வழித்துணையாய் வந்த வாசிப்பு கட்டுரை – வே. சங்கர்
ஒற்றைவரியில் வரலாற்றைச் சொல்லமுடியாமல் போகலாம். ஆனால், ஒற்றைவரியில் வரலாற்றை வாசிக்க வைத்துவிடமுடியும்.
தொடக்கத்தில் வாராந்திர மற்றும் மாதாந்திர ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளை வாசித்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நானும் ஒரு வாசிப்பாளரானேன்.
அம்புலிமாமாவும், பாலமித்ராவும், ரத்னபாலாவும் பிற்காலத்தில் வந்த கோகுலமும் என்னுள்ளே செய்த மாயாஜாலம் அளப்பரியது. பி.டி.சாமியின் இரும்புக் கை மாயாவி என்ற புத்தகத்திற்குள்ளேதான் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
பிறகு தொடர் வாசிப்பில் தீவிர வாசிப்பாளரானேன். தற்போது எழுத்தாளன் என்ற அடுத்த பரிமாணம். வாசிப்பு என்பது ஒருவகை மனஉந்துதல். எதற்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளம்போல் புத்தகவாசிப்பு, இன்றளவும் உள்மனதிற்குள் எப்போதும் சீறிப்பாய்ந்துகொண்டிருக்கிறது.
புத்தகம் வாசிக்காத நாட்கள் பல இருந்தபோதும், வாசிப்பின் ஈரம் சுத்தமாக வறண்டுபோனதில்லை. யாரேனும் ஒருவர் புத்தகத்தைப் பற்றி பேசினாலோ அல்லது கேட்டாலோ போதும் மீண்டும் வாசிப்புத் ’தீ’ பற்றிக்கொள்ளும்.
இதைத்தான் வாசிக்கவேண்டும் என்று யார் வலியுறுத்தியும் ஒருவரை வாசிப்பாளராக மாற்ற முடியாது. வாசிப்பு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆரம்பத்தில், எனக்கு வார இதழ்களில் வெளியாகும் கவிதைகள் பிடிக்கும். அது புதுக்கவிதையா, மரபுக் கவிதையா அல்லது ஹைக்கூ கவிதையா என்றெல்லாம் தரம்பிரித்துப் பார்க்கத் தெரியாது.
அந்தக் கவிதை காதலைப் பற்றிப் பேசுகிறதா?, சமூகத்தைச் சாடிப் பேசுகிறதா?, பெண்ணியம் பேசுகிறதா?, அல்லது எதார்த்தத்தைக் கவிதை வடிவில் எழுதப்பட்டிருக்கிறதா? என்ற எந்தவொரு ஆதியும் அந்தமும் இல்லாமல்தான் கவிதையை வாசிக்கப் பழகினேன்.
ஒருகட்டத்தில் நானும் வார்த்தைகளை மடக்கி மடக்கி கவிதை மாதிரி ஒன்றை எழுதிக்கொண்டு எல்லோரையும் துரத்தித் துரத்தி வாசிக்க வைத்து வதம் செய்தேன்.
இப்படியே சென்றுகொண்டிருந்த கவிதை வாசிப்பு ஒருதிடீர் திருப்பத்தில் கவிதைகளை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். கண்டமேனிக்கு கவிதை என்றபெயரில் கிறுக்கி கவிஞர்களை அவமதிக்கக்கூடாது என்று தெளிவுகொண்டேன்.
அதுமட்டுமல்ல, எப்படிப்பட்ட கவிதைகள் ஒருவரை வசீகரிக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். எப்படி கவிதைகளை ரசிக்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல விடலைப்பருவத்தில் அரும்பிய மீசையை காதலித்ததைப் போலவே கவிதைகளைத் தாண்டி காதல் கதைகளையும் உருகி உருகி நேசித்தேன். பழைய புத்தகக் கடைகளில் தேடித்தேடி வாசித்தேன்.
வளர் இளம்பருவத்தின் அடுத்த நகர்வாக துப்பறியும் கதைகளின் தாக்கம் என்னுள்ளே தலைதூக்கியது. அப்போதைய ராணி காமிக்ஸ்தான் எனது அன்றைய அகோர அறிவுப்பசிக்குத் தீனிபோட்டது.
பள்ளிக்கால, நட்பு வட்டத்தில் துப்பறியும் கதைப் புத்தகங்கள் வாசிப்பவர்களை வலிந்து நட்பாக்கிக் கொண்டது மட்டுமல்லாமல், இந்த வாரம் எந்தப் புத்தகம் வெளியாகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினேன்.
புத்தகம் சார்ந்து பேசுவதும் புத்தகங்கள் வாசிப்பதையும் வாழ்வோடு இயைந்த ஒன்றாகவே எனதுகாலம் கழிந்ததே ஒழிய அதை ஒரு வெட்டி வேலையாக ஒருபோதும் நினைத்ததில்லை.
என்வயதொத்த மாணவர்கள் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார்கள். அல்லது புத்தகங்கள் வாசிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். பள்ளிக் கல்லூரி பாடப்புத்தகங்களைவிட அவற்றைத் தாண்டிய புதுப்புது புத்தகங்களோடு என்னை நானே புதைத்துக்கொண்டது சுகமாக இருந்தது.
ஒவ்வொன்றையும் ஒப்பீடு செய்தும் வேறுபடுத்தியும் கூர்ந்து கவனிக்கவும் புத்தகங்கள் எப்போதும் என்னோடு வழித்துணையாக வந்தன. என் மனதோடு பேசவும், என் மன எழுச்சியை ஆற்றுப்படுத்தவும் புத்தகங்கள் துணைநின்றன.
சம்பாத்தியம் புருசலட்சணம் என்ற சூழலில் சிக்கித்தவித்து வேலை தேடி அலைந்தபோது ஒருவித வெறுமை மனதைக் கவ்விப்பிடித்தபடியே இருந்தது. அக்காலகட்டத்தில் எல்லாம் என் வாழ்க்கை தடம்புரளாமல் வைத்துக்கொண்டது புத்தக வாசிப்புதான்.
இப்போது கிடைப்பதுபோலவே அப்போதும் எனக்கு ஏராளமான நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தையெல்லாம் புத்தகங்கள் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு என்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தன.
புத்தகங்களில் அப்படி என்னென்ன வகையான புத்தகங்களை எல்லாம் வாசித்தீர்கள் என்று கேட்டால் அத்தனை எளிதாகப் பதிலளிக்கமுடியாது. கதைகள் வாசித்தேன். கட்டுரைகள் வாசித்தேன். கதைகளில் காதல் தாண்டி புனைவுகள் இல்லாத இலக்கியங்களை வாசித்தேன். ஒவ்வொரு நகர்வுகளின்போதும் உறுத்தல் இல்லாத உலகத்தை தேடிக்கொண்டே இருந்தேன். இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன்.
வரலாற்றுப் புனைவுகள் ஒருகாலத்தில் கோலோச்சிக்கொண்டிருந்தன. கல்கியும் சாண்டில்யனையும் வாசிக்காதவர்களை ஒரு வாசிப்பாளராக ஒத்துக்கொள்ளவில்லை இச்சமூகம்.
அதற்காகவேனும், புரிந்ததோ இல்லையோ வரலாற்று நாவல்களை வாசித்தேன். எனக்கு இன்ன இன்ன கதைகள் தெரியும் என்று சொல்லிக்கொள்வதையே ஒருவிதப் பெருமை இருந்தது. அதற்கு அந்த காலகட்டத்தில் உரிய அங்கீகாரமும் கிடைத்தது.
என்வீட்டுப் பெண்கள் (சித்தி, அத்தை, அடுத்தவீட்டு அக்கா) லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், விமலாரமணி, வாஸந்தி, என்று எழுத்தாளர்களைத் தரம்பிரித்து வாசிப்பு செய்து கொண்டிருந்த அவர்கள் பேச்சின் மூலம் பெண் எழுத்தாளர்களும் சிறுவயதிலேயே எனக்கு அறிமுகமானார்கள்.
எழுத்தாளர் பாலகுமாரனை எழுத்துச்சித்தர் என்று கொண்டாடினார்கள். நானும் சிறிதுநாட்கள் அந்தமோகத்தில் கரைந்துபோனேன். பின் சுதாரித்துக்கொண்டு மற்ற எழுத்தாளர்களின் எழுத்தையும் ரசிக்கவேண்டும் என்ற ஒருவித வெறியை நானாகவே வளர்த்துக்கொண்டேன்.
அதுமட்டுமல்ல, எல்லோரும் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, எஸ்.பாலசுப்பிரமணியம் என்று ஒருகூட்டம் கொண்டாடிக்கொண்டிருந்தபோது நான் மட்டும் ராஜேந்திரக்குமார் என்ற எழுத்தாளனை என் மானசீக எழுதாளனாக எண்ணிக்கொண்டு மாங்குமாங்கென்று வாசித்துக்கொண்டிருந்தேன்.
தற்போதைய என் எழுத்தில் ராஜேந்திரக்குமார் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம். கவிதைப் புத்தகங்களில் மு.மேத்தா, வைரமுத்து ஒரு தனிரகம் என்ற போது, தபுசங்கர் என் பால்யகாலத்து கற்பனையை கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் கட்டி இழுத்து தன்பக்கம் வைத்துக்கொண்டார்.
இத்தனைக்கும் நடுவில் முதல்தலைமுறையில் கல்லூரிக்குச் சென்று ஆங்கில இலக்கியம் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஆங்கில இலக்கியம் அத்தனை எளிதாக என்னுள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறம் என்றாலும் தேர்வுக்காகவேனும் வாசிக்கவேண்டிய நிர்பந்தம்.
ஒருகட்டத்தில் 14ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களான சாசர், சர்ரே, வைட், என்று தொடங்கிய கவிதை வாசிப்பு கொஞ்சம்கொஞ்சமாக ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி, டபுள்யூ.பீ.யீட்ஸ், என்று எல்லையில்லாமல் விரிந்துகொண்டே சென்றது. எல்லாமே தேர்வுக்கான மதிப்பெண் பெறுவதற்காகத்தான் வாசித்துவைத்ததுதான்.
விரிவுரையாளர்கள் ஒவ்வொரு ஆங்கிலக் கவிதையையும் சிலாகித்துக் கொண்டிருந்தபோது அன்றைய காலத்தில் அர்த்தம் தெரிய ஏதேனும் ஒரு பஜார் கைடு தேவைப்பட்டது. கவிதைவரிகளை மனனம் செய்வது பரிட்சை எழுதுவதற்குமட்டும் என்றாகிப்போனது. தேர்வு எழுதிய அடுத்தநாளே அத்தனையும் மறந்துபோனது.
ஆனால் கவிதையை ஓரளவுக்கு ரசிக்கத் தெரிந்த என்னால், முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போராடியதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. புரிந்துகொள்ளமுடியாமல் போனதற்கான சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒரு பின்னணியைக் கொண்டிருந்தன. அதை அறியாமலே அக்கவிதைகளை அணுகியதும் வாசித்ததும்தான் என் பெரும்தவறு என்று பிறகுதான் உணரமுடிந்தது.
எத்தனையோ நாவல்களை ஆங்கிலத்தில் வாசித்தபோதும் தாமஸ் ஹார்டிதான் எனது முதலிடம். இவர்களைப் பற்றியெல்லாம் தற்போது பேசினால் இன்றைய இளைஞர்கள் என்னை ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்த ஜந்துவைப் பார்ப்பதைப் போல பார்க்கிறார்கள்.
சரி அப்படி என்னதான் இன்றைய இளைஞர்கள் வாசிக்கிறார்கள் என்று தேடுதல் வேட்டை நடத்தியபோது பாவ்லோ கொய்லோ என்றார்கள். அவர் எழுதிய மொத்த நாவல்களையும் வாங்கிக் குவிக்கத் தொடங்கினேன்.
பிரேசில் எழுத்தாளராக இருந்தபோதும் அவருடைய எழுத்து இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் ஆங்கிலத்தை ஒத்ததாக இருந்ததால் வாசிக்க இலகுவாக இருந்தது. இளம் பெண்கள் சேட்டன் பகத் என்றார்கள். ஒருசிலர் ரவீந்தர் சிங் என்றார்கள். அதையும் முழுமூச்சில் வாசித்துவிட்டு அடங்காப் பசியோடு அடுத்தடுத்து வாசிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு பள்ளிக்கூட ஆசிரியராய் இருந்து கொண்டு கல்விசார்ந்த புத்தகங்களை வாசிக்காமல் இருந்தால் பெரும் தவறல்லவா? ஆகவே பள்ளிக்கூடம், ஆசிரியர், குழந்தைகள் என்ற தலைப்பில் எந்தபுத்தகம் வந்தாலும் வாங்கி வாசித்துவிடுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.
மாடசாமியை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டேன். ஆயிசா நடராஜனை கொஞ்சம் ஓரவஞ்சனையோடுதான் வாசிக்கிறேன் இவர்கள் மூலம்தான் பாவ்லோ ஃப்ரைரேவும் அமனஸ் வீலியும் என்னுள்ளே ஊடுருவினார்கள்.
இன்றைய கல்விச் சிக்கல்களைப் பற்றிப் பேசிய வசந்திதேவியையும், சிவகுருநாதனையும், உமா மகேஸ்வரியையும் வாசித்துக்கொண்டே செல்லச் செல்ல கலகலவகுப்பறை சிவா, சிலேட்டுக்குச்சி எழுதிய முத்துக்கண்ணன் என்று ஏராளமான சமகால எழுத்தாளர்கள் வரிசைகட்டி நின்றார்கள். இருக்கிறேன்.
ஸ்.ராமகிருஷ்ணனையும், ச.தமிழ்ச்செல்வனையும், ஜெயமோகனையும், இமயத்தையும், சாருநிவேதாவையும், பவாசெல்லத்துரையையும், பாரதிகிருஷ்ணகுமாரையும் மிகத்தாமதமாகத்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அவர்களின் எழுத்து வேறுமாதிரியானது என்பதோடு இல்லாமல் திரும்பத்திரும்ப வாசிக்க வைக்கும் வசீகரம் அந்தப் புத்தகங்களில் உண்டு என்பதை உணர்ந்துகொண்டேன்.
இதைத்தான் வாசிக்கவேண்டும் என்ற எவ்வித வரைமுறையையும் நான் வைத்துக்கொள்வதில்லை. இதையெல்லாம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்க இளமைப் பருவத்தில் கிடைத்த நட்புகள் தற்போது இல்லை.
அப்படியே தப்பித் தவறி யாரேனும், இதையிதையெல்லாம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்கும் புத்தகங்களில் எல்லாவற்றையும் நான் வாசிப்பதில்லை. ஏனென்றால் அவர்களது ரசனை வேறு. எனது ரசனை வேறு. நானே தேர்ந்தெடுத்த புத்தகங்களில் என்னை ஏமாற்றி சூடுபோட்ட புத்தகங்கள் ஏராளம். ஒருவேளை காலப்போக்கில் எனது ரசனை சற்றே மாறியிருக்கலாம். அல்லது அந்த எழுத்து என்னைக் கவராமல் போனற்கு ஏராளமான காரணமிருக்கலாம்.
மின்னிதழில் எழுதப்படும் எழுத்துக்கள் என்னை ஈர்க்காமல் இல்லை. ஆனால், மொபைல் ஃபோனிலும், லேப்டாப் வெளிச்சத்திலும் வாசிக்கும்போது என் கண்கள் சிலபக்கங்களைத் தாண்டுவதற்கு முன்னதாகவே சோர்ந்துபோய் விடுகிறது. அதுமட்டுமல்ல, மூடிவைத்த பக்கங்களில் இருந்து மீண்டும் தொடர்வது அத்தனை சுலபமாக இல்லை..
தற்போதெல்லாம், நாவல்களும் சிறுகதைகளும் வாசிப்பது குறைந்திருக்கிறது. சமகால எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் எனக்கு அறிமுகமாகிறார்கள். அவர்கள் எழுதிக்கொண்டே அரசியல், இலக்கியம், சமூகம், ஊடகம், என்று வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் எழுத்துக்களையும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது எனது வாசிப்பு.
இன்னும் வாசிக்கவேண்டும். ஒரு நாளுக்கு இத்தனை பக்கங்கள் என்று வாசித்துக்கொண்டிருந்த என்னை சமீபகாலமாக மொபைல் ஃபோன் எனது மதிப்புமிகு நேரத்தை திருடிக்கொண்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
வெறும் காட்சிஊடகங்களை ஒருகட்டத்திற்கு மேல் மீள்நினைவுபடுத்தி கூறவும் முடியவில்லை. ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் இடமளிப்பதாகவும் தெரியவில்லை.
பலரும் என்னை கேட்கும் கேள்வி எப்படி இத்தனை புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. புத்தக வாசிப்பு என்பது மனம் சார்ந்தது. புத்தகங்களின்மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பு சார்ந்தது.
நான் வாசிக்கும் புத்தகங்கள் என்னோடு வெறுமனே வாய்மூடிக்கொண்டு வருவதில்லை. செல்லுமிடமெல்லாம் என்னோடு தொணதொணத்துக் கொண்டே வழித்துணையாக வருகிறது. எந்த மேடை ஏறிப்பேசினாலும் எனக்கு குறிப்பெடுக்க புத்தகங்கள்தான் உடன்வருகிறது.
வாசிக்கும் பல புத்தகங்கள் என்னோடும் என் கொள்கையோடும் முரண்பட்டாலும் என்னிடம் கோபித்துக்கொண்டு நிர்கதியாய் என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டு விலகிச் செல்வதில்லை.
நான் வெளியேற்றும் மூச்சுக்காற்றில் கொஞ்சம் புத்தகம் சுவாசித்துக்கொண்டும், புத்தகம் வெளியேற்றும் மூச்சுக்காற்றை நான் சுவாசித்துக்கொண்டும் ஒருவருக்கு வழித்துணையாய் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். பேரமைதியைக் கொண்டாடிக்கொண்டும் புலம்பல்களைப் புறம்தள்ளிக்கொண்டும் சென்றுகொண்டே இருக்கிறோம்.
எந்த நிகழ்வாக இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்ல புத்தகங்களை விட்டால் நான் எதைப் பற்றிப் பேசமுடியும்? எனக்கு வழித்துணையாய் வந்த புத்தகங்கள் ஏராளம் இனி வரப்போகும் புத்தகங்களும் ஏராளம். வயோதிகத்தில் வதைபட்டாலும் வழித்துணைக்கு புத்தகமே உடன்வர வரம்வேண்டும் தோழர்களே.
பெண் குயிலின் பெரும்பாடு – வே. சங்கர்
சூழலியல் கட்டுரை
இப்பூமிப்பந்தின் பூர்வகுடிகளான பறவையினத்திற்கென்று ஒரு வசீகரமுண்டு. அதன் உடலமைப்பு, சிறகின் வண்ணம், குரலின் மென்மை, கூடமைக்கும் முறை, இணையைக் கவரும் உக்தி, பறக்கும் தன்மை என்று சொல்லிக்கொண்டே செல்லலாம்.
பறவைகளே பரவசப்பட்டுப்போகும் அளவுக்கு தமிழில் கவிதைகள் ஏராளம். மெல்லிசையின் ஆதிநாதம்கூட பறவைகளின் கீச்சுக்குரலில் இருந்தே தோன்றியிருக்கவேண்டும் என்பது என் கணிப்பு.
சங்ககாலம் தொட்டே பறவைகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அகண்ட வானின் வாசலை வண்ணமயமாக்குவது வசந்தகாலப் பறவைகளைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்?.
அதிலும், கூவும் குயிலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அடர்கருப்பு அழகுக்கும், தேன்தடவிய குரலுக்கும் குயில்தானே ஒப்பீடு!. இசைபாடும் பறவைகள் நாட்டுக்கு நாடு ஏராளமாக வரிசைகட்டி நின்றபோதும், அவ்வரிசையில் முதலிடம் பிடிப்பது குயிலாகத்தான் இருக்கமுடியும்.
குயில் என்றவுடனே குழந்தைக்கும் நினைவில் நிற்பது, மனதை இதமாய் வருடும் மந்திரக்குரல்தான். காவியம் படைக்க கிளர்ந்தெளும் கவிஞர்களுக்குக்கூட அதன் நிறமும், காற்றின் வழியே வழிந்தோடும் அதன் குரலும், மனதை மையல்கொள்ளும் ராகமும். இதயம் தொட்டு மென்இதழ் பதிக்கும் இசையும் அவர்களது எழுதுகோலுக்கு ஊற்றப்படும் உற்சாக ’மை’..
எத்தனைதான் இருந்தாலும், ஒன்றைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாதவரை, அதன்மீது காழ்புணர்வும் எதிர்மறை சிந்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக எழுவது இயல்புதானே!.
குயிலுக்குக் கூடுகட்டத்தெரியாது, காக்கையை முட்டாளாக்கி அதன் கூட்டில் முட்டையிட்டுவிட்டு பொறுப்பில்லாமல் பறக்கும் சுயநலமிக்க பறவை என்றெண்ணம்தான் சிலரது பொதுப்புத்தியை விட்டு விலகாமல் இருக்கிறது.
அதைவிட, குயிலின் குரலைக் கேட்டவரைவிட அதை நேரில் பார்த்தவர்கள் மிகக்குறைவே. காற்றில் கசிந்து ஒவ்வொருவரின் காதை நிரப்பும் குரலுக்குச் சொந்தம் ஆணா? அல்லது பெண்ணா? என்ற சந்தேகம் என்போன்றோர்க்கு எப்போதுமே உண்டு.
இத்தனை இனிமையான குரல் நிச்சயமாக பெண்குரலாகத்தான் இருக்கும் என்றுதான் நான்கூட பலநாட்களாய் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், உண்மையில் அடர்மரங்களில் அமர்ந்துகொண்டு பெண் குயிலின் கவனத்தைக் கவரத்தான் இத்தனை இனிமையாகப் பாடிக்கொண்டிருக்கிறது ஆண்குயில் என்பது மிகத் தாமதமாகத்தான் தெரியவந்தது..
ஆண்குயில் பெரும் குரலெடுத்துக் கூவிக்கொண்டே இருக்கும். பெண்ணில் சம்மதத்திற்கு ஏங்கிக்கொண்டே இருக்கும். அதை ரசித்தாலும் உடனே ஒத்துக்கொள்ளாமல் நீண்ட நேரம் ஏங்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்குமாம் பெண்குயில்.
ஒருகட்டத்தில் ஆணின் குரலில் மையல்கொண்ட பெண்குயில். அதன் சூட்சும அழைப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக பெண்குயிலும் தன் பங்குக்கு சோகம் இழையோடும் மெல்லிய எதிர்குரலில் சம்மதத்தைத் தெரிவிக்கும்.
பிறகென்ன?, இருவரின் கண்ணசைவில் காதல் கரைபுரண்டோடும். அடர்ந்த மரக்கிளைகளில் அமர்ந்தபடியே கானக்குரலில் கலந்துகட்டிக் கவிதை படிக்கும். இணைபிரியா இருதலைக்காதல் கூடி, பூக்கள் பூத்துக்குலுங்கும் ஐந்துமாத காலமும் இனப்பெருக்கத்திற்கு அச்சாரமிட்டுக்கொள்ளும்.
மேடிட்ட அடிவயிற்றில் உயிர்தோன்றியதும், இனிமையாக கழியவேண்டிய தாய்மைப் பருவம் பதற்றம் கொண்டதாகவே மாறிப்போகும். சுவாரசியமான காதல்கதையில் வில்லன் குறுக்கிடுவதுபோல் இயற்கை, பெண்குயிலுக்கு மட்டும் இடைவிடாமல் ஓரவஞ்சனை செய்யும்.
ஆம், பெண்குயிலின் வாழ்வியலும் வசந்தகாலமும் வாடிவதங்கி சொல்லொண்ணாத் துயரத்தில் துண்டாடப்படும். தன் இனத்தை விருத்தி செய்யவும் பாதுகாக்கவும் எல்லா உயிரினங்களுக்கும் கூடொன்று வேண்டுமல்லவா!
ஆனால், துயரத்திலும் துயரம் கூடுகட்டவும்தான் இட்ட முட்டையை அடைகாக்கவும் தெரியாத பறவையினமாகக் பெண்குயில் பிறந்ததுதான். மாற்றான் கூட்டில் தன் சந்ததியை யாரையோ நம்பி வளர்க்கவேண்டிய உளவியல் சிக்கலும், பெண்ணினத்தின் பெரும்பாடும் இணைந்தே சந்திக்கிறது பெண்குயில்.
தாய்மைஅடைந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவித்துத் தீர்ப்பதற்குள் ஏதேனும் ஒரு காக்கையின் கூட்டை உடனடியாகத் தேடவேண்டும். கூடுகிடைத்துவிட்டால் போதாது. ஆண்குயில் கூட்டிலிருக்கும் காக்கையின் கவனத்தைத் திசைதிருப்பி நெடுந்தொலைவுக்கு அழைத்துச் செல்லவேண்டும்.
அதற்கு ஒரே வழி காக்கையைக் கோபமூட்டுவதுதான். கோபம் கொண்ட பெண் காகம் ஆண்குயிலைத் துரத்திச் சென்று திரும்புவதற்குள் பெண் குயில் அக்கூட்டில் பரபரக்கும் இதயத்துடிப்போடு முக்கி முனகியேனும் முட்டையிட்டுவிட வேண்டிய நிர்பந்தம். அது சுகப்பிரசவமா அல்லது குறைப்பிரசவமா என்று பார்த்து ஆறுதல் தேடவெல்லாம் அவகாசமிருக்காது.
இட்ட முட்டைகளை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே அலங்கோலமான காக்கைக் கூட்டின் முட்டைநெரிசலில் சில முட்டைகள் தவறிக்கூட கீழே விழுந்துவிடலாம்.
யார்கண்டது அது குயிலின் முட்டையா அல்லது காக்கையின் முட்டையா என்று? கிடைத்த சந்தர்ப்பத்தில் முட்டையிட்டதே பெரும்பாடு. அதுமட்டுமா?, ஆண்குயிலைத் துரத்திச் சென்ற காக்கை திரும்பிவருவதற்குள் அதன் கண்களில் அகப்படாமல் தப்பிக்கவேண்டும்.
கோபத்தோடு தொலைவில் திரும்பி வரும் காக்கையின் கண்களில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். வாழ்க்கையில் எப்போதாவது சோதனை என்றால் எதிர்கொள்ளலாம். எப்போதுமே சோதனையென்றால் என்னதான் செய்ய?
ஒருவேளை காக்கைக் கூடு கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது ஒரு பறவையின் கூட்டில் முட்டையிடவேண்டிய பரிதாபநிலை பெண்குயிலுக்குத்தான் உண்டு. இதுபோலவே, குயிலைவிட உருவத்தில் சிறிய சின்னான் பறவையின் கூட்டில் முட்டையிட முடியாமல் திரும்பிய துரதிஷ்டமான தருணங்கள் ஏராளம்.
காக்கையின் கூடு கரடுமுரடாய் முள், குச்சி, கம்பி என்று கிடைத்ததையெல்லாம் கொண்டு கட்டியிருந்தாலும், ஏதோ ஒருவகையில் பெண்குயிலுக்கு முட்டையிட காக்கையின் கூடுதான் தோதாக இருக்கிறது. ஒருவேளை காக்கை தன்குஞ்சுகளையும் சேர்த்துப் பத்திரமாக அடைகாத்துப் பறக்கவிட்டுவிடும் என்ற நம்பிக்கையால்கூட இருக்கலாம்.
காக்கையின் முட்டையைப்போலவே நிறத்தில் ஒன்றாக இருப்பினும் அளவில் குயிலின் முட்டை சிறிதுதான். ஆனால், அளவும் சரி, எண்ணிக்கையையும் சரி காக்கைக்கு பாகுபடுத்தத் தெரியாதது ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லாவிட்டால் குயிலின் இனம் எப்போதோ காணாமல் போயிருக்கும்.
நிறைந்து வழியும் காக்கையின் கூட்டிலிருந்து குயிலின் முட்டைகள் இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே பொறித்துவிடும். காக்கையின் குஞ்சுவைப்போலவே நிறத்தில் இருப்பது ஒன்றும் பெரியவிசயமில்லை, குஞ்சாக இருக்கும்போது கரகரத்த காக்கையின் குரலை ஒத்த குரலில்தான் குயிலின் குஞ்சுகளும் ஒலிஎழுப்புகின்றன.
ஆனால், குயில் குஞ்சுகள் வளர வளரத்தான் பிரச்சனை தொடங்கும். ஆண்குயிலின் நிறம் மிளிரும்கருப்பாக இருப்பதால் காக்கை, தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற ரீதியில் அன்புசெலுத்தும்.
ஆனால், பெண்குயில் வளர வளர பழுப்பு நிறச் சிறகும், மெல்லிய வெள்ளைக் கோடுகளும், பொறிப்பொறியான புள்ளிகளும் தோன்றத்தோன்ற காக்கையின் சந்தேகத்தை வலுப்படுத்திவிடும். என்னதான் தன் கூட்டில் தன் இனக்குஞ்சுகளோடு பிறந்திருந்தாலும் பெண்குயிலின் மேல் எக்கச்சக்க வெறுப்பேற்பட்டு கொத்தத் தொடங்கும்.
முட்டையிலிருந்து வெளிவந்தது தொடங்கி, வயிறார பசிக்கு உணவூட்டிவந்த காக்கையைத் தன் தாய் என்று நம்பிக்கொண்டிருந்த பெண்குயில் ஏன் தன்னைத் தொடர்ந்து கொத்துகிறது என்பதைக்கூட புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும். வலியும் வேதனையும் பொறுக்கமுடியாமல், பெண்குஞ்சு ஒரு கட்டத்தில் ஏக்கத்தோடு அந்த கூட்டிலிருந்து பிரிந்து செல்ல நேரிடும்.
சினிமாவில் வருவதுபோல குடும்பப் பாட்டு என்ற ஒன்று இருந்தபோதும் சொந்தத் தாய் தகப்பன் யார் என்ற அடையாளம் தெரியாமல் தனித்துவாழத் தொடங்குகின்றன பெண் குயில்கள்.
இயற்கையின் குதுகளிப்பில், பருவம் அடைந்ததும் ஆண்குயிலின் இடைவிடாத குரலுக்கு சோகம் இழையோடும் மெல்லிய எதிர்குரலில் சம்மதம் தெரிவிப்பதும் இனிமையான இனப்பெருக்க காலம் முடியுமுன்னே ஏதேனும் ஒரு காக்கையின் கூட்டையோ அல்லது தோதான மற்றொரு பறவையின் கூட்டையோ தேடுவதுமாகவே கழிகிறது பெண்குயிலின் காலம்.
உண்மையில், பறவையினத்தில் பெண்குயிலின் பாடு பெரும்பாடுதான் தோழர்களே.
அறிவியல் எனக்குத் தெரியாது – வே. சங்கர்
இந்த கொரானா காலத்தில், ஜூம் மீட்டிங், கூகுள் மீட்டிங், ஸ்ட்ரீம் லைவ் மீட்டிங் என்று ஏதேதோ சொல்கிறார்கள். எல்லாமே எனக்கு மிகமிகப் புதிது. அவ்வளவு தொழில்நுட்ப அறிவெல்லாம் எனக்கு எதற்கு என்ற அலட்சியம் ஒரு காரணமாக இருக்கலாம்.. அறிவியல் தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் 100 புத்தகங்களை அறிமுகம் செய்யப்போவதாக முதலில் ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் வலம் வந்தது.
அதை ’பாரதி டிவி’யில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்போவதாக அடுத்த செய்தி வந்தது. தோழர் கலைக்கோவன் ஒரு மாலைவேளையில் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, ”நீங்க ஒரு புத்தகத்தைப் பத்திப் பேசறீங்க” என்றார். “திடுதிப்பென்று சொன்னால் எப்படி?” என்றேன் நான்.
வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை மீண்டும் நினைவுகூர்ந்தார். “நீங்க அன்றொரு நாள், விண்வெளி மனிதர்கள் என்ற புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தீங்க இல்ல!. அதையே பேசிடுங்க” என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டார்.
ஒருமுறை நான் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களுடன் அறிவியல் குறித்து உரையாட இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் சசிக்குமார் வந்திருந்தார். அங்கேதான் அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எப்போதும்போல ஒரு நூலாசிரியரைப் பார்த்ததும் வரும் பரவசத்தைவிட நானும் ஒரு எழுத்தாளன் என்று அறிமுகம் செய்துகொள்வதில் ஒருவித தற்பெருமை இருக்குமல்லவா! அப்படித்தான் எனது நூல்களை அவர் கையில் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டது.
போகிறபோக்கில் நான் ஒரு நூல் விமர்சகர். உங்களது நூலுக்கு மதிப்புரை, அல்லது விமர்சனம் இதில் ஏதேனும் ஒன்றை எழுதித் தருகிறேன் என்றும் கொஞ்சம் ஓவர் பில்டப்போடு உறுதியளித்திருந்தேன். ஆனால், இன்றுவரை மதிப்புரைக்கும் விமர்சனத்திற்கும் உள்ள வேறுபாடு சத்தியமாகத் தெரியாது.
ஒருவழியாய் முட்டி மோதி எனக்குத்தெரிந்த அறைகுறை அறிவில் ஒரு விமர்சனம் என்ற பெயரில் ஒன்றை எழுதி அனுப்ப, அதை பெரிய மனதுபண்ணி பாரதி புத்தகாலயத்தின் இணையதளமான புக் டே டாட் இன்னில் வெளியிட்டிருந்தார்கள். அதைத்தான் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்றபடி, எனக்கும் அறிவியலுக்கும் வெகுதூரம். அதைவிட நான் எழுத்தாளனிலும் சேர்த்தி இல்லை. பேச்சாளனிலும் சேர்த்தி இல்லை. தெளிவாகச் சொன்னால் இரண்டிலும் நான் அரைவேக்காடு என்பது என் நெருங்கிய வட்டத்திற்குத் தெரியும்.
எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்ற எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இங்கே பேசுகிறேன். அதில் ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும் தோழர்களே என்ற முன்னுரையோடு மார்ச் 3 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் பேசத்தொடங்கிவிட்டேன்.
எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் 20 நிமிடங்கள். நான் முன்னப்பின்னே கேமராவைப் பார்த்துப் பேசிப் பழக்கம் இல்லாததால் எடுத்துவைத்திருந்த குறிப்புகளைப் பார்த்தே கடைசிவரை பேசினேன்.
தற்போது நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை சொல்லிவிடுகிறேன். நான் ஏற்கனவே இஸ்ரோ விஞ்ஞானிகளான சசிக்குமார் மற்றும் பா. அரவிந்த் அவர்களின் விண்வெளி மனிதர்கள் நூலை வாசித்திருந்தேன். அவ்வளவுதான் எனக்கும் இந்தநூல் பற்றி பேசுவதற்கான தகுதியும் என்ற ரீதியில் தொடங்கினேன்.
எனது உரை இப்படிப்போனது. “எனது அறிவியல் மீதான கண்ணோட்டம் அதன் பாதிப்பு பற்றிய எண்ணங்களும் வேறானது. அறிவியல் என்பது மாற்றங்களைக் கண்டுகொண்டே இருப்பது. அதற்கு ஒரு முடிவே கிடையாது. ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். பிறகு அதற்கு மாற்றாக மற்றொன்றைக் கண்டுபிடிப்பார்கள். பெருமையாக பேசப்பட்ட ஒன்று குறுகிய காலத்தில் பழையது என்ற பெயர் சூட்டப்படும். புதியது என்று பெயர் எடுத்த மற்றொன்றும் சில காலங்களில் பழையது ஆகிவிடும். பழசு என்று சொல்லப்பட்ட ஒன்று சிலமாறுதல்களுடன் புதிதாக வெளிவரும். ஆகவே நிரந்தரம் இல்லாத ஒன்றுதான் அறிவியலா? என்ற கேள்விக்கு எனக்கு எப்போதும் பதில் கிடைத்ததே இல்லை”.
இன்னும் நூறு ஆண்டுகளில் நாம் விண்வெளியில்தான் வாழப்போகிறோம், நிலாவில் ப்ளாட்போட்டு விற்கப்போகிறார்களாம், செவ்வாய் கிரகத்திலே தண்ணீர் இருக்கிறதாம். அனேகமாக, அங்கேதான் நம் பேரப்பிள்ளைகள் வாழப்போகிறார்களாம் என்பது போன்ற உரையாடல்களைக் கேள்விப்படும்போது, உண்மையிலேயே இதெல்லாம் சாத்தியமா? இல்ல சும்மாவாச்சும் அடிச்சு விடறாங்களா? என்கிற சந்தேகம் இயல்பாகவே வரும்.
அப்புறம், இந்த விண்வெளி, விண்வெளி என்று அவ்வப்போது செய்திகளில் எல்லாம் வருகிறதே அதெல்லாம் எப்படி இருக்கும்? விண்வெளி ஓடம் என்கிறார்கள், ராக்கெட் என்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன வித்தியாசம்? அதுமட்டுமல்ல, விண்வெளிக்குப்போகிற ஆசாமிகளை எல்லாம் பார்த்தால் நாம போட்டுக்கொண்டு இருக்கும் உடை மாதிரி இல்லையே!, நாம அப்படியே ஹாயா ஒரு லுங்கியும் பனியனும் போட்டுக்கொண்டு வீட்டிலே இருப்பதைப்போல், விண்வெளிக்குப் போனவுடனே அந்த உடையைக் கழற்றிவிட்டு இருப்பார்களா? இல்லை நாள் முழுக்க இந்த ட்ரஸ்ஸோடதானா?
உச்சா வந்தா என்ன பண்ணுவாங்க? எத்தன லிட்டர் தண்ணி கொண்டுபோவாங்க? என்ன சாப்பிடுவாங்க? எதாவது வாய்க்கு ருசியா சாப்பிட வேண்டுமெனத் தோன்றினால் விண்வெளியில் சமையல் செய்து சாப்பிடமுடியுமா? நிலாவுக்குச் சென்றால், யாருக்கோ நீண்ட நாளாக வடை சுட்டுக்கொண்டு இருக்கும் பாட்டியை மீட் பண்ணமுடியுமா? அந்த ஊரு வடை எப்படி இருக்குன்னு ஒருகை பார்க்க வேண்டும் அல்லவா!, இப்படி ஏராளமான கேள்விகள் மற்றும் எண்ணங்கள் என் சின்ன வயசிலே தோன்றியிருக்கிறது.
இன்றைய குழந்தைகளுக்கெல்லாம் ஏராளமான விசயங்கள் தெரிந்திருக்கிறது.. படிக்கும்போதே, நீ என்னவாக வேண்டும்? என்று கேட்டால் ’நான் அஷ்ட்ரானட் ஆகவேண்டும்’ என்று மிக எளிதாகச் சொல்லுகிறார்கள். அஷ்ட்ரானட் ஆகனும்னா என்ன வழிமுறை என்று இன்றுவரை எனக்குத் தெரியாது.
ஆனால், உண்மையில் இந்த விண்வெளி மனிதர்கள் என்ற புத்தகத்தை வாசித்த பிறகுதான் ஏராளமான கேள்விகளுக்கு விடை தெரிய ஆரம்பிச்சது.. ஏனென்றால், அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாசித்தால் ஒன்று, ஆங்கிலத்திலே இருக்கும் அல்லது பாடப்புத்தகத்தை மீண்டும் படிக்கிறமாதிரி ஒரு உணர்வு தோன்றும். வெளிநாட்டுப் புத்தகங்களை மொழிப்பெயர்ப்பு செய்திருந்தால் அவ்வளவுதான். அந்த மொழியை உள்வாங்கி புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
ஆனால், இந்தப் புத்தகம் அப்படி இல்லை. ஒரு பதினேழு பதினெட்டு கட்டுரைகளில் எல்லா சந்தேகங்களுக்கான விடையாக இருப்பது ஒருவிதத்தில் பெரிய சந்தோசம். முதல் அத்தியாயத்திலேயே விண்வெளி என்றால் என்ன? நாம் ஏன் விண்வெளிக்குப் போகவேண்டும்? அதனால் என்ன யூஸ்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்துவிடுகிறது. ஒரு கதை சொல்லும் பாங்கில் எழுதியிருப்பதால் வாசிப்பதற்கு மிக எளிதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு விண்வெளியைப் பற்றிய தகவல்களை சுலபமாக சொல்வதைப் போல இருப்பதால் ஒரு குழந்தையை வானவியல்மீது மிகப்பெரிய ஈடுபாட்டை தந்துவிடமுடியும்.
பிறகு, ஏவூர்தி அதாங்க ராக்கெட் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு, மைசூர் மன்னர்களான ஹைதர் அலியும் அவரது மகன் திப்புசுல்தானும் உலகிலேயே முதன் முதலில் ராக்கெட்டுகளைப் போரில் பயன்படுத்தி எதிரிகளை நடுநடுங்க வைத்தார்கள் என்று வரலாறு புத்தகத்திலே படித்திருக்கிறோம். அந்த ராக்கெட்டும், இப்போதெல்லாம் டிவிகளிலும் செய்தித்தாள்களிலும் சொல்வதைப்போல இரண்டும் ஒன்றா? அல்லது வேறு ஏதாவதா? போன்ற கேள்விகளுக்கு பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது..
அதாவது, தாக்கும் ராக்கெட்டை ஏவுகணை என்கிறார்கள். ஆங்கிலத்தில் மிஸ்சைல் என்ற பெயராம். விண்ணுக்கு செயற்கைக்கோளைக் கொண்டுசெல்கிற ராக்கெட்டை ஏவுவாகனம் என்கிறார்கள்.. அதற்கு, ஆங்கிலத்தில் லாஞ்ச் வெய்க்கில் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மனிதர்கள் பயணிக்கும் ராக்கெட்டிற்கு விண்ணூர்தி, விண்கலம், விண்வெளி ஓடம் என்று ஏராளமான பெயர் வைத்திருக்கிறார்கள் போலும்.. இவற்றையெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் எனக்கே ஓரளவுக்குத் தெளிவு ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இரண்டாம் உலகப்போரில் அதிக நாடுகளை கைப்பற்ற ஹிட்லர் பல ஆயிரம் வி2 ஏவுகணைகளை உருவாக்கியிருந்தாராம். செப்டம்பர் 1943 லிருந்து மார்ச் 1944 வரையிலான ஆறுமாதத்திலே சுமார் 3200 வி2 ஏவுகணைகள் செலுத்தப்பட்டிருக்கு. ஹிட்லரின் இந்த முரட்டுக் குணம்தான் அதிநவீன ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இரண்டாம் உலகபோருக்குப் பிறகு உலக வல்லரசுநாடுகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் யார் ஹிட்லரின் வி2 ஏவுகணைத் திட்டத்தை ஆட்டையப் போடலாம் என்று பெரிய போட்டியே போட்டிருக்கிறார்கள்.
பேப்பர் கிளிப்ங் என்கிற ரகசிய ஏற்பாட்டின்படி 500க்கும் அதிகமான விஞ்ஞானிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அமெரிக்கா கடத்தியிருக்கு. வெர்னர் வான் பிரவுன்ங் என்கிறவர்தான் வி2 ஏவுகணைத் தயாரிப்பிலே முதன்மை விஞ்ஞானியா இருந்தவராம். இவர் வடிவமைத்த சார்ட்டன்-வி என்கிற ஏவுவாகனம் மனிதர்களை 1969 லிருந்து 1972 வரை ஆறுமுறை நிலாவுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்கு.
இது இப்படியிருக்க, அமெரிக்காவுக்குப் போக விருப்பம் இல்லாத விஞ்ஞானிகளில் சிலர் சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் செர்கெ கோரோலேவ்.. இவர் சோவியத் யூனியன் போனவுடனே செய்த முதல் காரியம் வி2 ராக்கெட்டை மறுபடியும் உருவாக்கியதுதான். உலகின் முதல் இரண்டு செயற்கைக்கோள்களான ஸ்புட்னிக்1 மற்றும் ஸ்புட்னிக்2 கேள்விப்பட்டிருக்கோம் அல்லவா! அந்த இரண்டையும் இவருடைய தலைமையிலதான் தயாரிக்கப்பட்டிருக்கு.
உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்1 என்கிற செயற்கைக்கோளை 1957 ல் சோவியத் யூனியன் விண்வெளிக்கு அனுப்பியது. அதன்பிறகு, இந்த விண்வெளிப்போட்டி பனிப்போரா மாறிவிட்டது. நீ பெரிய ஆளா இல்ல நான் பெரிய ஆளா என்கிற போட்டியில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் விண்வெளிப் போட்டியில் இறங்கியது. இந்தக் கதையெல்லாம் நமக்கு ஓரளவுக்குத் தெரியும்.
முதல் முதலில் விண்ணுக்குச் சென்ற மனிதர் யார் என்றால் அவர்தான் யூரி காகரின். இவர் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் முதல் விண்வெளிவீரர் யார் என்று பார்த்தால், அவர்தான் ஆலன் ஷெபர்டின். யூரி காகரின் ஏப்ரல் 12, 1961 ஆம் தேதி, காலை 6 மணி ஏழு நிமிடத்திற்கு விண்ணுக்கு ஏவப்பட்டார். அவர் திரும்பவும் புவியை 108 நிமிசம் கழிச்சு 7 மணி 55க்கு திரும்ப வந்தடைந்தார்.
யூரி காகரின் விண்ணுக்குப் போய் வந்த 23 நாட்களிலேயே அமெரிக்காவின் முதல் விண்வெளி மனிதன் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கு. மே5, 1961 ஆம் தேதி ஆலன் ஷெப்பர்ட் விண்வெளிக்குப் போகிறார். அவர் 15 நிமிடங்கள் 22 விநாடிகள் புவியிலிருந்து 188 கிலோமீட்டர் உயரம் வரை சென்றுவிட்டு நேராகத் தரை இறங்கிவிட்டார்.
பிறகு, 1948-ல் சோவியத் யூனியன் சவுண்டிங் ராக்கெட் எனப்படும் ஏவு வாகனத்தை அனுப்பும் திட்டத்தை தொடங்கியது. ஆகஸ்ட் 1951 ஆம் வருடம் ஒரு நாய்க்குட்டியை 110 கிலோமீட்டர் உயரம் வரை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நாய்க்குட்டிதான் விண்வெளிக்கு முதன்முதலாகச் சென்ற உயிரினம்.
அடுத்ததாக, 1957 அக்டோபர் 4ஆம் தேதி உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1 ரஷ்யாவினால் விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடனே அமெரிக்காவால் சும்மா இருக்க முடியுமா? எப்படியாவது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்திட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே ரஷ்யா லைக்கா என்கிற நாய்க்குட்டியை விண்வெளிக்கு அனுப்பி அடுத்த சாதனையை படைத்தது. இதேபோல 1960 ல் அமெரிக்கா ஒரு சிம்பன்சி குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது.
லைக்கா செல்வதற்கு முன்பாக பல விலங்குகள் விண்வெளிக்குப் சென்றிருந்தாலும் முதல் முதலாகப் புவியைச் சுற்றிவந்த உயிரினம் இந்த லைக்கா நாய்க்குட்டிதானாம். நாய்க்குத் தேவையான உணவும் அசையாமல் இருப்பதற்கான நாற்காலியும் அமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதுவும் பத்திரமா விண்வெளியைச் சுத்தி வந்திருந்தது. ஆனால் பத்துநாளுக்கான உணவுப்பொருட்கள் வைக்கப்படிருந்த போதிலும் அது இரண்டாவது நாளே இறந்துவிட்டது என்பது ஆய்வில் தெரியவந்தது..
1947 லிருந்து 1957 வரை குரங்கு, நாய் என்று ஏராளமான விலங்குகள் விண்ணுக்கு அனுப்பப்பட்டிருக்கு. முதன் முதலாகப் புவியை வெற்றிகரமா வலம்வந்த செயற்கைக்கோள் ஸ்புட்னிக்-1 தான். இது மூன்று மாதத்தில் பூமியை 1440 முறை வலம் வந்திருக்கிறது. அமெரிக்காவும் தன் பங்குக்கு தனது முதல் செயற்கைக்கோளான எக்ஸ்புளோரர் 1 ஐ 1958, ஜனவரி 31 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது.
அமெரிக்கா தங்கள் நாட்டு விண்வெளி மனிதர்களை அஸ்ட்ரோநாட் என்றும், ரஷ்யா காஸ்மோநாட் என்றும் அழைக்கிறார்கள்.. 1959லிருந்து 1961 வரை சுமார் இருபது விண்கலங்கள் ஏவப்பட்டிருக்கு. அதில் பாதிக்கும் மேல் தோல்வியில் முடிந்திருக்கிறது. கூப்பர் என்கிற விண்வெளி வீரர் பூமியை 22 முறை சுற்றி வந்திருக்கிறார். சுமார் 34 மணிநேரம் விண்ணில் இருந்திருக்கிறார். பூமியிலிருந்து அதிகபட்சம் 267 கிலோமீட்டர் தொலைவுக்கு போயிருக்கிறார். கேட்கிறபோதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அல்லவா!
அப்பல்லோ – 11 திட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் என்கிற மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். காலின்ஸ் கட்டுப்பாட்டுக் கூடத்தில் தங்கி நிலவின் சுற்று வட்டப்பாதையில சுத்தி வருவது என்றும், நிலவில் விண்வெளி ஓடத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இரண்டுபேரும் பயணம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் குழுத் தலைவராக நீல் ஆம்ஸ்ட்ராங்கை நியமித்தார்கள். யார் நிலவில் இறங்குவது என்கிற கேள்விக்கு நாசா தெளிவாக இருந்தது. நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதலில் நிலவில் கால் வைக்க வேண்டும் என்று தீர்மானமா இருந்தார்கள்.
அதேபோலவே 1969 ஆம் வருடம் ஜூலை மாதம் 21 ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடியை நிலவில் பதித்தார். நிலவில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க அதிபருடன் தொடர்புகொண்டார். இவர்கள் 22 கிலோ எடையுள்ள பாறைகள், மற்றும் மணல் போன்றவற்றை சேகரித்தனர். நிலவில் இவர்கள் செலவிட்ட நேரம் இரண்டு மணிநேரம் 31 நிமிடங்கள்.
அடுத்ததாக, விண்வெளி நிலையம், ஸ்பேஸ் ஸ்டேசன் என்பது விண்ணிலிருந்தே பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வசிப்பிடம் அல்லது கிராமம் என்றும் சொல்கிறார்கள்.. இதுவும் ஒருவகையான செயற்கைக்கோள்தானாம். ஆனால், இதில் மனிதர்கள் சிறிது காலம் விண்வெளியில் தங்கியிருக்கத் தேவையான எல்லா வசதிகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கொடுக்கப்பட்டப் பாதையிலிருந்து ரொம்பதூரம் விலகிச் செல்லவோ பூமிக்குக் கொண்டுவரவோ வசதிகள் கிடையாது என்றும் சொல்கிறார்கள். இந்த விண்வெளி நிலையத்துக்குப் போக பயண விண்கலங்களைத்தான் பயன்படுத்த வேண்டுமாம்.
இது எதற்காகவென்றால், தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இடையில் பயணியர் விடுதியில் தங்கிவிட்டு மறுபடியும் பயணத்தை மேற்கொள்வதற்கு இந்த விண்வெளி மையத்தை பயன்படுத்தலாம் என்று நினைத்தார்கள்.
உலகிலேயே முதல் விண்வெளி நிலையம் ரஷ்யா அனுப்பிய சல்யூட்-1 நிலையம்தான். இது 1971 ஆம் வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதி அனுப்பப்பட்டது. சோவியத் யூனியனின் விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களைக் கொண்டு போக அவர்களின் சோயுஸ் விண்கலம் பயன்பட்டது. சல்யூட்-1 நிலையத்தை விண்வட்டத்தில் அதாவது ஆர்பிட்டில் செலுத்தி மூன்று நாட்களில் சோயுஸ்-10 விண்கலம் அனுப்பப்பட்டது. நின்றுகொண்டிருக்கும் ரயில்வண்டியில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதைப் போல ஏற்கனவே விண்ணில் இருக்கும் நிலையத்தில் இந்த சோயுஸ் என்கிற விண்கலத்தை இணைக்கிறது.
இதையெல்லாம் கேட்கும்போது மிகச் சாதாரணமாகத் தெரியும். ஆனால், இந்த நிகழ்வு நடைபெறும்போது இந்த இரண்டு விண்கலங்களும் மணிக்கு சுமார் 28000 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்துகொண்டிருக்குமாம். கேட்கும்போதே பயமாக இருக்கிறதல்லவா!. விண்கலத்திலில் இருக்கும் கருவியைப் பயன்படுத்தி அதனுடைய வேகத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் மற்றும் சுழற்றியும் இணைப்புக் கருவிகளை சரியான பொருத்தத்திற்கு கொண்டுவந்த பிறகு இந்த நிகழ்வு நிகழ்த்தபடும். ஆனால் சோயுஸ்-10 விண்கலம் விண்வெளியில் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், மறுபடியும் பூமிக்கே கொண்டுவர வேண்டியதாகிவிட்டது..
பிறகு, இந்த குறைபாடுகளையெல்லாம் நிவர்த்தி செய்து தொடர்ந்து விண்வெளி ஓடங்களை இணைக்கும் முயற்சி செய்துகொண்டே இருந்தார்கள்.
சோயுஸ் -11 வெற்றிகரமான நிலையத்துடன் இணைத்தார்கள்.. இதில் பயணம் செய்த மூன்றுபேரும் 24 நாட்களில் 383 முறை பூமியை வலம்வந்தார்கள். ஆனால், துரதிஷ்டம் என்னவென்றால், வெற்றியைக் கொண்டாட அவர்கள் பத்திரமா நிலத்துக்கு வரவில்லை. கீழே வரும்போது நிகழ்ந்த விபத்திலே மூன்றுபேரும் இறந்துவிட்டார்கள்.
இதுபோல விண்வெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது விபத்தில் இறந்தவங்களின் லிஸ்ட்டைப் பார்த்தால் மயக்கமே வந்துவிடும்.
விண்வெளி மனிதர்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டபிறகு வலேரி போல்யகோவ் என்பவர் 437 நாட்கள் விண்வெளி ஓடத்திலே தங்கியிருந்திருக்கார். இவர் அதிக நாட்கள் இடைவிடாமல் விண்வெளியில் தங்கியிருந்தவர் என்கிற பெயரைத் தட்டிச்சென்றார்.
1970 களின் இறுதியில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, உலக நாடுகள் விண்வெளியில் சேர்ந்து பணியாற்றும் சூழல் வளர்ந்தது.
முதல் முறை நிலவுக்கு மனிதர்கள் போய்வந்ததன் மேல் இருந்த ஆர்வம் படிப்படியாக மக்களிடம் குறைய ஆரம்பித்ததாலும், நிலவிலிருந்து மண் மற்றும் பாறைகளின் மாதிரிகள் கொண்டுவந்ததைத் தவிர பெரிய அளவில் ஆராய்ச்சிகள் தொடரவில்லை. அதனால், ஒருகட்டத்தில் மனிதனை நிலவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவால் விண்ணில் செலுத்தப்பட்ட ஒரே விண்வெளி நிலையம் ஸ்கைலாப்தான்.
இன்று விண்வெளியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே விண்வெளி நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே. இது அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஆறு விண்வெளி மனிதர்கள் தங்குவதற்கான வசதிகள் இங்கே இருக்கிறதாம்.
ஒரு கிலோ பொருளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கொண்டுசெல்ல 4 லட்சம் ரூபாய்வரை செலவாகிறது என்று சொல்கிறார்கள். அதனால், ஒவ்வொரு முறையும் பூமியிலிருந்து தண்ணீரைக் கொண்டுசெல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, நீரை மறுசுழற்சி செய்யும் கருவிகள் விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதாம். கழிவு நீரை நல்லநீராக மாற்றுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 14 லிட்டர் நீர் இதன்மூலம் பெறப்படுகிறது. இது பூமியில் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் மாதிரியேதான் இருக்கும். ஆனால் இது எதிலிருந்து சுத்தீகரிக்கப்படுகிறது என்று தெரிந்தால் ‘உவ்வே’ என்று’ வாந்திவந்தாலும் வந்திடலாம்.
அதேசமயம் விண்வெளியில நடந்த விபத்துக்கள் ஏராளம். அதில் இழந்த உயிர்களும் ஏராளம். இந்தப் புத்தகத்திலேயே என் மனதுக்குப் பிடித்தமான அத்தியாயம் எதுவென்றால், அது விண்வெளி உடைபற்றியதுதான். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை முழுசாகப் போத்தியிருப்பது போன்றதொரு கவச உடையோடுதான் விண்வெளி மனிதர்களின் போட்டோவைப் பார்த்திருப்போம்.
விண்வெளியில் பயணிக்கும்போது விண்வெளி மனிதர்கள் அணியும் உடை பூமியில் அணியும் உடையிலிருந்து வேறுபடுகிறது. அதைத்தான் விண்வெளி உடை என்று சொல்கிறார்கள்.. விண்வெளியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளின் மாற்றத்தால் மனிதனுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் இருக்க இந்த விண்வெளி உடை பயன்படுத்தபடுகிறது.
நம் மனித உடல் பூமியின் சூழ் அழுத்தத்திற்குப் பழக்கப்பட்டது. நம் உடலைச் சுற்றியுள்ள காற்றழுத்தம் எப்போதும் பூமியில் உள்ளது போலவே இருக்கவேண்டும். உடலைச் சுற்றியுள்ள காற்றழுத்தம் கூடினாலும் ஆபத்து, குறைந்தாலும் ஆபத்து.
கூடினால் உடல் நசுங்கிவிடும். குறைந்தால் உடலின் திரவங்கள் அவற்றின் நாளங்களில் இருந்து தெறித்துவிடும். வழிமண்டல அழுத்தத்தில் 30 விழுக்காட்டிற்குக் கீழே செல்லும்பொழுது நமது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும், தரைமட்டத்திலிருந்து மேலே செல்லச்செல்ல சுமார் 19 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தம் 8 விழுக்காட்டை விடக் குறையும். அந்த அழுத்தத்தில் வெப்பமில்லாமலேயே நம் ரத்தம் ஆவியாகத் தொடங்கும்.
இதுபோன்ற தட்பவெப்ப மாறும் அழுத்த நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள விண்வெளி உடைகள் தேவைப்படுகின்றன. விண்வெளி மனிதர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து அவர்கள் அணியவேண்டிய உடைகள் மாறுபடுகின்றன. விண்வெளி உடைகள் மூன்று விதங்களாக உள்ளன. விண்கலத்தில் இருக்கும்போது அணிந்துகொள்ள ஒருவிதமான உடை. விண்கலத்திலிருந்து வெளியே செல்ல ஒருவிதமான உடை. இந்த இரண்டிற்கும் சேர்த்து ஒரே வகையான உடை என மூன்று வகையான உடைகள் உள்ளனவாம்.
உடை என்றதும் உடனே ஒரு விசயம் எனக்கு நினைவுக்கு வருகிறது, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் தன் பயணத்திற்கு காலை 6 மணிக்கே தயாராகிவிட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையின்படி அந்த திட்டம் இரண்டு மணிநேரத்தில் நிறைவடையும். அவரும் சரியாக 8 மணிக்கு, ஏவுதளத்திற்கு வந்துட்டார். ஏவு ஊர்தி புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அவருக்கு உரிய இடத்தில் உட்காரவேண்டும். அவரும் அதுபோலவே போய் உட்காந்துவிட்டார்.
ஆனால், ஏவு ஊர்தியின் செயல்பாடுகளை கவனிக்கத் தொடங்கியபிறகுதான் ஏதோ ஒரு சின்ன குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. அதனால் உடனடியாக ஏவு ஊர்தியை செலுத்த முடியவில்லை. சுமார் 4 மணிநேரம் காலதாமதம் ஆகியும் குறிப்பிட்டபடி ஏவு ஊர்தி கிளம்பர மாதிரி தெரியவில்லை. நீண்ட நேரம் ஆகிவிட்டதால், அவருக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
அதைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினார். அவருக்கு உடுத்தப்பட்டிருந்த உடையில் அதற்கான வசதி செய்யப்படவில்லையாம்.. ஒரு கட்டத்தில் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ’நான் விண்வெளி உடையிலேயெ உச்சா போகிறேன்’ என்று சொல்லிட்டு போய்விட்டார்.
இதில், என்ன விசேசம் என்றால்,, உடையில் இருந்த மின்சார பொருட்களில் சிறுநீர் பட்டு அதன் செயல்பாடுகள் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பதற்றமாகிவிட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் சுமார் ஒரு மணிநேரத்தில் ஈரப்பதம் ஆவியாகி உடை உலர்ந்துபோய்த் தப்பிவிட்டது. அவரும் அந்த உச்சா போன ட்ரஸ்ஸோடவே பத்திரமாக விண்வெளிக்குப் போன முதல் அமெரிக்கர் என்கிற பேரைப் பிடித்துவிட்டார்.
பூமியில் இருப்பதைப்போல வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை ஒரு புதிய உடை எல்லாம் விண்வெளியில் கிடைக்காது. பூமியிலிருந்து கிளம்பியது முதல் திரும்பி வரும் வரை ஒரே உடைதான் என்பதை நினைவில் கொள்க.
அப்போலோ திட்டங்களில் அணியப்பட்ட உடையை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். அது சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்திருக்கிறது. நல்லவேளையாக, இப்போதைய விண்வெளி வீரர்கள் அணியும் நவீன உடைகள் 40லிருந்து 45 கிலோ எடை கொண்டதாக இருக்கிறதாம்.
சரி அது இருக்கட்டும், சாதாரணமாகப் பேருந்திலோ அல்லது விமானத்திலோ நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்து செல்லும்போது என்ன நிகழும்? நமது கால் வீங்கிவிடும். அல்லவா! இதற்குக் காரணம், ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் உள்ள் நீர் உடம்பின் கீழ்பகுதிக்குப் போய் காலில் சேர்வதால் இப்படி ஆகிறது. இடையிடையே சிறிது தூரம் நடந்தால் அது சரியாகிவிடும். ஆனால், விண்வெளிக்குச் சென்றவுடன் ஈர்ப்புவிசை இல்லாத காரணத்தால் காலில் உள்ள அனைத்து நீரும் உடலின் மேற்பகுதியை நோக்கிப் பயணிக்கும். அப்போ என்னவாகும் என்றால், முகம் வீங்கிவிடும். கால்கள் சிறுத்துப் போய்விடும். இந்த நிலையைத் தான் விண்வெளி மனிதர்கள் ”கோழிக்கால் மனிதன்” என்று சொல்கிறார்கள். இப்போது தெரிகிறதா? ஏன் விண்வெளிக்குப் போன உடனே விண்வெளி வீரர்கள் போட்டோ எடுத்து அனுப்பாமல் இரண்டொரு நாட்கள் கழித்து அனுப்புகிறார்கள் என்று?
சரி இதுமட்டும் இல்லாமல் வேறு சில விசயங்களையும் நாம பார்க்கவேண்டும். தலைக்குச் சென்ற அதிகப்படியான நீர் மூக்கு, கண், காது, மூளை என்று பல பகுதிக்குப் போய்விடுவதால் என்னவாகும் என்றால், வயிற்றில் குமட்டல், தும்மல், வாந்திவருவது, உடல் சோர்வு, பசியில்லாம போவது, தலை சுற்றுவது என்று பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.. இதைப் பலமுறை விண்வெளிக்குச் சென்று வந்த விண்வெளிவீரர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்ததாக, மிகப்பெரிய பிரச்சினை, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் மூளைக்கு கிடைக்கும் சிக்னல்களில் குழப்பங்களும், சிரமமும் ஏற்படுகிறதாம். ஒரு சுழல் நாற்காலியில் உட்கார்ந்து சுத்திக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று எழுந்தால் என்னவாகும்? நாம சுத்துவது நின்றபின்னும் நாம் சுத்திக்கொண்டே இருப்பதைப் போன்றதொரு உணர்வு உருவாகுமல்லவா! அது ஏனென்றால்? நம் காதுக்குள் இருக்கும் நீர் சிறிதுநேரம் சுத்திக்கொண்டே இருந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமா செட்டில் டவுன் ஆகும்.
அதனால் தான் அப்படி கிறுகிறுன்னு சுத்தறமாதிரி இருக்கு. அதேமாதிரி, விண்வெளி நிலையத்துக்குப் போனவுடனே நாம மேலே நிக்கிறோமா, இல்ல தலைகீழா நிக்கிறோமா? என்கிற பல குழப்பங்கள் உருவாகிறதாம். இதற்கு விண்வெளி நிலையத்தில் ஒரு ஐடியா பண்ணி வைத்திருக்கிறார்களாம். ஆம், சில குறியீடுகளை வரைந்து வைத்திருக்கிறார்கள். அதைவைத்து, நேரா இருக்கிறோமா அல்லது தலைகீழாக இருக்கிறோமா என்று தெரிந்துகொள்கிறார்கள்.
முறையான உடற்பயிற்சியும் வேலைப்பளுவும் இல்லையென்றால் என்னவாகும்? எலும்பில் உள்ள கால்சியம் குறைந்து தேய்மானம் அடைய ஆரம்பித்துவிடும். எலும்பிலிருந்து அதிகமாக ரத்தத்தில் கலந்த கால்சியத்தின் அளவைக் கட்டுக்குள் வைக்க சிறுநீரகம், இதை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற போதுமான அளவு தண்ணீர் வேண்டும். விண்வெளி மனிதர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்காததால் வெளியேற்றப்படவேண்டிய கால்சியத்தின் அளவு அதிகமாகத் தேங்கி சிறுநீர்க் கற்கள் உருவாக ஆரம்பித்துவிடும். இந்த மாதிரி ஏராளமான உடல் உபாதைகளை விண்வெளி வீரர்கள் சந்திக்கவேண்டியிருக்கு.
இன்னும் ஒரு முக்கியமான செய்தியை நான் சொல்ல வேண்டும். அது தூக்கம். பூமியில் 12 மணிநேரம் பகல் 12 மணிநேரம் இரவு என்று இருப்பதால் இருட்டானால் போதும் படுத்துத் தூங்கிடலாம். ஆனால், விண்வெளி மனிதர்கள் பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் போது ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்கள் பூமியை சுத்திக்கொண்டு வருகிறார்கள். அப்போது என்னவாகும்? ஒரு மணி நேரம் இருட்டிலும் அரைமணிநேரம் வெளிச்சத்திலும் மாறிமாறி இருக்கவேண்டி வரும். அதைவிட முக்கியமாக, விண்வெளி நிலையத்தை இயக்கத்தில் வைத்திருப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் கருவிகளில் இருந்து தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருக்கும். இதற்கு நடுவிலேதான் தூங்கி எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல விண்வெளி நிலையத்தில் எல்லாரும் ஒரே நேரத்தில தூங்குவதற்கான வசதிகளும் இல்லையாம். உதாரணத்துக்கு நாலுபேர் இருந்தால் இரண்டுபேர் தூங்கிக்கொண்டும் இரண்டுபேர் பணிசெய்துகொண்டும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் என்ன நடக்கும்? பணிசெய்பவர்களின் பேச்சுச் சத்தமும் தூக்கத்துக்கு இடையூறாக இருக்கும் அல்லவா?
அடுத்ததாக விண்வெளி உணவுகள். நாம் நினைப்பதைப்போல விண்வெளி நிலையத்தில் ஸ்டவ் அடுப்பு வைத்தெல்லாம் சமைத்துச் சாப்பிட முடியாது. கெட்டுபோகாத ஃப்ரூட் ஜூஸ், பேக்ட் ஃபுட்தான். கீழே வரும்வரைக்கும். விண்வெளியிலே ஏராளமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். அதைச் சொல்லத் தொடங்கினால் ஒரு நாளே போதாது. செடி வளர்ப்பதற்குக்கூட ஆராய்ச்சி செய்கிறார்களாம். இதுவரைக்கும் பயணம் செய்த விண்வெளி மனிதர்களில் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியே சென்றவர்கள் அப்போலோ விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள் மட்டுமே.
அவர்கள் சென்ற அதிகபட்ச தூரம் பூமியிலிருந்து நிலா உள்ள தூரத்திற்கு மட்டுமே. நம்ம ஊர் டீக்கடையிலே உட்கார்ந்து கொண்டு ஏதோ ஈரோட்டிலேர்ந்து சென்னைக்குப் போறமாதிரி, அடுத்தவாரம் செவ்வாய் கிரகத்துக்குப் போகப்போகிறேன், சனிக்கிழமை, சனிகிரகத்துப் போகப்போகிறேன் என்று யாராவது பீலா விட்டால் நம்பிவிடாதீர்கள்.. அதற்கான ஆராய்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த பூமியில் உள்ள வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாம் வேகமாக அழித்துக்கொண்டே வருகிறோம். நாம் வாழத்தகுதியில்லாத இடமாக பூமியை மாற்றிவிட்டோம் என்றால், அவ்வளவுதான். நிலாவில் போய் தங்குவது விண்வெளியில் போய் தங்குவது எல்லாம் அவ்வளவு சாதாரணமான விசயமில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
விண்வெளி ஆராய்ச்சிகளைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். நான் சொன்னதெல்லாம் இந்த புத்தகத்தில் இருந்து கொஞ்சம்தான். நீங்கள் இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாசித்தாலே போதும் இன்னும் இதுசார்ந்த விசயங்களைத் தேட ஆரம்பித்துவிடுவீர்கள். நீங்களும் ஒருநாள் விண்வெளி வீரராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சார் டைம் முடிஞ்சு பத்து நிமிடம் ஆகிவிட்டது என்று சிக்னல் கொடுத்துக்கொண்டே இருந்தார் தொகுப்பாளர்.
ஆகவே, அவசர அவசரமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாரதி புத்தகாலயத்திற்கும், பாரதி டிவியில் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தோழர் கலைக்கோவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் சொல்லிவிட்டு ஒரு பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஏனென்றால், எனக்கு அறிவியல் அவ்வளவாகத் தெரியாது.
கடவுளின் தேசத்திலொரு பகல்பொழுது – வே. சங்கர்
எல்லா ஊரும் ஒரே மாதிரிதான். ஆனால், ஒன்றுபோல இல்லை. அன்று அதிகாலைச் சூரியனுக்கு நான் முகம்காட்டியது கடவுளின் தேசத்தில் இருந்துகொண்டுதான். அடர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் இன்று அதன் தழும்புகள் மட்டுமே நிரந்தரமாகியிருக்கின்றன. தூசி படர்ந்த இலைகள் வழிநெடுக விரவிக்கிடந்தன தரையிலும் மரங்களின் கிளைகளிலும்.
ஒரு சொட்டு மழை கூறையில் விழுந்தாலும் வழுக்கிச் சென்று தரையை முத்தமிடட்டும் என்று நான்கு புறமும் சரித்துக் கட்டப்பட்ட ஓட்டுவில்லை வீடுகள். சாலையின் விளிம்புகளை பிடிவாதமாகத் தொட்டபடி கடைகள். சமீபகாலமாய் ஓட்டுவீடுகளின் விலாஎலும்பில் துருத்திக்கொண்டு முளைத்திருக்கும் அதிநவீன தார்சு கட்டிடங்கள்.
ஆங்காங்கே மௌனித்துப் பறக்கும் ஆகாயப் பறவைகள். இருபுறக் கரைகளின் அழுக்கை வாரி அப்பிக்கொண்டு மௌனமாய்ப் பயணிக்கும் அதிகாலை ‘பாரதபுழ’ ஆறு. மேம்பாலத்தில் உடலைக்குறைக்க நடைபயிற்சி செய்யும் ஆண்களும் பெண்களும். ’வா’ என்று ஒற்றைச் சொல்லில் வரவேற்கும் அகண்ட தார்ரோடு. அத்தனையையும் வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்லும் நான்.
முதலில் மொழி அத்தனை இலகுவாக பேசத்தெரியாததால் கொஞ்சம் திணறத்தான் வேண்டியிருந்தது. அவசியம் ஏற்படும்போது ஓரிரு தெரிந்த வார்த்தைகளை பிரயோகித்து சமாளித்தாலும், சரளமாக அவர்கள் பேசும் இசை போன்றதொரு மொழி உடனடியாகப் புரியாமல் நழுவிசெல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சரளமாகப் பேசத்தெரியாவிட்டாலும், ஏதோ கொஞ்சம் புரிந்துகொள்ளும் அளவுக்கு இருந்தால் போதும் என்ற ரீதியில், மலையாளத் தொலைக்காட்சி ஷோக்களையும், மம்முட்டி மற்றும் மோகன்லால் நடித்த சினிமாப் படங்களின் உரையாடல்களையும் கொஞ்சம் தொடர்ந்து பார்த்தும் கேட்டும் வைத்திருந்தேன்.
காட்சிகளோடு கூடிய உரையாடல் என்பதால், முதல் காட்சியும் அடுத்த காட்சியின் நிகழ்வையும் பொருத்திப்பார்த்து, இதுவாகத்தான் இருக்கும் என்று தோராயமாகப் புரிந்துகொண்டு விடலாம்.. புரியாவிட்டாலும் அது பெரும் குற்றமொன்றுமில்லை. அவ்வாறு கற்றுக்கொண்ட ஓரிரு அவசியமான வார்த்தைகள் ஒருவிதத்தில் உதவிகரமாக இருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், ஒரு மொழியை சரளமாக அந்த ஊரின் நேட்டிவிட்டியோடு பேசுவது அவ்வளவு எளிதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது.
அந்தவூர் மண்ணின் மனிதர்கள் பேசும்போது இலக்கண சுத்தமில்லாமல் கொச்சைமொழியில் அவர்கள் மிக இயல்பாக பேசுவதுகூட ஏதோ அவசர அவசரமாகப் பேசுவதுபோல தோன்றுகிறது.
ஒவ்வொருவருக்கும் தனித்துவமான தொனி, உச்சரிப்பு லாவகம், தனித்ததொரு குரல்வளம். என்று ஆளுக்கு ஆள் வேறுபடுவது இயல்புதானே! ரோட்டோரக் கடைகளில் தேனீர் குடிப்பதிலும் காலை, மாலை உணவு உண்பதிலும் பெரிதளவில் எந்தவித சிக்கலும் இல்லை. சைகை போதும். கூடவே எந்த மொழியில் பேசினாலும் எதிரில் இருப்பவரால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் கேட்பதற்கேற்ப தலையை அசைத்தால் போதும்.
அந்நிய மொழிபேசும், புதிய இடத்தில், நம் தாய்மொழியில் யார் பேசினாலும் அவர்களோடு உடனடியாக நட்புகொள்ள நினைக்கிறது மனம். அவர்கள் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? என்றெல்லாம் ஆராய்ச்சியெல்லாம் அப்போது எழுவதில்லை. சொந்த ஊரில் பக்கத்து வீடு எதிர்வீட்டில் அதே மனிதன் இருக்கும்போதுதான் அத்தனையும் சாத்தியம்.

பாலக்காடு அடுத்துள்ள சொர்ணூருக்குதான் எனது எதிர்பாராத பயணம். அங்குள்ள செறுதுருத்தி என்னும் இடத்தில் இருக்கும் ”நேசனல் ஆயுர்வேத ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் பஞ்சகர்மா” என்னும் மருத்துவமனைக்கு என் உடல் சார்ந்த பிரச்சினைக்காகச் சென்றிருந்தேன். எல்லாவகையான நெடுநாள் உடல்சார் நோய்களுக்கும், ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை அது. புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கிறார்கள். கட்டணம் வெறும் பத்துரூபாய் தான்.
அதிகாலை ஏழு மணியிலிருந்தே டோக்கன் கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். நானும் ஒரு டோக்கனைப் பெற்றுக்கொண்டேன். எங்கு நோக்கிலும் சுத்தம். வெவ்வேறு ஊர்களில் இருந்து, ஏதேதோ நோய்க்கு மருத்துவம் பார்க்க நோயாளிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
வளாகத்திற்கு உள்ளேயே கேண்டின் இருந்ததால் காலை உணவிற்குக் கவலை இல்லை. வெள்ளப்பம் (நம்ம ஊர் ஆப்பத்தைதான் அப்படி அழைக்கிறார்கள்) நூலப்பம் (இடியாப்பம்) அதற்குத் தோதாக சட்னி சாம்பார், பூரி, இட்லி, தோசை, மெதுவடை என்று எல்லாம் கிடைக்கிறது. ருசிக்கு எல்லாவற்றிலும் கலந்துகட்டி அடிக்கவேண்டும் என்று ஆசை இருந்தது என்னவோ உண்மைதான்..
ஆனால், புதிய இடத்து பதார்த்தங்கள் சிக்கிச்சைக்கு சென்ற இடத்தில் வயிற்றைப் பதம்பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து அரைவயிற்றோடு எழுந்துகொள்ள வேண்டியதாயிற்று.
இதுவரை அந்த ஊருக்குச் சென்றதில்லை. இடம் புதிது, மொழி புதிது. வழி புதிது, மொத்தத்தில் எல்லாமே புதிது. மருத்துவரிடம் ஆங்கிலத்தில் பேசிச் சமாளிப்பது மிக எளிதாக இருந்தது. தமிழில் பேசினாலும் புரிந்துகொள்கிறார்கள். நண்பகலுக்குள் மருத்துவரைப் பார்த்து முடிந்துவிட்டது. மருந்தும் பெற்றாகிவிட்டது.
இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். மருத்துவமனைக்குச் செல்வதுதான் எனது பிரதான நோக்கம். பிறகு ஊர் திரும்பவேண்டியதுதான். நான் ஊர் திரும்பவேண்டிய ரயில் இரவு பத்துமணிக்குத்தான். அதுவரை என்ன செய்வது?
எந்தவிதத் திட்டமிடலும் இல்லாததால், அருகில் ஏதேனும் பிரபலமான இடத்திற்கு சென்றுவந்தால் என்ன? என்ற எண்ணம் எழுந்தது என்பதைவிட அருகில் இருந்தவரிடம் அறைகுறை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கேட்டுத் தெரிந்துகொண்டேன் என்பதுதான் உண்மை.
30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு உயிரியல் பூங்கா இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்துநின்ற பேருந்தில் ஏறிக்கொண்டேன். சற்றேறக்குறைய 50 நிமிடப்பயணம்.
உடன் பயணிப்பவரிடம், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் என்று கலந்துகட்டிப் பேசுவது நமக்கும் சரி உடன் பயணிக்கும் மனிதர்களுக்கும் சரி விநோதமான(!) அனுபவம்தான். பேருந்து ஜன்னலின் வழியே ஊரையும், மக்களையும் உற்றுநோக்குவது அத்தனை பெரிய ஆனந்தம். ஏராளமான எண்ணச்சிறகுகள் சூழலுக்கேற்ப வளர்ந்து மேலேயும் கீழேயும் பறந்தவண்ணம் இருந்தது. கவிதை வரிகள் ஓரிரண்டு வந்து போனது. அதையெல்லாம் சொன்னால் சிரித்துவிடுவீர்கள் என்பதால் நாகரீகம் கருதி அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.
மனிதர்கள் புதியவர்களுக்கு எப்போதும் ஒத்தாசையாகத்தான் இருக்கிறார்கள் என்பதை ஒரு சிறுபயணம் உணர்த்திவிடுகிறது. திர்சூர் (தமிழில் திருச்சூர்) என்னை ஏராளமான வெய்யிலோடு வரவேற்றது. பேருந்து நிலையத்திற்கு முன்னதாகவே இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கச் சொன்னதோடு இல்லாமல் எப்படிச் செல்லவேண்டும் என்று வழியும் சொன்னார்கள்.
சொன்னபடியே, சற்று தொலைவில் பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் பூங்கா இருந்தன. சாலையின் இருபுறங்களிலும் வேடிக்கை பார்த்துகொண்டே நடந்து சேர்ந்தபோது நுழைவாயிலில் ’ஸ்டேட் மியூசியம் & ஜூ’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
திர்சூர் நகரத்தின் மையத்தில், நாட்டிலேயே மிகப்பழமையான மிருகக்காட்சி சாலை இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம். இரண்டு கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்டது. காலை பத்துமணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கிறது. வெறும் பத்து ரூபாய் நுழைவுக்கட்டணம். வாகன நிறுத்தத்திற்குக் கட்டணமில்லை. உடைமைகளை வைக்கும் இடத்திற்குக்கூட கட்டணமில்லை. சற்றே ஆச்சரியம்தான். நம்மூர் மனிதர்களை இன்னும் அவர்கள் காப்பியடிக்கவில்லை என்பது பெருத்த நிம்மதி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நரி, சிங்கம், புலி, சிறுத்தை, புனுகுப்பூனை, கரடி, மான்கள், எருமைகள், நீர் யானை, குரங்குகள் முதலை, பாம்பு, மற்றும் பலவகையான அரிய பறவைகள், உட்பட ஏராளமான உயிரினங்களை கூண்டுக்குள் வலம்வருவதைப் பார்க்க முடிந்தது.
மரங்களில் நாகலிங்க மரம் மற்றும் பீரங்கிக் குண்டு மரம் (கேனன் பால் ட்ரீ) பார்த்ததும் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அற்புதமான நினைவு.
இளம்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதன் பெயர்களைச் சொல்லி அவர்கள் திரும்பச் சொல்லுவதைக் கேட்டுப் பரவசப்பட்டுக்கொண்டார்கள். கூண்டுக்குள் இருந்த மிருகங்களையும் வேடிக்கை பார்த்த மனிதமுகங்களையும் முழுவதுமாகப் பார்க்கவே இரண்டுமணி நேரத்திற்கு மேல் பிடித்தது.
உயிரியல் பூங்கா முடிவுபெறும் இடத்தில் தொடங்குகிறது பாரம்பரிய அருங்காட்சியகம். (மியூசியம்) கொச்சின் மகாராஜாவின் அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள்.
திர்சூர் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் கட்டிடக்கலைக்குப் பிரசித்திபெற்ற இடம் என்பது அங்கு செல்லும் வரை எனக்குத் தெரியாது. எதுவும் தெரியாமல் இருப்பதும் ஒருவிதத்தில் நல்லதுதான். முதன்முறை காணும்போது, நமது வியப்பும் அதைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் விரிவடைந்துகொண்டே செல்கிறது.
ஒரு அருங்காட்சியகம் என்னைப் போன்ற சாமானியனின் மனதில் என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? என்ற இருமாப்பும், அலட்சியமும் ஒருகாலத்தில் எனக்குள்ளும் இருந்ததென்னவோ உண்மை. ஆனால், அருங்காட்சியகத்தில் நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒருகாலத்தில், ஒரு சமூகமே பயன்படுத்திருக்கிறது என்பதை எப்போது உணர்கிறோமோ அப்போதுதான் ஒரு அருங்காட்சியகத்தோடு ஒருவித நெருக்கம் உண்டாகும்.
மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பலபொருட்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கும், பாதுகாப்பிற்கும், சமூக அந்தஸ்திற்கும், அதிகாரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட ஒன்று காலமாறுதலால் பழையது என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத்தோன்றலாம்..
உண்மையில் பலங்காலப் பொருட்களில் சில மட்டுமே நாம் காண்பதற்குக் கிடைத்திருக்கின்றன. எத்தனையோ பொருட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள்ளே புதைந்துகொண்டிருக்கின்றன.
தற்போது மிகஎளிதாகக் கிடைக்கும் எந்தவித நவீனகருவிகளும், தொழில்நுட்பமும் இல்லாத ஒரு காலத்தில் அவர்கள் கையாண்ட நுட்பமான கலைத்திறன், பண்பாடு, பொழுதுப்போக்கு ஆகிய அனைத்து அந்தச்சூழலில் இருந்துகொண்டு ஒவ்வொரு பொருட்களையும் அணுகவேண்டும் என்ற அறிவைத் தந்தது அருங்காட்சியகங்கள்தான்.
வன்மம் தீர்க்கச் சத்தமிட்ட போர்வாள்கள், எத்தனையோ அப்பாவிகளின் ரத்தம் பார்த்த போர்க்கருவிகள், சுயநலம்கொண்டு தங்களைப் பாதுகாக்க அணிந்துகொண்ட இரும்புக்கவசங்கள், அதிகாரத்தையும் அந்தஸ்த்தையும் ஒருசேர காட்டிக்கொள்ள அணிந்துகொண்ட உடைகள் தாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பதிவு செய்துவைத்த கல்வெட்டுக்கள் வேட்டையாடிப் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் மாதிரிகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், இலைகள், நார்கள், சாமானியர்கள் சமையல் செய்யப்பயன்படுத்திய பாத்திரங்கள் என ஒரே இடத்தில் நேர்த்தியாக அணிவகுத்திருந்ததைப் பார்க்கும்போது ஒரு சரித்திர நாவலை ஆளில்லாத இடத்தில் அமர்ந்துகொண்டு ஆழ்ந்து வாசிப்பதற்குச் சமம். அவற்றை வார்த்தைகளால் வர்ணித்துவிடமுடியாது.
மகாராஜா பயன்படுத்திய குதிரைவண்டி, பலவகையான சிலைகள், பலதரப்பட்ட புராதான விளக்குகள், கற்சிற்பங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் பாத்திரங்கள், செம்பு மற்றும் வெண்கலப் பாத்திரங்கள், பணம் பாதுகாக்கும் பண்டாரப் பெட்டி, என எத்தனையோ அற்புதமான பொருட்களை இன்னும் பராமரித்து வருவதற்காவே அவர்களுக்கு மிகப் பெரிய நன்றியையும் வணக்கத்தையும் செலுத்தலாம்.
நல்ல பசி, என்பதால் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் உணவகத்திற்குச் சென்றபோது கொட்டை அரிசிச் சோறு எந்தக் குழம்பிற்கும் ஒட்டாமல் விரைத்துகொண்டு என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. ஒவ்வொரு கவளத்தையும் மென்று தின்பதே வாய்க்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிபோல் தோன்றியது. புதிதாக உண்ணும் உணவு வயிற்றைப் பதம்பார்த்துவிடுமே என்று பயந்து பயந்துதான் உண்ணவேண்டியிருந்தது.
மியூசியத்திற்கு வெளியே வந்து சுற்றுச் சுவரை ஒட்டியே நடந்தால் அடுத்தவரும் கட்டிடம் ஒரு அரண்மனை என்று சொன்னார்கள். பிறகென்ன? மீண்டும் நடைதான். மத்தியான வெய்யில் உச்சந்தலையை பதம்பார்த்தது. பயங்கர சூடு. எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம். ரோட்டோரக்கடை இளநீரும், எலுமிச்சை ஜுசும் ஏதோ கொஞ்சம் தாகம் தணித்தது.
சக்தன் தம்புரான் கொட்டாரம் என்று அனைவராலும் அழைக்கப்படும் அரண்மனை இந்திய-டச்சு கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கொட்டாரம் என்றால் அரண்மனை என்று பொருள். சக்தன் தம்புரான் என்று அனைவராலும் அறியப்பட்ட கொச்சி மகாராஜா ஸ்ரீ ராமவர்ம ராஜாவின் அரண்மனை இன்றளவும் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது. உயரமான கூறை, தடிமனான சுவர்கள் திர்சூரின் இதயத்தை அலங்கரிக்கும் இந்த அரண்மனை தற்போது கேரள தொல்பொருள் துறையினால் அற்புதமாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது.
இது தற்போது தொல்பொருள் சுவரோவியக் கலை அருங்காட்சியகமாகச் செயல்பட்டுவருகிறது. அரண்மனையின் உள்ளே நுழையும்போதே நமக்குள்ளே ஒரு கம்பீரமாய் ஒரு ராஜநடை போடவேண்டும் என்ற உணர்வு தன்னுள்ளே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உயிரியல் பூங்காவிற்கும் மியூசியத்திற்கும் மக்கள் கொடுத்த முக்கியத்துவம் இங்கே இல்லை. தனியொருவனாக அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றிப் பார்ப்பது அலாதியான இன்பம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எந்த அவசரமும் இல்லை. அரண்மனையில் பார்க்கும் இடமெல்லாம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன்கூடிய மரப்பலகைகள். மரப்படிக்கட்டுகள். மரத்தால் ஆன கைப்பிடிகள்.
முதல்மாடியில் முழுக்க முழுக்க ஓவியங்கள். மியூரல் பெயிண்டிங்ஸ் (சுவர் சித்திரம்) என்றார்கள். ஓவியத்தில் எனக்கு அத்தனை ஞானம் இல்லையென்றாலும் ஆழ்ந்து ரசிக்குமளவிற்கு அறிவு இருந்தது. பீகாரில் பிரசித்திபெற்ற மதுபானி-ஓவியக்கலையை பல ஓவியங்கள் நினைவூட்டியது.
கீழ் தளத்தில் பழங்கால கோவில்களின் மாதிரிகள், நினைவுச் சின்னங்கள், ஓலைச்சுவடிகள், மண்பானைகள், முதுமக்கள்தாழி, சிந்து – ஹரப்பா நாகரீத்தைச் சேர்ந்தபொருட்கள், அவர்கள் பயன்படுத்திய அடுக்களைப் பொருட்கள். இலையால் செய்யப்பட்ட பீப்பீக்கள். (ஊதிகள்). இன்னும் ஏராளமான பொருட்கள் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் மேலெழும்பிக்கொண்டே இருந்தது. நேரம்தான் போதவில்லை. ஒரே நாளில் இத்தனையும் சாத்தியமா என்ற பிரம்மிப்பு எழுந்தாலும் எதுவும் சாத்தியம்தான் என்பதை இன்றைய பகல்பொழுது சுட்டிக்காட்டியது.
வரவேற்பறையில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அத்தனையும் கேரள தொல்லியல் துறையால் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள். அதிகளவில் மலையாளத்திலேயே இருந்தன. சில ஆங்கிலத்தில் இருந்தன. ”பத்மநாபபுரம் அரண்மனை” என்ற புத்தகம் ஒன்றே ஒன்று மட்டும் தமிழில் இருக்கவே அதை விலைகொடுத்து வாங்கிக்கொண்டேன்.
ஆனால், திர்சூர் அரண்மனையைப் பற்றிய தகவல்கள் தாங்கிய புத்தகம் எதுவும் தமிழில் இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். கேரள தொல்லியல் துறை கொஞ்சம் மெனக்கெட்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது. இதுபற்றி தொல்லியல் துறையிடம் முறையிடவேண்டும் என்பதற்காக இ-மெயில் ஐடியைப் பெற்றுக்கொண்டேன்.
அரண்மனையில் உட்புறச் சுற்றுச்சுவர் முழுவதிலும் ஐம்பது மியூரல் பெயிண்டிங்ஸை சுற்றிப்பார்க்க முடிந்தது வரப்பிரசாதம். ஆள் அரவமில்லாத அமைதி மேலும் மேலும் ஓவியங்களை ரசிக்கத் தோதாக இருந்தது. எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தது போதும் என்ற எண்ணம் தோன்றியபோது வெளியே வந்துவிட்டேன். இன்னும் சூரியன் பிரகாசமாகவே சுட்டெரித்துக்கொண்டிருந்தான். என்மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருப்பது போன்றதொரு பிரம்மை.
மீண்டும் நடை. ரோடெங்கும் மனிதர்கள். பெரியவர்களின் கரங்களைப் பற்றியபடி குழந்தைகள். இடதுபுறம் திரும்பி வலதுபுறம் திரும்பி என்று கேட்டுக்கேட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தாகிவிட்டது. மிகத்தூய்மையான கட்டணமில்லா வெஸ்டர்ன் கழிப்பறைகள். எல்லா பைப்புகளிலும் தண்ணீர் வந்தது. கூடவே பக்கெட்டும் மக்கும் இருந்தது உடையாமல் ஒழுகாமல் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
பள்ளி, கல்லூரிகள் விட்டுவிட்டார்கள் போலும். பார்க்கும் இடம்தோறும் சீருடையில் வளர்ந்த மாணவக்குழந்தைகள். பேருந்திற்காகக் கொத்துக் கொத்தாய் காத்திருந்தார்கள். கூட்டம்கூட்டமாகப் பள்ளிச் சிறுமிகள் கலகலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
இன்றையை வளர்ந்த குழந்தைகளுக்கு ஏன்தான் தங்கள் சிகையலங்காரத்தின்மேல் இத்தனை ஈர்ப்பு என்று தெரியவில்லை. பள்ளிசெல்லும் வளர்ந்த ஆண்குழந்தைகள் ஒருபக்க முடியை சுத்தமாக வழித்துவிட்டு மறுபக்கம் விரித்துபோட்ட சடைபோல் வளர்த்தியிருக்கிறார்கள். அவ்வப்போது தலையை சிலுப்பிக்கொள்வதும் கோதிக்கொள்வதும் பார்க்க ரசிக்கும்படிதான் இருக்கிறது. பெண்கள் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் முன்னுச்சியில் மேடிட்டுக் கொண்டை வைத்தபடி சிகையலங்காரம் செய்திருந்தார்கள்.
கொரானா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பள்ளிக்கல்லூரி மாணவமாணவியர்களின் கைகளில் மொபைல் ஃபோன் அதிகம் புழங்குவதாக எனக்குப்பட்டது.
பொதுவெளியில் வளர்ந்த(?) பெண்குழந்தைகள் சக ஆண் மாணவர்களோடு கைகளைப் புதைத்துக்கொண்டு அடிக்கடி முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டும், உதடுகளைக் குவித்தபடியும் கைவிரல்கள் இரண்டை காட்டியபடியும் குரூப்ஃபி எடுத்தவண்ணமே இருந்தார்கள். (தனியாக எடுத்தால்தானே செல்ஃபி?, குரூப்பாக எடுத்தால் அது குரூப்ஃபி என்றுதானே சொல்லவேண்டும்)
எனக்கு சற்று பொறாமையாகக்கூட இருந்தது என் காலத்தில் இப்படியொரு சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொள்வதைத் தவிற வேறென்ன செய்யமுடியும்? நான் செல்லவேண்டிய பேருந்தில் ஏறிக்கொண்டேன். மீண்டும் சாலையோர கட்டிடங்களையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்தபடியே பயணம்.
திரும்பி வரும்போதுதான் கவனித்தேன், பாரதப்புழ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 117 வருடப் பழமையான கொச்சின் பாலம் 2009ல் சேதமாகி நட்டாற்றில் தொங்கிக்கொண்டிருந்ததை. இந்தப்பாலம்தான் சொர்ணூரிலிருந்து கொச்சிக்கு ஏராளமான ரயில் பயணிகளை கடந்துசெல்ல பயன்பட்டிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலம் நெடுநாட்களாக அகற்றப்படாமலேயே இருந்தது. ஒருவேளை என்னைப் போன்ற வெளியூர் பயணிகளுக்கு அதன் கட்டிடகலையின் மதிப்பையும், வரலாற்றுச் சிறப்பையும் சேர்த்து ஏதேனும் சேதிசொல்வதற்காகக் கூட இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
ரயிலுக்கு இன்னும் நான்கரை மணிநேரம் இருக்கிறது. ஜங்சனுக்கு எதிரிலேயே மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலின் (லாலேட்டன் என்கிறார்கள் அந்தவூர்காரர்கள்). நவீன சினிமா தியேட்டர் இருப்பதை காலையில் கண்டபோது எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ஆனால், மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் (மம்முக்கா என்கிறார்கள் அதே ஊர்க்காரகள்) பீஸ்ம பர்வம் என்றொரு புதிய சினிமா ரிலீசாக மூன்றாவது வாரம் என்றார்கள்.
மனதிற்குள் நப்பாசை விருட்டென்று தலையைத் தூக்கி நமைச்சலைக் கொடுத்தது. சகல நிகழ்வுகளும் கூடிவரும்போது தவறவிடக் கூடாதல்லவா! இதுவரை எத்தனையோ ஊர்களுக்குச் சென்று பகல்பொழுதையும் இரவுப்பொழுதையும் வெட்டியாகக் கழித்திருந்தபோதும் சினிமாவிற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை எழுந்ததும் இல்லை, அதற்கான வாய்ப்பும் கிட்டியதில்லை. ஆனால் கடவுளின் தேசத்தில் கிட்டியிருக்கிறது.
மலையாள சினிமாக்கள் நான் அறிந்தவரை, கதை, கதைக்களம், இசை, நடிப்பு, சண்டைக்காட்சி என்று எப்போதும் ஒருவித இயல்புத்தன்மையோடு இருக்கும் என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்தப்படம். அப்படியில்லை என்பது என்னளவில் ஏமாற்றம்தான்.
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்ற பழமொழிக்கேற்ப வயதான மம்முட்டியின் கணீர்குரல் படம் முழுக்க எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை போடும்போதெல்லாம அவரது வெளிறிப்போன ஒல்லியான கால்கள் நம்மை நெளியவைக்கிறது.
கூட்டுக்குடும்பம். ஏராளமான நடிகர் நடிகைகள். சதித்திட்டம் தீட்டும் குடும்ப உறுப்பினர்கள், பழிவாங்கப் புறப்பட்டுவரும் இளவயது வில்லன் படுத்துக்கொண்டே திட்டம்போட்டு எதிரிகளைப் பந்தாடும் மம்முட்டி என்று வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று பார்க்கும்போதே புரிந்துவிடுகிறது. ஆண்குரலிலும் இல்லாமல் பெண்குரலிலும் இல்லாமல் ஐஸ் வாட்டரைக் குடித்துவிட்டு காதருகே கிசுகிசுக்கும் பாடல்கள் இப்போதெல்லாம் ட்ரெண்ட் போலும். நமக்கெதற்கு வம்பு என்று நம் பங்கிற்குக் கேட்டுவிட்டு ஆஹா அருமை என்று சொல்லிவிட வேண்டியதுதான்.
வில்லனையும் கதாநாயகனையும் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் எதற்காக அப்படியொரு காதைப் பதம்பார்க்கும் பின்னணி இசை என்று யாராவது சொன்னால் பரவாயில்லை. அடிதடி, ரத்தம், கொலை என்று தொடர்ச்சியாய் நடக்கும்போது காவல்துறை, சட்டம், ஒழுங்கெல்லாம் எங்கே ஓடி ஒளிந்துகொண்டிருக்கின்றன என்று தேடவேண்டியிருக்கிறது.
பழமைவேண்டாம் என்பவர்களுக்குப் புதுமையாவது சரியாகப் பொருந்திவர வேண்டுமல்லவா? கதாநாயகன் கையைத் தூக்கினாலே எதிராளி பறந்துபோய் விழுவதெல்லாம், தென்னிந்திய சினிமாவின் சாபக்கேட்டில் சேர்த்தி.
பழி, பழிக்குப் பழி, ரத்தம், பெண்களின் கண்ணீர், விரோதம், குரோதம், எல்லாமே சினிமாக் கதைகளில் பார்த்துப் பார்த்து அயர்ச்சியைத் தருகிறது என்றபோதும் எதுவும் மாறவில்லை. கடவுளின் தேசத்துச் சினிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது என்பதற்கு இப்படம் ஒரு சிறு பொறி அவ்வளவே.
எல்லாம் முடிந்து தியேட்டரைவிட்டு வெளியே வந்தபோது என்மேல் கோபம்கொண்ட சூரியன் சொல்லிக்கொள்ளாமலே சென்றிருந்தான். இரவுநேரக்கடைகளில் கூட்டம் நம்மூரைப்போலத்தான். வீடுகளில் சமையல் செய்வதை நிறுத்திக்கொண்டார்கள் போலும். அகண்ட தோசைக்கல்லில் மோதும் தோசைக்கரண்டியின் தாளலயம் தப்பாமல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இரவு பத்துமணிக்கு நான் செல்லவேண்டிய ரயில் ஐந்தாவது ப்ளாட்பாரத்தை வந்தடையவே நான் கடவுளின் தேசத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். என் நினைவுகளில் கடவுளின் தேசத்தைப் பற்றிய நினைவலைகள் ஏராளமாக இருப்பதைப்போல என்னைப் பற்றிய நினைவுப் பதிவுகள் யார் மனதிலேனும் இருக்கக்கூடும்.
மதுரை நாட்கள் (காலங்களைக் கடந்ததொரு உறவு) – வே. சங்கர்
நூலின் பெயர் : Madurai Days: A Bond Beyond Times
ஆசிரியரின் பெயர் : சுப்பிரமணியன்
மொழி : ஆங்கிலம்
பதிப்பகம் : நோசன்ப்ரஸ்.காம்
பக்கங்கள் : 92
விலை : ரூ.149/-
முதல் வாசிப்பிலேயே இது நிச்சயம் வித்தியாசமானதொரு நூல் என்கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. பின்பு சில நாட்கள் கழித்து வாசித்த பிறகும்கூட இந்நூல் மீதான ஆச்சரியமும் பிரம்மிப்பும் குறையவே இல்லை.
சிறிதும் நாடகத்தனம் இல்லாமலும் மிகையுணர்ச்சி இல்லாமலும் நடைபோடுகிறது இந்நூல் அதற்காகவே ஆசிரியருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
ஒவ்வொரு ஊரின் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவ்வூரின் அடிநிலை மக்களின் வாழ்வியலைப் பற்றிய தகவல்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம் என்பதை அழுத்தம் திருத்தமாக எழுதியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சுப்பிரமணியன் அவர்கள்.
1980 மற்றும் 1990களில் நிலவிய காலநிலை (தட்பவெப்பம்), மழை நாட்களில் தத்தளித்த, குறுகிய தெருக்கள், அன்றைய கொண்டாட்டங்கள், மத்திய மற்றும் கீழ் மத்தியதர மக்களின் விழாக்கள், அன்றாடம் நம் கண்முன்னே கடந்துசெல்லும் கீரைக்கார அக்கா, பெட்டிக்கடைக்காரர், ரிக்க்ஷாக்காரர் என அனைத்து வகையான மக்களின் வாழ்வியலையும் ஒரு கதைசொல்லியின் நேர்த்தியில் விவரித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
ஒரு புத்தகம் விமர்சகர்களாலும், தீவிர வாசிப்பாளர்களாலும், நூல் ஆர்வலர்களாலும் தொடர்ந்து நினைவுகூறப்படுகிறது என்றால், அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் தங்களது சொந்த நினைவுகளையும் கீறிவிட்டுச் சென்றுள்ளது என்று பொருள். அவ்வகையில் மதுரையில் வாழ்ந்த அல்லது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள், ’பெற்றதையும் இழந்ததையும்’ அப்பட்டமாக விவரித்துள்ளது இந்நூல்.
இந்நூலில் காணப்படும் காலக்கட்டத்தையும் பின்னணியையும் வைத்து யோசிக்கும்போது எழுபது மற்றும் என்பதுகளில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் மனதிற்குள்ளும் தோன்றி மறையும் போதாமையையும், அவர்களுக்குள்ளிருந்து பெருமூச்சாய் வெளியேறும் மனஎழுச்சியையும் உணர்வுப்பூர்வமாய் விவரிக்க முயன்றிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
மனித மனம் இயங்கும், சில சமயம் பிறழும், சில அந்தரங்கங்களை அசைபோடும் அதே சமயம், மறக்கமுடியாத பால்யகாலத்து ஆழங்களுள் மூழ்கி மூச்சுத்திணறுவதற்குள் மேலெழுந்து மூச்சுவிட்டு ஆசுவாசப்பட்டுக் கொள்வதைப்போல் ”மதுரை நாட்கள்” நூலை வாசித்து முடிக்கும்வரை, தென்றல் காற்று மெலிதாக, இதமாக, நிதானமாக தேகத்தை வருடிக்கொடுப்பதுபோலவே மனதின் அத்தனை நினைவடுக்குகளுக்குள்ளும் வருடிக்கொண்டே இருக்கிறது.
ஒரு திட்டமிடப்பட்ட காலகட்டத்திற்குள் அவரவர் எல்லையை விஸ்தீரணப்படுத்திக்கொண்டே செல்கிறது இந்நூல். முன்னுரையின் முதல்வரியே போதும் இப்புத்தகத்தின் இயல்புத்தன்மையைப்பற்றிச் சொல்ல. ஆம் ”இந்தப் புத்தகம் வரலாறு மட்டுமல்ல ஒரு தனிமனிதனின் அந்தரங்கம்” என்று சொல்லித்தான் தொடங்குகிறது.
தன் குழந்தைப்பருவ அனுபவங்கள், விழாக்காலங்களில் அவருடைய குடும்பம், மற்றும் உறவினர்களின் வருகை, அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயில், அதைச்சுற்றி எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வீதி, பலதரப்பட்ட கடைகள், அந்தப் பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றின் மொத்த ஆவணம்தான் இந்தப் புத்தகம் என்ற போதிலும் இது அனைவருக்கும் பொதுவானது.

தனிமனிதனின் நுண்ணுணர்வுகளுக்கும், விருப்பத்துக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் தன் மொழியின் வாயிலாக நாகரீகத்துடன் மரியாதை செலுத்தியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரிந்திருந்தாலே போதுமானது இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொள்ள அத்தனை எளிமையான மொழிநடை. அழகான சொல்லாடல். புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதே தவிர அதில் இடம்பெற்றிருக்கும் இடங்களும், பொருட்களும், மனிதர்களும் நம் அனைவருக்கும் மிகமிகப் பரிட்சயப்பட்டவை.
சம்பவ விவரிப்புகள், ஆரம்பம் முதல் இறுதிவரை பின்னணியில் ரீங்கரித்துக் கொண்டேயிருக்கும் வயலின் இசையைப்போல மெலிதான கிண்டலும் ஆதங்கமும் ஒருசேரக் கலந்து இழையோடிக்கொண்டே இருக்கிறது.
”மதுரை நாட்கள்” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் பரிசோதனை முயற்சி என்று எடுத்துக்கொண்டாலும், அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியாதபடி ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி தலைப்பின்கீழ் ரகம்வாரியாகப் பிரித்து ஒரு தேர்ந்தெடுத்த கதைசொல்லி கதைசொல்வதைப் போல தொய்வில்லாமல் நகர்ந்துசெல்கிறது.
இந்நூலை வாசிக்க வாசிக்க, இப்போதுள்ள குழந்தைகள், வளர்ந்த பிறகு நினைவுகூர்ந்து அசைபோடுவதற்கு எந்தவொரு நிகழ்வுகளும் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையும் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கிறது.
எல்லாக் குழந்தைகளும் விரைவில் பெரியவர்களாகிவிடவேண்டும் என்றே நினைக்கிறார்கள். வளர்ந்த பிறகு குழந்தகளாய் இருந்தபோது செய்த சேட்டைகளையே அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்நூல் ஒரு பெரும் உதாரணம்.
பள்ளி வாழ்க்கையையும் கல்லூரி வாழ்க்கையையும் இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகமே. குறை என்று சுட்டிக்காட்ட வேண்டுமானால் ஒரு சில இடங்களில் இரண்டிரண்டு சொற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அச்சாகியுள்ளது. ஆனால் அவைகள் இந்நூலின் நடையை ஒரு இடத்திலும் பாதிக்கவில்லை.
ஒரு இருபது அல்லது முப்பது ஆண்டுகாலமாக மதுரை நகரம் எப்படி இயங்கியது என்பதைத் தன் சொந்த வாழ்வியல் அனுபவத்தில் இருந்து சொல்லப்பட்ட வரலாற்று ஆவணமாக இந்நூலைக் கருதலாம்.
இன்னும் மதுரையின் ரத்தநாளங்களின் பாய்ச்சல் கொண்டு ஓடிய பல விசயங்கள் சொல்லப்படாமல் விடுபட்டுவிட்டதோ என்ற ஆதங்கமும் என் போன்ற வாசகர்களுக்கு இருக்கிறது. அடுத்த நூலில் அவற்றை எதிர்பார்க்கிறோம் என்று நூல் ஆசிரியர் புரிந்துகொண்டால் போதுமானது. மதுரை மிளிரட்டும். வாழ்த்துகள்.
நூல் அறிமுகம்: *டுட்டுடூ* சிறார் நாவல் – ப. திஷாரதி
நூலின் பெயர் : டுட்டுடூ
ஆசிரியர் : வே. சங்கர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 64
விலை : 60
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எந்தவித நூலைப் எழுதுவதற்கு முன்பும், அதற்குறிய தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தனித் திறமையே வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். அது மட்டுமின்றி, இது ஒரு சிறார் நாவல். இந்த நாவலின் தலைப்பைப் பார்க்கும்போதே அதைப் படித்தே ஆகவேண்டும் என்கிற முடிவு மனதினுள் அனைத்துக் குழந்தைகளுக்கும் வரவேண்டும். அப்படி ஒரு முடிவை என் மனதும் எடுக்கவைத்தது இந்நாவலின் தலைப்பு.
அடுத்ததாக முன்னுரையைப் பற்றிக் கண்டிப்பாகக் கூறவேண்டும். அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்டதுபோல், நான் செய்யும் செயல்களைப்போலவே இருந்தது. இந்நாவலின் தலைப்பைப் பார்க்கும்போது வந்த ஆர்வத்தைவிட, முன்னுரையைப் படிக்கும்போது என் ஆர்வம் இன்னும் அதிகமாகியது.
புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பிக்கும் நிலையில், ஒரே ஒரு எண்ணம்தான் என்மனதில். இது ஒரு நாய்க்குட்டியின் கதையாகத்தான் இருக்கும் என்று. ஆனால், முதல் வரியைப் படிக்கும்போதே பள்ளிக்கூடத்தைப் பற்றியும், பள்ளியில் மாணவர்கள் செய்யும் செயல்களைப்பற்றியும் அருமையாக வெளிப்படுத்தியிருந்தார் இந்நூலின் ஆசிரியர்.
அப்போதே என் மனம் என்னுடைய 5ஆம் வகுப்பு வரை நடந்த நிகழ்வினுள் அழைத்துச் சென்றது. அதுமட்டுமின்றி என் அம்மாவிடமும், பாட்டியிடமும் எவ்வாறு நான் நடந்துகொள்வேனோ அதைப் போலவே இருந்தது. சின்னச் சின்னத் தருணங்களில் என்னுடைய உறவினர்களுடன் உரையாடிய நினைவுகள் என் மனதில் வந்துபோயின.
இந்நாவலில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இனிமையாக இருக்க, ஆசியர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள் என அத்தனையும் அருமை.
பள்ளி இடைவேளையில் நடக்கும் நிகழ்வுகள், சத்துணவிற்காக செல்லும் தருணங்கள், பின்பு வீட்டிற்கு திரும்பிச் செல்லும் தருணங்கள் என அனைத்தும் மறக்காமல் நியாபகப்படுத்திக் கொண்டே இருந்தது இந்த டுட்டுடூ – சிறார் நாவல்.
இதில் மிகவும் பிடித்த விசயம் என்னவென்றால் டுட்டுடூ நாய்க்குட்டி ஒவ்வொருவரிடமும் அழகாக நடந்துகொண்டதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு அருமையாக வெளிப்படுத்தி இருப்பதுதான்.
டுட்டுடூ விளையாடும்போது வந்த சிரிப்பு, டுட்டுடூ கஷ்டத்தில் இருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு அழுகைதான் வந்தது. இப்படி ஒரு நிகழ்வு எல்லாம் என் வாழ்வில் நடந்ததைப்போலவே இந்நிமிடம் வரை உள்ளது. வெளிப்படையாகச் சொன்னால், இதை ஒரு கதையாக எண்ண முடியவில்லை.
ஓவியப்போட்டி, வாட் இஸ் திஸ் என்கிற ஆங்கிலப் போட்டி என அனைத்தும் என்னை மெய்மறக்க வைத்தது. இவை அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், இந்நாவலை மேலும் சிறப்பித்தது “ எங்கள் வீட்டு நாய்க்குட்டி, வெள்ளை நிற நாய்க்குட்டி” என்கிற பாடல் வரிகள்.
அந்தப்பாடலை கடைத்தெருவிற்கு செல்லும்போதுகூட ஆழ்வி பாடிக்கொண்டே போனது, அதன் பின் டுட்டுடூ-வைப் பார்த்ததும் ஆழ்வியும், முகிழனும் எவ்விதத் தயக்கமும் இன்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, ஆழ்வியின் அம்மா டுட்டுடூவை வளர்க்க சம்மதித்தது எல்லாம் அருமை.
அனைத்தையும் தொடர்ந்து வாசிக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வரவழைத்தது. ஆனால், கடைசி வரி என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது அந்த வரி “ டுட்டுடூவின் கண்களில் நம்பிக்கை ஒளி மின்னியது “ என்ற வரிதான்.
கடைசியாக நான் ஆழ்வியாகவே மாறிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இந்தக்கதை என்றும் என் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன். நானும் ஒருநாள் இதுபோன்றதொரு டுட்டுடூவைப் பார்க்கமாட்டேனா என்ற ஏக்கத்துடன் இந்நாவல் பற்றிய என் சிறு பார்வையை முடித்துக்கொள்கிறேன். நன்றி.
ப. திஷாரதி
(பதினொன்றாம் வகுப்பு மாணவி)
நூல் அறிமுகம்: *டுட்டுடூ* சிறார் நாவல் – ந. கீதா
நூலின் பெயர் : டுட்டுடூ
ஆசிரியர் : வே. சங்கர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 64
விலை : 60
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
குட்டிக்குட்டி கதைகளாக இருந்தால்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்ற போக்கையே மாற்றி அமைக்கும் விதமாக வே. சங்கர் அவர்களின் படைப்பு அமைந்திருக்கிறது.
நாவலுக்கே உரிய சுவாரஸ்யத்துடனும் நடையுடனும் அமைந்திருக்கிறது இந்த “டுட்டுடூ”. ஆழ்வியின் எதிர்பார்ப்பில் தொடங்கி நாய்க்குட்டியைக் கண்டது முதல் அதைத் தேடிக் கண்டடையும் வரை, அடுத்து என்ன நடக்கும், நாய்க்குட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நகர்கிறது இச்சிறார் நாவல்.
நாவலின் பெயரைக் கேட்டதுமே குழந்தைத்தனம் வந்தமர்ந்து கொள்கிறது மனதில். நாவலின் முகப்புப் பக்கத்தையும் தலைப்பையும் கண்டவுடன் சிறுவயது சண்டைகள் மனதில் ஒரு கணம் தோன்றி மறைந்தன. ’டூ’ என்று காய் விட்டுக் கொள்வதும் பின் சில நொடிகளில் விரல்களை மடக்கிப் ’பழம்’ விட்டுச் சேர்ந்து கொள்வதுமான நிகழ்வுகள் வந்துபோயின.
நாவலை வாசித்தபோதுதான் தெரிந்தது டுட்டுடூ என்பது கதையில் வரும் நாய்க்குட்டியின் பெயர் என்று. எதன் காரணமாக ஆசிரியர் டுட்டுடூ என்ற பெயரை அமைத்திருந்தாலும் நாவல் காயாக அல்லாமல் பழமாகவே அமைந்திருக்கிறது.
நாவல் என்றால் பொழுபோக்கிற்காக மட்டுமே அமைந்தால், அது சிறப்பல்லவே!. நாவலினூடே பல அரிய தகவல்களையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர்.
உதாரணமாக நாய்களின் வகைகள், நாய்களுக்கான முக்கியத்துவம் போன்றவற்றைக் கூறலாம். பெண் நாய்களை வளர்க்கத் தயங்கும் மக்கள் என்று கூறியுள்ள போது, மனிதர்களில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைவென்றால் நாய்களிலுமா? என்ற எண்ணம் துளிர்விடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
நாவலில் அமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. புத்தக வாசத்தைப் பற்றி தூதுவையும், மானசியும் பேசிச்செல்லும் வார்த்தைகள், ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் புதைந்து கிடைப்பவை.
ஆசிரியர்களை குழந்தைகளின் மனதில் அழகாக சித்தரித்திருக்கிறார். கணித ஆசிரியர் என்றாலே பயப்படும் மாணவக் கண்மணிகளுக்கு வனமலர் ஆசிரியர் ஒரு வரப்பிரசாதம்தான்.
குழந்தைகளுக்கே உரிய நகைச்சுவையையும், துடுக்குத்தனத்தையும், நாவலில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, ”திஸ் இஸ் எ பப்பாளி ஃப்ரூட்” என்ற கொற்றவனின் கூற்றையும் “திஸ் இஸ் எ நொங்கு, நவ் ஐ ஆம் தொங்கு” என்ற விமலனின் கூற்றையும் கூறலாம்.
ஆசிரியர் கையாண்டுள்ள மொழிநடை குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கிறது. காசு இருந்தால் மட்டும் போதாது மனசும் வேணும் பிறருக்கு உதவிட என்ற எண்ணத்தை விதைக்கிறது ஆழ்வியின் பேச்சு.
குழந்தைகளுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிவிட முடியாதபடி, பெரியோர்களுக்கெனவும் சிற்சில நிகழ்வுகளை அமைத்துச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.
ஆக மொத்தத்தில் ‘டுட்டுடூ’ காயாக அன்றி கனியாக மனதில் பதிகிறது.