நூல் அறிமுகம்: பாரதிசந்திரனின் தமிழ் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம் – மு. தனஞ்செழியன்
தமிழ் இலக்கிய உலகில் புதிய படைப்பாளியின் எழுத்துக்களின் திறவுகோலாகச் சிற்றிதழ்கள் அமைகின்றன. இதழ்கள், பெருமளவு விற்பனையைத் தனது நோக்கமாகக் கொள்ளாது. குறைந்த எண்ணிக்கையுள்ள தரமான வாசர்களைக் கொண்டிருக்கிற பத்திரிக்கைகள், வாசகர்களின் மனதையும் பண்பையும் பாழ் படுத்தாது, அவர்களது அறிவு, சிந்தனை, ரசனை ஆகியவற்றை வளம்பெறச் செய்யும் குறிக்கோளுடன் விசயங்களைச் சேகரம் செய்து தருகின்றன பத்திரிக்கைகள்.
“தங்களுடைய வியாபாரத்துக்கு வாணிபச் சந்தையை நம்பாது, தனிப்பட்ட வாசகர்களின் ஆதரவைத் தேடிப் பெற முயலும் பத்திரிக்கைகள். சிறு பத்திரிக்கைகள்” என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகின்றார். சிறந்த சிற்றிதழ்கள் பெரும்பான்மையான வாசகர்களைச் சென்றடையாமல் இருப்பது என்பது தமிழ் வாசகப் பரப்பின் சாபக்கேடு என்றே குறிப்பிடலாம். தமிழ் இலக்கிய உலகில் லாப நோக்கமில்லாமல் சிறந்த தரத்தில் வெளிவந்த பல சிற்றிதழ்களைப் பற்றியும் அதன் மறைவு காரணங்களைப் பற்றியும். தமிழ் வாசகர்கள் தொலைத்த சிற்றிதழ்களின் வரலாற்றுப் புத்தகத்தைப் பற்றியும். புத்தகத்தில் இடம் பெற்று இருந்த தரமான படைப்புகளை. இந்தப் புத்தகத்தின் மூலம் வரலாற்றுக் கோப்புகளாக மீட்டுத் தந்து இருக்கிறார் எழுத்தாளர், பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள்.
‘எதிர்காலத் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்’ என்கிறது தமிழ் இணைய ஊடகம்.
சிற்றிதழ்களின் கவிதைகளில் உலகம்
தமிழ்ச் சிற்றிதழ்கள் உலகத்தரத்திற்கு இணையான கவிதைகளைப் பரிசோதனை முயற்சியாகவும். பண்பாட்டு நிலையிலும் வருவதைச் சிற்றிதழ் வாசிப்பாளராக நான் உணர்கிறேன். இதைச் சிற்றிதழ் வாசிப்பாளர்கள் உணர்ந்திருக்கக் கூடும். சிற்றிதழ்களில் வெளிவந்த ஒரு கவிதையைப் பற்றி எழுத்தாளர் பாரதிசந்தரன் அவர்களின் ஆய்வுப் பார்வையில்.
அக உலகப்பயணங்களின் வழித்தோன்றும் கவிதைகள் அழகியல் தொனியிலும், உளவியல் பாங்கிலும், பின் நவீனத்துவ அடிப்படையிலும் பல்வேறு நிலைகளில் எழுதப்படுவதை உணர முடிகின்றது. எம். யுவன் எழுதிய இந்த உலகம் கவிதையில், இயற்கையினூடாய் தன்னை இணைத்துப் பார்த்துப் பின்விலகித் இறப்பினைக் கற்பனை செய்யும் கவிதையாக அமைகின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதுகளின் தன்மையும் கற்பனையோடு கலந்து எழுதப்பட்டிருக்கின்றது . இயற்கையோடு இணைந்து தன்னை வருணித்துத் தொடரச்சியாக,
நிலமும் நீரும் கொண்ட
சமரசத்தில் வாய்த்தது நான்.
வாசிக்கக் கிடைத்த தெரு, நானோ
கடவுளும் பிசாசும்
கயிறிழுக்கும் போட்டியில்
அறுபடாத கயிறானேன்.
என்னுடன் பிறந்து நான்
இல்லாது போக நானும்
அழியாக் காத்திருக்கிறது இவ்வுலகம்.
என்கின்றார். மனதளவில் நான் எனும் தன்மை மறைந்து போகும் முக்தியறிவு பெற்றிருந்தாலும் , என்னையும் அழிக்கக் காத்திருக்கிறது உலகம் என்ற எதிர்கால நிகழ்வுக் கற்பனை அழகாக்க கட்டமைக்கப் பெற்றிருக்கின்ற இக்கவிதையின் படைப்புத்திறன் கவிஞரின் அக உலகம் பிரதிபலிப்பாக இருக்கின்றது என்பதை இந்த நூல் அழகாக விரித்துரைக்கிறது.
சிற்றிதழ்களின் நவீன சிறுகதைகள்
சிறுகதைகள் தற்பொழுது. நவீன இலக்கியக் கோட்பாட்டுச் சிந்தனைகளோடு சிற்றிதழ்களில் எழுதப்பெறுவதைக் காண முடிகின்றது.
தமிழ்ச்சிற்றிதழ்கள் ஆண்டு தோறும் சுமார் இரண்டாயிரம் இதழ்கள் உலகில் வெளிவருவதாக அறிகிறோம். அந்தளவிற்கு இணையங்களும், வணிக இதழ்களும், சிற்றிதழ்ச் செய்திகளும் சிற்றிதழ்களின் வரவை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.
தமிழம், கீற்று, கூடு, நக்கீரன் (கனடா) , தமிழ் மணம், புக்டே, சொல்வனம், பதாகை, பதிவுகள், முத்துக்கமலம், இனிது, திண்ணை போன்ற இணைய தளங்களில் தொடர்ந்து சிற்றிதழ்களின் வரலாறு மற்றும் திறனாய்வுகள் வெளிவருகின்றன. அவற்றில் சிறுகதைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.
சுந்தரசுகள், தொடரும், முங்காரி, ஓடம், பயணம், நந்தவனம், நிழல், கனவு, சதங்கை, இலக்கு, கல்வெட்டு பேசுகிறது, காற்றுவெளி, போன்ற சிற்றிதழ்களில் நவீன கோட்பாட்டு அடிப்படையில் சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன.
வன்மி, இரா.நடராஜன், ஆதவன் தீட்சண்யா, நந்தவனம் சந்திரசேகரன், வா.மு.கோமு, கழனியூரன் விசும்பு, ஆ.சந்திரபோஸ், போன்ற எழுத்தாளர்கள் இவ்விதமான சிறுகதைகளை எழுதுகின்றனர் என்பதை இந்த நூல் மிக விரிவான நோக்கில் ஆய்ந்து பார்த்து, இலக்கிய உலகில் அவற்றைப் பதிவாக்கி வைத்திருக்கிறது. இவை காலத்தின் தேவையாகும். அதை இந்த நூல் நிறைவேற்றியிருப்பது பாராட்ட்த் தக்கதாகும்.
நனவோடை உக்தியைப் பயன்படுத்தி எழுதும் சிறுகதைகள் அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது. மொழிநடை, ஒவ்வொரு சிறுகதையிலும் வேறுபாட்டைக் கொண்டவையாகவும், வாசகரின் மனவோட்டத்தைச் சுண்டி இழுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளன.
தேவரசிகன் எழுதிய ‘நாங்கேட்டேல ஏகே’ எனும் சிறுகதை சுந்தரசுகன் இதழில் வெளிவந்தது. அக்கதை உளவியல்சார் கோட்பாட்டை உட்புகுத்திய கதையாகவும், மொழிநடை சிறக்க எழுதியதாகவும் இருக்கிறது. சமூக வெளிப்பாட்டை நவீனத்துடன் எடுத்துரைக்கும் சிறுகதைகள் அதிக அளவில் எழுதப்பெருகின்றன. உதாரணமாக விலங்குகள் வதைபடுவதை, ‘உறுப்பு’ எனும் கதை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. இக்கதையைப் பா. சத்தியமோகன் கனவு இதழில் எழுதியுள்ளார்.
பின்நவீனத்துவச் சிறுகதைகளாகவும், மாய எதார்த்தவாதச் சிறுகதைகளாகவும் பல கதைகள் சிற்றிதழ்களில் எழுதப் பெற்றமையைப் பாரதிசந்திரன் தெள்ளத் தெளிவாக வெளிப் படுத்தியுள்ளார். கவிதை, கதை, கட்டுரை, துணுக்குகள், எனப் படைப்பின் பல வடிவங்களையும், சிற்றிதழ்களில் வெளிவந்ததின் தன்மைகளையும் சாறாகப் பிழிந்து இந்த நூல் வடிவில் ஆசிரியர் ஊட்டுகிறார். படைப்புகளை இனம் காண்பதுடன், படைப்பாளிகளைப் பேரிதழ்கள் இனங்காணவும், சிற்றிதழ்கள் வந்த சிறிது காலத்திலேயே பாதியில் நின்று போன வரலாறுகளையும். இந்த ஆய்வு நூல் மூலம் நமக்கெல்லாம் மீட்டுத் தந்து இருக்கிறார் எழுத்தாளர் பாரதிசந்திரன்.
தொண்ணூறுகளில் தொடங்கி, இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு வரையிலும் வெளிவந்த பெரும்பான்மையான சிற்றிதழ்களைப் பற்றியும் அதன் படைப்புகளின் மீது ஒரு மீள் வாசிப்பையும், இந்த ஆய்வுக்கட்டுரை நூல் நமக்கு ஏற்படுத்துகிறது.
புத்தகத் தேவைக்கு:
பாரதிசந்திரன்
(முனைவர் செ. சு. நா. சந்திரசேகரன்)
திருநின்றவூர்
தொடர்புக்கு :- 92832 75782
சிவகுரு பதிப்பகம்
7/40 , கிழக்குச் செட்டி தெரு,
பரங்கிமலை, சென்னை – 600 016.
தொடர்புக்கு : 98403 42801