இசை வாழ்க்கை 78: பாட்டு வெள்ளம் நிக்காது – எஸ் வி வேணுகோபாலன்
திருமண வரவேற்பில் அருமையான இசைக் கச்சேரியில் ஒற்றைப் பாடல் கேட்டு விடைபெற நேர்வது உள்ளபடியே குற்ற உணர்ச்சியையும், ஏமாற்றத்தையும் பெருக்குவதாகும். அதுவும் பாடகர்கள் நாம் அறிந்தவர்களாக இருந்தால், அவர்களையும் மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் சூழலாக இருந்தால்….
இ மு வெற்றிவளவன் எண்பதுகளில் அருகே சென்று பேச வாய்த்த அருமையான கவிஞர், பாடலாசிரியர். ‘ஈர நாற்றுக் கட்டு சுமந்தேன் உச்சி எரிய….நான் உள்ளதெல்லாம் சொல்லியறியேன் செல்லக் கிளியே’ என்ற பாடலை எழுதி இருக்கிறேன், எப்படி இருக்கிறது என்று அவரே பாடிக் கேட்ட நினைவு மங்கலாக இருக்கிறது. பின்னொரு சமயம் வேறொரு பாடல்….செருப்பு தைக்கும் தொழிலாளியின் குரலை வேறு யார் பாடல் ஆக்கி இருக்கிறார்….
மகத்தான தோழர் விபி சிந்தன் மே 1987ல் மறைந்தபோது, பெரம்பூர் குக்ஸ் சாலை ஏ பி நினைவகத்தில் அவருடல் தொழிலாளி வர்க்கத்தின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருக்கையில், ஒலிபெருக்கியில் மிக மிக உருக்கமாக ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்தது, பாடகர் யாராக இருக்கும் என்பது முதல் சொல்லிலேயே பிடிபட்டது. அந்தப் பாடலை எழுதியதும் வெற்றி வளவன் தான்.
மலையாள தேசம் தந்த மாணிக்கமே – தமிழ்
மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே
போராடி வாழ்ந்தவரே சரித்திரமே – உங்கள்
போராட்டம் என்றும் எங்கள் படிப்பினையே
அன்று மாலை இரங்கல் கூட்டம் ஓட்டேரி இடுகாட்டில் நடக்கையில், தோழர் விபிசி மறைவின் அதிர்ச்சியில் பேச இயலாது உடைந்துபோய்க் கதறியவர் விடுதலை போராட்ட வீரர் தோழர் பி இராமமூர்த்தி. அவரையும் டிசம்பர் 15, 1987 அன்று பறிகொடுத்தோம். அன்று காலை சென்னை வடபழனியில் தொடங்க இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டுக்கு வரவேற்புக்குழு தலைவரே அவர் தான். அவரது உடலும் அதே குக்ஸ் சாலை அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கையில், சிந்தன் அவர்களுக்கு எழுதிய பாடலில் சில திருத்தங்களோடு வெற்றி வளவன் எழுதிய பாடலையும் அதே பாடகர் மிகவும் நெகிழ்ச்சியுற வைக்கும் குரலில் இசைத்தார்.
இதய வானிலே உதய தீபமாய்
இடது சாரிகள் வளரும் நேரத்தில்
அகில இந்திய வாலிபர் சங்க மாநாட்டுக்கு நீ
தலைமை ஏற்றும் வரவில்லையே, ஏன் தோழனே…
என்ற இடத்தில் அங்கே கதறி அழாதார் கிடையாது. அடுத்த வரிகளில், ‘தஞ்சைத் தரணி தந்த மாணிக்கமே, தமிழ் மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே’ என்று கொணர்ந்திருந்தார் வளவன். அந்தப் பாடலை இசைத்தவரைத் தான் திருமண வரவேற்பில் பார்த்தது.
மக்கள் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் குறித்த பாடல்களை பொதுவுடைமை இயக்கம் பதிவு செய்து ஒலிப்பேழைகளில் கொண்டுவந்தபோது, ‘காலத்துக்கும் உழைச்சு உழைச்சுக் கண்டது என்ன மாமா, காளையாட்டம் நேத்து இருந்த உடம்பு போச்சுதே வீணா’ என்ற பல்லவியை அபாரமாக வாணி ஜெயராம் தொடங்க, அவரோடு இணைந்து பாடி இருந்த உதய பாண்டியன் தான் அவர்.
அண்மையில் ஒரு திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்த மேடை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அத்தனை அசத்தலாக பாடிக் கொண்டிருந்தார் ஒருவர். முதல் பார்வையிலேயே, அந்தக் குரலைக் கேட்டதுமே பிடிபட்டுவிட்டது. மின்னலும் இடியும் ஒரு சேர நிகழ்வது போல் உணர்ந்த இன்ப அதிர்ச்சி நேரமது.
பாடல் முடியக் காத்திருந்து, ‘தோழர் உதயபாண்டியன் தானே…’ என்றதும், அவரும் சட்டென்று அன்போடு இறங்கி வந்து, ‘முப்பது வருஷம் ஆகி இருக்குமா, பார்த்து!” என்று கேட்டார். ‘அருமையாகப் பாடினீர்கள் தோழா….அவங்களுக்கும் சொல்லுங்க” என்றதும், ‘பர்வீன்’ என்று அழைத்து உடன் பாடிய பாடகிக்கும் பாராட்டைச் சேர்த்தார். பாடலின் நுட்பமான இடங்களை அத்தனை அம்சமாகக் கொண்டு வந்திருந்தார் உதயபாண்டியன்.
கோவில்பட்டியின் முற்போக்கு வாசகர் பள்ளியைச் சார்ந்த பாரத ஸ்டேட் வங்கி தோழர் பால்ராஜ் அவர்களுடைய மகள் திருமண வரவேற்பில், வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) ஸ்ரீதர் அவர்களை சந்தித்ததும் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி, தோழர் உதய பாண்டியனைப் பார்த்ததும் பன்மடங்கு பெருகியது. இசைக் குழுவின் தபேலா கலைஞரின் வாசிப்பும் அபாரம். அவர் வாசிப்பின்போதே என் கொண்டாட்ட உணர்வைக் கண்களாலேயே கடத்த, அவரும் வாசித்தவாறு அதை ஏற்றுக் கொண்டு விடுத்த புன்னகை உருவிலான பதிலை எழுத்தில் வடிக்க முடியாது.
முதல் மரியாதை படம் மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி இருவரின் மிகச் சிறந்த பாடல்களை இளையராஜா இசையில் வழங்க வைத்தது. அவற்றில் அம்சமான ஒன்று தான், அன்று உதயபாண்டியன் பாடியது.
காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ்தல் மட்டுமல்ல, ஆதரவு பட்டதே இன்பம் என்று எழுதிச் சென்றாள் அவ்வை. அந்த ஆதரவு படும் பாடு தான் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்தப் பாடலின் கதைக் களம், சாதீய பெருமிதத்தைக் கீழிறக்கி அந்தக் கம்பத்தில் காதலின் கொடியேற்றுவதைச் சொல்கிறது. பிரச்சனைகளின் அடிவேரில் சாதி இருக்கிறது, ஆனால், மானுட வரலாற்றின் வேரில் தூய அன்பு தான் இருக்கிறது. அந்த வெட்டி வேர் வாசம் தான் பாடலின் பல்லவி.
பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு, மண்ணின் கவிஞர் என்ற அடைமொழியை பாடல்களுக்கான ஒலிப்பேழை அறிமுகத்தில் சொல்லியிருப்பார் இயக்குநர் பாரதிராஜா. ராக ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் என்பது ராஜாவுக்கு அவர் கொடுத்த பாராட்டு. நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் முக்கியமாகப் பேசப் படவேண்டிய ஒன்றாக அமைந்த படத்தில் ராதாவுக்கு வாய்த்த இடமும் சிறப்பானது. இந்தப் பாடலில் தோன்றும் பாத்திரங்கள் – பாடல் முடிவில் உருளும் பாத்திரங்கள் வரை அத்தனை செம்மையான நடிப்பை வழங்கி இருப்பார்கள்.
எந்த இசை முன் பொழிவும் இன்றி, திடீர் என்று பெய்யத் தொடங்கும் மழை போல், சட்டென்று பல்லவியை எடுக்கிறார் எஸ் ஜானகி, ‘வெட்டி வேரு வாசம், வெடலப் புள்ள நேசம்’ என்று! அதிலிருந்து, ‘பூவுக்கு வாசம் உண்டு, பூமிக்கும் வாசம் உண்டு….’ என்று அவர் கதாபாத்திரத்தின் பாச உணர்ச்சியை நீட்டிக்கும் இடத்தில், ‘வேருக்கு வாசம் வந்ததுண்டோ…’ என்று பற்றிக் கொள்ளும் மலேசியா வாசுதேவன், ‘மா….னே’ என்று அந்த உணர்வை அப்படியே திரும்பக் கையளித்து, பல்லவியைச் சென்றடைய, லயிக்க வைத்துவிடுகிறது தாளக்கட்டு.
முதல் சரணத்தை நோக்கிய உணர்ச்சி வெளிப்பாட்டில் வயலின்களின் ஆரத் தழுவலும், புல்லாங்குழலும் மட்டிலுமே அல்ல, ஷெனாய் உள்பட கொண்டு வந்திருப்பாரோ ராஜா என்ற தேடலில், கிடாரின் முத்தத் துளிகளும், அபாரமான ஷெனாய் வாசிப்பும், நிழலோட்டமாக கிளாரினெட் இசையும், துந்தனா கருவியும் இருப்பது நோட்ஸ் குறிப்பேட்டில் காணக் கிடைத்து குதூகலிக்க வைத்தது. கதைக் காட்சிக்கான பாடலை அல்லது அதற்கான இசையை மட்டுமல்ல, அதற்குமேல் சென்று அந்த நேரத்து உணர்வுகளையும் தேர்ச்சியாக ரசிகர்களைச் சென்றடைய வைக்கும் ராஜாவின் ஞானம் அபாரமானது. புல்லாங்குழல் சரணங்களுக்கு இடையே வரும் போதும், சரணங்களில் வரிகளுக்கு இடையே நுழைந்து வெளிப்படும்போதும் காதல் தாபத்தையும், மோகத்தையும் பிழிந்து கொடுக்கிறது எனில், சமூகத்தின் எதிர்வினைகளை மற்ற கருவிகளின் வழி கேட்க முடியும் பாடல் நெடுக.
எதிர்ப்புகளின் இடையே விளையும் காதல், காதும் காதும் வைத்ததுபோல் பரஸ்பரம் இரகசியமாகத் தானே பரவும், மலேசியா வாசுதேவன் குரலில் அந்த வேதியல் பொருள் இழைத்துக் குழைத்து வழங்கப்பட்டிருக்கும்.
முதல் சரணத்தின், ‘பச்சைக் கிளியோ….’ என்ற தொடக்கத்தில் சிறகு சிலிர்த்துக் கொண்டு காதல் உறவைப் பறந்து போய்த் தேடும் கிளி, ‘இச்சைக் கிளியோ….’ என்ற நீட்சியில் தக்க இடத்தை வந்தடைந்து கொஞ்சத் தொடங்கி விடுகிறது. பச்சை மனசில் காதல் நெருப்பு பத்திக்கிருச்சு என்பதை ஜானகி என்னமாகப் பற்ற வைக்கிறார் ! தங்கள் காதலின் கம்பீரத்தில் சமூகத்தைப் பார்த்து இருவரும், ‘கையைக் கட்டி நிக்கச் சொன்னா, காட்டு வெள்ளம் நிக்காது, காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது’ என்று இசைப்பது ஒரு கோட்பாட்டின் பிரகடனம் போல் ஒலிக்கிறது. அடுத்த வரிகள் அவற்றை மேலும் அழுத்தமாகப் பதிக்கின்றன. சரணத்தின் நிறைவில் ஒரு சொடுக்கு போட்டு முடித்து, பல்லவியில் மீண்டும் சுவாரசியமாக வந்து இணையும் தபேலா தாளத்தின் கொண்டாட்டம் இனிமையானது.
இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் ராஜா சூழலின் உணர்ச்சிகளை வழங்கும் கருவிகளாகத் தேர்வு செய்து (இசைக்குறிப்புகள் பார்த்தால் சந்தூர், கலிம்பா என்று விரிகிறது….இத்தனை நுட்பங்கள் எல்லாம் கற்காமல் போனோமே என்று மீண்டும் தோன்றியது) பயன்படுத்தி இருப்பது பாடலோடு மேலும் நெருக்கத்தைக் கூட்டுகிறது.
இரண்டாம் சரணத்தை ஜானகி முன் மொழிய, வாசுதேவன் வழி மொழிகிறார். ‘உன்னக் கண்டு நான் சொக்கி நிக்கிறேன்’ என்று ஜானகி இசைப்பதில், அந்த ‘நான்’ எத்தனை சுழற்சிக்குள்ளாகிச் சொக்க வைக்கிறது. ‘கண்ணுக்குள்ள நான் கண்ணி வைக்கிறேன்’ என்னுமிடத்தில் அந்த மயக்கம் குரலில் மேவிவிடுகிறது. ‘சொல்லாமத் தான் தத்தளிக்கிறேன்…தாளாமத் தான் தள்ளி நிக்கிறேன்’ என்ற வரிகளில் குரலில் தவிப்பின் மை தொட்டு எழுதுகிறார் வாசுதேவன். அடுத்த இரு வரிகள் திரைக்கதையின் உட்கருவைப் பேசுகின்றன. ‘குருவி கட்டும் கூண்டுக்குள்ள குண்டு வைக்கக் கூடாது’ என்பது மிக முக்கியமான வரி.
‘புத்தி கெட்ட தேசம் பொடி வச்சுப் பேசும்’ என்பதை ஜானகி எத்தனை அவஸ்தை பொங்கும் பதைபதைப்போடு வெளிப்படுத்துகிறார். ‘சாதி மத பேதமெல்லாம் ..’ என்று ஓங்கரிக்கும் மலேசியாவின் குரல், ‘முன்னவங்க செஞ்ச மோசம்’ என்று தணிவான குரலுக்கு இறங்கி அநீதியைச் சாடும் இடத்தில், ஆணவக் கொலைக் களங்களில் உண்மையை உரத்துப் பேச முடியாத நெருக்கடியை பிரதிபலிக்கிறது.
பாடல் வெளிவந்த காலத்தைவிடவும் இப்போது ஆகப் பொருத்தமானது என்று தோன்றும் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், இசை இந்த உலகத்தின் வெறுப்பு உணர்ச்சிகளைக் களை பிடுங்கிப் போட்டுவிடக் கூடாதா, சமூகத்தின் இதய சாளரத்தை மேலும் கூடுதலாகத் திறந்து கொடுத்துக் காற்று தவழ விடாதா என்ற உணர்வு மேலிடுகிறது.
உன்னதமான உணர்வுகளை இன்பியலாகவோ, துன்பியலாகவோ கிளர்த்தி விடுகிறது இசை. நேருக்கு நேர் நின்று பேசுகையில் சொல்ல முடியாத சொற்களை, ஒப்புக் கொள்ள முடியாத சங்கதிகளை இரவின் தனிமையில் கேட்கும் இசை உட்புகுந்து கண்ணீராக மொழிமாற்றம் செய்து வரவழைத்துவிடுகிறது. சமூகத்தின் மனசாட்சியை இசை நிச்சயம் அசைத்துக் கொண்டே தான் இருக்கிறது.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
பருவ மழை தொடக்கம் கட்டுரை – புஷ்பவேணி
மாலை 4 மணி… வழக்கத்துக்கு மாறாக சற்று முன்கூட்டியே அலுவலகம் விட்டு வீட்டுக்கு கிளம்பினோம் நானும் என் தோழியும். மழைக்கு முன்பு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் வண்டியின் வேகத்தை கூட்டினாள் தோழி. எதிர்பார்த்த(பயந்த)படியே புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் தூறலாக ஆரம்பித்த மழை, கனமழையாக பரிணமித்தது. வேறுவழியின்றி ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, நனையா வண்ணம் நடைபாதையில் நின்று கொண்டோம்.
சாரல் தெறித்து, எழுந்த இதமான குளிரின் காரணமாக சேலைத் தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டு, மழையில் மனம் லயிக்க ஆரம்பித்தேன். சிலப்பதிகாரத்தில் உள்ள “மாமழை போற்றுதும்” “மாமழை போற்றுதும்” என்ற சிந்தியல் வெண்பா நினைவுக்கு வந்தது.
“வெயிலின் சுத்தம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்” என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வந்தன. வெயிலின் சுத்தம் என்றால் மழைக்கு சுத்தம் இல்லை என்றுதானே அர்த்தம்… உலகிலேயே தூய்மையான நீர் மழை நீர்.
உலகத்தையே சுத்தப்படுத்திவிட்டு, தான் அசுத்த பட்டுப்போகும் மழைக்கு இப்படி ஒரு பழியா? இவ்வாறான சிந்தனையோட்டத்தில் என்னை அறியாமல், உதட்டில் ஒரு விரக்தி புன்னகை.
“என்ன சிரிக்கிற” என்ற தோழியின் குரல் கேட்டு “ஒன்னுமில்ல, சும்மாதான்” என்ற பதிலை உதிர்த்துவிட்டு மீண்டும் மனம் மழையின் மீது லயிக்க ஆரம்பித்தது. வானுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளிக்கோல்களை நிறுத்தி வைத்தது போல், ஆர்ப்பாட்டமாக கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை….
மழையின் சிறப்பை உணர்த்(ந்)த, வள்ளுவர் பத்து குறள்களை இயற்றி இருந்தாலும் ஒரு குறள் மட்டும் தடுமாற்றம் இல்லாமல் சொல்ல தடுமாறித்தான் போவோம்.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஊம் மழை” சிறுவயதில் நண்பர்கள் குழுவில் இக்குறளை சத்தமான குரலில் சொல்லி பழகியது நினைவுக்கு வர மீண்டும் ஒரு புன்னகை என்னை அறியாமல்..
“என்ன யோசிச்சிட்டு இருக்க, ஏன் சிரிக்கிற”
என்ற தோழியின் குரல் கேட்டு மீண்டும் “ஒன்னுமில்ல” என்ற பதிலையே உதிர்த்தேன். பெருமழை லேசான தூறலாய் வலுவிழந்து இருந்தது.
“மழை விட்டுடுச்சு வா போலாம்” என்ற தோழியின் குரலுக்கு இணையாக மற்றொரு குரல் அருகில் கேட்டது.
நடைபாதை வியாபாரி ஒருவர் மழையின் காரணமாய் கடையை ஏறக்கட்டி விட்டு, மழை நின்றதும் மீண்டும் கடையை விரிக்க ஆரம்பித்தார்.
“சனியன் புடிச்ச மழ, பொழப்ப கெடுக்கறதுக்கே வருது”
இவ்வளவு நேரம் என் சிந்தனையில் நான் சிலாகித்து, ரசித்துக் கொண்டிருந்த மழைக்கு இப்படி ஒரு வசவா? லேசான சிந்தனை கலக்கத்துடன் வண்டியில் அமர, மீண்டும் வண்டியை வேகமாக விரட்டத் தொடங்கினாள், என் தோழி.
“விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே பசும்புல் தலை காண்பதரிது”.
மழையின்றி ஒரு புல் பூண்டு கூட முளைக்காது என்ற வள்ளுவனின் பாடல் ஒரு பக்கம்.
“பொழப்ப கெடுக்கவே வருது இந்த மழை” என்ற சாடல் மறுபக்கம்…. என யோசித்தபடியே பயணித்தேன்.
“மழை திரும்ப வரதுக்குள்ள நான் வீட்டுக்கு போய் ஆகணும்” என்றபடி என் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினாள் என் தோழி. வண்டியை விட்டு இறங்கியபடி, “பார்த்து போ” என்றேன்.
அவள் கையசைத்து விடை பெற்ற பிறகும் என் சிந்தனையோட்டம் நின்றபாடில்லை. “நீரின்றி அமையாது உலகு” என்ற மழைக்கே, இத்தனை வசவாளர்கள் எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்? சிந்தனை சுழன்று அடித்தது. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல், எனக்கும் இந்த மாலைப்பொழுதில், மழைச்சாரலில் ஞானம் வந்தது போல் உணர்ந்தேன். நம்மை காயப்படுத்தும் விமர்சனங்களையும், அழ வைக்கும் வசைகளையும் தாண்டி செல்ல வேண்டும் என்ற பாடத்தை மழை எனக்கு உணர்த்தியதாய் உணர்ந்தேன்.
“வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று” என்ற குறளும்,
“சனியன் புடிச்ச மழை” என்ற குரலும் சிந்தனையில் சுழன்றன.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் மழை தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருந்தது. எனக்குள் ஒரு தெளிவு வந்த உணர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.
– புஷ்பவேணி
தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி
இசைமேதை இளையராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து வந்திருக்கிறேன். அவரின் குரல் சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. எனக்கு அவர் பாடிய பாடலென்றால் உயிர். அந்தக் குரல் அத்தனை இதமானதாகத் தோன்றும் எனக்கு. வைரமுத்து அவர்களின் கட்டுரை வழியாகவோ பாரதிராஜா அவர்களின் வாழ்க்கை சரிதத்திலிருந்தோ இளையராஜா பற்றிய செய்தி வரும்போது லயித்து விடுவேன். அதற்காக எனக்கு பாரதிராஜா வைரமுத்து இருவரையும் பிடிக்காதென்று அர்த்தமில்லை இந்த இருவரையுமே எனக்கு இளையராஜா அளவுக்குப் பிடிக்கும்.
இளையராஜா போல் தமிழை மிக சரியாக உச்சரித்துப் பாட வேறு ஒருவரைத் தேடுவது கடினம். மொழி இலக்கணத்திலும் அவருக்கு ஞானம் அதிகம். “மயிலு” எனும் படத்தில் தான் அவர் இசையில் முதன்முதலாக பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தில்,
“நம்மலோட பாட்டுத்தான்டா
ஒலகம்பூரா மக்கா
கண்ட பாட்ட நாங்க கேக்க
காணப் பயறுத் தொக்கா”
என்றொரு பாடல் எழுதியிருப்பேன். அதில் முதலில் ‘காணப் பயிரு’ என்று தான் எழுதியிருந்தேன், அவர் தான் எனக்கு “காணப் பயறு” என்பதுதான் சரியென்று கற்றுத் தந்தார். அதே போல் அவர் கொடுக்கும் தத்தகாரம் மிக எளிமையாக இருக்கும். அவரின் தத்தகாரத்திற்கு யார் வேண்டுமானாலும் பாடல் எழுதிவிடலாம். பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் தத்தகாரத்தை தரும்போதே எழுபது சதவீத வேலையை முடித்து விடுவார்கள் ஆனால் இளையராஜா அவர்கள் மெட்டைத தருகிபோது மிக மிக ராவாக இருக்கும், ஆனால் அதன் பின் அந்தப் பாடலை “அவனா இவன்” என்பதுபோல் அசத்திவிடுவார். அவர் படத்தில் ஒரு பாடல் எழுதிவிட்டால் போதும் ஒருவன் எப்படி மெட்டுக்கு பாடல் எழுதுவது என்பதை கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம் அவர் மெட்டுப் போடுகிற பெரும்பாலான பாடல்களின் பல்லவியை அவரே எழுதிவிடுகிறார் என்பது அவர் மேலுள்ள குற்றச்சாட்டு எனினும் அவர் எழுதியதற்கு மேலான பல்லவி வரிகளை கவிஞர்கள் எழுதிவிட்டால் அதை ஏற்க மறுப்பவரும் இல்லை.
அவர் இசையில் கடைசியாக நான் எழுதிய பாடல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் “விடுதலை” எனும் படத்திற்கு. அவர்மேல் திரைப்படத்துறையில் ஒரு பார்வை இருக்கிறது அவர் ரொம்பவும் கண்டிப்பானவர் என்பார்கள். ஆனால் நான் பணிசெய்த குறைந்த படங்களின் அனுபவத்தில் அவரைப்போல் ஒரு எளிமையான இலகுவான மனிதரைப் பார்க்க முடியாது என்பதுபோல் இருந்தது. அவரருகே அமர்ந்துவிட்டால் அத்தனை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவ்வளவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படித்தான் இயக்குநர் பாலா அவர்கள் மீதும் ஒரு பார்வை உண்டு மற்றவர்களுக்கு ஆனால் நான் அவரோடு இரண்டொரு பட வேலைகளில் பாட்டுக்காக உரையாடிக்கொண்டிருக்கும் போது நான் அதுவரை அவர்மேல் வைத்திருந்த அத்தனை தப்பிதமான பிம்பங்களும் உடைந்துபோயின. இயக்குநர் பாலா மிகவும் மென்மையானவர். நேர்மையானவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பிறரை மரியாதையோடு நடத்துகிற மாண்பு மிகப் பெரியது.
என் சிறு பிராயத்தில் இளையராஜா அவர்களின் பேட்டி ஒன்றை தூர்தர்ஷனில் பார்த்தேன். அப்போது நிருபர் கேட்ட கேள்வியும் பதிலும் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. நீங்கள் எப்படி இசையை உருவாக்குகிறீர்கள்? நான் எதையும் உருவாக்குவதில்லை இந்த பூமி இசையால் நிரம்பியிருக்கிறது. பெய்யும் மழைத் தூறலிலும் ஒரு ரிதம் இருக்கிறது அதை எப்படி இசையாக்குவது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். கிராமத்திலிருந்து வந்த நீங்கள் எப்படி நகரத்து வாழ்வோடு ஒத்துப் போனீர்கள் என்பது போன்ற ஒரு கேள்வியை நிருபர் எழுப்புமுன் இடை நிறுத்தி, 100 வருடங்களுக்கு முன் சென்னையும் கிராமம் தான் என்று சின்னதாகச் சினந்தார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு எனக்கு அப்படி ஒன்று இல்லை, நான் இப்போது உங்களோடு பேசும் நேரத்தே வேண்டுமானால் எனது ஓய்வு நேரமென்று சொல்லலாம் என்றார். இப்படியாக அப்போதைய இளையராஜா அவர்களின் தீர்க்கமான எண்ணத்திற்கும் செயல்பாட்டிற்கும் இப்போதிருக்கும் இளையராஜாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவரின் முடிவும் செயல்பாடுகளும் அவரது உரிமை என்றாலும் அவரை விமர்சனம் செய்யும் நண்பர்கள் அனைவரும் அவரின் இசை ரசிகர்களே. அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் காதலை அவர் உணரவேண்டும் என்பதே என் கருத்து.
நான் இரண்டாவதாக இயக்கிய “அருவா” எனும் திரைப்படத்திற்கு நண்பர் ஜெய கே தாஸ் தான் இசை. ஆறு பாடல்களை இழைத்துத் தந்துள்ளார். அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளராக உலகம் அறிந்து கொள்ள இந்தப் படம் வெளியாவது அவருக்குத் துணையாக இருக்குமென நம்புகிறேன். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு காதல் பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்கள் பாடினார்கள். அப்போது இசையையும் பாடல் வரிகளையும் வெகுவாகப் பாராட்டினார். அதில் தந்தையின் அன்பைச் சொல்லுகிற ஒரு பாடல். இந்தப் பாடலை இசைமேதை இளையராஜா அவர்கள் பாடினால் நன்றாக இருக்குமென யோசித்தோம் ஆனால் பிறர் இசைக்கும் இசையில் பாடமாட்டார் எனவும் விதிவிலக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மட்டும் ஒரு படத்தில் பாடியிருப்பதாகவும் கூறினார்கள். ஆனாலும் எனக்கு அவர் குரல் வேண்டும் என்பதால் அவர் குரலையொத்த கங்கை அமரன் அவர்களை அழைந்துப் பாடவைத்தோம் மனம் நிறைவடைந்தது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் தோழர் வேல ராமமூர்த்தி அவர்கள். இந்தப் படத்தின் டப்பிங் பேச வந்த அவருக்கு அந்தப் பாடலை காட்சியோடு பார்த்தவர், நான் எத்தனை படம் பண்ணியிருந்தாலும் எனக்கு இது வேற ஒரு படம் எனச்சொல்லி என்னைக் கட்டியணைத்தார். காரணம் எல்லா படங்களிலும் வேல ராமமூர்த்தி கடுங் கோபக்காரர் என் படத்தில் கனிவான அப்பா.
பல்வவி:
காசு பணமெல்லாம் சும்மா – இவர்
கர்ப்பப் பை இல்லாத அம்மா (2)
எத்தனை முகங்கள்
யாருமற்று அலைய
தண்ணீர் துளிகள் இங்கு
காற்றடித்துத் தொலைய
பிடித்து நடந்து செல்ல
விரல் தரும் மனிதருண்டோ
இவர் போல் அன்பு கொள்ள
கடவுள் உண்டோ
சரணம் – 1
செம்மறி ஆட்டுக்கெல்லாம்
மேய்ப்பவனே அப்பா
பார்வையற்ற மனிதனுக்கு
ஊன்றுகோல் அப்பா
நிலவு அம்மா என்றால்
சூரியன் தான் அப்பா
அன்பை நட்டு வைத்தால்
சொல்லுங்களேன் தப்பா
பாருங்களேன் மாலைக்குள்ள
பல பூவிருக்கும் – அவை
அத்தனையும் கட்டிக்கொண்டு
ஒரு நூலிருக்கும்
சரணம் – 2
பூக்கள் வாசனையை
பூட்டி வைப்பதில்லை
வேர்களை பூமியிங்கு
விட்டுப் போவதில்லை
சொந்த பந்தம் எல்லாம்
சொல்லில் மட்டும் இல்லை
விழுதாடும் அத்தனையும்
ஆலமரப் பிள்ளை
கத்துகிற பறவைக்கெல்லாம்
ஒரு பேர் இருக்கும்
ஒத்தையடிப் பாதைக்கெல்லாம்
ஓர் ஊர் இருக்கும்
தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
ஒரு பாடலை எழுத எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என ஒவ்வொரு பாடலாசிரியரிடமும் கேட்கப்படும் கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொன்ன பதில் அழகானது அதே நேரம் ஆச்சரியமானது. அதிக பட்சம் அரை மணி நேரம் என்கிறார். சில பாடல்களை பத்து நிமிடங்களில் எழுதியதாகவும் பதிவு செய்திருக்கிறார். அது அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் பேராற்றல். நானெல்லாம் பாடல்களை எழுதுகிற அவஸ்தையை அருகில் இருந்து நீங்கள் பார்த்தீரேயானால் என் தெரு இருக்கும் திசையைக் கூட திரும்பிப் பார்க்க மாட்டீர்கள். காரணம், எழுதும் பாடலுக்குள் ஓர் எழுத்தும் எனக்குப் பிடிக்காமல் இருக்கக் கூடாது என்கிற எனது தீவிரம், மற்றும் குப்பைத் தொட்டியில் போடுவதற்கொரு பாடல் வேண்டும் என்று கேட்டாலும் அதை அழகான பாடலாகவே எழுதித்தரும் பழக்கம் என்னிடம் உண்டு. அதனால் அந்த அவஸ்தையை நான் விரும்பியே ஏற்றிருக்கிறேன்.
எழுதி மெட்டமைப்பதில் மெட்டுக்கொரு பரிமாணமும், மெட்டுக்கு எழுதுவதில் எழுத்துக்கொரு பரிமாணமும் உண்டு. இதை அனுபவத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மெட்டுக்கு எழுதும் போது எனக்கு நேரம் கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறது. மெட்டில்லாமல் எழுதுகிறபோது நேர மிச்சமும் சுதந்திரமும் கிடைக்கிறது.
ஒரு பாடல் எப்படி எழுதப் பட்டாலும் அதற்கு இசை அத்துணை முக்கியம். இசை தான் எழுத்துக்களை தேனில் ஊறவைத்து தேரேற்றுகிறது. இசை தான் எழுத்துக்களுக்கு போதை ஊற்றிக் கொடுக்கிறது, அதன் தள்ளாட்டமே நடனமாகிறது. இதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான்,
“கவிதை
மொழிக்கு ஆடை கட்டுகிறது
இசை தான் றெக்கை கட்டுகிறது” என்பார்.
திரைப்படங்களில் ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது பலருக்கும் பிடித்தமான விசயமாக உணர்கிறேன் காரணம், நான் கல்லூரிகளுக்கு விருந்தினராகப் போகிற போதும், நண்பர்கள் வட்டாரத்திலும் நான் பாடலாசிரியரான காலந்தொட்டே கேட்டு வருகிறார்கள் இந்தக் கேள்வியை.
கதையை உருவாக்கும் போதே ஒரு இயக்குநர் பாடலுக்கான இடங்களையும் முடிவு செய்து விடுகிறார். தயாரிப்பாளரிடத்திலும் கதாநாயகன் கதாநாயகியின் முன் கதை சொல்லும்போதும் பாடல் வருகிற இடங்களைக் குறிப்பிடுகிறார். பின்னர் இசை அமைப்பாளரிடம் கதை சொல்லி முடித்து பாடலுக்கான சூழலையும் சொல்லுகிறார். இசையமைப்பாளர் இயக்குநர் திருப்தி கொள்ளும்படியான அளவுக்கு மெட்டுக்களைப் போட்டுக் காட்டுகிறார். இறுதியாக ஒரு படத்திற்கு ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கான மெட்டுக்களைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பாடலையும் யார் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கவிஞர்களின் சமீபத்திய வெற்றிப் பாடல்களை வைத்துக்கொண்டு திட்டமிடுகிறார்கள். அதன்படியே ஒவ்வொரு மெட்டையும் அந்தந்த கவிஞர்களுக்குக் கொடுத்து எழுத வைக்கிறார்கள்.
இன்று நீங்கள் கேட்கும் பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள் அனைத்தும் முதன் முதலில் கேட்கும்போது பாடலை எழுதப்போகிறவர்களுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்று இருக்கும் . ஆரம்ப காலத்தில் தத்தகாரம் புரியாமல் அண்ணன் இயக்குநர் அருள்ராஜன் அவர்களிடம் அவரின் படப்பிடிப்பிற்கு நடுவில் கேட்டுத் தெரிந்திருக்கிறேன். அதன் பின் என் நண்பர் இசையமைப்பாளர் செல்வ தம்பியிடம் சந்தேகத்தை கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.
இப்படி அல்லல்பட்டு தத்தகாரத்தை உள்வாங்கி பின் சொன்ன சூழலுக்கு மீட்டர் பிசகாமல் எழுதவேண்டும். ஒரு பாடலுக்கு ஒன்பது பாடல் எழுத வேண்டும். அப்போது தான் ஒரு பாடல் உருவாகும். இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு பல்லவியிலும் ஒவ்வொரு சரணத்திலும் இரண்டு இரண்டு வரிகளாகப் பொறுக்கி ஒன்று சேர்த்து ஒரு பாடல் உருவாகும். அப்படித்தான் “பீமா” படத்தின் “மெகு மெகு” பாடலுக்கு நண்பர் நா. முத்துக்குமார் 20 பல்லவி நாற்பது சரணம் வரை எழுதினார். ஆடுகளம் படத்தின் “ஒத்த சொல்லால” பாடலுக்கு நண்பர் வெற்றிமாறன் அவர்கள் கேட்காமலேயே 15 பல்லவி, 15 சரணம் எழுதிக் கொடுத்தேன். அவர்களுக்கு எல்லாம் பிடித்துப் போய் எதை வைப்பது எதை ஒதுக்குவது என்பதில் சிரமம் இருந்ததாக இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் சொல்லியிருக்கிறார்.
ஒரு பாடலுக்குத் தேவையான ஒரு பல்லவி இரண்டு சரணங்களை எடுத்துக் கொண்டு இயக்குநரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரிடம் செல்ல, அங்கே வரிகளை இசையமைப்பாளர் அந்த மெட்டிற்குப் பாடிப் பார்ப்பார். எங்காவது மீட்டர் இடித்தால் பாடலாசிரியரை அதை சரிசெய்து கொண்டு பின் ட்ராக் சிங்கர் வைத்து அல்லது இசையமைப்பாளரே ட்ராக் வாய்ஸ் பாடி வைத்துக் கொள்வர். அவசரமாகப் படப்பிடிப்பிற்குக் கிளம்பும் இயக்குநர்கள் ட்ராக் வாய்ஸை மட்டும் பெற்றுக்கொண்டு செல்வதுண்டு. அவசரமில்லையெனில் இந்தப் பாடலுக்குத் தேவையான பாடகரைத் தேர்வு செய்து குரல் பதிவு நடத்தி தேவையான இசைக் கோர்வைகளைச் செய்து மிக்ஸிங் மாஸ்டரிங் செய்யப்பட்டு பாடல் இறுதி நிலை அடைகின்றது.
ஒரு பொறுப்பு மிக்க பாடலாசிரியராக நான் பாடல் பதிவின் போது பாடகரின் மொழி உச்சரிப்பை மிக உற்று கவனிக்கிறேன். மொழி சிராய்ப்பு நடக்கவிடாமல் முடிந்த அளவு சரி செய்கிறேன். பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று எழுபது சேனலுக்கு பேட்டி கொடுக்கிறோனோ இல்லையோ, பாடல் பதிவில் கலந்து கொள்ள பெரும்பாலும் தவிர்ப்பதில்லை. எனக்கு அதைவிட இதுதான் முக்கியம், காரணம் பாடல் பதிவின் போதுகூட பாடலின் மெருகேற்றலுக்காக சில வார்த்தைகளை மாற்றம் செய்வேன். இப்படித்தான் நண்பர்களே ஒரு பாடல் உருவாகிறது.
எழுதுகிற எல்லா பாடல்களும் ஒலிக்கூடத்தின் பதிவுவரை செல்வதில்லை. ஒலிப்பதிவு செய்த எல்லா பாடல்களும் திரைக்கு வருவதில்லை. திரைக்கு வரும் எல்லா பாடல்களும் வெற்றி பெறுவதுமில்லை. அதே போல் வெற்றிபெறும் பாடல்கள் எல்லா நல்ல பாடல்களும் அல்ல வெற்றி பெறாத பாடல்கள் எல்லாம் மோசமும் அல்ல. ஏனெனில் பெரிய ஹீரோக்களுக்கு எழுதப்படுகிற சுமாரும் சூப்பராகிவிடும். புது முகங்களுக்கு எழுதப்படுகிற சூப்பரும் சுமாராகிவிடும்.
திரைப்படப் பாடல்களைப் பொறுத்தவரை பல்லவியின் முதல் இரண்டு வரிகள், மக்கள் முணுமுணுப்பதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்வது வழக்கம். என்னைப் பொருத்தவரை எல்லாவரிகளுக்கும் மெனக்கிடுகிறேன். ஆனாலும் மக்கள் பாடலின் முதல் இரண்டு வரிகளைத் தாண்டி அந்தப் பக்கம் போகமாட்டார்கள். பாடல்களை மனனம் செய்துவந்து பாராட்டுகின்ற சில ரசிகமணிகள் இந்த லிஸ்டில் அடங்கார். ஒரு பாடலின் சரணங்களுக்கே இந்தக் கதி என்றால், “ராக்கமா கையத் தட்டு” பாடலின் இடையே வரும் ‘குனித்த புருவமும்” போன்ற துண்டு வரிகளைப் பிழைக்க வைப்பது பெரும் பாடு. ரஜினி படம் என்பதால் நாவுக்கரசர் எழுதிய தேவாரம் தப்பித்தது. அப்படியான பாடல்கள் எனக்கும் பல அமைந்ததுண்டு அவற்றில் சில உங்களுக்காக.
“ஈட்டி” படத்தில் ‘பஞ்சு மிட்டாய் மேல தீயப் பத்த வச்சாடா”‘ எனும் பாடலின் நடுவே, இளம் பெண்கள் குழுவாகக் கூடி மையத்தில் நின்றாடும் நாயகியின் அழகைப் பாடுவதாக,
“பேரழகாள் வருகின்ற
தெருவை அறிவானோ
கார்முகிலாள் தருகின்ற
அமுதம் குளிப்பானோ
கூர் விழியால் ஒருநாளிவன்
குத்திச் சரிவானோ”
“மதயானைக் கூட்டம்” படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய “கொம்பு ஊதி கொட்டடிச்சு கெளப்புங்கடா சக்க” என்கிற ஒரு திருமண விழா பாடலில், மணமக்களுக்கு திருமணம் முடிந்து முதலிரவுக்கு அனுப்பி வைக்கும் போது மணமகனின் நண்பர்கள் பாடுவதாக அமைந்த வரிகள்,
“சாமந்திப் பூவா
சக்கரப் பாகா
பாத்திட்டு வந்துதான்
சொல்லுங்க…
மூச்சுல வெயில்
கொட்டுறா குயில்
எதுக்க ஆம்பள
நில்லுங்க…
ஒத்தடம் போலத்தான்
நடந்தாள்
ஒருத்தரும் பாக்காத
தடந்தான்
தாழம்பூ அவளோட
நெறந்தான் – அவன்
தன்னையே மறந்து
கெடந்தான்”
நண்பர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், தர்புகா சிவா இசையில் “கிடாரி” படத்தில் மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன், அதன் முழு அனுபவத்தை வேறொரு கட்டுரையில் சொல்ல இருக்கிறேன், அதற்கும் முன்னதாக அந்தப் படத்தில் வரும், “வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும்” எனும் நண்பர் அந்தோனிதாஸ் பாடிய பாடலின் குறுக்காக, சசிக்குமாரும் அவரது காதலி நிகிதா விமலும் ஒரு சிறு வீட்டிற்குள் திட்டமிட்டுச் சந்தித்துக் கொள்கிறார்கள். அவள் முழு மூர்க்கத்தில் காதலனை சுவற்றில் சார்த்தி முத்தம் வைத்து முதலடி எடுத்து வைக்கையில் மனதின் தவிப்பை மருகலாய் எழுதினேன்.
“விரல் தொடும் தூரத்தில்
வர மிருக்கு
போதும் போதுமே நா வாழ
விடிய மறந்திடு ராத்திரியே
வேற எதுவும் வேணா
உருவம் பாத்தே
உசுரு போதே
என்ன மாயந்தான் நீ செஞ்ச
யாத்தே தாங்கல
தூத்தக் காட்டுல
போத ஏத்துதே மீச
தீபம் ஊமையா
போக சாபந்தான்
நானும் போடத்தான் ஆச
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி