தேர்தலின் முன்னிரவு கவிதை therthalin munniravu kavithai

தேர்தலின் முன்னிரவு கவிதை


இந்தியக் குடியரசு
இமாலயக் கட்டமைப்பு !

மேடு பள்ளம் நிறவல்
மேன்மை குறிக்கோள்
நிறம் அகற்றல்
நியாயம் உணர்த்தல்
அறிவுப் பெருக்கம்
அகிலம் குறிக்கோள்!

மேன்மக்கள்
மெத்தப் படித்தோர்
மாதா தேசம்
மனமெலாம் வாசம்!
தேச பந்துக்களின்
தெய்வீக எண்ணம்!

தம்மைப் போலே
தம்மின மக்கள்
தாய்நாடுயர
தருவார் தியாகம்!

நம்பினர்
நாசமாய்ப் போன நம்மை!

கொள்ளையடிப்பதற்கு
முன் பணம் கொடுக்க
திருடர் போலே…
திரை மறைந்து வரும்
வேட்பாள!

அந்தக் கட்சிக்காரன்
வந்து விட்டான்…
இந்தக் கட்சிக்காரன்
என்ன ஆனான்?
சிகப்பு விளக்கேற்றி
வைத்து விட்டு….
சீ… சீ….
பல்லிளிக்கும் பாவிகள்!

விடியாத ராத்திரி
வீதியெங்கும் விலை மாதர்!

கொஞ்சிக் கொடுப்பவனும்
குழைந்துப் பெறுபவனும்
அஞ்சிடாமல் செய்யும்
அநியாயக் காமம்!

வந்தவன் கொடுப்பதுதான்
வாடிக்கை;
அது இந்த இரவிலும்….!