Posted inPoetry
தேநீர் கவிதை – இரா. கலையரசி
விடியல் மெல்ல எட்டிப்பார்த்து
இரவின் ரகசியங்களை பேசியபடி
மனிதர்களைக் காண வந்துவிட்டது.
பொட்டிட்டு அலங்கரித்த பால்சட்டி
அக்கினியின் நாக்குகளில் சூடேறியபடி
வாடிக்கையாளரை வரவேற்கிறது.
தேநீரின் சாயத்தை இழுத்து உறிஞ்சிய
வடிகட்டிக்கு சூடு பொறுக்கவில்லை
புகையை விட்டு ஆசுவாசபடுத்தியது.
காதைப் பிடித்துத் தூக்கிய டீ மாஸ்டர்
கண்ணாடிக் குவளைகளில் மாறிமாறி
காற்றில் பறக்கவிட்டு ஆற்றினார்.
மேலே போன தேநீர்த்துளிகள்
குழந்தையென குவளை மடிசேர
நுரையில் முகம் பார்த்தார்.
முதலில் உறிஞ்சிய வாடிக்கையாளர்
பறவைகளின் “க்ரீச்” சத்தம்
பக்கவாட்டில் பின்னிசை பாட
தேநீரை குலுக்கி ஆட்டியபடி
உதட்டுக்கு ஒத்தடம் கொடுத்தனர்.
சில்லரைகள் கல்லாவை நிறைக்க
நெஞ்சுகூட்டில் இதமான சூடு
அன்றைய நாளைத் தொடங்கியது.