That one day Short Story by Se Subasri செ.சுபாஸ்ரீயின் அந்த ஒரு நாள் குறுங்கதை

அந்த ஒரு நாள் குறுங்கதை – செ.சுபாஸ்ரீ



அவளைச் சுற்றி மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. அதிகாலை இரண்டு மணி என்று கடிகாரம் காட்டி கொண்டிருந்தது. அவளால் நடந்ததை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏன்?? நடந்தது கனவா என்று கூட தோன்றியது.

தன் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த மூன்று வயது மகளைப் பார்த்தாள். தன்னை மீறி கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, அதைத் துடைக்கக் கூட முடியாமல் செய்வதறியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
நடுத்தர குடும்பம் எனினும் வீட்டுப் பத்திரத்தை வங்கியில் வைத்து அப்பா, அம்மா எவ்வளவு விமர்சையாய் கல்யாணம் முடித்து வைத்தார்கள், திருமணம் முடிந்து முழுதாய் ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் சின்னச் சின்ன காரணங்களைக் கடிதத்தில் எழுதி வைத்து விட்டுத் தன் மீது நியாயப்படுத்திக் கொண்டு கணவன் எங்கோ சென்று விட்டான் என்பதை இன்னமும் அவள் மனம் ஏற்கவில்லை. அம்மா, அப்பா எப்படி தாங்கி கொள்வார்கள்! இந்த நிமிடமே இறந்துவிடலாம் போல் தோன்றியது.

தன் பக்கத்தில் உள்ள குழந்தையைப் பார்த்தாள் இவள் என்ன பாவம் செய்தால், தாய், தந்தையின்றி அனாதையாய் இந்த சமூகத்தில் வாழ வேண்டுமா என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டாள்

எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்தோம் என்று அவளுக்கே தெரியவில்லை. இருள் விலகி மெல்ல வெளிச்சம் படரத் தொடங்கியது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்தாள்.
வெளியில் சென்று வாசல் பெருக்கிக் கோலம் போட்டுவிட்டுக் குழந்தைக்காகப் பால் வாங்கி வந்து காய்ச்சி வைத்து விட்டு, கள்ளம் கபடமின்றி தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தைப் பார்த்து சொன்னாள், உனக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன் என்று.!..