Good Luck Sakhi Moviereview By Era. Ramanan திரை விமர்சனம்: குட் லக் சகி – இரா இரமணன்

திரை விமர்சனம்: குட் லக் சகி – இரா இரமணன்

‘இறுதி சுற்று’’டங்கல்’ ‘பாக் மில்கா பாக்’ சாய்நா நெய்வால்’ ‘கனா’’ஜீவா’ போன்ற விளையாட்டை மையமாகக் கொண்ட பட வரிசையில் இது துப்பாக்கி சுடும் போட்டியை மையமாகக் கொண்டது.

2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜனவரி 2022 அன்று வெளிவந்துள்ள தெலுங்குப் படம். இதன் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் பிராதானமாக இந்தி திரையுலகில் இயங்கியவராம். ஹைதராபாத் புளூஸ்,ராக்போர்ட், இக்பால் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். திரைக்கதை எழுத்தாளர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். ஏழு சர்வ தேச விருதுகளும் இரண்டு தேசிய விருதுகளும் பெற்றவர். ‘குட் லக் சகி’ அவர் இயக்கிய முதல் தெலுங்குப் படம். கீர்த்தி சுரேஷ்,ஆதி பினிசெட்டி, ஜகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசிப்பவள் சகி. பழங்குடி இனத்தை சேர்ந்த பெண். குறி பார்த்து கோலி அடிப்பதில் வல்லவள். வளர்ந்த பெண்ணான பிறகு அவள் கெடு வாய்ப்பு (துரதிர்ஷ்டம்) கொண்டவள் என்று பேசப்படுகிறாள். அவளுடைய திருமணத்தன்று வேட்டு சத்தத்தினால் குதிரை மிரண்டு அதன் மீதமர்ந்திருந்த மாப்பிள்ளையை கீழே தள்ளிவிடுகிறது. அவன் இறந்துவிடுகிறான். ஆனால் அவள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உற்சாகமாக சுற்றி திரிகிறாள். அவளுடைய சிறு வயது நண்பன் ராஜூ இப்போது நாடக நடிகனாகி அந்த ஊரில் நாடகம் போட வருகிறான்.

அவனும் கோலி விளையாட்டில் வல்லவன் என்பதால் ‘கோலி ராஜு’ என அழைக்கப்படுகிறான். நன்றாக நடிப்பதால் ஜெமினி கணேசன் என்றும் அழைக்கிறார்கள். அந்த ஊருக்கு வரும் ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறார். அதில் சேருமாறு சகியை ராஜூ உற்சாகப்படுத்துகிறான். போக்கிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடைய நண்பன் சூரியும் அதில் சேர்கிறான். கர்னலின் பயிற்சியாலும் இயற்கையாக அவளுக்கு அமைந்திருக்கும் திறமையாலும் சகி சிறப்பாக விளையாடி மாநில அளவுப் போட்டிக்கு தேர்வாகிறாள். இதற்கிடையில் கர்னலுடன் அவள் பழகுவதைக் கண்டு ராஜூ பொறாமையும் சந்தேகமும் கொள்கிறான். இதனால் அவனை திரைப்படத்திற்கு தேர்வு செய்ய வந்திருக்கும்போது சரியாக நடிக்க முடியவில்லை.

தன்னுடைய இந்த கெடுவாய்ப்பிற்கு சகிதான் காரணம் என்று கூறி கடுமையாக திட்டுகிறான். இதனால் மனம் உடைந்த சகி மாநிலப் போட்டியில் தாறுமாறாக சுடுகிறாள். இதற்கிடையில் ராஜூவை சினிமாவில் நடிக்க தேர்ந்தெடுக்கிறார்கள். சகியின் வற்புறுத்தலினால்தான் அவனுக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது என்பதும் தெரிய வருகிறது. துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதி சுற்றில் ராஜூ அவளிடம் அவளுடைய அதிர்ஷ்டக் கோலிகளைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறான். ஆனால் அவள் அதைக் கீழே போட்டுவிட்டு கர்னல் சொன்ன’தலையெழுத்து என்பது எதுவும் இல்லை.உன் வெற்றி உன் கையில்’ என்கிற வார்த்தைகளை நினைத்து குறி பார்த்து சுட்டு வெற்றி பெறுகிறாள். ராஜுவுடன் திருமணமும் நடைபெறுகிறது.

படத்தில் பல குழப்பங்கள் உள்ளன. துப்பாக்கி சுடும் பள்ளி அமைப்பதை கர்னல் ஏன் ரகசியமாக செய்கிறார் என்று தெரியவில்லை. ராஜுவும் சகியும் சின்ன வயதில் ஜவ்வு மிட்டாய் கையில் சுற்றி தின்றால் பெரியவர்களானாலும் அப்படியே செய்துகொண்டிருப்பார்களா? ஒருதரம் காட்டினால் பரவாயில்லை. அதையே பலமுறை காட்டுகிறார். ராஜூவை விரும்பும் சகி திடீரென கர்னல் மேல் காதல் கொள்வது ஏன் என்று தெரியவில்லை. போக்கிரியாக இருக்கும் சூரி திடீரென நல்லவனாகி ராஜுவுக்கு உதவுகிறான். அதுவும் புரியவில்லை.

நாடகக் காட்சியில் கிருஷ்ணர் கண்ணாடி அணிந்து வருவதும் அர்ஜுனனாக நடிக்கும் ராஜூ தன் காதலியைக் கண்டதும் கர்ணனின் பின்புறத்தில் அம்பு எய்வதும் லேசான சிரிப்பை வரவழைக்கிறது. கடோத்கஜன் மேக்கப்பை கலைக்க முடியாமல் அந்த வேஷத்திலேயே ராஜூ மாநிலப் போட்டி நடக்கும் வளாகத்திற்குள் வருவது சற்று மிகையாக இருந்தாலும் அதையாவது நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் அவனை போட்டி நடக்கும் இடத்திற்கே அனுமதிப்பதும் சகியுடன் பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துப்பாக்கி சுடும் போட்டியில் உள்ள சிரமங்கள், பயிற்சி எடுக்கும் முறைகள் ஆகியவற்றை நல்ல முறையில் காட்டிய இயக்குனர் இறுதிக் காட்சியை கேலிகூத்தாக மாற்றிவிட்டார். ஆனாலும் ‘இறுதி சுற்று’ பாக் மில்கா பாக்’ போன்ற படங்களில் இறுதிக் காட்சியில் வெற்றி பெறுவதற்கு வேறு உந்துதல் வேண்டும் என்பது போல் காட்டப்பட்டிருக்கும். இதில் சகி தன் திறமையில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுவதாகக் காட்டியிருப்பதைப் பாராட்டலாம்.

சகியை ஊர் சார்பாக மாவட்டப் போட்டிக்கு அனுப்பவது குறித்த ஊர்ப் பஞ்சாயத்தில், அவள் பெண், அவள் வேறு ஊரிலிருந்து வந்தவள் என்று கூறி ஒரு சாரார் தடுக்க முயலுவதும் இன்னொரு சாரார் ஆதரிப்பதும் இறுதியில் சகி ‘என்னைக் கேட்காமல் எல்லோரும் பேசுகிறீர்கள்.நான் போட்டிக்குப் போகப் போகிறேன்’ என்று கூறுவது அழுத்தமான இடம். அவளுடைய உடை, அணிகலன்கள், கூந்தல் ஆகியவை துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக மாறுகிறது. இதற்கு ஊரில் பெரிய எதிர்ப்பு எதுவும் வருவதாகக் காட்டப்படவில்லை. ‘டங்கல்’ திரைப்படத்தில் இதை இன்னும் சற்று சிறப்பாகக் காட்டியிருப்பார்கள்.

அதிர்ஷ்டம், தலையெழுத்து, பெண்கள் தன்னம்பிக்கை போன்றவை குறித்த நல்ல மையக் கருத்து கொண்ட படம். பொருத்தமான கதைக் களம். சிறந்த இயக்குனர். ஆனாலும் இயக்கப்பட்ட விதம் அமைச்சூரிஷாக இருக்கிறது. இதற்கு முன் நல்ல திரைப்படங்களை இயக்கிய அவருடையது இது என்பதை நம்ப முடியவில்லை. ஒருவேளை அவரது முதல் தெலுங்குப் படம் என்பதாலா?

Kamanam Movie directed By Sujana Rao Moviereview By Era. Ramanan திரை விமர்சனம்: கமனம் – பெரு வெள்ளத்தில் போகும் வாழ்க்கை - இரா. இரமணன்

திரை விமர்சனம்: கமனம் – பெரு வெள்ளத்தில் போகும் வாழ்க்கை – இரா. இரமணன்




டிசம்பர் 2021 இல் வெளிவந்துள்ள தெலுங்கு படம். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. சுஜானா ராவ் இயக்கியுள்ள முதல் படம். இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஷிரேயா சரண், சிவா கந்துகூரி, சாருஹாசன், பிரியங்கா ஜவால்கர், சுகாஸ் மற்றும் இரண்டு சிறார் நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஹைதராபாத் நகரத்தில் வாழும் மூன்று பேரின் வாழ்க்கையை ஒரு பெரு வெள்ளம் எவ்வாறு புரட்டிப் போடுகிறது என்பதே கதை. துபாய்க்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்துகொண்ட ஒருவனால் கைவிடப்பட்ட கமலா கேட்கும் திறன் குறைபாடு உடையவர். ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் தையல்  தொழிலாளி. கணவன் திரும்பி வந்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் கைக்குழந்தையுடன் போராட்ட வாழ்க்கை வாழ்பவர்.

கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற பெரு விருப்பத்துடன் இருப்பவன் அலி. அவன் சாரா என்கிற பெண்ணைக் காதலிக்கிறான். இருவரும் இஸ்லாமியர்கள்தான் என்றாலும் சாராவின்  தந்தை அந்தஸ்து பார்க்கிறவர். பெற்றோரை இழந்த அலியை அவனது தாத்தா வளர்க்கிறார். தாங்கள் இறக்கும்வரை குடும்ப கவுரவம் பாழாகாமல் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர்.

வீடில்லாமல் வடிகால் குழாய்க்குள் வசிக்கும் இரண்டு சிறுவர்கள். குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். கிடைப்பதை அன்புடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படுவதைப் பார்க்கிறார்கள். சிறியவனுக்கு பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாது.தாங்களும் கேக் வாங்கி சாப்பிட வேண்டும் என்று காசு சேர்க்கிறார்கள். அவர்களுக்கு அறிமுகமான நடைபாதை வியாபாரியிடம் அதைக் கொடுத்து அவர் விற்றுக் கொண்டிருக்கும் களிமண் பிள்ளையார் சிலைகளை  வாங்கிக் கொள்கிறார்கள்.அதன் மூலம் அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தை திரட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒரு நாள், நகரில் பெரு மழை கொட்டுகிறது. நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தொலைக்காட்சி செய்தியாளர்கள் அதிகாரிகளை நேர்காணும்போது ‘ஆற்றின் மீது பெரும் குடியிருப்புகளை கட்டினோம்.இப்போது ஆறு அதன் மீது செல்கிறது என்று நமக்குப் பழக்கமான வசனத்தைக் கூறுகிறார்கள். கமலா கைக்குழந்தையுடன் தன் சிறு வீட்டில் மாட்டிக் கொள்கிறார்.கதவை திறக்க முடியவில்லை. குழந்தையைக் காப்பாற்றவும் கதவை திறக்கவும்  போராடுகிறார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஜன்னலை உடைத்து குழந்தையும் அவளும் வெளியில் வருகிறார்கள்.  

இன்னொரு பக்கத்தில் சாராவின் தந்தை அலியின் தாத்தாவிடம் வந்து அலியும் சாராவும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி சண்டையிடுகிறார். குடும்ப கவுரவமே முக்கியம் என நினைக்கும் தாத்தா, அலியை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். விரக்தியில் அலைந்து கொண்டிருக்கும் அலி, வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பள்ளி மாணவர்களைக் கப்பாற்றுகிறான். அதில் தன் உயிரையும் இழக்கிறான்.

பிள்ளையார் பொம்மைகளை விற்கவும் முடியாமல் மழையில் அவை கரையாமல் காப்பாற்றவும் முடியாமல் சிறுவர்கள் இருவரும் போராடுகிறார்கள். சிலைகளை பாதுகாப்பதற்காக கிடைத்த  கித்தான் துணியை மழையில் ஆட்டோவில் பிரசவம் நடக்கும் ஒரு பெண்ணின் மறைப்பிற்கு கொடுத்து உதவுகிறார்கள்.

எளிய மனிதர்களின் போராட்டமான வாழ்க்கை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில்  அது மேலும் அழிவது, ஆணின் சந்தர்ப்பவாத மனப்போக்கு என சமுதாயத்தை மையமாகக் கொண்ட  படத்தை எடுத்ததற்குப் பாராட்டலாம்.ஆனால் சில இடங்கள் பலவீனமாகக் காட்டப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில்  மாணவர்கள் ஒரு வாகனத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மாடியில் இருந்து கொண்டு அரற்றுகிறார்கள். யாரும் காப்பற்ற முயலுவதில்லை.அலி மட்டும் தனி ஒருவனாக அவர்களைக் காப்பாற்றுகிறான். நல்ல திரைப்படங்களை எடுப்பவர்கள் கூட இது போன்ற சினிமாத்தனங்களை விட முடிவதில்லை. வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் தனி ஆளாக பலரைக் காப்பாற்றிய உண்மை சம்பவங்களை பார்க்கிறோம். இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் சரியில்லை. 

காந்தியின் ‘வைஷ்ணவ ஜனதோ பாடலும் அதன் உண்மையான பொருளில் வாழ்ந்து காட்டுபவர்கள்  சாதாரண மனிதர்கள் என்று காட்டியிருப்பதும் சிறப்பு. ஷிரேயாவின் மற்றும் சிறுவர்களின்  நடிப்பும் சிறப்பாக உள்ளது.

Shyam Singha Roy Moviereview By Rahul Sankrityan Moviereview By Era Ramanan திரைவிமர்சனம்: ராகுல் சன்கிரிடியானின் ஷ்யாம் சிங்க ராய் - இரா இரமணன்

திரைவிமர்சனம்: ராகுல் சன்கிரிடியானின் ஷ்யாம் சிங்க ராய் – இரா இரமணன்




2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த இந்த தெலுங்குப் படம் குறித்து சமூக ஊடகங்களில் சில பதிவுகள் வந்துள்ளன. நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம். இதன் இயக்குனர் ராகுல் சங்கிரித்தியனுக்கு இது மூன்றாவது படமாம்.சிறப்பாக இயக்கியுள்ளார்.மூலக்கதை ஜன்கா சத்யதேவ் எழுதியுள்ளார். நானி, சாய் பல்லவி,கிரித்தி ஷெட்டி, மடோன்னா செபாஸ்டின், ராகுல் ரவீந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதாநாயகன் நானி மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பல விமர்சகர்களால் பாரட்டப்பட்டுள்ளது. படத் தொகுப்பும் ஒளிப்பதிவும் சிறப்பான அம்சங்கள். திரைக்கதை இன்னும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கருத்தும் உள்ளது. 47கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கதை தேவதாசிகள் குறித்தது என்று சொல்லலாம். நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த ஒருவன் புரட்சிகரமான எழுத்தாளனாகவும் உண்மையான காதலனாகவும் விளங்குவது குறித்து என்றும் சொல்லலாம். மறுபிறவி நம்பிக்கையும் மையமாக உள்ளது. அதைத் தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இடது கைப் பழக்கம் உள்ள ஷ்யாம் இடது சாரி சிந்தனை உள்ளவன். ஊர்க் கிணற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்கக்கூடாது என்னும்போது அவன் சொல்லும் வசனம் ’தாகம் எடுப்பவர்கள் இந்த தண்ணியைக் குடியுங்கள்;சாதி பார்க்கிறவர்கள் விக்கி சாகுங்கள்’ என்பது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு இடங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தன் காதலிக்கு படகு ஓட்டக் கற்றுக் கொடுக்கும்போது ‘ஒரு விஷயத்தை இரண்டு விதங்களில் செய்யலாம்.

ஒன்று பயத்துடன்; இன்னொன்று காதலுடன்’ என்பது சிறப்பாக உள்ளது. அவனுடைய காதலி ரோசி ‘என்னைக் காப்பற்றிக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆனால் என் போல் நூற்றுக்கணக்கான தேவ தாசிகள் எத்தனயோ கோவில்களில் இருக்கிறார்களே?அவர்களை எப்படிக் காப்பாற்றுவது?’ என்று கேட்கும் இடம் குறிப்பிட வேண்டும். தனி மனித சாகசமாக அவளை மீட்டுக்கொண்டு வந்த அவன் தன் எழுத்துக்களால் மக்களை புரட்சிகரமான இயக்கத்திற்கு இட்டு செல்கிறான்.

இந்தப் படத்தின் முக்கியப் பகுதி 1960-80களில் மேற்கு வங்கத்தில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. அப்பொழுது மேற்கு வங்கத்திலும் இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும் தேவதாசி முறை இருந்ததா எனப் பார்த்தால் பல அதிர்ச்சியான விவரங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியார் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்களால் 1930களில் கொண்டுவரப்பட்ட தேவதாசி ஒழிப்பு சட்டம் 1947இல்தான் சட்டமாகிறது. மேலும் 1934 பாம்பே தேவதாசி பாதுகாப்பு சட்டம், அதன் தொடர்ச்சியான 1957 பாம்பே சட்டம், 1988ஆந்திரா தேவதாசி தடுப்பு சட்டம் ஆகியவை இயற்றப்படுகின்றன.

தேசியப் பெண்கள் ஆணையம் மாநிலங்களில் தேவதாசி முறை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த தகவல்களை திரட்டியபோது ஓடிஸா அரசாங்கம் அது ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியது.தமிழ்நாடும் அவ்வாறே கூறியது.ஆந்திராவில் 16624 தேவதாசிகள் இருப்பதாக அறியப்படுகிறது.கர்நாடகா பெண்கள் பல்கலைக் கழகம் 2018இல் அந்த மாநிலத்தில் 80000 பேர் இருப்பதாக கண்டறிந்தது.ஆனால் கர்நாடக அரசின் 2008அறிக்கை 40600பேர் இருப்பதாக் கூறியது.மகாராஷ்ட்ராவில் 8793 பேர் தேவதாசி வாழ்க்கை அலவன்ஸ் பெற விண்ணப்பித்ததாகவும் அதில் 6314 மறுக்கப்பட்டதாகவும் 2749 பேர் தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.

பெங்களூரு பெண்கள் திட்டமும் தேசிய பெண்கள் ஆணையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தேவதாசி முறைக்கு பெண்கள் வருவதற்கான காரணங்களில் பேச்சுக் குறைபாடு,காது கேளாமை போன்ற உடல் ஊனம், வறுமை மற்றும் சில காரணங்கள் குரிப்பிடப்படுகிறதாம். நாட்டின் சராசரி வாழ்நாள் காலத்தை விட இவர்களின் வாழ்நாள் காலம் குறைவாக உள்ளதாம்.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தேவதாசிப் பெண்களைக் காணமுடியாது என்கிறது அந்த அறிக்கை.
(en.wikipedia.org/wiki/Devadasi) (https://www.ijalr.in/2020/08/devadasi-system-in-india.html#:~:text=The%20Devadasi%20is%20a%20system%20of%20votive%20offering,by%20the%20)

தேவதாசிகள் குறித்து பல புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களும் வந்துள்ளனவாம். அதில் இப்போது வந்துள்ள முக்கியமான படம் ஷ்யாம் சிங்க ராய்.

திரை விமர்சனம்: ரேவந்த் கொருகொண்டாவின் நாட்யம் – இரா இரமணன்

திரை விமர்சனம்: ரேவந்த் கொருகொண்டாவின் நாட்யம் – இரா இரமணன்



பாரம்பரியமும் நவீனமும் கலந்த கலைப் படைப்பு

‘நாட்யம்’ அக்டோபர் 2021இல் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். சந்தியா ராஜு எனும் நாட்டியக் கலைஞர் தயாரித்துள்ளார். அவரே முதன்மைப் பாத்திரத்திலும் நடித்துள்ளார். ரேவந்த் கொருகொண்டா எழுதி இயக்கியுள்ளார். சந்தியா ராஜு, கமல் காமராஜ், ரோஹித் பேஹல், ஆதித்ய மேனன்,சுபலேகா சுதாகர், பானுபிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

நாட்யம் எனும் கிராமத்தில் உள்ள கோயிலில் அங்குள்ள பெண் கடவுள் எழுதித் தந்ததாக நாட்டியக்கலை சாஸ்திர ஏடுகள் உள்ளன. அந்தக் கோயில் பிரிட்டிஷ் ஆட்சியில் ராணுவத்தால் மூடப்பட்டு சுதந்திரத்திற்குப் பிறகு திறக்கப்பட்டபோது இந்த ஏடுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அங்கு காதம்பரி எனும் நாட்டியப் பெண்மணிக்கு சிலையும் உள்ளது. ஆண்டுதோறும் அங்கு நாட்டிய விழா நடைபெறுகிறது. குருஜி என்பவர் அந்தக் கிராமத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார். காதம்பரியின் வரலாற்றை பிரிட்டிஷ் வீரர் ஒருவரின் டைரியின் மூலம் அறிந்த அவர் அதை தன் மனைவியைக் கொண்டே நாட்டிய நாடகமாக நடத்த முயற்சி செய்கிறார்.

கோயில் அறங்காவலர் காதம்பரி கதையை நடத்தினால் ஊருக்கு கேடு விளையும் என்று கூறி தடுக்கிறார். குருஜியின் மனைவி பாம்பு கடித்து இறந்துவிடுகிறார். அது முதல் யாரும் காதம்பரி கதையை நடிக்கக் கூடாது என்று குருஜியும் கூறிவிடுகிறார். அவர் பள்ளியில் பயிலும் சிதாரா எனும் பெண் சிறு வயதிலிருந்தே காதம்பரி கதையை நாட்டியமாக ஆட வேண்டும் என்று விரும்புகிறாள். முதலில் சிறுமி என்பதால் அதற்கு மறுப்பு தெரிவிக்காத குருஜி பிறகு தடுத்து விடுகிறார்.

நகரத்தில் மேலை நாட்டுப் பாணி நடனப் போட்டியில் வெற்றி பெற விரும்பும் ஒருவன் அந்தக் கிராமத்திற்கு வந்து நடனக் காட்சிகளைக் காண்கிறான். அங்கேயே தங்கி நடனம் பயில்கிறான். ஒரு எதிர்பாராத நிகழ்வினால் சிதாரா அவனுடன் நகரத்திற்கு வந்து மேல்படிப்பு படித்துக் கொண்டே அவனுடைய நாடகக் குழுவில் இணைந்து செயல்படுகிறாள். ஆனால் காதம்பரி கதையை தன்னுடைய முதல் அரங்கேற்றமாக செய்ய வேண்டும் என்கிற ஆவல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் அது நிகழும்போது ஏன் அறங்காவலர் காதம்பரி கதையை நடிக்கக்கூடாது என்றார் என்பது வெளிப்படுகிறது. நாட்டிய சாஸ்திரங்களை எழுதியது பெண் கடவுள் இல்லை; காதம்பரி எனும் பெண்தான். இந்த உண்மை தெரிந்தால் அந்தக் கோயிலை சுற்றியுள்ள மகத்துவம் போய்விடும்; பெருங்கூட்டமாக வரும் மக்கள் வரமாட்டார்கள்; தன் வருமானம் போய்விடும் என்பதாலேயே அறங்காவலர் அவ்வாறு கதை கட்டிவிட்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

முழுக்க முழுக்க இசையும் நாட்டியமும் நிறைந்த படம். கதையம்சம், லாஜிக் போன்றவை பல இடங்களில் பலவீனமாக உள்ளன. ஆனால் கதாநாயகி பாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தியா ராஜுவுக்கு முதல் படம் என்பது போலில்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அவரே நாட்டிய காட்சிகளையும் அமைத்துள்ளார். இந்தியாவில் பரத நாட்டியம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; மேலை நாட்டு நடனம் இன்னொரு பக்கம் நடைபெறுகிறது; இரண்டின் வேறுபட்ட சூழ்நிலைகளை படம் பிடிக்கிறது. முன்னதன் இறுக்கமும் பின்னதன் நெகிழ்வுத்தன்மையும் பார்க்க முடிகிறது. இரண்டாவது வகை நடனங்களையும் இணைக்க முடியும் என்று கூறுகிறது படம். ஒரு இடத்தில் எளிய மக்கள் நாட்டுப்புற நடனம் ஆடுவதைக் காட்டி எல்லாவற்றிலும் நடனம் இருக்கிறது என்பதையும் லேசாக சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக இம்மாதிரிப் படங்களில் பாரத நாட்டியம் தூக்கிப் பிடிக்கப்படுவதுடன் கடவுள் தொடர்பான நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆனால் இதில் நடனத்தின் நோக்கமே மக்களுக்கு உண்மைகளை சொல்வது என்பது வலியுறுத்தப்படுகிறது. அந்த விதத்திலும் பாராட்டலாம்.

Konda Polam Telugu Movie Review By Era Ramanan. திரை விமர்சனம்: கொண்ட போலம் - இரா இரமணன்

திரை விமர்சனம்: கொண்ட போலம் – இரா இரமணன்




2021 அக்டோபர் மாதம் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். சன்னபுரெட்டி வெங்கட ராமி ரெட்டி அவர்கள் எழுதிய நாவலை திரைப்படமாக்கியுள்ளார்களாம். பல பிரபல படங்களை இயக்கி விருதுகளையும் பெற்றுள்ள கிரிஷ் ஜகர்லமுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வைஷ்ணவ் தேஜ்,ராகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Konda Polam Telugu Movie Review By Era Ramanan. திரை விமர்சனம்: கொண்ட போலம் - இரா இரமணன்

ஆடு மேய்ப்பதே முக்கிய தொழிலாகக் கொண்ட ஒரு கிராமம். அங்கு தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருப்பதால் ஆடுகளை ‘கொண்ட போலம்’ மலைக்கு அழைத்து சென்று உயிர் பிழைக்க வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். அந்த கிராமத்தில் ரவீந்தரநாத் எனும் இளைஞன் பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவன். அவன் தந்தை நூறு ஆடுகளை விற்று அவனைப் படிக்க வைத்திருக்கிறார். இப்போது அவனும் தன் தந்தைக்கு துணையாக ஆடு மேய்க்க செல்கிறான். அவன் இயல்பிலேயே பயந்த சுபாவத்தினன். காட்டில் விலங்குகளைப் பார்க்கும்போதும் சரி நகரத்தில் நேர்முகத் தேர்விலும் சரி இது வெளிப்படுகிறது. அவனது உறவுக்காரப் பெண் ஓபுலம்மா காட்டைப் பற்றி நன்கு அறிந்தவள். இந்த பயணத்தில் அவள் மூலமும் மற்ற பெரியவர்கள் மூலமும் நேரடியான அனுபவத்தினாலும் ரவீந்திரநாத் பயம் தெளிந்து ஒரு புது மனிதனாகிறான். ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அவன் இந்திய வனப் பணியை தேர்வு செய்கிறான். ஓபுலம்மாவை திருமணமும் செய்துகொள்கிறான்.

காட்டில் ஆடு மேய்க்கும் தொழிலில் திருடர்கள் குறுக்கிடுகின்றனர். புலியின் தாக்குதல், சட்ட விரோதமாக செம்மரம் வெட்டுபவர்களின் மிரட்டல், பணம் பறிக்கும் போலி கும்பல் என பல இடைஞ்சல்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் வன அலுவலர்கள் மட்டும் ஒரு இடத்தில்கூட வருவதில்லை. இது கதையின் சற்று பலவீனமான அம்சம். அதிசயக் காடுகள் ( Jaadui Jungle (Magical Forest) என்கிற ஆவணப்படத்திலும் இதுபோல் வன இலாக்கா அதிகாரிகளோ, ஒப்பந்ததாரர்களோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ எந்த இடத்திலும் காட்டப்படவில்லை. ‘ஷேர்னி’ திரைப்படத்தில் மட்டும் வன அதிகாரிகளை மையமாக வைத்து கதை எழுதப்பட்டிருந்தது. இந்தத் திரைப்படத்தில் காடுகள் அழிந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.ஆனால் அதிசயக் காடுகள் ஆவணப்படத்தில் காட்டியது போல் அதற்கான காரணங்கள் குறிப்பாகக் கூட காட்டப்படவில்லை.

மற்றபடி ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை ஓரளவிற்கு எதார்த்தமாகவே காட்டப்பட்டிருக்கிறது. கிராமத்திலிருந்து குடும்பப் பெண்கள் பத்து நாட்களுக்கு சாப்பிட ரொட்டிகளை செய்து வாகனங்கள் வரக்கூடிய ஒரு இடத்திற்கு வந்து கொடுப்பதும் அதை வாங்கி செல்ல மலையிலிருந்து ஆடு மேய்ப்பவர்களில் சிலர் இறங்கி வந்து வாங்கி செல்வதும் குழந்தை பிறந்ததற்கு,மச்சினி திருமணத்திற்கு என பல முக்கிய நிகழ்விற்குக்கூட வர முடியாத ஒருவனின் மனைவி கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிடுவது என அவர்களின் வாழ்க்கைப்பாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. காட்டை அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்., இசை, நடிப்பு ஆகியவையும் சிறப்பாக உள்ளன.

புலியின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது தான் நாயகன் தன் பயத்தை போக்கிக் கொள்கிறான். புலிதான் தன் கண்களைப் பார்த்துப் பயந்தது என்கிறான். விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இயற்கைக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என பல தளங்களில் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கிராமத்து இளைஞன் பொறியியல் படித்தாலும் குழு விவாதம்,நேர்முகத் தேர்வு ஆகியவை அவனுக்கு அன்னியமாக இருப்பது நேர்முகத் தேர்வில் தன் தாய்மொழியில் பதில் சொல்ல விரும்புவதாக நாயகன் சொல்வது போன்றவை கவனிக்கப்பட வேண்டியவை. அதிகமான சினிமாத்தனங்கள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் வாழ்க்கை முறையை சொல்லியிருக்கிறார்கள். இயக்கத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருக்கும்.

Rachakonda vidyasagar's Telugu Film Nootokka Jillala Andagadu Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

நூறு ஜில்லாக்களிலும் அழகியவன் – இரா. இரமணன்



இந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். அவசரல ஸ்ரீனிவாஸ் என்பவர் கதை, திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். அவரே கதாநாயகன் பாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். ராச்சகொண்ட வித்யாசாகர் இயக்கியுள்ளார். ருகானி ஷர்மா , தமிழ் நடிகர் ரோகினி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிஎஸ்என் என்றழைக்கப்படும் கோட்டி சூரியநாராயணா ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிகிறான். பிரி மெச்சூர் பால்டிங் எனப்படும் இளமையிலேயே வழுக்கை விழும் குறைபாடு உடையவன். அதை மறைக்க ‘விக்’ வைத்துக் கொண்டிருக்கிறான். தன்னுடைய தந்தை இதை மட்டும்தான் தனக்கு விட்டுவைத்துவிட்டு இறந்துவிட்டார் என்று வருத்தமும் கோபமும் கலந்த உணர்வு அவனுக்கு. அவனுடைய குறைபாடு தாயார் (ரோகிணி) மற்றும் ஒரு நண்பனுக்கு மட்டும்தான் தெரியும். அவனுடைய நிறுவனத்தில் புதிதாக பணிக்கு வரும் பெண்ணுடன் காதல் மலர்கிறது. தனக்கு வழுக்கை குறைபாடு இருப்பது தெரிந்தால் அவள் தன்னை ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளோ என்கிற சந்தேகத்தில் அதை மறைத்து விடுகிறான். அவளிடம் சொல்லிவிடலாம் என்று சில நேரங்களில் நினைக்கிறான். ஆனால் சொல்ல தைரியம் வருவதில்லை. ஒருநாள் அவளுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் பொய் சொன்னான் என்று கூறி அவனை விட்டு விலகி வெறுக்கிறாள். பிறகு அவன் நல்ல அரசாங்க வேலை கிடைக்கும் என்ற நிலையில் கூட பொய் சொல்லவில்லை என்பதை அறிந்த அவள் அவனை ஏற்றுக்கொள்கிறாள்.

தன்னம்பிக்கையோடு எல்லோரையும் எதிர்கொள்ள சொல்கிறாள். அவள் பேச்சால் தைரியம் கொண்ட அவன் உண்மையான தோற்றத்துடன் அவள் வீட்டிற்கு செல்லும்போது அவளுடைய தாயார் அவனை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அவன் விரக்தியாகி அவர்களை விட்டு விலகுகிறான்.. தந்தை தனக்கு வழுக்கையை மட்டும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்; வீடு இல்லை; வசதி இல்லை என்று தாயாரிடமும் கோபிக்கிறான். எது வந்தாலும் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் என்கிற இயல்பைத்தான் அவனுக்கு முன்னோர்கள் விட்டு செல்லவில்லை என்று அவன் தயார் கோபிக்கிறாள். அவன் வழுக்கையை ஒரு குறைபாடாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிறாள்.

தன்னை சந்திக்க வரும் இளவயது நண்பனுடன் பேசுவதைக்கூட தவிர்க்கிறான். இந்த வழுக்கைக்காகவா தங்கள் நட்பு குறைந்துவிடும்; அவன் எப்படி இருந்தாலும் நண்பன்தான் என்கிறான் அவன். தாயாரின் ஊக்கமும் நண்பனின் பாசமும் அவனை புது மனிதனாக்குகிறது. நிறுவனத்தில் உற்சாகமாக வேலை செய்து விற்பனையை அதிகரிக்கிறான். அவனுக்கு நடத்தப்படும் பாராட்டுக் கூட்டத்தில் தன்னுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்துகிறான். தன் தாயாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறான். வெளி மாநிலத்திற்கு பணி தேடி பிரிந்து செல்லும் காதலியையும் சந்தித்து தன் புதிய மன நிலையை சொல்லி இருவரும் இணைகிறார்கள்.

குள்ளம், குண்டு, கருப்பு போன்ற தோற்றக் குறைபாடு உடையவர்கள் பெரும்பாலான திரைப்படங்களில் கேலி செய்யப்படுவார்கள். ‘பேரழகன்’ போன்ற திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானது. இதில் ஒரு இடத்தில்கூட அப்படிப்பட்ட வசனங்களோ நிகழ்வுகளோ இல்லை. இதே குறைபாட்டை மையமாகக் கொண்ட இந்தி திரைப்படம் ‘பாலா’வில் இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். பார்க்க இந்தியா டைம்ஸ் விமர்சனம். Nootokka Zillala Andagaadu Movie Review: Fun entertainer with a predictable story (indiatimes.com).

முதல் பாதி நகைச்சுவை என்கிற பெயரில் சற்று தொய்வாக உள்ளது. நகைச்சுவை என்பது எவ்வளவு கடினம் என்பது தெரிகிறது. ஜிஎஸ்என்னின் தந்தை படம் கிரேசி மோகனைப் போல இருக்கிறது. அவர் படத்தை வைத்தவர்கள் நகைச்சுவையையும் இன்னும் யோசித்து எடுத்திருக்கலாம். விக் தயாரிக்கும் சத்தார் பாய் தாங்களும் கலைஞர்கள் தான் என்று கூறும் இடம் எதுவாக இருந்தாலும் படைப்பு படைப்பாளி என்பது மதிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறுகிறது. தன்னுடைய இளவயது நண்பனுக்கு தன்னுடைய நிறுவனத்திலேயே தான் சிபாரிசு செய்தால் பணி கிடைக்கும் என்று தெரிந்தும் அவன் அதிகம் பேசுவான், தன்னுடைய வழுக்கை தெரிந்துவிடும் என்பதால் அவன் பொருத்தமானவன் இல்லை என்று கதாநாயகன் ஜிஎஸ்என் சொல்லிவிடுகிறான். ‘மனிதன் மகா சல்லிப்பயல்’ என்று ஜி.நாகராஜன் சொன்னது இதைப் போன்ற நிகழ்வுகளால் தானோ? அதே நண்பனின் வார்த்தைகளே அவனை புது மனிதனாக்குகிறது.

நிறுவனத்தின் உரிமையாளர் கதாநாயாகியின் கல்லூரி நண்பர் என்பதால் அவளிடம் நெருங்கிப் பழக முயற்சிக்கிறார். திருமணமும் செய்ய முன்மொழிகிறார். இது பாலியல் துன்புறுத்தல்(HARASMENT) என்று கூறி அவள் வேலையை விட்டு விலகிவிடுகிறாள். அவள் வேறு வேலை தேடும்போது பழைய நிறுவனத்திடம் நடத்தை சான்றிதழ்(REFERENCE) கேட்கிறார்கள். அவள் சரியாக பணி செய்ய மாட்டாள் என்று கூறுமாறு ஜிஎஸ்என்னை வற்புறுத்துகிறார் உரிமையாளர். அவன் அதை மறுத்து அவள் சிறப்பாக பணி புரிவாள் என்று கூறுகிறான். பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளை இயல்பாக காட்டியிருக்கிறார்கள்.
நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வழுக்கை போன்ற சிறு குறைபாடே ஒருவனை இவ்வளவு தொல்லைகுள்ளாக்கும் என்றால் மற்ற குறைபாடு உடையவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையும் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஊக்கப்படுத்துதலும் தேவைப்படும்? சமுதாயம் எல்லோரைப்போல எல்லோரும் இருக்க வேண்டும்(CONFORM) என்கிற நியதியை வற்புறுத்துவதும் ஒரு பிரச்சினையே.