நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – எஸ் வி வேணுகோபாலன்
நூல் : தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வனின்
விலை : ரூ.₹ 895/-
பக்கங்கள்: 896
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
கடந்த ஆண்டு 94-வயது தந்தையின் அழைப்பில் நீண்ட நாள் கழித்து எங்கள் சொந்தவூர் சென்று வந்தோம். கோயில் பூசையில் ஆழ்ந்திருந்த அப்பாவின் அருகே அமர்ந்திருந்தோம், பின்னர் ஊரைப் பார்க்கப் புறப்பட்டோம். வரிசையாக எங்கள் பாட்டன் பூட்டன் வீடுகள் சிதிலமடைந்திருந்தன. எங்கள் பெரிய தாத்தா வீட்டு வெளிப்புறத்தில் வீதியோரம் இருந்த கிணற்றைக் காணவில்லை. எங்கள் பெரியப்பா சிற்றூரின் அஞ்சல் அலுவலகப் பொறுப்பேற்று நாங்கள் வேடிக்கை பார்க்க, அஞ்சல் அட்டைகள், ஸ்டாம்ப் எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருந்த மிகப் பெரிய மரப்பெட்டி, பணத்தை உள்ளிறக்கி வாயைக் கட்டி மெழுகில் அரக்கு உருக்கி முத்திரை போட்டு சீலிட்ட தோல் பை எல்லாம் பரப்பி வைத்திருந்த பெருந்திண்ணை, சுற்றிலும் வேலியமைத்திருந்த ரீப்பர் கட்டைகள், வீட்டினுள்ளே எப்போதும் சங்கீதம் இசைத்தபடி ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல், பெரிய சமையல் கட்டு, உள்ளிருந்தபடியே ஜன்னல் திறந்து அங்கிருந்தே ராட்டினக் கயிறு பற்றி தண்ணீர் இறைத்துக் கொள்ள வெளியே காத்திருந்த கிணறு, அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடந்த வாக்குவாதங்களின் சாட்சியமாக இருந்த நெல் நிலவறைகள், நிலக்கடலை மூட்டைகள் எல்லாம் காத்து வைத்திருந்த வீடு இருந்த இடம் தடயமே இராது காலிமனையாகப் புற்கள் பூத்துக் கிடந்தது.
என் அத்தை மகள் ஒருத்தியின் திருமணத்தில் பெண் அழைப்புக் காட்சி, நாற்பதாண்டுகள் ஆகி இருக்குமோ, மனக்கண்ணில் விரிந்தபோது தெரிந்த காட்சிகள் மறுக்கப்பட்ட வீதியாயிருந்தது இப்போது. ஒரு மாயாவி சட்டென்று கண்ணெதிரே தோன்றி அந்தக் காட்சிகளை மறு உருவாக்கம் செய்ய மாட்டானா என்றிருந்தது. அதில் நான் கேள்விப்பட்ட இன்னும் முந்தைய தலைமுறை உறவுக்காரர்கள் முகங்களையும் பார்க்கவும், அவர்கள் அன்பை அருகிருந்து அள்ளிப் பருகவும் கூட ஆர்வமெழுந்தது.
என்ன வியப்பு, அப்படியான மாயாவி ஒருவர் கண்ணெதிரே தோன்றவும் செய்தார். பார்க்கத் துடித்த – பார்த்தும் பேசாது பறிகொடுத்த, இன்னும் உடன் வாழ்கிற உறவுக்கார்களை அவரவர் இல்லங்களைத் திறந்து கொண்டுபோய் அறிமுகப்படுத்தி, அவர்களைத் தழுவிய ஈரக்காற்று நம்மீது பட்டுக் குளிர வைக்கவும் செய்கிறார். அவர்களது கண்ணீரின் வெம்மையை நாம் உணரச் செய்கிறார். அவர்களது பூரிப்பை நம்மீது படரப் பண்ணுகிறார்.
55 படைப்பாளிகள் – வவேசு அய்யர் தொடங்கி கந்தர்வன் வரை, அவர்தம் சிறுகதைகள் (மூவாயிரம் இருக்குமோ!) தேடியெடுத்து (ஆகப் பெரும்பலவும் ஏற்கெனவே வாசித்தவை என்றாலும் மீண்டும்) வாசித்து, படைப்பாளிகள் குறித்த
கட்டுரைத் திரட்டுகள் துழாவி, சுமார் 200 புத்தகங்கள் வழி மேலும் நெருங்கித் தமிழ்ச் சிறுகதையின் தடங்களை அவை பதியப்பட்ட முதல் 50 ஆண்டுகள் வரைக்குமான அளவில் வரையறுத்துக் கொண்டு ச..தமிழ்ச்செல்வன் தனது ஆழமான பிரதிபலிப்புகளைக் கட்டுரைகளாக வடித்துத் தொகுத்து வழங்கியிருப்பது அபாரமான விஷயமாகும்.
‘சிற்பியின் நரகம்’ சிறுகதையில் சாத்தன் அந்த நடராசர் சிற்பத்தை எப்படியெல்லாம் எங்கெங்கிருந்தாலும் பாவங்களைப் பிடித்து வடித்தேன் என்று கிரேக்க தத்துவ ஞானி பைலார்க்கஸிடம் சொல்லிக்கொண்டிருப்பான். புதுமைப்பித்தன் மட்டுமல்ல கு அழகிரிசாமி, கி ராஜநாராயணன், ஜெயகாந்தன், விந்தன், கு ப ராஜகோபாலன், அவரது சீடராகத் தன்னை வரித்துக்கொண்ட கரிச்சான் குஞ்சு….வண்ணதாசன், வண்ணநிலவன் என்று பல்வேறு படைப்பாளிகளின் சிறுகதை படைப்புத் தன்மையை, அவரவர் சிற்பம் வெளிப்படுத்தும் அழகியலை, அவை பேசும் அரசியலை வாசகருக்கு எடுத்துச் சொல்கிறார் தமிழ்ச்செல்வன்.
நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வியைத் தனக்குத் தானே எழுப்பிக் கொள்ளும் படைப்பாளிகள் என்ன பதில் சொல்கின்றனர் என்பதை ந பிச்சமூர்த்தி, தி ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, சுயம்புலிங்கம், தஞ்சை பிரகாஷ்………..என்று அவரவர் சொந்த வாக்கியங்களிலேயே மேற்கோள் காட்டும் இந்தத் தொகுப்பு, அவர்களது தூரிகைகள் தீட்டும் சித்திரங்களை அசாத்திய உழைப்பில் அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தி வாசகர்களுக்குப் படைக்கும் பாங்கு அபாரம்.
எழுத்தாளர்களது சாதி, இன, மதக் குறியீடுகள் மூலம் அணுகாது, தாங்களாக நிறுவிக் கொண்ட அல்லது சார்பு எடுக்க மறுத்த அரசியல் வழி பாராது, கதைகள் வெளிப்படுத்தும் வர்க்கப் பார்வையை அளவீடாகக் கொள்கிறார் தமிழ்ச்செல்வன் என்பது மிக முக்கியமான அம்சம். அதனால் தான், ஆன்மீக உணர்வும், மேல்தட்டு மக்கள் கதைகூறலாகவுமே அமையும் எழுத்துகளில் ஒரு ‘தரிசனம்’ வாய்க்கிறது, சமூக வாழ்வின் வெக்கையும் தவிப்பும் தகிப்பும் வந்தாக வேண்டியிருக்கிறது லாசரா எழுத்திலும் என்று எழுத முடிகிறது அவருக்கு. தாம் எழுதிய 88 கதைகளில் உலுக்கிப் போடும் ‘மயான காண்டம்’ போல் 11 கதைகளில், பசியால் துரத்தப்படும் மனுஷிகளும் மனுஷர்களும் என்னவாகிறார்கள் என்று பேசும் வண்ணநிலவன் போல, பசிக்காக இத்தனை கதைகள் எழுதியவர் வேறு யார் என்று கேட்க முடிகிறது. தன்னை முற்போக்கு என்று வரையறுத்துக் கொள்ளாத நாஞ்சில் நாடனின் ‘யாம் உண்பேம்’ எனும் அதிர வைக்கும் சிறுகதை, மராத்திய விவசாயிகள் தற்கொலை பற்றிப் பேசிய முதல் அல்லது ஒரே தமிழ்ச் சிறுகதை என்று அறுதியிட்டுச் சொல்ல முடிகிறது. பி எஸ் ராமையா உள்ளிட்டுப் பேசப்படாதவர்களைப் பேசும் நூல், பல இடங்களிலும் நெகிழ்ந்து உருகி உணர்ச்சிவசப்பட்டு வாசிக்க வைக்கிறது.
எழுத்தின் வழி வாழ்வாதாரம் வரித்துக் கொண்டு வறுபட்டு வாடி வதங்கியும் பேனாவைக் கீழே வைக்காத மகத்தான படைப்பாளிகள் கு அழகிரிசாமி, புதுமைப்பித்தன், விந்தன் …. குறித்த விவரங்கள் அவர்தம் படைப்புலகத்தின் மேன்மையை வாசகர்கள் இன்னும் நெருக்கமாக உணர வைக்கின்றன. குறிப்பிட்ட ஆக்கங்களின் வேரை, அவை விளைந்த பின்னணியைக் கூட நாம் அருகே பார்க்க முடியும் அளவு ஆய்வுக் குரலும் ஒலிக்கிறது கட்டுரைகளில்.
கி ராஜநாராயணன் (கி ரா) அவர்களது பெரிதும் பேசப்படும் கதையான ‘கதவு’, விகடன் சிறுகதை போட்டியில்மூன்றாம் பரிசுக்குக் கூட கருத்தில் கொள்ளப்படவில்லை, சாதாரண கதையாக பிரசுரத்திற்குக் கூட ஏற்கப்படவில்லை என்கிற விந்தை ஒருபுறம் இருக்க, அது பின்னர் தாமரை பொங்கல் சிறப்பிதழில் வெளியான போது பிரபல எழுத்தாளர்களது பாராட்டுக் கடிதங்கள் வந்தன என்று எழுதி இருக்கிறார் கி ரா. ஏன் எழுதினேன் என்று கூறுகையில், கதைக்கான கரு என்கிற தலைப்பிலான கட்டுரையில் தான் நேரடியாக கிராம முன்சீப் ஜப்தி செய்து கொண்டு வைத்த கதவு ஒன்றில் குழந்தைகள் ஒட்டியிருந்த தீப்பெட்டி படம் பார்த்து ஏற்பட்ட பாதிப்பில் எழுதினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு விடவில்லை தமிழ்ச்செல்வன், கதைக்கான வரலாற்றுப் பின்னணி ஒன்று தோழர் இரா நல்லக்கண்ணு எப்போதோ பேசியதாகக் கேள்விப்பட்டு நேரடியாக அவரோடே தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்து, அந்நாட்களில் நெல்லை மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டாரத்தில் வலுக்கட்டாயமாக இப்படி வரிவசூல் செய்யும் கொடுமைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய வரிவஜா இயக்கத்தில் கி ரா பங்கேற்ற தாக்கத்தில் விளைந்தது அந்தக் கதை என்று ஆவணப்படுத்துகிறார். மட்டுமல்ல, கட்சி, போராட்டம் இவற்றை உட்கொணராமல், வாசகருக்கு ஏற்படவேண்டிய உணர்வைத் தூண்டும் இந்தக் கதை, கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்று இயங்கும் படைப்பாளிகளுக்கான பாடமாகவே பரிந்துரைக்கிறார் தமிழ்.
கதைகள் காலக் கண்ணாடி என்று சொல்லப்படுவதை எத்தனை எத்தனை படைப்பாளிகளின் கதைக் களங்களில் இருந்து பிரதிபலிக்க வைக்கிறார்! தி ஜானகிராமன் கதையில் (ஸ்ரீ ராமஜெயம்) ‘ஜப்பான்காரன் குண்டு போட்ட சமயம்’ என்று வருகிறது. கதை நாற்பதுகளில் நிகழ்கிறது. மட்டுமல்லாது அந்தக் கதையில் வரும் போராட்டம், அச்சக ஊழியர்கள் சங்க நடவடிக்கை தீவிரமாக இருந்ததையும் ஆவணப்படுத்தி விடுகிறது என்று கூறுகிறார் தமிழ். ‘வெள்ளைக்காரன் ராத்திரி கப்பல் ஏறியிருக்கான். மறுநாள் பட்டப்பகல்ல ஊர்ல ஒரு கொல விழுந்தது’ (ஒரு மாதிரிக் கிராமம்) என்கிறார் சுயம்புலிங்கம். அதேபோல் மாட்டிறைச்சி பற்றிப் பேசும் மகாகவி பாரதியின் கதையை அவன் காலத்து மனநிலையில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் தமிழ். அசோகமித்திரன் கதைகளினூடாகப் புலப்படும் தரவுகளைக் குறிப்பிடுகிறார்.
22 நாவல்கள், 300 சிறுகதைகள், 15க்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் படைத்த அநுத்தமா, ஒரு நாள் கூடப் பள்ளிக்குப் போகாமல் 115 நாவல்கள் எழுதிய வை மு கோதைநாயகி அம்மாள், 500 சிறுகதைகள், 9 ஓரங்க நாடகங்கள் எழுதிய கமலா விருத்தாச்சலம் …..என்று பெண் படைப்பாளிகளை இந்தத் தொகுப்பு மிகவும் சிறப்பாகக் கொண்டாடிப் பேசுகிறது (ஆர் சூடாமணி விடுபட்டது ஒரு குறை). அம்பையின் நுழைவே ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று குறிப்பிடும் தமிழ்ச்செல்வன், அவரைப் படிக்காமல் எப்படி மாதர் இயக்கத்தைக் கட்ட முடியும் என்ற கேள்வியை நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் ஒருவித பதட்ட உளவியலோடு எழுப்பினார். பெண் மனத்திற்குள் நடத்திய பயணம் மட்டுமல்ல, ஆண் பெண் உரையாடலைக் களமாக்கி அவர் பொதுவெளிக்கு எடுத்துவந்த செய்திகளும் அதுகாறும் தவிர்க்கப்பட்டு வந்த நுட்பமான விவாதங்களும் உடலியல் நுணுக்க விவரிப்புகளும் அசாதாரணமானவை என்று நிறைய மேற்கோளோடு பேசுகிறது கட்டுரை.
தி ஜா படைக்கும் பெண்கள், கி ரா கதைகளில் பெண்கள் என்று பல்வேறு படைப்பாளிகளின் பார்வையில் ஒப்பீடும், தகுதிமிக்க விதந்தோதுதலும் நல்ல வாசிப்பு அனுபவமாகும். தஞ்சை ப்ரகாஷ், ஜி நாகராஜன் கதைப்போக்கு குறித்த தரமிக்க விவாதத்தையும் நடத்துகிறது தொகுப்பு. மௌனி குறித்த பிம்பத்தை அலசும் நூல், ந முத்துசாமியின் புஞ்சை கிராமத்து வாழ்க்கையைப் பேசும் கதைகளை அடையாளப்படுத்துகிறது.
தமிழ் மொழி வளர்ச்சியில் இலக்கிய படைப்பாளிகளின் பங்களிப்பைக் காத்திரமாகப் பேசும் கட்டுரைகள் நிரம்பிய தொகுப்பில், பி ஏ பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று 1925ம் ஆண்டு அக்டோபர் 22 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை பல்கலை ஆட்சிமன்றக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியமர்ந்த அடுத்த சில நிமிடங்களில் மூளையில் இரத்தக் குழாய்கள் வெடித்து உயிரிழந்தார் அ மாதவய்யா என்கிற தகவல் கண்ணீரை வரவழைப்பது.
திராவிட இயக்க எழுத்தாளர்கள் பங்களிப்பையும் கருணாநிதி, ஏவிபி ஆசைத்தம்பி, அரங்கண்ணல் என்று கதைகளோடு எடுத்துச் சொல்கையில், அந்த வரிசையில் கச்சிதமாகப் பாத்திரங்களை வார்த்துச் சொல்லும் கலை எஸ் எஸ் தென்னரசு எழுத்தில் தான் வசப்பட்டது என்கிறார். அண்ணாவின் செவ்வாழையை யார் மறக்க முடியும், செம்மையாக விவரிக்கிறார்.
தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்துவிட்டுப் பின்னர் கம்யூனிஸ்டுகள் இலக்கிய நதியில் காலை நனைத்துப் போனவர்கள் என்று சொன்ன சுந்தர ராமசாமியின் சிறப்பான கதைகளையும், விமர்சனத்திற்குரிய படைப்புகளையும் பேசுகிறது தொகுப்பு. தி ஜா வுக்கு இரண்டு கட்டுரைகள். கி ரா வுக்கு முடிவுறாத பக்கங்கள், கு அழகிரிசாமிக்கு இன்னுமின்னும் என்று விரியும் எழுத்துகள் என்று எழுதிச் செல்லும் தமிழ்ச்செல்வன் எழுதுகோல் இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட சிலருக்கு ஆகச் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டிருக்கிறது. ஜெயகாந்தன், பிரபஞ்சன், கரிச்சான் குஞ்சு, கல்கி, புதுமைப்பித்தன், ராஜாஜி போன்ற படைப்பாளிகள் குறித்த கட்டுரைகள் மிகவும் காத்திரமானவை, எத்தனை எத்தனை திறனாய்வு எழுத்துகளையும் சேர்த்து ஒப்பிட்டு அலசுகிறார் தமிழ்.
தொமுசி குறித்த கட்டுரை அரிதான வரலாற்றுத் தரவுகளின் பொக்கிஷம் எனில் பா செயப்பிரகாசம் படைப்புலகம் பற்றிய கட்டுரை அவர் வாழும் காலத்திலேயே அவருக்கு வழங்கப்பட்ட தகுதிமிக்க அங்கீகாரம். நாவல்களுக்காகக் கொண்டாடப்படும் எழுத்தாளர்களது சிறுகதைகள் அதைவிடவும் பேசப்பட வேண்டும் என்பதில் பூமணியின் அபார எழுத்துகள், தி ஜா வின் வார்ப்புகள் என இந்தத் தொகுப்பு அந்த விதத்திலும் பேசப்பட வேண்டியதாகிறது. அதிகம் எழுதாமல் போன லிங்கம் அவர்களது அசாத்திய எழுத்து பற்றிய கட்டுரை வாசகரையும் ஏங்க வைக்கிறது. இன்குலாப் சிறுகதையுலகில் இடம் பெறுவதை, மா அரங்கநாதன் புனைவுலகை, சா கந்தசாமியின் எழுத்துகளை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் தமிழ்.
கலை இலக்கியம் மக்களுக்காகவே என்பதைக் கீழ்மைப்படுத்தி, கலை கலைக்காகவே என்ற குரல் ஓங்கி ஒலித்தவர்களது படைப்புகளிலும் வெளிப்படும் சமூக பிரக்ஞை, மேட்டுக்குடி மொழியாளர்கள் எழுத்திலும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் எழுப்பும் கதைகள் என்று பாகுபாடற்று அலசுகிறது தமிழின் பேனா. பிரச்சாரத் தூக்கலான கதைகள் என்று முற்போக்கு படைப்பாளிகள் மீது ஒட்டுமொத்தமாகவ வைக்கப்படும் ஏற்றுக் கொள்ள முடியாத விமர்சனங்களுக்கு ஆங்காங்கே உரிய இடத்தில் நெத்தியடியாகப் பதில் கொடுத்தும், அந்தந்த படைப்பாளிகளைக் காழ்ப்போடு அணுகாமல் மதிப்போடு பேசிக்கொண்டே நகர்கிறது.
தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து பேசப்பட வேண்டிய பல கதைகளை அந்தந்த காலப் பொருத்தம், அரசியல் உள்ளடக்கம், சமூக வெளிச்சம், சாதீய பாலின நுணுக்கம் இவற்றோடு ஒரு வாசகர் இந்தத் தொகுப்பில் இருந்து உறிஞ்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பது இந்தக் கட்டுரைகளின் மிக முக்கிய அம்சம் ஆகும்.
ஜெயந்தன் உள்ளிட்டு விடுபட்ட எழுத்தாளர்கள் சிலரது பெயர்கள் நினைவுக்கு வந்தாலும், இப்போதைய இந்தத் தொகுப்பின் வருகை இளம் வாசகருக்கு மிக அரிய காலப்பெட்டகம் என்று சொல்ல முடியும். மூத்த வாசகர்களுக்கு அவரவர் இளமைக் காலத்தை மீட்டெடுத்துக் கொடுக்கக் கூடும். பலரை வாசிக்கத் தவறிய குற்ற உணர்ச்சியையும் தூண்டும், சார்வாகன் எனும் அற்புதமான படைப்பாளியை மிகத் தாமதமாக அணுகினேன் என்று தமிழ்ச்செல்வன் சொல்வது போலவே. உள்ளபடியே, சார்வாகனை அவரது மறைவில் சென்று பார்த்தபோது அத்தனை துயரத்திற்கு உள்ளாகி இருந்தேன், அதற்கு மூன்று நாட்கள் முன்பு வந்து பார்த்துச் சென்ற கவிஞர் எஸ் வைத்தீஸ்வரன் பின்னர் அது குறித்துச் செய்த பதிவு தொகுப்பில் இடம் பெற்றிருப்பது, யாரையும் கலங்க வைக்கக் கூடியது.
படித்துக் கொண்டே இருக்க வைக்கும் தொகுப்பு பற்றி இன்னும் பேசிக் கொண்டே இருக்க வைத்திருப்பது இந்த நூலின் சிறப்புகளில் தலையாயது. எழுதிக் கொண்டே இருங்கள் தமிழ், பிற படைப்பாளிகளைக் கொண்டாடும் பெரிய மனசுக்காரர் நீங்கள்! உங்கள் சிறுகதை படைப்புலகம் இன்னும் விரிவடைய வேண்டியதே வாசகருக்குக் கிடைக்கும் செய்தி, நீங்கள் நம்ப வைக்க முயற்சி செய்வதுபோல் எல்லாவற்றையும் எத்தனையோ பேர் ஏற்கெனவே எழுதி முடித்து விட்டனர், எழுத இன்னும் என்ன என்பதல்ல!
நன்றி: செம்மலர்: டிசம்பர் 2022