சாந்தி என்கிற நஜமுன்னிஷா நாவல் அறிமுகம்
அங்குட்டும் இங்குட்டும் – நூல் அறிமுகம்
பெண் – அன்றும் இன்றும் – நூல் அறிமுகம்
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அரசியல் சிந்தனையாளர் புத்தர் – தேனிசீருடையான்
நூல் விமர்சனம்: ஆசிரியர் தேனி சீருடையானின் கடல் வனம் (சிறுகதை தொகுப்பு) – தங்கேஸ்
ஒரு எளிய வாசகனின் பார்வை இது
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வரும் தோழர் தேனி சீருடையான் அவர்கள் மிகச் சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர் மற்றும் வைகை இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர்.
“கடை” “ நிறங்களின் உலகம்” “ சிறகுகள் முறியவில்லை” “ நாகராணியின் முற்றம்” என்று அற்புதமான நாவல்களோடும் “ஆகவே” “ஒரே வாசல்” “ விழுது”
“பயணம்” “மான் மேயும் காடு” “கந்துக்காரன் கூண்டு” “பாதகத்தி” என்று அற்புதமான சிறுகதை தொகுப்புகளோடும் தான் இந்த மண்ணின் எழுத்தாளன் மக்களின் எழுத்தாளன் என்பதை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த வரிசையில் மேலும் அழகு சேர்க்க தற்போது வந்துள்ளது “கடல் வனம் “ என்ற சிறுகதை தொகுப்பு. அகரம் வெளியீடாக இம்முறை பனிரெண்டு புதிய கதைகளுடனும் தோழர் உமர் பாருக்கின் அற்புதமான அணிந்துரையுடனும் உங்கள் உள்ளத்திற்குள் சிறிய பெரிய வலிய உரையாடல்களை நிகழ்த்திப்பார்க்க வந்திருக்கிறார் தோழர் தேனி சீருடையான் அவர்கள்.
எனக்கு அவரிடம் எப்போதும் பிடித்தது அவருடைய எளிமையான மொழியும் நமது தோளில் பிரியமாக கை வைத்தபடி கதை சொல்லும் சிநேகிதமான பாங்கும் ஆகும். ஆடம்பரமில்லாத அவசியமான வார்த்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கடைத்தேற்றமில்லாத மனிதர்களை அவர் கதையாகப் புனையும் பாங்கு எந்த ஒரு வாசகனையும் சட்டென்று இழுத்து கதைக்குள் கொண்டு சென்று விடும் என்பது உண்மை.
அவருடைய கதை மாந்தர்கள் யாவரும் எளிதினும் எளியவர்கள் என்பதும் சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள் கடைத்தேற வழியற்றவர்கள் என்பதும் வலிக்கும் உண்மை..
சோரம் போன தாயால் கைவிடப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையான தந்தையால் குழந்தை தொழிலாளர்களாக்கப்பட்டவர்கள் உண்ண உணவும் உடுத்த உடையும் உறங்க போக்கிடமும் அற்றவர்கள் . விளிம்பு நிலையிலும் கீழான மனிதர்கள் கடவுளாலும் கைவிடப்பட்டவர்கள் என இப்படிப்பட்ட மாந்தர்கள் தான் திரும்ப திரும்ப இவருடைய கதைக்குள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் அக உலகம் மற்றொரு துயரமான கோணத்தில் இவரது எழுத்துக்களின் வழியே விரிந்து செல்கிறது.
கடைத்தேற வழியற்ற மனிதர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது அந்த வாழ்க்கையை அவர்கள் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையின் அவலத்தை எள்ளி நகையாடிக் கொண்டும் அதற்கு காரணமான சமூகத்தை ஆட்சியாளர்களை தங்களுக்குரிய அளவில் விமர்சித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பது தான் தோழர் இந்தக் கதைகளின் வழியாக நமக்கு காட்டும் உலகம் .
“ நாகம் “ என்ற முதல் சிறுகதையின் களம் புதிது ,கதை மாந்தர்களும் புதிது. கீழடியில் நாம் நமது பண்பாட்டைத் தோண்டி கண்டடைவதைப்போல நமக்கான வழிபாட்டையும் நாம் தேடிக்கண்டடைய வேண்டும் என்பதை இந்த கதையில் அற்புதமாக சொல்லியிருக்கிறார். அதை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்
‘’ தமிழ் வழிபாடுங்குறது இயற்கையோட சேர்ந்தது . மழை மின்னல்ங்குற இயற்கை நிகழ்வுகளையும் காட்டு ஜீவிகளையும் தான் நாம சேவிச்சிட்டிருந்தோம். மனித உருவமா வணங்கப்பட்ட முதல் கடவுள் முருகன். வள்ளிக் கொறத்தியோட காதலும் காமமும் கொண்டான் முருகன். முருக வழிபாடு காதலுக்கு காதலுக்கு மரியாதை ‘’
என்ன அற்புதமான மரபு நம்முடையது ,!
‘’ஆகம விதிப்படி புரோகிதம் பண்ணத் தெரிஞசா யார் வேண்ணாலும் அர்ச்சகராகலாம்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன பெறகும் நடை மொறையில ஒண்ணும் நடக்கல ‘’
அதனால் ஒரு சாமியார் ஒரு புதிய கோயிலை நிர்மாணிக்க விரும்புகிறார் . அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும் என்று அவரே விளக்குகிறார்.
‘’ மண்ணால நாகம் மாதிரி செஞ்சு பக்கத்துல நாகம்மா கோயிலை உண்டாக்கப் போறேன். மொதல்ல குலசாமிங்கற நிலையில அதக்கும்பிடனும் .என் வம்சத்தோட குலசாமி.பெறகு பையப் பைய வளர்த்து தமிழ் சமூகத்துக்கான வழிபாடா மாத்தனும் ‘’
தோழர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா ? சாமி கும்பிடாதே என்று சொல்வதற்கு நாளாகும். ஆனால் உன்னுடைய மரபை மீட்டெடுத்து அதை வணங்கு என்று இப்போது சொல்ல இயலும்.
‘ பிறை நிலா ‘’ கதையிலும் சென்ற கதையைப் போலவே ஆசிரியரும் ஒரு பாத்திரமாக வருகிறார். தன் தங்கை இறந்து விட அதை முன்னிட்டு குடும்பதிதிற்குள் உறவுகளுக்குள் எப்படி ஒரு வெற்றிடம் உருவாகிறது என்பதையும் மனிதர்கள் இறந்தாருக்கான சடங்ககுகளை செய்யும் போது என்ன நம்பிக்கையில் செய்கிறார்கள் என்பதையும் மூட நம்பிக்கைகளுக்கு எப்படியெல்லாம் வெற்றுச் சமாதானம் சொல்கிறார்கள் என்பதையும் அருமையாக அவருக்கே உரிய எள்ளல் தொனியில் எழுதியிருக்கிறார்.
‘’ பவுனாச்சி ‘’ கதை மரண வீடுகளில் நிகழ்த்தப்படும் சடங்குகளைபற்றிய கூர்மையான அவதானிப்பு. ஒரு பள்ளிச் சிறுமியின் பார்வையில் நகரும் கதை கடைசியில் சொந்தக் குடும்பம் இல்லாத பவுனாச்சி தன் உயிலில் தன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று எழுதியிருப்பதைப்பார்த்து விட்டு , உறவுகள் எப்படி தங்களுக்குள் சண்டையிட்டு கலைந்து செல்கிறது என்பதை துல்லியமாக படம் பிடிக்கிறது.
இந்தக் கதையை வாசித்து முடித்ததும் மனிதர்கள் எதனால் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் உறவு கொண்டிருக்கிறார்கள் .பணத்திற்காக மட்டும் தானா என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
‘’ மஞ்சுளா ‘’ விழிகளற்ற பெண் எப்படி தன் அகவிழிகளை திறந்து வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்கிறார் என்பதை அருமையாக விவரித்திருக்கிறது.
‘’ நின்றான் ‘’ தீ நுண் கிருமியின் வருகைக்குப் பிறது ( கொரானா ) பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களாக மாறிப் போகிறார்கள் என்பதை ஒரு சிறு வியாபாரியின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் மூலமாக சொல்லிச் செல்கிறார். இது கசப்பான எதார்த்தமான உண்மை .பெண் குழந்தைகளென்றால் படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
“ தாதுப் பருவம் “ கடைத்தேற்றமற்ற பிச்சை ஏற்றுப் பிழைக்கும் அஞ்சலை ஒரு பெண்ணின் கதை. கொரானா தொற்றிற்குப் பிறகு தங்களுக்கே உணவளிக்க இயலாத மனிதர்கள் எப்படி யாசகம் கேட்கும் பெண்ணுக்கு வழங்க முடியும்? வாழ்க்கை எத்தனை கொடியது என்பதை இந்த தேனி நகர வீதிகளில் அலையும் அஞ்சலை போன்ற எத்தனை ஆதரவற்ற சீவன்களை கண்டால் தான் புரிந்து கொள்ள முடியுமா ? இந்த மாதிரியான அபலைகள் தோழர் கண்களில் மட்டும் எப்படித் தென்படுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.? ஏன் இவர் இவர்களைப் பற்றி இவ்வளவு அக்கறையாக எழுத வேண்டும் ? இவரை வாசித்தால் இவரை விட்டால் வேறு யார் இப்படிப்பட்ட மனிதர்களை எழுத முடியும் என்றே தோன்றுகிறது. . வரலாற்றை ஒரு எழுத்தாளன் பதிவு செய்வது போல வரலாற்றாசிரியன் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திட இயலாது என்பது எத்தனை அரிய உண்மை !
“ தங்கை ” கதையைப் பற்றி சொல்வதென்றால் வாழ்க்கையின் நெடும்பயணம் என்று ஒரே வரியில் முடித்து விடலாம்.
“ இறைப்பாலங்களும் ” ஏறத்தாழ நாகம் என்ற முதல் சிறுகதையின் களம் தான். மனசாட்சி உள்ள மனிதர்கள் அர்ச்சகராயிருந்தாலும் பக்தர்களாயிருந்தாலும் அநியாயத்திற்கு உடன் போவதில்லை என்ற எளிய விதியை சொல்லும் கதை இது.
‘ ஒரு போதும் அவர் தன்னை சிவசங்கர ஐயர் என்று சொல்லிக் கொண்டதில்லை சிவசங்ககரன் என்றோ சங்கரன் என்றோ தான் கூப்பிடச் சொல்வார் ’ இப்படித்தான் இந்தக் கதை ஆரம்பமாகிறது.
‘ கடல் வனம் ’ கதை பல வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மைச்சம்பவத்தை வைத்து பின்னப்பட்டிருப்பதாக எழுத்தாளரே கூறியிருக்கிறார்.
‘ஒருக்களித்திருந்த கதவு’ வட்டித் தொழில் செய்யும் பூபதியைப்பற்றிய கதை. இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா ? இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று உங்களை எண்ண வைக்கும் கதை இது – இன்னும் எத்தனை எத்தனை பூபதிகளைத்தான் இந்த தமழ் சமூகம் வளர்த்தெடுக்குமோ தெரியவில்லை. இப்படி ஒரு ஆதங்கம் இந்தக் கதையைப் படித்த பின் உண்டாகிறது.
‘அங்கியின் மகன் ’ தொழிலாளிகளின் தீராச்சாபத்தை வலிக்க வலிக்க உணர்த்தும் கதை. தொழிலாளியாகப் பிறந்து தொழிலாளியாகவே காலம் கழிப்பது தான் இந்தச் சமூகத்தின் சாபக்கேடு என்பதை கண்களில் நீர் கசிய அற்புதமாக விவரித்த கதை இது. ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பாசம் பந்தம் உறவு என்பதெல்லாம் பணத்திற்குப் பிறகு தான் என்பது எவ்வளவு எதார்த்தமான உண்மை !
‘ குடும்பம் ’ கதை தான் இந்த தொகுப்பின் கடைசிக் கதை . இந்த தொகுப்பின் ஹைலைட்டான கதையும் கூட. ஜம்பங்கி நாரயணன் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஜம்பு எப்படி வாழ்க்கையால் கை விடப்பட்டு இறுதியில் தனக்கான எளிய வாழ்க்கையை தேடி அடைகிறான் என்பதை இந்தக் கதையினூடாக அற்புதாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
ஒரு பறவையின் பார்வையில் மட்டுமே இந்தக் கதைகளை நான் இங்கே அடுக்கியிருக்கிறேன் தவிர ஆசிரியரின் மொழி நுட்பமும் கூரிய விமர்சனமும் அங்கதமும் காட்சிகளின் விவரிப்பும் கதைகளை ரசித்துப்படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதை இங்கே சொல்லி விட விரும்புகிறேன்.
அவரின் சிறுகதைகளை அதற்கும் மேலாக விமர்சிப்பதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக தெரியவில்லை .அவரிடம் கற்றுக் கொள்வதற்குத்தான் ஏராளமாக இருக்கின்றது- தவிரவும் நான் அவருடைய தீவிர ரசிகனும் கூட. அவரிடமே இதை நேரடியாகப் பகிர்ந்திருக்கிறேன்.
இந்தக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆவல் எனக்கு இருக்கிறது. தோழரும் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியிருக்கிறார். இன்னும் மொழிபெயர்ப்புக்கான மொழி மட்டும் எனக்கு வசப்படாமலே இருக்கிறது. அது மட்டும கிடைத்து விட்டால் நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் முதல் சிறுகதை தோழர் தேனி சீருடையானுடையதாகவே இருக்கும்.
கடல் வனம் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறு கதை தொகுப்பாகும்
வாழ்த்துக்கள் தோழர்.
புத்தகம் பற்றிய குறிப்பு:
கடல் வனம் சிறுகதை தொகுப்பு ( 12 கதைகள் அடங்கியது)
அகரம் வெளியீடு
விலை ரூ 200/-
முதற் பதிப்பு டிசம்பர் 2021
நூல் மதிப்புரை: ம. காமுத்துரையின் கடசல் நாவல் – தேனிசீருடையான்
காமுத்துரையின் இலக்கிய எழுத்து கிராமிய மணங்கமழும் பூந்தோட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதரின் பேச்சு மொழியையும் செயல் நடைமுறைகளையும் உன்னிப்பாய்க் கவனித்துப் பதிவு செய்யும் ஆற்றல் பெற்றவர். இவரின் சமீபத்திய நாவல் “கடசல்.” கடசல் என்றால் கடைவது. முன்னுரையில் நாஞ்சில் நாடன் சொல்லியிருப்பது போல “கடைசல் பொதுமொழி; கடசல் என்றால் அகராதியில் பதியப்படாத மக்கள் மொழி. அதாவது ஒரு பொருளை இன்னொரு வடிவத்துக்கு உருமாற்றம் செய்வது கடசல். பாலைக் கடைந்தால் தயிர் ஆவதும் பருப்பைக் கடைந்தால் சாம்பார் வருவதும் மனிதன் சமயலில் கண்டடைந்த உருமாற்றச் செயல்பாடுகள்.
இயந்திரவியலில் கடைசல் ஒரு முக்கியமான உருமாற்றச் செயல்பாடு. இன்றைய நிலையில் பூமிப் பரப்பும் பிரபஞ்சவெளியும் புது வகையிலான வாழ்வியல் பண்பாடுகளையும் நாகரீகக் கோடுகளையும் வரையக் காரணமாய் இருப்பது இந்த இயந்திரவியல்தான். 18ஆம் நூற்றாண்டில் உலகம் புதுப்பாதை அமைத்துப் பயணிக்கிறது என்று காரல் மார்க்சும் ஏங்கல்சும் வரலாற்று ரீதியான உண்மையைக் கண்டுபிடிக்கக் காரணம் பிரம்மாண்டமான இந்த இயந்திரவியல் கோட்பாடுதான். பட்டறைத் தொழில் என்று அவர்கள் அதற்குப் பெயர் சூட்டினார்கள்.
இன்று மெக்கானிக்கல் தொழில் நுட்பம் உலகமெங்கும் கோலோச்சுகிறது. சின்னக் குண்டூசி முதல் பெரிய விமானங்கள் வரை அந்தத் தொழில் நுட்பம் பிரயோகிக்கப் படுகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. படிப்பறிவில்லாத சாமன்யன் முதல் மெத்தப் படித்த விஞ்ஞானிகள் வரை இயந்திரவியல் மூலம் பிரபஞ்சத்தைப் புதுமைப் படுத்துகின்றனர். அதைக் கருவாக எடுத்து நாவலாக்கியிருக்கிறார் காமுத்துரை. சாமான்யனின் மொழியில்,,, சாமான்யனின் புரிதலுக்கான நடையில்.
வாழ்க்கையை வாசித்து, மக்களைப்பற்றி மக்கள் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது நாவல். முக்கியமாக பெண்களின் நடைமுறைச் சித்திரங்கள் மற்றும் பேச்சுமொழி. அதோடு சிறுவர்களுடையதும்.
அநேகமாக 70களின் காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. ஒரு பைசாவுக்குப் பொரிகடலையும் ரெண்டு பைசாவுக்குத் தேங்காச் சில்லும் வாங்கிய காலம் அது. சிறார் உழைப்பு சட்டரீதியாக இல்லாவிட்டாலும் சமூகரீதியாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. காரணம் வறுமை. பாண்டியே இந்நாவலின் கதாநாயகன்; கைலாசம் துணைக் கதாபாத்திரம்தான். கைலாசத்திடம் அடிவாங்கி மிதிவாங்கித் தொழிலைக் கற்றுக் கொள்கிறான். ஒருகட்டத்தில் அடி தாங்காமல் வேலைக்கு வராமல் நின்றுகொள்கிறான் பாண்டி. என்ன முயன்றும் அவனை ஒர்க்சாப்புக்கு வரவைக்க முடியவில்லை. அப்போது கைலாசத்தின் மனைவி செண்பகம் சொல்கிறாள். ”தொழில் செய்யிற எடத்துல அடிக்யாம செய்யாம இருக்க முடியுமா? பள்ளியோடத்துல அடிக்கிறாங்களேங்குறதுக்காக பள்ளியோடம் போகாம இருந்துருவாகளா? கூரமேல சோத்தப் போட்டா ஆயிரங்காக்கா.” குழந்தை உழைப்பை நியாயப் படுத்தும் சமுதாய மொழி இது.
இந்த நாவலின் இன்னொரு முக்கியப் பகுதி நமது நாட்டுப்புற விளையாட்டுகள். குறிப்பாக சிறுவர்களின் வீதி விளையாட்டு. (சிறுவர்கள்தான் வீதியில் இறங்கி விளையாடுவார்கள். பெரியவர்கள் வீட்டுக்குள் இருந்து தாயம், பள்ளாங்குழி ஆடுவார்கள்.) பம்பரம் சுற்றுவது, கோலிக் குண்டு அடிப்பது, செதுக்கு முத்து, கல்லா மண்ணா ஆகிய ஆட்டங்களின் உள்ளார்ந்த நுட்பம் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் பல நாட்டுப்புற விளையாட்டுகள் இருக்கின்றன. பாச்சாக்கல். ஒரு காலால் கட்டம் தாண்டுவது, நொண்டியாட்டம்! அவையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. பணக்கார விளையாட்டுகளான கிரிக்கெட், ஹாக்கி போன்றவை கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன.
நாவலின் துவக்கம் விருவிருப்பாய் இருக்கிறது. பெரிய தொழில்காரனாகிய கைலாசத்தின் மனைவி செண்பகம் தூக்குமாட்டிச் சாகப் போகிறாள். பக்கத்துவீட்டு சுமதி, மச்சுவீட்டுக்காரம்மா, பெரியம்மா, செட்டியாரம்மா தெய்வானை எல்லாருமாய்க் காப்பாற்றுகிறார்கள். கைலாசம் வேறு பெண்ணோடு தொடுப்பில் இருப்பதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.
ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய நமது சமூக அமைப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களோடு களவு கொண்ட ஆண்களைக் கொண்டிருந்தது. “அவங் ஆம்பள; சகதி கண்ட எடத்துல மிதிச்சு தண்ணி கண்ட எடத்துல கழுவுவாங்; நீதான் பொருத்துப் போகணும்” என்று பெண்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. நெஞ்சு நிமிர்த்திப் பேசும் ஆண்களைப் பார்த்து, “ஒரு வப்பாட்டி வக்ய வக்கில்லாத பய, என்னா மனியம் பண்றாம்பாரு” என்று, ஆணுக்குப் பெருமிதம் பொங்கும் சங்கதியாய்க் கட்டமைத்தார்கள். செண்பகம் போன்ற சில பெண்கள் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். எதிர்ப்பு என்பது தற்கொலை செய்வது அல்லது கோபித்துக் கொண்டு பிறந்தகம் போவது. ஆண்களின் இந்த சகவாசத்துக்குக் காரணம் பெண்கள் வீட்டு வேலைக்காரிகளாகவோ வயல்வெளி உழைப்பாளிகளாகவோ இருந்த்துதான். பெண் தன்னளவில் ஒழுக்கமாய் இருக்கவேண்டும் என்பதுதான் சமூகவிதி.
கைலாசம் தனது அசட்டுத்தனமான தவறுகளுக்கு மனைவிமேல் பழிபோடுகிறான். அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறதாம். உடுக்கையடித்துப் பேயோட்டிய பின் சரியாகிறாளா அப்படியேதான் இருக்கிறாளா என நாவலில் சொல்லப்படவில்லை. பேய் என்பது மனிதனின் உளவியல் பாதிப்பா, மனசின் எதிர்மறைச் செயல்பாடா’ தெரியவில்லை. ஆதுர சாலை நாவலில், அ. உமர் பாரூக் சொல்கிறார், புற மனசில் தேங்கியிருக்கிற பழைய ஞாபகங்களின் பிரதிபலிப்பு என்று. விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப் படாத அமானுஷ்ய சக்தியைப் பற்றி எழுதும்போது ஒரு படைப்பாளி அது பற்றிய ஓர் உண்மையை அல்லது தனது கருத்தைச் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பொய்மை வெற்றிக்கொடி நாட்டிவிட்டுக் கடந்து போய்விடும்.
நெஞ்சை நெகிழவைக்கும் பாத்திரம் பாண்டி. குடும்ப வறுமையால் படிப்பை நிறுத்துவிட்டு ஒர்க்சாப்புக்கு வந்து அடிபட்டு மிதிபட்டு வறுமையற்ற வாழ்வை எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்ற துடிப்போடு இரவு பகலாய் உழைக்கிறான். அவனும் ஒரு டர்னராய் உயரவேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்குள் பெரிய கம்பனிகள் வந்து ஒர்க்சாப் ஓனர்களையெல்லாம் தொழிலாளிலளாய் மாற்றி விடுகிறது. தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே இருக்கும்படியான கார்ப்பரேட் கட்டமைப்பு நிலைகொண்டபின் அவனின் எதிர்காலக் கனவு கருகிவிடுகிறது.
அவ்வையார் நோம்பு பற்றிய விவரணை சிறப்பாகப் பதியமாகி இருக்கிறது. அது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கும்பிடப் படுகிறது. அவ்வையார் நோம்பு, சுமங்கலி பூஜை போன்ற பெயர்கள் அதற்கு உண்டு. இது நில உடமைச் சமுதாயத்தின் விழாவாய் இருக்கக் கூடும். பெண்கள் எல்லாரும் நிர்வாணமாகி, லிங்க உருவில் கொழுக்கட்டை பிடித்து, ஆண்களுக்குத் தெரியாமல் அவர்களாகவே உண்டு முடித்து விடுவார்கள். லிங்கம் ஆண் உறுப்பு. அது கடைசிவரை தனக்கு வாய்க்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுதல். இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் கணவன் சாவுக்குமுன் தன் சாவு நிகழவேண்டும். இத்தனை பெரிய தியாகிகளைத்தான் ஆண்வர்க்கம் அடாவடித் தனமாய் அடக்கி வைத்திருக்கிறது.
நாவலில் காலப் பதிவு சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு பைசாவுக்குத் தின்பண்டம் கிடைத்த காலம் 1970 அல்லது அதற்கு முந்தைய காலமாய்த்தான் இருக்க முடியும். ஸ்ரீராம் தியேட்டரில் திரிசூலம் படம் போடுவதாக வருகிறது. 80களின் துவக்கத்தில் வந்த படம் அது. அதே போல பாலு அண்ணன் பாண்டியைப் பார்த்து “ரஜினி மாதிரி இருக்க” என்கிறார். ரஜினிகாந்த் கதாநாயகத் தன்மையோடு போற்றப் பட்டச்து 83க்குப் பிறகுதான். கொஞ்சம் முயன்றிருந்தால் இந்தக் காலப் பிழையைத் தவிர்த்திருக்கலாம்.
கைலாசம் ஒரு ஸ்த்ரீலோலன்; வசந்தாவுக்குக் கணவன் சரியில்லை; இருவரும் ஊரை விட்டு ஓடிவிடுகிறார்கள். சில நாட்களில் கைலாசம் திரும்பிவந்து தன் குடும்பத்தோடு சேர்ந்து விடுகிறான்; வசந்தா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. இத்தகைய கவனமின்மைதான் நாவலின் கட்டுமானத்தைச் சிதைக்கிறது.
தேனியைவிட அல்லிநகரம் பெரிய ஊர். தேனி நகரமாகிவிட்டது. அல்லிநகரம் கிராமமாகவே இருக்கிறது. கிராமிய வாழ்வியல் பண்பாடும் ஒர்க்சாப் நடைமுறைகளும் இந்த நாவலைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. சிலபல பிழைகள் நிவர்த்திக்கப் படக்குடியவையே. நாவலின் நடையழகும் வாழ்வியல் சித்தரிப்பும் வாசனை உள்ளிழுத்துக் கொள்கின்றன.
நூல்: கடசல் நாவல்
ஆசிரியர்: ம. காமுத்துரை
வெளியீடு: எழுத்து பிரசுரம்
விலை: ரூபா 350/