இறுக்கம் கவிதை – இரா.கலையரசி

இறுக்கம் கவிதை – இரா.கலையரசி




கரகரத்த குரலெடுத்து
கக்கத்தில் துண்டை இடுக்கி
கசங்கிய முண்டாசின்
சுருக்கங்களை சரி செய்தபடி
“ஆத்துல போறத
அள்ளி தான் குடிக்கனும்”
கொரித்த கொய்யாபழத்தை
விட்டு ஓடிய அணிலை
பார்த்தபடி உதிர்ந்தன வார்த்தைகள்.!

ட்ரங்கு பெட்டி அதிராமல்
இலசா எடுத்த சீலை
அங்கம்மாவ இறுக்கமா கட்டிக்கிறுச்சு.
அப்பன் பேச்சு காலை கட்ட,
கருஞ்சாந்து இருட்டு கண்ணடிக்க,
களவாணி மனசு
சீக்கு வந்த கோழியா
சிக்கித் தவிக்குது.

தண்டால தள்ளிகிட்டு
தவதாயபட்டு வெளியேறி
தருசு காட்டுக்குள்ள
தனியா ஓடி களைக்கிறா!
செவத்த கெண்ட காலு
மண்ண மிதிச்சு சத்தமிட
திரும்பியவள இறுக்கிடுச்சு
தேக்கு மரக் கைகள்.

ஓங்கிய அரிவாள்
கருப்பசாமிய நெனவுபடுத்த,
செவந்த கண்ணுல
வழிஞ்சு ஓடுது ரத்தக்கோடுகள்
!ஓடுகாலி கால வெட்டுணே!
ஓங்கி ஒலிக்குது
உளவு பார்த்தவன் குரல்.

தூக்கின கைகளை
அழுத்தி பிடிச்சவள்
“அப்பா கொன்றுப்பா “ங்க
மவள மொதல்ல
தூக்கின நாள நெனச்சு
மண்ணுல சாஞ்சாரு விருமன்
“பொணமா”

– இரா.கலையரசி