Italian Telephone Stories (A city without sharp edges) Webseries 2 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 2: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் கூர் முனைகள் இல்லாத நகரம் - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

தொடர் 2: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (கூர் முனைகள் இல்லாத நகரம்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்



கூர் முனைகள் இல்லாத நகரம்

அவர் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஒரு விற்பனை சிப்பந்தி. அப்படி என்றால் என்னவென்று தெரியுமா. ஊர்ஊராக சென்று தனது நிறுவனம் தயாரித்த மருந்துகளை விற்பதற்கு உதவுபவர். அவரது பெயர் வாக பாண்ட்.

இப்படி அவர் நாடுமுழுவதும் பல நகரங்களை கடப்பார். உலகின் பல அதிசய நகரங்களுக்கும் அவர் சென்றது உண்டு. பலரும் ஊர்கள் பற்றி பயணநேரம் பற்றி, தங்கும் வசதி பற்றி அப்புறம் உணவு பற்றி அவரிடம் விசாரிப்பது பழக்கமாகி போனது.

எத்தனையோ நாடு நகரங்களை சுற்றி இருந்தாலும் ஒரு நகரத்திற்கு சென்றதை மட்டும் மறக்கவேமாட்டார்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தனது மருந்து விவர கை பெட்டியோடு அந்த நகரத்தின் வாயிலில் சென்று இறங்கினார்.

அந்த நகரமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அங்கே வீடுகள் எதுவும் கூர்முனை  இன்றி மூலைகள் வளைவாகவே கட்டப்பட்டிருந்தன. மாடி என்பதைவிட மூடி என்று சொல்லும் அளவுக்கு அறைவிட்ட மூடிபோல  மேலேயும் கூர்முனை அற்று இருந்தன. ஒவ்வொரு வீடும் மொட்டைத் தலைமாதிரி தெரிந்தது.

வீதிவிளக்கு, ஆண்டனா, போக்குவரத்து சிக்னல்… எல்லாமே கூர்முனை என்று எதுவுமின்றி முனை மழுங்கி வளைவாகவே அமைக்கப்பட்டிருந்தன. வாகபாண்ட் இதுவரை அப்படி ஒரு நகரத்தை பார்த்ததே இல்லை.

ஆச்சரியத்தோடு இங்கும் அங்கம் பார்த்தபடி அவர் நடந்தார். சாலை ஓரப்பூங்கா அவரது கண்களில் பட்டது.  பூங்கா சுற்று சுவரும் வளைவாக மேல்மட்டமும் பக்கவாட்டிலும் கூட எங்குமே கூர்முனை கிடையாது.

பூங்காவில் இருந்த இருக்கைகளிலும் கூட கூர்முனை என்பதே இருக்கவில்லை. வழவழப்பான வழுக்கை வடிவங்கள்.

ஆனால் விரைவில் அந்தப் பூங்காவில் பூத்துக்கிடந்த ரோஜாக்கள் அவரை ஈர்த்தன.

வாகபாண்ட் ரோஜாக்களை விரும்பினார். செழிப்பாக பெரிதாக மிக அழகாக அவை இருந்தன. ஒன்றை பறிக்க முடிவு செய்தார். முள் குத்திவிடாமல் மிகுந்த கவனத்தோடு பூவை பறித்தார். ஆனாலும் முள்போல  நீட்டிக்கொண்டிருந்த முகடுகளின் மீது கைப்பட்டது. பெரிய ஆச்சரியம். முகடுகள்  மொன்னையாகவும் மிருதுவாகவும் இருந்தன. அந்த நகரத்தில் முள் கூட்ட கூர்முனை அற்றதாக இருந்தது.

‘எக்ஸ் கியூஸ் மீ’ என்றொரு குரல் அவரது கவனத்தை திருப்பியது. ஒரு போலிஸ்காரர் நின்று கொண்டிருந்தார். வாகபாண்ட் அவருக்கு ‘வணக்கம்’ சொன்னார்.

‘ரோஜா பூவை பறிக்கலாமா.. அது குற்றமில்லையா’ என்றார் அந்த போலிஸ்காரர்.

‘ஓ எனக்குத் தெரியவில்லை…. சாரி’ என்றார். வாகபாண்ட் . போலிஸ்காரர் தனது குட்டி டைரியை எடுத்தார். அவர் எதையோ எழுதப்போனபோதுதான் வாகபாண்ட் கவனித்தார். அவர் எழுத பயன்படுத்தியது ஒரு பென்சில். டைரி முனைகள் சற்று ஏறக்குறைய நீள்வடட வடிவமாக இருந்தது.

‘ உங்கள் பெயர்…?’ என்றார் போலிஸ்காரர். பென்சிலில் கூட கூர்ப்பு இல்லை. முனை மழுங்கிப் பென்சில்.

‘இது என்ன நகரம் சார்…. இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே’ என்றார் வாகபாண்ட்.

‘இதுதான் கூர்முனைகள் இல்லாத நகரம்’ என்றார் போலிஸ்காரர் வாகபாண்டின் விவரங்களை குறித்துக்கொண்டார். ‘ரோஜா பறிப்பதற்கு அறை சார்ஜ் தண்டனை உண்டு’ என்றார்.

‘ஏற்றுக்கொள்கிறேன்… சாரி ….’ என்ற வாகபாண்ட் தனது பணப்பையை தேடினார்.

‘என் கன்னத்தில் இரண்டு அறை நீங்கள் இப்போதுவிடலாம்…. அதுதான் ½ சார்ஜ் ….’ என்றார் போலிஸ்காரர்.

‘என்னது… நான் உங்களை …. அடிப்பதா….’ வாகபாண்ட் திடுக்கிட்டார். ‘அய்யய்யோ… அது தவறு நோ…. நோ…’

‘முழு சார்ஜ் என்பது காவலர் கன்னத்தில் நான்கு அறைகள் விடுதல். உங்களுக்கு ½ சார்ஜ் அதனால் நீங்கள் இரண்டு அறைகள் விடலாம்… பிளீஸ் தயங்கவேண்டாம்.. நாங்கள் தண்டனையை நிறைவேற்றியே தீரவேண்டும்..’ அவர் விடவில்லை.

‘இந்த நகரத்தில் அப்படித்தான் சட்டமா’ வாகபாண்ட்டால் நம்ப முடியவில்லை. 

‘ஆமாம் .. யார் குற்றத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் காவலரை அடிப்பதே தண்டனை..’ என்றார்.

‘எங்கள் குற்றங்களுக்கு நீங்கள்… தவறிழைக்கத்தாவர் அய்யோ இது நியாயமே இல்லை’ வாகபாண்டால் ஏற்கமுடியவில்லை.

‘பெரும்பாலும் யாருமே எந்த குற்றமும் இங்கே செய்வது இல்லை…. செய்தால் யாரோ அப்பாவியை தான் அடிக்கவேண்டுமே என மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்வார்கள்’ போலிஸ்காரர்  சொன்னதில் அர்த்தம் இருந்தது.

எது எப்படியோ தன்னால் காவலரை கன்னத்தில் அறைய முடியாது என்று வாகபாண்ட்  திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதனால் அந்த நகரத்தில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டார்கள்.

எனவே கூர்முனைகள் இல்லாத நகரத்திலிருந்து  அவர் உடனே வெளியேறிவிட்டார். ஆனால் திரும்பவும் அந்த கூர்முனைகள் இல்லாத நகருக்கு மறுபடி தான் செல்வது உறுதி என்று அவர் இன்றும்கூட சொல்லிய வண்ணமே உள்ளார்.

Italian Telephone Stories (The path that goes nowhere) Webseries 1 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 1: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் எங்குமே போகாத பாதை - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

தொடர் 1: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (எங்குமே போகாத பாதை) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்



எங்குமே போகாத பாதை

உங்களுக்கு மார்ட்டினோவைத் தெரியுமா. ரொம்பத் துடுக்கான சிறுவன். பல சிறார்கள் நடக்கத் தொடங்கும் வயதுக்கு முன்னதாகவே அவன் நடந்துவிட்டான். பிற குழந்தைகளுக்கு பேச்சு வருவதற்கு முன்பே அவன் பேசிவிட்டான்.

எனவே எல்லாரும் சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பே அவன் சைக்கிளும் ஓட்ட தொடங்கிவிட்டான்.

ஒருநாள் அவர்களது ஊர் எல்லைவரை அவன் தன் சைக்கிளில் போனான். அந்த எல்லையில் ஒரு விநோதம் இருப்பதை அன்றுதான் அவன் கண்டான். அங்கே சாலை மூன்றாக பிரிந்தது. மூன்று பாதைகள் தென்பட்டன. 

வலதுபுறம் திரும்பிய பாதை ஊருக்குள் திரும்பிச்செல்லும் பாதை. இடது புறம் திரும்பிய பாதை மற்ற ஊர்களுக்கு செல்லும் பாதை.

நடுவே ஒரு பாதை போனது. அதன் முனையில் ‘எங்குமே போகாத பாதை’ என்று ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

மார்ட்டினோ தினமும் அந்த பலகை வரை வண்டி ஓட்டி வருவான் . பிறகு திரும்பி வீட்டிற்கே சைக்கிளை திருப்புவான்.

‘இந்த பாதை எங்கே வரை போகும்?’ ஒரு நாள் அவ்வழி வந்த ஒரு முதியவரிடம் அவன் கேட்டான்.

‘இந்தப் பாதை எங்குமே போகாத பாதை… அதன் வழியே போகாதே’ என்றார் அவர். பிறகு ஒருநாள் ஒரு தபால்காரர் அவ்வழி வந்தார். அவரிடம் மார்ட்டினோ அதே கேள்வியைக் கேட்டான். 

‘எனக்குத் தெரியாத பாதையே இந்த ஊரில் கிடையாது’ அவர் பெருமையோடு சொன்னார்.‘ இந்த பாதை எங்குமே போகாத பாதை’ ‘போகாதே… அது எங்கும் செல்லாது வீண்’ என்று யார்யாரோ சொன்னார்கள்.

‘யாருமே இதுவரை அந்த வழியே போனது கிடையாது. எங்குமே போகாத பாதையில் யார்தான் செல்வார்கள்’ என்று ஒரு குதிரை வண்டிக்காரர் சொன்னார். ‘போவதும்.. வீண்’

ஆனால் மார்ட்டினோ ஒரு நாள் தன் சைக்கிளில் அந்த நடுப்பாதையில் சென்றான். எங்குமே செல்லாத  அந்தப் பாதையில் இருபுறமும் புதர்களே இருந்தன. எத்தனை தூரம் வந்தானோ.

ஒரு கட்டத்தில் சைக்கிளில் செல்லாமல் அதை நிறத்திவிட்டு நடந்தும் பயணத்த தொடர்ந்தான். நடந்து போகத்தொடங்கிய கொஞ்சம் தூரத்தில் ஒரு நாய் குரைக்கும் சப்தம் அவனுக்கு கேட்டது.

நாய் இருக்கிறது என்றால் கொஞ்சம் தூரத்தில் ஒரு வீடும் இருக்கிறது.- மனிதர்களும் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். எனவே மார்ட்டினோ அஞ்சவில்லை அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலே அவனுக்கு அதிகரித்தது.

எங்குமே போகாத பாதை உண்மையில் எங்கே போகிறது என்பதை காணவும் அறியவும் அவன் துடித்தான். எனவே அதுவும் அவனை தடுக்கவில்லை.

குரைத்தபடி இருந்த நாய் அவன் கிட்டத்தில் வந்தது… சட்டென வாலை ஆட்டியது. அது அவன் அருகில் வந்து  வந்து ஓட்டமெடுத்தது.

முதலில் மார்ட்டினோவுக்கு எதுவும் புரியவில்லை. அவன் அப்படியே நின்றான். அது அவனை தன்னை பின்தொடரச் செய்கையால் உணர்த்துவதுபோல் அவனுக்கு பட்டது. அதை அவன்பின் தொடர்ந்தான். என்ன ஆச்சரியம் அங்கே சற்று தூரத்தில் பிரமாண்ட அரண்மனை இருந்தது. 

அழகழகாக அலங்கரிக்கப்பட்ட பொன்னிற திரைசீலைகள் அசைந்தாடிய பெரிய கோட்டை வடிவ அரண்மனை அது.

அதன் மாடத்தில் மகாராணி போலவே ஒரு அம்மையார் நின்றிந்தார். அவர் தலையில் அழகாக ஒரு கிரீடம் பளபளத்தது… ஆமாம் மகாராணியேதான்.

‘வாருங்கள் … விருந்தினரே…. வாழ்த்துக்கள்’ என்று மேலிருந்து சத்தமாகக் கூறி கையசைத்தார் மகாராணி.

அரண்மனைக்கு அருகே மார்ட்டினோ சென்றபோது… அரண்மனை வாயிலில் ரம்மியமான இசை அவனை  வரவேற்றது. ’பலப் பல ஆண்டுகளுக்குப் பிறகு… நம் அரண்மனைக்கு ஒரு விருந்தினர் வந்து இருக்கிறார்.’ அந்த மகாராணி சத்தமாக அறிவித்தார்.

‘நல்ல உணவு விருந்து  ஒன்றை தாயார் செய்யுங்கள்’ சற்று நேரத்தில் மார்ட்டினோ அந்த மிகச் சிறப்பான கோட்டையை சுற்றிப் பார்த்தான். பிறகு பசிக்கத் தொடங்கியது.

விதவிதமான இனிப்புகள் வகைவகையான பதார்த்தங்கள்  சுவையான பலவிதப் பழங்கள்  மார்ட்டினோவுக்கு மிகவும் பிடித்த  பால்வண்ண ஐஸ்கிரீம்  தேன்வடியும் தேங்காய் கேக்.

நன்றாக சாப்பிட்டான். அவனோடு மகாராணியும் இன்னும் யார் யாரோவும் இணைந்து அமர்ந்து சாப்பிட்டார்கள். எத்தனை நேரம் கழிந்ததோ. திடீரென்று மார்ட்டினோ பரபரத்தான். அவனுக்கு நேரமாகி விட்டது. வீட்டில் தேடுவார்கள்.

மகாராணி விடை கொடுத்தார். ‘ யாரும் போக தேர்வு செய்யாத பாதையை … தேர்ந்ததெடுத்ததற்கு என் பாராட்டுக்கள்‘ என்றார். ‘ நீ மகா தைரியசாலி’ என்று அறிவித்தார்.

நிறைய பொற்காசுகளும் விதவிதமான பொம்மைகளும்…. பைநிறைய இனிப்புகளும் மார்ட்டினோவுக்கு கிடைத்தன. அவன் கிளம்பினான்

ஊருக்குள் வந்து சேர்ந்ததும் பலரும் அவனது பைகளைக் கண்டு விசாரித்தார்கள். பல நண்பர்களுக்கு பொம்மைகளையும் இனிப்புகளையும் அவன் வழங்கினான் எங்குமே போகாத பாதையில் சென்றதால் தனக்கு ஏற்பட்ட புதுமையான அனுபவத்தை எல்லாருக்கும் சொன்னான் மார்ட்டினோ பொற்காசுகளையும் காட்டினான்.

எல்லாரும் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அன்றும் மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் பலரும் சைக்கிளில், குதிரை வண்டியில் என எங்கும் போகாத அந்த பாதையில் விரைந்தார்கள். மார்ட்டினோவைப் போலவே மகாராணியின் அரண்மனைக்கு சென்று பொற்காசு பெற துடித்தார்கள் அவர்கள்.

ஆனால் எல்லோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்தப்பாதையில் மார்ட்டினோவுக்குப் பிறகு சென்ற யாவருக்கும் பாதை பாதியில் நின்றது. அங்கே வெட்ட வெளி தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

உலகில் மாபெரும் ஆச்சரியங்கள் எல்லாம் முதன் முதலில் முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்’. என்பதை அவர்களும் புரிந்துகொண்டார்கள்.