கவிதை: பெரியம்மாக்களின் கதை – தங்கேஸ்
தங்கேஸின் நான்கு கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸின் கவிதைகள்
கவிதை 1
அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்
ஓநாய்களை ஒளித்துவைத்திருக்கும் புன்னகைகளை
அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுவிட முடிவதில்லை இப்பொழுதெல்லாம்
அடிக்கடி இமைகள் இறங்கி கபட நாடகத்தை காட்டிக்கொடுக்கும் வரை
எலுமிச்சை பழம் போல அத்தனை பரிசுத்தமானது என்று தான்
நம்பிக்கொண்டிருந்தோம்
பச்சைப்பொய்களாய் உருண்டு கொண்டிருக்கும்
இரு விழிகளையும்
ஒலி பெருக்கியின் முன்னால் இரு கைகளையும்
அகல விரித்தபடி
நிற்கும் போது ஒரு ஏசுவோ ஒரு புத்தரோ
தோழர் மார்க்ஸோ மாவோவோ
அவதாரமெடுத்துப்போய்விடுகிறார்கள்
தலைக்குப்பின்னால் பளிச்சிடும் ஒளிவட்டத்தோடு
என் பெருமதிப்பிற்குரிய வெள்ளாடுகளே !
(எனக்கு அப்படித்தான் கேட்கிறது )
ஹ்ஹ்ம் ஹ்ஹ்ம் குரலில் ஒரு சின்ன கரகரப்பு
தொண்டையை சரிசெய்தாயிற்று
நீங்கள் ஆட்டுக்குட்டிகளை கண்டிருக்கிறீர்களா ?
அவைகளை பசுவின் புனித இடத்திற்கு
இனிமேல் உயர்த்திவிடுவோம்
அடுத்த முறையும் நாங்கள் ஆட்சியமைத்தால்
உங்கள் வங்கிக்கணக்குகளில் குறைந்தது
பதினைந்து ஆட்டுக்குட்டிகள் வரவு வைக்கப்படும்
அவைகள் பல்கிப்பெருகும் போது
ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் தனியாகவே
ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்படும்
அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்
பழகுவதற்கு
கவிதை 2
உன்னைப் பார்த்த நொடி கவிஞன இறந்து விடுகிறான்
துள்ளி விழுந்த மழலையை
குருதி தோய்ந்த உடலுடன் எடுத்து வந்தால்
கழுத்தை கட்டிக்கொண்டு தேம்புகிறது
பீப்பாய்களில் நிரம்பியிருக்கும்
நினைவு மதுவை ஒரு மிடறு
மொண்டு குடிக்கிறேன்
ஊழ்வினையாய் வந்து உறுத்தும்
இந்த இரவை கொண்டு விட
போதுமான போதையை தருகிறது
அதன் நெடி
கவிதை 3
மாய வசீகரம்
ஒரு மாயக்கரமொன்று மயிலிறகால் வருடுகிறது என்னை
மயங்கிச் சரிகிறேன் நான்
ஒரு மொட்டு துடித்து மடலவிழ
உள்ளிருந்து வருகிறேன் பொன் வண்டு அளவே
உள்ள நான்
என்னை கொத்தி தூக்கிச் செல்ல எத்தனிக்கும்
காக்கைச் சிறகினில் மறைந்து கொள்கிறேன்
வசதியாக
அதுவே எனக்கு போதுமான வானமாகிறது
கரும் வானத்திலிருந்து நழுவி விழுகிறேன்
எல்லையற்ற வெளியில்
ஒரு ஒற்றை இறகோடு சுழன்று சுழன்று
பூமியை நோக்கிப் பயணிக்க
அந்த ஒற்றை இறகு ஒரு பறவையாய் மாறி
என்னோடு உரையாடுகிறது
வார்த்தைகளற்ற மொழியில்
நடனமிடும் அணுக்கூட்டத்திற்குள் விழுகிறோம்
எண்ணிறந்த அணுக்களுக்குள்
அத்தனை உயிர்ப்போடு நடனமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
வெள்ளந்தியாய் அத்தனை கடவுள்கள்
என்னுடன் வந்த இறகு
எப்போதோ கடவுளாய் மாறியிருந்தது
கடவுள்களிடமிருந்து பிரிந்து வரவே
மனதில்லை எனக்கு
நாளையும் அலுவலகம் விடுமுறையாயிருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?
என்னுடன் வந்த இறகு போலவே
கொஞ்சநேரமாவது கடவுளாகியிருக்கலாம்
கவிதை 4
ஒரு சிட்டுக்குருவியின்
தலையணைக்கு
இலவம் பஞ்சு
உள்ளறைக்கு பதப்படுத்தப்பட்ட
வைக்கோல்
வாசலுக்கு சிறிது காய்ந்த சுள்ளிகள்
ஒரு வீட்டு முற்றமோ
சர விளக்கு தொங்க விடும்
இரும்பு கொக்கியோ
கொசுவலைக்குள் சாத்தியிருக்கும்
ஒரு சன்னல் கதவோ
சுருட்டப்பட்ட இரண்டு குரோட்டன்ஸ் இலைகளோ போதும்
அழியால் இரும்பு கம்பி கிராதிகள் இல்லை
சுற்றுச்சுவரில் உடைந்த பீங்கான் துண்டுகள் பதிக்கவில்லை
திண்டுக்கல் இரட்டைப் பூட்டுக்கள்
எதுவுமில்லை
வாஸ்து பார்க்கவில்லை
பூமி பூசை இல்லை
கடவுள் மனிதம் நம்பிக்கையில்லை
தொங்கும் தேனடை வடிவம்
மனதில் இருக்கும் கூட்டை
அது கட்டி முடித்துவிட்டது
தன்னியல்பில்
தங்கேஸ் கவிதைகள்
இரவில் கூடடையாத பறவைகள்
என் தலைக்குள் வந்தடைகின்றன
பறவைகளின் சப்தமென்பதும்
அதன் அன்றாட அங்கலாய்ப்புகளின்றி
வேறேது?
வானம் எத்தனை பெரியதாய்
இருந்தால் என்ன
அங்கே உறங்குவதற்கு ஒரு கிளையில்லையே
சிறகுகள் தான் பறவையென்றாலும்
கால்கள் தானே பறவையின் இருப்பு
உறங்குவது போல் தான்
சாக்காடு என்றா லும்
நினைத்தால் உறங்கிவிட முடிகிறதா
அல்லது செத்துவிடவாவது?
இருப்பில் தகிக்கும்
அலகுகளின் துயரத்தை
முழு நீளப் பாடலாய் பாட முடியாதென்றாலும்
கீச்சுக் குரல்களால் கத்தி தீர்க்க முடிந்தால் போதாதா ?
முரட்டு இருள்
வாசல் மஞ்சளரளியின் உச்சி இலையில்
காற்று சிறிது நெகிழ்த்த
இருளிலிருந்து பிரிந்த சிறிய இருள்
அசைந்து அசைந்து
ரீங்காரித்தது பூக்களைச்சுற்றி
வேளையற்ற வேளையில்
சமயமற்ற சமயத்தில்
சம்பந்தமற்ற இடத்தில்
அது கூடுகட்ட அனுமதி வாங்கியிருக்கும்
மரத்திடம் என்றாலும்
ஒட்டு மொத்த குரல்களுக்கும்
அது அத்துமீறல் என்றன வீட்டில்
அசைவுறாது லாவகமாக ஒடித்து
குப்பைத்தொட்டியில் வீசி வந்தேன்
இருள் பிரியாத பச்சைக்கிளையை
கண் விழிக்கும் முன்பே மகனின் குரல் ரீங்கரித்தது
அத்தனை உற்சாகமாய்
அப்பா அடுத்த கிளைக்கு வந்திருச்சு
கூடுகட்ட
அடுத்த கிளைக்கு அடுத்த திட்டம்
அடுத்த கிளை காலி
மறுபடியும் கூடு முளைக்க அடுத்த கிளை
மரம் மூளியாக அற்புத யோசனை
போர்வையால் போர்த்தி தீப்பந்தம் மூட்டி
கிளைகளை வாட்டினேன்
தீயில் வெடித்த உடல்கள் டப் டப்பென்று சிதற
நாசியில் ஏறியது தேனோடு பச்சை உடல்கள் வாசனை
காலையில் வாசலில் கருஞ்சாம்பலை கூட்டி முடித்த
கையோடு அண்ணாந்து பார்க்க
கொசுவை விட கொஞ்சம் பெரிதான குஞ்சுகள்
சுற்றி சுற்றி வந்தன மொட்டை கிளைகளை
ஏறிட்டு நோக்க முகமின்றி
வீட்டிற்குள் வந்தேன் கதவு சாத்தி
ரீங்கரிக்க ஆரம்பித்து விட்டன
எண் திசையிலிருந்தும்
அமானுஷ்ய குரல்கள்
மகிழ்ச்சியில் குதுகலித்தவள்
அப்படியே
உறங்கத் தொடங்கியிருந்தாள்
வானத்தை எப்படி பரிசளிக்கப் போகிறீர்கள் என்று கேட்டாள்
மனைவி
தெரியவில்லை என்றேன்
கவலையுடன்
” இது கூடத் தெரியலை பாவம்” என்றாள்
வலது காலை மட்டும் அசைத்தபடி
குட்டி பாப்பா
திகைப்படங்கு முன்
” பாப்பாவ அப்படியே கண்ணை முடிக்கிட்டு
கையை நீட்ட சொல்லனும்”
ம்ம்ம் அப்புறம்
” அப்புறம் கை மேல வானத்தை வச்சிட்டு
கையை மடக்க சொல்லனும்”
ம்ம்ம். அப்புறம்
” இப்ப கண்ண திறக்கச் சொல்லனும் சரியா”
ஆனா கண்ணைத் திறந்தா?
“ம்ம்… கண்ணை திறந்து பார்க்கும் போது
பாப்பா கையில ஒரு பேப்பர் நட்சத்திரத்தை
வச்சிட்டு
மேல பார்க்கனும் வானத்தை”
உருண்டோடும் நதியாவேன்
உன் பாதங்களை நனைத்துப்போக
மரிய மக்தலேனாவின் கூந்தலை அலசிப்போக
பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும்
குட்டைகளில் ஒண்டித்தவிக்கும்
தவளைகளுக்கும் தண்ணீர்பாம்புகளுக்கும்
ஞானஸ்நானம் தந்துவிட
குப்பைத்தொட்டியில் சுருண்டு கிடக்கும்
சதைக்கோளங்களுக்கு
எச்சில்கூட்டி விழுங்க
சிறு சாரலாகிவிட
மற்றும் ஒரே குடையின் கீழ்
அரசாளும் மகாராசாக்களுக்கு
தொண்டையில் இறங்காத உப்புகரிக்கும்
ஒரே ஒரு சொட்டு நீர்த்துளியாகி விட
தங்கேஸின் நான்கு கவிதைகள்
கவிதை 1
மசக்கை நிலா
சாம்பலில் புரளும் நேரம்
என் தேநீர்க் கோப்பையில்
நீலவானம் பனித்துண்டாக
மிதக்கிறது
காலத்தை ஒரு மிடறு உறிஞ்சிக் குடிக்கிறேன்
இரவு என்பது
ஒரு காக்கை இறகு
பிழையறியும் நெஞ்சங்களின்
இரகசியக் கருவறை
காலை என்றால் சூரியனை
செவ்வந்திப் பூவாகப் பறித்து
நீ சூடிக் கொள்ளலாம்
தளும்பத் தளும்ப தண்ணீர்க் குடத்துக்குள்ளும்
இட்டு வரலாம்
ஆனால் கரிய இரவை என் செய்வாய் ?
சாத்தானும் கடவுளும்
விடிய விடிய கண்ணாமூச்சி ஆடி
ஒய்ந்த பின்
ஆளுக்கொரு விழியில் விழுந்து
குறட்டை விடும் நேரம்
இரகசியமாக எடுத்து
உன் கூந்தலில்
சொருகிக் கொள் சகியே!
கவிதை 2
ஏதுமற்றவனாய் போனேன் ஒரு வெற்றிரவில்
நிலவு சட்டென்று இறங்கிவந்து
கண்ணீரைத் துடைத்துப்போனது
வடமேற்கில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த
கிழட்டு நட்சத்திரம் ஒன்று
காற்றில் பிடியை உதிர்த்தது ஆற்றாமையில்
இரண்டு மேகங்களுக்கு இடையிலிருந்து
இறங்கிவந்த முதியவர்
குருதிவழியும் என் இதயத்தை
தன் கைகளில் எடுத்து முத்தமிட்டு
‘’ இது ஒரு கணம் அன்பிற்குரிய வசிப்பிடமாய் இருந்தது ‘’
என்று சொல்லிவிட்டு மறைந்தார்
கவிதை 3
இந்தப் புல்லாங்குழலின்
அத்தனைத் துளைகளையும் அடைத்து
இசையின் மூச்சை
நிறுத்திவிடத் துடிக்கும் நீதானா
அன்று உன் சுவாசமாய் இருப்பேன்
என்று சொன்னவனும் ?
கவிதை 4
நடுநிசியில் முன் தோன்றிய கடவுள்
என் விரல்களைப் பிரியமாகப் பிடித்த படி
வெறும் விரல்கள் அல்ல இவை
பிரபஞ்சத்தின் திறவுகோல்கள்
என்று சொல்லி விட்டு மறைந்தார்
அந்நேரம்
வாசல் செம்பருத்தியில் வண்டுகளின் பிதற்றல்கள்
சிலிர்ப்படங்காமல்
செம்பருத்தியிடம் சென்றேன்
கூம்பிப் போன மொட்டான்றை
விரல்களால் தொட்டேன்
உள்ளே சாவி போட்டது போல்
சடக்கென்று திறந்து
கொண்டது
இப்போது
மொட்டுக்களைச் சுற்றி
பிதற்றிக் கொண்டிருந்த கருவண்டுகளெல்லாம்
என் விரல்களைச் சுற்றி
ரீங்காரமிட ஆரம்பித்திருந்தன
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
தங்கேஸின் மூன்று கவிதைகள்
கவிதை 1
வாசற்கதவை முகத்தில் அறைந்து சாத்துகிறது வாழ்க்கை
வறுமைமுகத்தில் படர
உடலை இலக்கற்று
சுமந்து போகின்றன கால்கள்
ஒரு கைபிடி அளவு
கடுகு பெற்றவள்
அது மரணம்நிகழாத
வீடு தானாவென்று ஐயம் கேட்கிறாள்
இல்லை என்றானதும் கைநிறைந்திருக்கும் கடுகை
விசிறித் தெருவில் இறைக்கிறாள்
இப்பொழுது கடுகுகள்
மரணம் நிகழாத
ஒரு வீட்டை நோக்கி
தெருவெங்கும் உருண்டோடிக்
கொண்டிருக்கின்றன
கவிதை 2
மதில் மேல் பூனை
மறுகி நிற்கிறது
மாலைப்பொழுது
மறுபுறம்
இருளின் கருப்பையாக பூமி
திறந்து கொள்கிறது
துக்கத்தின் கருமையிலிருந்து
தப்பிச் செல்ல
சின்னஞ்சிறு பறவையின் அலகுக்குள்
சிறுதானியமாக நுழைகிறேன்
ஒரு விரும்பத்தகா உயிரியாக
இந்த உலகை ஏளனம் செய்யும்
இந்த நிலவின் ஒளியிலிருந்து
தப்பி விட
அந்தரத்தில் எழுப்பி எழும்பி
தலைகீழாய் குதிக்கும் மனசாட்சியை
எந்த வாய்க்குள் அடைப்பது?
இரவுப் பூச்சிகளின் ரீங்காரமோ
தங்கள் பங்குக்கு
இரத்த தீற்றல்கள் மீது
குளிர்ந்த நீரைக் கொட்டிப் போகின்றன.
பெருந் தெய்வங்களும்
சிறுதெய்வங்களும்
கலந்திடாத
ஒரே ஒரு தூய கணத்தை
கண நேரம் எட்டி விட்டால்
கூடப் போதும்
களங்கமற்ற என் நதியில் மூழ்கி
மீட்சிமை பெற்று எழுந்து விடுவேன்
பிறகு கை நிறைய நுரைப் பூக்களை அள்ளி அள்ளி
இந்த இரவின் மீது தெளித்து விளையாடுவேன்
கவிதை 3
சிறு சிறு தூறல்களின் வழி இறங்கி வருகிறது
ஒரு பெரும் மழைக்காலம்
சில் வண்டாக இந்த நகரத்தில்
அடர் கூந்தலை விரிக்கிறாள்
நித்திய கன்னி ஒருத்தி
தரை தொட்டு புரள்கிறது தாரகைகளாக
சன்னல் வழி விரல் நீட்டும்
என் செல்ல மகளின் உள்ளங்கையில்
திரு திருவென முழிக்கும் ஒரு மொக்கு
ஒரு துளியோடு ஜனித்து
தெருவில் புரளும் அழுக்கோடு குதித்து
வீதி வரை ஓடோடி விட்டு வந்து
மறுபடியும் அடுத்த துளிக்குள் புக
காத்திருக்கும் இந்த கவிதை உயிரணுவாக
அன்றிலிருந்து இன்று வரை
இன்னும் எத்தனை காலமோ ?
வயிறு முட்ட கள் குடித்து வரும் கூடாண்டி தாத்தா
வயல் வழி லம்பி லம்பி வருகையில்
வழி நெடுக வசவுகளால் சபித்துக்கொண்டே வருகிறார்
போதையை தெளிய வைத்த உச்சி மழைக்கு
நச நசத்து கொண்டிருந்த ஒரு ஈர நாளில்
பாம்பில் நாயக்கரின் பம்பு செட்டு ரூமுக்குள்
பார்த்த நான்கு லஜ்ஜையற்ற கால்கள்
இன்னும் அப்படியே அப்பியிருக்கிறது
பால்யத்தின் கண்களில்
வயலுக்குப்போய் திரும்பும் பெண்கள்
உச்சித்தூறலுக்கு முந்தானையை
தலைக்குப்போர்த்துவது
சும்மாவாச்சும்
செல்லமாய் நனைவதற்குத் தானே
ஒரு மழைநாள் ஒன்றில் தானே
ஊரில் பெரியமாரி பெரியய்யா
வீட்டுச்சண்டைக்கு ரோக்கர் மருந்தை
குடித்து விட்டு
ரெட்டைப்புளிய மரத்தினடியில்
வாயில் நுரை தள்ள படுத்துக் கிடந்தது
இதே மழை விட்ட முன் சாமமொன்றில் தான்
சாவடிக்கு முன்னால்
புருசன் ‘பலவற்றை’ என்று கேட்டஒரு வார்த்தைக்கு
பழைய சுளகில் அப்பி வைத்திருந்த
அய்யாரெட்டு சிவப்பரிசி சோறை
ஒரு கவளம் பிசைந்து கையில் வைத்துக்கொண்டிருந்தவள்
குளிரில் ஒடுங்கிப்போய் வாலை பின்னங்கால்களுக்குள்
ஒடுக்கி வைத்துக்கொண்டு
கடவாயில் எச்சில் வடியப் பார்த்துக்கொண்டிருந்த
ஊர் நாய்க்கு மொத்தத்தையும் வைத்து விட்டு
ஓடிப்போய் ஊர் கிணற்றில் விழுந்து
செத்துப்போனாள்
எங்க வடிவு அக்கா
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
தங்கேஸின் மூன்று கவிதைகள்
கவிதை 1
தெருவில் நிறுத்தியிருக்கும் ஆட்டோக்கள்
சிறு மதுபானக் கூடமாக மாறும் போது
புளித்துப் பொங்கும் காடி நெடி நாசியை நிறைக்கிறது
சாதி செத்து சுண்ணாம்பாக மிதந்து கொண்டிருக்கும் நேரம் இது தான்
கீழடிக்குள்ளிருந்து இரகசியமாக முளைத்தெழுகிறான் டாஸ்மாக் தமிழன்
” சட்டம் ஒழுங்கையெல்லாம் அவரே பார்த்துக்கிடுவாரு”
நீங்கள் எழுந்து மூன்று முறை கை தட்டுங்கள்
அதில் ஒட்டியிருக்கும் மிச்ச சொச்சங்களும் அப்படியே
உதிர்ந்து போகட்டும்
கவிதை 2
உங்களுக்கு ஒரு குட்டிக் கதை
ஒரு பேரரசர்
கைகளை ஆவேசமாக வீசி வீசி
எப்போதும் ஆணையிடுவார்
நாற்பது சிற்றரசர்கள் எப்போதும்
கப்பம் கட்ட வேண்டும்
அவர் கண்களில் கருணை தோன்ற
எப்பொழுதாவது புன்னகையோடு
அவர்களிடம் அளவளாவுவார்
இனி அடுத்த வாய்ப்ப்பு தான்
கத்துவதால் பயனில்லை
டப்புக்கு நாங்க இருக்கோம்
திரை செலுத்தி திரை செலுத்தி
நுரைதள்ளிவிடும் குடிமக்களுக்கு
மாண்பு மிகுக்கள்
மாற்று சகாயம் செய்வார்கள்
டாஸ்மாக் போ
இப்போ நீயும் அரசு ஊழியன் தான்
கடமையை செய் பலனை
எதிர்பார்க்காதே
தாலி அடகு கடை
நவீன சேட்டுகளுக்கு கொண்டாட்டம்
உரசிப் பாருங்கடா
எங்களை உரசிப் பாருங்கடா
“சலாம் அலைக்கும்”
காஜானா காலி”
எங்களுக்குத் தெரியாதா?
வெள்ள அறிக்கை
வெள்ளை அறிக்கை
எதை வாசிச்சா என்னா?
சேட்ஜி சொல்றான்
“நம்பள்கு உருப்படியா நாலு சுலோகத்தை சொல்லிட்டுப் போ”
கவிதை 3
ஒரு இட்லிக்குள்ள.
கருங்கல்லு கணக்கா
உருண்டுக்கிட்டிருக்கு ஜிஎஸ்டி
ஒரு கப் காபி சார்?
சுடுதண்ணீர் போதும்
அதுக்குத்தான் வரி கிடையாது
வீட்டு வாடகை பாக்கி
கரண்டு பில்லு பாக்கி
பலசரக்குக்கு பாக்கி
பால்காரனுக்கு பாக்கி
கேபிள் டிவிக்கு
வெத்தலை பாக்குக்கும் பாக்கி
பாக்கி பாக்கி எல்லாம் பாக்கி
இனி ஒன்னும் கிடையாது
நீ மட்டும் தான் டா பாக்கி
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்