நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 

நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 




அணிந்துரை : தமுஎகசவின் மிகப்பெரிய ஆளுமை தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

நிறைய தொல்லியல் ஆவணங்களை வரலாற்றுத் தரவுகளுடன் 19 தலைப்புகளில் மிகவும் அருமையாக பதிவு செய்துள்ளார் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள்.

இறுதியாக ஒன்றிய அரசு கீழடியை மூடி மறைக்கிற வேலைகளை செய்த தகிடுதத்தங்களை அம்பலப்படுத்திய எழுதிய கட்டுரைகள் பகீர் என்கிறது. வடமாநில ஆய்வுகளுக்கு, இல்லாத சரஸ்வதி நதியை தேடுவதற்கு, ராமாயண கண்காட்சிக்கு என அதிக நிதியை ஒதுக்கிய ஒன்றிய அரசு கீழடியில் கிடைத்த பொருட்களை கரிம ஆய்வு செய்வதற்கு கிடைத்த நிறைய பொருட்களில் இரண்டே இரண்டை மட்டும் அமெரிக்காவுக்கு ஏனோ தானோ என்று அனுப்பியது இப்படி நிறைய பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

‘கீழடியை மூடி மறைக்கிறான் அநியாயமய்யா
வந்தேறி நாட்டை கெடுக்கிறான் அவமானமய்யா’ என்கிற சங்கத்தலைவனின் பாடல் வரிகள் தான் உடனே நினைவுக்கு வந்தது.

வைகை நதிக்கரையின் நகர நாகரிகத்திற்கு மிகுந்த எடுத்துக்காட்டுகளை வழங்கிய விதம் அப்பப்பா அருமை!

கண்ணகி வாழ்ந்த ஊர் கடை சிலம்பு ஏந்தல் (கடைச்சநேந்தல்), தேனூர், அந்த நரி (அந்தனேரி), வெம்பூர் (குத்துக்கல்), புலிமான்கோம்பை (புள்ளிமான்கோம்பை), அழகன்குளம் இப்படி ஏராளமான தரவுகளை வாரி வழங்கியிருக்கிறார்.

அரசியல் காரணங்களால் வடஇந்திய தொடர்புகள் அறுபட்ட நிலையில் ரோமானியர்கள் கடல்வழியைக் கண்டறிந்து மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் யவனர்களாக வாணிபம் செய்தது, அதற்கான சான்றுகளாக நிறைய ரோமானிய நாணயங்கள் வைகை நதிக்கரை ஓரம் கிடைத்தது இப்படி ஏராளம் அரிய காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறார்.

தமிழரின் நாகரிகம் இன்னும் பல நூறாண்டுகள் பின்னோக்கி போவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட பொருட்களில் ஒன்றுகூட கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்ட தகவல்கள் இல்லையென்பதால் ஒன்றிய அரசு கீழடியை கைகழுவும் வேலையை செய்கிறது என்று ஒன்றிய அரசின் சூழ்ச்சியை போட்டு உடைக்கிறார். அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறப்பாக கீழடியை ஆய்வு செய்த நிலையில் அவரை ஏன் மாற்றவேண்டும். அவருக்குப் பதிலாக வந்த ஸ்ரீராமன் என்பவர் மண்ணின் அடி ஆழத்தில் ஆய்வு செய்யாமல் திட்டமிட்டு மேலோட்ட கிடைத்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி ஆயிரம் ஆண்டுகள் குறைத்துக் காட்டுவதற்கான வேலையை ஒன்றிய அரசின் சூழ்ச்சி வேலையை செய்தார். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒருநாளைக்கு சராசரியாக 80 நபர்கள் வரை ஆட்களை வைத்து ஆய்வு செய்த நிலையில், ஸ்ரீராமன் ஒரு நாளைக்கு 20 ஆட்கள் வரையே பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தை திட்டமிட்டு ஒன்றிய அரசு கீழிறக்கப் பார்க்கிறது என்றே தெரிகிறது.

தமிழ்ச் சமூகம் விழித்திருந்து கீழடியை பாதுகாக்க வேண்டும் என்று மக்களின் ஊழியர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். 2017ல் வெளியான போது இந்நூல் கண்ணில் படவில்லை. 2022ல் திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கப்பெற்றேன். நிறைய தரவுகளைக் காண இதுவரை வாசிக்காத தோழர்கள் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூல் : வைகை நதி நாகரிகம்!
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
விலை : ரூ.210

வெளியீடு : விகடன் பிரசுரம்
ஆண்டு : 2017ல் முதல் பதிப்பு, ஜூன்2022ல் இரண்டாம் பதிப்பு.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.