Nedunjalai Payanam Poem by Vasanthadheepan. வசந்ததீபனின் நெடுஞ்சாலைப் பயணம் கவிதை

நெடுஞ்சாலைப் பயணம் கவிதை – வசந்ததீபன்




விளக்குகளின் வெளிச்சம்
எதிர்பட்டுக் கூச்சமெடுக்க
விழிகள் இருள்கின்றன
எரிபொருள் வாசனை
சுவாசத்தினை
திக்குமுக்காட்டுகிறது
நீல விளக்கின் ஒளிக்குள்
துயிலைக் குதப்பிக் கொண்டிருக்கும்
பேருந்தின்
சவக்கிடங்கின் கணப்பிற்குள்ளாக
இருக்கைகளில் யாவரும்
கியர் ஒடிபடும் சப்தம்
அயர்வினை அலமலங்கச் செய்கிறது
பிரேக்கிடும் போது
உயிரின் உள்ளீடு
பதறித் துடிக்க…
பாதுகாப்போ…
சந்தேகங்களாய் படபடக்கிறது
சாலையோர தாபாக்களின்
கிரீஸ் ரசம் மிதக்கும் நீரில்
டீ, காப்பி எனும் பானங்களாய்…
சூடு கமழ நேற்றைய புரோட்டாக்கள், சப்பாத்தி, பூரி என…
குவியல் குவியல்களாய்…
அடர் கசப்பினூடே
அந்த இரவு மோட்டல்களில்
நிலமோ வாழ்வோ இழந்து
தற்காலிகத் துக்கத்தை தின்று செரிக்க
கைத்துப் போனவர்கள்
ஏவலாட்களாய் திரிகிறார்கள்
சாலை மரங்களின் கீழாக
செயற்கை சிரிப்பும் நாறும் அலங்காரங்களும் மின்னிட
சாயம் போன சேலைக்காரிகள்
செல்லும் வாகனங்களை கைநீட்டி அழைத்தபடி….
துளித்துளியாய்
ஒளி சிதறச்.. சிதற
யாத்திரையின் அந்தம் நீள்கிறது
கறுத்த நெடிய பாதைகளுக்குள்.