தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்: உறக்கமும் விழிப்பும்
தங்கேஸ் கவிதைகள்
கவிதை 1
***********
வெற்றிடங்களாகலாம்
தாய்மை கொப்புளிக்கும்
இரவின் மார்புக்காம்பிலிருந்து
உயிர் பெற
கொஞ்சம் கருணையை உறிஞ்சிக்கொள்ளும் பொருட்டு
எண்ணற்ற ஜீவன்கள் வாய்திறந்திருக்கின்றன
மீன்குஞ்சுகளாய்
நானோ தும்பை பூவாய் பூத்துக்கிடக்கும்
கீழ்வானத்தில் விழிகளை விட்டு விட்டு
வெறுமையாகவே திரும்பி வருகிறேன்
நிரப்பிக்கொள்ளத்தான்
நீ இருக்கிறாயே
இரவில் பகலையும்
பகலில் இரவையும்
மாறி மாறி இட்டு
நிரப்பிக்கொண்டிருக்கும்
இந்த விநோத பிரபஞ்சத்தில்
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
பரஸ்பரம் இட்டு நிரப்பிக்கொள்வத்ற்காகவே
நாம் வெற்றிடமாகலாம்
வா அன்பே !
கவிதை 2
***********
இருளும் வெளிச்சமும் கலந்து செய்த
கோட்டோவியமாய்
என் எதிரில் நீ நிற்பதும்
என் பிரமையோவென
நான் கிசு கிசுக்கத்தானோ ?
பேரன்பின் எல்லையற்ற வெளியில்
அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணமேயிருக்கின்றன
என்பதற்கு
இதைவிடவா வேறு சாட்சி வேண்டும் சொல் ?
கவிதை 3
************
தூர தூரங்களுக்கும் அப்பால்
திரும்பவே தோன்றாத பால் வீதியின்
பள்ளத்தாக்குகளை இட்டு நிரப்ப
விழிகளை மட்டுமே
கண்ணுக்குத் தெரியாத
தன் மாயக்கரம் ஒன்றினால்
கடத்திப் போய்க் கொண்டிருக்கும்
இன்றைய இரவுக்கும்
விழித்துக் கொண்டே
உடன் பயணிக்கும்
உன் நினைவுகளை மட்டும்
ஒன்றுமே செய்ய முடிவதில்லை
என் அன்பே
தங்கேஸ் கவிதைகள்
கவிதை 1
புல்லைப் போல வளர்கிறது
நம் நேசம்
கவனிப்பாரற்ற பசுமையை மாடுகளுக்கு அறுத்துப்போடுகிறான் இடையன்
நுனித்தளிரில் இடம்பிடிக்க வந்த பனித்துளிகள் வீணாக
மண்ணில் விழுந்து சாகின்றன
அசைபோடும் பசுக்களின் தாடைகளில் ஒட்டிக்கொண்டு
உறிஞ்சுகின்றன ஒட்டுண்ணிகள்
அவைகளோ காகங்களை வேண்டி
அழைக்க
சிங்கம் போல் வேட்டையாடும் காக்கைகள்
முதுகிலும் வாலிலும் அமர்ந்த படி
அதிர்ஷ்ட சவாரி செய்கின்றன
ஊரற்ற புற்களின் சுவைக்கு மதிமயங்கிய பசுக்களோ
காகங்களை மனதார துதிக்கின்றன
இவ்வண்ணம் காக்கைகள்
நம் நேசங்களுக்கு அதிபதியாகின்றன
கவிதை 2
சிறிய வெண் சங்குதான் வாசலில் தொங்குகிறது
கடலைச் சுமந்தபடி .
இரவானால் கொசுக்கள் உள்ளே அடைந்து கொள்ளும்
காதைப் பிளக்கும் ரீங்காரத்தில்
வேறு சப்தம் கேட்காது
நாட்பட நாட்பட
வெண் புள்ளிகள் மீது
ஒட்டடை வந்து படிந்து கொள்ளும்
சமயத்தில் குளவிகளின் வாசஸ்தலமாகி விடும்
பல காலமாய் கவனிப்பாரற்று கிடக்கும் அதனிடம்
காது கொடுத்தால் கிசுகிசுக்கும்
” இத்தனை காலம் தான் உயிர்த்திருப்பது
பழைய அலையின் சிறு தீண்டலுக்காகவே ” என்று …