நூல் அறிமுகம்: கே. தியாகராஜனின் “ மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: கே. தியாகராஜனின் “ மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள் – பெ.விஜயகுமார்




மொழிபெயர்ப்பியல் குறித்த முழுமையான நூல் – ’மொழிபெயர்ப்பியல்: பயணங்கள், பரிமாணங்கள்
– பேரா.கே.தியாகராஜன்

மொழிபெயர்ப்புக் கலை இன்று நேற்று தோன்றிய கலை அல்ல. ஈராயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்து வருகின்ற கலையாகும். இருவேறு சமூகங்களை இணைக்கும் கருவியாக உள்ள இக்கலை அனைத்து மொழி வாசகர்களுக்கும் பயனுடையதாக இருக்கிறது. சமூகங்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றம் துல்லியமாக, தெளிவாநடந்திட வேண்டும் என்பதால் மொழிபெயர்ப்புச் செயல்பாடு தற்போது அறிவியலாகவே வகைமைப்படுத்தப்படுகிறது

அண்மைக்கால அறிவியல் தொழில்நுட்பப் பாய்ச்சலில் மொழிமாற்றம் செய்திட மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மென்பொருளை கணினியில் தரவிறக்கம் செய்து கணினி நிரல் வழி ஒரு மொழியிலிருந்து பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புப் பணியை நொடிப்பொழுதில் செய்திடும் மாயை நடக்கிறது. ஆயினும் தற்போது பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற கூகிள் மொழிபெயர்ப்பு சேவை ”At the outset, I take this opportumity to thank you for being a pillar of strength in the onerous endeavour that you have entrusted to me and my team members” என்ற வாசகத்தை ”ஆரம்பத்தில், எனக்கும் எனது குழு உறுப்பினர்களுக்கும் நீங்கள் ஒப்படைத்த கடினமான அனுப்புதலில் வலிமையின் தூணாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்” என்று அபத்தமாக மொழிபெயர்த்துத் தருகிறது. 

ஒரு பனுவலை தருமொழியிலிருந்து பெறுமொழிக்கு மொழிமாற்றம் செய்யும் போது மூலத்தின் சாரம் குறையாமல் இருக்க வேண்டும். மூலப் பனுவல், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பனுவல் என்று இரண்டிற்கும் நியாயம் செய்திடுவதாக மொழிபெயர்ப்பு இருந்திடல் வேண்டும். மொழிபெயர்ப்பானது இரு மொழிகளின் இலக்கண அறிவும், சொல்லாட்சித் திறனும், பண்பாட்டு அறிவும் ஒருங்கே அமையப் பெற்றால் மட்டுமே தரமாக இருக்கும். மொழிபெயர்ப்பில் கிடைக்கும் வெற்றி மொழிபெயர்ப்பாளரின் நேர்மை, உழைப்பு, திறன், மெனக்கெடல் ஆகியவற்றிற்குள்ளேயே அடங்கியிருக்கிறது. இந்த அடிப்படியில் கூகிள் மொழிபெயர்ப்பு சேவை மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.       

மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகள் குறித்து பீட்டர் நியூமார்க், ரோஜர் பெல், அண்டன் பொப்போவிக், யூஜின் நைடா போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் நூல்கள் வெளிவந்துள்ளன. கணபதிப்பிள்ளை (மொழிபெயர்ப்பும், சொல்லாக்கமும்-1967), சண்முகவேலாயுதம் (மொழிபெயர்ப்பியல்-1985), சிவசண்முகம்-தயாளன் (மொழிபெயர்ப்பியல்- 1989), சேதுமணி மணியன் (மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும், உத்திகளும்-1990),  ராஜேஸ்வரி (மொழிபெயர்ப்பியல் ஆய்வு-1992), முருகேசபாண்டியன் (மொழிபெயர்ப்பியல்-2008) ஆகியோர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பியல் தொடர்பான நூல்கள் தமிழ்நாட்டு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக இடம் பெற்றிருக்கின்றன.     

அண்மையில் இவ்வகையில் மொழிபெயர்ப்பியல் குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ள பேரா.கே.தியாகராஜனின்மொழிபெயர்ப்பியல்பயணங்கள், பரிமாணங்கள்நூல் வெளிவந்துள்ளது. பேரா.கே.தியாகராஜன் ஆங்கிலப் பேராசிரியராக தமிழ்நாடு அரசு கல்லூரிகள், புதுவை, ஹொதைதா, ஏடன் பல்கைக்கழகங்கள் எனப் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் நாற்பதாண்டுக் காலம் பணியாற்றிய்வர். அறுபதுக்கும் மேற்பட்ட எம்.ஏ. எம்.ஃபில்., முனைவர் பட்ட ஆய்வுகளை வழிநடத்தியவர். பல ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்றுனராகப் பணியாற்றியவர். பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்களிப்புச் செய்தவர். மொழிபெயர்ப்பியலில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். நூலின் அணிந்துரையில் பேராசிரியர் பி.மருதநாயகம்மொழிபெயர்ப்புக் களத்தில் கடந்த ஐம்பதாண்டுக் காலச் சுயஅனுபவத்தில்மொழிபெயர்ப்பியல் பயணங்கள், பரிமாணங்கள்என்ற தலைப்புடன் பேராசிரியர் தியாகராஜன் எழுதியுள்ள இந்நூல் மொழிபெயர்ப்பியல் பற்றிய முதல் முழு நூல் என்று நான் கூறுவது உயர்வுநவிற்சியாகாது’ என்று குறிப்பிடுகிறார். ”ஒரு மொழிபெயர்ப்பாளர் செயல்படும்போது எவ்வகையில் எல்லாம் வாசகரை விட்டுவிலகிச் செல்கிறார், எவ்வாறு மூலப் பனுவலுக்குச் செய்ய வேண்டிய நியாயங்களைச் செய்யாது போகிறார் என்பனவற்றை உரைநடை இலக்கிய மொழிபெயர்ப்பு ஒன்றை முன்வைத்து பேரா.தியாகராஜன் இந்நூலில் விரிவாகத் திறனாய்வு செய்துள்ளார்” என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.இளங்கோ பாராட்டுகிறார்.

தியாகராஜன் எழுதியுள்ள இந்த நூல் நீண்ட முகவுரை, ’மொழியாக்கச் சிந்தனைகள் வரலாறு’, ’மொழியியல்’, ’கலாச்சாரம்’, ’இலக்கியம்’, ’நாடகம்’, ’உரைபெயர்ப்பியல்என்று ஆறு இயல்கள், நெடியதொரு முடிவுரை என்று விரிந்து செல்கிறது. மொழிபெயர்ப்பியலில் ஆழ்ந்த புரிதல் இல்லாதவர்களுக்கு நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள கலைச்சொல் விளக்கக் கோவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   

முகவுரை: பேச்சு மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்து மொழிபெயர்ப்பு இரண்டிற்குமுள்ள வேறுபாடுகள், மொழிபெயர்ப்பின் பயன்கள் குறித்து நூலின்  முகவுரையில் பேசப்படுகிறது. ‘பொருளின் பொருள்என்று தலைப்பிடப்பட்ட பகுதியில் மொழிபெயர்ப்பில் கவனிக்கப்பட வேண்டிய தலையாய அம்சமாக பனுவலின் கருப்பொருள் அல்லது அர்த்தம் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேசுபவரின் பார்வையில் ஒரு சொல்லிற்கு இருக்கின்ற பொருள், கேட்பவரின் பார்வையில் வேறொன்றாக வேறுபடுகிறது. உரையாடலின் சூழ்நிலைக்கேற்றவாறும் சொல்லின் பொருள் மாறுபடுகிறது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பது மொழிபெயர்ப்பாளனுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்க மறுக்கிறது. அவ்வாறாக மொழிபெயர்ப்பது அறிவியல், சட்டம், திருமறைகள் போன்றவற்றின் மொழிபெயர்ப்புக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதுபோன்ற மொழிபெயர்ப்பு இலக்கியப் பனுவலுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. 

மொழிபெயர்ப்பின் போது, பனுவலின்உள்ளடக்கம்அல்லதுவடிவம்’ ஆகியவற்றில் எது தலையாய அம்சம் என்ற விவாதம் எழுகிறதுமொழியாக்கச் செயல்முறையில் மொழியாக்கத்தின்அலகுஎது ன்ற  கேள்வியும் பிறக்கிறது. முழுப் பனுவலையும் கூர்ந்து வாசித்த பின்னரே மொழியாக்கத் துண்டுகளைப் பற்றிச் சிந்திப்பது நல்லது என்கிறார் நூலாசிரியர். அடுத்து மொழிபெயர்ப்பாளரைஒருங்கிணைப்பாளர்’, என்பதா அல்லது ’படைப்பாசிரியர்என்பதா என்ற கேள்வி எழுகிறது. மொழிபெயர்ப்பாளர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றால் தன்னுடைய சொந்த எண்ணங்கள், உணர்வுகளுக்கு இடந்தராது, தருமொழிப் பனுவலையும் அதன் ஆசிரியரையும் மட்டுமே அவர் முன்னிறுத்துவார்.. மொழிபெயர்ப்பாளர் படைப்பாசிரியராக இருக்கும் போது அவர் பெறுமொழி பனுவல் மற்றும் அதன் வாசகரை  முன்னிறுத்துவார். அப்போது அவர் தன்னுடைய சொந்த உணர்வுகள், எண்ணங்களுக்கு இடம் தருவார். முகவுரையில் மொழிபெயர்ப்பின் பல பரிமாணங்கள் குறித்து விரிவாக எழுதிச் செல்லும் நூலாசிரியர், தமிழ் மொழிபெயர்ப்புப் பணியில் ரண்டு அணுகுமுறைகள் நீடித்து வருவதைக் குறிப்பிடுகிறார். ஒருபுறம் மூலத்திலிருந்து சற்றும் பிறழாதசமனிஅணுகுமுறையும், மறுபுறம் வேண்டிய சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு செய்யும்தழுவல்அணுகுமுறையும் பல்லாண்டுகளாக நீடிக்கின்றன என்கிறார்.

மரபு வழுவாத நூலுக்கான இலக்கணம் சொல்லும் போது அதனைதொகுத்தல், விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே என்று தொல்காப்பியர் நான்காக வகைப்படுத்துகிறார். “மொழிபெயர்ப்பு செய்யும் போதுஅதர்ப்படசெய்ய வேண்டும். அதாவது மொழிபெயர்ப்பு நெறிகளைப் பின்பற்றிஉள்ளதை உள்ளபடியேதமிழில் தரவேண்டும் என்று  தொல்காப்பியத்தின் உரையாசிரியரான  பேராசிரியர் கூறுகிறார். தமிழ் மொழியாக்கச் சிந்தனை வரலாற்றில் பன்மொழி வித்தகர் A.K.ராமானுஜனைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ராமானுஜன் தேர்ந்தெடுக்கப்பட் சில அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கவிதையை கவிதையால்தான் மொழியாக்கம் செய்ய முடியும் என்ற வாதத்தை ராமானுஜன் ஆதரிக்கிறார். மொழியாக்கத்தில் கலாச்சாரத்தின் இடம், வாசகர்களின் பங்கு போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்

மொழியாக்கச் சிந்தனைகள் வரலாறு: அடுத்ததாக மேற்கத்திய மொழியாக்கச் சிந்தனைகள் வரலாறு குறித்து நூலாசிரியர் விரிவாகப் பேசுகிறார். பண்டைக்கால மொழியாக்கச் சிந்தனையாளர்களாசிசரோ, ஹோரஸ், க்விண்டில்யன், அகஸ்டின், ஜெரோம், பதினேழாம் நூற்றாண்டு பிரித்தானியர் ட்ரைடன், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆர்னால்டு ஆகியோரின் மொழியாக்கச் சிந்தனைகள் அனைத்தும் பாரம்பரிய இலக்கிய, இலக்கண, தத்துவத் துறைகளுக்குள் அடங்கியிருப்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மொழியாக்கத்தில் பாலின அரசியல் மற்றும் பெண்ணிய மொழியாக்கச் சவால்கள் குறித்துப் பேசும் இந்த இயலின் இறுதியில் மொழியாக்கச் சிந்தனை வரலாற்றின் வளர்ச்சியை விளக்கும் அட்டவணையை நூலாசிரியர் வழங்கியுள்ளார்.

மொழியியல்: மொழியியலுக்கும், மொழிபெயர்ப்பியலுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருப்பதைமொழியியல்எனும் தலைப்பிட்ட பகுதி விளக்குகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாய் இருப்பது குறிப்பிடப்படுகிறது. எந்தவொரு பனுவலுக்கும் ஒரு கருப்பொருள் அல்லது பேசுபொருள் அல்லது தலைப்பு உள்ளது. முழுமையான பனுவல் வடிவம் பெறுவதற்குப் பல வாக்கியங்கள் தேவைப்படுகின்றன. அந்த வாக்கியங்கள் பனுவல் தன்மை பெற்றிட விரிந்த அர்த்தமட்டப் பின்னல் உதவுகிறது. ஒப்பிணைவு, விவரிப்பு, எடுத்துரைத்தல், தெளிவாக்கல், வேறுபடுத்துதல் போன்ற அர்த்த உறவுகள் வாக்கியங்களிடையே பிணைப்பை உண்டாக்கி சிறந்ததொரு பனுவலை உருவாக்குகின்றன. மொழிபெயர்ப்பாளருக்கு மொழியியல் தரும் தலையாய இரு கருத்தாக்கங்கள் உள்ளன. ஒன்று அதன் விரிந்தஅர்த்த ஆளுமை’. மற்றொன்றுமேலிருந்துகீழ் பிணைப்பு’. இவற்றை உள்வாங்கிச் செய்யப்படுகின்ற மொழியாக்கம் மேம்பட்டதாக, மிகுந்த பொலிவுன் அமைந்து விடுகிறது.  

கலாச்சாரம்: மொழிபெயர்ப்பியலுக்கு கலாச்சாரம் வழங்குகின்ற  பங்களிப்புகள், பார்வைகள், பயன்கள் பற்றிகலாச்சாரம்எனும் இயலில் நூலாசிரியர் பகிர்ந்து கொள்கிறார். குறிப்பிட்ட மனிதகுல மொழி குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அதற்கு உயிரோட்டம் தருவது அக்கலாச்சாரம் சார்ந்த மொழிப்பயனர்களே. மொழிபெயர்ப்பியலின் அணுகுமுறையில் 1980களில் மிகப் பெரியதொரு மாற்றம் தொடங்கியது. பனுவல் ஒன்றின் மொழியாக்கப் பணி தொடங்கிய உடனேயே அதன் ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்ற களம் மாறி விடுகிறது. தருமொழிபெறுமொழி ன்று இரு மொழிகள், இரு கலாச்சாரங்கள் என்ற புதிய களத்தில் பயணத்தைத் தொடங்கி விடுகின்றன. இக்கூட்டு வினையின் விளைபொருளே பெறுமொழி பனுவலாகப் பரிணமிக்கிறது. இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக கம்பன் எவ்வாறு வால்மீகி ராமாயணத்தில் பல மாற்றங்கள், நீக்கல்கள், சேர்க்கைகள் செய்து தமிழ்ச் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்புடைய வகையில் மொழியாக்கம் செய்து வெற்றி கண்டுள்ளான் என்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

இலக்கியம்: பனுவல்கள் கோடிக்கணக்கானவை. அவை தங்களுடைய உள்ளடக்கம், வடிவம், பயன்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. சமயம், தருக்கம், அரசியல், வணிகம், நுண்கலைகள், இலக்கியம், அறிவியல், மருத்துவம், சமையல் போன்ற பல துறைகளின் கீழ் அவை வகைப்படுத்தப்படுகின்றன. இலக்கியப் பனுவல் மற்ற அனைத்துப் பனுவல்களிலிருந்தும் வேறுபடுத்தப்படுகிறது. ஒரு மொழியில் படைக்கப்படுகின்ற உயர்ந்த இலக்கியப் பனுவல்களை பிற மொழி வாசகர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. இலக்கிய மொழியாக்கம் செய்வது சுகமானஆனால் சிரமமும், சோதனைகளும் நிறைந்ததொரு பயணம். இரு மொழிகளிலும் உள்ள இலக்கியத்துக்கான அனைத்து அம்சங்களையும் கண்டறிந்து இலக்கிய மொழியாக்கத்தில் அவற்றைச் சீரிய முறையில் கையாள வேண்டியுள்ளது.  

மொழிகளுக்குள்ளேயே செய்யப்படும் மொழிபெயர்ப்பு: ஒரு மொழியில் மிகவும் தொன்மை வாய்ந்த, பெரிதும் போற்றப்படும் இலக்கியப் பனுவல் இருக்கலாம். ந்தப் பனுவல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த மக்களுக்கு அதனைப் படித்துப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருந்திருக்காது. ஆனால் ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பின் மொழியிலும், சமூககலாச்சார விழுமியங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. பிற்காலங்களில் வரும் மக்கள் அந்தப் பனுவலை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு மொழியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பனுவலை அதே மொழியில் மீண்டும் எழுதுவதை சாதாரணமாக மொழிபெயர்ப்பு என்று நாம் சொல்வதில்லை. உரைநூல் என்றே நாம் அதனைக் குறிப்பிடுகிறோம். பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளுக்கு காலந்தோறும் பல உரைநூல்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. ஆனால் ரோமன் ஜேகப்சன் என்ற மொழியியல் அறிஞர் இதை ஒரு குறிப்பிட்ட மொழிக்குள்ளேயே செய்யப்படும் மொழிபெயர்ப்பு (Intra Lingual Translation) என்றே அதனை அழைக்கிறார்

செய்யுள் மொழியாக்கம்: இலக்கிய மொழியாக்கத்தில் செய்யுள் மொழியாக்கமே மிகுந்த விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. உரைநடை, நாவல், நாடகம், சிறுகதை போன்ற இலக்கிய வகைமைகள் குறித்து  இத்தகு விவாதங்கள் எழுவதில்லை. மேற்கத்திய செய்யுள் மொழிபெயர்ப்பில் ஆங்கிலக் கவிஞர் ஜான் ட்ரைடன் மிகவும் முக்கியமானவர். ட்ரைடன் மொழிபெயர்ப்பானது சொல்லுக்குச் சொல், பொருளுக்குப் பொருள், கட்டற்ற மொழிபெயர்ப்பு (metaphrase, paraphrase, imitation) என்று மூன்று வகைப்படும் என்கிறார். ”மொழிபெயர்ப்பில் எது தொலைக்கப்படுகிறதோ அதுதான் செய்யுள் (கவித்துவம்)” (Poetry is what gets lost in translation) என்று அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் கூறுவதிலிருந்து செய்யுள் மொழியாக்கம் எவ்வளவு கடினமானது என்பது புலப்படுகிறது. கவிஞர்களுக்கு மட்டுமே கைகூடுகின்ற செய்யுள் நடையில் சொற்கள் தனித்துவ முத்திரைப் பொருள்களை உணர்த்துகின்றன. இன்னும் பல காரணங்களால் செய்யுளின் நடை அலாதியாக, தனித்துவம் கொண்டிருக்கிறது. அது  எளிதில் மொழிபெயர்க்க முடியாததாக உள்ளது.  

உரைநடை மொழியாக்கம்: நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, கடிதங்கள், நாட்குறிப்புகள் ஆகியன உரைநடை இலக்கியங்கள் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் பதிப்புத் துறை கோலோச்சத் துவங்கிய பிறகு  பெரும்பாலான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட நாவலும், சிறுகதையும் பதிப்புத் துறையில் பிரபலமாகின. புனைவிலக்கியங்கள் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டன. காப்புரிமைகள் மதிக்கப்பட்டன. காப்புரிமையில் மொழிபெயர்ப்பாளர்களின் பெயரைக் குறிப்பிடும் வழக்கம் வந்தது. மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மொழியாக்கங்களின் உரிமையாளர் ஆனார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் ராயல்டி பெற்றனர். மொழியாக்கம்தொழில்முறையானது. மொழிபெயர்ப்பாளர்களின் சமூக மரியாதை கூடியது. செய்யுள் இலக்கிய மொழிபெயர்ப்பில் இருக்கும் அளவிற்கு உரைநடை மொழிபெயர்ப்பிலும் சிரமங்கள் இருக்கவே செய்கின்றன. புதுமைப்பித்தனின்சாபவிமோசனம்சிறுகதையை கா..சு. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அந்த மொழிபெயர்ப்பைத் தன்னுடைய ஆய்வுக்கான  அடித்தளமாக்கி உரைநடை இலக்கிய மொழிபெயர்ப்பின் சிரமங்களை நூலாசிரியர் விளக்குகிறார்.  

நாடகம்: நாடக இலக்கியம்ஏட்டு நாடகம்’ ’மேடை நாடகம்(page play, stage play) என்று இரண்டு வகைப்படுகிறது. உரைநடை இலக்கியங்கள் போலவே ஏட்டு நாடகங்களும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. மேடை நாடகங்கள் மொழியாக்கம் செய்யப்படும்போது பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. நாடக மொழிபெயர்ப்பாளருக்கு மொழித்திறன் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அவருக்கு மேடை அமைப்பு, பின்புலச் சூழல் அமைப்பு, உச்சரிப்பு, உடல் மொழி போன்ற கூறுகளிலும் ஓரளவு புலமை தேவைப்படுகிறது. நூலாசிரியர் நாடக மொழியாக்கத்தில் நினைவில் கொள்ள வேண்டிய தலையாய சில அம்சங்களை பட்டியலிடுகிறார்

  1. மேடையில் பேசுவதற்கென்றே எழுதப்படுகிற நாடக உரையாடல் அன்றாட வாழ்க்கையில் மக்கள் இயற்கையாகப் பேசுவதைப் போல் இருப்பதில்லை. அடிப்படையில் நாடக உரையாடல் மிகவும் செயற்கையானது என்பதை மொழிபெயர்ப்பாளர் புரிந்து கொள்ள வேண்டும்.  
  2. முரண்பாடு, நகைச்சுவை, மறைமுகக் குறிப்பு, சொல்லாடல், கால முரண்பாடு, உச்சத்திருப்பம், அற்பநிலைத் திருப்பம் போன்ற பல நாடக உத்திகளை மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  3. நாடக அரங்கில் குழுமியுள்ள பார்வையாளர்கள் மேடை நிகழ்வுகளைத் தங்கள் ரத்த நாளங்களில் உணர்கிறார்கள். கதாபாத்திரம் அழும்போது அழுகிறார்கள். சிரிக்கும்போது சிரிக்கிறார்கள். எனவே நாடக மொழியாக்கம் அவையோர் ஏற்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
  4. மொழியாக்கம் மூல நாடகத்திற்கு நெருங்கி இருக்கலாம்; ஆனால் அதைத் தாண்டி மொழியாக்கம்தழுவல்நிலையை அடைந்து விடக் கூடாது. தயாரிப்புக் குழுவில் மொழிபெயர்ப்பாளரும் இடம் பெற்றால் நாடகம் இன்னும் சிறப்புறும்

உரைபெயர்ப்பியல்: மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகளின் வரலாறு தொன்றுதொட்டே இருந்து வருகிறது. ஆனால் உரைபெயர்ப்பு பற்றிய சிந்தனைகளின் வரலாறு 1950களில்தான் துவங்குகிறது. உரைபெயர்ப்புக்கு என்றே தனித்துவ அம்சங்களும், பிரச்சனைகளும் உள்ளன. கல்விப் புலங்களில் இது உரைபெயர்ப்பியல் (Interpreting Studies) என்றழைக்கப்படுகிறது. உரைபெயர்ப்புக்கு மட்டுமே உள்ள பிரச்சனைகளை இப்பகுதியில் நூலாசிரியர் வரிசைப்படுத்தியுள்ளார்.

கால அவகாசம்: உரைபெயர்ப்பு செய்வதற்குக் கிடைக்கும் கால அவகாசம் ஒரு சில விநாடிகளே ஆகும். தருமொழியில் தரப்படும் உரையை உடனுக்குடன் பெறுமொழியில் நேரடியாகத் தாமதமின்றித் தர வேண்டும். பிழைகள், சிதைவுகள், திரிபுகள் இல்லாமல் உரையாகவே தர வேண்டும்.

ஒலி வடிவிலான தருமொழி உரை: தருமொழி உரையானது உரைபெயர்ப்பாளருக்கு பகுதி பகுதியாகத்தான் கிடைக்கும். உடனே அது மறைந்தும் போகும். ஒவ்வொரு பகுதியும் ஒரு முறைதான் கிடைக்கும். பேசுபவர் பேச எடுத்துக் கொள்ளும் நேரம் மட்டுமே கிடைக்கும். உடனே மறைந்தும் போகும். அதற்குள் அந்த உரையை உள்வாங்கி உரைபெயர்ப்பாளர் நினைவில் நிறுத்த வேண்டும். நினைவில் நின்றதை மட்டுமே அவரால் உரைபெயர்க்க முடியும். பேச்சாளர் தொடர்ந்து பேசுவதற்கு ஏதுவாக உரைபெயர்ப்பை விரைந்து முடிக்க வேண்டும்.

திருத்தங்களுக்கு வாய்ப்பில்லாதது: உரைபெயர்ப்பாளர் பெறுமொழி உரையை முதல் முயற்சியிலேயே நிறைவுள்ளதாகத் தர வேண்டும். திருத்தங்களுக்கு வாய்ப்பில்லை என்பதால் குளறுபடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். பேச்சாளரின் பேச்சை உரைபெயர்ப்பாளர் மாற்றிச் சொல்லக்கூடாது.

ஆலோசனைகளுக்கும் வாய்ப்பில்லாதது: பெறுமொழி எழுத்தில் பனுவலாக்கம் முடிந்தபின் எழும் சந்தேகங்களுக்கு பிறரிடம் ஆலோசனை பெற்றிட வாய்ப்பிருக்கும். எனவே அவர் மேலும் திருத்தி அதனைச் செழுமை ஆக்கிடலாம். இத்தகைய வாய்ப்பு உரைபெயர்ப்பாளருக்குக் கிடைக்காது. உரைபெயர்ப்பு உடனுக்குடன் செய்ய வேண்டிய பணி என்பதால் மொழிபெயர்ப்பாளரைவிட உரைபெயர்ப்பாளருக்கு ஒருமுகப்பட்ட ஆழமான கவனம் தேவை. மின்னல் வேகத் துல்லிய நினைவாற்றல் அவசியம். விரைந்து குறிப்பெடுக்கும் திறமை வேண்டும்.

உரைபெயர்ப்பாளர்கள் கையாளும் உத்திகள்:            

  1. முன்கூட்டிய ஆயத்த உத்தி: உரைபெயர்ப்பாளர்கள் முன்கூட்டியே தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள். பேச்சாளர் பேசப்போகும்பொருள்குறித்த தகவல்களை முன்கூட்டியே திரட்டி வைத்துக் கொள்கிறார்கள். பேச்சாளரின் பேச்சு நடை, அடிக்கடி பயன்படுத்தும் மேடை உத்திகள் போன்ற தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதனால் உரைபெயர்ப்பு வெற்றிகரமாகிறது.       
  2. சுருக்கும் உத்தி: பேச்சாளர் தன்னுடைய உரையில் தேவைக்கும் மேலான சொற்களை, வாக்கியங்களைப் பயன்படுத்தும் போது உரைபெயர்ப்பாளர் கருத்தின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு மிகையான சொற்களையும், வாக்கியங்களையும் நீக்கி சுருக்கும் உத்தியைக் கையாளலாம்
  3. விட்டுவிடும் உத்தி: தருமொழிப் பேச்சில் உள்ள சில தகவல்களை உரைபெயர்ப்பில் சேர்க்காமல் விட்டுவிடும் உத்தியும் கையாளப்படுவது உண்டுபேச்சாளரின் பேச்சிலிருந்து எதை விட்டுவிடுவது என்பதில் உரைபெயர்ப்பாளர் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்றதை மட்டுமே விட்டுவிட வேண்டும்.  

முடிவுரை; மொழிபெயர்ப்பியல் குறித்து ஆழமாகவும் அகலமாகவும் 590 பக்கங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்நூல் நல்லதொரு முடிவுரையுடன் முற்றுப் பெறுகிறது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு முன்பாக பல பாதைகள் இருக்கின்றன. அவரவர் விருப்பப்படி தெரிவு செய்து தங்கள் மொழியாக்கப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஒருவர் ஒரே சமயத்தில் எல்லாத் திசைகளிலும் பயணிக்க முடியாது. அவ்வாறு முயல்வது எந்த இலக்கையும் அடைய உதவாது. ”எனவே தெளிவான ஒருமுகப்படுத்தப்பட்ட வரையறைக்குள் நின்று, ஒரு திசையில் பயணிக்கும் ஒருவர் அதனுடைய உன்னதங்களை எண்ணிப் பெருமிதம் கொள்ளலாம். அதன் உயர்வுகளைப் பேசி உள்ளம் மகிழலாம். ஆனால் வேறொரு திசையில் விரும்பிப் பயணிக்கும் ஒருவரை ஏளனத்துடன் பார்த்து எள்ளி நகையாடக் கூடாதுஎன்ற வேண்டுகோளுடன் நூலாசிரியர் கே.தியாகராஜன் நூலினை முடிக்கிறார்.  

மொழிபெயர்ப்பியலின் முழு பரிமாணங்களையும் விளக்கிடும் இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிடைத்த அரியதொரு பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை. மொழிபெயர்ப்புப் பயணத்தில் இருப்பவர்களும். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மொழிபெயர்ப்பியலைப் பயிற்றுவிப்பவர்களும், பயில்பவர்களும் இந்நூலினைப் படித்துப் பயன்பெற வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களின் நூலகங்கள் அனைத்திலும் இந்நூல் தவறாது இடம்பெற வேண்டும்.  

பிழைகள் ஏதுமின்றி நூலினைப் பாங்குடன் கொண்டு வந்துள்ள காலச்சுவடு பதிப்பகம் பாராட்டத்தக்கது. மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகள் குறித்து தமிழில் வெளிவந்துள்ள இந்நூல் தருகின்ற  உத்வேகத்தில் இதுபோன்ற நல்ல நூல்கள் தொடர்ந்து வெளிவரும் என்று நம்பலாம்.

– பெ.விஜயகுமார். [email protected] 

மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள்
கே.தியாகராஜன். email: [email protected]
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை:ரூ.675/-
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




என்னென்ன நினைச்சிருந்தோம்…
ஏழ்மை விரட்ட…
வரம் வேண்டி காத்திருந்தோம்…

ஊர் காக்கும்…தெய்வத்தை…
ஊரைச் சுத்திக்காட்ட…
தேர் ஏற்றி வலம் வந்தோம்…

நொடிப்பொழுதில்…
என்ன நடந்ததென…தெரியலையே…
ஏதும் விளக்கம் கூற…மொழியில்லையே…

காலாற…நடந்தவக எல்லாம்…
கட்டையா…ஆனக…கைப்பிடிச்சு
நடந்த வடத்தாலே…

ஒய்யாரமா ஏறி‌ வந்த…
சாமிக்கும் புரியலையோ…
இந்த ஊர்வலம் இறுதி ஊர்வலமா
அமையுமோ என…

என்ன சொல்லி தேத்த…
உறவை இழந்து தவிப்பவருக்கு…
சாமி தூக்க வந்தவங்க…

சாமியா…போனாங்கனு…

இன்னும் மாறவில்லை
****************************
கைப்பிடித்து நடந்த
குழந்தை…கை விட்டே…
பள்ளி செல்லும் போது
அழுகையைத் தன் துணைக்கு
அழைக்கிறது…இன்னும்
இதெல்லாம்…
மாறவில்லை…

மாலை அழைக்கும்…பெற்றோரின்
கரம் புகவே ஓடிச்சென்று…
உள்ளங்கையில்…தம்…அன்பை
புகுத்தும்…நிலை இன்னும் மாறவில்லை…

நடந்த கதையும்…
நடக்க இருக்கும் கதையும்…
மூச்சு விடாமல் சொல்லி முடித்தே…
பொழுதை நகர்த்தும்…குழந்தைகளின் மனம்
இன்னும் மாறவில்லை…

வீடு நிறைய தின்பண்டங்கள்
இடம் பிடித்திருந்தாலும்…
பாதையோரக் கடைகளில்…
தனக்குப் பிடித்த உணவைக்கேட்டு…
வாங்கி உண்ணும் குழந்தைகளின்
ருசி…இன்னும் மாறவில்லை…

வீட்டுப்பாடம் என்றதும்…
இல்லாத பசியும்…வராத தூக்கமும்…
தவறாமல் இடம் பிடித்தே…
காலம் நகர்த்த முயற்சிக்கும் பண்பும்…
இன்னும் மாறவில்லை…

குழந்தைகள்…குழந்தைகளாகத் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
மாறாமல்…

நாம் தான்…நம் எண்ணங்களை
குழந்தைக்கு ஊட்டி…மாறாமல்…
இருக்கின்றோம்… குழந்தைகள்
மாறவில்லையே…என்ற ஏக்கத்தில்…

– சக்தி

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
பிறிதொரு வார்த்தை

ஒரு வார்த்தைக்கு மட்டும் பிறிதொரு வார்த்தை என்றும் இல்லை
அதுவும் நேசத்தை வார்த்தையில் சொல்வதென்றால்
ஒரு கடலைக் குடித்து விட்டு வர வேண்டும்

நானோ உதிர்த்த விண்மீன்களை
கைகளில் ஏந்திக்கொள்ளத் துடிப்பேன்
அபலைச் சருகுகளை எடுத்து முகத்தோடு உரச விடுவேன்
கண்திறக்காத குட்டிப் பூனைக்கு
வெண் சங்கில் பாலைப் புகட்டுவேன்

எண்ணங்களில் ஒரு பாலம் கட்ட முடிந்தால் போதும்
நட்டநடு நிசியில் உன் முன் ஒரு முழு அல்லி இலை போல  வந்து நிற்பேன்
மார்பில் தலைசாய்த்து லப்டப் இசையை  ஸ்வரம் பிரிப்பேன்
உதிரும் மூச்சுகள் கோர்த்து
உனக்காக ஒரு மாலை கட்டுவேன்
பின்பு உனக்காக எழுதப்பட்ட இந்தக் கவிதையை கிழித்துப் போட்டு விட்டு
உன் உள்ளங் கால் பாதத்தில்
ஒரு துளி கண்ணீரை எடுத்து
திருஷ்டிப்பொட்டிட்டு வருவேன்

கவிதை 2
மனமற்ற செம்பருத்தி

அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப் பூனையின் பரவசமாய்
கால்களைச் சுற்றிச் சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து

அள்ளிப்பருக நினைக்கையில்
மேகத்தைச் சபித்தபடி ஊர்ந்து போகும்
கிழவனின் உதடுகளில்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
வனாந்தரத்தின் வாசம்

எலிக்குஞ்சுகளாகத் தொலைக்காட்சியை
மொய்த்துக் கிடக்கும் கண்களில்
ஆதி வேட்டை வெறி அடங்கவேயில்லை

பூனையின் கண்களாய் மினு மினுத்துக்கிடக்கும்
சிறுவர்கள்
விளம்பர இடைவேளைகளில்
ரிமோட்டைக் கைப்பற்றி
பீம் டாம் சகிதம் வலம் வருகிறார்கள்

ஈரத்தை சுமந்தபடி புறப்பட்டு வரும்
சாயங்காலக் காற்றுக்கு
திறந்த படி காத்திருக்கின்றன
மனித உடலங்கள்

மொட்டைமாடியெங்கும்
காயப்போட்ட கொடிகளில் பட படத்து
அடித்துக்கொள்ளும்  மெய் இரகசியங்கள்

திருகப்பட்ட கழுத்துகளோடு
காற்றிலலையும் காகங்கள்
இரவின் கீற்றாய்  தரையிறங்கி வருகின்றன
ஒரு துளியையும்  குடித்து விட இயலாத
விரக்தியில்

சூட்டப்படும் மாங்கல்யமாய் பறந்து வந்த
வெண்புறாக்கள்
சட்டென்று கலைகின்றன
இரவு உருவாகும்  புள்ளியில்

மனமற்று ஆடும்
வாசல் செம்பருத்தியில் என்
வாசம் ஒரு கணம் தான் என்றாலும்
போதும் இது
எத்தனையோ தூக்கமற்ற
இரவுகளைக்  கரைத்து விடுவதற்கு

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்