அவன் காட்டை வென்றான் Avan Kattai Vendran

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அவன் காட்டை வென்றான் – தானப்பன் கதிர்

      ஒரு இரவில் காட்டில் நடக்கும் காட்சிகளை படமெடுத்துக் காட்டி இருக்கிறது இந்த குறுநாவல். தன்னந்தனியே ஒரு கிழவன் இரவில் அந்த காட்டில் செல்லும் போது நடக்கின்ற நிகழ்வுகளை பதை பதைப்புடன் நமக்கு காட்சிமைப்படுத்தி இருக்கின்றார் எத்திராஜுலு. பன்றிகளோடும்…
நூல் அறிமுகம்: தாணப்பன் கதிரின் ’சுற்றந்தழால்’ – விஜயராணி

நூல் அறிமுகம்: தாணப்பன் கதிரின் ’சுற்றந்தழால்’ – விஜயராணி




சகோதரர் தாணப்பன் கதிர் தென்தமிழகத்தின் நெல்லைச்சீமையின் பரந்துபட்ட வாசிப்பாளர் மட்டுமின்றி ‘காணிநிலம்’ காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இவர் எல்லா இலக்கிய அமைப்புகளிலும் இயங்கிவருவது மட்டுமின்றி தான் வாசித்த நூல்களுக்கு சிறந்த விமர்சன உரையும் தந்து பல குழுக்களில் பகிர்ந்து எல்லோருக்கும் வாசிப்பைத் தூண்டுவதோடு எனக்கு சற்றே பொறாமையையும் (அநியாயத்துக்கு எப்பிடி இம்புட்டு வாசிக்கிறார்னுதான்) தூண்டுகிறார்.

கதை கவிதை என்று பரவலாக எழுதினாலும் இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற போதிலும் நேர்த்தியாக அவர் வாசிப்பைப் போலவே மனதோடு இசைகிறது அத்தனை கதைகளுமே!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி வாசித்த போதான துயரம் இன்றைக்கும் பாலின மாற்றத்தின் வதை, மனதைத் துயரப்படுத்தாமல் எந்தக்கதையையும் கடக்கவிட்டதில்லை. அந்த வகைமையில் அந்தத் துயரை பிருகன்னளையும் தருகிறாள். என்றாலும் கதையின் நிறைவில் தாய்க்குத் தாயாகிற காட்சி கண்ணில் விரிகிறது.

நாட்டுமாடுகளின் அழிவைச்சொல்லும் ஆநிரை கதையாகட்டும் சாலையை சீர்படுத்துகிறோம் என்பதைச் சொல்லும் ‘வளைவி’லாகட்டும் அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை சொல்லமறக்கவில்லை.

எங்கள் வீட்டருகில் இருக்கும் காலிமனை தேடி வந்து இதுவரை ஏழுமுறை கன்று ஈன்ற நிகழ்வும் பெண்கள் நாங்கள் பண்டுவம் பார்த்த கதையும் அதன்பிறகு மாட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு நன்றிகூடச் சொல்லாமல் அழைத்துச் செல்வதும் வாடிக்கையானாலும் அந்த வாயில்லாச்சீவனின் நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் சிதைத்ததில்லை.
எளிய வாழ்வே ஆனாலும் ஆநிரையில் கஷ்டப்பட்டுப் பணத்தைக் கட்டியும் மீட்காமல் விடப்பட்ட கருத்தமாடு அம்மா….வென அழைப்பதைக் கேட்டு கந்தன் மட்டும் மனசுடைந்து அழவில்லை…நாமும்கூட.

என்னதான் நவீனம் வந்தாலும் ஈரமுள்ள மனிதர்கள் மண்ணில் வாழ்வதாலேயே இந்த பூமி இன்னும் நிலைத்திருக்கிறது போல. எல்லோரும் எல்லாமும் சமமாகப் பெற வேணும் என்ற ஆதங்கத்தை ஆசிரியரின் மனதிலுள்ள “ஈரம்” சொல்கிறது.

நாட்குறிப்பு நமக்குத் தந்த வரலாற்று ஆவணங்கள் ஒரு புறமெனில் தனிமனித அடையாளங்களும் அது தரும் மென்னுணர்வும் காலப்பொக்கிஷமாய் வாசிக்கும் போதெல்லாம் அதுவொரு உணர்ச்சிக் கடல். அதில் மூழ்கி முத்தும் எடுக்கலாம், உப்புக்கரிக்க கண்ணீரும் சிந்தலாம். கார்த்தி போல பிள்ளைகளின் ஏக்கமும் அன்பும் மனதை நிறைக்கிறது.

தொகுப்பிலுள்ள தலைப்பிலான கதை முழுக்க முழுக்க அன்பில் தோய்ந்த வரிகள். அடர்பச்சை ரோஸ் வண்ணங்களில் கடைசலில் செய்யப்பட்ட மரப்பேழையும் உள்ளிருந்த உருட்டுமஞ்சள் மற்றும் பழுப்பேறிய பிச்சிப்பூ வாசமும் வாசிக்கும் நொடி நாசியேறுகிறது.
காலம் செல்லச்செல்ல எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறினாலும் ஏதோ ஒரு செயற்கைத்தனம் போலவே திருமணபந்தம் நிகழ்ந்துவிடுவதும் நிதர்சனத்துயரம்.

இதற்கு அடுத்தபடியான “செம்புலப்பெயல்நீர்” கதை நாளைய தலைமுறைக்கான திருமண பந்தத்திற்கான நம்பிக்கையைச் சொல்லாமல் சொல்கிற நேர்த்தி அழகு.

எல்லா நடுத்தரக்குடும்பங்களிலும் புதிதாக வந்து சேரும் ஒவ்வொரு பொருளும் ஒரு கதையைத் தம்முடன் கொண்டு வந்துவிடுகின்றன. நல்ல அவதானிப்பும் எழுத்துத்திறமையும் இருப்பதால் ஆசிரியர் குக்கருக்கு அழகாய் ஒரு கதை சொல்கிறார்.

“புத்திர பாசம்” கதையெல்லாம் அநேகமாக பல வீடுகளில் நடைமுறையில் சமீபமாக கண்டுகொண்டுதான் இருப்போம். அதென்னவோ தெரியவில்லை எந்தத் தென்னை மரத்திலிருந்தும் தென்னமட்டையோ ஏன் கூந்தல்கூட யார்தலைமீதும் விழாத அதிசயம் இன்றும் கூடத் தொடர்கிறது. ஆனாலும் வீட்டை விரிவாக்கம் செய்வதற்கோ நவீனப்படுத்துவதற்கோ அல்லது கதைகூறுவதுபோல மின்கம்பிக்கு இடையூறென்றோ வெட்டுப்படத் தயாராய் இருக்கும் தென்னை மரங்கள் புத்திரபாசத்தைத் தாங்கி நிற்பவைதான்.

இப்படியே தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் சொன்னால் நீங்கள் வாங்கி வாசிக்க வேண்டாமா?

நூல்: சுற்றந்தழால்
ஆசிரியர்: தாணப்பன் கதிர்
விலை : ரூ.120/-
பக்கம்: 108
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924