Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

நூலகாலஜி – 2 நூலகமே வெல்லும்… – ஆயிஷா. இரா. நடராசன்



Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்
விளாதிமிர் வெர்னாட்ஸ்கி

ரஷ்ய – உக்ரேனிய  யுத்தத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் விளாதிமிர் வெர்னாட்ஸ்கியை  நினைக்கிறேன். சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இணையாக நான் மதிக்கும் பெயர். பலரையும் போல வெர்னாட்ஸ்கியை  எனக்கு தேடி எடுத்து அறிமுகம் செய்தவர் தோழர் சிங்காரவேலர்தான். பூகோள-விஞ்ஞானி என்று வெர்னாட்ஸ்கியை  பற்றி நான்கு பாரா அறிவியல் கட்டுரையை நம் சிங்காரவேலர் தொகுப்பில் பார்க்கலாம். தந்தை பெரியாரின் குடியரசு இதழில் அது வெளிவந்திருந்தது. பிஜி தீவுகளில்  தோழர்கள் எஸ். ஏ. டாங்கே, சவுகத் உஸ்மானி, சுபானிமுகர்ஜி  ஆகியோரோடு வெர்னாட்ஸ்கியை  சந்தித்த சிங்காரவேலர்…. டார்வினுக்கு இணையான அறிவியல் மகாஅறிஞர் என்று அவரை ஏற்றதோடு இந்தியா வருமாறு அந்த மாமனிதருக்கு அழைப்பு விடுத்தார் என்று தோழர் எம். பி. டி. வேலாயுதம் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

டார்வினின் உயிரிகள் தொடர்பான பரிணாவியல் தத்துவத்தை யாருமே இன்று மறுக்கமுடியாது. ஆனால் ஒரு காலத்தில் அவரது ‘உயிரிகளின் தோற்றம்’  நூல் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகமாக இருந்தது. அதைப்போலவே வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும்   தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல… மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும் நம்மால் நம்ப முடியாதபடி வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஒரு அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. அதுசரி யார் இந்த வெர்னாட்ஸ்கி?.

பரிணாமவியல் வளர்ச்சியை முழுதும் புரிந்து கொள்ளாமல் வெர்னாட்ஸ்கியை நாம் நெருங்கக்கூட முடியாது. பரிணாமவியல்  எனும் அறிவியல் சித்தாந்தத்தை  டார்வின் புவியியல்  உயிரிகளின் தோற்றம்- இன்றுள்ள பல்லுயிர் பெருக்கமாக எப்படி மாறுபாடு அடைந்தது என்பதன்  புதிரை விடுவித்த ஒற்றை சரடாக கண்டடைந்ததை பார்க்கிறோம். பலபல ஆயிரம் ஆண்டுகளாக தங்களது மூதாதை உயிரினங்களில் இருந்து  பலவகை கிளைப்பாதைகள் வழியே இன்றுள்ள தங்களது நிலையை உருவத்தை வாழ்க்கை சுழற்சியை புவியின்  உயிரினங்கள் அடைந்துள்ளன என்று அவரது கோட்பாடு விவரிக்கிறது. பிற்காலத்தில் மரபணுவியல் டார்வின் விட்டுச்சென்ற இடைவெளிகளை மிகக் கச்சிதமாக தனது டி.என்.ஏ வரையறைகள் கோட்பாடுகள் மூலம் நிறைவடைய வைத்து அதை நிரந்தர வளர்ச்சி அறிவியல் துறையாக மாற்றியது. ஆனால் வெர்னாட்ஸ்கி செய்தது என்ன?

வெறும் புவிசார்ந்து மலர்ந்த இந்த கோட்பாட்டை அவர் இந்த முழு பிரபஞ்சம் சார்ந்தும் பொருத்துகிறார். டார்வின் கோட்பாட்டை உள்வாங்கிய பிறகு அதனை அவர் பிற்பாடு விரிவாக்கினார் என பல வரலாற்றாலர்கள் தவறாக பதிவு செய்கிறார்கள். மரபியல்-வேதியியல், வேதிப்பொருட்களின் பரிணாமவியல் வளர்ச்சி, உயிர்ப்பு வேதியியல், வானிலை-நிலவியல் என பல புதிய துறைகளுக்கே வித்திட்ட சோவியத் அறிஞர் வெர்னாட்ஸ்கியின் கண்டுபிடிப்புகள் முழுக்க முழுக்க தன்னிச்சையானவை. அவர் நிலப்பண்பியல் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்தபோது புவி வளர்இயல்  எனும் துறையே பிறந்தது. அவரது கோட்பாடு எதுவும் டார்வின் வழி வந்தது அல்ல. ஆனால் டார்வின் தத்துவத்திற்கு அது உறுதுணையாக நிற்கிறது.

பரிணாம வளர்ச்சி என்பது உயிரிகளோடு மட்டுமே வைத்து பார்க்கப்பட முடியாது என்பதை டார்வினும் ஒப்புக்கொள்கிறார். கார்லைலின் புவிசார்ந்த உருவாக்க நூலை தனது கப்பல் பிரயாணத்தில் வாசித்த அனுபவம்தான் டார்வினையே டார்வினியவாதி ஆக்கியது. ஆனால் அந்த விஷயத்தில் கார்லைல் விட்ட இடத்தில் இருந்து புரிதலை பல படிநிலை மேலே உயர்த்திச் சென்றவர் வெர்னாட்ஸ்கி. புவியின்  பரிணாமம் அவரது நூஸ்பியர் (Noosphre) கோட்பாட்டின் படி மனிதகுரங்கு மனிதனாக மாறிய படிநிலையில் முடிந்துவிடவில்லை. மனிதனால் மனிதனின் தலையீடுகளால் புவியியல் ஏற்படும் விபரீத மாற்றங்களை அவர் 1930-களிலேயே புவி பரிணாமத்தின் அடுத்த படிநிலையாக அறிவித்து சுற்றுச்சூழலியல் புவிவெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு என     நம் 21-ஆம் நூற்றாண்டு சிக்கல்களை முன் அறிவித்தவர். அதுவும் புவி சார்ந்த பரிணாம படிநிலைகளின் ஒருபகுதி என்று அதிர்ச்சி அளித்தவர் அவர்.

அவரது பயோஸ்பியர் மட்டுமல்ல- நூஸ்பியர், உயிரிகள் குறித்த கல்வியும் புதிய இயற்பியலும் போன்ற நூல்களை நான் வாசித்திருக்கிறேன். மேஹன் ரவுலியார்டு மொழிபெயர்ப்பில் அவை ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. அந்த நூல்கள் எல்லாம் பலரும் நினைப்பதுபோல ரஷ்ய மொழியில் எழுதப்படவில்லை. அவை உக்ரேனிய மொழியில் எழுதப்பட்டவை. புவியின் வாழியல் சூழல் மனிதனின் தோற்றத்தை பரிணாமம் அடைய வைத்த நிலை மாறி மனித தலையீடுகளால் அடுத்த பரிணாமம் தொடங்குவதையும் இவை இரண்டுமாக ஒன்றன் மீது ஒன்று ஏற்படுத்தப்போகும் தாக்குதலையும் வெர்னாட்ஸ்கி முன்மொழிந்த அத்தனை அறிவியல் ஆய்வு கட்டுரைகளும் உக்ரேனிய மொழியில் தான் எழுதப்பட்டன.

 இத்தனைக்கும் வெர்னாட்ஸ்கிக்கு ரஷ்ய மொழி கசாக்கிய மொழி, பிரெஞ்சு ஆங்கிலம், ஜெர்மன் உட்பட எட்டு மொழிகள் தெரியும். தன் அறிவியலை தன் தாய்மொழியில் மட்டுமே எழுதியது அவரது அரசியல் போராட்டம் என்று அறிந்தபோது அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள பலநாட்கள் ஆனது.

உக்ரேனிய கசாக்கிய முன்னோடி குடும்பத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் பற்றி பிறந்து தாதுஇயல் என்னும் புத்தம் புதிய துறையில் தனது ஆசிரியர் அலெக்ஸி பாவ்லோவால் பட்டப்படிப்பில் இணைய ஊக்குவிக்கப்பட்டவர் அவர். உலகெங்கும் பயணம் செய்த அற்புத விஞ்ஞானி. அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போதும் அறிய பல புகைப்படங்களை காணும்போதும் ஏற்படும் பிரமிப்பு இந்த பூகோளமே என் ஆய்வுக்கூடம் என்று அறிவித்த அவரது துணிச்சலை பறை சாற்றுகிறது. சுவிட்சர்லாந்து, பாரிஸ், லண்டன், முனிக், ஆஸ்திரியா உட்பட ஒரு தனது ஆய்வு நாட்களில் 2 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவை சர்வ சாதாரணமாக நிலவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தியவர் படிகங்களின் ஒளியியல், வெப்பவியல், இழுவை மற்றும் காந்த புலப்பண்புகள்  குறித்து முனிச் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வுகூடத்தில் தனது முதல் கோட்பாட்டை அவர் நிறுவிய ஆண்டில் ரஷ்ய ஜார் மன்னன் உக்ரேனிய  மொழியில் புத்தகங்கள் அச்சிட தடை விதித்ததையும் பெட்ரோ லாவ்ரோ நடத்திய முன்னோக்கி எனும் உக்ரேனிய நாளிதழையும் முடக்கியதையும் அறிந்து கொதிக்கிறார். ரஷ்யமொழியே ஆட்சி மொழி என அறிவித்து ஜார் மன்னன்  இரண்டாம் நிக்கோலஸ் அதை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து அலுவல்களுக்குமான மொழியாக திணித்து அரசாணை வெளியிடுகிறான். உடனடியாக தன் தோழர் உக்ரேனிய எழுத்தாளர் ஷெவ்ஷென் கோவோடு  இணைந்து உக்ரேனிய புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து திரட்டி பாதுகாக்கும் பணிக்காக அவர் நாடு திரும்பினார்.

ஜார் மன்னன் அந்த உக்ரேனிய நூல்களை கைப்பற்றி அழிப்பதற்குமுன் ஆயிரக்கணக்கான நூல்களை தன் அயல் நட்பு வட்டாரத்தின் மூலம் நாட்டுக்கு வெளியே எடுத்துச் சென்றுவிட்டார்.  வெர்னாட்ஸ்கி. உக்ரேனிய மொழிக்கு சம அந்தஸ்து பெறுகிற பிரம்மாண்ட போராட்டத்தில் ஒருபுறம் பங்கேற்றாலும் மறுபுறம் தன் தாய் மொழியான அதனை செம்மைப்படுத்திட உலக கவனத்தைப் பெற பல்வேறு இலக்கிய அறிவியல் முயற்சிகளை மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார் அவர். தோழர் லெனினை சந்தித்து சோவியத் புரட்சிக்கு பிறகு அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை பெற்றதோடு அவரது கல்வி மற்றும் பொது எழுத்தறிவு அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசின் ஆலோசகர் ஆகிறார். மாஸ்கோவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  பல்கலைக்கழகம் உக்ரேனிய மொழியில் பேராசிரியர் இன்மையால் பாடத்தை நடத்தமுடியாது என நீக்கிட நிர்வாகம் முடிவுவெடுத்தபோது ஒரு குறிப்பிட்ட மொழியில் பயின்றிட  ஒருவர் இருவரால் கூட முடியாத நிலை இருந்தாலும் அந்த பல்கலைக்கழகத்தையே மூடிவிடுங்கள் என்று லெனின் அறிவித்தது என்ன ஒரு அற்புதம்!. சோவியத் மொழிக்கொள்கையை வகுத்துக் கொடுத்தவர் வெர்னாட்ஸ்கி. அவரவர் மொழியில் கல்வி என்பது முதல் பிரகடனம். போல்ஷிவிக்குகளின்  அக்டோபர் (1917) புரட்சிக்குப் பிந்தைய அரசு சோவியத் மாகாணங்கள்  தேசிய இனங்களின் 130 மொழிகளுக்கும் சமஉரிமை வழங்கும் இரண்டாம் பிரகடனம் சற்றே வித்தியாசமானது. சோவியத் அரசியல் சாசனத்தின்படி மொழி அடிப்படையில் யாரும் யார் மீதும் பாகுபாடு காட்டுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது.

 உக்ரேனின் கீவ் நகரில் தினெய்பபர் நதிக்கரையில் டெமிவ்கா எனும் பகுதியில் வெர்னாட்ஸ்கி தனது பிரம்மாண்ட கனவை விதைத்தார். 1918 ஆகஸ்ட் 2 அன்று மிக சிறிய அளவில் தொடங்கிய நூலகம் அது. ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸின் பேரழிவு தடை சட்டத்திடமிருந்து தான்  காப்பாற்றி நாடு கடத்தியும் ரகசியமாக பத்திரப்படுத்தியும்  வைத்திருந்த உக்ரேனிய  புத்தகங்களை அங்கே அவர் அடுக்கத்தொடங்கினார் நாலண்டுகளில் மூன்று லட்சம் புத்தகங்களாக பிரம்மாண்ட கட்டிடமாய் அது வளர்ந்தது. தனது ஆய்வு கட்டுரைகள் நூல்களை ஆண்டுதோறும் கீவ்-தேசிய நூலகத்திலிருந்தே அவர்  வெளியிட தொடங்கினார். பாவ்லோ ஸ்கோரோ பாட்ஸ்கி எனும் ஒப்பற்ற உக்ரேனியா அறிஞரை நூலகராக அவர் கட்டாயப்படுத்தி ஏற்கவைத்தார் 1940ல் கீவ் தேசியநூலகம் உலகப்பிரசித்தி பெற்றது. காரணம் மக்கள் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் மற்றும் மீர் பதிப்பகம் தனது வெளியீடுகளின்  முதல் பிரதிகளை அந்த நூலகத்தில் காட்சிக்கு வைத்தன. ஒரு புத்தகம் அச்சிடப்பட்டால் அது தமிழ் உட்பட 171 மொழிகளில் வந்த அதிசயம் வேறு எப்போதாவது நடந்திருக்கிறதா?

 ஆனால் 1941 நாஜி வெறியரான ஹிட்லர் ஆபரேஷன் பார்பரோஸா எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சோவியத் மீது ஆக்ரோஷமாக படையெடுத்தார்.  கீவ்-வின்  சில மைல்கள் வரை உள்நுழைந்த ஜெர்மனிய நாஜிப்படை வெர்னாட்ஸ்கியின் உலக பிரசித்திபெற்ற நூலகத்தை தரைமட்டமாக்குவதை தனி நோக்கமாக அறிவித்தது. நான்கு இரவுகள்- வெர்னாட்ஸ்கியும் அவரது தோழர்களுமாக  செய்த வேலையை வரலாறு மறக்காது. சோவியத் ராணுவத்தால் கைவிடப்பட்ட ஒரு வெறும் 32 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் புத்தகங்கள் அனைத்தையும் ஏற்றி ஆறுமுறை வான்வழி குண்டு தாக்குதல்களின் ஊடாக  ஆயிரம்மைல்களுக்கு  அப்பால்  பாஷ்கோடோஸ்தான் எனும் பிராந்தியத்தின்  தலைநகரமான உஃபா (Ufa)வுக்கு ஒரு பள்ளி வளாகத்தில் நூல்களை ரகசியமாக கடத்தினார்கள். இப்பெரும்பயணத்தில் தனது 27 தோழர்களை தீவிர வாசகர்களை மாணவர்களை வெர்னாட்ஸ்கி இழந்தார். நூலகக் கொலைகள் என்றே அவைகளை மக்கள் அழைத்தார்கள்.

ஹிட்லர் படைகளுக்கு எதிராக தனது காலியான கீவ் நூலக வளாகத்தில் இருந்தபடியே பிரம்மாண்ட மக்கள் யுத்தத்தை அவர் தோழர் ஜோசப் ஸ்டாலினோடு தோளோடு தோள் நின்று துவக்கினார். வெறும் சோவியத் படைகள் தனக்கு எதிராக நிற்கும் என்று நினைத்த ஹிட்லரும் அவனது தளபதிகளும் மக்கள் யுத்தம் என்னும் புதிய வகை எதிராளியின் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. 890 நாட்கள் சுற்றிவளைத்து உணவின்றி மக்கள் செத்து மடியட்டும் என்று ஆணையிட்டான். ‘பசித்தே இறத்தல்’ என்பது அந்த ராணுவ நடவடிக்கைக்கு பெயர். ஆனால் மக்கள் நடத்திய முற்றுகைப்போர் (War of Attrition) தாய்மார்கள், குழந்தைகள், கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் இன்னும் பிளம்பர், தொழிற்சாலை பொறியாளர், மருத்துவர் என்று யாவரும் நாஜிப் படைகளுக்கு எதிராக கிடைத்ததை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கி துப்பாக்கி குண்டுகளால் துளைத்தாலும் கிளர்ந்தெழுந்து  யுத்தத்தை தேசபக்த போராக (Patriotic War) மாற்றி வென்றது வரலாறு. மூன்றாண்டுகள் தொடர்ந்த கொடிய ரத்தவெறி பிடித்த மகா யுத்தத்தில் மண்ணைக் காத்திட கீவ் நூலக வளாகம் ஒரு போர்படை பாசறையாக அறிவியல் அறிஞர் வெர்னாட்ஸ்கியால் திறம்பட செயல்படப்பட்டது. அப்போது அங்குதான் ரஷ்ய அணு சோதனைகள் செய்வதற்கான வெர்னாட்ஸ்கியின் மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டன.

 இந்த கட்டுரையின் ஆரம்ப வரிக்கு திரும்புவோம். உக்ரேன் ரஷ்ய யுத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கேள்வி சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடந்த நம் இந்திய மாணவர் சங்க கல்விக் கருத்தரங்கில்  உரையாற்றி விட்டு வெளியே வந்தபோது மாணவர் சங்க தோழமைகளில் ஒருவரான ஒரு லயோலா கல்லூரி மாணவரால் சாதாரண உரையாடலில் என்னிடம் கேட்கப்பட்டது. வரலாறு முழுவதும் தோளோடு தோள் நின்று களத்தில் வென்ற இரு சகோதரர்கள் அல்லவா உக்ரேனும்-ரஷ்யாவும். ரஷ்யாவுக்கு எதிரான தனது வெறுப்பு ராஜதந்திரத்தின் மூலம் தனது அடிமையான நேட்டோ படையில் பழைய சோவியத் பிராந்தியங்களை ஒவ்வொன்றாய் இணைத்து பணியவைத்த அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் இறுதியாக உக்ரேனையும் இழக்கிறார்கள். தனக்கு எதிரான நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் தன்னை பிராந்திய நில ரீதியில் மூன்று பக்கமும் சூழ்ந்த உக்ரேனும் இணைந்தால் அது தனது பாதுகாப்பு என்ன ஆகும் என பரிதவித்தபடி களம் இறங்கிய ரஷ்யாவை ஆதரிப்பதா அல்லது ரத்தவெள்ளத்தில் இறந்த உக்ரேனிய போர் வீரர்களுக்காக அழுவதா….. ஆனால் இந்த சகோதர-யுத்தத்தின் வழியே ரத்தம் குடிப்பதும் தனது ஆயுத-சந்தையை திறந்து விட்டு முதலை கண்ணீர் வடித்து உலக ஊடக நாடகத்தை நடத்துவதும் யார் என்று எல்லோருக்கும் தெரியும். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

1945 இல் உஃபா விலிருந்து பிரபலமான ’நூலக பெரும் பயணம்’ மூலம் மூன்று கப்பல்களில் கீவ் நூலக நூல்கள் -திரும்பியதும் தனது மாபெரும் கனவான தனது பிரம்மாண்ட நூலகத்தில் ஹிட்லரின் குண்டுகளால் சிதலமடைந்த பகுதிகளை சீர் செய்ய மறுபடியும் கட்டிட வேலைகள் தொடங்கி பீடு நடைபோட்ட நாளில் மக்கள் வெற்றியின் சின்னமான தனது நூலகத்தை கடைசியாக வலம்வந்த பின் ஜனவரி ஆறாம்  நாள் அறிஞர் வெர்னாட்ஸ்கி காலமானார். இன்று உலகின் பிரம்மாண்ட நூலகங்களில் ஒன்றாக போற்றப்படும் கீவ் நகரின் வெர்னாட்ஸ்கி தேசிய நூலகம் உக்ரேனிய ரஷ்ய தோழமையின் அடையாளமாக  விரைவில் இருவரும் இணைந்து  ஏகாதிபத்தியத்திற்கு பதில் கொடுக்கும் நாள் வரும் என பறைசாற்றியபடி உயர்ந்து நிற்கிறது., வரலாறு சொல்லும்,, நூலகமே வெல்லும்.,,

முந்தைய கட்டுரையை வாசிக்க:

நூலகாலஜி – 1 தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல… – ஆயிஷா. இரா. நடராசன்

ஆடுகளை அமைதி படுத்துதல்: பிரச்சாரம் எப்படி செயல்படுகிறது – தமிழில் க.ஆனந்தன்

ஆடுகளை அமைதி படுத்துதல்: பிரச்சாரம் எப்படி செயல்படுகிறது – தமிழில் க.ஆனந்தன்




1970களில், நான் ஹிட்லருக்கு முன்னணி பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவரான ரேனி ரீபென்ஸ்தால் அவர்களை சந்தித்தேன், அவரின் காவியமான படங்கள் நாஜிக்களை மகோன்னதமானவர்களாக சித்தரித்திருக்கும். நாங்கள் இருவரும் கீன்யாவில் ஒரே தங்கும் விடுதியில் தங்கியிருக்க வேண்டியிருந்தது, அங்கு அந்த பெண்மணி ஒரு புகைப்படம் எடுக்கும் பணிக்காக வந்திருந்தார், அவர் ஹிட்லரின் இதர நண்பர்களுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து தப்பி வந்திருந்தார். அந்தப் பெண்மணி என்னிடம் தெரிவித்தது, அவருடைய படங்களில் ‘நாட்டுபற்று செய்திகள்’ இடம்பெற்றதிற்கு ‘மேலிடத்திலிருந்து வந்த ஆணைகள்’ காரணம் அல்ல, மாறாக, அவை ஜெர்மன் பொதுஜனத்தின் “அடிபணியும் வெற்றிடம்” (ஆட்டுமந்தை போல் என்கிறார்மொர்) பொறுத்தே இருந்தது என்றார்.

“அவர்களில், தாராளவாதிகளும், படித்த பூர்ஷுவாக்களும் இருந்தார்களா” என நான் வினவியதற்கு, “ஆம், குறிப்பாக அவர்கள்” என்றார் அவர்.

நான் சுற்றி பார்க்கும் போது தற்போது மேற்கத்திய சமூகங்களை பிரச்சாரங்கள் விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நான் இதைப் பற்றி நினைக்கிறேன்.

நிச்சயமாக நாம் 1930 களின் ஜெர்மனியிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறோம். நாம் வாழ்வது தகவல்களின் சமூகங்களில், நாம் சர்வதேசிய வாதிகள். நாம் எந்த காலத்திலும் இவ்வுளவு அறிந்திருக்கவில்லை, இவ்வுளவு அதிகமாக தொடர்பு இருந்ததில்லை, இதைவிட சிறந்த வகையில் தொடர்பில் இருந்ததில்லை.

நாம் அப்படித்தானா? அல்லது நாம் ஊடக சமூகத்தில் வாழ்கிறோமா, அங்கு மூளை சலவை நயவஞ்சகமாகவும், இடைவிடாமலும், நடைபெறுகிறதா? உணர்வுகள் நாட்டின் தேவை களுக்கும் பொய்களுக்கும் அல்லது கார்ப்பரேட் சக்திகளுக்கு ஏற்ப வடிகட்டப்படுகிறதா?

ஐக்கிய அமெரிக்கா மேற்கத்திய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேற்குலகின் 10 முதன்மையான ஊடகங்களில் 9 நிறுவனங்கள் வட அமெரிக்க கண்டத்தில் உள்ளன. இண்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்கள் -கூகுள், முகநூல், டுவிட்டர்-ஆகியவை பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கு சொந்தமானவை, அமெரிக்கர்களால் கட்டுபடுத்தப்படுபவை.

என்னுடைய வாழ்நாளில், அமெரிக்கா தூக்கி எறிந்தது அல்லது தூக்கி எறிய முயன்றது 50க்கு மேற்பட்ட அரசுகளை, அவைகள் பெரும்பாலும் ஜனநாயக பூர்வமாக தேர்தெடுக்கப்பட்டவை. அது 30க்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்களில் தலையிட்டுள்ளது. அது 30 நாடுகளின் மக்கள் மீது குண்டுகளை வீசியுள்ளது, அந்த நாடுகள் பெரும்பாலும் ஏழை நாடுகள், இதற்கெதிரான பாதுகாப்பு இல்லாதவர்கள், 50 நாடுகளின் தலைவர்களை கொலை செய்ய முயன்றுள்ளது. 20 நாடுகளில் அது விடுதலை இயக்கங்களை அடக்க போர் நடத்தியுள்ளது.

இத்தகைய படுகொலைகளின் அளவும், அவற்றின் பரந்துபட்ட தன்மையும் பெரும்பாலும் சொல்லப்படவில்லை, கவனத்தில் கொள்ளவில்லை மேலும் அதற்கு காரணமானவர்கள் இன்னமும் ஆங்கில-அமெரிக்க அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

காதாசிரியர் ஹரால்டு பிண்டர் இறப்பதற்கு முன் ஆண்டுகளுக்கு முன் 2008ல் இரண்டு அசாதாரணமான உரைகளை நிகழ்த்தினார், அது அமைதியை உடைத்தது :

“யு. எஸ். வெளியுறவுக் கொள்கையை சிறப்பாக கீழ்கண்டவாறு விளக்கலாம் . நீ எனது கு.யை முத்தமிடு அல்லது நான் உனது தலையில் காலால் உதைப்பேன். அது அந்தளவுக்கு எளிமையானது அந்தளவுக்கு முரட்டுதனமானது. அதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அது நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமாக இருந்தது. அது தவறான தகவல்களை அளிக்க அமைப்புகளை கொண்டிருந்தது, அது வெறிக்கூச்சலை பயன்படுத்தும், மொழியை திரிக்கும், அது ஏற்றுக் கொள்ள வைக்க முயல்வது போல் காட்டும், ஆனால் அவையனைத்தும் உண்மையில் பொய்மூட்டைகள். அது ஒரு வெற்றிகரமான பிரச்சாரம். அவர்களிடம் பணம் உள்ளது, அவர்களிடம் தொழிற்நுட்பம் உள்ளது, அவர்களிடம் அவர்கள் செய்த செயல்களிலிருந்து தப்பிவிட சகல வழிகளும் உள்ளது, ஆகவே அதை அவர்கள் செய்கிறார்கள்.

பிண்டர் நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு பேசிய போது இதைத் தெரிவித்தார் : அமெரிக்காவின் குற்றங்கள் அமைப்புரீதியிலானவை, மாறாதவை, கொடூரமானவை, வருத்தப்படாதவை, ஆனால் உண்மையில் மிகச் சில மக்கள் மட்டுமே அதைப் பற்றி பேசியுள்ளனர். நீங்கள் இதனை அமெரிக்காவிடம் கொடுத்திருக்க வேண்டும். அது உலகம் முழுவதும் துல்லியமாக அதிகாரத்தை பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறது, ஆகவே அது உலகம் முழுவதற்குமான நன்மை செய்பவர்கள் போல முகமூடி அணிந்து சுற்றிவருகிறது. அது மிகவும் புத்திசாலித்தனமான, சிலசமயம் நகைப்பாகவும், மிகவும் வெற்றிகரமாக ஹிப்னாசிஸ் செய்கிறது.

பிண்டர் எனது நண்பர் மற்றும் கடைசியான சிறந்த அரசியல் துறவி-அதாவது மறுதலிக்கும் அரசியல் பண்படுத்துவதற்கு முன், நான் அவரிடம் “ஹிப்னாசிஸ்” என்பது ரேனி ரீபென்ஸ்தால் சொல்லும் “அடிபணியும் வெற்றிடமா” என்று வினவினேன். அதற்கு அவர் “ஆம் ” என்றார்.

நமது அமைப்புகளான கார்ப்பரேட் ஜனநாயகத்தில், போர் என்பது பொருளாதார அவசியம், அது, பொதுத்துறை மான்யத்திற்கும் தனியார் துறை லாபத்திற்குமான பொருத்தமான திருமண பந்தம், முதலாளிகளுக்கு சோசலிசம், ஏழைகளுக்கு முதலாளித்துவம், 9/11க்குப் பிறகு யுத்த தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் விண்ணில் பறந்தன. மேலும் இரத்தம் சிந்தப்பட இருக்கிறது, அது தொழிலுக்கு மிகவும் உகந்தது.

இன்று மிகவும் லாபகரமான போர்களில் ஒவ்வொன்றுக்கும் அவைக்கென பிரத்யோக பிராண்ட் உள்ளது. அந்த யுத்தங்கள் “என்றென்றைக்குமான யுத்தங்கள்” என்றழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், ஈராக், ஏமன், தற்போது உக்ரைன். இவையனைத்துமே பொய் மூட்டைகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஈராக் மிகவும் இழிவான உதாரணம், அதனுடைய பேரழிவு ஆயுதங்களுக்காக யுத்தம், அது கடைசிவரை இல்லவே இல்லை. நேட்டோ 2011ல் லிபியாவை அழித்ததிற்கு பெங்காசியில் நடைபெற்ற கொன்றுகுவிப்பு காரணம் என நியாயப்படுத்தப்பட்டது, ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை , ஆப்கனிஸ்தான் 9/11க்கு வசதியான பழிவாங்கல் நடவடிக்கை எனப்பட்டது, ஆப்கான் மக்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இன்று, ஆப்கானிஸ்தான் பற்றிய செய்திகளென்றால் -தாலிபான்கள் எந்தளவுக்கு கொடூரனமானவர்கள் என்பதே-ஜோ பைடன் ஆப்கான் வங்கிகளின் ரிசர்வ் நிதியான 7 பில்லியன் டாலர்களை திருடிக் கொண்டதும், அதனால் ஆப்கான் மக்கள் பரந்து பட்ட அளவில் துயரங்கள் சந்திப்பதும் செய்திகள் கிடையாது. சமீபத்தில் வாஷிங்டனிலிருந்து செயல்படும் தேசிய பொது வானொலி இரண்டு மணி நேரம் ஆப்கனிஸ்தான் பற்றிய நிகழ்ச்சியை ஒலிபரப்பியது, அதில் அங்கு பட்டினியால் வாடும் மக்களைப் பற்றி 30 விநாடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜூன்மாதம் நடைபெற்ற நேட்டோ வின் உச்சிமாநாட்டில், இந்த அமைப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, ஒரு யுத்த உத்தி ஆவணத்தை நிறைவேற்றியுள்ளது, அந்த ஆவணத்தின்படி ஐரோப்பாவை மேலும் இராணுவ மயமாக்கி, இரஷ்யா மற்றும் சீனாவுடனான போர்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்கிறது. அது தனது சக அணு ஆயுத போட்டியாளர்களுடன் பலதளங்களில் போர் புரிதல் பற்றி பரிந்துரைக்கிறது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது அணு ஆயுத யுத்தம் பற்றி பேசுகிறது.

“நேட்டோவின் விரிவாக்கம் வரலாற்று வெற்றியாக உள்ளது” என அந்த ஆவணம் தெரிவிக்கிறது.

நான் அவற்றை நம்பமுடியாமல் படித்தேன்.

“அந்த வரலாற்று வெற்றியின்” அளவுகோல்தான் உக்ரைனில் நடைபெறும் போர், அது பெரும்பாலும் செய்தியல்ல, ஆனால், ஒருதலை பட்சமான, துதிபாடும் தேசிய வெறிக்கூச்சல், திரித்து கூறுதல், சில தகவல்களை வேண்டுமென்றே விட்டுவிடுவது ஆகியனவே.

கடந்த எட்டு வருடங்களாக உக்ரைனில், இரஷ்யாவின் எல்லைக்கு அருகில் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டதிற்கும், அவர்களின் இருப்பிடங்கள் கிரிமினல்தனமாக அழிக்கப்பட்டதிற்கும் எதிர்வினையாக பிப்ரவரியில் இரஷ்யா உக்ரைன் உள்ளே நுழைந்தது.

2014ஆம் ஆண்டில் அமெரிக்கா, உக்ரைனில் ஒரு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜனநாயக ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுபவரை வெளியேற்றிவிட்டு, அவருக்கு பதிலாக தங்கள் நபர் ஒருவரை அதிகாரத்தில் நிருத்தி வைத்தனர்.

சமீப காலத்தில் அமெரிக்காவின் “டிபன்டர் ஏவுகனைகளை” கிழக்கு ஐரோப்பாவில், போலந்து ஸ்லோவேனியா, செக் குடியரசு, நிச்சமயாக ரஷ்யாவை குறிவைத்தே நிறுத்தப்பட்டு, அதே சமயம் அதற்கு இணையாக, பொய்யான வாக்குறுதிகளை பல காலமாக, 1990ல் ஜேம்ஸ் பேக்கர் கர்ப்பசேவ் விடம் நேட்டோவை ஜெர்மனிக்கு அப்பால் விரிவு படுத்த மாட்டோம் என்பது தொடங்கி வழங்கி வருகிறது.

உக்ரைன் போரின் முகப்பு களம். நேட்டோ திறமையாக அந்த எல்லை நாட்டை வந்தடைந்துவிட்டது, அந்த நாட்டின் வழியே ஹிட்லிரின் படைகள் சூறாவளித் தாக்குதலை 1941ல் மேற்கொண்டன, அந்த போரில் சோவியத் யூனியனில் 23 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர்,

கடந்த டிசம்பரில் இரஷ்யா தொலைநோக்க பார்வையுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பு திட்டம் ஒன்றை முன்மொழிந்தது, மேற்கத்திய ஊடகங்களில் இது நிராகரிக்கப்பட்டது, கேலி செய்யப்பட்டது, மூடிமறைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை வரிக்கு வரி படித்தது யார்? பிப்ரவரி 24 தேதியன்று உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலின்ஸ்க்கி அமெரிக்கா உக்ரைனுக்க ஆயுதங்களை வழங்கி பாதுகாப்பு வழங்காவிடில் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதாக, மிரட்டல் விடுத்தார். இதுவே அமைதி குலைவதற்கு முன் கடைசி ஆத்திரமூட்டல்.

அதே நாளில் இரஷ்யா படைகள் உக்ரைனுக்குள் சென்றது- மேற்கத்திய ஊடகங்கள் இதனை ஆத்திரமூட்டலற்ற பிறவிக்குணத்தால் அவப்பெயர் என்று வர்ணித்தன, வரலாறு, பொய்கள், அமைதி ஆலோசனைகள், மின்ஸ்க் நகரில் டான்பாஸ் பகுதிக்காக ஏற்படுத்தப்பட்ட புனிதமான ஒப்பந்தகள் இவையனைத்தும் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

ஏப்ரல் 25ஆம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லாயிட் ஆஸ்டின்,” கியவ்” (உக்ரைன் தலைநகர்- மொர்) நகருக்கு பறந்து சென்றார், அங்கு அவர் அமெரிக்காவின் நோக்கம் இரஷ்ய பெடரேஷனை அழிப்பது என்றார், அதற்கு அவர் பயன்படுத்தி வார்த்தை ‘பலவீனப்படுத்துவது’. அமெரிக்கா விரும்பிய போர் அதற்கு கிடைத்துவிட்டது, அந்த யுத்தத்தை நடத்துபவர், அமெரிக்காவால் நிதி அளிக்கப்பட்டவர், ஆயுதந்தரித்த போலி மற்றும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளும் சிப்பாய்.

இவை எதுவுமே மேற்கத்திய வாசகர்களுக்கு விளக்கப்படவில்லை.

இரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது வேண்டுமென்றே மேற்கொண்டது, மன்னிக்க முடியாதது, ஒரு சுயாதிபத்திய நாட்டின் மீது படையெடுப்பது குற்ற செயலாகும். இதற்கு எந்த “ஆனாலும்” கிடையாது- ஒன்றே ஒன்றைத் தவிர,

உக்ரைன் யுத்தம் எப்போது ஆரம்பித்தது அதனை ஆரம்பித்தது யார்? ஐக்கிய நாடுகள் சபையின்படி, 2014 முதல் இந்த ஆண்டு வரை 14,000 மக்கள் கியவ் அரசு நடத்திய சிவில் யுத்தத்தில் டான்பாஸ் பகுதியில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலான தாக்குதல்கள் நவீன நாஜிகளால் மேற்கொள்ளப்பட்டது.

2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐடிவி தொலைகாட்சியின் ஒரு செய்தி தொகுப்பை, ஜேம்ஸ் மாட்டீஸ் என்ற புகழ்பெற்ற நிருபர் வழங்கியதை பாருங்கள், மரியபோல் நகரின் சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும் காயமடைந்தார், அந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனின் அசவ் பட்டாலியன் (நவீன நாஜிக்கள்).

அதே மாதத்தில் டஜன் கணக்கான இரஷ்ய மொழி பேசுபவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர் அல்லது எரியூட்டப்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தனர், ஒடீசா நகரில், அவர்கள் இருந்த தொழிற்சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது, பாசிச அடியாட்கள், நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டவரும், பண்டைய மொழி பேசுபவர்களின் எதிரியான வெறிபிடித்த ஸ்டீபன் பண்டேராவின் அடியாட்கள் அவர்கள். நியூயார்க் டைம்ஸ் பண்டாராவின் இந்த அடியாட்களை தேசியவாதிகள்’ என்றழைத்தது.

“இந்த நெருக்கடிக்கு கால கட்டத்தில் நமது நாட்டின் வரலாற்றுப் பணி ” என்ற அந்திரேய் பைல்ட்ஸ்கி இவர் அசவ் பட்டாலியன் நிறுவனர், “உலகத்தின் வெள்ளை இனங்கள் அவர்களின் இருத்தலுக்கான கடைசி சிலுவைப் போரில் தலைமை ஏற்று செமிடிக் இனங்களால் தலைமை தாங்கப்படும் மனிதர்களை விட கீழான பிறவிகளை எதிர்க்க வேண்டும்”.

பிப்ரவரி மாதத்திலிருந்து தங்களை தாங்களே ‘செய்தி கண்காணிப்பாளர்கள்’ என நியமித்துக் கொண்டவர்கள் தூக்கி நிறுத்த முயலுவது, (இவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகளிடம் நிதியுதவி பெறுபவர்கள்) உக்ரைனில் நவீன நாஜிக்கள் இல்லை என்ற அபத்தத்தை.

“ஏர் பிரஷிங்” என்ற பதம் ஒரு காலத்தில் ஸ்டாலின் தனக்கு வேண்டாதவர்களை வெளியேற்றும் போது பயன்படுத்தப்பட்டது, தற்போது அதுவே முக்கிய செய்தி நிறுவனங்களின் கருவியாகிவிட்டது.

ஒரு பத்தாண்டிற்குள் ‘நல்ல சீனா’ “ஏர் பிரஷ்” செய்யப்பட்டு ‘மோசமான சீனா’ அதற்கு பதிலாக வந்துவிட்டது. அது உலகத்தின் தொழிற்கூடம் என்பதிலிருந்து புதிதாக மொட்டவிழும் சாத்தான் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இதற்கு எதிரான ஏராளமான பிரச்சாரங்கள் அமெரிக்காவிலிருந்துதான் தொடங்குகிறது, அது அதன் பிறகு அமெரிக்காவின் போலிகளாலும், “சிந்தனை குளங்கள்” மூலமாகவும் பரப்பப்படுகிறதுஇழிவான ஆஸ்திரேலியாவின் “ஸ்டேரேடஜிக் பாலிசி இன்ஸ்டிடியுட்” போன்றவைகள், இவை யுத்த தளவாட உற்பத்தி நிறுவனங்களின் குரலாக ஒலிப்பவை, மேலும் பேராசை பிடித்த பத்திரிக்கையாளர் பீட்டர் ஹார்ட்சர், இவர் சண்டெ மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையின் நிருபர் சீனாவிற்கு ஆதரவாக பேசுபவர்களை, எலிகள், ஈக்கள், கொசு மற்றும் குருவி என்றழைப்பார், இந்த “பூச்சிகள்” அழிக்கப்பட வேண்டும் என கூறுவார்.

மேற்கு உலகில் சீனாவைப் பற்றிய செய்திகள் அனைத்துமே பீஜிங் அச்சுறுத்தல் பற்றி மட்டும்தான். “ஏர் பிரஷ்” செய்யப்பட்டிருப்பது சீனாவைச் சுற்றிலும் 400 அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளன என்பதை, அது ஆயுதங்களால் ஆன நெக்லஸ் போன்று ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கி பசுபிக், தென்கிழக்கு ஆசியா, கொரியா, ஜப்பான் வரை நீள்கிறது, ஜப்பானியத் தீவான ஒகினவானா மற்றும் கொரிய தீவான ஜெஜூ ஆகியன மருந்து கெட்டிக்கப்பட்ட பீரங்கி போல சீனாவின் முக்கிய தொழிற்நகரத்தை மிக மிக அருகிலிருந்து குறிவைத்துள்ளன. பெண்டகான் அதிகாரி ஒருவர் இதைப் பற்றி குறிப்பிடும் போது சீனாவிற்கான தூக்கு கயிறு என்று வர்ணித்தார்,

பாலஸ்தீனம் எனக்கு நினைவுக்கு தெரிந்த நாள் முதலாய் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது. பிபிசி யைப் பொறுத்தவரை அது இரண்டு முரண்பட்ட கருத்துகளால் ஏற்பட்ட மோதல் அவ்வுளவே. நவீன காலத்தில் மிக நீண்ட காலத்திற்கு, மிகவும் மிருகத்தனமான, சட்டவிரோதமான இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி தனது செய்திகளில் குறிப்பிடுவதே இல்லை.

தாக்கப்படும் ஏமன் மக்கள் செய்திகளில் இடம் பிடிப்பதே இயலாத காரியம். அவர்கள் ஊடகத்திற்கு மக்களல்ல, சவுதி அமெரிக்காவின் கொத்து குண்டுகள் மூலம் குண்டு மழை பொழிய வைக்கும் போது, குறி வைக்கும் சவுதி இராணுவ அதிகாரிகளின் அருகில் பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் இருந்து குறிவைப்பது குறித்து யோசனைகளை பகிர்ந்து கொள்ளும்போது, ஏமனில் 5 லட்சம் குழந்தைகள் உணவின்றி வாடுகின்றன.

இவ்வாறு சில செய்திகளை தவிர்ப்பது மூலம் மூளைச் சலவை செய்வது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் உலகப் போரில் மனிதர்களை(பிரிட்டன்) கசாப்பு செய்த செய்திகளை அமுக்கிய நிருபர்களுக்கு ”சர்” பட்டம் வழங்கப்பட்டது, அதன் பிறகு அவர்கள் அதனை தங்களது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்தனர். 1917ஆம் ஆண்டு மான்செஸ்டர் கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் சி. பி. ஸ்காட் அன்றைய பிரிட்டன் பிரதமர் லாயிட் ஜார்ஜ் அவர்களிடம் “மக்கள் (உண்மையை) தெரிந்து கொண்டால், நாளையே போரை நிறுத்திவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது, அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை” என்றார்.

மக்களையும் நிகழ்வுகளையும் இதர நாடுகளிலுள்ளவர்கள் இவர்களைப் பார்ப்பது போல் இவர்கள் அவர்களைப் பார்க்க மறுப்பது மேற்குலகின் ஊடக வைரஸ், இது கோவிட் போலவே அவ்வுளவு அழிவு சக்தி கொண்டது. இது உலகை நாம் ஒரு வழியாகக் காட்டும் ஆடி வழியே பார்ப்பது போன்றது, அந்த ஆடியில் “நாம்” என்றால் “ஒழுக்கம், தீமையற்றவர்கள்” அதே சமயம் “அவர்கள் அவ்வாறில்லை “. இது ஆழமாக ஏகாதிபத்திய பார்வை.

சீனாவிலும் இரஷ்யாவிலும் ஒரு வாழும் வரலாறு உண்டு என்பது அரிதாகக்கூட சொல்வதில்லை, அரிதாகக்கூட புரிந்து கொள்ளவும் முயல்வதில்லை. விளாதிமீர் புடின் என்றால் அடல்ப் இட்லர்,

ஜீ ஜிங் என்றால் பின்பு மான் சூ. காலத்தால் அழிக்க முடியாத சாதனைகளான, அருவருக்கத்தக்க ஏழ்மையை ஒழித்த சாதனையை யாருக்கும் தெரியாது. இது விபரீதமானது இழிநிலையானது.

நாம் எப்போது புரிந்து கொள்ள நம்மை அனுமதிக்கப் போகிறோம்? பத்திரிக்கையாளர்களை தொழிற்சாலை போன்று பயிற்றுவிப்பது இதற்கு தீர்வல்ல. டிஜிட்டல் கருவிகள் இதற்கான மந்திரக் கோலும் அல்ல. அது ஒரு வழிதானேத் தவிர அதுவே முடிவல்ல, அது டைப்ரைட்டரில் ஒரு விரலால் அடிப்பது போன்றது,

சமீப காலங்களில் சில மிகச் சிறந்த பத்திரிக்கையாளர்கள் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அதற்கு “டிபன்ஸ்டேரேட்டட்” (Defenstated) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் சில ‘கிறுக்கு பிடித்த’ பத்திரிக்கையாளர், அரசுக்கு எதிரான பத்திரிக்கையாளர், உண்மை விளம்பிகள் என இவர்களுக்குகூட இடமிருந்தது இன்று இடமில்லை.

ஜூலியன் அசாஞ் வழக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. ஜூலியனும் விக்கிலீக்ஸ்ம் கார்டியன் பத்திரிக்கைக்கு பரிசுகளையும் வாசகர்களையும் அளித்த போது “நியூயார்க் டைம்ஸ்” மற்றும் இதர சுயமுக்கிய ஆவண நாளிதழ்களில் அவர் கொண்டாடப்பட்டார்.

நிழல் அரசு(சிஐஏ போன்ற அமைப்புகள்- மொர்) இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவருடைய கனிணி ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட வேண்டும் என்று மிரட்டிய போது, அவரது பெயருக்கு களங்கம் விளைவித்த போது, ஜூலியன் மக்களின் எதிரியாக்கப்பட்டார். (அன்றைய) உதவி ஜனாதிபதி பைடன் அவரை “அதிநவீன தொழிற்நுட்ப பயங்கரவாதி” என்றழைத்தார். ஹில்லாரி கிளிண்டன், “நாம் இந்த மனிதரை டிரோன்கள் மூலம் அழிக்க முடியாதா?” என்று கேட்டார்.

தொடர்ந்து கொண்டிருக்கும் ஜூலியன் அசான்ஜ்க்கு எதிரான துஷ்ப்பிரயோகம் மற்றும் அவதூறுகள் -ஐ. நா. வின் சித்திரவதைக்கு எதிரான சிறப்பு தூதர் இதனை “மாப்பிங்” என்றழைக்கிறார்- இது சுதந்திரமான பத்திரிக்கைகள் தரந்தாழ்ந்து இருப்பதை காட்டுகிறது. நமக்கு அவர்கள் யார் என தெரியும். நான் அவர்களை இவர்களோடு கூட்டணியில் இருப்பவர்கள் என்பேன்.

பத்திரிக்கையாளர்கள் இதற்கு எதிராக எப்போது நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள்? இதற்கெதிரான உண்மையை உரத்து பேசும் பல பத்திரிக்கைகள் தற்போதே வலைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சிறந்த பத்திரிக்கையாளர் ராபர்ட் பேரியால் நிறுவப்பட்ட கன்சார்சியம் நியூஸ், மாக்ஸ் ப்ளுமென்தால் நடத்தும் கிரேசோன், மிண்ட் பிரஸ் நியூஸ், மீடியா லென்ஸ், டிகிளாசிபைடு யூகே, அலபோராடா, எலக்ட்ரானிக் இன்டிபிடா இன்னும் பலர் உள்ளனர் விடுபட்ட பெயருக்குரியவர்கள் என்னை மன்னித்துவிடட்டும்.

என்று எழுத்தாளர்கள் எழுந்து நிற்பார்கள், அவர்கள் 1930 களில் பாசிசம் தலைதூக்கிய போது அதற்கு எதிராக நின்றதைப் போல்? என்று சினிமா எடுப்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள், அவர்கள் 1940 களில் பனிப்போருக்கு எதிராக நின்றதைப் போல்? என்று நையாண்டி செய்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள் அவர்கள் சென்ற தலைமுறையில் நின்றதைப் போல்?

கடந்த 82 வருடங்களாக சரியானது என்ற நினைப்பில் ஊறிப் போனவர்களுக்கு, அதாவது கடைசி உலகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ பதிப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, ரெக்கார்டுகளை நேர்படுத்திட இது சரியான தருணமில்லையா, அவர்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தி, பிரச்சாரத்தை கட்டுடைக்க வேண்டாமா? அதற்கான அவசரம் முன்னெப்போதையும்விட இப்போது அதிகம்.

தமிழாக்கம் க, ஆனந்தன். Translation of article from Counter Punch September 8, 2022.

உக்ரைனிலிருந்து உருகும் குரல்… கவிதை – கவிஞர் இளங்கதிர்

உக்ரைனிலிருந்து உருகும் குரல்… கவிதை – கவிஞர் இளங்கதிர்



C:\Users\Admin\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\275134455_330758799080859_8966752150790129236_n.jpg

தாயும் தந்தையும்
தம் மகனை
அனாதை என்று பிரகடனப்படுத்திய
அவலம் நிகழ்ந்திருக்கிறது…

அம்மா…
இனி என்று உன்னைப்பார்ப்பேன் என
உடைந்து போன குழந்தை..
எங்குபோகிறோம் என்றே
தெரியாமல் …
பிஞ்சுக்கால்கள் உக்ரைன் நாட்டின் எல்லையைக்
கடந்தன..

அம்மாவின் அணைப்பில்
ஆனந்தம் பெறவேண்டிய
அந்தச் செல்லமகன்
கொடிய பயணத்தைக் தொடங்குகிறான்…
அடிபட்டால் மருந்திட்டு இனி
அன்னையில்லை …

துயருற்றால்
தோளில் தூக்கி மகிழ்விக்கும்
தந்தையில்லை …
கண் கலங்கினால்
கண்ணீர் துடைக்கும்
கரங்கள் இல்லை…

வீடுவிட்டுப்போன மகன்களுக்கே
இருக்குமிடம் உறுதியில்லை…
நாடுவிட்டுப்போன இம்மகனுக்கு
வீடெங்கே ?

பிறநாட்டின் மொழி தெரியுமா?
அடுத்த நாட்டில் யாரையும் தெரியுமா?
அடுத்த வேளை உணவு கிடைக்குமாவென
அறியாத குழந்தை …

பிஞ்சு விரல் பிடித்துக்கொண்டு
பள்ளிக்கு அனுப்பவேண்டிய அம்மா
உடன் வரவில்லை…
பட்டப்பகலில்
நட்டநடு வீதியில்
கண்ணீருடன்
தந்தையும் தாயும்
‘போய்விடு மகனே,
நீயாவது பிழைத்துக்கொள்’ என
அனுப்பிவைத்தபோது
அவர்கள் இதயம்
சுக்குநூறாக உடைந்திருக்குமே…

ஏ, தேசங்களே,
ஏன் இல்லை  உங்களுக்கு இதயம்?
உங்களுக்கு மண்தான் பெரிதா
மனிதன் இல்லையா?

-கவிஞர் இளங்கதிர்

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்



நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த

முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
நூல் வெளியீட்டு விழாவில் என். குணசேகரன் பேச்சு
சென்னை, மே 19 –

உக்ரைன் போரை பயன்படுத்தி உலக அரசியலை கட்டுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார்.

இ.பா.சிந்தன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதனன்று (மே 18) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட கட்சி கல்விக்குழு நடத்தி இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு என்.குணசேகரன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

இரண்டாம் உலகப்போருக்கு பின் போராற்ற உலகம் முழக்கம் எழுந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவும், ஜெர்மனை வளரவிடாமல் தடுக்கவும் நேட்டோ அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் நேட்டோ தொடர்கிறது. இந்த நேட்டோ காரணமாகவே ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது.

இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர மனிதநேய மிக்கவர்கள் வலியுறுத்துகின்றனர். உக்ரைன் ஆளும் கூட்டம் போரை நீட்டிக்க விரும்புகிறது. உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்யும் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பா, அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இந்தக் கூட்டம், போரை தங்களது லாப வேட்டைக்கும், மூலதன குவியலுக்கும் வாய்ப்பாக கருதுகிறது.

மேற்கத்திய, ஐரோக்கிய நாடுகள் ஆயுதங்களை ஒருங்கிணைந்த முறையில் தடையின்றி வழங்க வேண்டுமென்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே, போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது.

இந்தப்போரை பயன்படுத்தி ஐரோப்பிய, ஆசிய அரசியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோ பலப்படுத்துகிறது. நேட்டோவிற்குள் புதிய நாடுகளை சேர்க்கிறது. அதன்வாயிலாக ஏகாதிபத்திற்குள் உள்ள முரண்பாடுகளை கட்டுப்படுத்தி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை செய்கிறது.

மேலும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, சீனாவின் பொருளாதார, அரசியல் வல்லமையை கட்டுப்படுத்த இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. இதன்வாயிலாக உலக அரசியலை தனது ஆதிக்கதிற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏமன், சிரியாவை உருக்குலைப்பதிலும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவில் எல்ஐசியை விற்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு உள்ளது.

500 கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உலகம் வேட்டையாடப்படுகிறது; உலகின் இயற்கைவளம் அழிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும். பேச்சுவார்த்தை மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கு வெகுமக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.

அடையாள அணிதிரட்டல், இனவெறி போன்றவை வர்க்க ஒற்றுமையை சிதைப்பதோடு, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே உள்ளன. இதுவே உக்ரைன் போர் படிப்பினையாக உள்ளது. உக்ரைனில் இரண்டுமுறை ஆட்சிக்கவிழ்ப்பு நடந்துள்ளது. அவற்றை ஆரெஞ்ச் புரட்சி, மைதான புரட்சி என்றனர். ஆளும் வர்க்கத்தை முற்றாக வீழ்த்தி, கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமைவதுதான் புரட்சி. புரட்சி என்ற வார்த்தையை மலினப்படுத்த ஆட்சி கவிழ்ப்பை புரட்சி என்றார்கள்.

ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. மின்தேவைக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாலும், அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவின் துதிபாடியான பிரதமர் இந்த நிலையை எடுத்துள்ளார்.

சிஎன்என் போன்ற சேனல்கள் முதலாளித்துவாதிகளால் நடத்தப்படுகின்றன. அவை கார்ப்பரேட்டுகளின் குரல்களையே பிரதிபலிக்கின்றன. அவற்றை பின்பற்றியே பிற ஊடகங்களும் இயங்குகின்றன. ஊடகங்கள ஒருசார்பான செய்திகளையே வெளியிடுகின்றன.

போருக்கு எதிரான முழக்கம் அழுத்தமாக உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். இடதுசாரிகளின் பின்னால் உலகம் அணிதிரண்டால்தான் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்திய முறைமை அழிந்தால்தான் போர், வேலையின்மை, வறுமைக்கு முடிவு கட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினர்.

இந்த நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், க.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, எஸ்எப்ஐ மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, பாரதி புத்தகாலம் மேலாளர் எம்.சிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

2022 மே 19

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில்  என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில் என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்




நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக பிரச்சாரத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்த புத்தகம் தெளிவாக பதில் அளிக்கிறது.

இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி எப்படி மேலாதிக்கம் பெற்றது. 90-ம் ஆண்டுகளுக்குப்பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடன் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் எப்படி அதிகரித்துக் கொண்டது. சோவியத் யூனியனை சிதைத்தபிறகு ரஷ்யாவை அமெரிக்கா எப்படி தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது. இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் எவ்வாறு தோல்வி கண்டது என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா உலகை கபளீகரம் செய்யக்கூடிய முயற்சியின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பலவற்றை அழித்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிக்கி கொண்டதையும், அதனால் உலகின் மேலாதிக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் புத்தகம் ரத்தினச் சுருக்கமாக அறிவிக்கிறது.

சிதைந்துபோன ரஷ்யா மீண்டும் அரசியல் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்திக் கொண்டது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. அதேநேரத்தில் சப்தமின்றி, அமைதியான முறையில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நேட்டோ இராணுவத்தை பயன்படுத்தியது.
குறிப்பாக ஐரோப்பாவில் பலம்பொருந்திய ஜெர்மனியின் முன்னேற்றத்தை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எடுத்த முயற்சிகளை ஜெர்மனி எதிர்கொண்டது. இந்த விஷயங்களை பொருளாதார ரீதியிலான ஒப்பந்தங்களுடன் இணைத்து இப்புத்தகம் அமெரிக்கா வின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவினால் அடிக்கடி விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும், பெட்ரோ டாலர் மூலமாக வணிகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் ரஷ்யா, சீனா, ஜெர்மனியும் பங்குபெற்று பின்னுக்குத் தள்ளியது என்பதையும் அன்னிய செலவாணி பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தையும் இப் புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் பின்னணியுடன் தான் உக்ரைன் ரஷ்ய போரை இந்தப் புத்தகம் விளக்குகிறது.யுத்தம் நேரடியாகவும், தகவல்தொழில்நுட்ப வழியாகவும், பொருளாதார அடிப்டையிலும் என மூன்று தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்ந்து உலகம் முழுவதும் ஒரு தரப்பான செய்தியையே வெளியிடுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பா கண்டத்திலேயே ரஷ்யாவிற்கு அடுத்து அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுஉக்ரைன். இதன் பூகோள எல்லைகள் எப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் யாரால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

சோவியத் நாட்டின் சிதைவுக்கு பிறகு ரஷ்யாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய உக்ரைனை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு விளைவுதான் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அடிப்படையான காரணமாகும்.

உக்ரைனில் வாழக்கூடிய மக்களில் ரஷ்ய இனமக்கள் 30% பேர் வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமையில் கை வைப்பதற்கான வழக்கமான சதி வேலைகளை, ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிராக என்பதைவிட தன்னுடைய திட்டத்திற்கு அடிபணியாத ஆட்சியாளருக்கு எதிராக, ஜனநாயகம் இல்லை என்ற போர்வையில் பல கோடி டாலர்களை ஒதுக்கி கலவரத்தை தூண்டிவிட்டு குழப்பத்தை உருவாக்கினார்கள்.

தனக்குப் பிடிக்காத ஆட்சியை எதிர்ப்பதற்காக நவபாசிச சக்திகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும், அண்டை நாட்டில் புகழ் இடங்களையும், ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேலைகளை அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு கும்பல் அற்புதமாக செயல்படுத்தி கொண்டிருந்தது இதனால் உக்ரைனில் பெரும் குழப்பமும் ரஷ்ய இன மக்களை அழித்தொழிக்கும் நிகழ்வுகளும் நடந்தது.

அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் பதவிக்கு வந்தவுடன் நவ பாசிச பயங்கரவாத அமைப்புகளை துணை இராணுவமாக அங்கீகரித்து மக்களை அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுகளை இந்தியாவில் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுளுடன் இணைத்து புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை, சுத்தியல் அரிவாள் சின்னம் பயன்படுத்தக்கூடாது, லெனின் சிறை தகர்ப்பு போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாக அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் செயல்பாடு இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பாவின் எரிவாயு தேவையை ரஷ்யாவின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதை தடுப்பதன் மூலம், அமெரிக்கா ஒரே நேரத்தில் ரஷ்யாவையும், ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உக்ரைன் பிரச்சனைகளை துல்லியமாக விளக்குவதற்கு சிரியாவை சிதைத்த தன்மைகள், ஈராக் மற்றும் ஏமன் நாடுகளை எப்படி ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்துக்காக பகடைக்காயாக பயன்படுத்தி, ஜனநாயகத்தையும் அழித்தொழித்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை ஒரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குவதோடு விளக்கப்பட்டுள்ளது.

எனவே உக்ரைன் யுத்தம், உக்ரைன்-ரஷ்யாவிற்குமான யுத்தம் மட்டுமல்ல. அது பல வழிகளில் பல கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு யுத்தம் என்பதை இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

புத்தகத்தின் இறுதிப் பகுதியில் யுத்தம் தொடர்பான பதிவுகள் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி அறைகூவல் விடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் அவசியமாக படிக்கவேண்டியது மட்டுமல்ல நிலைமையை புரிந்து கொள்வதற்கு அவசரமாகவும் படிக்க வேண்டும்.

அ. பாக்கியம்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இன்றைய நூதன இராணவக் கருவிகள்? நாளைய நிதர்சனம்? நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் செய்திகள், கல்வி 4.0க்கான நம்முடைய இந்த ஆய்வின் பயனாளிகளை அடையாளம் காண உதவுகின்றது மெலோட்டமாக . நம்முடைய ஆய்வின் பயனாளிகளாக , கணினி, மனிதர்கள் என்று இருபிரிவு…
Ukraine War: Conflict between capitalist countries Article in tamil translated by S. Veeramani உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் - தமிழில் : ச.வீரமணி

உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் – தமிழில் : ச.வீரமணி

“கொடூரமான எதேச்சதிகாரி புடின்” மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மேற்கொண்ட முயற்சிகள் பாசாங்குத் தனத்தையும் இரட்டை வேடத்தையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ஜான்சன் ஆகியோர் ரஷ்யாவுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப் போர் முடிவடைந்தபின், முதன்முறையாக அமைதி நிலைமை ஆட்டம் கண்டிருக்கிறது. 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் யுத்தம் என்பது நேட்டோ படையினர் செர்பியா மற்றும் யூகோஸ்லேவியாவில் 1999இல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தம்தான் என்கிற உண்மையை அவர்கள் முழுமையாக மூடி மறைக்கிறார்கள். யூகோஸ்லேவியாவைத் துண்டாடுவதற்காக பெல்கிரேடிலும் மற்றும் பல இடங்களிலும் 78 நாட்கள் வான்வழித் தாக்குதல்களை நேட்டோ படையினர் மேற்கொண்டிருந்தார்கள்.

நேட்டோ அரங்கேற்றிய பயங்கரங்கள்..
உலக அளவிலான தனது மேலாதிக்கத்திற்கான ஒரு கருவியாக, நேட்டோவை அமெரிக்கா பயன்படுத்தி வருவது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. அமெ ரிக்காவும், பிரிட்டன் உட்பட அதன் கூட்டணி நாடுகளும், இராக்கில் ஆட்சி செய்த சதாம் உசேன் மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை வைத்திருக்கிறார் எனப் பொய்யாகக் குற்றம்சாட்டி, இராக்கிற்குள் புகுந்து, அதனை அழித்து, பல லட்சக்கணக்கான இராக்கியர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னர், நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானத்திற்குள் புகுந்து, சுமார் 20 ஆண்டு காலம் அதனை ஆக்கிரமித்திருந்தனர். நேட்டோ கூட்டாளிகள் இறையாண்மை மிக்க நாடுகளாக இருந்த லிபியா மற்றும் சிரியாவையும் தாக்கினர். அவற்றின் நாசகர விளைவுகளிலிருந்து அந்த நாடுகள் இன்னமும் மீள முடியவில்லை. எனவே, உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்வதாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூப்பாடு போடுவதை உலகில் உள்ள நாடுகளில் பல, குறிப்பாக ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் அநேக மாக ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து பல்வேறுபட்ட குழப்பமான செய்திகள் வெளிந்திருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச அமைப்பு முறை ஒழிக்கப்பட்ட பின்னர் அங்கே ஏற்பட்ட நிலைமைகளைப் பார்க்காமல் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கே இரண்டு விதமான முரண்பாடுகள் முட்டி மோதின. ஒரு பக்கத்தில் அங்கே இருந்துவந்த பல்வேறு தேசிய இனங்களின் பிற்போக்கு சக்திகளது கூக்குரல்களும், மறுபக்கத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணி நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவையே விழுங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் அங்கே முட்டி மோதின; மோதிக்கொண்டிருக்கின்றன.

ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நோக்கி…
1991இல் பனிப்போர் முடிந்த ஒருசில மாதங்களிலேயே, அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உலகின் ஒரே துருவமாக நிறுவிட வேண்டும் என்று தீர்மானித்தன. அமெரிக்க ராணுவக் கொள்கை வழிகாட்டு தல்கள், “நம் கொள்கையானது எதிர்காலத்தில் சாத்தியமான எந்தவொரு உலகளாவியப் போட்டியும் தோன்று வதைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று கூறின. உலகை ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைக ளின் புவி அரசியல் கோட்பாடு இந்தத் திசைவழியில் தான் அமைந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இதற்கான முதல் தேவை என்பது ரஷ்யாவைப் பலவீனப் படுத்துவதே. அப்போதுதான் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்திட முடியும். இதற்கு நேட்டோவை ஐரோப்பாவின் கிழக்கே விரிவாக்கம் செய்திட வேண்டும். பின்னர், தங்கள் கவனத்தை சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் திருப்பிட வேண்டும். 1990இல், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி கோர்ப்பசேவிடம், இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றாக இணைவதன் காரணமாக, நேட்டோ விரிவாக்கம் மேலும் கிழக்கே நீட்டிக்கப்படாது என்ற உறுதி மொழியை அளித்தார். ஆனால் இந்த உறுதிமொழி வெறும் உதட்டளவில் மட்டுமேயானதாகும். அதன் பின்னர் நேட்டோ படையினர் ஐந்து முறை படை யெடுத்து வந்து, கிழக்கு ஐரோப்பா முழுவதுமே, அதாவது முன்பு சோவியத் ஒன்றியத்தின் அங்கங்களாக இருந்த பால்டிக் நாடுகள் அனைத்தையுமே தாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டன.

இதயத்திற்கு நேராக கூர்வாள்..
2008இல் நேட்டோ, ஜார்ஜியாவையும், உக்ரைனையும் தன்னுடைய உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்ள முன்வந்தது. இது நடந்துவிட்டால், ரஷ்யா சுற்றி வளைக்கப்பட்டது போலத்தான். உக்ரைன், நேட்டோவின் ஓர் அங்கமாகிறது என்றால் அதன் பொருள் ரஷ்யாவின் இதயத்திற்கு எதிரே கூர்வாளை எப்போதும் நீட்டிக்கொண்டிருப்பது என்பதாகும். 2014இல் உக்ரைனில் ஜனாதிபதி விக்டர் யானுகோ விச் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக உக்ரைனில் ஒரு கலகம் நடத்தப்பட்டது. இவர் ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு எதிராகவே நவீன நாஜிக்களால் ‘மைதான் புரட்சி’ எனும் அந்தக் கலவரச்சதி (Maidan revolution coup) மேற்கொள்ளப்பட்டது. 2015இலிருந்து அமெரிக்கா, உக்ரைனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளித்து வந்தது. இதற்காக அது பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அளித்தது. ரஷ்யாவுடன் உக்ரைன் மோதல் போக்கைக் கடைப்பிடித்திட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதையெல்லாம் செய்தது. இவ்வாறு அமெரிக்காவினால் ஊட்டி வளர்க்கப்பட்ட வலதுசாரி ஆட்சியாளர்கள், உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தில் மிகப் பெரிய அளவில் வாழ்ந்துவந்த ரஷ்ய இனமக்களுக்கு விரோதமான முறையில் செயல்பட்டு வந்தனர். கிழக்கு உக்ரைனில் தொடங்கிய உள்நாட்டு யுத்தத்திற்கு, மின்ஸ்க் ஒப்பந்தத்திற்குப் பின்னர் தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது.

உக்ரைன் புதிய ஆட்சியாளர்கள் செய்தது என்ன?
உக்ரைனின் புதிய ஆட்சியாளர்கள் நேட்டோவில் சேர்வதை அரசமைப்புச் சட்டத்தில் பதிவு செய்தனர். வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், இன ரீதியாகவும் ரஷ்யாவுடன் உறவுகளை வைத்திருந்த உக்ரைன், முற்றிலும் ரஷ்யாவுக்கு எதிராக நிலை எடுத்தது, ரஷ்யாவை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. இது, கிரீமியாவில் உடனடியாக வெளிப்பட்டது. உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த கிரீமியாவில் ரஷ்யர்கள்தான் அதிகமான அளவில் வசித்து வந்தார்கள். இங்கே 2014இல் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அவர்கள் ரஷ்யாவுடன் சேர்வது எனத் தீர்மானித்தார்கள். ரஷ்யாவின் கருங்கடல் கப்பற் படை (Black Sea naval fleet) கிரீமியாவின் செவஸ்டபோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறைமுகம் ரஷ்யாவுக்காக இருந்துவருகிற ஒரேயொரு மிதமான வெப்பத் துறைமுகமாகும். ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகள் நேட்டோவில் சேர்ந்தபின்பு, அமெரிக்காவும், நேட்டோவும் தங்கள் துருப்புகளையும், ஏவுகணைகளையும் அந்த நாடுக ளில் நிலைநிறுத்தியதன் காரணமாக, ரஷ்யாவில் பதற்ற நிலைமைகள் அதிகரித்தன. ரஷ்யா, உக்ரைனின் எல்லைகளில் தங்கள் துருப்புகளுடன் அணிவகுத்தது. உக்ரைன், நேட்டோவில் இணையக் கூடாது என்றும், ஆபத்தை விளைவித்திடும் ஏவுகணைகளை நிலை நிறுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திட முன்வர வேண்டும் என்றும், ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு கட்டமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யா கோரியது. அமெரிக்காவும், நேட்டோவும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. உக்ரைன் இறையாண்மையுடன் கூடிய நாடு என்றும், நேட்டோவில் இணைவதா வேண்டாமா என முடிவு செய்வதற்கான உரிமை அந்த நாட்டுக்கு உண்டு என்றும் கூறின. இதனைத் தொடர்ந்து உக்ரைன்மீது ஏற்பட்டுள்ள ராணுவத் தாக்குதல் ஐரோப்பாவின் எதிர்கால அமைதி மீதும், பொருளாதார விவகாரங்கள் மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன.

விரிவான மோதலின் பிரதிபலிப்பு..
உக்ரைன் யுத்தம், அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே, ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளின் மத்தியில் ஏற்பட்டுள்ள விரிவான மோதலைப் பிரதிபலிக்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்தபின்பு ரஷ்யா ஒரு தனியதிகாரத் தலைவரின் கீழ் ஒரு முதலாளித்துவ நாடாக மாறியிருக்கிறது. நாட்டின் முக்கியமான பாதுகாப்பு நலன்களுக்காக நடவடிக்கைகள் எடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய எல்லையைத் தாண்டிச் சென்று, ஓர் இறையாண்மை மிக்க நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் தொடுப்பது அனுமதிக்க முடியாததாகும். இதனை எவ்விதமான சந்தேகத்திற்கிடமின்றி எதிர்த்திட வேண்டும். இந்த யுத்தமானது ஏற்கனவே மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புடினின் ‘தேசிய வாதம்’ ‘மகாரஷ்யா’ எனும் பேரினவாதம் ஆகும். இதனை அவர் போல்ஷ்விக்குகளைக் கண்டித்திருப்பதிலிருந்தும், ‘லெனினின் உக்ரைனை’ உருவாக்கப் போவதாகக் கூறியிருப்பதிலிருந்தும் பார்க்க முடியும். எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியது.

பைடனின் திட்டம்..
பைடன் நிர்வாகத்தைப் பொறுத்தவரையிலும், அதற்கு ஐரோப்பிய யூனியன் சுயாட்சி மிக்க ஒன்றாக உருவாவதற்கான வாய்ப்பு வாசல்களை அடைப்பதற்கும், நேட்டோ கூட்டணியை அங்கே மிக நெருக்கமாகக் கொண்டுசெல்வதற்கும், ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஐரோப்பாவிற்குள்ளேயே கூட ஜெர்மனி, நேட்டோவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் சுழித்துக்கொண்டுதான் ஆதரவு அளித்து வந்தது. இதுவரையிலும் ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிர்த்தே வந்தது. ஆனாலும் இப்போது, ஜெர்மனி அதிபர் உல்ப் சோல்ஸ் 100 பில்லியன் யூரோ (112 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 2022 பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கி இருக்கிறார். மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சத வீதத்தை, ராணுவத்திற்கு ஒதுக்குவதாகவும் உறுதி மொழி அளித்திருக்கிறார். இவ்வாறு ஜெர்மனி ராணு வத்திற்கு நிதி ஒதுக்கிட வேண்டும் என்று அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இதுவரையிலும் கோரி வந்தன. அதற்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்காமல் இருந்துவந்த ஜெர்மனி இப்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு ஏராளமான துருப்புகளையும், ஆயுதங்களையும் அனுப்பி இருக்கின்றன. உக்ரைனுக்கும் நேட்டோ நாடுகள் உயிர்க்கொல்லி ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது ஜெர்மனியும் முதன் முறையாக ஆயுதங்களை அனுப்பி இருக்கிறது.

போரின் நிலை என்ன?
உக்ரைனின் போர் எப்படிப் போகும் என்பதைப் பரிசீலிக்கும்போது, இந்தப் பின்னணி அனைத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ரஷ்ய ராணுவம் தாக்குதல் தொடுத்து இரண்டு வாரங்களாகிவிட்டன. அவை மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. கேர்சன் (Kherfson) நகரத்தைக் கைப்பற்றி இருக்கிறது. தலைநகர் கீவ் (Kiev), கார்கிவ் (Kharkiv) மற்றும் மரியபோல் (Mariupol) ஆகியவற்றைச் சுற்றி வளைத்திருக்கிறது. டான்பாஸ் (Don bas) பிரதேச உள்ளூர்ப் படையுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் உக்ரைன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தபோதிலும், ரஷ்யத் துருப்புக்கள் தரை வழியாகவும், நீர் வழியாகவும், வான் வழியாகவும் ஆதிக்க நிலையில் இருந்துவருகின்றன. பெலாரஸில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. மார்ச் 7 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போர் நிறுத்தம் தொடர்பாக சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. முதலாவதாக, மனிதாபிமான அடிப்படையில் நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வழி திறந்துவிட வேண்டும். சுமி நகரில் தங்கியுள்ள சுமார் 700 இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்.

உக்ரைன் தரப்பில், தாங்கள் நேட்டோவுடன் இணையமாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் நடைபெற்ற நேர்காணலின் போதும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு குடியரசுகள் குறித்தும், கிரீமியா, ரஷ்யாவின் ஒரு பகுதி என அறிவித் திருப்பது குறித்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. நாம் இதனை (மார்ச் 9அன்று), எழுதிக்கொண்டி ருக்கும் சமயத்தில் மார்ச் 10 அன்று ரஷ்ய அயல்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் உக்ரைன் அயல்துறை அமைச்சர் குலேபா ஆகிய இருவரும் துருக்கியின் அண்டால்யாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். அயல்துறை அமைச்சர்கள் இடையே பேச்சு வார்த்தை என்பது ஒரு முன்னேற்றமான நடவடிக்கையே. யுத்தத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். மின்ஸ்க் ஒப்பந்தங்கள் அடிப்படையில் உக்ரைனுக்கு நடுநிலை அந்தஸ்து அளிப்பதும், டான்பாஸ் குடியரசுகளுக்கு தீர்வு காண்பதும் மிகவும் நடைமுறைத் தீர்வாக இருக்கக்கூடும்.

(மார்ச் 9, 2022),
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Adhith Sakthivelin Kavithaigal ஆதித் சக்திவேலின் கவிதைகள்

ஆதித் சக்திவேலின் கவிதைகள்

டிப்பெட்ஸ் மட்டுமா சின்னப் பையன் ?
********************************************
(ஜப்பானின் ஹிரோஷிமாவில் முதல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்த அதை அமெரிக்கா சார்பாக விமானத்தில் எடுத்துச் சென்ற விமானி பால் டிப்பெட்ஸ் பற்றிய இந்தக் கவிதை, இன்று ரஷ்யா – உக்ரேன் இடையே நடைபெற்று வரும் போர்ச் சூழலில்,உலகமே அணு ஆயுத பயன்பாடு குறித்து அச்சப்படும் இவ்வேளையில் பொறுத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் .)

ஹிரோஷிமா தழும்பினைத்
தடவிப் பார்க்கிறேன்
முக்கால் நூற்றாண்டு கழிந்த பின்னும்
பிசுபிசுப்பு இன்னும்
ஒட்டுகிறது விரல்களில்
சுக்காய்க் காய்ந்திட
எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?

பால் டிப்பெட்ஸ்
உலோக உருண்டையில்
உறங்கிக் கொண்டிருந்த
யுரேனியம் அணுக்களில்
சூரியனின் சிறு துண்டினை
செந்தணல் மூட்டையாய் ஒளித்து
“சின்னப் பையன்” எனச்
செல்லப் பெயரிட்டு
மனித நேயத்தின் மீது வீச
எடுத்துச் சென்ற சின்னப் பையன்

பால் டிப்பெட்ஸ்
ஒரு சில நொடிகளில்
பல்லாயிரம் உயிர்களுக்கு
பால் ஊற்றியவன்
நள்ளிரவில் நடுவானில்
அவனது “சின்னப் பையனை”
அவிழ்த்துவிட்டு

கருவில் சுமந்து
பெற்றெடுத்து பெயர் சூட்டிய
தாயின் பெயரை
பேரழிவைச் சுமந்து சென்ற
விமானத்திற்குச் சூட்டி
தாய்மையைக் கொச்சைப் படுத்தியவன்

யாரைக் கொல்வது யாரை விடுவது
எனக் குழம்பி நின்ற சாவை
காற்றென ஒரு கணத்தில் ஏவியவன்

எரிந்து கொண்டிருந்த வீதிகளில்
சாம்பலாய்ச் சரிந்த சடலங்கள்
தோலுடன் தொங்கிய சதைத் துண்டங்கள்
உருகி ஓடிய இரும்புத் தூண்கள்
கருகிச் சாம்பலான மரங்கள்
பருகும் நீரிலும்
மரண தாகத்தில் கதிர் வீச்சுகள்
திரும்பிய திசை எல்லாம் மரண ஓலம்
மனித சதையின் ரத்தத்தின் நெடி – இப்படி அவலங்களின்
காட்சிகளை ஓரிரவில் அரங்கேற்றி அகம் மகிழ்ந்தவன்

இதுவரை
கேட்டிரா ஒலி
கண்டிரா ஒளி
பார்த்திரா அமைதி
இவற்றை வரலாற்றின் பக்கங்களில்
அந்த ஒரே இரவில் எழுதி முடித்தவன்

நூறு ஆண்டுகளுக்கு
ஆறு ஆண்டுகள் குறைவாய் வாழ்ந்து
தனக்குக் கல்லறை வேண்டாம்
எனச் சொல்லிச் செத்தவன்

கட்டியிருந்தால் – மக்கள்
மரியாதை செலுத்தவா கூடியிருப்பர்
அவனது கல்லறையில் ?
அங்கே தினம் தினம்
அவனுக்கு மட்டுமா அம்மரியாதை நடக்கும்?
சின்னப்பையனின் முதுகுக்குப்
பின்னால் ஒளிந்து கொண்ட
அத்தனை பெரிய மனிதருக்கும் தான்

அப்பேரழிவு குறித்து
ஒரு நாளும் வருந்தியதில்லையாம்
வாழ்ந்த காலத்தில்
நாட்டுப் பற்றைத்
தன் நாசச் செயலுக்கு
முட்டுக் கொடுத்துப்
பேட்டி அளித்திருக்கிறான் அவன்
ஒவ்வொரு முறையும்

தேடுங்கள்
இன்னும் நன்கு தேடுங்கள்
ஹிரோஷிமா வீதிகளில்
அவனது மனசாட்சி
அங்கு தான் எங்காவது கிடக்கும் பாருங்கள்
அதைத் தூக்கி எறிந்த கையோடு தானே
சின்னப்பையனை வீசி இருப்பான் அவன்

தம் காதுகளிலும் கழுத்துகளிலும்
“சின்னப்பையன்”களை மாட்டிக்கொண்டு
வாய் கிழிய அமைதி அறிவுரை தரும்
உலக சட்டாம்பிள்ளைகளின் மனசாட்சி கூட
உங்கள் கைகளில் அகப்படலாம் அங்கே
நீங்கள் தேடுகையில்

முகமற்ற முப்பது குழந்தைகளில்
தன் குழந்தையை
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறாள்
தாய் ஒருத்தி என்பது
அவர்களுக்குத் தெரியுமா ?

போரின் வடிவங்களை
அழிவின் எல்லைகளை
மாற்றி எழுதும் அறிவியலில்
மனித நேயம் மரணிப்பின்
அவ்வறிவியலையே புறந்தள்ளுவோம்

நாட்டுப் பற்றின் இலக்கணங்களாய்
அவ்வழிவுகள் வரையறுக்கப்படும் எனில்
அணு ஆயுதங்களைப் போல்
அப்பற்றையும் கேள்விக்குள்ளாக்குவோம்

மீண்டும் மீண்டும் திரும்பும் வரலாற்றில்
இவ்வரலாறு மீண்டும் திரும்பாதிருக்க
கிழித்தெறிவோம்
வரலாற்றின் அப்பக்கங்களை

“சின்னப் பையனை”த்
தூக்கிச் சென்ற டிப்பெட்ஸோடு
அவனை ஆக்கித் தந்த
சின்னப் பையன்களையும்
வரலாற்றுக் கரை என்போம்

இதயங்களைத் திறந்து வைப்போம்
மனித நேயம்
அதனுள் நுழைந்தோடிட
நிறைந்து வழிந்தோடிட

அகமும் புறமும் சங்கமித்த அபூர்வ தருணம்
****************************************************
(ரஷ்ய – உக்ரைன் போர் நடைபெற்று வரும் இன்றைய சூழலில், இக்கவிதை உக்ரைனை ஆதரித்தோ ரஷ்யாவை எதிர்த்தோ எழுதப்பட்டதல்ல. உக்ரைன் பெண் ஒருத்தி வீரத்துடன் தன் கணவனுக்கு மாற்றாய்ப் போருக்குச் செல்வதைப் பாராட்டி உலக மகளிர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது “அகமும் புறமும் சங்கமித்த அபூர்வ தருணம்” என்னும் இக்கவிதை. உலக மகளிர் தினத்தன்று இக்கவிதையைப் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.)

போர்
குடி மக்கள் மீது
திணிக்கப்படும் பேரழிவு
திட்டமிட்டே பல நேரங்களில்

போர் எதுவாயினும்
அதில் முதல் பலி
மனித நேயமும் உரிமையும் தான்

மன்னர் கால மண்ணாசையின் எச்சம்
மக்களாட்சித் தலைவர்கள் மனதில்
இன்னும் மறையாது இருப்பதன் வெளிப்பாடு போர்

போர் மேகங்கள்
ஒரு நாட்டில் சூழ
போர் தொடங்கப்படுகிறது
இன்னொரு நாட்டில்

போரிடும் நாடுகளுடன்
உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒரு சமன்பாடு
அது சரிந்திடா வண்ணம் – அவற்றின்
வியூகம் செறிந்த செயல்பாடுகள்

போரில்
சிதறுண்டு போன
கட்டடங்கள் நிமிர்ந்து நிற்கும்
கால ஓட்டத்தில் என்றாவது ஒரு நாள்
கல்லறையில் அடக்கமாவோரின்
தலைமுறைகளின் வாழ்வு?

வரிசையாய் நின்று
பணியாட்கள் பரிமாறிட உண்டோரும்
உணவுக்கும் நீருக்கும்
வரிசையில் நிற்பர்
போரின் அழிவுக்கு அஞ்சி
அண்டை நாட்டு எல்லைகளில்
அகதி எனும் தகுதியுடன்

அணுவின் உட்கருவில்
அருகருகே அரவமின்றி அமர்ந்திருக்கும்
ஆக்கமும் அழிவும் போல்
கை கோர்த்துப் பயணிக்கின்றன
அமைதியும் போரும்
இணை பாதைகளாய்
இடைவெளி அதிகமின்றி- வசதிற்கேற்ப
நாடுகள் தாவிக் கொள்கின்றன
ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு

போரின் நடுவே
அமைதிப் பேச்சுவார்த்தை
ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்படுகின்றன
அது நடைபெறும் மேசைக்கு அடியிலேயே

அழிவுகளின் அளவால் நிர்ணயிக்கப்படும்
போரின் வெற்றியை
வெற்றி என யார் ஏற்பர்?

மலையுடன் மோதவும்
மன வலிமை வழங்குவது
மலை போல் உயர்ந்து நிற்கும்
தாய் மண்ணின் பற்று
தாய் மொழியின் தாகம்
இவ்விரண்டும்

தெற்கு உக்ரைனின் மைகோலைவ் நகரம்
சுற்றிப் பரந்த வயல் வெளிகள்
வயல்களில் ஆங்காங்கே இருந்த வீடுகள்
சிறு கிராமமாய் மாறியிருக்க
ஆண்டெல்லாம் வளம் சேர்க்கும்
டினீப்பர் நதி தூரத்தில்

கணவனின்
கைகளின் இறுக்கத்தில்
கால்களின் பின்னலில்
நெற்றியில் இட்ட
முத்தத்தின் அழுத்தத்தில்
பொங்கிய அகம் ஒரு புறம்
ஒரு தோளில் தொங்கிய
இயந்திரத் துப்பாக்கியில்
இன்னொரு தோளில் மாட்டிய பையில் நிரப்பிய கையெறி குண்டுகளில்
இடுப்பில் கட்டிய தோட்டாக்களில்
கண்களில் தெறித்த கோபத்தில்
தீப்பொறி பறந்த நடையில்
உடல் மொழியின் வன்மையில்
உள்ளத்தில் திரண்ட உறுதியில்
கொப்பளித்த புறம் இன்னொரு புறம்
அகமும் புறமும் ஆழமாய்ச் சங்கமித்த
அபூர்வ தருணம்
அவள் போருக்குப் புறப்பட்ட நேரம்

திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள்
அவர்களது வயல் வெளியை
நடுவே இருந்த வீட்டை – அதனுள்ளிருந்த
தன் மாற்றுத் திறனாளி கணவனை

எட்டு ஏக்கர் விளைநிலம்
பாதியில்
சூரியக் கதிர்களின் அணைவில்
மயங்கிக் களித்த சூரியகாந்தி
தம் முகத்தை மேற்கில் திருப்பிக்கொண்டிருந்தன
கொஞ்சம் கொஞ்சமாய்

மீதியில்
விளைச்சலின் பாரம் தாங்கா கோதுமை
அறுவடைக்குக் காத்திருந்தது
வரப்புத் தலையணையில்
தலை சாய்த்துப் படுத்தபடி

வெடித்துச் சிதறிய
கோதுமை மணிகளை
கொறித்துக் கொண்டிருந்த
அமைதியின் சின்னங்கள்
கும்பலாய் எழுந்து
எதிர் திசையில் பறந்தன
ஏவுகணைகளின் வெடிச் சத்தம் கேட்டு

தூரத்தில்
நகரின் நடுவே
அப்படியே சரிந்த
அடுக்கு மாடி கட்டடம் பற்றி எரிகிறது
ஏவுகணை ஒன்று அதனுள் நுழைந்து வெடித்து வெளியேறியதில்
கண்ணாடி ஜன்னல்கள்
தெறித்துச் சிதறும் சத்தம்
மரங்கள் கருகி எரியும் ஓசை
நெகிழிகள் உருகி ஓடும் வாசம்
மனித உடல்கள் ரத்தத்துடன் தீயும் வாடை
காற்றில் கலந்ததில் மூச்சுத் திணற
டினீப்பர் நதியின் மேலிருந்த
பாலத்தை நோக்கி நடக்கிறாள்
அங்கு நின்றிருந்த வீரர்களுடன் இணைந்துகொள்ள

கவச பீரங்கிகள் அணி அணியாய்
ஊர்ந்து செல்லும் சத்தத்தில்
எங்கே போகின்றன என
கணிக்க முடியா வண்ணம்
காற்றைக் கிழித்துப் பறந்த
ஏவுகணைகளின் பாய்ச்சலில்
போர் விமானங்களின்
வித்தியாசமான உறுமலில்
இருப்பும் இன்மையும்
கை கோர்த்துக் கொள்ளும்
நுண் புள்ளிகளின் சங்கமமாகிறது
ஒவ்வொரு கணமும்
அவள் கண் முன்னே

இலையுதிர் காலத்தில்
உதிரும் இலைகளைப் போலல்ல
மனித மரணங்கள்
தொடரும் வசந்தத்தில்
மீண்டும் முளை விட
இது அவளுக்கு நன்கு தெரியும்

வாழ்ந்து பெறுவதின்
பன் மடங்கு புகழ் சேர்க்கும்
சில மரணங்கள்
போர்க்களத்தின் வீர மரணம்
முதலாவதாய் அவற்றில்
இதுவும் அவளுக்கு நன்கு தெரியும்

இனி திரும்பிப் பார்ப்பதில்லை எனும் முடிவுடன் முன்னேறுகிறாள்
துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்த படி
வழுக்கும் நிலத்தில் கால் ஊன்றுபவனின்
நம்பிக்கை நிறைந்த கவனத்துடன்

கணவனின் கனவுகளின் திரட்சியாய்
ஆறு மாதங்களாய் – தன்
வயிற்றில் வளரும் குழந்தை
ஒவ்வொரு வெடிச் சத்தத்திற்கும் அதிர்வுடன் துள்ளி அசையும் சத்தம்
போரின் எல்லாச் சத்தங்களையும் மீறி எதிரொலித்த வண்ணம் இருந்தது
அவளது மனதில்

ரஷ்யாவின் வழி பாய்ந்து
உக்ரைனை பொன் விளையும் பூமியாக்கும்
டினீப்பர் நதி
தன்னுள் ஒன்றெனக் கலந்த
ரஷ்ய – உக்ரைன் ரத்தத்தின்
சிவப்பு நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது
கருங்கடலில் கலக்க
தெற்கு நோக்கி
சலனம் ஏதுமின்றி
அந்தப் பாலத்துக்குக் கீழே
உலகுக்கு உரைக்கும் உண்மை

வீரம்
ஒரு பாலினம் சார்ந்ததன்று
ஒரு மண்ணுக்குச் சொந்தமுமன்று
முறத்தால் புலியைப்
புறமுதுகு இடச் செய்த – அன்றைய
பெயர் தெரியா புறநானூற்றுத் தமிழச்சி
ஆங்கிலேய அந்நியனை விரட்ட
ஆயுதம் ஏந்திய வீர மங்கை
வேலு நாச்சியார்
உருக்கு உறுதியுடன் துப்பாக்கி தூக்கிய இன்றைய உக்ரைனிய வீரத்தாய்
இவர்கள் எல்லாம் உலகுக்கு உரக்க
உரைக்கும் உண்மை அதுதானே?