தங்கேஸ் கவிதைகள் | Poem of Thanges - Tamil Poetry - Bookday Kavithaikal | Tamil Kavithaikal - Koodalingm Thangeswaran - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1.திமிர் மாதரை யோனிக்கூடென வன்புணரும் ஒரு தேசத்தில் பெண்கடவுள்கள் ஈரல்குலை துடி துடிக்க நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் கடவுள்களே ஆனாலும் முதலில் ஒருஇந்தியனுக்கு ஞாபகத்திற்கு வருவது அவர்களின் தீட்டுத்தானே ! ஒற்றை வார்த்தையில் அழவைத்து விடும் வல்லமை கொண்ட குறித்திமிர் அசைந்தாடும்…
தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) - Thanges Kavidhaikal - வாயில் இரையோடுவந்து சேரும் என்பதா?வானத்தில் தொலைந்து விட்டதென்பதா? - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1.பதில் வாயில் இரையோடு வந்து சேரும் என்பதா? வானத்தில் தொலைந்து விட்டதென்பதா? வல்லூறு அடித்து விட்டதென்பதா? இல்லை சாமியிடமே போய் சேர்ந்து விட்டது என்பதா? குட்டி வாயைத்திறந்தபடி கூட்டுக்குள் தாயை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் குருவிக்குஞ்சுக்கு என்ன பதில்…
சாதி-கவிதை - தங்கேஸ் | Poem - Thanges

தங்கேஸ் கவிதைகள்

1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின் உடலெங்கும் வடு வடுவாக பதிந்து கிடக்கும் உழவு மாடுகளின் கால் தடங்களுக்கு ஈடாக…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      1.கிராமியப் பாடல் பொருள் : தனிமை பல்லவி ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது கிணத்துக்குள்ள நெலவு கிடந்து நீச்சடிக்குது குளம் குட்டை எல்லாமே குறட்டை விடுகுது கொஞ்ச நேரம் ராத்திரியும் கண்ணசருது ஆனாலும் ஆனாலும் நான்…
Thanges Poems 30. தங்கேஸ் கவிதைகள் 30

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1

கடவுள் தன்மையோ
பெரும்பாறையாய் அசைவற்ற பொழுதுகள்

அசைவற்ற பொழுதுகளை
அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது
காற்றோடு புணரும்
ஓர் அரசமரத்திலை

எந்த அரூபத்தின் பவனியை தரிசிக்க
திடீரென்று கோடிக் கண்கள் முளைத்து விடுகின்றனவோ
புழுதி படிந்த . இந்த வீதிக்கு ?

நிலவு நதியாகும் தருணம்
உறங்கா மீன்களின் சுவைக்குப்
பலியாகின்றது
உடைந்து போன விடியலின் கரு

புதையுண்ட சொல்லொன்று
சுயம்பாக முளைத்தெழ
கனவெங்கும் பறந்து கொண்டிருக்கின்றன
மழைத் தட்டான் பூச்சிகள்

கசாப்புக் கடையில் கட்டப்பட்டிருக்கும்
திசையறியா ஆட்டுக்குட்டி
இரவின் திரண்ட சாபத்தை
கத்திக் கத்தித் தீர்க்கும் போது
நினைவில் வந்து போகிறது
முதுகு வளைந்த கூர்மையான வெட்டுக் கத்தி.

கவிதை 2
படைப்பு

ஒவ்வொரு மதமாக தன் விலாசங்களை மாற்றிக் கொண்டிருந்த கடவுள்
ஒரு நாள் காணாமல் போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்கள் மசூதிகள் தேவாலயங்களிலெல்லாம்
தேடிய பிறகு
அவரின் இல்லாமை பச்சை குருதியென பெருக்கெடுத்து ஓடுகிறது
வெறுமையின் வெளியில்
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
அரற்றுகின்றன ஆற்றாமையில்
இரக்கத்தில் சுயம்புவாக
ஆண் பாலில் தோன்றுகிறார்
வெள்ளையுடையணிந்த கடவுள்
இனி அவர் தன்னை நிரூபிக்க
அற்புதங்கள் புரிந்தாக வேண்டும்
நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும்
மிதக்கும் மனிதர்கள் மேல்
மோதி விடாமல் நடக்கும்
அசகாய சூரத்தனம்
தூக்கத்தைக் குலைக்கிறது
கழுத்தை அழுத்துகிறது
விற்பன்னர்களின் நீதியைச் சுமந்து செல்லும் போது
நெஞ்சில் முட்கள் முளைக்கின்றன
முட்களோடு சேர்த்து இதயத்தையும்
கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின்
குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் சாமர்த்தியமாக
உள்நுழைகிறார்
சாத்தான் சாத்தான்களையும்
கடவுள் கடவுள்களையும்
படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
ஆனால்
சின்ன வெங்காயம்
கிலோ என்ன விலை என்று மட்டும்
யாருக்குமே தெரியவில்லை …

கவிதை 3

எதிர்பாராமல்
அறுந்த பல்லி வாலுக்கு
வெண்சுவர் என்பது
இனி என்றுமே
நுழைய முடியாத கடந்த காலமல்லவா ?

இடமும் வலமும் துடித்து விழும்
அதன் வலியைப் பாட
ஒரு கவிஞனில்லை

பசுவின் வாலென்றால்
பக்கம் பக்கமாக பாட ஆளிருக்கிறது
யானையில் வாலென்றால் கூட
கானகத்தையும் சேர்த்தே
பாடி விடுவார்கள் கவிஞர்கள்
ஆனால் அறுந்து தொங்கும்
சிறு தசைக் கோளத்தைப் பாட
யார் இருக்கிறார் நம்மோடு?

சற்று நேரத்தில்
இறந்த காலம் நுழைந்து விடும் எதிர்காலத்திற்குள்
எறும்புகளின் வழியே

தவிர சுவரில் அப்பியிருக்கும் மொட்டைப் பல்லிக்கு
சற்றுக் கவனப் பிசகு

இழந்து போன தன் வாலை விட
எதிரிலிருக்கும் ஈசல் பூச்சி மேல்தான்
முழுக்கவனமும் இப்போ

Poems by thanges தங்கேஸின் கவிதைகள்

தங்கேஸின் கவிதைகள்



கவிதை 1
அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்
ஓநாய்களை ஒளித்துவைத்திருக்கும் புன்னகைகளை
அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுவிட முடிவதில்லை இப்பொழுதெல்லாம்
அடிக்கடி இமைகள் இறங்கி கபட நாடகத்தை காட்டிக்கொடுக்கும் வரை
எலுமிச்சை பழம் போல அத்தனை பரிசுத்தமானது என்று தான்
நம்பிக்கொண்டிருந்தோம்
பச்சைப்பொய்களாய் உருண்டு கொண்டிருக்கும்
இரு விழிகளையும்
ஒலி பெருக்கியின் முன்னால் இரு கைகளையும்
அகல விரித்தபடி
நிற்கும் போது ஒரு ஏசுவோ ஒரு புத்தரோ
தோழர் மார்க்ஸோ மாவோவோ
அவதாரமெடுத்துப்போய்விடுகிறார்கள்
தலைக்குப்பின்னால் பளிச்சிடும் ஒளிவட்டத்தோடு
என் பெருமதிப்பிற்குரிய வெள்ளாடுகளே !
(எனக்கு அப்படித்தான் கேட்கிறது )
ஹ்ஹ்ம் ஹ்ஹ்ம் குரலில் ஒரு சின்ன கரகரப்பு
தொண்டையை சரிசெய்தாயிற்று
நீங்கள் ஆட்டுக்குட்டிகளை கண்டிருக்கிறீர்களா ?
அவைகளை பசுவின் புனித இடத்திற்கு
இனிமேல் உயர்த்திவிடுவோம்
அடுத்த முறையும் நாங்கள் ஆட்சியமைத்தால்
உங்கள் வங்கிக்கணக்குகளில் குறைந்தது
பதினைந்து ஆட்டுக்குட்டிகள் வரவு வைக்கப்படும்
அவைகள் பல்கிப்பெருகும் போது
ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் தனியாகவே
ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்படும்
அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்
பழகுவதற்கு

கவிதை 2
உன்னைப் பார்த்த நொடி கவிஞன இறந்து விடுகிறான்
துள்ளி விழுந்த மழலையை
குருதி தோய்ந்த உடலுடன் எடுத்து வந்தால்
கழுத்தை கட்டிக்கொண்டு தேம்புகிறது
பீப்பாய்களில் நிரம்பியிருக்கும்
நினைவு மதுவை ஒரு மிடறு
மொண்டு குடிக்கிறேன்
ஊழ்வினையாய் வந்து உறுத்தும்
இந்த இரவை கொண்டு விட
போதுமான போதையை தருகிறது
அதன் நெடி

கவிதை 3
மாய வசீகரம்
ஒரு மாயக்கரமொன்று மயிலிறகால் வருடுகிறது என்னை
மயங்கிச் சரிகிறேன் நான்
ஒரு மொட்டு துடித்து மடலவிழ
உள்ளிருந்து வருகிறேன் பொன் வண்டு அளவே
உள்ள நான்
என்னை கொத்தி தூக்கிச் செல்ல எத்தனிக்கும்
காக்கைச் சிறகினில் மறைந்து கொள்கிறேன்
வசதியாக
அதுவே எனக்கு போதுமான வானமாகிறது
கரும் வானத்திலிருந்து நழுவி விழுகிறேன்
எல்லையற்ற வெளியில்
ஒரு ஒற்றை இறகோடு சுழன்று சுழன்று
பூமியை நோக்கிப் பயணிக்க
அந்த ஒற்றை இறகு ஒரு பறவையாய் மாறி
என்னோடு உரையாடுகிறது
வார்த்தைகளற்ற மொழியில்
நடனமிடும் அணுக்கூட்டத்திற்குள் விழுகிறோம்
எண்ணிறந்த அணுக்களுக்குள்
அத்தனை உயிர்ப்போடு நடனமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
வெள்ளந்தியாய் அத்தனை கடவுள்கள்
என்னுடன் வந்த இறகு
எப்போதோ கடவுளாய் மாறியிருந்தது
கடவுள்களிடமிருந்து பிரிந்து வரவே
மனதில்லை எனக்கு
நாளையும் அலுவலகம் விடுமுறையாயிருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?
என்னுடன் வந்த இறகு போலவே
கொஞ்சநேரமாவது கடவுளாகியிருக்கலாம்

கவிதை 4
ஒரு சிட்டுக்குருவியின்
தலையணைக்கு
இலவம் பஞ்சு
உள்ளறைக்கு பதப்படுத்தப்பட்ட
வைக்கோல்
வாசலுக்கு சிறிது காய்ந்த சுள்ளிகள்
ஒரு வீட்டு முற்றமோ
சர விளக்கு தொங்க விடும்
இரும்பு கொக்கியோ
கொசுவலைக்குள் சாத்தியிருக்கும்
ஒரு சன்னல் கதவோ
சுருட்டப்பட்ட இரண்டு குரோட்டன்ஸ் இலைகளோ போதும்
அழியால் இரும்பு கம்பி கிராதிகள் இல்லை
சுற்றுச்சுவரில் உடைந்த பீங்கான் துண்டுகள் பதிக்கவில்லை
திண்டுக்கல் இரட்டைப் பூட்டுக்கள்
எதுவுமில்லை
வாஸ்து பார்க்கவில்லை
பூமி பூசை இல்லை
கடவுள் மனிதம் நம்பிக்கையில்லை
தொங்கும் தேனடை வடிவம்
மனதில் இருக்கும் கூட்டை
அது கட்டி முடித்துவிட்டது
தன்னியல்பில்

Poems by Thanges தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்



கவிதை 1

இரவில் கூடடையாத பறவைகள்
என் தலைக்குள் வந்தடைகின்றன
பறவைகளின் சப்தமென்பதும்
அதன் அன்றாட அங்கலாய்ப்புகளின்றி
வேறேது?

வானம் எத்தனை பெரியதாய்
இருந்தால் என்ன
அங்கே உறங்குவதற்கு ஒரு கிளையில்லையே

சிறகுகள் தான் பறவையென்றாலும்
கால்கள்  தானே பறவையின் இருப்பு
உறங்குவது போல் தான்
சாக்காடு என்றா லும்
நினைத்தால் உறங்கிவிட முடிகிறதா
அல்லது செத்துவிடவாவது?

இருப்பில் தகிக்கும்
அலகுகளின் துயரத்தை
முழு நீளப் பாடலாய் பாட முடியாதென்றாலும்
கீச்சுக் குரல்களால் கத்தி தீர்க்க முடிந்தால் போதாதா ?

கவிதை 2
யானை கருமையில் கூடுகட்டியிருந்தது
முரட்டு இருள்
வாசல் மஞ்சளரளியின் உச்சி இலையில்
காற்று சிறிது நெகிழ்த்த
இருளிலிருந்து பிரிந்த சிறிய இருள்
அசைந்து அசைந்து
ரீங்காரித்தது பூக்களைச்சுற்றி
வேளையற்ற வேளையில்
சமயமற்ற சமயத்தில்
சம்பந்தமற்ற இடத்தில்
அது கூடுகட்ட அனுமதி வாங்கியிருக்கும்
மரத்திடம் என்றாலும்
ஒட்டு மொத்த குரல்களுக்கும்
அது அத்துமீறல் என்றன  வீட்டில்
அசைவுறாது லாவகமாக  ஒடித்து
குப்பைத்தொட்டியில் வீசி வந்தேன்
இருள் பிரியாத  பச்சைக்கிளையை
கண் விழிக்கும் முன்பே  மகனின் குரல் ரீங்கரித்தது
அத்தனை உற்சாகமாய்
அப்பா அடுத்த கிளைக்கு வந்திருச்சு
கூடுகட்ட
அடுத்த கிளைக்கு அடுத்த  திட்டம்
அடுத்த கிளை காலி
மறுபடியும் கூடு முளைக்க அடுத்த கிளை
மரம் மூளியாக அற்புத யோசனை
போர்வையால் போர்த்தி தீப்பந்தம் மூட்டி
கிளைகளை வாட்டினேன்
தீயில் வெடித்த உடல்கள் டப் டப்பென்று சிதற
நாசியில் ஏறியது தேனோடு பச்சை உடல்கள் வாசனை
காலையில் வாசலில் கருஞ்சாம்பலை கூட்டி முடித்த
கையோடு அண்ணாந்து பார்க்க
கொசுவை விட கொஞ்சம் பெரிதான  குஞ்சுகள்
சுற்றி சுற்றி  வந்தன மொட்டை கிளைகளை
ஏறிட்டு நோக்க முகமின்றி
வீட்டிற்குள் வந்தேன் கதவு சாத்தி
ரீங்கரிக்க ஆரம்பித்து விட்டன
எண் திசையிலிருந்தும்
அமானுஷ்ய குரல்கள்
கவிதை 3: வானத்தை பரிசளிப்பது
பிறந்த நாளன்று யாழினிக்குட்டிக்கு ஒரு புதிய வானத்தை பரிசளிப்பதென உறுதியளித்திருந்தேன்
மகிழ்ச்சியில் குதுகலித்தவள்
அப்படியே
உறங்கத் தொடங்கியிருந்தாள்
வானத்தை எப்படி பரிசளிக்கப் போகிறீர்கள் என்று கேட்டாள்
மனைவி
தெரியவில்லை என்றேன்
கவலையுடன்
” இது கூடத் தெரியலை பாவம்” என்றாள்
வலது காலை மட்டும் அசைத்தபடி
குட்டி பாப்பா
திகைப்படங்கு முன்
” பாப்பாவ அப்படியே கண்ணை முடிக்கிட்டு
கையை நீட்ட சொல்லனும்”
ம்ம்ம் அப்புறம்
” அப்புறம் கை மேல வானத்தை வச்சிட்டு
கையை மடக்க சொல்லனும்”
ம்ம்ம். அப்புறம்
” இப்ப கண்ண திறக்கச் சொல்லனும் சரியா”
ஆனா  கண்ணைத் திறந்தா?
“ம்ம்… கண்ணை திறந்து பார்க்கும் போது
பாப்பா கையில ஒரு பேப்பர் நட்சத்திரத்தை
வச்சிட்டு
மேல பார்க்கனும் வானத்தை”
கவிதை 4: ஒரே ஒரு சொட்டு நீர்த்துளியாகி விட……..
இன்று உயிரிலிருந்து சுரக்கும் எனதன்பில்
உருண்டோடும் நதியாவேன்
உன் பாதங்களை நனைத்துப்போக
மரிய மக்தலேனாவின் கூந்தலை அலசிப்போக
பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும்
குட்டைகளில் ஒண்டித்தவிக்கும்
தவளைகளுக்கும்  தண்ணீர்பாம்புகளுக்கும்
ஞானஸ்நானம் தந்துவிட
குப்பைத்தொட்டியில் சுருண்டு கிடக்கும்
சதைக்கோளங்களுக்கு
எச்சில்கூட்டி விழுங்க
சிறு சாரலாகிவிட
மற்றும் ஒரே குடையின் கீழ்
அரசாளும் மகாராசாக்களுக்கு
தொண்டையில் இறங்காத உப்புகரிக்கும்
ஒரே ஒரு சொட்டு நீர்த்துளியாகி விட
தங்கேஸ் கவிதைகள்!!

தங்கேஸ் கவிதைகள்!!

கவிதை 1 என் வைரக் குவியல்களை யார் களவாடிப் போனார்களோ இந்நேரம்? சட்டை உரித்த பாம்பு போல் ஒரு கணம் மின்னி மறையும் இந்த மின்னற் கொடியிடம் என்ன விசாரிப்பது? தினவெடுத்த முகில்கள் மோதிக் கொள்ளும் மோதிக் களைத்த முகில்கள் சுருண்டு…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

  கவிதை 1 யாருக்காக என்று   சாலையோரத்து மரங்கள் நிற்பது தனக்காக என்று நினைப்பான் பயணி கிளைகளில் அமரும் பறவைகள் தமக்காக என்று நினைக்கும் நிழலுக்கு இளைப்பாறும் தெருநாய்கள் தமக்காகவே என்று நினைக்கும் தமக்கு எண்ணிக்கையில் ஒன்று அதிகம் என்று…