நூல் அறிமுகம் : ஏலோ..லம் நாவல் – தேனி சுந்தர்
புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்
தோழர் கே. முத்தையா பன்முகத்திறன் கொண்ட ஒரு பேராளுமை. பத்திரிகையாசியர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், அமைப்பாளர் என அவர் தொடாத துறைகள் இல்லை. தொட்டத் துறைகள் அத்தனையிலும் மிளிர்ந்தவர்.
அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், பேராவூரணி பொன்னாங்கன்னி காடு கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின்பு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்த நேரமது. அண்ணாலை பல்கலைக்கழகத்தில் பொதுவுடமை இயக்கச் சிந்தனை கொண்ட மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களுடன் தோழர் கே. முத்தையாவும் இணைந்தார். விடுதலைப் போராட்டத்திலும், மாணவர் போராட்டத்திலும் ஈடுபட்ட காரணத்தினால், பல்கலைக்கழக இறுதித் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. மாணவனாக இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அதன்பின் இறுதிவரை போராட்டமே அவரது வாழ்க்கை முறையானது.
‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியராகவும், பின்னர் நீண்டகாலம் ‘தீக்கதிர்’ ஏட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு பல்கலைக்கழகத்தைப் போன்று பலநூறு பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் அவர். ‘செம்மலர்’ ஏட்டைத் துவக்கி முதல் ஆசிரியராக தோழர் கு. சின்னப்ப பாரதி நடத்தினார். சில மாதங்களுக்குப் பின்பு தோழர் கே. முத்தையா, ‘செம்மலர்’ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினர். தோழர் கே. முத்தையா சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும், கௌரவத் தலைவராகவும் பல பத்தாண்டுகள் பணியாற்றி வழிகாட்டினார்.
‘செம்மலர்’ ஏட்டின் அவர் தொடராக எழுதிய இரண்டு நாவல்கள், ‘உலைக்களம்’, ‘விளைநிலம்’ ஆகியன ஆகும். இந்த இரண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்க நாவல்களாக விளங்குகின்றன. தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, கருத்து மோதல்கள், களப்போராட்டங்களை அருமையான கலைவடிவத்தில் பேசும் நாவல்கள் இவை.
1948 முதல் 1962 வரையிலான பொதுவுடமை இயக்க வரலாற்றின் போக்குகளை இவ்விரண்டு நாவல்களும் துல்லியமாக படம்பிடித்துக் காட்டியவை.
‘செவ்வானம்’, ‘ஏரோட்டி மகன்’, ‘புதிய தலைமுறைகள்’ என தோழர் கே. முத்தையா எழுதிய மூன்று மேடைநாடகங்கள், தமிழகத்தில் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளன. சில இசைப்பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.
இலக்கியத் திறனாய்வில், மார்க்சிய அணுகுமுறையை பின்பற்றியவர்களில் தோழர் கே. முத்தையாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்கச் சமுதாயம்’, ‘இராமாயணம்- உண்மையும் புரட்டும்’, ‘சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்’ உள்ளிட்ட ஆய்வு நூல்கள் இன்றளவும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. திருக்குறள் குறித்து அவர் எழுதியுள்ள நூலும் முக்கியமான ஒன்று.
ஒரு பத்திரிகையாளராக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள அவர், மார்க்ஸ் எழுதிய ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி, பலநூறு எழுத்தாளர்களை உருவாக்கியவர் அவர். அதை ஒரு இயக்கமாக அவர் செய்து வந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஒரு கர்மயோகியைப் போல செயல்பட்ட அவரது பெருமையை ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ போன்ற ஏடுகளும், ‘தமுஎகச’ போன்ற அமைப்புக்களும் இன்றளவும் எடுத்துரைக்கின்றன.
படைப்புகள்
* சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்(1981)
* இராமாயணம் ஒரு ஆய்வு(1981)
* வீர பரம்பரை
* சட்டமன்றத்தில் நாம்
* திமுக எங்கே செல்கிறது
* இதுதான் அண்ணாயிசமா?
* மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்
* தத்துவத்தின் வறுமை (காரல் மார்க்ஸ்-எழுதியது-தமிழாக்கம்)
* தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் (1968)
* தமிழ் இலக்கிய வரலாறு
நாவல்கள்
* உலைகளம் (முதல் நாவல்)
* விளைநிலம்(1989)
நாடகங்கள்
* செவ்வானம் (நாடகம்)
* புதிய தலைமுறை (நாடகம்)
* ஏரோட்டி மகன் (நாடகம் (2012)
பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர்- பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார்
சென்னை: கல்விச் சிந்தனைகள் குறித்த வளமையான புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் கூறினார்.
செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் ஏராளமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ‘கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0’ நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (செப்.1) சென்னையில் நடைபெற்றது. பேரா. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூலை மேனாள்துணைவேந்தர் பேரா. க.அ.மணிக் குமார் வெளியிட முதல் பிரதியை கே.நந்தகுமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ‘கல்விச் சிந்தனைகள் நூல் திரட்டு’ விற்பனையை தொடங்கி வைத்து கே.நந்தகுமார், அயல்நாட்டு கல்வியாளர்கள், சிந்தனையாளர்களின் புத்தகங்களை தேடிதேடி படிப்பது என்ற நிலை மாற வேண்டும். தமிழில் முதல் தரமான புத்தகங்கள் வேண்டும். ‘கற்றல் என்பது யாதெனில்; கல்வி 4.0’ போன்று நல்ல நல்ல நூல்களை ஆயிஷா நடராசன் போன்றவர்கள் எழுத வேண்டும். பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர். அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
பேரா.க.அ.மணிக்குமார் குறிப்பிடுகையில், “பல்கலைக் கழக பேராசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல் தரத்தோடு இந்த நூல் உள்ளது. திறமையான ஆசிரியர்களை ஊக்குவித்தால் மிகச்சிறந்த கல்வி முறையை உருவாக்க முடியும்” என்றார்.
“வகுப்பறைகள் மறைந்து, மனிதநுண்ணறிவை கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டி உள்ளது. தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது. தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. மாணவர் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. ஒன்றரை வருடம் கல்விச் சூழலில் இருந்து துண்டிக்கப்பட்டு, பயிற்சிகள் இன்றி கணித அடிப்படைகளை மறந்த நிலையில் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர். கற்றல், கற்பித்தல் இயல்பாக இருக்காது என்பதை ஆசிரியர் சமூகம் உணர்ந்து கற்பிக்க வேண்டும்” என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கூறுகையில், “காலையில் எழுந்து பல் தேய்க்க பழகியவர்கள், இப்போது செல் தேய்க்க பழகிவிட்டோம் என்பன போன்ற வாக்கியங்கள் வாசிப்பை நகர்த்தி செல்கிறது. 2010க்குப் பின் பிறந்த குழந்தைகள் பாதி மனிதர்களாகவும், பாதி கருவி களாகவும் உள்ளனர். இந்த அழகையும் ஆபத்தையும் உணர வேண்டும். தமிழக கல்வியில் கற்றல், கற்பித்தலில் உள்ள இடைவெளியை சரி செய்யவேண்டி உள்ளது. அதற்கு இந்நூல் உதவும்” என்றார்.“தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. அரசு நிர்வாகத்தின் இயலாமையின் வெளிப்பாடாக, ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க ‘அகஸ்தியா’ என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆசிரியர் சமூகத்திற்கு மட்டுமின்றி மாணவர் சமூகத்திற்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும்” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் குறிப்பிட்டார்.
ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராஜன், “கடந்த ஒன்றரை வருடத்தில் ஆன்லைன் வாயிலாக முறைசாரா கல்வி பயின்று மாணவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். எனவே, கல்வி 4.0வை ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என்றார்.“இந்தியாவிலேயே கியூஆர் கோடு என்ற முறையை பாடத்திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். தமிழக பாடத்திட்டம் முதலில் குழந்தையை குழந்தையாக அணுகும். அடுத்து மாணவனாக, தேடலில் ஈடுபடும் நிபுணனாக, எதிர்காலத்தை திட்டமிடுபவராக உயர்த்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டத்திற்குள் இவ்வளவையும் வைக்கும் அளவிற்கு அரசு பள்ளி ஆசிரியர்களிடம் திறமை உள்ளது. செயல்திறன் மிக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ள சூழலில், கல்வியில் மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு தொழில் நுட்பத்தையும் கைக்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், பாரதி புத்தகாலய நிர்வாகிகள் க.நாகராஜன், ப.கு.ராஜன், சுரேஷ் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் பேசினர்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0