என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. கவிதை – து.பா.பரமேஸ்வரி

என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. கவிதை – து.பா.பரமேஸ்வரி




என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்..

ஒருமுகமானோம் ஜனநாயக ஐக்கியத்தில்
முகவரிப் பெற்றோம் ஒற்று சார்நிலையற்ற குடியிருப்பில்

பேரரசுகளின் இறங்கல்
பிரிவினை சாம்ராஜ்யத்தின் சறுக்கல்
ஒழியப் பெற்றோம்…
அன்னியரின் ஆதிக்கத்தில்
ஓய்ந்துப் போனோம்..
சர்வாதிகார அகோரப் பிடியில்..

ஏர் பிடித்த மக்களாட்சி மாண்டு
கையூட்டாய் ஜனித்தது..
கார்பரேட் கலாச்சார ஒன்றிய ஆட்சி..

தலை தூக்கிய எட்டப்பர் எடுபிடி வாதம்
நிர்மூலமாகிய ஜனநாயக தனியுரிமம்..
நிலைகுலைந்தோம்..
நின்ற மேனிக்கே குறுகினோம்..

பின்னலிட்ட பிரிவினை தான் எத்தனை..
மதங் கொண்டு பின்னிய மதத்தீவினை தான் அத்துனை..

சாதிசிடுக்குகளில் சிதைந்துப் போனோம்..
சாமான்ய சமத்துவம் கூட அற்று சரிந்தே கிடக்கோம்..

வேற்றுமையிலும் ஒற்றுமை உண்டோம்..
இன்றோ‌..
ஓர்மையிலும் ஒன்றியத்தில் ஒடுக்கப்பட்டோம்…

எங்கு நோக்கினும் சகோதரம் தழைத்தோங்கியது
இன்றோ..
சகோதரனிடமும் சாணாக்கியம் இழைந்தோடுகிறது…

கொஞ்சிக் குலவிய சாமாண்யர் கூட
விஞ்சி மிஞ்சி மிதந்து
அரசியல் சக்கரத்தின் செக்குருட்டுகளாய் செதுக்கி நிற்கின்றனர்..

பொருள் ஊழி வாதம்
அடிமை சாசனவாதம்
பிரிவு தொற்று வாதம்
மத ஆழிசூழ் வாதம்
ஆதிக்க அரசியல்வாதம்
வாதம் யாவும்
மனிதவாதத்தை முடக்கி
மானுடர் மதியை மசக்கையாக்கி
மக்கிச் செய்தன..

குடியுரிமைக்குக் கூவ
குரல்வளை கருவிப்போயின..
குலப் பெருமை பாராட்ட மனித குலத்தை மசியலாக்கின..

இனப்பெருக்கத்தை புறந்தள்ளி
இனச்சரிவிற்கு இயைந்து போகும் மனிதரானோம்..

எங்கு தொலைத்தோம் நம் குடியை..
எங்கோ தொலைந்தோம் ஆதியறிவை..

து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
சென்னை.

மோடியின் ஆட்சியில் மோர்பி மட்டுமல்ல…….! கட்டுரை – அ.பாக்கியம்

மோடியின் ஆட்சியில் மோர்பி மட்டுமல்ல…….! கட்டுரை – அ.பாக்கியம்




அக்டோபர் 30ஆம் தேதி குஜராத் மாநிலம் மோர்பி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்து 141 பேர்கள் மரணம் அடைந்தவர்கள்.

கடிகார கம்பெனியிடம் காண்ட்ராக்ட் கொடுத்ததும், கம்பெனியின் வேலைக்காரர்களை மட்டுமே கைது செய்ததும் ஆட்சியின் அலங்கோல காட்சிகள் ஆகும்.

ஏதோ குஜராத்தில் மட்டும்தான் இது நடந்து விட்டது என்று எண்ணி விடாதீர்கள் மோடி ஆட்சியில் இது தொடர்கதையாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் 9-ம்தேதி கிரேட்டர் மைதாவில் நொய்டாவில் சாலையில் திடீரென்று ஒரு பகுதி உள்ளே சென்றுவிட்டது. பெரும் போக்குவரத்து பாதிப்பாகி நாடு முழுவதும் வைரலாக மாறியது.

மேலும் இதே மாதம் முப்பதாம் தேதி பெங்களூர் பகுதியில் ஏலஹங்கா என்ற இடத்தில் பிரதான சாலை இடிந்து உள்ளே சென்று விட்டது அங்கு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 27 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்து 4 பேர் உள்ளே சிக்கிக் கொண்டார்கள்.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குர்கனில் உள்ள துவாரகா விரைவுச் சாலையில் 29 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய மேம்பாலம் ஒன்று கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த பொழுது பாலம் இடிந்து விழுந்தது. மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். மாநில முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் கட்டப்பட்டு வந்த முமத்புரா மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. 853 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இடிந்து விழுந்தது மாநில முழுவதும் தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.

இந்தப் பாலத்தை கட்டி வந்த நிறுவனம் ஏற்கனவே இரு பாலங்களை கட்டிய பொழுது இதே போன்று இடிந்து விழுந்து உள்ளது.

22 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரின் சுல்தான் கஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி, ஏப்ரல் 30ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது இடிந்து விழுந்தது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் தூண்கள் சரிந்து விழுந்து ஒரு முதியவர் பலியானதுடன் லாரி ஒன்றும் சிக்கிக்கொண்டது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள பைஷ்நாப் நகரில் பராக்கா தடுப்பணை மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் பொறியாளர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மூன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர்.

கடந்த மாதம் 29ஆம் தேதி காசர்கோடு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி காங்கிரீட் ஜல்லி போடுகிற பொழுது இடிந்து விழுந்தது தரமற்ற ஜல்லிகள் பயன்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடிபாடுகளுக்கு காரணம் ஒன்றிய அரசின் ஊழல் நிறைந்த நிர்வாக நடவடிக்கைகளே காரணம் என்று அனைவரும் அப்பட்டமாக அறிந்த உண்மை.

– அ.பாக்கியம்.

படங்கள்
குஜராத் பாலம், நொய்டாசாலை
விரைவு சாலை,
பீகார் விபத்து.

குஜராத் மட்டுமல்ல.. தேசிய நெடுஞ்சாலைகளில் திடீர் பள்ளம், தடுப்பணைகளில் உடைப்பு.. எழும் விமர்சனங்கள் | Not just Gujarat bridge, Many national level infrastructures sees ...

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் சோதனை எலிகள் – பொ.இராஜமாணிக்கம்

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் சோதனை எலிகள் – பொ.இராஜமாணிக்கம்



(PM ScHools for Rising India: PM SHRI)

ஒன்றிய அரசு ஆதரவில் சுமார் 14500 பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற பெயரில் பிரதமர் அறிவித்ததற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

வழக்கம் போல எல்லாத் திட்டதிற்கும் சம்ஸ்கிருதத்தில் பெயர் வைப்பது போல ( கல்விக் கொள்கையால் உருவாக்கபப்ட்ட பிற திட்டங்கள்: தீக்ஷ‌ஷா , ஸ்வயம்)  இந்தத் திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் என்பதும் ஸ்ரீ  என்ற சமஸ்கிருதப் பெயர் ஆகும். அதன் பின்னர் ஆங்கிலத்தில் விரிவாக்கி பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த புதிய திட்டம் தற்போது மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள் / உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் தெரிவு செய்யப்பட உள்ளன. ஒன்றியத்திற்கு / நகராட்சிக்கு இரண்டு பள்ளிகள் என தேர்வு செய்யபப்டும். இதில் ஒன்று ஆரம்ப / நடுநிலைப்பள்ளி மற்றொன்று உயர்நிலை/ மேநிலைப்பள்ளி என வரையறுக்கப்படுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், சமக்ரா சிக்ஷா ஆகியவற்றுக்கு தற்போதுள்ள நிர்வாக கட்டமைப்பின் மூலம் பிஎம் ஸ்ரீபள்ளிகள் திட்டம் அமல்படுத்தப்படும். தேவைப்பட்டால் குறிப்பிட்ட திட்ட அடிப்படையில் மற்ற தன்னாட்சி அமைப்புகள் ஈடுபடுத்தப்படும்.

இந்தப் பள்ளிகளுக்கு மொத்தச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும். இதில் 2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும். தேசிய கல்விக்கொள்கை 2020ன் அனைத்து அம்சங்களையும் அமுல்படுத்தும் பள்ளிகளாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள், முன்மாதிரியாகச் செயல்படும்.18 லட்சம் மாணவர்களுக்கு மேல் நேரடியாகவும் இதனைச் சுற்றியுள்ள பள்ளிகளின் ஆலோசனை வழிகாட்டுதல் மூலம் மேலும் பல பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

முக்கிய பத்துக் கட்டளைகள்:

1) தேசியக் கல்விக் கொள்கை-2020 ஐ அமுல்படுத்திக் காட்ட வேண்டும்.

2)  மாணவர்களின் சேர்க்கை கற்றல்  மேம்பாடு ஆகியவற்றின் பதிவு செய்யப்பட வேண்டும்.

 3) நடுநிலை மானவர் 21ம் நூற்றாண்டின் திறன்களுக்கு தயார்ப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். உயர்நிலை மாணவர் ஏதேனும் ஒரு திறனோடு வெளி வர வேண்டும்.

4) விளையாட்டு, கலை, தகவல் தொழில்நுட்ப தொடர்புத் திறன் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

 5) நிலைத்தகு பசுமைப் பள்ளியாக இருக்க வேண்டும்.

6) இப்பள்ளி ஒவ்வொன்றும் உயர்கல்வி நிலையத்தின் வழிகாட்டுதலுக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

7) அருகில் உள்ள தொழிலுற்பத்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

8) நன் மனோ நிலை வேலை வாய்ப்பிற்கான ஆலோசனைகள் வழஙகபப்ட வேண்டும்.

9) ஒவ்வொரு மாணவனும் இந்திய பாரம்பரியம் அறிவு ஆகிய வேர்களோடு இணைக்கப்பட்டு பாரத நாட்டின் நாகரீகம் சார்ந்த மாண்புகள் வளர்க்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்ளடக்கிய சமத்துவ வேற்றுமையில் ஒற்றுமைக் குணம், சேவை மனப்பான்மை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முழக்கத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் உத்வேகம் வேண்டும்.

10) நல்ல குணாம்சங்கள், குடிமகனுக்குரிய மதிப்பீடுகள், அடிப்படைக் கடமைகள் தேசத்தைக் கட்டமைக்கும் பொறுப்புணர்வு மிக்கவர்களாக உருவாக்குதல் வேண்டும். அனைத்து வகையான குழந்தைகள் வளர்ச்சியையும் உள்ளடக்கிய இயக்கமாக பள்ளி இயங்கும்.

சில கேள்விகள்:

1) ஏற்கனவே ஒன்றியத்திற்கு ஒரு ஆதர்ஷ் பள்ளி என்ற மாதிரிப் பள்ளிகள் 15000 பள்ளிகள் ஆரம்பிக்கப்படும் என டிச..2021ல் அறிவித்த போது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டு அது தான் தற்போது பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மாற்றி பழைய கள் புதிய மொந்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை அறியாதவர்கள் யார்?

2) பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது தேசியக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஏற்கனவே உள்ள பள்ளிகளை தேர்ந்தெடுத்து தேசியக் கல்விக் கொள்கையை இப்பள்ளிகள் அமுல்படுத்த வேண்டும் என்று கூறுவது இக் கொள்கையை ஒன்றிய அரசு திணிக்க முயற்சி செய்கிறது என்பதாகத் தானே கொள்ள வேண்டும்? அப்படியானால் தேசியக் கல்விக் கொள்கையைச் சோதிக்கும் சோதனை எலிப்பள்ளிகளா இவைகள் என்று தானே கேட்கத் தோன்றுகிறது.

3) தேசியக் கல்விக் கொள்கை ஒன்றிய அரசின் சட்டமல்ல. தற்போதைய ஆளும் அரசின் கொள்கையாகும். ஆட்சி மாறும் போது இந்தக் கொள்கை கைவிடப்பட்டால் இந்தப் பள்ளிகளின் கதி என்ன?

4) தேசியக் கல்விக் கொள்கையை அமுல்படுத்தாவிட்டால் இப்பள்ளிகள் அம்மாநிலத்திற்கு வழங்கப்படமாட்டாது என்ற அச்சுறுத்தல் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை பணிய வைக்கவோ அல்லது விலக்கி வைக்கவோ தானே செய்யும். இதுவும் ஜனநாயகத்திற்கு முரணானது தானே?

5) கேந்திரிய வித்யாலயா, நவோதயப்பள்ளிகள் ஆகியன மைய அரசின் கல்வி அமைப்பின் கீழ் இயங்கி வருவதால் அப்பள்ளிகள் இத் திட்டத்தில் இணைவதில் பிரச்சினைகள் இருக்கப்போவதில்லை. ஆனால் தற்போது மாநில அரசின் கல்வித் திட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மாற்றப்படும் பொழுது இரு வேறுபட்ட பள்ளிகளாக மாநில அரசு நடத்த முடியுமா ?

6) நிதியில் 60% சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்குவது எனக்கூறுவதால் மீதியை மாநில அரசு கொடுக்க வேண்டும் எனில் மாநில கல்வி பட்ஜெட்டில் பிற பள்ளிகளுக்கு பட்ஜெட் இழப்பு ஏற்படாதா? மாநில அரசின் சமமான அணுகுமுறைக்கு வேட்டு வைப்பது போல் இல்லையா?

7) கல்விப் பொதுப்பட்டியலில் இருக்கும் போது 40% நிதியை மாநில அரசு வழங்கும் போது மாநிலங்களை தேசியக் கல்விக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த நிர்பந்திப்பது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் அல்லவா?

8) கேந்திரிய, நவோதயா , அர்சுப் பள்ளிகள் தவிர பிற் அமைப்பின் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்பது தனியார் பள்ளிகளும் இத் திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறதல்லவா?

9) தமிழ்நாடு அரசு ஏற்கனவே தகைசால் பள்ளிகள் (26 பள்ளிகள்), மாதிரிப்பள்ளிகள்(15 பள்ளிகள்) டெல்லி அரசின் மாதிரிப் பள்ளிகளை பின்பற்றி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இது திராவிட மாடல் பள்ளிகளாகச் செயல்படும் எனும் போது ஒன்றிய அரசின் ஆளும் கட்சியின் பாரதீய மாடல் பள்ளிகளை தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்கள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என்றால் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சி என்ற பிரதமரின் கொள்கை கேள்விக்குறியாகாதா?

பொ.இராஜமாணிக்கம்,
முன்னாள் பொதுச் செயலாளர்,
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு
      

நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்

நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்




நமது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த மகாத்மா மண்ணில் மதவெறி நூல் வெளியீட்டு விழா ஜூலை 1 2022 அன்று திநகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர். தீ.சந்துரு தலைமை தாங்கினார் விழாவுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.

நூலை சி.பி.ஐ-எம்மின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார் கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் போரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது ‘மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்எட்டு மதவெறி பரவாது தடுத்திட இந்திய மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

நூலை வெளியிட்டுப் பேசிய கே.பாலகிருஷ்ணன் “எற்கனவே சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நக்கீரன் இதழில் தொடராக எழுதி அதன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட பெருமையும் நக்கீரன் கோபாலையே சேரும்.

‘மகாத்மா மண்ணில் மதவெறி என்னும் சிந்திக்கக் அடினமான தலைப்பில் புத்தகம் வெளியிடுவது மிகுந்த தைரியமான காரியம் இத்தகைய தொடரை எல்லோராலும் வெளியிட முடியாது கட்டுரை போராடித் தென்றால் பத்திரிகை நட்டம் ஏற்படுமே என்றுதான் பத்திரிகை உரிமையாளர்கள் நினைப்பார்கள் சமூகத்துக்கு பலனளிப்பதைப் பற்றி பெரிய கவலைப்படமாட்டார்கள்:

ஆனால் நக்கீரன் ஆசிரியர், இந்தத் தொடரை வியாபாரமாகப் பார்க்காமல் சித்தாந்தப் போராட்டமாகப் பார்த்து வெளியிட்டிருக்கிறார். அறிவை வியாபாரம் செய்வது வேறு. அறிவை விதைப்பது என்பது வேறு. நக்கீரன் கோபால் அறிவை விதைத்திருக்கிறார். நாடிருக்கும் குழ்நினையில் சமூகம் மகாத்மாவை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்” என்று குறிப்பிட்டார்.

இந்த நூல் குறித்த கருத்துரை வழங்கிய நமது நக்கீரன் ஆசிரியர். 2002 குஜராத் கலவரத்தில் 2000 பேர் இறந்ததாய் செய்தி. குஜராத் கலவரம் குறித்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த வலவரத்தில் இறந்தவர்களை எல்லாம் யாருமோ கொல்லலை, தங்ளைத் தாங்களே அழிச்சுக்கிட்டாங்க யாருமே குற்றம் செய்யாம கொலைகள் நடந்திருக்கு.

இத்தகைய மண்ணில்தான். தம் வாழ்கிறோம் இந்த மண்ணில்தான் வாழப்போகிறோம்” என்று மனம் கசந்தவர், “ஹிட்னர் பாதையில் ஒன்றிய ஆட்சி எப்படி நடைபோடுகிறது என்பதை தன் பாணியில் ஜி.ராமகிருஷ்ணன் நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறார்கள் இந்தக் குறிக்கோளுக்கு தடையாக அமைபவை இதுபோன்ற நூல்கள். எனவே இதுபோன்ற எத்தனை நூல்களை ஜி.ஆர். அவர்கள் எழுதினாலும் அதைக் கொண்டுவர நக்கீரன்’ தயாராக இருக்கிறது என உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதை நூலாக வாசித்தபோது எமக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்ன தெரியுமா? இடதுசாரிகள் மகாத்மா காந்தியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிதான் இதில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏன் காந்தி இன்று தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார் காந்திடமிருந்து நமக்குக்கிடைக்கவேண்டியது ஏதாவது இருக்குமென்றால், வெளிச்சத்தை நோக்கிய பயணம்தான் இப்போதிருக்கும் சூழலில் ஜி ஆரின் நூல் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியச் குழலுக்கே மிகவும் தேவையான நூலி என்று அடையாலம் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து போசவந்த காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் வாரலாற்று ஆசிரியர்களுடைய கடமை மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் அதனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் புத்தகங்கள் செய்ய வேண்டிய பணிகள் தீர்ந்து விடுவதில்லை என எமர்சன் (சொல்கிறார் மகாத்மா மண்ணில் மதவெறி தொடரை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியரைப் பாராட்டவேண்டும் என பேசியமார்ந்தார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன் இத்தகைய நூலொன்றை எழுதவேண்டும் என மறைந்த பத்திரிக்கையாளர் ஜவஹர் சொன்னார். என்னால் முடியாது என்று தயங்கினேன் உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார் பின் எழுத முடிவுசெய்தபோது, நாலைந்து தலைப்புகளை ஆலோசித்து ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்ற தலைப்பை முடிவு செய்தோம் பதிப்புரைக்கு நக்கீரன் ஆசிரியர், மதவாதத்தை வெடித்துச் சிதரவைக்கும் கந்தகம்’ என பொருத்தமாக தலைப்பிட்டிருந்தார். இன்றும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மகாத்மா காந்திதான் அதனால் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிநீத்த மகாத்மா உள்ளிட்ட தியாதிகளுக்கும் நூலை சமர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டார்.

தொகுப்பு: சுப்பிரமணியன்
நன்றி: நக்கீரன்

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அரசு அளிக்கிறதா? – பேரா.பு.அன்பழகன்

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அரசு அளிக்கிறதா? – பேரா.பு.அன்பழகன்




பசுமைப் புரட்சியின் முதன்மையான நோக்கம், தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள் வழியாக உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைதல் மற்றும் வேளாண்மை வளர்ச்சியினை எட்டுதல் ஆகும். எனவே, 1960களில் வேளாண் சார்புக் கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படும்போது அதற்கான சந்தை விலை குறைந்துவிடுகிறது, இதனால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே, அரசே தன்னுடைய காப்பு இருப்புக்கு (Buffer Stock) தேவையானதை நேரடியாகக் கொள்முதல் மையங்களைத் திறந்து இடைத்தரகர்களின் தலையீடு இன்றி கொள்முதல் செய்கிறது. அப்போது அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்குகின்றனர். ஆனால், இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானதல்ல. அரசின் முறைப்படுத்தப்பட்ட மண்டிகள், தனியார் மண்டிகளில் இது கட்டாய நடைமுறையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் அரசு கொள்முதல் மையங்கள் நிலையாக ஆண்டு முழுவதும் செயல்படாது, அறுவடைக் காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இம் மையங்கள் செயல்படும். இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் இவ் ஆதரவு விலையினால் பயன்பெற முடியாது. பொதுவாக விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களைத் தனியார் மண்டிகள், வேளாண் விளைபொருட்களுக்கு இடுபொருட்களை அளிப்பவர்கள், தரகு முகவர்கள், அரசு அல்லது கூட்டுறவு போன்றவர்களிடம் விற்பனை செய்கின்றனர். இந்தியாவைப் பொருத்தமட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்துதலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்திய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பெருமளவிற்குத் தனியார்களிடம் விற்பனை செய்கின்றனர் (நெல் விற்பனையில் உத்திரப் பிரதேசம் 81.35 விழுக்காடும், மேற்கு வங்காளம் 87.58 விழுக்காடும், கர்நாடகா 95.45 விழுக்காடும், இது போன்று கோதுமை விற்பனையில் உத்திரப் பிரதேசம் 85.38 விழுக்காடும், குஜராத் 80.71 விழுக்காடும், ராஜஸ்தான் 76.17 விழுக்காடும் தனியார்களிடம் விற்கின்றனர்). தனியார்கள் வேளாண் உற்பத்தி பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவான விலைக்கே வாங்குகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே அதிக அளவாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு வேளாண் விளைபொருட்களை நேரடியாக இந்திய உணவுக் கழகத்திற்குக் கொள்முதல் செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாநிலங்களில் நீர்ப்பாசன வசதி, அதிக உற்பத்தி திரன், நெல், கோதுமை அதிக அளவில் உற்பத்தி, சிறந்த சந்தைக் கட்டமைப்பு, அரசுக் கொள்முதல் மையங்கள் அதிக அளவில் செயல்படுவது போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம். 2019-20ல் மொத்த நெல் உற்பத்தியில் 43.86 விழுக்காடும், கோதுமை உற்பத்தியில் 31.72 விழுக்காடும் தேசிய அளவில் அரசு கொள்முதல் செய்கிறது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவில் அரசு நேரடி நெல் கொள்முதலைச் செய்கிறது. இதுபோல் ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கோதுமையை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்கிறது (Gopi Sankar Gopikuttan et al 2022).

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு அளிக்கப்படும் உத்தேசமான விலையாகும். இதில் விவசாயிகள் ஆதாயம் பெரும் வகையில் விலை தீர்மானிக்கப்பட்டிருக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையானது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்படும்போது விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான செலவு மற்றும் விலைக்கான வேளாண்மைக் குழுவின் (Commission for Agricultural Costs and Prices – CACP) பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவிக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையினை CACP, கணக்கிடும்போது, வேளாண் பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு, உற்பத்திச் செலவு, உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையில் விலையின் போக்கு, விளைபொருட்களுக்கிடையே உள்ள விலையின் ஒப்புமை, வேளாண் மற்றும் வேளாண் சாரா வர்த்தக நிலை, உற்பத்தி செலவினை விடக் குறைந்தபட்சம் 50 விழுக்காடு விளிம்புநிலை, குறைந்தபட்ச ஆதரவு விலையினால் நுகர்வோருக்கு ஏற்படும் விளைவுகள் போன்றவை அடிப்படையாகக் கொள்கிறது. இவ்விலை வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது கட்டாயம் அனைத்து கொள்முதல் செய்பவர்களும் பின்பற்றவேண்டியதில்லை. விவசாயிகளும் தங்களின் உரிமை என இவ்விலையினைக் கோரவும் முடியாது. அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானது அல்ல. 1966-67ல் முதன் முதலில் கோதுமைக்கு இவ்விலை (ஒரு குவிண்டாலுக்கு ரூ.54 நிர்ணயிக்கப்பட்டது) அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டி.எல்.தந்த்வாலா குழுவின் பரிந்துரைப்படி நெல்லிற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்பட்டது. தற்போது 23 வகையான வேளாண் விளைபொருட்கள் (7 தானிய வகை, 5 பருப்பு வகை, 7 எண்ணெய் வித்துகள், 4 வாணிப விளைபொருட்கள்) குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படுகிறது (Udit Misra 2022). இவ்விலையினால் அதிக அளவிற்கு நெல், கோதுமை விளைபொருட்கள் பயன் அடைகின்றன. இவ் விளைபொருட்களுக்கு ஆண்டிற்குச் சம்பா (காரீப்), குறுவை (ரபி) ஆகிய பருவ காலங்களுக்கு விலை (நெல்லைப் பொருத்தமட்டில் சன்னரகம், சாதாரண ரகம் என தனித்தனியே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது) என பிரித்து ஒன்றிய அரசு அறிவிக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிப்பதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் காரணிகளின் தாக்கமும் உள்ளடங்கியுள்ளது. பன்னாட்டுக் காரணிகளில் முக்கியமானது உலக வர்த்தக அமைப்பு ஆகும். இந்த அமைப்பின்படி மொத்த வேளாண் உற்பத்தி (2004ல்) மதிப்பில் 10 விழுக்காட்டுக்குமேல் மானியங்கள் வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கக் கூடாது என்கிறது. இந்த அடிப்படையில் இந்தியா மீது பலநாடுகள் மானியம் அதிகமாக அளிப்பதாகத் தொடர்ந்து உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்து வருகின்றன. ஆனால் உண்மையில் பல வளர்ந்த, வளரும் நாடுகளைவிட இந்தியா குறைவான அளவிலேயே மானியம் வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Nitya Nanda 2021). இந்தியாவில் 86 விழுக்காடு குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள், இவர்களுக்கு வேளாண் இடுபொருட்களான இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை மற்றும் நீர்ப்பாசனத்திற்கு அரசின் மானியம் தேவையாக உள்ளது. மானியம் அளிக்கவில்லை என்றால் இவ்விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொண்டு விவசாயத்தைவிட்டு அதிகமாக வெளியேறும் நிலை ஏற்படும், விவசாயத் தற்கொலைகளும் அதிகரிக்கும். மேலும் இந்தியா உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்டுள்ள நாடாகும். இதனைக் குறைக்க அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, வேளாண் விளைபொருட்களுக்கு மானியங்கள் வழங்கி உற்பத்தியினை பெருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பன்னாட்டுத் தொடர் அழுத்தத்தின் காரணமாக 2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் (1.வேளாண்மை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிபச் சட்டம், 2) வேளாண் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 3) அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்) அடிப்படையில் அரசு மானியங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டங்களால் விவசாயிகள், வேளண்சார் முகவர்கள், அரசு மண்டிகள் பெருமளவிற்குப் பாதிப்படையும். குறைந்தபட்ச ஆதரவு விலையும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும், பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விவசாயம் சென்றடையும் என்பதால் விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொள்ள நேரிடும். எனவே, விவசாயிகளின் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் ஒன்றிய அரசு இச்சட்டங்களை 2021ல் விலக்கிக்கொண்டது. மேலும் பன்னாட்டு அளவில் கோதுமை, அரிசி விலைகள் நிலையற்ற போக்கினைக் காணமுடிகிறது. இதனால் இந்திய விவசாயிகள் கடும் இழப்பினை அவ்வப்போது சந்திக்கவேண்டியுள்ளது எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. உள்நாட்டு அளவில் அரசியல், நிதிப்பற்றாக்குறை, காப்பு இருப்பு போன்ற முக்கியக் காரணிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பதாக உள்ளது. நாட்டின் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் முன்பு ஆளும் அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அதிகமாக உயர்த்துவார்கள் அதன் பின் குறைவாக உயர்த்துவார்கள். நிதி பற்றாக்குறையினைக் காரணம் காட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையின் உயர்வினை மட்டுப்படுத்தப்படுகிறது. இதேபோல் காப்பு இருப்பின் அடிப்படையினையும் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் வழியாக அரசு கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்கள் நாட்டின் ஏழை எளிய விளிம்பு நிலையில் மக்களுக்கு உணவளிப்பதற்குப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச ஆதரவு விலை கணக்கிடுதல்

எல்.கே.ஜா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வேளாண் விளைபொருட்களின் செலவுகள் கணக்கிடுவதற்கு 1965ல் வேளாண் விளைபொருள் விலைக் குழு நடைமுறைக்கு வந்தது. இதனைத்தான் வேளாண் செலவு மற்றும் விலைக் குழு (Commission for Agricultural Costs and Prices – CACP) என 1985முதல் அறியப்பட்டது (Kadasiddappa Malamasuri et al 2013). ஜா குழுவின் கணக்கிடும் முறை கடினமாகவும், எளிமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தது, எனவே எஸ் ஆர் சென் தலைமையில் 1979ல் ஒரு குழு அமைக்கப்பட்டு வேளாண் விளைபொருட்களின் செலவுகளைக் கணக்கிட சில சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. 1990ல் சி.எச்.அனுமந்தப்பா தலைமையிலான குழு, மேலாண்மை செலவு, சொந்த நிலத்திற்கான வாடகை மதிப்பு, போக்குவரத்து செலவு பொன்றவை வேளாண் விளைபொருட்களின் செலவில் கணக்கிடப் பரிந்துரைத்தது. 2003ல் ஒய்.கே.அலக் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

2004ல் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2004 – 2006ஆம் ஆண்டுக்குள் ஐந்து பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இக்குழுவின் பரிந்துரையின்படி வேளாண் விளைபொருட்களுக்கான செலவுகளுடன் அச்செலவில் 50 விழுக்காட்டையும் கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டும் என்றது. இதன்படி 2018ல் (A2 + FL) + 50% என்ற அடிப்படையில் கணக்கிட்டு (A2 என்பது செலவு, FL என்பது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உழைப்பின் மதிப்பு) குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை நிறைவேற்றியுள்ளதாக பிரகடனப்படுத்துகிறது. ஆனால் இக்குழுவின் பரிந்துரையினை ஒன்றிய அரசு பின்பற்றவில்லை என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உண்மையில் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது C2 + 50% என்பதாகும்.

செலவு A1 என்பது நில உரிமையாளர்களின் வேளாண் விலைபொருட்களின் உற்பத்திக்காக ரொக்கமாகவும், கருணையாக அளிக்கக்கூடிய (kind) செலவுகள் அடங்கியதாகும் இச் செலவுகள் கூலிக்காக வேலைசெய்யும் தொழிலாளர்களின் உழைப்பின் மதிப்பு, சொந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாடகை மதிப்பு, இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் வாடகைத் தொகை, பயன்படுத்தும் விதைகளின் (சொந்த மற்றும் வாங்கப்படும்) மதிப்பு, பூச்சிக்கொல்லிக்குச் செலவிடும் மதிப்பு, இயற்கை உரம் (சொந்த மற்றும் வாங்கப்படும்) பயன்படுத்தப்பட்டதின் மதிப்பு, உரத்தின் மதிப்பு, நீர்ப்பாசன செலவுகள், பயிர்செய்வதற்குப் பயன்படுத்தும் பொருட்களின் தேய்மானம், நிலத்தின் வருமானம், நடைமுறை மூலதனச் செலவின் மீதான வட்டி மற்றும் பிற வகைச் செலவுகள் ஆகும்.

செலவு A2 என்பது செலவு A1 உடன் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வாடகையையும் சேர்த்தது.

செலவு B1 என்பது செலவு A1 உடன் நிலம் தவிற பிற சொந்த மூலதனச் சொத்தின் மதிப்பிற்கான வட்டி.

செலவு B2 என்பது செலவு B1 உடன் சொந்த நிலத்திற்கான குத்தகை மதிப்பு மற்றும் குத்தகைக்குப் பயிரிடும் நிலத்திற்குச் செலுத்தப்படும் குத்தகை மதிப்பு.

செலவு C1 என்பது செலவு B1 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.

செலவு C2 என்பது செலவு B2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.

தற்போது ஒன்றிய அரசு இதில் செலவு A2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அத்துடன் 50 விழுக்காடு சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவித்துவருகிறது. ஆனால் ஒன்றிய அரசு வசதியாகச் செலவு C2 யைக் கணக்கிடாமல் தவிர்த்துள்ளது. எனவே சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதால் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை கீழ்கண்ட அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.

அட்டவணை : தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், செலவு C2யின் அடிப்படையில் கணக்கிடுவதற்குமான உள்ள வேறுபாடு

 

பயிர்A2 + FLC2குறைநத்தபட்ச ஆதரவு விலைA2 + FL வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%)C2 வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%)
(1)(2)(3)(3) /  (1)(3) /  (2)
நெல்12451667186850.0412.06
கோதுமை92314291925108.5635.08


குறிப்பு
: 2020-21ஆம் ஆண்டு செலவின் அடிப்படையில் கணிக்கிடப்பட்ட விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Sukhpal Singh et al 2021.

இந்த அட்டவணையில் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் 50 விழுக்காட்டினை கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டால் விவசாயப் பொருட்களின் விலை தற்போது அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக உள்ளது. எனவே செலவு C2 வின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது விவசாயிகளுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

2015ல் ரமேஷ்சந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் கூடுதலாகச் சில செலவுகளையும் சேர்க்கவேண்டும் என்றது. அதன்படி வேளாண்மையில் ஈடுபடும் குடும்பத் தலைவரின் உழைப்பினை திறனுடைய உழைப்பாளர் என கருதி கணக்கிடவேண்டும், நடைமுறை மூலதனத்தின் மீதான வட்டி முழு சாகுபடி காலத்திற்குக் கணக்கில் கொள்ள வேண்டும், எந்த வரையறையின்றி நிலத்தின் உண்மையான வாடகையை கணக்கில் கொள்ளுதல், அறுவடைக்குப்பிந்தைய நிலையில் வயல்களை சுத்தம் செய்தல், தரப்படுத்துதல், உலரவைத்தல், கட்டிடுதல், சந்தைப்படுத்துதல், போக்குவரத்து செலவு போனவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறது. மேலும் இக்குழு செலவு C2 உடன் 10 விழுக்காட்டிற்கு விவசாயிகளின் இடர்களை எதிர்கொள்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் என்ற அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என்கிறது. இவ்வாறு ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரையானது அடிப்படையில் பார்த்தால் செலவு C2 ஆனது கோதுமைக்கு 30.38 விழுக்காடும், நெல்லுக்கு 24.61 விழுக்காடும் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. மொத்த செலவு அளவில் கூடுதலாக 50 விழுக்காடு (C2 + 50%) அதிகரித்தால் நெல்லுக்கு தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையினை விட 66.80 விழுக்காடு அதிகமாகவும், கோதுமைக்கு 44.77 விழுக்காடு அதிகமாகவும் கிடைக்கும். அதாவது 2020-21 விலையின் அடிப்படையில் நெல்லுக்கு ரூ.1868 என்பதற்கு பதில் ரூ.3116 என்றும், கோதுமைக்கு ரூ.1925க்கு பதில் ரூ.2787 என்றும் கிடைக்கும். எனவே ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பது என்பது விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதாக உள்ளது (Sukhapl Singh et al 2021). தற்போது 2021-22ல் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1940 (2010-11ல் ரூ.1000), கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2015 (2010-11ல் ரூ.1120) (https://farmer.gov.in/) ஆக உள்ளது. இந்திய அளவில் 6 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இக்குறைந்தபட்ச ஆதரவு விலையினைப் பெற்று பயன் அடைகின்றனர் குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர். மேலும் இந்த பயனை பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்ற விவசாயிகளைவிட அதிக அளவில் பயன் பெறுகின்றனர். தனியார் சந்தைகளில் பெருமளவிற்கான விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாக விற்று இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே வேளாண்மை செய்வது சாத்தியமில்லா தொழிலாக மாறுவதால் அதிக அளவில் விவசாயிகள் பயிர் தொழிலை விட்டு வெளியேறுகின்றனர். எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளும் பெரும் நிலையினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஏன் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்கிறது என்பதற்கு பல பின்புலங்களைச் சுட்டிக்காட்டலாம். 77வது தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSS) 2018-19ல் கிராமப்புறங்களில் வசிக்கும் மொத்த குடும்பங்களில் 55 விழுக்காடு வேளாண்மையினைச் சார்ந்து வாழ்கின்றனர் இதில் 80 விழுகாட்டினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். 86 விழுக்காடு விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்திருக்கிறார்கள், மொத்த வேளாண்மையில் ஈடுபடுபவர்களில் 55 விழுக்காடு வேளாண் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். 50.2 விழுக்காடு விவசாய குடும்பங்கள் கடனாளிகளாக உள்ளனர் (சராசரி குடும்ப கடன் அளவு ரூ.74121), இக்கடனில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனமல்லாக் கடனாக உள்ளது. கிராமப்புற விவசாயிகளின் குடும்ப சராசரி வருமானத்தில் 92.3 விழுக்காடு வருமானம் வேளாண்மை வழியாகப் பெறப்படுகிறது. உலகில் உள்ள குறை-ஊட்டச்சத்து உடையவர்கள் அதிகமாக (28 விழுக்காடு மக்கள்) இந்தியாவில் வாழ்கின்றனர், இந்தியாவில் நான்கில் மூன்று பங்கு மக்கள் ஊட்டமான உணவினைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர், 6.2 கோடி மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் (ORF 2021). மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, வேளாண் துறையின் வளர்ச்சி குறைவாக கடந்த 70 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 2-3 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கிறது. வேளாண் துறையிலிருந்து அதிக அளவில் விவசாயிகள் வெளியேறி வேளாண் சாராத் தொழிலுக்குச் செல்வது அதிகரித்துள்ளது (2004-05 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கிடையே 64 மில்லியன் விவசாயிகள் வெளியேறியுள்ளனர்) மற்றும் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு பெருக்கம் குறைந்துள்ளது. இத்துடன் ஒன்றிய அரசினால் அசோக் தல்வாய் குழுவானது விவசாயக் குடும்பங்களின் வருமானத்தை 2015-16ல் மாதத்திற்கு ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.16118 என இருமடங்காக (பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு, உண்மை நிலையில்) அதிகரிக்கவேண்டும் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018ல் முன்வைத்தது. ஆனால் இந்த இலக்கினை அடையமுடியவில்லை. இவற்றை அடைய வேளாண் துறை ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வளர்ச்சியினை அடைய வேண்டும் (Ashok Gulati et al 2020). எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையினைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும். வேளாண் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து வேளாண் உற்பத்திக்கும் அளித்து உள்ளடக்கிய பொருளாதார வளர்சியனை அடைய முற்படவேண்டும். அரசு இதற்கான பொது சந்தைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, வேளாண் உற்பத்தி செலவினைக் குறைப்பது, திரனுடைய சந்தையினை உருவாக்குதல், கிராமப்புற பொது நலனை உறுதிப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

References:

Ashok Gulti, Devesh Kapoor and Marshall M Bouton (2020): “Reforming Indian Agriculture,” Economic and Political Weekly, Vol 55 (11), pp 35-42.
Biswajit Dhar and Roshan Kishore (2021): “Indian Agriculture Needs a Holistic Policy Framework< Not Pro-market Reforms,” Economic Political Weekly, Vol 56 (16), pp 27-35.
Gopi Sankar Gopikuttan and Gopal Naik (2022): “Markets for Farmers- Revisiting the Role of Mandis in the Context of Farm Law’s Repeal,” Economic and Political Weekly, Vol 57 (8), pp 33-38.
Kadasiddappa Malamasuri, Soumya B, Prasanth P and Sachin Himmatrao Malve (2013):”A Historical Perspective for Minimum Support Price of A griculture Crops,” Kisan World , Vol40 (12) pp 46-48.
National Sample Organization (2022): “Situation Assessment of Agricultural Households and Land and Holdings of Households in Rural India, 2019,” Ministry of Statistics and Programme Implementation, Government of India.
NITI Aayog (2018): “Doubling Farmer’s Income,”| National Institution for Transforming India, Government of India.
Nitya Nanda (2021): “Agricultural Reforms in India- Need for a Unique Model,” Economic and Political Weekly, Vol 56 (8), pp 25-29.
ORF (2021): “Global Nutrition Report 2021 – India’s Nutrition Profile and How to meet Global Nutrition Target,” Observer Research Foundarion, 2.12.2021.
Sukhpal Singh and Shruti Bhogal (2021): “MSP in a Changing Agricultural Policy Environment,” Economic and Political Weekly, Vol 56 (3), pp 12-15.
Udit Misra (2022): “Explained: What are MSPs, and how are they decided?,” The Indian Express, 03.03.2022.

அக்னிபாத் நாசகரமான நயவஞ்சகமான திட்டம் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி

அக்னிபாத் நாசகரமான நயவஞ்சகமான திட்டம் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி




ராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மிகவும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அக்னிபத் திட்டம், இளைஞர்கள் மத்தியிலிருந்தும், முன்னாள் ராணுவத்தினரின் பல்வேறு வகையினரிடமிருந்தும் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ரணுவ அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலரும் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் முக்கியமானது, ‘அக்னிவீரர்கள்’ (‘agniveers’) என்று பகட்டாரவாரமாகப் பெயரிட்டுள்ள இந்த நாசகர நயவஞ்சத் திட்டத்தை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

குறைந்தகாலத்தில் ஒப்பந்த முறையில் ராணுவத்தினரைத் தெரிவு செய்வது அவர்களின் தரத்தையும், செயல் நோக்கத்தையும் பாதித்திடும் என்றும், இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிரந்தரமான ராணுவ வீரர்களாக மாற்றப்படுவார்கள் என்பது இவர்களுக்கிடையே உள்ளார்ந்தரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திவிடும் என்றும், நான்கு ஆண்டுகள் கழித்து எவ்விதமான பணிப்பாதுகாப்பும் ஓய்வூதியமும் இன்றி அவர்களை வீதிகளில் தூக்கி எறிவது அவர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை ஏற்படுத்திடும் என்றும் மிகச்சரியாகவே வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் திட்டத்தை அரசுக்கும் சமூகத்திற்கும் மிகவும் ஆபத்தானதாக மாற்றக்கூடிய விதத்தில் ஆழமான பல அம்சங்கள் இதில் ஒளிந்திருக்கின்றன. அக்னிபாத் திட்டம் ஆட்சியாளர்களால் இந்திய அரசையும், அதன் நிறுவனங்களையும் இந்துத்துவா சித்திரத்துடன் பொருத்துவதற்கான, அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பெரிய திட்டம் ஒன்றின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும். இந்துத்துவா ஆட்சியாளர்கள், அரசின் மற்ற அங்கங்களைப்போலவே ராணுவத்தையும் தங்களின் சித்தாந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராணுவப் பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஒவ்வோராண்டும் ராணுவத்திலிருந்து கழட்டிவிடப்பட்டு சமூகத்துடன் இணைவது என்கிற உண்மை ஒருவிதத்தில் இந்து சமூகத்தை ராணுவமயப்படுத்தும் (militarizing Hindu society) சாவர்க்கரின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான வழியாகும்.

இதனுடன் சேர்த்து, ராணுவத்தின் உச்சபட்ச தலைமையான முப்படைத் தளபதி (Chief of Defence Staff-CDS) பதவி நியமனம் செய்யப்படும் விதமும் பெரிய அளவில் அரசியல்மயமாக்கும் விதத்திற்கு விரிவானவகையில் வழிதிறந்துவிட்டிருக்கிறது. ‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்படும் ‘அக்னிவீரர்கள்’ எப்படி பயிற்றுவிக்கப்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவல், “இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அக்னிவீரர்களிலிருச்து தேச உணர்வுகளைப் பெற்றிருக்கக்கூடிய, தேச நலன்களைப் பாதுகாக்கக்கூடிய சிறந்த பிரஜைகள் உருவாவதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என்று கூறியிருக்கிறார். அவர்கள் புகுத்தப்போகும் தேசியவாதம் “இந்துத்துவா தேசியவாதமா” என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராணுவத்தில் சேரவேண்டும் என்று துடிப்புடன் இருந்த இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபாவேசத்தை எதிர்கொள்ளமுடியாது, அரசாங்கம் அவசரகதியில் சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறது. தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களில் 10 விழுக்காட்டினருக்கு ஒன்றிய ஆயுதப் படைப் பிரிவுகளிலும், ராணுவ உற்பத்திப் பிரிவுகளிலும், இதர நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்களும் இதேபோன்று உறுதிமொழிகளை வாரி வழங்கியிருக்கின்றன. எனினும், இவை எதுவும் கோபாவேசத்துடன் கிளர்ந்தெழுந்துள்ள இளைஞர்களைக் குளிர்விக்கவில்லை. ஆட்சியாளர்களின் இத்தகைய உறுதிமொழிகளின் இலட்சணம் என்ன என்பது முன்னாள் வீரர்கள்களுக்கும், இவர்களுக்கும் நன்கு தெரியும்.

ஏற்கனவே ஒன்றிய அரசாங்கத்தின் ‘சி’ பிரிவு பணியிடங்களில் 10 விழுக்காடும், ‘டி’ பிரிவு பணியிடங்களில் 20 விழுக்காடும் முன்னாள் ராணுவத்தினருக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனாலும் ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையின் கீழ் உள்ள மீள்குடியேற்ற பொது இயக்ககம் (Directorate General Resettlement) வெளியிட்டுள்ள தரவின்படி, இந்தப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடுகள் எப்போதுமே நிரப்பப்பட்டதில்லை.

தற்போது ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள ‘சி’ பிரிவின்கீழ் உள்ள மொத்தப் பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தினர் வெறும் 1.29 விழுக்காடு அளவிலும், ‘டி’ பிரிவு பணியிடங்களில் நாடு முழுதும் உள்ள 77 துறைகளில் வெறும் 2.66 விழுக்காடு அளவிலும் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.

இதேபோன்றேதான் பிறதுறைகளின் நிலையுமாகும். ஒன்றிய துணை ராணுவப் படையில் முன்னாள் ராணுவத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால் 2019 ஜூன் 19ஆம் தேதி வெளியாகியுள்ள கணக்கின்படி இவர்களில் ‘சி‘ பிரிவு பணியிடங்களில் வெறும் 0.47 விழுக்காட்டினரும், ‘பி’ பிரிவு பணியிடங்களில் 0.87 விழுக்காட்டினரும், ‘ஏ’ பிரிவு பணியிடங்களில் 2.20 விழுக்காட்டினரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் துறைகளில் முன்னாள் ராணுவத்தினர் பணிபுரிவது இவ்வளவு பரிதாபகரமாக இருக்கும் இந்த நிலையில்தான், அக்னிவீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் வீதிகளில் தூக்கி எறியப்படும்போது அவர்களுக்கு தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துக் கொண்டிக்கிறது.

அரசாங்கம் நாட்டிலுள்ள 85 இந்தியக் கம்பெனிகளைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாட்டிலுள்ள பெரும் கார்ப்பரேட்டுகளும் அக்னிபத் திட்டத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். அக்னிபத் திட்டத்தை வரவேற்று டாட்டா குழுமத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், மஹிந்த்ரா குழுமத்தைச் சேர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா, ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, ஜேஎஸ்டபிள்யு குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால் முதலானவர்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனந்த் மஹிந்த்ரா தன்னுடைய அறிக்கையில், “அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கமும் திறமைகளும் அவர்களைச் சிறந்த வேலையாட்களாக மாற்றிடும். இத்தகைய பயிற்சி பெற்றோரிலிருந்து, திறன்மிக்க இளைஞர்களைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது, வரவேற்கத்தக்கது,” என்று மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்துத்துவா-கார்ப்பரேட் பேர்வழிகளின் கூட்டணி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தத் திட்டத்தை கார்ப்பரேட் துறை புகழ்ந்து துதிபாடியிருக்கும் விதத்திலிருந்தே, ராணுவம் இப்போது இவர்களின் பெரிய தொழிற்சாலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பயிற்சிப் பள்ளிகளாக மாறியிருப்பதாகவே தோன்றுகிறது. எனினும், பல்லாயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினரும், ராணுவ அதிகாரிகளும் கூறுவதுபோல், எதார்த்த உண்மை என்னவென்றால், கார்ப்பரேட்டுகள் முன்னாள் ராணுவத்தினரை வேலைக்கு எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அற்பமாகும்.

அக்னிபத் திட்டத்திற்கு கார்ப்பரேட்டுகள் ஆதரவு அளிப்பதற்கான காரணம் வேறாகும். ராணுவத்திற்கான உற்பத்தித் தொழிற்சாலைகள் தனியார்துறைக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால், டாட்டாக்கள், மஹிந்த்ராக்கள் போன்ற பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தித் திட்டங்களை எளிதாகப் பெற்றுக்கொண்டுவிடும். அப்போது ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தினரைப் பணியில் அமர்த்துவதற்கு இவ்வாறு வீதியில் எறியப்படும் அக்னிவீரர்கள் அதிகமான அளவில் தேவைப்படுவார்கள். அவர்களைத் தங்களின் எதிர்கால நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் வெளிவரும் ராணுவத்தினரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என யோசித்துக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்துவா சக்திகளோ வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு விரக்தியுடன் வெளிவரும் ராணுவத்தினரைத் தங்களின் மதவெறி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனப் பார்க்கின்றன.

பாஜக தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்க்யா இவர்கள் குறித்துக் கூறியதைப் பார்க்க வேண்டும். பாஜக அலுவலகத்திற்குப் பாதுகாப்பிற்கு ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டியிருந்தால், அவர் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பாராம். பஜ்ரங் தளத்திற்கும், இந்துத்துவா படைக்கும் ஆட்களைத் தேர்வு செய்யும்போதும் இதேபோன்று முன்னுரிமை விரிவாக்கப்படுமாம்.

அக்னிபத் திட்டமானது இந்திய அரசின் கேந்திரமான நிறுவனமான ராணுவத்தின் மீதான தாக்குதலாகும். இது எதிர்க்கப்பட வேண்டியதும், இதற்கெதிராகக் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதும், இது திரும்பப்பெறப்பட வேண்டியதும் அவசியமாகும்.

(ஜூன் 22, 2022)
நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி

சூரியதாஸ்  கவிதைகள்

சூரியதாஸ் கவிதைகள்




நிறங்களின் உரையாடல்
*****************************
நீலம், கருப்பு, சிவப்பு மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து
சமூக நீதி காத்தல் பற்றி
மும்முரமாய்ச் சிந்தித்துக் கொண்டிருந்தன.

அப்போது முந்திரிக்கொட்டையெனக் காவியும்
இடையில் வந்து மூக்கை நுழைத்தது.

வண்ணங்களிடையே உரையாடல்
முறையாய்த் தொடர்ந்தது.

மாட்டுச் சாணி பூசி
மூத்திரம் குடிக்கப்
பரிந்துரைக்கிறார்களே என்றது நீலம்

கிருமிகள் சாகும் என்றது காவி

சாதி,மத வெறுப்பை உமிழ்கிறார்களே என்றது
கலையுடன் கருப்பு

நல்லது.
மகா மந்திரியாகலாம் என்றது காவி.

பெட்ரோல் டீசல் விலை
எகிறிவிட்டதே.
கால்நடையாய் மாறச் சொல்வது தான்
திட்டமோ
என்றது சிவப்பு.

நடப்பது நல்லது.
சக்கரை வியாதி அண்டாது
என்றது காவி

மக்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்களே
நல்லதா என்றது நீலம்.

பிற கறிகளின்
விலை குறையும்
விறைப்பாய்ச்
சொன்து காவி

மெத்தப் படித்தவர்ககளும்
அகோரிச் சாமியார்களின்
அந்தரங்கங்க உறுப்பை
முத்தமிடுகிறார்களே கேவலம் என்றது கருப்பு

இதிலென்ன கேவலம்
அதிகார பீடத்தில் அமரலாம் என்று
இறுமாப்பாய்ச் சொன்னது காவி

சிலர் உண்டு கொழுக்கப்
பலர் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்களே
என்றது சிவப்பு.

நல்லது
வியர்வைச் சுரப்பிகள் நன்கு சுரந்து
உடல் கட்டுக் கோப்பாயிருக்கும்
என்றது காவி.

உண்ண உணவில்லையா

நல்லது
தொப்பை வளராது என்றது காவி.

சொந்த மக்களே சொந்த நாட்டின்
அகதியாகிறார்களே என்றது நீலம்.

நல்லது
யாதும் ஊரே
யாவரும் கேளீர் என உலகம் எங்கும் சென்று வாழலாம்
என்று நையாண்டி செய்தது காவி

மக்கள் நோயில் இறக்கிறார்களே என்றது கவலையில்
கருப்பு

இறப்பது நல்லது
செத்தவரை எந்த நோயும் தாக்காது என்றது காவி

தலை தவிர்த்து உடலாயிருந்து
ஊதியமின்றி உழைத்து உழைத்து நோகிறார்களே
என்றது சிவப்பு

நல்லது
தலையாயிருந்து
பிறரை அடிமை செய்யச் சிந்திக்க வேண்டியிராது
என்று சிரித்துக்கொண்டே சொன்னது காவி

இப்போது
கருப்பு சிவப்பு, நீலம் மூன்றும் சற்றே
கடுப்புடன்
மூத்திரம் குடிக்கலாம் மூளை வளரும் என்றன

அப்படி வாருங்கள் வழிக்கு என்று அட்டகாசமாய்ச் சிரித்தது காவி

என்ன மூத்திரம் என்றது?

எங்கள் மூத்திரம் என்ற கருப்பும் சிவப்பும் நீலமும்
அடக்கமாய் மூளையும் வளரும் சமூகநீதியும் மலரும் என்றன.

ஓரிடத்தில்
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸின்
மூத்திரம் ஒரு குவளையில் சேகரமாகிக் கொண்டிருந்தது.

இப்போது
கால்கள் நடுநடுங்க அஞ்சிக் காவி அமர்ந்திருந்ததின்
காரணம் புரியவில்லை.

மூடிக்கிடக்கும் மூன்றாம் கண்
************************************
மாணவர்களுக்கு
நுழைவுத் தேர்வு என்னும் கொலைச் சாலை
பசுக்களைப் பாதுகாக்கக்
கோசாலைகள்

எந்நாவில் வாழும்
தமிழைச் சாகடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்
ஐ.நாவில் அரைகுறைத் தமிழ் பேசுகிறார்கள்.

நிதிநிலை அறிக்கையின் முதல் பக்கத்திலிருக்கும்
திருக்குறளுக்குக் கடைசிப் பக்கத்தில் கூட
நிதி ஒதுக்கப்படுவதில்லை..

விதி முறைகளுக்குட் பட்டே
நம் விழிகளைக் குத்துவதாய் விளக்கம் சொல்கிறார்கள்.

தமிழை அழிக்க விஸ்வாமித்திரத்தவம் செய்கின்றார்கள்
இடையில் மோகினியாட்டம் கண்டு
சிறிது மூத்திரம் குடிக்கின்றார்கள்.

இரு புருவ நடுவிலே
நெற்றியின் மத்தியிலே
நேராக நிமிர்ந்து நிற்கும்
தீமைகளைச் சுட்டெரிக்கும்
நெற்றிக்கண்
என்ன ஆனது

நடப்பவற்றைக் கண்டு புருவம் சுருக்கியதில்
நெற்றிக்கண் நெருக்கப்பட்டு
சுருங்கிப் போனதா?

ஒன்றிய அரசின் அநீதிச் சாம்பல் விழுந்து
எரிச்சல் தாழாமல் இமைகள் மூடிக் கொண்டனவா?

சுற்றி நடப்பவற்றால்
நெற்றி வியர்த்து நீர்பட்டு நெற்றிக்கண்
நீர்த்துப் போனதா?

மக்கள் தம் நெற்றிக்கண் திறந்து நீதி வழங்கும் காலம் நெருங்கிவிட்டது.

விதிமுறைக்குட்பட்டே இங்கு எல்லாமும் விரட்டியடிக்கப்படும்.

என்றாலும் ஓர் எச்சரிக்கை.……
மக்கள்
பொங்கியெழுந்தால் அவர்களுக்கு ஏது விதிமுறை
மக்களே சட்டம்
மக்கள் செயலே நீதியாகும்.

அவர்களுக்கே ஒட்டுப் போடுகிறார்கள்
********************************************
ஊட்டச் சத்துக் முறைவால்
உதிர்ந்தாலும்
உயிர் காக்கும் பிராண வாயுவின்றிக் குழந்கைள் இறந்தாலும்
அவர்தம் பெற்றோர் அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
மின்னணு வாக்கு எந்திரம் (EVM) இருக்கும் வரை…

நாய்க்கறி தின்று நடையாய் நடந்து
ஊர் சென்றாலும்
நலிந்தவர்கள் அவர்களுககே
ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

குவியல் குவியலாய்
கோவிட்டில் புதைத்தாலும் கங்கையில் பிணங்கள் மிதந்தாலும்
அவர்களுக்கே ஒட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

கோவிலுக்குள் வைத்துக் கூட்டுப் பலாத்காரம் செய்தாலும்
எவர் கண்ணிலும் காட்டாமல்
சிதை வைத்து எரித்தாலும் அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

மாட்டுக்கறி தின்னக் கூடாதன்று
மகனோ, கணவனோ, தந்தையோ யார் அடித்துக் கொல்லப்பட்டாலும்
இலலாமியப் பெண்களுக்குக் கவலையில்லை
அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

கார் ஏற்றிக் கொன்றாலும்
போராட்டக் களத்தில் எத்தனை பேர்
செத்து விழுந்தாலும்
விவசாயிகள்
அவர்களுக்கே ஒட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

காங்கிரஸ் முக்த் பாரத்தும்
கம்யூனிஸ்ட் முக்த் பாரத்தும் சாத்தியமே
EVM இருக்கும் வரை…

உயிர்க்க உயிர்க்க இந்திய இயேசுவை
சிலுவையில் அவர்கள் அறைவார்கள்
EVM இருக்கும் வரை…

வாக்குச் சீட்டுமுறை வராதவரை அவர்களே வெல்வார்கள்
தினம் தினம் மக்களை அவர்களே கொல்வார்கள்

அவர்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டுச் செத்துப் போகலாம் அல்லது
உங்கள் ஓட்டுப் போடப்பட்டுச் சாகடிக்கப்படுவீர்கள் EVM இருக்கும் வரை…

இதை அறிந்தால் வெல்லலாம்
அடுத்த தேர்தலில் நின்னு
இதை அறியாதவர் வாயில்
அடுத்த தேர்தலிலும் மண்ணு..

– சூரியதாஸ் 

யார் கழிசடை? – எஸ் வி வேணுகோபாலன்

யார் கழிசடை? – எஸ் வி வேணுகோபாலன்

யார் கழிசடை - கட்டுரை ஜனநாயக சிந்தனை அறவே அற்ற கூட்டத்தின் மற்றுமொரு பிரதிநிதி தான் அவர். மூளைக்குள் இயங்கும் செல்கள் பத்து பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய சேர்மானங்களால் ஆகியிருக்கக் கூடும். நச்சுக் கருத்தியல் மையத் தலைமையின் கீழ் இயங்கும் இவர்களது…