Co-leadership of the Communist Movement (Individual, Project, Philosophy) Web series by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்




கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளும், விவாதங்களும் தனித்துவமானவை என்கிறபோது இரண்டு பொதுவான கேள்விகள் எழுகின்றன.
1) திறன் மிக்க தலைவர்களையும், அவர்களின் பங்களிப்பையும் எப்படி வகைப்படுத்துவது?
2) கூட்டாக முடிவுகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைவது எது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டம் உருவான பின்னணி என்ற நூலில், எம்.பசவபுன்னையா ஒரு மாறுபட்ட சூழ்நிலையை முன்வைத்திருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் உறுப்பினராக வேண்டும் என்றால் அவர் ஆணோ, பெண்ணோ “முதலில் கட்சியின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இரண்டாவதாக கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். – இந்த வரலாற்றின் விசித்திரமான ஒரு விசயம் என்னவென்றால் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் அதற்கென்று ஒரு திட்டமோ, அமைப்புச் சட்டமோ, சில சமயங்களில் இவை இரண்டுமே இல்லாமல் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தார்கள்”

செயல் திட்டத்திற்கான போராட்டம்:
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவான பின்னணியையே இயக்கவியல் அடிப்படையில்தான் பார்க்க முடியும் என்பதை பசவபுன்னையாவின் எழுத்துக்கள் உணர்த்தின. முதலில் அவர் குறிப்பிட்ட சில முக்கியமான விபரங்களை பார்ப்போம்.

· 1920 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவானது.
· 1928 ஆம் ஆண்டில் ‘செயல் தளத்திற்கான வரைவு’ அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வப்போது வெளியிடப்பட்ட அரசியல் தீர்மானங்களும், கொள்கை அறிக்கைகளும் கட்சிக்கு வழிகாட்டிவந்தன.
· கட்சி தடை செய்யப்பட்ட சூழல்களில் கட்சியின் கீழ்மட்ட மாநாடுகளோ அகில இந்திய மாநாடுகளோ கூட முடியவில்லை. (1936-39) கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் மத்திய குழுவும் செயல்பட்டன – கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாடு கூட முடியவில்லை.
· 1942ம் ஆண்டில்தான் கட்சி மீதான தடை விலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து – ஒரே ஆண்டுக்குள் – 1943 மே மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு பம்பாய் நகரில் கூடியது.
· 1951 ஆம் ஆண்டில், கட்சி திட்டத்திற்கான நகல் உருவாக்கப்பட்டு சுற்றுக்குவிடப்பட்டது.
· 1953 ஆம் ஆண்டு நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்பட்டு அந்த திட்டத்தை ஏற்று செயல்படுத்தினார்கள். ஆனால்
· 1955 ஆம் ஆண்டில் அந்த திட்டத்தின் பொருத்தப்பாடு விவாதத்திற்கு உள்ளாகியது.
· 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது அகில இந்திய மாநாட்டில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதென்று முடிவு எடுக்கப்பட்டது.
· 1964 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவாக்கப்பட்டது.

மேற்சொன்ன விபரங்களை மட்டும் தனியாக பார்க்க முடியாது. இத்தனை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அளப்பறிய தியாகங்களைச் செய்து முன்னேறியும் வந்தது.

வரலாற்றுச் சுவடுகள்:
1920களில் கம்யூனிஸ்டுகளின் கடும் உழைப்பால் தொழிற்சங்கங்கள் உருவாகின. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் என போராட்டங்கள் 1928-29 காலகட்டத்தில் அலையாக எழுந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியின் சதி வழக்குகளின் மேடைகளை தங்கள் பிரச்சார மேடையாக மாற்றிக் கொண்டு கம்யூனிஸ்டுகள் துணிச்சலுடன் இயங்கினார்கள். கட்சி தடை செய்யப்பட்டது.

1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். ஊரகப் பகுதிகளில் நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது (1936). இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.

1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள்.

தெபாகா எழுச்சி, புன்னப்புரா வயலார், தெலங்கானா ஆயுதப் போராட்டம் ஆகிய வரலாறுகள் அளவிலடங்கா தியாகங்களின் வெளிப்பாடுகளாக அமைந்தன. 1957 ஆம் ஆண்டில், தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அமைச்சரவை பொருப்பேற்றது.

லெனினின் வழிகாட்டுதல்:
இந்தியா உள்ளிட்ட காலனி ஆதிக்க நாடுகளில் நடக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து, லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் அகிலம் நடத்திய விவாதங்களும், முன்வைத்த வழிகாட்டுதல்களும்தான் அந்த காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக அமைந்தன. இ.எம்.எஸ் அதனை குறிப்பிடுகிறார், “லெனின் தலைமையிலிருந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமை பின்வரும் மூன்று முடிவுகளுக்கு வந்தது.

மூன்று முக்கிய முடிவுகள்
முதலாவதாக-இந்தியா, சீனா உள்ளிட்ட கீழை நாடுகளில் உள்ள முக்கியமான உடனடிப் பணி என்பது ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் என முடிவு செய்யப்பட்டது. எனவே தேசிய முதலாளிகளுக்கும் ஒரு பங்குள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியாக வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவதாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்த இயக்கத்தில் பிரதானமான முக்கிய சக்தி விவசாயிகள்தான்…எனவே விவசாயிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே ஒரு உறுதியான கூட்டை உருவாக்கினால் மட்டுமே தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளிடையே உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரிவினருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இதைப் புரிந்து கொள்ளாமல், விவசாயிகளின் புரட்சி பற்றிய தொலைநோக்கு இல்லாமல், முதலாளிகளுடன் ஒரு கூட்டினை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் சந்தர்ப்பவாதத்துக்கே இட்டுச் செல்லும்…

மூன்றாவதாக இந்தியா முதலான கீழை நாடுகளில் தொழிலாளி வர்க்கம் ஒரு பலவீனமான சமுதாய சக்திதான். எனினும், இருக்கக்கூடிய தொழிலாளி வர்க்க ஊழியர்களும், தேசிய புரட்சிக்காரர்களின் முன்னணிப் படையினரும் உள்ளிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டும்…“

தனிநபர்களின் பாத்திரம்:
மார்க்சிய தத்துவத்திலும், உழைக்கும் மக்களின் விடுதலையின் மீதும் மாறாப் பற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகள் – தத்துவத்தின் மனித வடிவங்களாக இயங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாற்றின் வளர்ச்சி விதிகள் மனிதர்களின் ஊடாகத்தான் செயல்படுகின்றன. எனவே, தனிச் சிறப்பான தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களுக்கு வழிகாட்டி இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.

அதே சமயம் அந்த தலைவர்கள், கட்சி திட்டத்திற்கான அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். அந்த போராட்டத்தின் விளைவாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவானது. திட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, வரலாற்றின் வளர்ச்சிப் போக்குக்கு ஏற்ப அதனை அமலாக்கும் பணிகளில், தனித்துவம் மிக்க தலைவர்களின் பாத்திரம் தொடர்ந்து வெளிப்பட்டது.

கூட்டான முடிவுகளுக்கு அடிப்படை:
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமும், அமைப்புச் சட்டமும் கூட்டான முடிவுகளை மேற்கொள்வதற்கான அடிப்படையான ஆவணங்கள் ஆகும்.

கட்சியின் திட்டம் என்பது, ஒரு நாட்டின் புரட்சிப் போராட்டம் எந்தக் கட்டத்தில் உள்ளது, அதன் தன்மை எப்படி அமைய வேண்டும் என்பதை தெளிவாக்க வேண்டும். இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கட்டத்தை நாம் கடந்துவிட்டோம். இப்போது மக்கள் ஜனநாயக புரட்சி என்ற கட்டத்திற்கு வந்துள்ளோம். மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க தேவையான அணிச் சேர்க்கை எது என்பதையும், யாருக்கு எதிரான போராட்டமாக இது அமையும் என்பதையும் கட்சியின் திட்டம் விளக்குகிறது. அதாவது கட்சி திட்டம் முன்வைப்பது இந்த வரலாற்று காலகட்டத்திற்கான இலக்கு ஆகும்.

அந்த இலக்கை நோக்கிய பயணம் ஒரே நேர்கோட்டுப் பாதையாக அமையாது. அதனால்தான் “மார்க்சிய லெனினிய சிந்தனைகளால் வழிநாடத்தப்படுகிற, பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர கட்சி … குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆழமான தன்மைகளை கூர்ந்து ஆராய்வதன் அடிப்படையில் தனது பிரச்சாரத்தையும், போராட்ட முழக்கங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் தோழர் பசவபுன்னையா. புரட்சிக்கான எழுச்சி அல்லது தளர்ச்சிக்கு ஏற்றபடி நமது அணுகுமுறைகளை தீர்மானிப்பதுதான் உத்தி (tactics) என்கிறார் அவர். எனவே, உத்திகள் அவ்வப்போது மாறும், அது இலக்கை நோக்கியதாக அமைந்திடும்.

எனவே, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு திட்ட ஆவணமே வழிகாட்டியாக உள்ளது. மார்க்சிய – லெனினிய தத்துவ தெளிவோடு அந்த திட்டத்தை முன்னெடுக்கும் தரமான உறுப்பினர்களும், தனித்துவமான தலைவர்களும், கூட்டுத் தலைமையின் பிரிக்க முடியாத அங்கங்களாக, புரட்சிகர இயக்கத்தை வழிநடத்துகிறார்கள்.

முந்தைய தொடரை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement Web series by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்




‘தனி நபர்கள் அல்ல கட்சியே முதன்மையானது’ என்பதை வலியுறுத்தி ஒரு மூத்த தோழரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ‘கட்சி என்பது என்ன? அதைக் காட்ட முடியுமா?’ என்ற ஒரு எளிய கேள்வியின் மூலம் எனது சிந்தனையை தூண்டிவிட்டார்.

நானும் அவரிடம், ‘நானும் நீங்களும் கூட்டாக இயங்கும்போது, அது அமைப்பு. நான், நீங்கள் என்ற அகந்தையோடு மோதிக்கொண்டால், தனி நபர்கள்’ என்று சமாளிப்பாக ஒரு பதிலைச் சொல்லி வைத்தேன். உண்மையில் அதுவும் சரியான பதில் அல்ல.

கொள்கையால் இணைந்த தனிநபர்கள்:
சமீபத்தில் தோழர் குமரேசன் (மூத்த பத்திரிக்கையாளர்), கம்யூனிஸ்ட் மாநாடுகள் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு பரவலாக பகிரப்பட்டது. அதில், கட்சி கூட்டத்தில் பங்கெடுக்கும் ஒரு இளம் தோழர், மூத்த தோழர்களிடையிலான வாக்குவாதத்தை பார்த்து அதிர்ந்து போவார். பிறகு கிளை கூட்டத்தை தாண்டி அந்த வாக்குவாதம் தொடராது என்பதையும், மிக இயல்பாகவும் தோழமையுடனும் அவர்கள் நடந்துகொள்வதை குறிப்பிட்டிருந்தார். பலரும் அதை பெருமையோடு பகிர்ந்திருந்தார்கள். எனவே நான் முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் பங்கேற்று வந்திருந்த சக இளம் தோழர்களிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தேன், அதில் வேறு ஒரு பதில் கிடைத்தது.

நாம் தனிப்பட்ட நபர்களாகத்தான் நாம் சமூகத்தில் இயங்குகிறோம். பொதுவாக பிற கட்சிகள் என்று வரும்போது, அவர்கள் வசதிக்கு தக்க திரட்டுகிறார்கள். எனவே, முதலாளித்துவ கட்சிகள் தங்கள் உண்மையான இலக்குகளை மறைத்த முலாம் பூச்சு வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கோ, பிற கட்சிகளின் முலாம் பூச்சை நீக்குவதுடன், தனி நபர்களை கூட்டு முடிவுக்கு உட்படுத்துவதும், கூட்டு முடிவுகளில் பங்கேற்கச் செய்வதும் நிபந்தனையாகிவிடுகிறது.

அந்த இளம் தோழர்கள் சொன்னார்கள், ‘நாங்கள் எங்கள் பலவீனங்களை இன்னொருவரின் பலம் கொண்டு சரிப்படுத்துகிறோம். காழ்ப்புணர்ச்சியை அகற்றிவிட்டு, விமர்சனங்களை கூர்தீட்டுவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் கூட்டாக இயங்குவது எப்படி என்பதை கிளை மாநாட்டின் முடிவில் கற்றுக் கொண்டோம்’

தோழர்களும், தலைவர்களும்:
நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு முன்பாகவே, எங்கள் பகுதியில் வசித்துவந்த தொழிலாளர்களிடம் பேசும்போது, ‘கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்பது, நாம் வாழும் சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டிய கடமையை கொண்டுவருகிறது. எனவே, தோழர்கள் என்பவர்கள் ‘புரட்சியின் தலைவர்கள்’. கட்சியில் நாம் பார்க்கும் ‘தலைவர்கள்’ என்போர் உண்மையான பொருளில் ‘பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட’ தோழர்களே’ – என்பார்கள். எனக்கு அதற்கான பொருளும் கூட அப்போதைக்கு முழுமையாக புரிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.

பின்னர் தோழர் இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாட் (இ.எம்.எஸ்) எழுதிய ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்ற ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் அவர் பொதுவான பத்திரிக்கைகள் எழுதும் ‘கிசுகிசுக்களுக்கு’ பதில் சொல்கிற விதமாக – கம்யூனிஸ்ட் இயக்கம் இயங்கும் முறையை விளக்கியிருந்தார்.

“கட்சி மேலிடத்தலைவர்கள் கீழ் மட்டத் தலைவர்களை நியமிப்பது என்கிற வழக்கம் இந்தக் கட்சியில் கிடையாது. கீழ்மட்டக் கிளையிலிருந்து சகல மட்டங்களிலும் மாநாடுகள் நடக்கின்றன. கிளை மாநாடுகளில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். கடந்த மாநாட்டிலிருந்து நடப்பு மாநாடு வரையிலான செயல்பாடுகள் குறித்து விமர்சன – சுயவிமர்சன அடிப்படையில் விவாதிக்கிறார்கள். கிளைக்கான புதிய குழுவையும், அடுத்த உயர்நிலை மாநாட்டிற்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பதோடு கிளை மாநாடு முடிகிறது.”

எனவே, கம்யூனிஸ்ட் கட்சி என்றால், அமைப்பாக இயங்கக் கூடிய தோழர்களின் தொகுப்புதான். அவர்கள் தன்னை மட்டும் மையப்படுத்தி செயல்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட விசயத்தை விவாதிக்கிறார்கள், பின் முடிவுகளை மேற்கொண்டு அவைகளை செயல்படுத்துகிறார்கள், பிறகு அந்த செயல்பாடுகளைக் குறித்து பரிசீலனை செய்கிறார்கள். வெற்றியோ, தோல்வியோ எல்லாவற்றில் இருந்தும் கற்றுக்கொண்டு அடுத்த பணிகளுக்குச் செல்கிறார்கள்.  தலைவர்களே இல்லை என்பதல்ல கம்யூனிஸ்ட் அமைப்பின் மையச் சரடு. மாறாக, கூட்டுச் செயல்பாடு – சரியாகச் சொன்னால் ‘கூட்டுத் தலைமை’.

நபர்களும், கொள்கைத் திசையும் :
இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் பல மட்டங்களில் கிளை மாநாடுகள் முடிந்து, பகுதிக்குழு அல்லது ஒன்றிய/நகரக் குழு மாநாடுகள் நடந்துவருகின்றன. சில மாவட்டங்களில், மாவட்டக் குழு மாநாடுகள் முடிந்துவிட்டன. இன்னும் சில மாதங்களில் கட்சியின் மாநில மாநாடும், அகில இந்திய மாநாடும் நடக்கவிருக்கிறது.

கூட்டுத் தலைமை என்று சொல்லும்போது, யார் தலைமையேற்கிறார் என்பது மட்டுமல்லாமல், எந்த திசையில் பயணிப்பது என்ற கேள்வியும் வந்து சேர்கிறது. அகில இந்திய மாநாடு (கட்சி காங்கிரஸ்) – திசை வழி நோக்கிய பயணத்தை முடிவு செய்கிறது. அப்படியானால், எங்கோ அமர்ந்துகொண்டு முடிவு செய்யப்படுகிற போக்கிற்கு ஒட்டுமொத்த கட்சியின் கட்டுப்படுமா? அதில் எங்கே ஜனநாயகம்? என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து யாரும் கேள்வி எழுப்பக் கூடும்.

அதற்கும் தோழர் இ.எம்.எஸ் பதில் சொல்லியிருக்கிறார்,
கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள அரசியல் நகல் தீர்மானம், மத்தியக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். பிறகு அந்த தீர்மானம் பொதுமக்களுக்கும், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அவரவருக்கு புரிகிற மொழியில் வெளியிடப்படும்.

“கட்சிக் குழுக்கள் இந்த ஆவணத்தின் மீது விவாதம் நடத்த இரண்டு மாத அவகாசம் உள்ளது. கட்சிக் குழுக்கள் தீர்மானத்தில் அவசியம் செய்யப்பட்டாக வேண்டும் எனக் கருதுகிற திருத்தங்களை மத்திய குழுவுக்கு அனுப்ப முடியும். (13 வதுஅகில இந்திய மாநாட்டின் போது இத்தகைய 5000 திருத்தங்கள் மத்திய குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தன.) இவ்வாறுபெறப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் மத்திய குழு பரிசீலித்து, அவற்றில் எவையெவை ஏற்கத்தக்கவை, மற்றவை ஏன் ஏற்கத்தக்கவை அல்ல என்பது குறித்து ஒரு அறிக்கையை தயாரிக்கும். அந்த அறிக்கையுடன் சேர்த்து அரசியல் தீர்மானம் அகில இந்திய மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும். மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், அந்தக் கட்டத்திலும் கூட. அரசியல் தீர்மானத்துக்கான திருத்தங்களைக் கொண்டு வர முடியும். தீர்மானமும், திருத்தங்களும் முழுவிவாதத்துக்குப் பின்னர் ஓட்டெடுப்புக்கும் விடப்படும்.”

முடிவற்ற விவாதங்களா?
இதுபோன்ற ஆவணங்களை படித்து, அதன் மீதான கருத்துக்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நாம் அனுப்புகிற திருத்தத்தை உண்மையாகவே அவர்கள் வாசிப்பார்களா? அல்லது எல்லாம் கண்கட்டு வித்தையா? என்கிற கேள்வி மனதில் எழுந்திருக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராகி, நடைமுறைகளை நெருக்கமாக பார்க்கிற வாய்ப்பு கிடைத்த பிறகு – உட்கட்சி ஜனநாயகத்திற்காக நமது உழைப்பில் இத்தனை பெரும் பகுதியை செலவு செய்கிறோமா? என்ற பெருமித உணர்வும், கம்யூனிஸ்ட் கட்சிமீதான பற்றும் அதிகரித்தது.

இத்துடன் தோழர் இ.எம்.எஸ் எழுதியிருக்கும் மற்றொரு அம்சம் இங்கே கவனிக்க வேண்டியது என்றே நினைக்கிறேன். உலக அளவில் சோசலிச நாடுகள் பின்னடைவை சந்தித்தபோது, அதுபற்றிய மதிப்பீட்டையும், இந்தியாவில் சோசலிசத்திற்கான பயணம் எப்படி அமைய வேண்டும் என்பதையும் கூட கட்சி தனது அனைத்து அணிகளுக்கும் வரைவு அறிக்கையாக வெளியிட்டு பின் அதனை விவாதித்து இறுதி செய்தது. எனவே, மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் மாநாடுகள் மேல் பூச்சு முலாம்கள் அல்ல, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வகைப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமல்ல, மாறாக அது மெய்யான ‘கூட்டுத் தலைமை’. ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான தொடர் கல்வி. எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடப்பது முடிவற்ற விவாதங்கள் அல்ல. கூட்டுச் செயல்பாடுகளை நோக்கிய விவாதங்கள். ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டின் இரண்டு பிரிக்கமுடியாத பகுதிகளின் வெளிப்பாடுகள். இந்தக் கோட்பாடே கட்சியின் எல்லா நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகும்.

ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கிளையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். கிளை, பகுதிக்குழு, மாவட்டக் குழு போன்று ஒவ்வொரு அமைப்பும் தனக்கு அடுத்த மேல் நிலையில் உள்ள குழு எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். இந்த எல்லா குழுக்களிலும் பெரும்பான்மையோர் எடுக்கும் முடிவுகளுக்கு, சிறுபான்மை கருத்துக் கொண்டவர்கள் கட்டுப்பட வேண்டும். மாநாட்டுக் காலம், கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தின் கொண்டாட்டமாக அமைந்த காலம். எனவே தோழர் இ.எம்.எஸ் தரும் வெளிச்சத்தில், மாநாடுகளின் ஊடாக ஒரு கற்றலை மேற்கொள்ள முயற்சிக்கிறேன்.

தொடரும் …