பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்

பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்




பழங்குடியின மக்கள் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் தைரியசாலிகளாக இருக்கிறார்கள். கீழே பதிவாகியுள்ள கவிதைகளில் பெரும்பாலும் ஊடுருவி நிற்பது அவர்களின் முன்னோர்கள் பற்றிய நினைவுகளும் அதற்கான படையல் முயற்சிகளும்…. அவர்களுடையது எதார்த்தமான இலக்கியம். அவர்கள் தான் உண்மையில் மண்ணின் மைந்தர்கள் என்று தங்கள் வாய் மொழி இலக்கியம் மூலம் நிரூபணம் செய்கிறார்கள். கலை விமர்சகர் இந்திரன் அவர்களின் பதிவுக்கு நன்றி.
-நா.வே.அருள்
கவிதை ஆசிரியர்
புக்டே இணையஇதழ்

சிங்கப்பூர்
Kavignar nepolean பதிவு28. வாசிப்பில் ஈர்த்த வரிகள்…
( சிங்கப்பூர் தமிழ் மொழி விழா 2016ற்காக )
——————————————-
கடவுள்
முதலில் வானத்தையும் பூமியையும் படைத்தார்
பிறகு பெண் மயிலைப் படைத்தார்
அது ஒரு முட்டை இட்டது
அந்த முட்டை உடைந்தது
முட்டை ஓட்டிலிருந்து
கெரியா மலைவாழ் ஆதிகெரியாக்கள்
தோன்றினார்கள்
முட்டையின் வெள்ளைக் கருவிலிருந்து
மயூர்பஞ்சின் புராண மலையினமும்
மஞ்சள் கருவிலிருந்து
மயூர்பஞ்ச ஆளும் பஞ்சாகுடும்பமும்
தோன்றின
முட்டைத் தோலிலிருந்து
ஓரெயன் மலையின
முன்னோர்கள் தோன்றினர்
மயூர்பஞ்ச் பிரதேசத்தின்
பஞ்சயூர் பகுதியில்
இது நிகழ்ந்தது
– ஒரிசாவின் கெரியா மலைப்பகுதியின் பாடல்
***************

கட்டளை
பழங்காலத்தில்
பாறைகள் நகர்ந்துகொண்டிருந்தன
அனைத்தும் உயிரோடு இருந்தன
சூரியதேவன் அவற்றிடம்
சொன்னான்
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்
நான் இப்போது
மனிதர்களை உலகத்துக்கு அனுப்புகிறேன்
அவர்கள் வாழிடங்களை அமைப்பார்கள்
நீங்கள் அவர்களுக்கு நிழல் தருவீர்கள்
இப்போது நிலையாக நின்று விடுங்கள்
நீங்கள் நிலைத்து நிற்காவிடில்
நதி எப்படி கீழே உருண்டு வரும்?
உங்கள் பிளவுகளில்
புற்களும் புதர்களும்
எப்படி வளரமுடியும்
உங்கள் சரிவுகளிலும்
பாதங்களிலும்
காடுகள்
எப்படி செழித்து வளரமுடியும்?
– பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியின் ஆதிவாசிப் பாடல்
***************

பிறப்பு
சிவன் பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா
நீங்கள்
இயேசு பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா?
நீங்கள்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்
நாங்கள்
கடவுள்களுக்கு
முன் பிறந்தவர்கள்
– தெற்கு பீகார் பகுதியின் கோயல் கேரோ அணைக்கட்டுத் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பாடப்பட்ட ஒரு ஆதிவாசி பாடல்
***************

நிலம்
நமது நிலம்
நமது ஆசிரியர்
நமது ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்
நிலத்தை உழுவது எப்படி என்றும்
விதைப்பு செய்யும் முறை என்னவென்றும்
பிரார்த்தனை மூலம் மழையை வரவழைப்பது பற்றியும்
பயிர்களை கவனிக்கும் முறைகளையும்
கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுவது பற்றியும்
எப்போ எப்படி அறுவடை செய்வது என்பபது பற்றியும்
நமது அரசு அதிகாரிகளுக்குத் தெரியும்
நமது நிலத்தோடு நமக்குள்ள உறவு
ஆனாலும்
அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை
– சலோமி எக்கா, 46 வயது பெண், பட்குச்சுனு, ஒரிசா
**************

பூக்களின் திருவிழா
ஓ வீட்டின் வாசற்படியே
உனக்குப் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்கள்மீது கருணையோடிரு
எங்களின் தானியக் குதிர்களை
தானியங்களால் நிரப்பு
இது பூக்களின் திருவிழா
நாங்கள் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்களின் வீட்டு வாசலுக்கு
புதிதாய் பிறக்கப்போகும் வருடத்தில்
கடவுள்கள் வாழ்த்தட்டும்
உங்களது தானியக் குதிர்கள்
நிரம்பி வழிகிற வரை அவை நிரம்பட்டும்
உங்கள் பயிர்கள் வளர்ந்து செழிக்கட்டும்
பருவ காலங்களும் மாதங்களும்
திரும்பி வரட்டும்
பூக்கள் மீண்டும் மீண்டும் மலரட்டும்
நாம் இங்கேயே தொடர்ந்து வாழ்வோமென்றால்
பூக்களின் திருவிழா
மறுபடி வரட்டும்
– கார்வாலி மலையினப் பாடல், ஒரிசா
***************

படையல்
அன்பான முன்னோர்களே
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்?
நீண்ட பகலிலா, முடிவற்ற இரவிலா,
பாறையின் மீதான உச்சி வெயிலிலா
காட்டின் மழைக்கால மாதங்களிலா
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்
இன்று திரும்பி வந்து
எங்களது குறைவான
படயலை ஏற்றுக்கொள்ளுங்கள்
எங்கள் மகிழ்ச்சியைக் காணுங்கள்
பழமையான நிகழ்வை
மகிழ்ச்சியின் கொண்ட்டாட்டத்தை
தயவு செய்து காணுங்கள்
– ஹேமா மலையினப் பாடல்
***************

கனவுகள்
நாங்கள் கனவு காண்கிறோம்
எங்களின் மூதாதையர்கள் பற்றியும்
ஆவிகள் பற்றியும்
வாழும் முறை பற்றியும்
எதிர்காலம் பற்றியும்
இறந்தகாலம் பற்றியும்
கனவுகள் காண்கிறோம்
எங்களின் ஒவ்வொரு கனவிலும்
எங்கள் நிலத்தைக் கனவு காண்கிறோம்
எங்கள் நிலத்தில் வாழவில்லையெனில்
நாங்கள் மரணத்தைத் தழுவுகிறோம்
எங்கள் நிலத்திலிருந்து கிடைக்காத
ஆரோக்கியம் என்ற ஒன்று
எங்களிடம் இல்லை
எங்களின் மரணத்திற்குப் பிறகு
மூதாதையர்களாக நாங்கள் வாழமாட்டோம்
எங்கள் குழந்தைகள்
எப்படி ஒன்றுகூடி வாழ இயலும்
பயிர் செய்பவன் அழிந்துவிடுவான்
நாங்கள் முடிந்போவதை
அவர்கள்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அவர்கள் அதற்காக
காத்திருக்கிறார்கள்
– தர்கேரா ஆதிவாசிப் பாடல்
***************

கருப்பு இயேசுநாதர் / லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்

இயேசுவானவர்ஒரு கருப்பனாக திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல.
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத
தேவாலயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
எவ்வளவு புனிதப் படுத்தப்பட்டாலும்
நீக்ரோக்களுக்கு
அங்கு வாயில்கள்’ மறுக்கப்படும்.
அங்கே இனம்தான் பெரியதே தவிர
சமயம் அல்ல.
ஆனால்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவே!
நீர்
நிச்சயமாக
மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்கள்.
***************

சிரிக்கக் கற்றுக் கொடு மகனே / கேபிரியல் ஒகாரா / நைஜீரியா
முன்னொரு காலத்தில்
மகனே
அவர்கள் இதயத்தோடு சிரிப்பார்கள்.
கண்களால் சிரிப்பார்கள்.
ஆனால் இப்போது பற்களால் மட்டுமே சிரிக்கிறார்கள்.
அவர்களது பனிக்கட்டி மூடிய சில்லிட்ட கண்கள்
என் நிழல்களுக்கு பின்னாலும் துழாவுகின்றன.
அவர்கள் தங்கள் இதயங்களோடு
கை குலுக்கிய காலங்கள் இருக்கத்தான் செய்தன.
என் மகனே குழந்தாய்
இப்போது அவர்களின் வலது கை
இதயமில்லாமல் குலுக்குகிறபோது
இடது கை
எனது காலி சட்டைப் பாக்கெட்டுகளைத் துழாவுகின்றன.
“உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள்”
“மீண்டும் வருக” என்று சொல்கிறார்கள்.
ஆனால் நான் மீண்டும் வந்து
தன் வீடாக நினைக்கிறபோது
ஒரு முறை இரு முறை
மூன்றாவது முறை இருக்கப் போவது இல்லை.
ஏனெனில் கதவுகள் எனக்காக மூடிக் கொள்கின்றன.
நான் பலவற்றை கற்றுக் கொண்டேன்
மகனே நான் முகங்களை
அணியக் கற்றுக் கொண்டேன்.
அடிக்கடி மாற்றும் உடைகளைப் போல
வீட்டு முகம், அலுவலக முகம்
நடுத்தெரு முகம், விருந்து முகம்
மது அருந்தும் முகம் என்று
படங்களில் நிலையாக இருக்கும் சிரிப்புகளைப் போல
உறுதி அளிக்கும் சிரிப்புகள்.
என்னை நம்பு மகனே
நான் உன்னைப் போல இருந்த போது
எப்படி இருந்தேனோ
அப்படியே இருக்க விரும்புகிறேன்.
இந்த ஊமைச் செய்திகள் அனைத்தையும்
மறக்க விரும்புகிறேன்.
சிரிப்பது எப்படி என்று
மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்- 1982
***************

காற்றில் ஒரு முத்தம் / கிரிஸ்டோபர் ஒகிக்போ

நம் இருவருக்கிடையில் நிலா எழுந்தது.
ஒன்றை ஒன்று வணங்கிக் கொள்ளும்
இரண்டு பைன் மரங்களுக்கிடையில்
நிலாவுடன் சேர்ந்து காதலும் மேலெழுந்தது.
நமது தனிமையின் அடித்தண்டை
மேயத் தொடங்கி விட்டது.
நாம் இப்போது
ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும் இரண்டு
நிழல்கள்.
ஆனால்
காற்றை மட்டுமே
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் 1982

– கவிஞர் இந்திரன் ✍ எழுத்தாளர், கலை இலக்கியப் பண்பாட்டுத் திறனாய்வாளர் & மொழிபெயர்ப்பாளர். ஆதிவாசி கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘ ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ என்று முதன்முதலில் நூலாகக் கொண்டுவந்தவர் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன். நன்றி : ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’, ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூல்கள், அந்திமழை இணையத்தளம் & இந்திரனின் முகநூல் பக்கம்.

சந்துருவின் கவிதை

சந்துருவின் கவிதை




இரவு வானத்தில்
நிறமற்ற தூரிகைகளால்
தங்களுக்கான வானவில்லை
அடர்ந்த கானகத்தில்
வரையத் தொடங்குகிறார்கள்
பழங்குடிகளின் குழந்தைகள்.

தார்ச்சாலையைப்போல்
தேகத்துக்கும் வாழ்வுக்குள்ளும்
பிணைந்திருக்கும்
ஒரே வண்ணத்தை
உடும்பின் தோலைப்போல்
உரிக்க முயல்கிறார்கள்

காயடிக்கப்பட்ட
மூதாதைகளின்
மூளையைப் பிளந்து
கானக அடங்கலில்
கல்வியின் குருத்து
முளைவிடத் தொடங்குகிறது.

நீலமும் வெயிலும்
நிறைத்த கூரையினடியில்
எதிர்கால விடியல்களை
உரத்து உச்சரிக்கிறார்கள்.

காட்டுக் கிழங்குகளின்
வேர்களின் ஆழத்தில் மரணித்த
கல்விக் கடவுளை உயிர்ப்பித்து
மண்சுவற்றின் மாடங்களில்
விளக்கென ஏற்றுகிறார்கள்
அரிதாய் சில ஆசிரியர்கள்.

இடிந்த பள்ளிக்கூடம் அகன்று
குட்டிச்சுவராக்கப்பட்ட
தலையெழுத்தை
மரத்தினடியிலிருந்து
மாற்றி எழுத முயல்கிறார்கள்.

பசி மேயும் வகுப்பறையில்
ஆசிரியரின் நிழலும்கூட
அவர்கள் இனி
கைப்பற்ற வேண்டிய
எதையோ  போதிக்கிறது.

ஆசீர்வதிக்கப்படாத
நிலத்திலிருந்து எழும்
மழலைகளின் பாடச் சத்தங்கள்
சாபங்களாய் உறங்கும் மூதாதைகளின்
கல்லறைகளை சாந்தப்படுத்துகிறது.

பாதியாய் உடைந்து நிற்கும்
கரும்பலகைகள்
துயரத்தின் ரேகைகளை
பெற்றோர் கைகளிலிருந்து
நிரந்தரமாய்த் துடைக்கும்
சுண்ணாம்பு வனமாய் விரிகின்றன.

திறந்த வெளிகளில்
எழுத்தாணிகளால்
காலத்தை உழுது
கல்வியின் விதைகளை
நினைவுகளில் ஊன்றுகிறார்கள்.

தமக்கான சுகங்களை
உடைந்த நாற்காலியின்
அடியில் ஒளித்து
புதர் மறைவில் சிக்கியிருக்கும்
பூர்வகுடி பூக்களுக்கு
அறிவு திருத்தி
ஆரம்ப வகுப்பெடுக்கிறாள்
ஆசிரியை ஒருத்தி.

சொற்ப நேர வகுப்பு முடியும் வரை
காத்திருக்கும் வறுமை
மீண்டும் அவர்களை
தின்னத்தொடங்கலாம்
எனினும்
பசியை எரித்து அவர்கள்
படித்தாக வேண்டும்.

சந்துரு_ஆர்சி

Punai Vilakkiya Nathiyil Neenthi Book By P. Vijayakumar Bookreview By Jananesan நூல் அறிமுகம் - பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி - ஜனநேசன்

நூல் அறிமுகம் – பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி – ஜனநேசன்




பேராசிரியர் . பி.விஜயகுமார்  ஆங்கில இலக்கியம் முப்பதாண்டு களுக்கு மேலாக  கற்பித்தவர். சமூக அக்கறையும் ,நாட்டுப் பற்றும் மிக்க கல்வியாளர். ஆங்கிலம் வழியாக  உலக இலக்கியங்கள்  அறிந்தவர் மட்டுமல்லாமல் தமிழார்வத்தால்  பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன தமிழ் இலக்கியங்கள் வரை வாசித்து  தன்னையும்  தமிழ்மொழி  நடையையும் புதிப்பித்து வருபவர். செம்மலர், புக்டே  இணைய இதழிலும்  தொடர்ந்து புத்தக அறிமுகக் கட்டுரைகளையும், விமர்சனங்களையும்  செய்து வருபவர். கொரோனா பெருந்தொற்று அலையலையாய்  தாக்கி  மானுடர்க்கு மட்டுமன்றி  சக உயிரிகளுக்கும்  பற்பல கேடுகளும், சிற்சில நன்மைகளும்  செய்திருக்கிறது. 

கொடுந்தொற்று முடக் ககாலத்தில், புத்தகத்தின் பால் தீண்டாமை கொண்டவர்களும், ஊர்முடக்கத்தில் வெளியே போக இயலாமல், புத்தகங்களை தூசுதட்டி வாசித்த  அதிசயங்கள்  நடந்தது. இத்தகு மனிதர்களை  ஆற்றுபடுத்தும் விதமாகமாகவும்  தனது முடக்க காலத்தை  இயங்கும் காலமாக்கவும்  பலநூல்களைத்தேடி தேடி வாசித்து, உடனுக்குடன்   புக்டே இணைய தளத்தின் வாயிலாக நூலார்வலர்களுக்கு அறிமுகம் செய்தார். இப்படி அறிமுகம் செய்த 15 நூல்களைப் பற்றிய  அறிமுகக்கட்டுரைகள் அடங்கிய  தொகுப்புதான்  “புனைவிலக்கிய நதியில் நீந்தி…” எனும் இந்நூல்.

கொடுந்தொற்று முடக்ககால இலக்கியசான்றுகளையும் ,மக்கள் எதிர்கொண்ட விதம்பற்றியும்  வாசகர்களுக்கு பகிரும்விதமாக  பிரஞ்சு இலக்கியமேதை  ஆல்பர்ட் காம்யு  எழுதிய ,”தி பிளேக் “ நாவலை  அறிமுகப்படுத்துகிறார்.  அல்ஜீரியாவில் ஓரான் எனும் கடற்கரை நகரில் பிளேக் நோய் எப்படி தாக்குகிறது, அரசு நிர்வாகத்தின்  அக்கறையின்மையும், மக்களின் அலட்சிய மனோபாவமும், சரியான மருத்துவ வசதியின்றியும், தற்காப்பு உணர்வின்றியும்  மாயும் அப்பாவி மக்கள்  குறித்தும் ,  ஆல்பர்ட் காம்யு நெஞ்சைத் தொடும் வண்ணம்  சொல்ல பயன்படுத்திய உத்திகளையும் பேரா. விஜயகுமார் அறிமுகப் படுத்துகிறார்.  

இதேபோல் நமது ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “தி போஸ்ட்ஆபிஸ்“ நாடகத்தில், கொடும் நோய்வாய்ப்பட்ட அமல் எனும்  சிறுவன் ஊர்முடக்கம் செய்யப்பட்டு அவன்படும் பாடுகளையும், ஜன்னல் வழியே, அவன் இயற்கையோடும், தெருவில் போகும் மனிதர்களோடு கொள்ளும் உறவாடல்களையும், தத்துவச் செறிவோடு  தாகூர் வாசகர்மனத்தில் கிளர்த்தும் தாக்கத்தையும் எடுத்து இயம்புகிறார் விஜயகுமார். இவ்விரு  படைப்புகளும் கொடுந்தொற்றில்  முடங்கிப்போன  மனங்களுக்கு தெம்பையும், ஆறுதலையும் தருகின்றன.

இன்றைய உலகுதழுவிய சூழலில் , நிறவெறியும், பாலியல்வன்ம வெறியாட்டங்களும் மனிதர்களை பீடித்த நோயாக ஆட்டுவித்தலையும் , இவற்றிலிருந்து  மீளும் வழிகளை ஆற்றுப்படுத்தும் விதமாக, ரிச்சர்ட் ரைட் எழுதிய “நேடிவ் சன் “ஆலிஸ் வாக்கர் எழுதிய  “தி கலர் பர்பிள் “ ,சாமன் நஹல் எழுதிய “ஆஸாதி”; பிரியா விஜயராகவன் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள் “ போன்ற படைப்புகளை இந்நூலாசிரியர்  அறிமுகம் செய்கிறார். 

இக்காலத்தில் நம்மை தொற்றிவரும் கொடுந்தோற்றுகளில்  ஒன்றான, மதவெறியின் தாக்கங்களையும், எதிர்கொள்ளும்  முறைகளையும், தோப்பில் முகமது மீரான்  எழுதிய,” அஞ்சுவண்ணம் தெரு “ மு.இராமசாமி எழுதிய , “விடாது கருப்பு” எனும் பெரியாரிய நாடக நூல்கள் மூலம் பேரா. விஜயகுமார் உணர்த்துகிறார். பாசிஸ்ட்களின் அடக்குமுறைகளையும், புத்தகங்களுக்கு எதிரான  நடவடிக்கைகளையும் அவற்றின்  எதிர்விளைவுகளையும், ரே பிராட்பரி எழுதிய “பாரன்ஹீட் -451” நாவல் வழி  சொல்லுகிறார். 

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, அவர்களது  வீரஞ்செறிந்த எதிர்வினைகளைக் கூறும் ,மஹா சுவேதாதேவி  எழுதிய “1084 இன் அம்மா” ,”காட்டில் உரிமை” போன்ற நாவல்கள் மூலம்  தமிழ் வாசகர்களுக்கு  இந்நூலாசிரியர்  அறிமுகம்  செய்கிறார்.

இவற்றோடு சுற்றுச்சூழல்களுக்கு கேடுவிளைவிக்கும் விதமாக, சிலப்பதிகார பின்னணியில்  இரா. முருகவேள் எழுதிய “மிளிர் கல்” நாவலையும், மணல்கொள்ளையின்  விளைவுகளைச் சொலலும் .பா.செயப்பிரகாசம் எழுதிய ,”மணல்” இத்தொகுப்பில் பேராசிரியர் அறிமுகப்படுத்தும் நூல்களின் ஆசிரியர்களின் ஆளுமைச் சிறப்புகளையும், அப்படைப்புகள் உருவான சமூகச் சூழல்களையும், அப்படைப்புகள்  இலக்கிய உலகிலும், சார்ந்த சமூகத்திலும்   ஏற்படுத்திய தாக்கங்களையும், அப்படைப்புகளில் படைப்பாளிகள் கையாண்ட  உத்திகளையும் வாசகமனதில் எளிதில் பதியும், சரளமான நடையில் பேரா. விஜயகுமார்  சொல்லுவது இந்நூலின் சிறப்புகளுள் ஒன்று..!  இந்நூல் வாசிப்புமட்டதை உயர்த்துவது மட்டுமல்ல; ஒரு நூலை வாசகனுக்கு  எப்படி அறிமுகப்படுத்தவேண்டும் என்பதையும் கற்பிக்கிறது.. ஆகவே  இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகின் வாசகர்கள் கையில்  இருக்கவேண்டிய  அவசியத்தையும்  வலியுறுத்துகிறது.

புனைவிலக்கிய நதியில் நீந்தி… என்ற நூல் தலைப்புக்கு  பொருத்தமான, ஈர்ப்பான அட்டைப்படமும், அச்சும், கட்டமைப்பும் இந்நூலுக்கு கூடுதல்  சிறப்பு.

நூல்: புனைவிலக்கிய நதியில் நீந்தி
ஆசிரியர்: பேரா.பெ..விஜயகுமார்.
வெளியீடு: கருத்துப் பட்டறை
பக்கங்கள்: 152
விலை: 170
தொடர்பு எண்; 9500740687

Kazhipparai Kagitham Article By Karkavi. கழிப்பறைக் காகிதம் - கார்கவி

கழிப்பறைக் காகிதம் – கார்கவி

” இந்த கக்கூஸ் இருக்கே”

“அட என்னயா இது நாலுபேர் மத்தியில இப்படி ஒரு வார்த்தையை சொல்ர.. கேட்கவே ரொம்ப ஒரு மாதிரி இருக்கேயா….” ஏன்டா மாடசாமி நீ என்ன வேல பாக்ர… நான் விவசாயம் பன்றன்டா ராமசாமி …

சரி இந்த இருபத்தோறாம் நூற்றாண்டுல நாம வயல்வெளியில கஸ்டபட்டு கண்ணுக்கு தெரியாதவன் பலபேருக்கு வயித்து பசிய போக்குறோம்…

ஆனா நம்ம புள்ளைங்க பள்ளிக்கூடத்தில உங்க அப்பா என்ன வேல பாக்ராங்கனு கேட்கும் போது…பல புள்ளைங்க அப்பா டாக்டர், இன்ஜினியர்,வக்கில் னு சொல்லும் போது ரொம்ப பெருமையா விவசாயம் னு சொல்ரத கவனிச்சிருக்கியா…

அதுவே அடுத்த வேல சாப்பிட வழி இல்லாம இன்னும் கஸ்டபடுற மக்கள் நம்ம நாட்டுல ஏதோ ஒரு மூலைல இருக்கதான் செய்ராங்க…..

“போனவாரம் நா அந்த மலைக்காட்டுக்கு பின்னாடி இருக்குற ஊர்க்கு என்னோட பொன்னுக்கு தொடர்ந்து காய்ச்சலுனு மூலிகை வாங்க போன.. அங்க ரொம்பவும் இருக்க வசதி இல்லாத இடத்துல எனக்கு மூலிகை கொடுத்தாங்க நானும் கொண்டு வந்து என் புள்ளைக்கு கொடுத்த இப்ப அவ நல்லார்க்கா…!

அங்க இருக்குற மக்களுக்கு இருக்க சரியான வீடு இல்ல, போட்டுக்க ஒழுங்கான துணி இல்ல, அடுத்த வேல சாப்பாட்டுக்கு வழி இல்ல..

அவங்களோட முக்கியமான வேலையே அவங்கள சுத்தி, அந்த மலையில கிடைக்க கூடிய ஆடு, மாடு விலங்குகளை பட்டிப்போட்டு வளர்த்து அதயே அவங்களோட வாழ்வாதாரத்து தேவையானதா மாத்தி பயன்படுத்திகிறாங்க, அவங்கள சார்ந்த மக்கள அவங்களே பாத்துகிறாங்க..

அதிலயும் நம்ம விளைவிக்கிற அரிசி அவங்களுக்கு சரியான விதத்தில் போய் சேருறது இல்ல..அவங்க அத பாத்ததும் கூட இல்ல கிராமத்துல இருந்து நகரத்துக்கு வந்து பெரிய வீடுகளுல்ல வேலை பாத்து,,,தெருவ கூட்டி,சுத்தம் செஞ்சி அவங்களோட வயித்து புழைப்ப பாத்துகிறாங்க, ஆம்பளைங்க வேட்டைக்கு போறாங்க, பல இடத்துல கூலீக்கு வேலை பாத்து குடும்பத்த பாதுகாக்குறாங்க….

இதுல முக்கியமான விசயம் னு சொல்லனும்னா… அவங்க வீட்லயே வளர்ப்பு பிராணியா பன்றிகளையும்,ஆடு,மாடு எல்லாம் வளர்த்து…அத தன்னோட உணவாகவும் விற்பனைக்கும் மலைக்கு கீழ கொண்டு வராங்க..

பன்றிகளோட கழிவ மூட்டைகள் ல சேகரிச்சு நம்மலோட விவசாயத்துக்கு உரமா கொண்டு வந்து தராங்க…

என்னோட பொன்னுக்கு மருந்து வாங்க போன்னு சொன்னல.. அந்ந மருந்து கொடுத்தவர் பேரு கூனியன் அவர்தான் என்னோட நிலத்துக்கு உரம் கொடுக்குறாரு…

“என்னயா ராமசாமி சொல்ர நீ அந்த உரமா வாங்கி போடுற… ஆமா முனுசாமி அதுவும் உரம் தான்…அத பயன்படுத்துறதுல என்ன இருக்கு…ஒருகாலத்துல பல பண்ணையாருங்க அத்தான் பயன்படுத்துனாங்க இப்ப பன்னுறது இல்ல…

இந்த ஒட்டுமொத்த மக்கள் தொகைல அப்படி ஒரு கூட்டம் இருக்குனே யாருக்கும் தெரியிறது இல்ல…

அவங்களும் மனுசங்கதான்.. அவங்களுக்கும் வாழ்வாதாரம் அப்படினு ஒன்னு வேணும்ல…

இந்த டீக்கடைல கக்கூஸ் கட்டனும் னு சொன்னதுக்கே நீ அவ்வளவு பெருசா முகம் சுழுச்சியே…பல சமுதாய மக்கள் அதயே தொழிலா செய்யுறாங்களே அத எல்லாம் நீ நனச்சி பாத்ருக்கியா…

பணவாதிங்க இருக்குற ஊர்ல கழிப்பற இல்லாத காலத்துல இரண்டு கல்லு வச்சு காலைக்கடன முடிச்சிட்டு போவாங்க… பிழைப்புக்காக அத சுத்தம் செஞ்சு கொடுத்துட்டு வயித்து பிழைப்புனு மனச கல்லாக்கிகிட்டு போற சமுதாய மக்கள நாம இதுவரை நாம நனச்சி பாத்ததே இல்ல அப்டிங்கரதுதான் உண்மை….

மலை,காடுனு இருந்த கூட்டம் இப்பதான் கிராம்ம் நகரம்,படிப்புனு கொஞ்சம் முன்னேறி வருது…

காலத்துக்கு ஏத்தமாறி அவங்களும் புள்ளைங்கல படிக்க வச்சு, பின்தங்கிய நிலையில இருந்து கொஞ்சம் மேல வந்துகிட்டு இருக்காங்க…

அதாவது உனக்கு ஒன்னு தெரியுமாடா மாடசாமி அவங்க தான் நம்ம பூமியோட பூர்வகுடி ன்னு சொல்றாங்க ஆனா நகரத்துல நாத்தம் புடிச்ச குப்பைகளுக்கு மத்தியிலயும் சாக்கடை சகதியிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்றாங்க, கழிவுநீர் தொட்டியில் விழுந்து சாவரது யாரு இவங்க தான் டா இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்த மக்கள இப்போ இருக்கிறதுக்கு இடமில்லாமல் அழிஞ்சிட்டு வராங்க..

“சமுதாயம் என்பது மக்களை மேம்படுத்த ஒன்றுபட வேண்டுமே தவிர இழிவு படுததக்கூடாது” இனம்,மொழி, மதம் இவைகளை ஒன்றுபடுத்தி வாழ முற்படும் நாம் மக்களின் சூழல்,வாழ்வாதாரம் அவற்றிற்கான வழியை சற்று திரும்பி பார்த்து அனைத்து தரப்பு மக்களின் அடுத்த கட்ட நிலையை மேம்படுத்த போராடுவோம்…

மனிதம் உணருவோம்
மனிதம் காப்போம்…!
மனிதம் போற்றுவோம்…
மனிதம் புகட்டுவோம்…

Identity politics of tribals and right Article in tamil translated by Sa.Veeramani பழங்குடியினரும், வலதுசாரிகளின் அடையாள அரசியலும் தமிழில்: ச.வீரமணி

பழங்குடியினரும், வலதுசாரிகளின் அடையாள அரசியலும் – தமிழில்: ச.வீரமணி




பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 15 அன்று, போபாலில் பழங்குடியினத்தவரின் முதுபெரும் தலைவரான பிர்சா முண்டா பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற பழங்குடியினர் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், சுதந்திரத்திற்குப்பின் கடந்த பல ஆண்டுகளாகவே, பழங்குடியினர் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்று கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய அரசாங்கம்தான் நாட்டின் வளர்ச்சியில் அவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்து, பல்வேறு நலத் திட்டங்கள் மூலமாக அவர்களைப் பயனாளிகளாக மாற்றியிருக்கிறது என்றும் பீற்றிக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தக் கூட்டத்தின்போது தங்கள் அரசாங்கம் பழங்குடியினர் ஆதரவு அரசாங்கம் என்பதைப்போல் காட்டிக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. இனிவருங்காலங்களில் பிர்சா முண்டா பிறந்த நாள், “ஜன்ஜதியா கவுரவ் திவாஸ்” (“பழங்குடியினரை கவுரவிக்கும் தினம்”) என அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மோடி, மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில்வே நிலையத்தை, கோண்ட் ராணி, ராணி கமலாபதி ரயில்வே நிலையம் என மாற்றும் விழாவிலும் பங்கேற்றார். அதேநாளன்று, மோடி, காணொளிக் காட்சி மூலமாக, ராஞ்சியில் பிர்சா முண்டா மற்றும் பழங்குடியினர் வரலாற்று அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.

இவை அனைத்தும் தாங்கள்தான் பழங்குடியினர் நலன்களுக்காகப் பாடுபடுபவர்கள் எனக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தன. ஆனால் உண்மையில் மோடி அரசாங்கமானது பழங்குடியினர் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருப்பதையும், அவர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் வனங்கள் மற்றும் வன நிலங்களில் அவர்களுக்கு இருந்துவந்த வாழ்வாதாரங்களையும், வாழ்வதற்கான வழிவகைகளையும் அழித்துக்கொண்டும் இருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்றபின், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோதே, பழங்குடியின மக்களின் அவலநிலையும் தொடங்கிவிட்டது. அரசாங்கங்களாலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் பின்பற்றப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பழங்குடியின மக்களை அவர்களின் பாரம்பர்ய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்தன, பலரையும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பேராசைபிடித்த ஒப்பந்தக்காரர்களின் கீழ் அடிமை ஊழியஞ்செய்வதற்குத் தள்ளின. பழங்குடியினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், அரசமைப்புச்சட்ட உரிமைகளும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன.

2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், இவ்வாறு பழங்குடியினர் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவதும், அவர்கள் உரிமைகள் பறிக்கப்படுவதும் நின்றிடவில்லை. மாறாக, அதன்பின்னர் வனங்களில் உள்ள இயற்கைச் செல்வங்களும், கனிம வளங்களும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுவது முன்னிலும் மோசமான முறையில் அதிகரித்தன.

நாட்டில் ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகளிலிருந்த கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவதற்கு முன்னால் அப்பகுதிகளிலிருந்த கிராம சபைகளிடம் அனுமதி வாங்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. மோடி அரசாங்கம் வந்தபின்னர், இது தொடர்பான சட்டத்தில் முதல் திருத்தம் 2015இல் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச் சட்டத்தின்மூலம் இவ்வாறு கிராம சபையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றிருந்த நிலைமை ஒழித்துக்கட்டப்பட்டது. மேலும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக, 2011இல் ஐமுகூ அரசாங்கத்தால் பழங்குடியினர் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களும் ஒழித்துக்கட்டப்பட்டன. மேலும், இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக, ஐந்து மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகளிலிருந்த சிறிய சுரங்கங்களை பழங்குடியினர் கூட்டுறவு சங்கங்களுக்கு குத்தகைக்கு விடலாம் என்கிற சட்டப்பிரிவும், இப்பகுதிகளில் செயல்படும் நிலக்கரி நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 26 சதவீதத்தை சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள மாவட்ட கனிம நிறுவனங்களுக்கு (District Mineral Foundation) அளித்திட வேண்டும் என்கிற சட்டப்பிரிவும் மோடி அரசாங்கத்தால் ஒழித்துக்கட்டப்பட்டது. இவ்வாறு ஒருபக்கத்தில் பழங்குடியினருக்கு விரோதமாக நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகளுக்குக் குழிதோண்டிப்புதைத்துள்ள அதே சமயத்தில், பழங்குடியினர் வாழ்ந்துவந்த வனங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிம வளங்களைச் சூறையாட அனுமதியும் அளித்துவருகிறது.

1927ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தில் ஒன்றிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமுன்வடிவு, வனங்கள் மீதான உரிமைகள் தொடர்பாக பழங்குடியினத்தவரை இதர இனத்தவருடன் சமமாகக் கருதுவதற்கு கிராம சபைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த பங்களிப்பினை அழித்திட இட்டுச் செல்கிறது. மேலும் பழங்குடியினர் வனங்களில் விவசாயம் செய்வதையும், மீன் பிடிப்பதையும், வன உற்பத்திப் பொருள்கள் மீதான உரிமைகளையும், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் மீது இருந்த உரிமைகளையும் கிரிமினல் குற்றமாக்கும் விதத்திலும் அமைந்திருக்கின்றன.

இந்தச் சட்டமுன்வடிவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனாலும், மோடி அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 2018-19 ஆம் ஆண்டு வனக் கொள்கையாக இருந்தாலும் சரி, அல்லது 1980ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act, 1980)-ஆக இருந்தாலும் சரி, நாட்டின் வனங்கள் அனைத்தையும் வனங்கள் அல்லாத நோக்கங்களுக்குத் திருப்பி விடுவதற்கும், தனியார்மயத்தையும், வணிகமயத்தையும் ஊக்குவிப்பதற்கும், வனங்களின் மீது கிராம சபைகளுக்கு இருந்த அதிகாரங்களை ஒழித்துக்கட்டுவதற்கும் வழிவகைகள் செய்வதேயாகும்.

மோடி அரசாங்கம் கொண்டவர உத்தேசித்துள்ள அனைத்து மாற்றங்களும், வன உரிமைகள் சட்டத்தின் ஷரத்துக்களை அரித்து வீழ்த்தி, வன நிலங்களில் பழங்குடியின மக்களுக்கும், வனங்களில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களுக்கும் இச்சட்டத்தின் மூலமாக அளிக்கப்பட்டிருந்த உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கும், அவர்கள் வன நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், சிறு அளவில் வன உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் இருந்த உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கும் இட்டுச்செல்கிறது. இவ்வாறு பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களுக்கு வன நிலங்களில் அளிக்கப்பட்ட உரிமைகளும், அவற்றை விவசாயம் செய்வதற்கான உரிமைகளும் இப்போது ஒன்றிய ஆட்சியாளர்களால் மீறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒன்றிய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, 2020 ஆகஸ்ட் 31 வரையிலும் வன நில உரிமைகளுக்காக தாக்கல் செய்த மனுக்களில் (claims for titles) 46.69 சதவீதம் மட்டுமே ஏற்கப்பட்டிருக்கின்றன. அதாவது, அவர்களின் கோரிக்கை மனுக்களில் பாதிக்கும் கீழேயே அவர்களுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடியின மக்களுக்காக தங்கள் அரசாங்கம் ஏராளமாகச் செய்துள்ளது என்று மோடி பீற்றிக்கொண்டுள்ள மத்தியப் பிரதேசத்தில், உரிமை கோரி மனுக்கள் செய்துள்ள ஐந்து பழங்குடியினர் குடும்பங்களில் அநேகமாக மூன்று குடும்பங்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

மோடி அரசாங்கம், பழங்குடியின மக்களின் “சமூக நலனில்” எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதை பழங்குடியினக் குழந்தைகள் கல்வி கற்க முடியாத அவல நிலையே நன்கு எடுத்துக்காட்டும். 2020 மார்ச்சுக்குப்பின்னர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பழங்குடியினக் குழந்தைகளுக்கான அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டதால், பழங்குடியினக் குழந்தைகளில் 90 முதல் 95 சதவீதம் வரை எவ்விதமான கல்வியும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இணையயவழிக் கல்வி உலகம் (The world of online education) என்பது பழங்குடியின மாணவர்களுக்கு மூடப்பட்டிருக்கிறது. அநேகமாக அனைத்துப் பழங்குடியின மாணவர்களுக்கும் கல்வி உரிமை ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை கிராமப்புற பழங்குடியினக் குடும்பங்கள் மிகவும் வறியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்களின் மத்தியில் பசி-பட்டினிக் கொடுமை கடுமையாக இருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு வேலை அளிப்பதிலும் அநேகமாக இவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். பழங்குடியினர் குறித்த மோடி அரசாங்கத்தின் இந்துத்துவா அணுகுமுறை, வலதுசாரி அடையாள அரசியலின் வகையைச் சார்ந்தது. மோடி, தன்னுடைய உரையில், பழங்குடியின சமூகத்தினருடன் ராமனுக்கு இருந்த தொடர்பைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்து சமூக அமைப்பில் அடித்தட்டில் பழங்குடியின மக்களை வைத்திடும் இந்துத்துவா திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்.

இவ்வாறு இவர்கள் பழங்குடியின மக்களுக்காகப் போராடியவர்களைப் புகழ்ந்துகொண்டும், அவர்களின் பெயர்களை ரயில் நிலையங்களுக்கு வைத்துக்கொண்டும், அவர்களுக்காக சிலைகள் எழுப்பிக்கொண்டும் உள்ள அதே சமயத்தில், அவர்களுக்கு வன நிலங்களிலும், வனங்களிலும் இருந்துவந்த உரிமைகளையும், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசமைப்புச்சட்ட உரிமைகளையும் ஒழித்துக்கட்டும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. பழங்குடியினர், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களால் பலிகொடுக்கப்படுபவர்களில் பிரதானமாக இருக்கிறார்கள்.

(நவம்பர் 17, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி