உலகின் உன்னத உறவு கவிதை – சத்யா சம்பத்
நீச்சல் தெரியாத நான் மிதக்கிறேன்
உன் வயிற்றில்! பயமின்றி எப்படி?
உன்னிடமிருந்து ஒரு கயிறு
என்னைப் பிணைக்கின்றது!
இருட்டறை பயமுறுத்தினாலும் உன்
ஸ்பரிசம் தைரியமளிக்க
துயின்றேன்
வெளிவந்து வீறிட்ட என்னை
அள்ளி அணைத்த உன் ஸ்பரிசம் என்னை
அமைதியாக்கியது
அறிவு அறிவிக்க நீ
கைப் பிடித்து எழுதிய
“அ” எழுத்து என்னை
படிப்படியாக உயர்த்தியது
நடுநிலைப்பள்ளியில் நீ
கற்பித்த கூட்டல், கழித்தல், வகுத்தல் – கணக்கை மட்டும்
அல்ல வாழ்க்கையின் நெளிவு
சுளிவுகளை இயல்பாக எனக்குப் பாடமாக்கியது
இன்று நான் கல்லூரியில்……
புதிதாக றெக்கை முளைத்தது,
பல துள்ளல்கள், பல மாற்றங்கள் மனதில் இருக்க!
நீயோ என்னை விட்டுச் சென்றாய்
கல்லூரி விடுதியில்.
இயல்பாக இருந்தாலும்,
தூங்கினாலும் ஏனோ
தூங்காதது போலவே மனநிலை?
நாட்கள் பல நகர்ந்தன
உன்னத உறவு பற்றி எங்கோ
F.M மில் பேட்டி?
மிதந்து வருகின்றன வரிகள்
உறவு என்றதும் எனக்கு நினைவு வருவது நீ தான்
நீ தானே அப்பா, தங்கை……
என தொடர்ந்து உறவு தந்தாய்
உலகின் உன்னத உறவிற்கு
நீ யின்றி வேறு யார் அம்மா
பொருந்துவார்கள்
ஆம் நீ தான் இந்தப் பரந்த
உலகின் உன்னத உறவு
எனக்கு
எப்பொழுது வீடு வந்து உன்னதமான உன்
மடியில் புதைவேன் அம்மா!!!