Posted inPoetry
தை மகளே வா.. தைரியம் தா.. கவிதை – பிச்சுமணி
திங்களில் மூத்தவளே
மகிழ்ச்சியின் மகளே வா..
எங்கும் துன்பமில்லா
பொங்கும் இன்பம் தா..
உழவரின் உறவே..
உழைப்பாளி தோழனே வா..
எல்லொருக்கும் எல்லாமென
நிலையான நிலையை தா..
தினமும் பிறக்கும்
ஆகாயத்தின் தலைவனே வா..
பூமித்தொண்டர்கள் வாழ்வில்
தேய்பிறையில்லா கனவை தா..
நில மகளுக்கு பாலூட்டும்
மழைத் தாயே வா..
எளியவர் வாழ்வில் ஒளியூட்டும்
வழிகள் பல தா..
முப்பால் மொழியின்
முகவரியே வா..
உழைப்பால் இயங்குமெல்லாம்
பொதுவாய் தா..
கூடி வாழ கோடித் தந்த
இயற்கையே வா..
கேடில் வாழும்சாதி ஒழிய
நன்றியை ஏற்று நம்பிக்கை தா..