வா கண்ணே!!! கவிதை – ம.வி
வா கண்ணே வா…
எதுவும் தவறில்லை எனச் சொல்லும் உலகில்
நீ பெண்ணாகப் பிறந்தது மட்டும் எப்படித் தவறாகும்? …
வா கண்ணே வா…
ஆடை சுதந்திரம் என்று நீ அணியும் ஆடையில்
அவன் திணிக்கும் ஆண்மையின் வக்கிரம் எப்படி உன் தவறாகும்…
வா கண்ணே வா…
மழலையின் சிரிப்பிலும் மங்கையின் அழகிலும்
அரக்கனின் கண்ணுக்கு காமம் தான் தெரியும் என்றால்
அது எப்படி உன் தவறாகும்…
வா கண்ணே வா…
சாதிக்க நினைத்து சாலைக்கு வந்தாய்
அடுப்படியில் உன்னை அடக்கித் தான் வைத்தார்கள்…
வெகுண்டு எழுந்து நீ வெளியிலே வந்தாய்
வெறி நாய்களால் உனை விரட்டினார்கள்…
கண்களில் கனவுகள்..
நெஞ்சினில் ஏக்கங்கள்..
மூன்று வயது குழந்தைக்கும் முட்டி தெரிய ஆடை வேண்டாம்..
முதிர் வயது மூதாட்டிக்கும் முந்தி சேலை மூட வேண்டும்..
எத்தனைத் துயரம் தான் தாங்குவாயோ…
இது எப்போது மாறும் என்று ஏங்குவாயோ…
போதும் நீ பொறுத்தது போதும் பெண்ணே
நீ முன் செல்லும் பாதை உன் கண்கள் முன்னே
தடைகளை தகர்த்து நீ செல்வாய் பெண்ணே
கனவுகள் மெய்ப்பட வெல்வாய் பெண்ணே
நீ உலகத்தின் உச்சிக்கு செல்லும் வேளை
வரும் சரித்திரம் உன் பெயர் சொல்லும் நாளை!!!
– ம.வி !