Thee Nunmigalin Kaalam by Era.Boobalan Book review by A.Kareem இரா.பூபாலனின் தீ நுண்மிகளின் காலம் நூல் அறிமுகம் அ.கரீம்

நூல் அறிமுகம்: இரா.பூபாலனின் தீ நுண்மிகளின் காலம் – அ.கரீம்



சமகாலத்தை எழுதுபவன் காலத்தால் களவாடமுடியதவன்

“எப்போதும் சாலையில்
சாக்பீஸ் ஓவியங்களை
வரைந்து காத்திருக்கும்
கால்களற்றவன்
யாரும் வராத
ஊரடங்கு நாளில்
வெறிச்சோடிக் கிடந்த
தார்ச் சாலையின்
நடுவில் அமர்ந்து
தன் இடுப்புக்கு கீழ்
இரண்டு கால்களை
வரைந்து பார்த்துக்கொண்டான்

நாம் வாழும் காலத்தில் கொரோனா என்னும் பெரும் தொற்று லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிவிட்டது. நுண்மி மனிதனால் உருவாக்கப்பட்டதா? இல்லை இயற்கையால் உருவாக்கப்பட்டதா? என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டு இருந்தாலும் நாம் எப்போதும் பார்த்திடாத பேரழிவை பார்த்துவிட்டோம். உலகமே கண்ணுக்கு தெரியாத நுண்மிக்கு பயந்து வீட்டுக்குள் அடங்கி விட்டது. இன்னும் இயல்பு வாழ்வுக்கு மனித சமூகம் திரும்பவில்லை. இந்த பெரும் சுழலில் வாழ்வுக்காக போரடிய மனிதர்களின் துயரங்களை சமகாலத்தை பதிவு செய்யும் கடப்பாடோடு இரா.பூபாலன் “தீநுண்மிகளின் காலம்” தொகுப்பு வழியாக பதிவு செய்கிறார்.

பெரும்தொற்று காலத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் கவிதைகள் ஆக்குவது சவாலானது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்ற மெனக்கெடளில் கவிதைக்கான தன்மை மாறிவிட எல்லா வாய்ப்புகளும் உண்டு. அவசரத்தில் அது கட்டுரை தன்மையோடும் சொல்லப்படும் தகவல் போலவும் மாற வாய்ப்புகளும் உண்டு. ஆனால் எல்லா கவிதைகளையும் சாமர்த்தியமாக பூபாலன் கையாண்டு உள்ளார். எல்லா கவிதைகளுக்குள்ளும் நம்மை அசைத்து பார்க்கும் வலிகள் உள்ளது. மானுடம் பேச வேண்டிய அறத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்திலிருந்து, பரஸ்பரம் உதவியவர்களின் அன்பு வரை எல்லாவற்றையும் பதிந்து உள்ளார். இதற்கு முன்பு எப்போதும் சந்திக்காத புதிய உலகத்தில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்கள் வரை தீ நுண்மிகளின் காலம் பேசுகிறது.

கடனட்டைகளில்
பொன்னிறத்தில்
பொறிக்கப்பட்டிருக்கும்
என் பெயரை
ஒருமுறை
ஆறுதலாக தடவிக் கொள்கிறேன்
எல்லா நாட்களுமே
மாத இறுதி நாட்களாகின்றன..

என்ற கவிதை வழியே…. எண்பது சதவிதமான இந்திய மக்கள் கொரோனா காலத்தில் கடனாளிகள் ஆகியுள்ளர்கள் என்று தற்போது புள்ளி விபரங்கள் சொல்கிறது. வருமானம் இல்லாத காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய அரசும் கைவிட்டதினால் எப்படியும் உயிர் வாழ வேண்டுமே” என்ற துடிப்பில் கார்ப்பரேட்டுகளின் கடன் அட்டையில் அகப்பட்டுக்கொண்டு திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பவர்களை கண்முன்னே பார்த்துகொண்டு இருக்கிறோம், வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து செத்து போனவர்களையும் இந்த கவிதை நினைவுப்படுத்துகிறது.

முகக் கவசம் அணிந்துகொள்வது
கட்டயமாக்கப்பட்ட பூமிக்கு
தகவல் அறியாது வந்துவிட்டார்
இளவயது கடவுள் ஒருவர்
வீதியுலா வருகையில்
வசமாகச் சிக்கிக் கொண்டார்
கடமை தவறாத காவலர் ஒருவரிடம்
நான் கடவுள்
நான் கடவுள் என
எவ்வளவு மன்றாடியும்
இரங்காத காவலரின் முன்
முட்டி வலிக்க
ஒன்பது தோப்புக்கரணங்களைப்
போட்டுகொண்டு இருந்தார் கடவுள்

ஹெல்மட்டுக்கு பயந்து தெருவுக்குள் ஓடிக்கொண்டு இருந்த இளம் வயது கூட்டம் முக கவசத்துக்கு பயந்து ஓடி ஒளிந்த காலத்தை கடவுளுக்கு பொருத்தி ஒரு கதையைப்போல கவிதையை பூபாலன் கையாண்டுள்ளார். மனிதர்கள் சிரிக்கிறார்களா இல்லை முறைக்கிறார்களா? என்று எதுவும் தெரியாமல் மறைக்கும் முககவசங்கள் குறித்த கவிதைகளும், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட கடவுள் குறித்தும் நேர்த்தியாக எழுதிய கவிதைகள் தொகுப்பில் உள்ளது.

விபத்தில்ல சாலைகள்
கூட்டமில்லா மருத்துவமனைகள்
மாசற்ற வெளி
இந்தக் கிருமி தந்தவை
கொஞ்சம் வரமும் தான் …

பல ஆண்டுகாலமாக பெரும் தாக்குதலுக்கு உள்ளான இயற்கை இந்த காலத்தில் கொஞ்சம் ஆசுவாசப்பட்டதையும் தவறாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லாண்டுகாலமாக கவனிக்காமல் கைவிடப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகள் திடீரென உயிர் பெற்றதும், பரணில் கிடந்த பரமபதம் களத்துக்கு வந்ததும், அறைக்குள் அடைப்பட்டு கிடந்த அப்பத்தா அவ்விளையாட்டில் ராணியாக மாறியதும். கைவிடப்பட்ட நாட்டுபுற கலைஞர்களின் துயரம் சூழ்ந்த வாழ்வும், பழக்கப்படாத ஆன்லைன் வகுப்புகள், குழந்தைகள் வளர்த்த செடிகள், தனிமை, மனிதர்களால் கைவிடப்பட்ட அறம், அரசு அதிகாரத்தால் வீழ்ந்து போன மக்கள், அரசனின் அலட்சியத்தால் ரயிலின் தண்டவாளத்தில் உடல் நசுங்கிய வடமாநில எளிய மக்கள் என்று அநேகமாக கொரனோ காலத்தின் எல்லாவற்றையும் தீ நுண்மிகளின் காலத்தின் வழியே பூபாலன் பதிவு செய்துவிட்டார். சமகாலத்தை பதிவு செய்வது கிரிமினல் குற்றம் போல எழுதாமல் தப்பித்துக்கொண்டு இருக்கும் படைப்பாளிகளுக்கு சமகாலத்தை எழுதுவதுதான் ஒரு படைப்பாளனின் தார்மீக கடமை என்று நெற்றில் அடித்து பூபாலன் பதிவு செய்துள்ளார். சமகாலத்தை எழுதுபவனை காலம் எப்போதும் கைவிடாது. வாழ்த்துக்கள் பூபாலன்.

அ.கரீம்
“தீ நுண்மிகளின் காலம்”
விலை ரு.70
ஆசிரியர் இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிடு