‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்
தொழிற்சங்க தலைவரும், எழுத்தாளருமான ரமேஷ் அவர்களின் ‘தோழர்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதுவதே பெருமகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. இந்த நூலை எழுதுவதற்காக அவர் குறிப்பிட்டுள்ள காரணம், மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. கம்யூனிசம் பற்றிய உண்மையான கருத்துக்கள் சென்று சேர்வதற்கு முன்பே, பொய்யான பிரச்சாரங்கள் சென்று மக்களை குழப்பிவிடும். இந்த அனுபவம் மாமேதை காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. இப்போதும் அது தொடர்கிறது. அதனை தன்னுடைய பாணியில் சுட்டிக்காட்டியுள்ள ரமேஷ், தலைவர்களின் வாழ்க்கையை அற்புதமாக விவரிப்பதன் மூலம் அந்த தவறான பிரச்சாரத்தை எதிர்கொள்ள முயற்சிப்பதாக கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் களப்பணிகள் ஒவ்வொன்றுமே, பொய்யான பிரச்சாரங்களுக்கு எழுதப்படும் மறுப்புரைகள்தான். நான் எழுதி இதுவரை 3 தொகுதிகளாக வெளியாகியிருக்கும் ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற தொடர், அதே பணியை வேறு விதத்தில் செய்கிறது. அன்புத்தோழர் ரமேஷின் தந்தையும் அந்த தொகுப்பில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளார். வாழையடி வாழையாக மக்களுக்கு உழைப்போம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் மகனும் செயல்படுகிறார்.
இந்தியாவின் முதல் மோதின கொடி ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்த சென்னை மண்ணில், தோழர் சிங்காரவேலர் வாழ்க்கையை விவரிப்பதில் இருந்து தொடங்குகிறது இந்த நூல். தோழர் சிங்காரவேலர், கம்யூனிச கருத்தியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில், மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். அதன் பிறகு தோழர் அமீர் ஹைதர் கான் பற்றி விவரிக்கிறது. அவர் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடிப்பதில் முக்கிய பங்காற்றினார். அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும், பொட்டல் காட்டை திருத்திப் பயிர் செய்யும் உழவுப் பணிக்கு ஒப்பானவை. அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் புடம்போடப்பட்ட களப்போராளிகளான சுர்ஜித்தும், இன்றும் நம்மோடு வாழும் நூற்றாண்டு கண்ட நாயகர் என்.சங்கரய்யாவும் வருகிறார்கள். இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாழ்க்கையும், பல்வேறு ஒத்த அம்சங்களையும், தனிச்சிறப்பான வரலாற்று பங்களிப்புகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. எல்லோருமே ‘தோழர்கள்’ என்ற சொல்லுக்கு தமது வாழ்க்கையே பொருள் என்ற அளவில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களுக்கும் விடுதலையை உறுதி செய்திட வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம். எத்தனையோ நிகரில்லாத தலைவர்களை உருவாக்கியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம், எந்த ஒரு தனிநபர் பிம்பத்தையும் கட்டமைப்பதில்லை. வாழும் காலத்திலேயே தமது தனிப்பட வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றி யாரும் பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டை தலைவர்கள் மேற்கொண்டார்கள். தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சிகர இலக்கை நோக்கிய வர்க்கப் போராட்டம், அதற்காக இன்னுயிர் ஈந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களின் வடிவமான செங்கொடி, இதைத்தான் நமது முன்னுதாரண தலைவர்கள் தம் வாழ்நாளெல்லாம் முன்னிருத்தி வாழ்ந்திருக்கிறார்கள். மறைவுக்கு பிறகுதான் ஒருவரின் வரலாற்று பங்களிப்பை மதிப்பிட வேண்டும் என்பதில் சமரசமில்லாத உறுதிகாட்டி வாழ்ந்துள்ளார்கள். அதற்கு நியாயம் சேர்ப்பதாக இந்த நூல் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இதுவரை பல்வேரு மொழியாக்க நூல்களுக்காக விருதுகள் பெற்றும், வாசகர்களின் பாராட்டைப் பெற்றும் வலம் வந்த கி.ரமேஷ், இந்த அற்புதமான கட்டுரைகளின் மூலம் தனது இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்து வன்மையையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இன்றைய இளைய தலைமுறையை சென்றடைய வேண்டும். தமிழ் வாசகர்களின் பரவலான அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தோழர்கள் இன் நூல் முன்னுரையில் இருந்து
– ஜி.ராமகிருஷ்ணன்
நூல் : தோழர்கள்
ஆசிரியர் : கி.ரமேஷ்
விலை : ரூ.₹170/-
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]