கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: தந்திரங்கள் 33 – நா.வே.அருள்
தந்திரங்கள்
*****************
மகாத்மா காந்தியின் மார்பில்
குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை
இன்னும் சொல்லப் போனால்
எப்படி இறந்து போனார் என்பதை
மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும்.
காந்தி பயன்படுத்திய
ஒவ்வொரு பொருளும்
காட்சிக்கு வைக்கப்படுகிற அதே அரங்கத்தில்
அவர் ஒரு விநோதமான ஏலப்பொருளாகிவிட்டார்.
எல்லாவற்றையும் விட
மகாத்மா காந்தியின் உருவப் படத்தில்
வேறொரு பிம்பத்தைச் செருகுவது
ஒரு தந்திரமான கலை.
ஒரு கழிவறையில் வெளித்தள்ளப்படும்
கழிவுகளைப் போல
மகாத்மாவின் நினைவுகள்
மக்களின் மனங்களிலிருந்து
அகற்றிச் சுத்தம் செய்யப்படுகின்றன.
மகாத்மாவின் பிரார்த்தனை உன்னதமானது
அது ஒரு விவசாயியை பிரதமராக்கும்
தூய்மை வாய்ந்தது.
பாராளுமன்றப் பாசனத்திற்கு
ஒரு விவசாயியைத்தான் விரும்பினார்.
இது நம்பிக்கைத் துரோகிகளின் காலம்
விவசாயி என்கிற வார்த்தையை மறந்துபோன
மூளைதான் அரசாங்க நாற்காலியின் காட்சிப்பொருள்
தலைநகரமே மரண பஜனைக்குத் தயாராகிவிட்டது
மகாத்மாவின் கனவுப் பிரதமர்களைக்
குறிபார்த்துக் கொண்டேயிருக்கின்றன
கோட்சேக்களின் குண்டுகள்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்