ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி
1
உணவைத் தேடி அலையும் பொழுது இல்லை, மனிதர்களையும்
நல்ல மனங்களையும் தேடி அலையும் கடின வேளைகளில்….
2
சக்திமிகுந்த தெய்வமென
கோவிலின் கற்பக்கிரகத்தைப்
பார்த்து கையெடுத்து
வணங்கிய குழுந்தைக்கு
அன்னையை விட
ரொம்ப அழகாக தெரிந்துவிடவில்லை
இருளில்
சிலையாக அமர்ந்த
அம்மனின் அமர்வு…
3
வீட்டில் அமர்ந்தபடியே
கொட்டும் மழையில்
நனைய விரும்பினேன்
அவசர அவசரமாக
மழையைப் பற்றி கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன்…..
4
கழுத்தணைத்து
தலை கோதி
இடையமர்ந்து
தோளேற்றி
அப்படியே
துயில் கொள்ளும்
தேவதையைத்தான்
மகளென்பார்களோ
தாயுமகளென்பார்களோ
தத்தக்கா புத்தக்கா
தடுக்கல்களில்
இதோ
தேடலில் ஓர்
பட்டாம்பூச்சி…
5
பதப்படுத்தப்பட்ட
மண்ணின் ஆசைதான்
பழங்கள் குலுங்கும்
விதையை எச்சமிடச் செய்தது…
சரியாகத்தான்
அமர்ந்துவிட்டான் புத்தன்
ஆசை இல்லையென
ஞானத்தை வழங்கத் தயாராக
இந்த இலையுதிர்க்கும்
போதிமரங்களின் நிழலில்….
6
பிறப்பைப் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
காது கிழிய கூக்குரலிடுகிறது
நேற்று வீசிய மா விதையின் அருகே குழந்தை
7
காலங்களுக்குப் பின்னே
கடிவாளங்களும் உள்ளன
கரைகின்ற நொடிகளுக்கு
யாராலும் பூட்டிட இயலாது
அவசரமாக
உணவு தேடியும்
இணைதேடியும்
செல்கின்ற அணிலுக்கு
அகல விரிந்து
காத்திருக்கின்றன
காலக்கண்கள்……!
8
சாயங்களை பூசிக்கொள்கிறேன்
முகமூடி வழங்குகிறது
குழந்தை
முகமுடி அணிந்து கொண்டேன்
புன்னகைக்கச் சொல்கிறது
வாழ்க்கை
பயணிக்கத்தொடர்கிறேன்
சாயங்களின் வடிவில்
ஓர் கற்றை நூலால் கட்டிய பாதைகளில்……
9
செருப்பு தைக்கும் தொழிலாளி
ஒருபோதும்
நிமிர்ந்து பார்த்ததில்லை
உயரமெனப்படுபவை அனைத்தும்
இவன் காலடியிலே
கிடக்கின்றன என்பதால்….
10
ஒரு போதும்
உனக்கு பிடித்ததை மறைத்து வைக்காதே
பட்டாம்பூச்சிகள்
பூவிற்கு பிடித்தமாதிரியும்
தேனை
உண்டு மகிழும்…
11
நடனமாடிய பின்பு
காலில் வலியையும்
கைத்தட்டல்களில் ஏற்பட்ட குறையையும்
வெற்றி ஒருபோதும் பார்த்ததில்லை
புன்னைகைக்கு வெற்றி தானே புன்னகையால் மகுடம் சூடும்…..
12
சிறகு
சிறியதோ
பெரியதோ
ஆசைகளைக் கற்றைகளாக
கொண்ட நேரத்தில்
தானாகவே முளைத்துவிடுகிறது
காற்றே இல்லாத இடத்தில்
பறவையாய் மனங்கள்
என்ன
கால்களும் கைகளும.
கூடுதலாக முளைத்துவிடுகின்றன….
13
எட்டாம் வகுப்பில்
புட்டங்களில் ஒட்டுகள் போட்ட கால்சட்டையுடன்
கை உயர்த்தி வணக்கங்கள் செய்கிறேன்
ஒட்டிய வண்ணங்களை கண்டு கொள்ளாமலே
பறக்கிறது
எல்லோர் மத்தியிலும் சுதந்திரக் கொடி
கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்
(Er.Prof.சே கார்த்திகேயன்.ME)
SWD.Chennai
கோவை ஆனந்தனின் கவிதைகள்
நதியின் மரணம்
*********************
அமைதியாக சலசலத்தோடும் நதியில்
விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும்
விதைகளையும் தூவினால் நாளாகும்போது
இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன.
ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது
கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே
அங்குமிங்குமாய் நகர்ந்து விளையாடி
அழகாகும் அதிசயம் அரங்கேற
ஒரேயொரு நெகிழியை தூரத்திலிருந்து
தூக்கியெறிவதை தொடங்கிவைத்த ஒருவனால்
பின்னொரு நாளில்
நதியே ஸ்தம்பித்துப் போகுமென
அறியாமல் வீசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
வீணாகிப் போனவையெல்லாம்
கட்டடங்களின் உயர வித்தியாசமெதுவுமின்றி
குப்பிகளிலிருந்து உடைத்தொழுகும்
சயனைடு திரவங்களாய்
இரகசியக்குழாய்களின் வழியே
சாக்கடைநீராகி யாருடைய சம்மதத்திற்கும்
நிற்காமல் நதியின் மொத்த ஆழத்திலும்
ஊடுருவி
நச்சாய் பரவிக்கொல்கிறது
நதியை
நதியை நம்பியிருந்த உயிர்களை
மீன்களும் மரங்களும் அவற்றை நட்ட மனிதரும்
மெல்ல மெல்ல மரணிப்பதைக் கண்டு
மண்ணில் இனியும் ஒடிஒளிய வேறெங்கும்
இடமில்லையென்று
வறண்டே மரணிக்கிறது நதியும்
மழை…..
தூறல்களாய் விழும்போதெல்லாம்
கரையோர மரங்களின்
வேருக்கும் தெரியாமல்
கண்ணீர்சிந்தி வறண்டநதியின் கால்தடமும்
அழுகிறது
மழைத்துளியைக் கடன்வாங்கி
நீச்சல் பழகிய நீரோடையில் நீளத்துக்கும்
தோண்டியெடுத்த மணல் குழிகளிலிருந்து
மீளத் தெரியாமல்
அடுத்தத் தலைமுறையும் விழுகிறது தாகத்தில்
அயிரைகள் துள்ளிவிளையாடிய நதியில்
அழுக்குமூட்டைகளும் நெகிழிக்
காகிதங்களுமே
காற்றின் போக்கில்
நகர்ந்து நதியை நாசமாக்க
கரைகளையும் விட்டுவைக்க மனமில்லா
ஆக்கிரமிப்புகள்
வழிமறித்த பாவங்களால் விடாதுகொட்டும்
அடைமழை நாளில் விழும்
துளிகளொவ்வொன்றையும் எதிர்பார்த்து
காத்திருக்கிறது…
ஊரோரம் ஓடிய நதியும்
ஊரைவிட்டு வெளியேற…
–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு
மழையின் கண்ணீர்
***********************
பனை ஓலையில் போர்த்திய மாட்டுச்சாளையின்
ஒருமுனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்து ருசிக்கும் கரையான்களும்
கூரைக்குள் ரகசியமாய்க் குடித்தனமிருந்து தொல்லைதரும் எலிகளும்
கூரைவேய்ந்தவனின்
நிம்மதியைக் கெடுக்க
துருப்படிந்த கடப்பாறையும்
உழுதவயலிலிருந்த மண்ணை ஒட்டிவந்த கலப்பையும்
அதன் உச்சியில் மாட்டுவாசத்தை பூசிக்கிடக்கும் நுகத்தடியும்
ஒன்றுக்கொன்று அவரவர் கதையை பேசிக்கொள்ள
உழுதே தேய்ந்த உழவனைப் பற்றியெதுவும் பேசாததால்
உடைசல்களில் விழும் மழைத்துளிகள் கரையானையும் கலப்பையையும்
கண்ணீரால் கழுவி சிற்றாறாய் ஓடுகிறது மூத்திர வாய்க்காலில்….
ப(ரு)சித்த மாடு
******************
வறண்ட பூமியும் சுவாசித்திட
பழமாய்ப் பிளந்து கிடக்கும் மண்ணில்
பச்சையங்களை இழந்து நிற்கும்
மரங்களின் நிழல்களில் இளைப்பாறும்
பசுவொன்று சுற்றும் முற்றும் பார்வைகளால்
கொட்டகையில் பசியோடிருக்கும் பச்சிளங்கன்றின்
பசிபோக்கும் உலர்ந்த இலைகளைத் தேடியதில்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காற்றின் வேகத்தில் வீசும் மண்புழுதியைத்தவிர எதுவுமேயில்லாமல்
முடிச்சினை அவிழ்த்து பங்காளியின் பயிரினில் மேய்ந்ததால்
மொட்டைப்பனையில் கட்டிய பசுவுக்குத் தண்டனை
சமரச உடன்பாட்டில் அபராதம் செலுத்திடும் முதலாளி வரும்வரை….
–கோவை ஆனந்தன்
குமாரபாளையம்
கிணத்துக்கடவு
919003677002
ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்
தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது –
வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள்
எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில்
நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள்
விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும் பறிகொடுத்து
படர்ந்து நிழல்தரும்
கிளைகளில் வசித்த
பறவைகள் அத்தனையும் வேறுகிளைகளைத்தேடி
அகதிகளாய்ப் பறந்துபோன பறவைகளின் வசிப்பிடங்களையும் தேடுகிறேன்
பறவைகளின் இடமாற்றத்தால் தடுமாற்றமானது
ஆறறிவுகள் அறியாமல்
செய்த வினைகளும்
கோடாரிகளை தூக்க கட்டுப்பாடுகள் இருந்திருந்தால்
காலியான ஆக்சிஜன் உருளைகள் தட்டுப்பாடோடு உருண்டிருக்கா.
வழியெங்கும் காற்றினை சுத்திகரிக்கும்
மரங்களின் ஆலைகளை அழித்தபின்
மனிதஇனத்தின் உயிர்காக்கும்
ஒட்டுமொத்த சுவாசக்காற்றையும் சுமந்து
அதே வழித்தடத்தில் பயணிக்கிறது சுவாச சுமையுந்துகள்
சுவாசங்களைப் புதுப்பிக்கும் விருட்சங்களின் விசேசங்களை அறிந்திருந்தால்
அவசியமிருந்திருக்காது மருத்துவ படுக்கைகளும்
ஏதோ ஒருகிளையின் பழத்தினை தின்றுதிரியும் பறவையின்
எச்சிலில் முளைக்கும் மரங்கள் தீங்கு செய்தோருக்கும் நிழல்தந்து
கார்பன் துகள்களை
உள்வாங்கி சுவாசிக்கும் உயிர்களுக்கு பிராண வாயுவினைத்தரும்
அதிசயமரத்தை விதைத்த ஆக்சிஜன் பறவையின்முன்
வெட்கப்பட்டு தலைகுனிந்து நிற்பதையறியாமல்
பறந்துசெல்கின்றன அப்பறவைகள்….
கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு
வ.சு.வசந்தாவின் ஹைகூ கவிதைகள்
மாலையின் பூக்கள்
சிதறிக் கிடக்கின்றன
கடைசி யாத்திரை.
இன்று வந்தவன்
நாளையும் வருவான்
சூரியன்.
முகம்மதுவும் மரிய சூசையும்
மனம் விட்டு பேசும் இடம்
சிவன் கோவில் தெப்பக்குளம்.
காதில் நுழைந்தது
இதயத்தில் அமர்ந்தது
சிம்மாசனக் கவிதை.
கிளிகள் பேசிக்கொண்டன
பார்த்துக்கொண்டிருந்தன
பழங்கள்.
மண்ணின் வாசம்
தெரியும்
மழை.
நடவு நட்ட பெண்ணின்
காலில் இருப்பது சேறு
அவள் போடுவாள் சோறு.
தன் பசி மறந்து
தெரு நாய்க்குச் சோறு போடுவான்
ஏழைச் சிறுவன்.
பூவும் பிஞ்சுமாக காயும் கனியுமாக
விருந்து படைக்கும்
மரங்கள்.
ஆடி அரவணைத்து
அனைத்தும் தரும்
இயற்கை.
வ.சு.வசந்தா
9840816840
சென்னை_92
காடு கவிதை – கலா புவன்
பகலின் இருட்டு
மரங்களின் அடர்த்தி
அருவிகள் தொடங்குமிடம்
நகரங்களின் முன் ஜென்மம்
காடு
மனிதன் காட்டிற்கு அன்னியமானவன்
மரங்களை அழித்து ஊர்களை உருவாக்கினான்
மனிதனின் ஆசைகளுக்கு அளவேயில்லை
காடு என்ன பாவம் செய்தது ?
காடுகள் அழிக்கப்பட்டன
நிலங்களை கூறுபோட்டு விற்றனர்
காடு குறையக் குறைய மழை நின்றுபோனது
நாடுகளின் வயல்கள் வறண்டு போயின
காட்டு மரங்களை அழித்து காகிதம் செய்தான்
படித்த புலவர்கள் காடுகளை காப்போம்
என்று புத்தகங்கள் எழுதி வெளியிட்டனர்
இதுவே
ஒரு பெரிய முரண்பாடு
நெகிழி நாற்காலிகளை விட மர நாற்காலிகள் சிறந்தவை
மரக்கட்டில் பாட்டிக்கும்
மரபொம்மைகள் குழந்தைகளுக்கும்
மரமேசைகள் குடும்பத்திற்கும்
உகந்தவை
முன்னாளில் அடுப்பெரிக்க
மரங்கள் பயன்பட்டன
மரங்கள் எரிப்பில்
வியாதியற்ற சாப்பாடு வீட்டிற்கு உதவியது
காடுகளை அழித்து ,எரித்து நிலக்கரி தயாரிக்கின்றனர்
நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர்
எப்படியோ புலிகளைப் போலவே
காடுகளும் உலகில் குறைந்து விட்டன
காடு வளர்ப்போம்
காட்டைக் காப்போம் என்ற
வெற்றுக்கோஷம் மட்டும்
விண்ணளவு முழங்கப்படுகிறது
அய்யகோ இதென்ன பெரும் கொடுமை ?
இனியாவது விழித்துக் கொள்வோம்
இருக்கும் காடுகளை பாதுகாப்போம்
ஆமென்
கலா புவன் -லண்டன்
சக்தியின் கவிதைகள்
காகங்கள்…….!!!!!
*********************
அதிகாலை வேளையிலே
குடிசையின் மீது மேல்
அமர்ந்த காகங்கள்
கரைந்து
கொண்டிருக்கின்றன,
காலையிலிருந்து காதுகள் வலி
ஏற்பட ‘கா கா ‘என கரைந்து கொண்டிருந்த காகங்களை
குழந்தைகள் இட்லியால்
அடித்து துரத்துகின்றனர்
தூங்கி எழுந்த அம்மா
காகங்கள் கரைவதை கண்டதும்
நம் வீட்டிற்கு உறவினர்கள்
வருவார்கள் என்று கூறுகிறாள்,
அறிவழிகியும் அறிவழகனும்
வீட்டின் வாசலில் ஓடிப்போய் பார்க்கிறோம், வாசலில்
கணக்கு நோட்டுகளோடு
நிற்கிறார் வெள்ளிக்கிழமை தண்டல்காரர்,
தண்டல்காரனும் உறவினர்
ஆகிறார் வாரம் ஒருமுறை
வீட்டு வாசலில் வந்து நின்று நலம் விசாரித்து விட்டு செல்வதால்……!!!!
மனிதர்களுக்காக பறவைகள்
***********************************
மனிதர்களின் தேவைகளுக்காக
மர விதைகளை விதைக்கின்றன எவ்வித எதிர்பார்ப்பு
இல்லாத பறவைகள்,
மனிதனின்
சுவாசக்காற்றுக்காக
சூழலியல் வள்ளுஞராகின்றன
மரம் நடும் பறவைகள்,
வண்ண வண்ண பறவைகள்
வெவ்வேறு விதமான
மர விதைகளை விதைக்கின்றன
குளக்கரையின் மேடுகளை சுற்றி,
பறவைகள் விதைத்த
மரத்து நிழலில் கட்டில் போட்டு
கால் நீட்டி உறங்குகின்றனர்
மரம் நடாத மனிதர்கள்,
வளர்ந்த மரங்களின்
கிளைகளை வெட்டி குடிசைகளை
அமைத்துக்கொள்கிறான் பறவைகளுக்கு தண்ணீர் வைக்காத மனிதன்,
மனிதன் அடியோடு
வெட்டிய மரங்களுக்காக
வேகமாக பறந்த பறவைகள்
வானத்தை கிழித்து
நீரை கொட்டுகிறது கண்ணீர் துளிகளாக ,
ஊரெங்கும் பறவைகள்
ஊரெல்லாம் மரங்கள்
மரங்களில்லாமல் மனிதனா
பறவைகளில்லாமல்
மரங்களா ….!!!!!!!
காடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன சிறார் குறுங்கதை – குமரகுரு
கார் வேகமா போயிக்கிட்டிருக்கும்போது, சன்னல் வழி வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த அரவிந்தனுக்கு திடீர்னு ‘நாம வேகமா போறோமா இல்லை இந்த மரம் செடி கொடிகளெல்லாம் வேகமா நம்மளைப் பார்த்து ஓடுதுங்களா’ன்னு சந்தேகம். விரலை தாடைல வைத்து யோசிச்சிட்டிருந்தவனைப் பார்த்த அம்மா அவன்கிட்ட “என்ன செல்லம் யோசிக்குறீங்க?” ன்னு கேட்டாங்க.
“ஏன் மா நாம இவ்வளவு வேகமா போறோமா இல்லை இந்த மரம் செடி கொடி ஊரெல்லாம் நம்மளைப் பார்த்து பயந்துக்கிட்டு வேகமா ஓடி ஒளியுதா?” ன்னு அம்மாக்கிட்ட கேட்டான் அரவிந்தன்.
“மரம் செடி கொடி மலை ஊர் இதெல்லாம் ஓடாதுடா செல்லம். நாமதான் அதுகளையெல்லாம் தாண்டி வேகமா ஓடிக்கிட்டிருக்கோம்”
“ஓ! சரிமா! இப்போ நாம போற வழியில இருக்க சாலை எல்லாம் யாரு போட்டது?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.
“அது நம்ம அரசாங்கம் நம்மளை மாதிரி இருக்கவங்க எல்லாம் ஒரு ஊருலேயிருந்து இன்னொரு ஊருக்கு போறதுக்காக கல்லு மண்ணு தாரெல்லாம ஊத்தி போட்டாங்க”
“சரிம்மா!! அப்போ இந்த சாலை போடுறதுக்கு முன்னாடி இங்கே என்னமா இருந்தது?”
“என்னடா இது!! கேள்வியெல்லாம் பயங்கரமா கேட்டுக்கிட்டேயிருக்க. எவ்வளவு பதில் சொல்லுறது. அதாவது, பாதையில்லாத இடத்துக்கெல்லாம் பாதை உருவாக்க அங்கேயிருந்த செடி மரமெல்லாம் வெட்டி அப்புறப்படுத்தி நடந்து போய்க்கிட்டிருந்தோம்.
அப்புறம் சைக்கிள் வந்தது, பாதையை இன்னும் கொஞ்சம் நல்லா பதப்படுத்தி முள்ளு கல்லு இல்லாத சாலையா மாற்றினாங்க. அதுக்கப்புறம், பைக் கார் லாரி பஸ்லாம் வந்தது, நாம அதையெல்லாம் பயன்படுத்த பயன்படுத்த சாலைகளும் அகல வேண்டியிருந்ததால தண்ணீர் தேங்காத மண்ணில்லாத பள்ளங்களில்லாத நல்ல உறுதியான அதே நேரம் வேகமாக போக கூடிய, இப்ப நாம போயிட்டிருக்க மாதிரி தார் சாலைகளைக் கண்டுபுடிச்சு போட்டாங்க”
“அப்படியா அம்மா! அப்போ அதோ நம்ம கண்ணுக்கு தெரியுற அந்த மரமெல்லாம் அடுத்தடுத்து சாலைப் போடுறப்போ வெட்டிடுவாங்களா அம்மா?”
“தேவைன்னா வெட்டுவாங்க. வெட்டிட்டு புதுசா வேற எங்கேயாவது ஒரு மரம் நட்டுடுவாங்க செல்லம்”
“அப்போ இந்த ஊருக்கு மழை கொடுக்கிற மரம் ஒன்னு போயிடும். ஆனா, இன்னொரு ஊருக்கு மழை கொடுக்க இனன்னொரு புது மரம் வந்துரும்”
“கரெக்ட்”
“இப்போதான்மா ஏன் காடுகளெல்லாம் அமைதியா இருக்குன்னு எனக்கு புரியுது!”
ஆச்சர்யமான அம்மா, ஏன் என்று கேட்க விரும்பினாள், கேட்டும் விட்டாள்… “காடெல்லாம் அமைதியா இருக்கா? ஏன்னும் உனக்குத் தெரியுமா?”
“ஆமாம் மா!! நாம அன்றைக்கு ஒரு படம் பார்த்தோம்ல அதுல வர கெட்டவன், ‘நீ அமைதியா இல்லைன்னா உன்னைக் கொன்னுடுவேன்’னு சொல்லுவான்ல, அதனால தான அந்த பொண்ணு அமைதியா இருப்பா. அது மாதிரிதான் இந்த காடுகளும் அமைதியாக இருக்கு” என்றான் அரவிந்தன்.