அத்தியாயம் : 11 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 20 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 11 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 20 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

20 வார கரு, என்பது கருக்காலத்தின் ஒரு மைல்கல். பாதிவழி கடந்து!  வாழ்த்துக்கள்!  20 வாரங்களில், நீங்கள் அதிகாரப்பூர்வமான கருக்காலத்தின் பாதி தூரத்தில் இருக்கிறீர்கள். கருக்காலத்தின் 37 முதல் 40 வாரங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும் என்பதால்,…
நூல் அறிமுகம்: ஜோசப் ராஜாவின் ’பெருந்தொற்றும் யுத்தமும்’ – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: ஜோசப் ராஜாவின் ’பெருந்தொற்றும் யுத்தமும்’ – பெரணமல்லூர் சேகரன்




“ஓங்கி மண்டையில் அறைந்தாற் போல் நம்மை உலுக்கி எடுக்காத புத்தகத்தை எதற்கு வாசிப்பானேன்?”..காஃப்கா.

இந்த மேற்கோளே ஓங்கி மண்டையில் அறைவதைப் போல்தான் உள்ளது. ஜோசப் ராஜாவின் ‘பெருந்தொற்றும் யுத்தமும்’ என்னும் கவிதைத் தொகுப்பினை வாசித்து முடித்தபின் காஃப்காவின் மேற்கோள்தான் நினைவுக்கு வந்தது. ஓங்கி மண்டையில் அறைந்தாற்போல் நம்மை உலுக்கி எடுக்கும் நூலாக உள்ளதால் இந்நூலை வாசிக்க வேண்டும் என பரிந்துரைப்பது சாலப் பொருத்தமானதே.

பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பான்மையான நாடுகளை உலுக்கி எடுத்துவிட்டது. டார்வின் கூற்றுப்படி ‘தகுதியுள்ளது பிழைக்கும்’ என்று எடுத்துக் கொள்வதா? வலுத்தவன் கையே ஓங்கும் என்று எடுத்துக்கொள்வதா?

எப்படிப் பார்த்தாலும் சோஷலிச நாடுகளில் மட்டுமே இறப்புக்களும் பாதிப்புக்களும் குறைவு என்பது அனுபவ உண்மை. சின்னஞ்சிறு கியூபா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கியூப மருத்துவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சைகளை மேற்கொண்டு சேவையாற்றியது வெள்ளிடைமலை. காரணம் சோஷலிச நாடுகளுக்கு மக்கள் நலனே முதன்மையானது. லாப வெறி கொண்ட முதலாளித்துவ நாடுகளில் மரண ஓலங்களும் பொருளாதார பாதிப்புக்களும் அதிகம். அதற்குச் சான்று அமெரிக்கா. தனது சொந்த நகரமான‌ நியூயார்க் நகரில் நாற்சந்தியில் அப்போதைய அதிபர் ட்ரம்ப்புக்கு நிர்வாண சிலையெழுப்பி அதைச்சுற்றி மக்கள் போராட்டம் நடத்தியது சமூக வலை தளங்களில் வைரலானது.

இந்தியாவில் கொரோனா உச்சக்கட்ட நிலையில் இருந்தபோதும் கூட மக்களுக்கு நிவாரணம் வழங்காமலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சொந்த ஊர் செல்ல எந்த ஏற்பாடும் செய்யாமலும் ஊரடங்கு மகாராசாவாய் மாளிகையை விட்டு வெளிவராமல் தாடி வளர்த்து நாடகமாடினார் பிரதமர். வலுவான போராட்டங்களுக்குப் பிறகே தடுப்பூசி இலவசமாக்கப்பட்டது.

இத்தகைய கசப்பான அனுபவங்களை வெறுமனே கண்டும் கேட்டும் செல்பவர்கள் மனிதர்களாகக் கருதப்பட மாட்டார்கள். குறிப்பாக படைப்பாளிகள் மௌனம் காத்தலும், கொரோனா கொடூரங்களைப் பற்றி எழுதாமல் இன்ன பிறவற்றை எழுதலும் ஏற்க இயலாதவை. அத்தகைய வரிசையில் வராத எந்நேரமும் மக்கள் நலனையே எண்ணக் கூடிய கவிஞர்களுள் ஒருவராக ஜோசப் ராஜா இருப்பதனால் அவரது தூரிகையிலிருந்து வரும் கவிதைகள் காத்திரமானவையாக, ஆளும் வர்க்கத்தால் மழுங்கடிக்கப்பட்டு மயக்க நிலையில் உள்ள மக்களைத் தட்டி எழுப்பும் கவிதைகளாக பரிணமிக்கின்றன. அத்தகைய கவிதைகளை அவ்வப்போது தொகுப்பாக வெளியிட்டு வருவது அவரது சிறப்பு.

இந்திய மக்களைப் பற்றி எழுதும் கவிஞர்,
“ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி
தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு
மாலையில் தொலைக்காட்சியில் தோன்றி
சமூக இடைவெளி பழகுங்கள்
என்று சொல்லும் தலைவர்களை
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
இந்த தேசத்தின் மக்கள்”
என்கிறார்.

“பெருந்தொற்றின் தடுப்பு மருந்துகளிலும்
பெருந்தொற்றின் தடுப்பு ஊசிகளிலும்
அவர்களால் இலக்கு வைக்கப்பட்ட
இலாபமானது
தன்னுடைய நிர்வாணத்தைத் திறந்து காட்டி
உண்மையை உரக்கச் சொல்லத்தான் செய்கிறது”

என பெருநிறுவன ஆளும் வர்க்கத்தைப்பற்றி நெத்தியடியாய் வந்து விழுகிறது கவிதை.

உச்சக்கட்ட கொரோனா கொடூரக் காட்சியை,
“கண்களை மூடினால்
ஆக்சிஜன் உருளைகளோடு
அலைந்து திரியும் மனிதர்கள்
அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு மருத்துவமனைகளிலும்
உயிர்பிடித்துக் காத்துக் கொண்டிருக்கும்
உயிரச்சங்கள் நிறைந்த ஒவ்வொரு முகங்களும்
என்னை நோக்கி எழுந்து வருகின்றன
அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்
அந்தச் சுடுகாட்டு நெருப்பு
என்னைச் சுற்றி எரிந்து கொண்டிருப்பதாக
உணர்கிறேன் நான்”
என தன்னிலையிலிருந்தே படக்காட்சியாக்கியுள்ளார் ஜோசப் ராஜா.

விரக்தியின் விளிம்பில் அழுது புலம்புவதல்ல இவரது கவிதை. நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது என்பதற்கு,
“பேரிடரிலும் பெருந்தொற்றிலும்
எப்படி அழிந்துபோனோம் என்பதல்ல
எப்படி எழுந்து நின்றோம் என்பதில்தான்
மானுட வலிமையும்
மானுட ஒற்றுமையும் பிரகாசிக்கப் போகிறது”
எனும் கவிதையே சான்று.

ஊடக அதர்மத்தையும் அதை வெறுமனே கடந்து செல்லாமல் நாமாற்ற வேண்டிய கடமையையும் இவ்வாறு எழுதுகிறார் கவிஞர்.
“எதைக் காட்ட வேண்டும்
எதை மறைக்க வேண்டும்
என்பதை அறிந்தே செய்கிறார்கள்
எல்லாவற்றையும் ஊடுருவி
எதைப் பார்க்க வேண்டும் என்பது
உங்களுக்கும் எனக்கும் கடமையாகிறது”

“சுற்றிலும் பிணங்கள்
எரிந்து கொண்டிருக்கும் போது
தாடி வளர்த்துக் கொண்டு
வாளாவிருப்பது
என்னைப் போன்ற
சாதாரணக் கவிஞனுக்குச் சாத்தியமா என்ன?”
என் மறைமுகமாக பிரதமரைச் சாடும் அதே நேரத்தில் தம்மைச் சாதாரணக் கவிஞனாக அவையடக்கத்துடன் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

“ஒரு தேர்தலுக்குத் தேசபக்தியென்றால்
அடுத்த தேர்தலுக்கு மதவெறி
உங்களால் கற்பனை செய்ய முடியாத
எந்தக் கொடூரமான காட்சிகளையும்
திட்டமிடுவதே இல்லை அவர்கள்
அவர்கள் விஷத்தை வைத்திருக்கிறார்கள்
அவர்களும் விஷமாகவே மாறியிருக்கிறார்கள்
அவர்களுக்கு எல்லாமும் இயல்பாகவே இருக்கிறது
மதவெறியைத் தூண்டிவிடுவதும்
கலவரத்தை நிகழ்த்திக் காட்டுவதும்
கணப்பொழுதில் அவர்களால் முடியக்கூடியதுதான்
இப்படியாகத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்
மக்களின் வெற்றியென்று சொல்லிக் கொள்வார்கள்”
என ஆளும் வர்க்கத்தை எளிமையாகப் புரிய வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.

கொரோனா மரணங்கள் குறித்த வழக்கில் பொறுமையிழந்த நீதிபதியொருவர்,
“இந்த மரணங்கள்
இனப்படுகொலைக்குச் சமமானது”
என்று
உணர்ச்சிவசப்பட்டு உண்மையைச் சொன்னார்
அப்படியென்றால்
இந்தப் படுகொலைகளுக்கு
யார் பொறுப்பேற்பது?”
எனக் கேள்வியெழுப்புவதோடு,

“உங்களுடைய செயலுக்காகத்தான்
காத்திருக்கிறேன்
உங்களை மட்டும் நம்புகிறேன்
அந்த இடி முழக்கத்தை
இந்தக் காதுகள் கேட்குமென்றும்
அந்தச் சூறாவளியை
இந்தக் கண்கள் பார்க்குமென்றும்
அந்தப் பரவசத்தை
இந்தக் கைகள் எழுதுமென்றும்
உறுதியாக நம்புகிறேன்
நெடுங்காலம்
என்னைக்
காத்திருக்கச் செய்யாதீர்கள்”
என்னும் கவிஞரின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்ற வாசகர்கள்தானே தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

இடையிடையே தத்துவ வகுப்பெடுக்கவும் தவறவில்லை கவிஞர்.
“சிந்தனைக்கும் செயலுக்கும் பின்னால்
வர்க்கச் சார்பு அடங்கியிருப்பதைப் போல
துயரங்களுக்குப் பின்னாலும்
வர்க்கச் சார்புதான் அடங்கியிருக்கிறது
துயரங்கள் பொதுவானதல்ல
வர்க்க பேதம் ஒழிக்கப்படும்போது
துயரங்களும் ஒழிந்துவிடும்”
என்பது உண்மைதானே!

கொரோனா கவிதைகளுக்கிடையில் ‘சாதியம்’ இறந்த உடலைப் புதைக்கக்கூட அனுமதிக்காத கொடுமையை நிகழ்ந்த நிஜ சம்பவத்தைக் கூறி நம்மைத் தட்டி எழுப்புகிறார் ஜோசப் ராஜா. அக்கவிதையின் சில வரிகள் இதோ:-

“வீரளூர் கிராமத்தில்
இறந்துபோன அந்த
எளிய மனுஷியின் உடலை
மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு
எல்லோரும் நடந்து செல்லும்
அந்தப் பாதை மறுக்கப்பட்டது
உங்களை வருத்தவில்லையா?”

நாடு சுதந்திரம் பெற்று பவள விழா கொண்டாடியாகிவிட்டது. ஆனாலும் வீடற்றவர்களுக்கு வீடு கனவாகவே நீடிக்கிறது. பட்டா இல்லை எனக்கூறி ஏழை மக்களின் வீடுகளை இடிக்கிறது அதிகார வர்க்கம்.
“ஒரு வீட்டை இடிப்பது
அதுவும் இடித்துத் தரைமட்டமாக்குவது
ஒரு குடும்பத்தின்
கனவுகளையும் ஆசைகளையும் லட்சியங்களையும் கூட்டுழைப்பையும்
இடிததுத் தரைமட்டமாக்குவதல்லவா
இடிக்கப்படும் வீடுகளில்
துடித்துக் கொண்டிருக்கிறது இதயம்”
என கவிதை வடிக்கிறார் கவிஞர்.

ரஷ்யா உக்ரைன் யுத்தம் கவிஞரை வெகுவாக பாதித்து அதன் விளைவாக நெடுங்கவிதைகள் வந்துள்ளன.

“பெருந்தொற்றின் பழைய காட்சிகள்
பின்னுக்குத் தள்ளப்பட்டு
யுத்தத்தின் புதிய காட்சிகள்
முன்னுக்கு வருகின்றன
பெருந்தொற்றின் காட்சிகளை
உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் தான்
யுத்தத்தின் காட்சிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்”
என‌ மறைமுகமாக ஏகாதிபத்தியத்தைச் சாடும் கவிஞர்,

“யுத்தமென்னும் பெருமடியில்
சுரந்து கொண்டே இருக்கும் லாபம்தான்
விலக்கமுடியாத விடையாக இருக்கிறது
இத்தனைக்குப் பிறகும்
ஆயுத வியாபாரிகளின் பேராசை களையும்
முதலாளிகளின் முட்டாள்தனமான
விருப்பங்களையும்
ஒவ்வொரு கொடூரங்களுக்கும் பின்னால்
ஒவ்வொரு காட்சிகளுக்கும் பின்னால்
மறைந்திருக்கும் அவர்களின் கொடூரங்களையும்
புரிந்து கொள்ள மாட்டீர்களா தோழர்களே!”
என ஆதங்கத்துடன் வினா எழுப்புகிறார்.

ரஷ்யா-உக்ரைன் போருக்குச் காரணமான நேட்டோவை,
“நேட்டோ என்பது
இந்த நூற்றாண்டின்
மானுடத் திரளின் முதன்மையான எதிரி
நேட்டோ என்பது
இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த வளங்களையும்
வாரிச்சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும்
பெருமுதலாளிகளின் பெரும்பிணைப்பு
நேட்டோ என்பது
உலகத்தின் ஒற்றுமையைச்
சீர்குலைக்கத் தயாராக இருக்கும்
உலகத்தின் அமைதியைக் கெடுக்க நினைக்கும்
அற்பர்களின் அதிகாரக் கூட்டமைப்பு”
எனப் படம்பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.

இறுதியாக,
“ஆயுதச் சங்கிலியின் ஆணிவேராக
முதலாளித்துவத்தை ஒழிக்காமல்
போரை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்
நம்புங்கள்
நோயைக் கண்டறிந்து கொண்டால்
குணப்படுத்துவது சுலபம்தான்!”

எனும் கவிதை மூலம்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் திருக்குறளை நினைவூட்டுகிறார் ஜோசப் ராஜா.

“என்னுடைய வார்த்தைகளுக்கான வேர்கள் இந்த மண்ணிலும், இந்த மக்களின் முகங்களிலும் மட்டுமே ஆழப்பதிந்திருக்கிறது. அந்த வேர்கள் தான் வார்த்தைகளின் இயக்குவிசையாய் இருந்து வழிநடத்துகிறது” என்று தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள நூலாசிரியரின் வார்த்தைகள் அர்த்த அடர்த்தி மிக்கவை. இந்நூலை அழகுடன் அச்சிட்ட தமிழ் அலை பதிப்பகத்துக்குப் பாராட்டுக்கள்.

– பெரணமல்லூர் சேகரன்

நூல் : பெருந்தொற்றும் யுத்தமும்
ஆசிரியர் : ஜோசப் ராஜா
விலை : ரூ.₹150/-
பக்கங்கள் 120

வெளியீடு : தமிழ் அலை
3 சொக்கலிங்கம் காலனி
தேனாம்பேட்டை
சென்னை 600 086

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

சீனாவின் கோவிட் நிலவரம் – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

சீனாவின் கோவிட் நிலவரம் – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா




விளக்கம்

சீனாவில் தற்போது கோவிட் தொற்று முன்னெப்போதும் இல்லாத அதிகரித்திருப்பதாகவும் மேலதிகமான மரணங்கள் நடந்து வருவதாகவும் மருத்துவமனைகளில் மூச்சுத்திணறலுடன் செயற்கை சுவாசக் கருவிகளில் நோயர்கள் படுத்திருப்பதையும் மரணித்தவர்கள் சவக்கிடங்குகளில் கிடத்தி வைத்திருப்பதையும் காணொளிகளாகப் பகிரப்படுகின்றன.

இந்தக் காணொளிகள் எந்த கால இடைவெளியில் எடுக்கப்பட்டவை, எந்த நகரில் எடுக்கப்பட்டவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ கருத்துகள் இல்லை. இந்தக் காணொளிகளை சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை ஆயினும் தற்போதைய சீனத்தின் கோவிட் நிலையை வெளிக்கொணரும் வகையில் இந்த காணொளிகளை ட்விட்டரில் அமெரிக்காவைச் சேர்ந்த கொள்ளைநோயியல் மருத்துவர் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளிகள் நம்மிடையே மீண்டும் PTSD எனும் POST TRAUMATIC STRESS DISORDER விபத்துக்கு பின்னால் மீண்டும் அந்த விபத்தை நியாபகப்படுத்தும் விசயங்கள் தோன்றினால் மீண்டும் அதே வலி, பதட்டம், உறக்கமின்மை போன்றவை ஏற்படும்.

இதனால் பலரும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டமையால் விளக்கம் அளிப்பது கடமையாகிறது.

சீன நாடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கோவிட் பெருந்தொற்றைப் பொருத்தவரை
“பூஜ்ய கோவிட் கொள்கை” ZERO COVID POLICY

கோவிட் தொற்று எங்கு காணப்பட்டாலும் அங்கிருந்து வேறெங்கும் பரவாத வண்ணம்
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கொரோனா பரிசோதனைகள் எடுப்பது
மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து அலுவல்களுக்கு அனுமதிப்பது

அறிகுறிகளற்ற தொற்றாக இருந்தாலும் சரி கண்டிப்பான முறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

அந்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் என்று அனைவரும் கட்டாயத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்

ஒரு நகரில்
ஊரில் தொற்றுப் பரவல் நடக்கிறது என்றால் தொடர்ந்து லாக்டவுன் போடப்படும்.

இப்படியாக மூன்று வருடங்களாக
ஜீரோ கோவிட் பாலிசியை கடைபிடித்து வந்தது சீனா.

இதனால் மக்கள் விரக்தி அடைந்து பேதலித்து அடக்குமுறைக்கு எதிராக ஆங்காங்கே கண்டனக்குரல் எழுப்பியதாகத் தெரிகிறது
கூடவே அந்நாட்டின் உற்பத்தி பொருளாதாரமும் சுணக்கம் காணத் தொடங்க இனியும் மக்களை முடக்கி வைப்பது சரியன்று என்ற முடிவை சீனா எடுத்தது.

பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைப் போல அனைத்தையும் திறந்து விட்டது.
பரிசோதனைகள் இனி அவசியமில்லை என்றும் கூறிவிட்டது.

சில நகரங்களில் சாதாரண அறிகுறிகள் இருந்தாலும் வேலைகளுக்கு வரலாம் என்று கூட அறிவிப்புகள் வந்தன.

இதன் விளைவாக கொரோனா வைரஸின் ஓமைக்ரான் உருமாற்றம் அங்கே வேகமெடுத்துப் பரவி வருகிறது.

பெருந்தொற்று தொடங்கியது முதல் இப்போது வரை
வைரஸின் எந்த அலையையும் சந்திக்காத சீனாவில் முதல் கொரோனா அலை தற்போது அடித்து வருகிறது.

ஓமைக்ரான் உருமாற்றம் என்பது
முந்தைய உருமாற்றங்களை விட வேகமெடுத்துப் பரவக் கூடியது
ஆயினும் முந்தியவைகளை விட வீரியம் குறைவானது என்று அறியப்பட்டுள்ளது.

இந்த வேரியண்ட் மூலம் இந்தியாவில் மூன்றாவது அலையில் ( டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை) தொற்றடைந்தவர்களில் முதியோர்கள், பல்வேறு இணை நோய்களுடன் இருந்தவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகினர்.

சீனாவிலும் அதே நிலை இப்போது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

எனினும் இந்தியா சந்தித்த ஓமைக்ரான் அலைக்கும்
சீனா சந்திக்கும் ஓமைக்ரான் அலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் யாதெனில்

இந்தியா ஓமைக்ரான் அலையை சந்திக்கும் முன்பு
ஆல்பா வேரியண்ட் மூலம் முதல் அலையை 2020இன் மத்தியிலும்
டெல்ட்டா வேரியண்ட் மூலம் இரண்டாம் அலையை 2021இன் மத்தியிலும் சந்தித்து இருந்தது

கூடவே இரண்டாம் அலைக்குப் பிறகு 90% க்கு மேல் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தனர்.
தடுப்பூசி பெற்றவர்களில் 90% பேர் கோவிஷீல்டும் 10% பேர் கோவேக்சின் பெற்றனர்.

2022 ஜனவரி மாதம் முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சீனாவில் நிலை – இதுவரை அங்கு தொற்றுப் பரவல் அலையாக ஏற்படவே இல்லை.
மேலும் சைனோவேக் / சைனோபார்ம் ஆகிய செயலிழக்கச்செய்யப்பட்ட வைரஸ் தொழில்நுட்ப தடுப்பூசிகள் 2021 ஆம் வருடம் போடப்பட்டது. அதன் மூலம் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கு பின் குன்றக்கூடிய நிலையை ஆய்வுகள் சான்று பகர்கின்றன.

இந்நிலையில் 90% சீன மக்களுக்கு நேரடி தொற்றின் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் இல்லை

தடுப்பூசிகள் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் குன்றியுள்ளது

இதுவே இந்தியாவின் நிலை யாதெனில்
முதல் அலை முடிவில் 20% பேருக்கு தொற்று மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது
இரண்டாம் அலை முடிவில் 60%க்கு மேல் தொற்றின் மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது
மூன்றாம் அலை முடிவில் 80-90% பேருக்கு தொற்று+ தடுப்பூசி மூலம் கூட்டு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.

எனினும் புதிதாக வேரியண்ட்கள் உருவாகும் போது அவை நம்மிடையே தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு நம்மிடையே இருக்க வேண்டும்.

இப்போது சீனா சந்தித்து வரும் பிரச்சனைகளை நாம் 2020 ,2021 ஆண்டுகளில் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம்.

மேலும் ஓமைக்ரான் வேரியண்ட் நமது மக்களில் பெரும்பான்மையினருக்குத் தொற்றை கடந்த ஓராண்டில் ஏற்படுத்தி அதன் மூலம் நேரடி எதிர்ப்பு சக்தியை சம்பாதித்து வைத்துள்ளோம்.

எனவே ஓமைக்ரான் மூலம் புதிய தொல்லை நமக்கு நேருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே கணிக்கிறேன்.

ஆயினும் சீனாவில் ஓமைக்ரான் கட்டுக்கடங்காமல் பரவும் போது வைரஸில் பாதகமான இடங்களில் உருமாற்றம் நிகழ்ந்தால் ( நிகழ்வதற்கு வாய்ப்பு குறைவு) புதிய பிரச்சனைக்குரிய வேரியண்ட் தோன்றலாம்.

சீனாவின் தற்போதைய அலை என்பது நமக்கு முன்பு நடந்தது இப்போது அவர்களுக்கு காலம்தள்ளி நடக்கிறது என்றே கொள்ள வேண்டும்

இதற்கான காரணம் அவர்கள் கடைபிடித்த ஜீரோ கோவிட் பாலிசி என்றும் கொள்ளலாம்

அந்த கொள்கையால் அவர்கள் அடைந்த சாதகங்கள்

1. வீரியமிக்க கொரோனாவின் வேரியண்ட்களான ஆல்பா/ பீட்டா/ டெல்ட்டா ஆகியவற்றால் அலையை சந்திக்காமல் பலம் குன்றிய ஓமைக்ரான் மூலம் அலையைச் சந்திக்கின்றனர். இதன் மூலம் ஏனைய நாடுகளை விட குறைவான உயிரிழப்புகளை சந்திக்கும் வாய்ப்பு.

2. தடுப்பூசிகள் மூலம் அவர்களது நாட்டினருக்கு எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திய பின்பு அலையைச் சந்திக்கின்றனர்

3. கடந்த மூன்று ஆண்டுகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தேவையான ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்திடக் கிடைத்த அவகாசம்

இந்தக் கொள்கையால் அவர்கள் அடைந்த பாதகங்கள்

1. மூன்று ஆண்டுகளாக மக்களை லாக் டவுன் / பரிசோதனைகள் என்று சுதந்திரத்தை வதைத்தது. இதனால் மக்கள் விரக்தி நிலையை அடைந்திருக்கக்கூடும்

2. உற்பத்தி பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வு மந்தநிலை

3. சில முன்னணி நிறுவனங்கள் இந்த கொள்கையால் சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பது

4. மூன்று ஆண்டுகள் ஆகியும் தாங்கள் நினைத்தவாறு கொரோனாவினால் பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க இயலாமை

இவ்வாறாக தற்போது சீனாவிலும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலை
மூலம் நாம் செய்ய வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்

– மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம்

– கூட்டமான இடங்களிலேனும் முகக்கவசம் அணியலாம்

– குறிப்பாக முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம்

– கைகளை சோப் போட்டுக் கழுவும் பழக்கம் எப்போதும் நல்ல பழக்கமே.

– காய்ச்சலுடன் சளி/இருமல் இருப்பவர்கள் அறிகுறிகள் நீங்குமட்டும் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

– இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து சிந்தித்து முடிவு செய்யலாம்.

– ப்ளூ தொற்றுக்கு எதிராக வருடாந்திர தடுப்பூசி முறை இருப்பது போல கொரோனா வைரஸுக்கு வேரியண்ட்டுக்கு ஏற்றாற் போல அப்டேட்டட் தடுப்பூசி வருடந்தோறும் கிடைத்தால் முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் / சுகாதாரப்பணியாளர்கள் பயன்பெறுவர்.

முடிவுரை

சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை என்று வரும் காணொளிகளைப் பார்த்து நாம் தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை

நாம் 2020இலும் 2021இலும் சந்தித்தவைகளைத் தான் சீனா அதன் கொள்கையால் காலந்தாழ்த்தி சந்திக்கிறது

நமக்குத் தேவை எச்சரிக்கை உணர்வேயன்றி
அச்சமன்று

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
15.தாய்ப்பால் வகுப்பறை-ΙΙΙ

பள்ளிக்கூடத்தில் தான் வீட்டுப் பாடம் தருவார்கள், இங்கேயுமா? ஆம், மருத்துவமனையில் கற்றுக் கொண்ட விசயங்களை வீட்டிலே தனிமையில் அமர்ந்து பிள்ளையும் நீங்களுமாக பயிற்சி எடுக்க வேண்டாமா? என்ன தான் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாலும் தனியாய் ஒரு விசயத்தை செய்யும் போது, நம்மைத் தனியே விட்டு இனி நீதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தள்ளிவிடும் போதும் தான் இன்னும் நிறைய விசயங்களைப் புரிந்து கொள்ளவே முடியும்.

வீட்டிலிருக்கிற காலங்களில் உண்டாகிற சந்தேகங்களை நம் செவிலியரிடம் அலைப்பேசியில் பேசி குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் தாய்ப்பால் புகட்டி பிள்ளையை வளர்த்தெடுத்த பின்பாக நாற்பத்திரண்டு நாட்கள் கழித்து பிள்ளைக்கு முதல் தவணையாகத் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைக்கு நாம் செல்ல வேண்டியிருக்கும் அல்லவா! அப்போது வீட்டில் செய்த வீட்டுப்பாடத்தின் மூலம் பிள்ளைகள் எப்படித் தேறியிருக்கிறார்கள், எவ்வளவு எடை கூடியிருக்கிறார்கள், இன்னும் எத்தகைய கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும், எத்தகைய உணவுகளைப் பிள்ளைக்கு எந்த வயதிலிருந்து கொடுக்கலாம் என்பன உள்ளிட்டவைகளையும் கேட்டுத் தெளிந்து கொண்டு வீடு வந்து சேரலாம் தானே!

மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்கு கிளம்புகையில் மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் கேட்டு விடைபெற்றுக் கொள்ளும் முன்பாக சில விசயங்களில் நாமுமே தெளிவு பெற வேண்டியிருக்கிறது. வீட்டிற்குச் சென்ற பின்பாக தாய்ப்பாலூட்டலிலும், குழந்தை வளர்ப்பிலும் ஏதேனும் சந்தேகமிருக்கையில் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைத்துப் பேசலாமா, நேரில் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாமா? மீண்டும் அடுத்து எப்போது வந்து குழந்தையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியிருக்கும், அதற்கு இடைப்பட்ட காலங்களில் என்னென்ன மருந்துகளைத் தொடர்ந்து நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும், மேலும் தன்சுத்தம், மார்பகம், குழந்தை பராமரிப்பு மற்றும் தாயிற்கான உணவுகள் தொடர்பாக ஏதேனும் முக்கிய ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு வீடு திரும்பலாம்.

வீடு திரும்பியவுடனே தான் நம்முடைய வீடுகளில் வழக்கமாயிருக்கிற சம்பிரதாய நடவடிக்கைகள் துவங்கிவிடுகிறதே! அப்போது பிள்ளை பெற்றவள் புகுந்த வீடு தீட்டாகிவிடுகிறது, அதனால் தானே பதினாறாம் நாள் வெள்ளையடித்து தீட்டைக் கழிக்கிறார்கள். அவள் புழங்குகிற பாத்திரங்கள்கூட அச்சமயத்தில் தீட்டாகிவிடும், அவற்றைத்தான் வீடு கூட்டுதல் என்று பழையனவற்றைக் கழித்துப் புது பாத்திரங்களை வாங்குகிறார்கள். அவர்களைச் சந்திக்கிற மனிதர்களுமே தீட்டுப்பட்டுவிடுவார்கள் என்பதால் தான் வீட்டில் தீட்டுக்கழிக்கிற பதினாறாம் நாள் வரையிலும் யாரும் வந்துசேர மாட்டார்கள். வீட்டில் கெட்ட ஆவிகள் நுழைந்துவிடக் கூடாதென்று மாதவிலக்கு உள்ளானபோது உலக்கையைப் போட்டவர்கள், இப்போது இரும்பினை வாசல் பார்த்துப் போட்டு வைப்பார்கள்.

இக்காலத்தில்தான் நற்குணமான வயசாளிகள் வந்து பிள்ளைக்குச் சேனை வைத்தால் அவர்களைப் போலவே நல்ல குணமாய் வருவார்கள் என்று தேனை, சர்க்கரைப் பாகுவை, பழைய கஞ்சியைக்கூட நாவில் தொட்டு வைக்கிற பழக்கமெல்லாம் நடக்கும். சில ஊர்களில் கழுதைப்பால் கொடுப்பது, கழுதைக் காதிலிருந்து கீறியெடுத்த இரத்தத்துளியை பஞ்சில் நனைத்து வாயில் சொட்டுவிடுவது உள்ளிட்டவைகளைச் செய்தால் சீக்கு அண்டாது, மஞ்சள்காமாலை வராது என்பது போன்ற அவர்களின் வழக்கமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவர்.

பதினாறாம் நாள் விசேசத்தன்று ஒவ்வொரு சமூகத்திலும், மதத்திலும், பொருளாதாரம், தொழில், வழிபாடு சார்ந்து வெவ்வேறான சம்பிரதாயங்களைச் செய்வார்கள். அப்போது பிள்ளைக்குப் பேர் வைப்பது, அரைஞாண் அணிவிப்பது, தொட்டில் போடுவது உள்ளிட்ட சம்பிரதாயங்களெல்லாம் நடக்கும். அப்போதுதான் ஊர் உறவினர்களெல்லாம் ஒன்றுகூடி வந்து பிள்ளையைப் பார்த்து பாராட்டி சீராட்டுவதும், பெற்ற தாயை வாழ்த்திப் போற்றுவதும் எல்லாம் நடக்கும். அதேசமயத்தில் வந்தவர்கள் பிள்ளையின் பாலினம் சார்ந்து நாசுக்காக சொல்லிச் செல்வதும், பிள்ளையின் எடை வத்திப் போவது பற்றிய நெருப்பைக் கிள்ளிப் போட்டுப் போவதுமான இருக்கையில் புட்டிப்பால், சத்துமாவு, டானிக் என்று செயற்கையாக பாலூட்டலுக்கு தாயினை நகர்த்துவதும் நடக்கும்.

ஆக, இதிலிருந்தெல்லாம் ஒரே ஓட்டமாக தப்பிப்பிழைத்து கையோடு பிள்ளையையும் தப்புவித்து அவர்களுக்கு முழுக்க முழுக்க தாய்ப்பால் மட்டுமே தந்து வளர்த்தெடுப்பதெல்லாம் ஓட்ட பந்தயத்தைவிட அரியதொரு சாதனைதான். மேலும் வீட்டிலிருக்கிற காலங்களில் தாய்ப்பால் தொடர்பான சிக்கல்கள் எழும்போதுகூட அருகிலே உறவினர்கள் எவரேனும் பாலூட்டிக் கொண்டிருக்கையில் அவர்களிடம் உரிமையோடு போய் தாய்ப்பால் தொடர்பாகக் கலந்தாலோசித்துக் கொள்ளலாம். நம் பிள்ளைக்குப் பாலில்லை என்கிற போது அவசியப்பட்டால் அவர்களிடமே கொடுத்து பாலூட்டி அமர்த்தச் செய்யலாம். ஏனெனில் மனிதகுல வரலாற்றில் பெற்ற பிள்ளைக்குச் சகோதரி பாலூட்டிய, அத்தை பாலூட்டிய, அம்மா பாலூட்டிய நிகழ்வுகளெல்லாம் கூட நிகழ்ந்த மண்ணிது.

வீடுகளில் தாய்ப்பாலு புகட்டுவதற்கென தனியொரு இடத்தை ஒதுக்கிடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். விருந்தினர்கள் திடுதிப்பென்று உள்நுழைகிற போது அசூசையாக அம்மாவிற்கு தோன்றாதளவிற்கு இடமிருந்தால் போதுமானதுதான். குழந்தையின் உடலுக்கு போதிய கதகதப்பு அவசியமாயிருப்பதால் அம்மாவின் தோலோடு நெருக்கம் தேவைப்படுகிற அதேசமயத்தில் வீடும் நல்ல வெளிச்சத்தோடு, கூடிய காற்றோட்டத்தோடு இருப்பது நல்லது. பாலூட்டுகிற பிள்ளையைப் போர்த்துவதற்கென தனியே துணிகளை நன்கு துவைத்து வெயிலில் உலர வைத்துப் பயன்படுத்துகையில் ஏனைய பூச்சிகள் வந்து பிள்ளையை துன்புறுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைக்கு மெத்தையென்றில்லாமல் வெறுமனே காட்டன் துணியில் போர்த்தி விரிப்பில் கிடத்தினாலே போதுமானதுதான். எப்போதும் தொட்டிலில் போடுவது என்றில்லாமல் அம்மா அயர்ந்து தூங்கியெழுகிற போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் பாலூட்டும் இடத்தில் அதற்குத் தேவையான அத்தனை பொருட்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகுக்கும் மடியில் பிள்ளையை தாங்கிக் கொள்வதற்கான தாய்ப்பால் தலையணைகள், காட்டன் துண்டுகள், குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்பாகத் தேவைப்படுகிற மாற்று உடைகள், வெந்நீர் நிரப்பப்பட்ட பாட்டில்கள், தாய்ப்பால் நைட்டிகள், தாய்ப்பால் பிழிந்தெடுத்து சேகரிக்கப் பயன்படுகிற பொருட்கள், தாய்ப்பாலூட்டும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய டானிக் மாத்திரைகள், மகப்பேறு மற்றும் தடுப்பூசி அட்டையென அருகாமையிலே வைத்துக் கொள்ளலாம். அதேபோல முக்கியமாக மருத்துவர், செவிலியர், மருத்துவமனை அலைப்பேசி எண், தடுப்பூசி அட்டவணை நாட்கள் போன்ற அத்தியாவசிய நாட்கள், நம்பர்களை டைரியில் குறித்து வைத்துக் கொண்டு அவசியப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்