Posted inPoetry
ந க துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தியான நிலையில் மலை
அலைகின்றன மேகங்கள்
அமைதி தேடும் மனம்.
கற்பூர நெடி தாங்காமல்
படத்தின் பின்பறம் இருந்து
வெளியே வந்தது பல்லி.
பூரணமாய் நிறைந்திருக்கிறேன்
பௌர்ணமி நிலவொளியில்
புத்தனுடன் நான்.
கிளை கீழே விழாமல்
பாதுகாத்தது தாங்கி
மற்றொரு கிளை.
குயிலின் குரல் ஒலி கேட்டு
அதே குரலில் குரல் கொடுக்க
கற்றான் ஆதிமனிதன்.
கோயில் மணியோசை
என்னைச் சுற்றி ஒலி அதிர்வு
பூவிலிருந்து வெளியேறுகிறது வண்டு.
காலி டீ கோப்பை
சுற்றி சுற்றி வருகிறது
தாகத்தில் ஈ
கோடை வெப்பம்
மின்தடை புழுக்கம்
படுக்கையறை இருட்டில் பூனை.
பிரபஞ்ச சக்தியை
காதில் வைத்து கேட்டேன்
வலம்புரி சங்கின் ஒலி.
நிழல் கொடுக்கிறது
மரணக்குழி மேல்
வளரும் தும்பைச் செடி.