Viyarvai Theettu Poem By V Kamaraj வ. காமராஜின் வியர்வைத் தீட்டு கவிதை

வியர்வைத் தீட்டு கவிதை – வ. காமராஜ்




பழைமை வாய்ந்த
புகழ் பெற்றக் கோயில்!
அரசன் கட்டினான்
அப்போதே….
ஆரம்பித்தது தீட்டு!

குப்பன் கோவாலு முருவன்
குள்ளம்மா காளிமா எல்லம்மா….
கூழுக்கோ…..
கணக்கனின் கோபத்துக்கோ
எலும்பு ஒடிய
எச்சில் வறள….
மிச்சமிருந்த உயிரில்
உருவான கோயில்!
கும்பாபிஷேகம்;
குப்பன் என்னக் கேட்டான் சாமி?

கோபுரக்கலசத்தை
மேலே கொண்டுவந்து
தருகிறேன் என்று
உரிமை கேட்டானா?

திர்னூரு…
துளியூண்டு…. திர்னூரு…
கையேந்தி நின்றவனைக்
காரித்துப்பி….
எச்சிலால் அடித்து விரட்டிய கோயில்!

கல்வெட்டில்….
நன்றாக முகந்து பார்த்தால்
இரத்த வாடை வரும்….
ஆராய்ச்சியாளர்கள்
அறிதல் வேண்டும்;
அறிவார்களா?

தலைமுறைகள் மாறியும்
கம்பீரமாக நின்ற
தீட்டுப்படாதக் கோயில்;
அவ்வளவு சக்தி!

சிதிலமடைந்து
திருப்பணிக்கு
திட்டம் தீட்டிய தீட்டே படாத கூட்டம்!

கண்டிப்பாக
காலம் ஓரிரண்டு ஆண்டுகள்…..
ஜமாதான்!

கடைக்கால் எடுக்க வேண்டும்
கட்டுமானத்துக்கு
கல் வேண்டும்
மணல் வேண்டும்
சிமெண்ட் கம்பி
தண்ணீர்….
முட்டுக்கட்டைகள்….
மேஸ்திரி… .
சித்தாள்….. பேராள்….
இப்படியான….
ஆளும் அம்பும் இல்லாமல்
ஆண்டவனாலேயே
ஆலயத்தைக் கட்டிக்கொள்ள முடியாதே!

சரி….
மணலில்…. கல்லில்…. கம்பியில்…. சிமெண்ட்டில் தண்ணீரில்….
சித்தாளில்…. பேராளில்…..
வியர்வைத் தீட்டு இருக்குமே?!
ஏர்வையாகுமா சாமிக்கு?
திருப்பணிக் குழுதான் தீர்மானிக்க வேண்டும்….
இப்போதே!

நாளை
கோயில் கட்டி முடிந்து
கும்பாபிஷேகம் நடக்கும்போது…..
திருனூரு கேட்டு
கையேந்தி வரும்
ஒரு கூட்டம்…..
வியர்வை சிந்திய கூட்டம்,
தீட்டு என்று
கோயிலைச் சாத்திவிடவேண்டாம்!

இப்போது….
திறப்பதற்கும்…..
தீட்டுக்களுக்கு
சக்தியைக் கொடுத்து விட்டான் கடவுள்!