அறியப்படாத தமிழகம் – நூல் அறிமுகம்
தொ. பரமசிவனின் *சமயங்களின் அரசியல்* – ராதிகா விஜய் பாபு
வணக்கம்,
தொ. பரமசிவன் அவர்களது அறியப்படாத தமிழகம் படிக்கும் பொழுது தமிழகத்தில் உள்ள பல பழக்கவழக்கங்கள் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது தமிழகம் பற்றி அறிந்துகொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது என்றால், சமயங்களின் அரசியல் என்ற இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது அதிர்ச்சியில் உறையும் நிலை ஏற்படும்.
இந்த நூல் மொத்தம் 151 பக்கங்கள் உள்ளது இதில் 61 பக்கங்கள் சமயங்கள் பற்றிய சங்க காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள சமூக சமய கோட்பாடுகளை பற்றிய கட்டுரையும், மீதமுள்ள பக்கங்கள் முழுவதும் சுந்தர் காளி அவர்களது ஆழமான கேள்வியும் தொ. பரமசிவனின் அவர்களது எளிமையான, பதில்களையும் பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும் அதுபோல வைணவத்திலும் சைவத்திலும் முறையே உள்ள பாசுரங்கள் திருமுறைகள் பக்தி பரவசத்துடன் கேட்பவர்களுக்கு சிலிர்ப்பு ஏற்படும் ஆனால் மறுபுறம் சில பாடலில் உள்ள உள்ளர்த்தங்கள் அந்த காலகட்டத்தில் நடந்த அரசியலையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சமணத்தில் இருந்தும் பௌத்தத்திலும் உள்ள சில சடங்குகளையும், அவர்களது சமண பள்ளிகளையும் பௌத்த மடங்களையும் அபகரித்து அதிலுள்ள குறைகளை நிகர் செய்து பிற்காலத்தில் திமிங்கலம் போல சைவமும் வைணவமும் வளர்ந்து உள்ளது என்பது பல ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
அப்பருக்கும் திருஞானசம்பந்தருக்கும் உள்ள உறவு பற்றி கதைகளும் திரைப்படத்திலும் பார்த்து உள்ளவர்களுக்கு நாம் நம்புவது எல்லாம் உண்மை இல்லை என்பது போல பார்ப்பனரான திருஞானசம்பந்தர் வேதமும் வேள்வியும் முக்கியம் என்று முன்வைக்கிறார் ஆனால் அப்பர் வேறு எதுவும் தேவையில்லை சிவனை மட்டுமே முன்னிறுத்துகிறார். மாணிக்கவாசகர் சோழ நாட்டிற்குள் அனுமதிக்கப்படாமல் பாண்டியநாட்டு திருத்தலங்களை அதிகம் பாடியுள்ளார் நால்வரும் ஒரே மேடையில் இன்று இருந்தாலும் அன்று அவ்வாறு இல்லை. ஒரு நிறுவனம் ஆக்கப்பட்ட சமயம் ஜனநாயகத்துடன் இருக்க முடிவதில்லை.
எத்தனை சமயங்கள் வந்தாலும் இங்கு பக்தி வளமுடன் இருப்பதற்கு ஒரே முக்கிய காரணம் நாட்டார் வழிபாடு வேர்களாக தாங்கி நிற்கிறது என்பதை நிலை நிறுத்துகிறார்.
சங்க இலக்கியத்தில் சிற்றின்ப காதலானது நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு இறைவன்மீது பேரின்ப காதலாக உருவெடுத்திருக்கிறது. இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின் நாயக்கர் படையெடுப்பு என்று தமிழர்களின் அதிகாரம் பறி போகிவிட்டது.
குமரகுருபரருக்கு மீனாட்சியே முத்துமாலையை பரிசாக கொடுத்தாள் என்ற கதைக்கு பின்னால் நாயக்கர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கவில்லை அதனால் இப்படி கூறியிருக்கிறார் என்பது விளக்கியுள்ளார்.
இதைப்போல பல ஆச்சரியங்கள் இந்த புத்தகத்தில் புதைந்துள்ளது அதிக சமயப்பற்று உள்ளவர்கள் மனதிடம் இருப்பவர்கள் மட்டும் இந்த நூலைப் படிக்கலாம்.
ராதிகா விஜய் பாபு
பெங்களூர்