியிடப்படும் இந்த மென்பொருளுக்கு ஏற்கனவே காண களியாட்டங்களைச்செய்யும். இணையதளப் பயனாளர்களிடையே பிரபலம் அடைந்து வருகின்றது. 

அமெரிக்க தேர்தல் சமயத்தில் இது போல பொய்யான செய்திகள் உண்மை போல பரப்பப்பட்டன. சீனாவிலும் இந்தத் தொழில்நுட்பம் கடந்த 5 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. சீன செய்தியாளர்கள் சிறப்பான ஆமெரிக்க ஆங்கிலத்தில் பேசுவது போல தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மெரிக்க அதிபர் ட்ரம்ப். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பல சமுதாயப் பிரச்சனைகளை மக்களிடம் நேரடியாக தனது கருத்தை தெரிவித்தார். அந்த செய்தியை அவருக்கு பதிலாக அவர் தனது சமூக வலைதலங்களையே பயன்படுத்தி நேரில் மக்களுடன் தொடர்பில் இருந்தார்.

சென்ற ஞாயிறுகூட  இந்திய பிரதமரின் dividdar பாதிக்கப்பட்டது. வளைகுடா நாடான  அமீரகத்தில் உலகிலேயே அனைத்துமே மின்னியியல் வழி செயல்படும் ஒரு நாடு என்று அரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு ஒரு மின்னியல் நாடாக மாறியதால் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏறத்தாழ 350மில்லியன்  சேமிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்நாட்டின் இளவரசர் தெரிவித்தார். இவரது அறிவிப்பில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் மனித உழைப்பில் 14மில்லியன் மணி நேரங்கள் சேமிக்கப்படுகிறது என்பது தான். 

இவ்வாறு  ஒரு நாட்டின் அரசியல் முடல் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரம் வரை நம்மை ஆட்கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தைப் பற்றிய என்ன விழிப்புணர்வு தேவை? கணினியையும் இணையத்தையும் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு கையாளுவது என்பதா? இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கின்றதா?
Essential requirements for internet classroom 73th Series - Suganthi Nadar. Book Day. Educational poverty கல்வி ஏழ்மை
ஒரு கல்வியாளராக நமக்கு கற்றல் கற்பித்தலுக்கான வளங்கள் மட்டுமன்றி கணினி உலகைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு மிகவும் தேவையாய் உள்ளது. கணினி உலகம் என்று சொல்லும் போது கணினியை இயக்குவது நிரல் எழுதுவது என்பதையும் தாண்டி அது எவ்வாறு நம் சுற்றுச்சூழலை நம் வாழ்க்கைத் தரத்தை, பண்பாட்டு சின்னங்களை, நம் தனித்துவத்தை, நமது அரசியல் சூழலை பாதிக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் நம் விழிப்புணர்வுக்குள் அடங்கும். துபாயில் உள்ளது போல அமெரிக்காவில் அனைத்தும் மிண்ணியியலாகும் வசதிகள் இருந்தும் இன்றுக் காகிதங்கள் பயன்பாட்டில் இருப்பதற்குக் காரணம் தங்களின் தேவை காகிதத்திலும் இருக்கலாம் என்ற ஒரு குடியாட்சி தன்மை இருப்பதால்தான். மற்ற நாடுகளை விட துபாய் முழுக்க முழுக்க எண்ணியியல் நாடாக அதிவிரைவில் மாறியதற்குக் காரணம் அது ஒரு ஏகாதிபத்திய நாடு. சீனாவும் இந்தியாவும் கூட இப்படித்தான். இந்தியாவில் கணினியாளர்கள் அதிகம் இருந்தும் சீனா இன்று கணினி உலகில் முன்ணனியில் இருக்கக் காரணம் இரு நாடுகளில் உள்ள ஆட்சி முறை அரசியல் கொள்கைகளின் வேறுபாடுதான். எனவே உலக நாடுகளின் அரசியல் அமைப்புக் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வும் நமக்கு அவசியம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்மைச் சுற்றி பல தொழில்நுட்ப மாற்றங்கள். நிகழ்ந்து கொண்டே இருக்கிறன இந்த மாற்றங்களின் வேலைப்பாடு என்ன அதன் விளைவுகள் என்ன என்று சாமான்ய மக்களாகிய நாம் ஒரு தெளிவு அடையும் முன்னரே அதைப் பயன்படுத்தத் தள்ளப்படுகின்றோம். அதிவேகமாக ஒரு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தும் போது எதை இழக்கின்றோம்?
Essential requirements for internet classroom 73th Series - Suganthi Nadar. Book Day. Educational poverty கல்வி ஏழ்மை
இன்று என்னைத் தெரியாத ஒருவர், எனக்குத் தெரியாத ஒருவர், ஒரு புலனக்குழுவில் என்னை சேர்த்தார் அது முதலீடு செய்வதற்கான ஒரு குழு, சரி அவர்கள் என்ன தான் சொல்கின்றார்கள் என்று பார்க்கலாம் என்று பார்த்தால் வரும் அறிவிப்புக்கள் ஒருவரை வினாடி நேரம் கூட யோசிக்க விடாமல் உடனடியாக செய்ய வேண்டிய செயலாக இருக்கின்றன. உதாரணத்திற்கு எண்னியியல் செலவாணியில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் 1000$ முதல் 10,000$ வரை சம்பாதிக்க இயலும் ஆனால் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். அதுவும் அடுத்த 180 வினாடிகளில் முதலீடு செய்ய வேண்டும்

பதிவு செய்து பணத்தை இழந்து விட்டால் நீங்கள் மீண்டும் 1500, 3000, 5000, 12000 என்றத் தொகைகளில் முதலீடு செய்து ஒரு முதலீட்டாளராக மறு அவதாரம் எடுத்துக் கொள்ளலாம் என வருகின்றது. அக்குழுவில் இருப்பவர்கள் இச்செய்தியைப் படித்ததும் என்ன நினைப்பர்? அவருக்கு உடனடிப்பணத்தேவை இருந்தால் அவர் செய்தியைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் உடனடியாக அச்செய்தியில் வரும் விவரங்களைச் செய்வார்தானே? அதே சமயம் சங்கேத செலாவணி பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் இருந்தாலும் செய்தியை பற்றி ஒரு சில வினாடிகளாவது யோசிப்பார் தானே

அந்த யோசித்தலுடன் தனக்கு வரும் செய்தியை கொஞ்சம் ஆழமாகப் படித்தால் கொடுக்கப்பட்ட செய்தியின் உள் விவரம் ஒரு சூதாட்ட விளையாட்டைப் போலவோ அல்லது ஒரு குதிரைப் பந்தயத்தைப் போலவோ இருக்கின்றதே என்று யோசித்து ஆராய்ந்து செயல்பட முயற்சிக்கலாம் அல்லவா? இதைத் தான் நாம் விழிப்புணர்வு என்று சொல்கின்றோம்

ஆனால் இன்று அதிலும் ஒரு பிரச்சனை இருக்கின்றது. வினாடிக்கு ஆயிரம் ஆயிரமாக  நம்மை நோக்கி வரும் செய்திகளில் எப்படி உண்மையைக் கண்டுபிடிப்பது பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் செய்திகள் சேகரிக்கப்படுவது போல இன்று செய்திகள் சேகரிக்கப்படுவதில்லை. பல செய்திகள் சமூக வலை தளங்களிலும் ஒரு தனி மனிதரின் இணைய அறிவிப்புப் பலகைகளான twitter instagram ஆகியவற்றில் வெளியாகும் செய்திகள் தொகுக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்படுகின்றன. ஒருவர் சமூக வலைதளங்களில் இடும் செய்தி பொய்யா மெய்யா என்று நமக்குத் தெரியாது. உண்மையில் செய்தியை இடுவதும் அவர் தானா என்பதும் நமக்குத் தெரியாது. நம்மால் சரிபார்க்க இயலாத செய்திகளை ஏற்றுக் கொள்வதும்  மூடநம்பிக்கைக்கு சமம் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

கற்றலில் ஏழ்மை என்பது கற்றலுக்கான கணினி வசதிகள்  மட்டுமல்ல, ஒரு உயரிய மனித வளத்தை உருவாக்கக் கூடிய கல்வி வளங்களின் பற்றாக்குறையும்தான் இதை சீர் செய்யக்கூடிய கல்வி வளங்கள் எங்கே இருந்து வரும். நமக்கு கிடைக்கும் செய்திகளில் இருந்து தானே? நம்மால் சரிபார்க்க  இயலாத செய்திகளை வைத்து நம்மால் ஒரு சரியான கல்வி வளத்தைத் தயாரிக்க முடியுமா?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்