தேடன் கவிதைகள் (வெற்றிடங்கள், புகை, தாகம், தனுஷ்கோடி)
வெற்றிடங்கள்
வெற்றிடம் நிரம்பித் ததும்புகிற அண்டமிதில்
சிறு திடப்பருமன் வாழ்தலெனும் பெரும் நகை.
காலம் வெற்றிடத்தில் கரைந்து போக
ஞாலம் நதிக்கரையில் நாகரிகம் அமைத்து
காலம் தள்ளுவது நகை முரண்.
வாழும் காலம் வெற்றிடங்கள் வாழ்வில் நிரம்பியிருக்கும்
இறப்பின் சாய்வில் வாழ்தல் கரைந்து நிறைக்கும்.
ஏனெனில் வெற்றிடங்கள் தானே உண்மையில் கனமானவை.
புகை
சிகரெட் புகை ஊதி வெளியே விடுவதை பார்க்கையில் எனக்கும் ஊதுவதாய் தொனித்தது
ஆள்நடு விரல்களை வைத்து வெறும் வாயில் ஒத்திசைந்து பார்த்தேன்
பிறகு விட்டதில் கொஞ்சம் இழுத்தும் பார்த்தேன்
புகையைப் பிடித்ததும் பிரட்டுகிறது
தொண்டை கம்மி இரும்புகிறது
சரியென்று இழுத்தப் புகையை
அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்
நெருப்பை அணைக்காமல்.
தாகம்
ஒவ்வொரு மாதமும் காமம் தலைக்கேற
அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்கிறாள்
தீயில் இறக்கி எரித்துவிடாமலிருக்க
கோலமிடுகையில்
தெருநாய்களின் ஊடுறவு நெருப்பில் குளிர்காய்கின்றன
கல்லை விட்டெறிந்து ஆண்டாளோடு பாசுரம் பாடச் சென்று விடுகிறாள் வெடுக்கென
கல்லால் அடித்துக் கொன்றவர்களை தெரிந்திருந்தது அவளுக்கு
நெருப்பின் கங்குகளில் வறண்டுக் கொண்டிருந்தவளுக்கு கயிறு ஒன்றை கட்டி ஓர் எல்லையில் மட்டும் தாகத்தை தீர்க்க அனுமதித்தனர்
தாகம் தீர்த்துக் கொண்டாளோ இல்லையோ
அதற்குள் வயிறு நிரம்பிப் பெருத்து விட்டது.
தனுஷ்கோடி
கடல் கொண்ட தனுஷ்கோடியின்
தேவாலயம்; சுற்றிலும்
ஆயிரம் காலடிப் புதைத் தடங்கள்
இயேசு போல நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி
‘தலைய சாய்ச்சு நில்லுடி’ என்றாள் அம்மா
அருகே விற்கப்படும் கடலின் எச்சங்கள் நமக்கு
கடலை வாரியெடுத்து கழுத்திலும் வீட்டிலும் கைகளிலும் தொங்கவிட்டு கடலை கொள்ள நமக்குத் தான் எவ்வளவு ஆசை
கடைகளைக் கடந்து செல்லச் செல்ல கதைகள் விரிந்தன
இடிந்த வீடுகள் பாழ் சுவர்கள்
அனைத்தையும் விழுங்கி குழந்தை போல் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது கடல்
இயேசுவான சிறுமியோடு.
திரும்பிப் பார்த்தால்
கடல் கொண்ட தனுஷ்கோடியின் தேவாலயம்;
சுற்றிலும் ஆயிரம் காலடிப் புதைத் தடங்கள்
– தேடன்