நூல் அறிமுகம்: கோ.வசந்தகுமாரனின்  “அரூப நர்த்தனம்” – நா.வே.அருள்

நூல் அறிமுகம்: கோ.வசந்தகுமாரனின் “அரூப நர்த்தனம்” – நா.வே.அருள்




“தரையில் விழுந்த மீனைப்போல் துடிக்க வேண்டும் சொற்கள். நான்கு வரிகளில் உச்சம் தொடவேண்டும். இல்லையெனில் சராசரித் துணுக்குகளின் தரத்துக்குத் தாழ்ந்துவிடும் குறுங்கவிதை.” தான் சொன்ன இலக்கணத்தை கவிதைக்குக் கவிதை நிரூபித்துக் காட்ட முயன்றிருப்பவர் கவிஞர் கோ.வசந்தகுமாரன்.

மனிதன் என்பது புனைபெயர் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு கவிதை நாற்காலியை நிரந்தரமாக்கிக் கொண்டவர். வாழ்க்கையை அநாயசமாகத் தன் வரிகளில் அள்ளித் தெளிப்பவர்; அள்ளித் தெளித்ததெல்லாம் அற்புதக் கோலங்களாகிவிடும்.

நெடுங்கவிதைகளிலிருந்து குறுங்கவிதைகளை நோக்கிய இவர் பயணம், ‘சதுரப் பிரபஞ்சம்” தொகுப்பில் தொடங்கியிருக்கிறது. இவரது குறுங்கவிதைகளில் நறுக்குத் தெறித்த கூர்மை. சொல் மீன்களைக் கவ்விக் கொள்வதில் மீன்கொத்திப் பறவையின் துல்லியம், கவிதை வேட்டையில் கவித்துவத்தைக் குறிவைத்தப் புலிப் பாய்ச்சல் இவற்றை அவதானிக்க முடிகிறது. சதுரப் பிரபஞ்சம் தொகுப்பைப் பற்றி எழுதுகிறபோது இவரைத் தமிழகத்தின் குஞ்ஞுண்ணி மாஸ்டர் என்று எழுதிய எனது விமர்சனம் ஞாபகத்திற்கு வருகிறது. இவரது சமீபத்துத் தொகுப்பு “அரூப நர்த்தனம்”.

வசந்தகுமாரனின் கவிதைக் கவனம் குறுங்கவிதைகள் பக்கம் திரும்பியிருப்பதை அவருடைய சொற்களிலேயே கவனிக்க முடியும்:

“உண்மையில் சொல்லப்போனால் நீண்ட கவிதைகளை நான் வாசிப்பதில்லை. தொப்பை விழுந்த பேரிளம் பெண்களைப் போன்றவை அவை. எனக்கோ கைவளையை ஒட்டியாணமாக அணியும் பெண்களைப் போன்றிருக்கும்
குறுங்கவிதைகளைத்தான் பிடிக்கும்.”

நீலம் பாய்ந்த அத்துணை பெரிய வானத்தில் ஒரு சிறிய வானவில்தானே கவனத்தை ஈர்த்துவிடுகிறது! கண்களைக் கவ்விக் கொள்கிற விசை ஒரு சிறிய மச்சத்திற்குத்தானே இருக்கிறது!

இவரது கவிதைப் பயணத்தைப் பற்றிய அவரது சுய அறிக்கையைப் பார்க்கலாம்:
“பயணம் தொடர்கிறேன்
தாகத்திற்கு என் கண்ணீரை
நானே குடித்துக் கொண்டு
பயத்திற்கு என் கைகளை
நானே பற்றிக் கொண்டு
பசிக்கு என் புலன்களை
நானே ருசித்துக் கொண்டு
காமத்திற்கு என் குறியை
நானே புணர்ந்து கொண்டு
இடுகாட்டுக்கு என் உடலை
நானே சுமந்துகொண்டு.”

சுவாரசியமாக இந்தத் தொகுப்பின் மிக நீளமான கவிதை இதுதான். இந்தக் கவிதையிலேயே ஒரு பெருங்கவிதைக்காரனின் தத்துவார்த்தப் பார்வையை அவதானிக்க முடியும்.

ஒரு தேர்ந்த கவிஞனின் தெறிப்பைத் தொகுப்பு முழுவதும் காண முடியும். கனவுகளின் கவிதை அவதாரம அல்லர் இவர். ஆனால் வழங்குவதெல்லாம் தத்துவ வாமனர்கள். வாழ்க்கையைப் பற்றிய பார்வைதான் இவரது கவிதை வள்ளல்தன்மைக்குக் காரணம். தனது அம்பறாத் தூணியில் நிறைய அனுபவ அம்புகளைச் சேமித்து வைத்திருக்கிறார்; மறைந்திருந்து தாக்கவில்லை. மனம் என்னும் மராமரங்களைத் துளைத்துச் செல்கிறது. க்ஷணத்தில் நடந்தேறிவிடுகிறது வாழ்க்கையின் வாலிவதம்.
“இத்தினியூண்டு
நக்கக் கிடைத்த
ஊறுகாய்
இந்த வாழ்க்கை.”
இவரது ஊறுகாய் நமக்கு உணவாகிவிடுகிறது.

மனிதன் மீதான எள்ளல் ஒரு சிறந்த பகடியாக உருமாற்றமடைகிறது….
“புழுவை
வண்ணத்துப்பூச்சியாக்குகிற
காலம்தான்
மனிதனைப் புழுவாகவும்
ஆக்குகிறது.”
இதே பகடிதான் வாழ்க்கையின் சுகதுக்கங்கள் பற்றிய மதிப்பீடுகளையும் உருவாக்குகிறது…
“எனக்கு
நல்ல பெயரும் உண்டு
கெட்ட பெயரும் உண்டு.
நல்ல பெயர்
என் திறமையால் வந்தது.
கெட்ட பெயர்
பிறர் திறமையால் வந்தது.”
சொல்ல வந்ததைப் பளிச்செனச் சொல்லிவிடுகிற பட்டவர்த்தனம்தான் வசந்தகுமாரனின் கவிதை முத்திரை. சொல்லுவதில் ஒரு வித சாமர்த்தியம்; ஒரு வித சமத்காரம்!
“புத்தனை நான்
வணங்குவதில்லை.
ஆசைகள் துறந்தவன்
வரங்களையா வைத்திருக்கப்போகிறான்
வழங்க?”

“கடவுள் சிலநேரம்
ராட்சசிகளை
அழகாகப் படைத்துவிடுகிறான்
தேவதைகள்
பொறாமைப்படும் அளவுக்கு.”

தன் முதுகிலிருக்கும் அழுக்கு தனக்குத் தெரிவதில்லை என்கிற பழைய சொலவடைதான். அதை நவீனத் தொழில்நுட்பத்தால் புதிய படிமமாக மாற்றிவிடுகிறார். இயல்பில், மனிதன் சுயபரிசோதனை செய்து கொள்வதேயில்லை; தவறுகளை அறிந்துகொள்ளத் தயாரில்லை. அடுத்தவரைப் பழிசொல்லும் அற்பத்தனத்திற்குக் காரணம் அவனது அகங்காரம். வாழ்க்கை என்னும் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்று ஆராய்ச்சி செய்ய மனிதர்கள் தயாரில்லை. கறுப்புப் பெட்டி
சொல்லும் கதைகளைக் கேட்க அவர்களிடம் காதுகளில்லை.
“ஒரு கறுப்புப் பெட்டி உண்டு.
றெக்கைகள் முறிந்து
காலக் கடலில்
அவன் விழுகிறபோது
யாரும் அதைத்
தேடுவதேயில்லை.”

நாத்திகக் கொள்கையின் உச்சத்தில் பயணம் செய்த பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியது அன்றைக்குத் தலைப்புச் செய்தியாக மாறியது. எப்படி நிகழ்ந்தது? அவர் சொன்ன ஒரே வாசகம்….

“கடவுள் இல்லையென்றுதான் காலமெல்லாம் சொல்லிவந்தேன். இப்போது நான் ஏன் ஆத்திகத்திற்கு மாறிவிட்டேன் தெரியுமா? கடவுள் இல்லையென்றால் பரவாயில்லை. ஒருவேளை இருந்துவிட்டால்….. என் வாழ்நாள் முழுவதும் எதைச் சொல்லிவந்தேனோ அது முற்றிலும் பொய்யாகிவிடும் அல்லவா? அந்த ஒரு விஷயம்தான் நான் ஆத்திகத்திற்கு மாறியதன் அடிப்படைக் காரணம். பணப்பெட்டி மாறியதுதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள்”

கவிஞருக்குள் பெரியார்தாசன் பேசுகிறார்…
“இல்லையென்று சொல்வதை
நிறுத்திக் கொண்டேன்
கடவுள் ஒருவேளை
இருந்து தொலைத்துவிட்டால்
என்ன செய்வது?”
அவசியமே இல்லாமல் வந்து விழுந்த ‘என்ன செய்வது?’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?

நட்சத்திரங்கள் மட்டும் கவிதைகள் இல்லை. ஒரு நட்சத்திரத்திற்கும் மற்றொரு நட்சத்திரத்திற்கும் இடையிலுள்ள இருட்டுதான் எழுதாத கவிதை. எழுதாத கவிதைக்குத்தான் அடர்த்தி அதிகம். சொல்லாதவற்றைச் சொல்ல வைப்பவைச் சுடர்மிகும் கவிதைகள். அப்படியான சில கவிதைகளுக்கு உதாரணமாக ஒன்று…

“தூண்டிலின்
இரு முனைகளிலும்
இரை.”
புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் பசியின் இடைவெளியா? மரணத்தின் பள்ளத்தாக்கா? பசியே மரணமா? நான்கு சொற்களுக்குள் அடைபட மறுக்கும் நானாவிதமான அர்த்தங்கள். கால காலமாகக் கவிதைத் தக்கையின் அசைவிற்காகக் காத்திருக்கும் நம் கண்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறோம்; “யாருக்கு யார் இரை?”

கவித்துவ அழகில் காணாமல் போய்விடுகிற சில துவைக்காத மேலோட்டமான சமூகப் பார்வை, திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படும் கவியாட்சி என்று ஒன்றோ இரண்டோ இருக்கக் கூடும். உண்ட உணவுக்கு அந்தக் கருவேப்பிலைகளும் சுவையூட்டிவிடுகின்றன!

தன் சொற்களின் படகுகள் கொண்டே வாழ்க்கைக் கடலின் அலைகளை அளந்துவிடுகிற அசாதரணம், ஒரு மேகத்தையே உருமாற்றி வானத்தை வெவ்வேறு உருவங்களின் திரைச்சீலையாய் மாற்றிவிடுகிற கவித்துவம், பறவை விமானமாகிப் பறக்கிற அனுபவ பாவனை என்று விதவிதமான பயணங்களை நிகழ்த்துகிறான் இந்தக் கவிஞன்.

வாழ்க்கையின் சகலவித இடிபாடுகளுக்கிடையே நசுங்கி நசுங்கி உயிர் வாழ்கிற கரப்பான் பூச்சிகளாக மனிதர்கள் மாறிவிட்டார்கள்.

வாழ்க்கையின் தவிர்க்க முடியா முரண்களுடன் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறார்கள்… இதழ்கள் ஈர்க்கின்றன; முட்கள் குத்துகின்றன.
“பறிக்காதே என்று முட்களாலும்
முத்தமிடு என்று இதழ்களாலும்
இரண்டு கட்டளைகளை
இடுகிறது ரோஜா”.

எல்லோரையும் போலவும்
இருந்து பார்த்துவிட்டேன்
என்னைப் போல்தான்
இருக்க முடியவில்லை
என்ற இயலாமையின் சுயபச்சாதாபம்,

அவனைத் தெரியும்
இவனைத் தெரியும்
எல்லாம் சரிதான்
உன்னைத் தெரியுமா
உனக்கு?
என்று சொடுக்குகிற சாட்டையடி.

பின்னால் வருபவனுக்கு வழிவிட அலைகளிடம் கற்றுக்கொள்கிற இயற்கை ஞானம், பூக்களின் வாசத்தைச் செதுக்குகிற கவிதை உளிக்காக ஏங்குகிற தியானம், உயரத்திலிருந்து விழுந்தால் உடையாமலிருக்க இறகாக மாறிவிடுகிற பக்குவம், உட்கார்ந்தவன் மீதே சாய்ந்துகொள்கிற சந்தர்ப்பவாத நாற்காலிகளை அடையாளம் காணுகிற அறிவார்த்தம், இறந்தவனுக்காகக் கையில் வைத்திருக்கும் சவப்பெட்டி அளவுகோல், மீனின் நிழலுக்காகத் தூண்டில்போடும் கவிதை மெனக்கிடல், ஜனனம் மரணம் குறித்தத் தத்துவம் என்று கவிஞர் வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் பிரயாணம் செய்கிறார்.

“தேநீர் பருகுதல்
பழக்கமல்ல
பிரார்த்தனை”.

என்கிறார். எனக்குத் தோன்றுகிறது இவருக்குக் “கவிதை எழுதுதல் பழக்கமல்ல, தியானம்”. இன்னொன்றும் தோன்றுகிறது இவரிடம் இந்திய ‘ஜென்’தனம் இருக்கிறது போலும்!

–நா.வே.அருள்

நூல் அறிமுகம்: சமயவேலின் ‘கண்மாய்க்கரை நாகரிகம்’. கோ.வசந்தகுமாரின் ‘அரூப நர்த்தனம்’ – ச.வின்சென்ட்

நூல் அறிமுகம்: சமயவேலின் ‘கண்மாய்க்கரை நாகரிகம்’. கோ.வசந்தகுமாரின் ‘அரூப நர்த்தனம்’ – ச.வின்சென்ட்

 



கண்மாய்க்கரை ஆட்டங்களும் அரூப நர்த்தனங்களும்

சமயவேலையும் வசந்தகுமாரனையும் ஒன்றாகச் சேர்த்து விமர்சனம் செய்வதற்கு இருவரிடமும் என்ன ஒற்றுமைகளைக் கண்டீர்கள் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இது ஓர் ஒப்பாய்வுக் கட்டுரை இல்லை. ஆனால் இரண்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளையும் ஒன்றாக அறிமுகத்திற்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

இன்று தமிழில் நவீனத்துவக் கவிதைகள் எழுதுகிறவர்கள், பின் நவீனத்துவக் கவிதை எழுதுகிறவர்கள், பின் பின் நவீனத்தில் சோதனைக் கவிதைகள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும்போது, நான் உண்டு என் அனுபவம் உண்டு என்று இப்படிப்பட்ட மாயவலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எழுதுகிறவர்கள் இவர்கள். நான் இதை உணர்கிறேன், எனது மனம் இப்படிச் சொல்கிறது. அதை நான் கவிதையாகச் சொல்கிறேன் என்று கூட இவர்கள் சொல்லிக் கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் புதுவகையான, சிக்கலான படிமங்கள் இருக்காது, குறியீடுகளை இவர்கள் தேடமாட்டார்கள். இவர்களிடம் உள்ளது இந்தப் பொதுத் தன்மைதான்.

முதலில் கவிஞர் சமயவேலின் கண்மாய்க்கரை நாகரிகம் என்ற கவிதைப் படைப்பை எடுத்துக் கொள்வோம்.

நீங்கள் கிராமத்துக் குளக்கரையில் உட்கார்ந்திருக்கிறீர்கள். இன்னும் குளங்கள் இருக்கின்றன. அவற்றில் உட்காருவதற்குக் கரைகளும் இருக்கின்றன என்பது ஓர் அனுமானம். என்ன பார்ப்பீர்கள்? தண்ணீர் இருக்கிறது. ஓரத்தில் புதர்கள். ஒரு சில மரங்கள்; என்ன மரங்கள்? எப்போதாவது வந்துஅமரும் பறவைகள்; என்ன பறவைகள்? யாருக்குத் தெரியும். வேறு என்ன? அவ்வளவு தான். காற்றாட உட்கார்ந்து விட்டு இருட்டுவதற்கு முன்னர் எழுந்துவிடுவீர்கள். நம்மால் முடிந்தது அவ்வளவு தான்.

ஆனால் இந்தக் கவிஞர் முன் கண்மாய்க்கரையில் எத்தனை காட்சிகள் விரிகின்றன? நீர்ப்பரப்பு சிற்றலைகளாய்ச் சுருளுகின்றது. துள்ளி வரும் கெண்டையைப் பிடிக்காமல் ஏமாறும் புள் பரவசத்துடன் பறந்து போகிறது. கரம்பையைத் தொடும் அலைகள் இவர் கால்களையும் நனைக்கின்றன. அந்தி ஒளியில் தீப்பிடிக்கும் நீர்ப்பரப்பு, துவைத்த துணியைத் தோளில் போட்டு நிற்கும் பெண் – சிலைபோல,- செம்மறியாடுகளின் கண்களில் ஒளிரும் மரகதப்பச்சைப் பளிங்குப் புள்ளிகள், மந்தைப் புளுக்கை வாசம் (!) இவை எல்லாம் உட்கார்ந்திருக்கும்போது காணக் கிடைப்பவை. எழுந்து இச்சி மரத்தில் சாய்ந்தாயிற்று. இப்போது துணிவெளுக்கும் ஆண் பெண்கள் வெள்ளாவி எல்லாம் தெரிகின்றன. இப்போதெல்லாம் இந்தக் காட்சி தெரியாது. எந்திரம்தான் தெரியும். இச்சி மரமும் தெரியாது. புள்ளும் தெரியாது; கூகுளில் தேடவேண்டும்.

கண்மாய்க் கரையில் இருந்தால் காசுக்கரட்டி பார்க்கலாம், நேற்றுப்பெய்த மழையில் இன்று முளைத்த குடைக்காளான்களைப்பார்க்கலாம். அவை வீட்டிலும் சமையலாகின்றன. சொடக்குத் தக்காளிச் செடியின் மணக்கும் முத்துப் பழங்கள், மண்ணில் ஆட்டம்போடும் சிறார் கூட்டம், தியானம் செய்யும் கொக்குகளும் காக்கைகளும், கோடையில் வறண்டுபோன கண்மாயில் இளைஞர்களின் ஆட்டம், சின்னக்குருவம்மாவின் ஓலைப்படகு விளையாட்டு, பொற்கொல்லனின் கைவண்ணம்போன்ற புளியம்பூ, மஞ்சள்பூ பூசிய கடுகுச்செடி, கருநிற மூளைகளாய் மஞ்சனத்திப் பழங்கள்—எத்தனை விதமான விபரங்கள்! கண்மாய்க்கரையில் மனிதருக்கும் குறைவில்லை. துவைத்தவேட்டியைக் குடையாகப் பறக்கவிடும் ஆதிமூலம், மழைக்காக ஏங்கும் குருசாமி அய்யா, முதல் கல்லூரி மாணவி வேணி வரையில் சுரைக்காயைக் காக்கும் தாத்தா முதல் மடை திறக்கும் குடும்பர் வரையில், சாவதற்கென்றே கண்மாய்க்கரைக்கு வந்த பால்பாண்டி முதல் எல்லாம் போனபிறகும் ’கம்மாத்தண்ணி இருக்கும் வரை இருப்போம்’ என்று சமாதானம் சொல்லும் மாமா வரையில் மனிதர்கள், கண்மாய்க்கரைக்காரர்கள்.

எத்தனை நாளைக்கு? கண்மாயில் தண்ணீர் வற்றுகிறது, தவளைகள் தற்கொலை செய்துகொள்கின்றன. வடக்கே வந்த பெரிய மில் நீரைக் குடித்துவிட நீர்வருவதில்லை. கிடங்குகளும் வேலிக்கருவேல் முள்ளுக்காடும் என ஆகிப்போகிறது கண்மாய்.. இவ்வாறு கவிஞர் சமயவேல் ஒரு சமுதாய வரலாற்றையே படமாய்ப் பிடித்துக் காட்டிவிட்டார். இன்றில்லாமல் போய்விட்ட அந்தக் கண்மாய்க்கரை நாகரிகத்தை ஏக்கத்துடன் வாசிக்கத்தான் முடியும்..

சமயவேலின் குட்டிக் கவிதைகள் இயற்கையின் மெய்நிலைகளை அவற்றின் இன்றைய சரிவுகளை ஆதுரத்துடன் சொன்னால் வசந்தகுமாரனின் குறுங்கவிதைகள் காதலைச் சொல்கின்றன. தனிமனித அவலங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. காதலை ஒரு வரியிலும் சொல்லலாம், ஒரு காப்பியமாக்கவும் செய்யலாம். நெடுங்காலமாய் பலரும் பாடிவரும் காதல் கவிதைகளை விட்டுவிட்ட மற்ற கவிதைகளைப் பார்ப்போமே!

மனிதர்கள் இரட்டை முகம் கொண்டவர்கள். புகைப்படத்திற்கு என்று ஒருமுகம், வெளி மனிதர்க்குக் காட்டுவதற்கு என்று அந்த முகம்; ஆனால் உள்ளே இருப்பது? தனிமனித நிலையை – மனத்தைக் காட்டும் கவிதைகள் சில; கடவுளாகப் பிறந்து பாவம் செய்து பாவம் செய்து மனிதராகத் தேய்ந்து போகிறோம். மனிதன் தன்னை அறியாமல் செய்த குற்றமும் தீமை விளைவிக்கும். காலில் இடறிய கல்லைத் தூக்கிப் புதரில் எறிந்தாலும் புதரிலுள்ள காட்டுப் பறவையின் மேல் பட்டால் வலிக்கத்தானே செய்யும்? துன்பங்களை அனுபவிக்காதவர் யார்? எல்லாத் துன்பங்களுக்கும் மருந்து வேண்டுமா? கிடைக்குமா? சிலர், கவிஞரைப் போல, காயங்களால் சுவாசிக்கிறவர்களும் இருப்பார்கள்- துன்பமே உயிர் மூச்சாய். வெற்றியைத் தேடித்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். வெற்றி நிழலா? நிழலையா தேடி அலைகிறோம்? வெற்றிக்கோட்டை அவன் தொடுவதற்கு முன் அவன் நிழல் அதனைத் தொட்டுவிடுகிறதாமே? கவிஞர் சொல்லும் இந்த மெய்ஞானம் எல்லாம் இருக்கட்டும். அவை எல்லாம் எப்போது பயன்படுமென்றால், மனிதன் தன்னை அறிந்து கொள்ளும்போதுதான்:

அவனைத் தெரியும்
இவனைத் தெரியும்.
எல்லாம் சரிதான்.
உன்னைத் தெரியுமா
உனக்கு?

அப்படித் நம்மை ஆராயும்போதுதான், நாம் மற்றவர்களைப் போல நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து நம்மைப்போல இருக்க முடியவில்லையே என்று உணர்ந்து கொண்டு நமக்கு மட்டுமாவது உண்மை உள்ளவர்களாக இருப்போம்.

கவிஞருக்கு இயற்கையின் மேல் அக்கறையும் உண்டு. சுற்றுச் சூழல்பால் பற்றும் உண்டு.

ஒரே நேரத்தில்
இரண்டு பாவங்கள் செய்கிறான்
மனிதன்
மரத்தையும் மரத்தின் நிழலையும்
வெட்டிச் சாய்த்து.

பட்டாம் பூச்சியைத் துரத்தும் நேரத்தில் இரண்டு பூச்செடிகளை நட்டுவைத்தால் பட்டாம் பூச்சிகள் தாமாக வந்து சேரும் என்பது கவிஞர் கூறும் அறிவுரை. சிறகுகள் முறிக்கப்பட்டு உயிருக்குத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு அவர் என்ன உதவி செய்யமுடியும். கையாலாகாத தனது கவிதையைத்தான் சவத்துணியாகப் போத்தமுடியம் என்று அங்கலாய்க்கிறார். காடுகளை அழித்து விட்டோம். இனி வருந்தி என்ன பயன்? மரத்தை வெட்டிக் காகிதம் செய்து அதில் காடுகளைக் காப்பாற்றுவோம் என்று கவிதைதான் எழுதுகிறோம்.

தன்னைப்பற்றியும் தன்னைச்சுற்றிய உலகைப் பற்றியும் குறும் கவிதைகளில் சொல்லும் வசந்தகுமாரன் எப்படி இருந்தாலும் இல்லாமல் போவதிலும் இருக்கத்தான் செய்கிறது ஏதோ ஒன்று என்று நம்புகிறார். இத்தனையூண்டு நக்கக் கிடைத்த ஊறுகாய் இந்த வாழ்க்கை என்று தேற்றிக் கொண்டு காயங்களை எண்ணி நேரத்தைச் செலவிடாமல் போய்க்கொண்டே இருப்போம் என்பது கவிஞரின் இப்போதைய மன நிலை;. தனது கண்ணீரைத் தானே குடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்.

இந்த இரண்டு நூல்களையும் படித்து முடித்தபிறகு நம்மிடம் எஞ்சியிருப்பது இந்த எந்திர உலகின் மேல் எரிச்சலா, சினமா, வருத்தமா? மனிதர் தங்களையும் காத்துக்கொண்டு இயற்கையையும் காப்பார்கள் என்ற நம்பிக்கை துளியேனும் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன். உங்கள் கருத்தென்ன? நூல்களை வாங்கி வாசித்து தெளிவு பெற அழைக்கிறேன்.

ச.வின்சென்ட்

சமயவேல். கண்மாய்க்கரை நாகரிகம். தமிழ்வெளி, 2023
பக்கம்: 80 விலை ரூ 100

கோ. வசந்தகுமாரன். அரூப நர்த்தனம். தமிழ் அலை, 2023
பக்கம்: 160 விலை ரூ 100