Paadal Enbathu Punaipeyar Webseries 4 Written by Lyricist Yegathasi தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




அண்ணன் ஜீவன் அவர்கள் இயக்கி, இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த “மயிலு” படத்தின் பாடலொன்றில் நான் எழுதி வைக்கமுடியாமல் போன நான்கு வரிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை ஆகும். நானும் அண்ணன் சீனுராமசாமி அவர்களும் இலக்கியத்தின் பாலும் கொண்ட கொள்கையின் பாலும் மிக நெருக்கம் கொண்டவர்கள். என் பாடல்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவர் “மக்கள் கவிஞன்” என்றே சொல்லுவார். அவரிடம் ஒரு உதவி கேட்டு முடிக்கும் நேரத்திற்குள் அந்த உதவியைச் செய்து முடிக்கும் கொடையாளர். அதன் மூலம் துளியும் விளம்பரம் தேடிக் கொள்ளாதவர்.

ஒரு மாலை நேர உரையாடலின் போது அவரிடம் அந்த நான்கு வரிகளைச் சொன்னேன். அமைதியா இருந்தார். மீண்டும் ஒரு முறை வரிகளைச் சொல்லச் சொன்னார் சொன்னேன். அடுத்தும் அமைதியாகவே இருந்தவர் தனது கைப்பேசியை எடுத்து ஒரு நபரை அழைத்து நான் சொல்லிய வரிகளைச் சொன்னார். கேட்ட நொடியில் ஃபோனில் இருந்த நபர் சிரித்தார். பின் இவரும் சிரித்தார். ஃபோனில் இருந்த நபர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள். அந்த நான்கு வரிகள்:

“எலும்பு கடிக்காம
எரப்பையி நெறையாது
சாம்பார் சோறு எங்க
சாதியில கெடையாது”

இந்த நிகழ்வு நடந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “படத்தின் பெயர் “ஆடுகளம்”. ஒரு காதல் பாடல் எழுதவேண்டும். படத்தின் கதை மதுரை பின்புலத்தில் நகர்கிறது” எனத் தொடர்ந்தவர் பாடலுக்கான சூழலை மிகச் சுருக்கமாக தெளிவாக விளக்கினார்‌. நான் பழகிய அளவில் நேரத்தை விரையம் செய்யாமல் மிகச் சரியாகப் பயன்படுத்தும் திரை ஆளுமைகளில் இவரும் ஒருவர்.
Paadal Enbathu Punaipeyar Webseries 4 Written by Lyricist Yegathasi தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிவாங்கி வந்த மெட்டு கேசட்டை டேப் ரெக்கார்டரில் போட்டு ஒன்றுக்கு பத்துமுறை கேட்டேன். ஜீ.வி. பிரகாஷ்குமாரின் இசை என் இதயத்தில் சிறகைக்கட்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. ஒரு சாமானிய இளைஞனின் காதலுக்குள் நுழைந்து மயங்கினேன். பல்லவியும் சரணமும் மூடு புற்று ஈசல்களாய் வந்து விழுந்தன. அள்ளிக் கொண்டு போனேன். அப்போது மலர்ந்த வெற்றிமாறன் அவர்கள் தன் முகத்தை இப்போதுவரை என்னிடம் சுருக்கிக் கொண்டதே இல்லை. அதிலும் “பாடலுக்கான வரிகளை கிடைத்த பின்புதான் அது தொடங்கும் புள்ளியை காட்சி படுத்தினேன்” என்று அவர் சொன்னபோது ஆனந்தக் கூத்தாடினேன்.

“ஒத்த சொல்லால ஏ உசுரெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்னத் தின்னாடா
பச்ச தண்ணி போல் – அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சே என்னக் கொன்னாடா

ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆறொண்ணு ஓடுறதப் பாரு

அட பட்டாம் பூச்சி தான்
ஏ சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால ஏ மூச்செடுத்துப் போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேண்டா”
Paadal Enbathu Punaipeyar Webseries 4 Written by Lyricist Yegathasi தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
இந்தப் பாடல் யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் அண்ணன் கேட்டபோது நான் பாடகர் வேல்முருகனை சொன்னேன். அவரோடு இயக்குநரும் இசையமைப்பாளரும் என் யோசனையை ஏற்று பாடலை வேல்முருகனை வைத்துப் பதிவு செய்தனர். பாடல் வெளியாகி நாட்டில் சிறுசு பெருசெல்லாம் ஆடினர். “நான் அதற்கு முன்னரே திரைப்படப் பாடல்கள் சில பாடியிருந்த போதிலும்
எனக்கு பேரையும் காரையும் வாங்கித் தந்தது இந்த “ஒத்த சொல்லால” பாடல் தான் ” இப்போதும் என்பார் வேல்முருகன். எனக்கும் கூட இந்தப் பாடல்தான் என் பயணத்தின் வேறொரு திறப்பை ஏற்படுத்தியது. எளிய உவமைகளால் எளிய சொற்களால் காதலைச் சொன்ன விதத்தில் இன்றுவரை இந்த பாடல் மக்கள் மத்தியில் நிற்கிறது.

“பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன
ஒரு வாட்டி”

இந்தப் பாடலில் இந்த வரிகளும் இந்தப் படத்திற்குக் கிடைத்த 8 தேசிய விருதுகளில் ஒன்று நான் எழுதிய பாடலுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டருக்கு கிடைத்ததும் அம்மைத் தழும்பாய் அழியாமல் இருக்கின்றன எனக்குள்.

எனது பெரும்பாலான தனி இசைப் பாடல்களுக்கான மெட்டு அண்ணன் கரிசல்குயில் கிருஷ்ணசாமியாலும் கரிசல் கருணாநிதி, கரிசல் திருவுடையான், சுகந்தி மற்றும் இசையமைப்பாளர்கள் செல்வநம்பி,. ஜெய கே. தாஸ் போன்றோர்களால் போடப்பட்டதுதான். எத்தனையோ மனித உறவுகளைப் பற்றி பாடல்கள் எழுதி கேட்போர் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறேன். ஆனால் “அப்பா” பற்றி எழுதாமலேயே இருந்தேன். காரணம் எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே என் அப்பா என் அம்மாவைப் பிரிந்து இன்னொரு திருமணம் செய்து கொண்டார். என் அம்மா வாழ் நாளெல்லாம் இந்த மண்ணோடு மல்லுக்கட்டி அழுதுகிடந்ததற்கு என் அப்பாவே காரணம். அதனால் தான் நான் அப்பா என்கிற உறவின் மீது தீராத வெறுப்புக்கு ஆளாகியிருந்தேன். எனக்கு அப்பாவின் ஸ்பரிசம் தெரியாது.

பின்பொரு நாள் நான் அப்பாவான பின் அப்பா என்கிற பிரியத்தின் சாயலை என்னிலிருந்தும் உள்ளங்கை காய்க்க உழைக்கும் கூலி தகப்பன்களின் பாத வெடிப்புகளிலிருந்தும் அந்தப் பாடலை எழுதத் தொடங்கினேன். உலகத் தமிழ் நெஞ்சங்கள் கண்கலங்கக் கேட்கும் அப்பா பாடலை எழுதியவனுக்கு அப்பா பாசமே என்னவென்று தெரியாதாம் என்றால் யாராவது நம்புவார்களா… ஆனால் உண்மை அதுதானே.

எனது சிறந்த முதல் ஐந்து தனி இசைப் பாடல் பட்டியலில் “அப்பா கையப் புடிச்சு நடந்தா” பாடலும் இருக்கிறது. நண்பரும் மிகச் சிறந்த பாடகருமான கரிசல் கருணாநிதியும் நானும் கால் நூற்றாண்டு கால நண்பர்கள். கருமாத்தூர் “திசைகள்” கலைக்குழுவில் இருந்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திலும் இருவரும் இயக்கப் பணிகளை செய்து வருகிறோம். அவரது மனைவி அக்கா பிரேமா மற்றும் அவர்களது குழந்தைகள் ஹர்கிசன், இனியன் எனதருமை மாப்பிள்ளைகள் எனக்கு மிக நெருக்கம். மூத்தவர் 2009 ல் நான் இயக்கிய “எருக்கம் பூ” குறும்படத்திலும், இளையவர் எனது “அருவா” திரைப் படத்திலும் நடித்தனர். அவர் எண்ணற்ற என் பாடல்களுக்கு மெட்டமைப்பதை அருகிருந்து பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் உள்ள அவர் வீடு சென்று எழுதிக்கொண்டு வந்த பாடல்களை மெட்டமைக்குமாறு தொல்லையும் தந்ததுண்டு.

ஒரு நாள் காலை நண்பர் கருணாநிதி சென்னை வந்திருந்தபோது அவரும் நானும் எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தோம். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் என் கையில் ஒரு பாடல் இருப்பது போல் அன்றைக்கும் இருந்தது, அது தான் “அப்பா கையப் புடிச்சு நடந்தா” பாடல். கையில் வாங்கி வாசித்தவர் கண்களில் நீர் கட்டிப் போனார். காரணம் அன்று அவரது அப்பாவின் நினைவு நாள். அப்படியே அந்த தந்தையரின் பாதங்களுக்கு என் பாடலை சமர்ப்பணம் செய்தேன்.

“அப்பா கையை புடிச்சி நடந்தா – தெரு அழகாக‌ மாறும்
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும்
பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக‌ இருப்பாரு
பிச்சிப்பூவ போல தான் எங்கப்பா சிரிப்பாரு”
Paadal Enbathu Punaipeyar Webseries 4 Written by Lyricist Yegathasi தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
இந்தப் பாடலுக்கு கரிசல் கருணாநிதி மெட்டமைத்து ஊரெல்லாம் பாடினார். இதே பாடலுக்கு வேறு விதமாக மெட்டமைத்து மேடைகளில் பாடிக் கொண்டிருந்தார் மறைந்த தோழர் திருவுடையான். இந்தப் பாடலை ஒருமுறை விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்கை ராஜலட்சுமி செந்தில்கணேஷ்
பாடினார் பாருங்கள்., நடுவர்கள் அழுதார்கள். பார்வையாளர்கள் அழுதார்கள் நடுவில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களும் அழுதார்கள். அரங்கம் கண்ணீர் குளமானது.

யூ ட்யூபில் அப்பா பாடலைக் கேட்டுவிட்டு ஒருபெண், எனது இன்பாக்ஸில் தன் கண்ணீரை வார்த்தைகளாக மொழிமாற்றம் செய்திருந்தார். நன்றியையும் ஆறுதலையும் கூறினேன். அவர் பெயர் விஜயா. அவரது அப்பா அவருக்கு உயிரெனவும் அவர் தற்போது உயிருடன் இல்லை எனவும் கூறி, இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அப்பா ஞாபகம் வருவதாகவும் மீண்டும் ஒரு நாள் கூறினார். “என் அப்பாவை வைத்து எழுதியது போல் இருக்கிறது” என்றொரு நாளும் “அப்பா நினைவு வரும்போதெல்லாம் இந்தப் பாடலை கேட்டுக் கொள்கிறேன்” என்றொரு நாளுமென என்னிடம் உரையாடலை ஒவ்வொரு நாளும் தொடர்ந்தவர் ஒரு நாள்,

“உங்களை நான் அப்பான்னு கூப்பிடலாமா”
என்று தயங்கினார்.
கண்களில் நீர் பெருக நான்,
“அப்பான்னு அழைக்க அனுமதி எதற்கு மகளே” என்றேன்.

முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 3 Written by Lyricist Yegathasi தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




தும்பைச் செடிகளில் அமரும் வண்ணத்துப்பூச்சி எனும் பாப்பாத்தியை சட்டையைக் கழட்டி அமுக்கிப் பிடித்த அனுபவம் கடக்காத கிராமத்தார்கள் இருக்க முடியாது. ஒன்று இரண்டெல்லாம் கிடையாது இருபது முப்பது பாப்பாத்திகளைப் பிடித்து விளையாடுவது என் வழக்கமாக இருந்திருக்கிறது. கை இரண்டும் வண்ணங்களால் மினுங்கும். அப்போதெல்லாம் திரும்பும் திசையெல்லாம் தும்பைச் செடிகள். தும்பைச் செடிகள் நிறைய பாப்பாத்திகள். இப்போது எங்கள் வீட்டின் எதிரே உள்ள காக்காயன் சுந்தன் சியா காட்டுக்குள் தும்பையும் இல்லை பாப்பாத்தியும் இல்லை.

பொன் வண்டுகள் பிடித்து காலி தீப்பெட்டிகளிலும் சிகரெட் பெட்டிகளிலும் அடைத்து வைத்திருந்த காலம் மட்டும் தான் என் பொற்காலம். பொன்வண்டுக்கு இரை போட்டதையெல்லாம் நினைத்தால் நெஞ்சம் விம்புகிறது காரணம் இன்று நான் திங்கும் இரையைக் கூட எவனோ தீர்மானிக்கிறான். இவை மட்டுமா, ஐந்து பைசா பத்துப் பைசாவிற்கு கடைகளில் வாங்கியும் குண்டு விளையாட்டில் ஜெயித்துமாக நான் சேர்த்த பிலிம் துண்டுகளை நாழியில் போட்டு வைத்திருப்பேன். பள்ளிக்குச் செல்லும் முதலும் சென்று வந்த பிறகும் அதை கீழே கொட்டுவதும் எண்ணுவதுமே என் தலையாய கடமையாகச் செய்திருக்கிறேன். சும்மா எண்ணினால் கூட அந்த வேலை சுமூகமாக முடிந்துவிடும்.

என் காதல் எண்ணுவதில் மட்டுமா, அந்த பிலிம்களில் பார்த்த கமல் ரஜினி ஸ்ரீ தேவி அம்பிகா போன்ற நடிகர்களை பிற்காலத்தில் நான் நேரில் சந்தித்தபோதுகூட அப்படி ரசித்ததில்லை., அப்படி வெறி பிடித்த வேங்கையாய் ரசித்துக் கிடந்திருக்கிறேன். மலையேறி விளையாடுகையில் உள்ளங்காலில் உட முள் குத்தி பெயர் தெரிந்த கடவுளையெல்லாம் காப்பாற்ற அழைத்த காலம் என் வசந்த காலம்.
Paadal Enbathu Punaipeyar Webseries 3 Written by Lyricist Yegathasi தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி“அவள் பெயர் தமிழரசி” படத்தில் அப்படி ஒரு பாடல். திருநெல்வேலி மாவட்ட கிராமம் ஒன்றில் சிறுவர்களின் சிறகடிப்பு. இயக்குநர் சூழலைச் சொல்ல சொல்ல என் சின்னவயது ஏகாதசி தன் தோஸ்த்துகளோடு காட்டிற்குள் ஓட ஆரம்பித்தான்.

“குஜு குஜு குஜு குஜு கூட்ஸ் வண்டி
கழுகுமல வழியா…
குழு: கோயில்பட்டி வண்டி
குஜு குஜு குஜு குஜு ரயில்கார அண்ண
சீட்டுவெல என்ன…
குழு: என்ன
எந்த ஊரு போது
நானும் கொஞ்சம் வாரேன்
வண்டியக் கொஞ்சம் நிறுத்து
நிறுத்து”

இப்படித் தொடங்கும் பல்லவியைக் கண்டறிய நான் பட்டபாடு இருக்கே, ஒரு ஒட குத்திப் பிடுங்க வேண்டியதாயிற்று. இங்கே என்னைக் காப்பாற்ற நான் கடவுளை அழைக்கவில்லை மீண்டும் ஒரு மாமாவைத்தான் அழைத்தேன். அவர் பெயர் சிவமணி. க.பாறைப்பட்டிக்காரர். எல்லா நல்ல குணங்களும் ஒருசேர படைக்கப்பட்ட அதிசய மனிதர். அன்பர். டெப்டி பிடிஒவாக அரசுப் பணியில் இருக்கிறார். அவரது மனைவியாகிய என் தங்கை இளவரசியும் அவரது புதல்விகளான தூரிகா, கர்னிகா செல்லங்களும் என் பாடல்களுக்கு ரசிகர்கள். அவர் பாடிக்காட்டிய நாட்டுப்புற சிறுவர் பாடல்களில் ஒன்றைச் சுட்டுத்தான் இந்த பாடலின் மேலே சொல்லப்பட்ட பல்லவியை உருவாக்கினேன்.

முதல் சரணம்:

பொட்டக்காட்டு மண்ணுல
கிட்டிப் புல்லு அடிப்போம்
சட்டத்துணி நனைச்சு
குட்டத் தண்ணி குடிப்போம்

சொரக்கட்ட ஊதிக்கிட்டு
பூமியத்தான் சுத்தினோம்
ஓடைக்குள்ள நடந்தத
ஊருக்குள்ள கூவினோம்

இண்டமுள்ளுக் காடுகதான்
எங்களோட ஊரு
இச்சிமரப் பழந்தான்
திங்கச் சோறு

பெயிலாக்கும் வாத்தியாரு
வில்லன் நம்பியாரு
பெல்லடிக்கும் வாட்ச்சிமேனு
எம். ஜி. யாரு”

இரண்டாவது சரணம்:

சோளத் தட்ட மைக்கில
சிட்டுக்குருவி பாடுது
ஊமத்தம் பூவக் கட்டிக்கிட்டு
ரேடியாதான் போடுது

விளையாடத் தான் ஆளில்லாம
தொங்குதுபாரு விழுது
வாத்தியாரின் சொட்டையில
வீட்டுப்பாடம் எழுது

வெயில் எங்க முதுகுல
எப்போதுமே நடக்கும்
மூத்திரத்தப் பேஞ்சபடி
பாயில் படுப்போம்

மத்தியானம் முழிப்போம்
மழபேஞ்சா குழிப்போம்
சத்துணவு முட்டைக்காக
ஸ்கூலுக்குப் போவோம்

இப்பாடலைப் பாட நான்சி சில்வியா எனும் சிறுமியை கிராமத்திலிருந்து இயக்குநர் அழைத்து வந்ததாக இருக்கட்டும் சிறுவர்களின் மன பரபரப்பில் நின்று மெட்டமைத்த இசையமைப்பாளராக இருக்கட்டும் மற்றும் இப்பாடலை படமாக்கியவிதமாக இருக்கட்டும் அத்தனை பேரின் உழைப்பும் அத்தனை அழகு. அத்தனையும் உன்னதம்.

இதே படத்திற்கு ஒரு தாலாட்டு பாடல் ஒன்று எழுதினேன். பெண் பிள்ளையின் தீராத சோகத்தை ஒரு பெரியவர் நடுக்காட்டுப் பரணில் நின்று பாடி இரவை உடைக்கிறார். அதற்கு மண் சுமந்து வந்த தஞ்சை வீரசங்கரின் குரல் உயிர் கொடுத்தது.

ஆராரோ..‌ ஆரிரரோ – எங்கண்ணே
ஆராரோ… ஆரகரரோ

நீ மல்லாந்து தூங்குமழக – கண்ணே
மரக்கா போட்டு அளக்கணுமே
குப்பறக்க தூங்குமழக – எங்கண்ணே
கூட போட்டு அளக்கணுமே

வெயிலடையும் பனங்காடு – கண்ணே
மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் – ஏங்கண்ணே
நல்லசேதி எக்காலம்…

இப்படியாக நீளும் அந்தப் பாடல் இன்றைக்கும் என்னைத் தாலாட்டுகிறது.

மழை நீர் ஒழுகுவதற்காகவே கட்டியது போலத்தான் இருக்கும் எங்கள் வீடு. நிலவொளி பாய்கிற வீட்டிற்குள் மழையை மட்டும் வரவேண்டாமென்றா சொல்ல முடியும். ஈசனையும் அழைத்து ஈர விறகை எரியவைத்திருப்பாள் அம்மா ஆனால் அடுப்புக்கு நேராக ஒழுகி அணைக்கும் போது எங்கள் வயிறு எரியாமல் என்ன செய்யும். வீட்டில் இருந்த அத்தனை பாத்திரங்களும் மழை ஒழுகிற இடங்கள் பார்த்து வைக்கப்பட்டிருக்கும். மழை விட்டவுடன் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நானும் என் அம்மாவும் தட்டிற்காக காத்திருந்திருக்கிறோம் பல மழை நாட்கள்.

என் அம்மாவின் முகத்தில் நூறு முத்தம் கொடுப்பேன். எண்ணிக்கை தவறிவிட்டால் நடிகர் சூரியின் பரோட்டா காமெடியில் போல் மீண்டும் ஒன்றிலிருந்து கொடுக்க ஆரம்பிப்பேன். என் அம்மாவின் முகம் கண்ணீர் மணத்துக் கிடக்கும். என் அம்மா சோற்றில் போட்ட உப்பு என் உடலின் உள்ளே ஓடுகிறது. அவர் கண்ணீரிலும் நான் நனைந்தால் உடலின் மேலேயும் படிந்திருக்கிறது உப்பு. ஒரு நாளும் அவர் அவருக்காக வாழ்ந்ததில்லை. வாழ்வின் எல்லா நாட்களையும் எனக்கே சமர்ப்பித்துக் கொண்டிருப்பவர்.
Paadal Enbathu Punaipeyar Webseries 3 Written by Lyricist Yegathasi தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிஒளி ஓவியர் இயக்குநர் தங்கர்பச்சான் அவர்கள் “அம்மாவின் கைப்பேசி” படத்திற்காக அண்ணன் அறிவுமதி அவர்களிடம், “ஒரு அம்மா பாடல் வேண்டும் எழுதிக் கொடுங்கள்” என்று கேட்க, “அம்மா பாடலை எழுதும் வாய்ப்பை என் தம்பி ஏகாதசியிடம் கொடுங்கள் அவன் என்னை விட சிறப்பாக எழுதுவான்” என்று சொல்லிவிட, “இவரே சிபாரிசு பண்ற அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பா டக்கர் யார்றா” என்று நினைத்துக் கொண்டு இயக்குநர் என்னை அழைத்து மெட்டைக் கொடுத்தார். எழுதிக் கொண்டு மறுநாள் அவரை வீட்டில் சந்தித்தேன். வராண்டாவில் பத்திரக்கோட்டையில் காய்த்த மாங்காய்கள் உருண்டு கிடந்தன. பாடலை சில நிமிடங்களில் வாசித்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். தாயன்பை அள்ளித் தரும் அண்ணன் அறிவுமதியின் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி. இந்தப் பாடலுக்குப் பெற்ற சம்பளத்தில் தான் என் அம்மாவிற்கு ஒரு கைப்பேசி வாங்கித் தந்தேன். இந்த செய்தியை அன்றைக்கு சில இதழ்கள் கூட எழுதியிருந்தன.

அம்மா தானே நமக்கு அன்பு மழை – அவளை
ஆண்டவன் என்றால் என்ன பிழை

சிறு நாழிகை தூங்கவில்லை
உனைப் பார்க்கத்தானடா
பெருமூச்சிலே சோறாக்கினாள்
உனக்காகத்தானடா
கடல் வாங்கி அழுதாள் இவள்தான்…

சிறு குருவிக்கும் தாய் இன்றி கூடா
ஒரு தாய் இன்றி வாழ்வேது போடா
அட இவள் சோற்றிலே நீ பசியாறினாய்
இவள் தூக்கத்தை நீ தூங்கினாய்

பந்த பாசங்கள் எல்லாமே சும்மா
அட திண்ணைக்கு போனாளே அம்மா
இந்த தண்ணீரையும் பெற்ற தாயன்பையும்
நீ அறுத்திட்டு எங்கே செல்வாய்
கிளை ஊர் தாண்டட்டும் லட்சம் பூ பூக்கட்டும்
உன் வேர் இந்த தாயல்லவா

கடல் வாங்கி அழுதாள் இவள்தான்.

முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




கல்லூரி விழாவிற்கு வீட்டில் உள்ளவர்களையெல்லாம் அழைத்துப் பார்த்தாள் தங்கச்சி. அவரவருக்கு ஒரு வேலையிருந்ததால் யாரும் வர ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டிலிருந்து விழாவிற்கு யாரையாவது கூட்டிவரவேண்டும் என்பது கல்லூரியின் வேண்டுகோள்.

அந்த வீட்டின் மூத்த அண்ணன் முருகேசன் அங்கே தான் இருக்கிறான் அதிலும் அவனுக்கு வேலைவெட்டி எதுவும் கூட இல்லை ஆனால் தங்கை அவனை விழாவிற்கு அழைக்கவில்லை. தங்கை தன்னை அழைக்கமாட்டாளா என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருந்த அண்ணன் அந்தச் சூழலில், “நா வர்றேம்மா” என்கிறார். அவளோ, “நீ யாரு வர்றேனர்னு சொல்ற” என வெறுப்பை உமிழ. “நா ஓ மூத்த அண்ணம்மா” என்று கண்கலங்கக் கூறுகிறான், “அண்ணன்னு சொன்னா போதுமா ஒரு அண்ணனா இந்த வீட்டுக்கோ எனக்கோ என்ன பண்ணிருக்க இதுவரைக்கும்” என அண்ணனின் இதயத்தை மண்குடம் போல் போட்டுடைத்தாள்.

தங்கையின் கேள்விக்கு பதிலற்று நிற்கும் அண்ணன் சிறுவயதிலேலே ஊரை விட்டோடி வசப்படாத பிழைப்பால் வாழ்வில் தோல்வியடைந்து திருமண வயதையும் தாண்டிப் போய் வந்திருப்பவன். உள் காயத்தை சொல்லும் ஒரு துண்டுப் பாடலுக்கான சூழல் இது. படம் வெயில். இயக்குநர் நண்பர் வசந்தபாலன். இசை ஜி.வி. பிரகாஷ்குமார். இது அவருக்கு முதல் படம் எனக்கு மூன்றாவது படம்.

“செத்தவடம் செத்துப்போனேன்
சொந்தம் சொன்ன வார்த்த
யாத்தே… பத்துத்தல நாகம்போல
கொத்துதடா இந்த வாழ்க்க
தெக்க போறதா நா வடக்க போறதா
தெச ஒன்னும் தெரியலியே
கொலகாரப் பயமக்கா – என்ன
கொன்னுதான் போடுங்களேன்”

இப்படியாக வெயில் படத்தில் தொடங்கிய எனக்கும் நண்பர் இசை இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்குமான நட்பு மிக மிக அலாதியானது. என் எழுத்தை அவர் பெரிதும் நேசிப்பவர் என்பதற்கு அவருடைய படங்களில் இப்போது வரை நான் பாடல் எழுதிக் கொண்டிருப்பதே சாட்சி. அதுபோக நானும் அவருடைய இசைக்கு விசிறி.

எனது பணியான் கிராமத்தில் சுடுதண்ணி ராசு மாமா மளிகைக் கடையில் எண்ணெய் வாங்க சீசாவைக் கொண்டு போனால் அதில் உழக்கு பொங்கி வழிய வழிய ஊற்றி நம் மனதை நிறைப்பார். ஐம்பது பைசாவுக்கு அவர் கொடுக்கும் புளி உருண்டை அந்த வயதில் என் கைக்கடங்காது. ஒரு தேங்காயில் கூட ஏழெட்டுச் சில்லுக்குமேல் போடமாட்டார். அவரின் தாராள குணத்தால் ஊருக்கே பிடித்திருந்தது அந்தக் கடை. ஆனால் எனக்குப் பிடித்ததற்கு அந்தக் கடையின் அடுத்த வாரிசாக பொறுப்பேற்ற அவரது மகன் ஜெயபாண்டி. அவர் எனக்கு நண்பர். அவரையும் நான் மாமா என்று தான் அழைப்பேன். அவர்தான் எனக்கு வைரமுத்து கவிதை பாடும் ஒலிப்பேழையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

பதின்மத்தின் இறுதியில் அவர் கடையில் நான் வைரமுத்து குரல் வழிக் கவிதையை அருந்தி அருந்தி அழகானேன். அவர் புதுக்கவிதையை பாடல் போல் வாசிப்பார் அல்லது அவர் கவிதையை பாடல் போல் யாரும் வாசிக்கலாம். நானும் அவர் கவிதையை அவரைப் போலவே காடுமேடெல்லாம் வாசித்துக் கிடந்திருக்கிறேன். இந்த அனுபவமும் நான் எதிர் காலத்தில் பாட்டுக்கட்டத் துணை புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தோடு எங்கள் ஊரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் அண்ணனின் நட்பும் அவருடனான பெரும் பயணமும் ஊக்குவிப்பும் எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. அவர் பஜனை பாடல்கள் எழுதுவார். அறிவொளி இயக்கம் பாடல்கள் எழுதுவார். அதே காலகட்டத்தில் என் சக பயணியான நண்பர் ரோஸ்முகிலனும் நானும் கருமாத்தூர் தாழைக் கோவிலிலும் அவரது பாட்டி வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு திரைப்பாடல்களின் கவித்துவத்தை பிரித்து பிரித்துப் பேசிக்கிடந்திருக்கிறோம். அவரும் அருமையான பாடலாசிரியர். அவர் பிற்காலத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார்.

ஓடு அல்லது சீகம்புல் வேய்ந்த வீடுகளின் திண்ணைகளில் ஆட்டுக்குட்டிகள் புழுக்கைகளை உதிர்த்துவிட்டு குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருக்குங்கள். ஊருக்கெல்லாம் புழுக்கைகளாக தெரிந்தவை எனக்கு எழுத்துக்களாகத் தெரிந்தன. என் அம்மத்தா சுளகில் கேழ்வரகு போட்டு மேவி புடைத்து கல் தூசி தும்பு பிரிக்கும் போது ஒண்ணரை அடி தூரம் வரை ஆகாயம் பார்த்து சுளகிறங்கும் கேழ்வரகில் ஒன்றுகூட தவறி தரையில் விழாது. அதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு கவிதையும் கதையும் கூட அதன் கருவிலிருந்து ஒரு எழுத்தைக்கூட சிந்தவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. புஷ்பம் சின்னம்மாவும் ரஞ்சிதம் சின்னம்மாவும் ஒரு உரலில் ஆளுக்கொரு உலக்கையை எடுத்துக்கொண்டு எப்படி மாற்றி மாற்றி தாளத்தில் நெல் குத்த முடியுமென ஆச்சரியப் பட்டதுண்டு, இதில் நெல்லைக் கொத்துவதற்கு எதற்கும் அஞ்சாமல் உரலுக்குள் தலையைவிடுவதற்காக வரும் சேவலையும் காலால் எட்டி உதைத்து தொரத்திவிட வேண்டும்.

என்னை என்றைக்கும் என் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. என்னால் உழைப்பாளர்களின் வாசமின்றி வாழ முடியாது. அப்படித்தான் ஒரு நாள் ஒரு பாடல் எழுதத் தோன்றியது. அதற்கு நண்பர் கரிசல் கருணாநிதி மெட்டமைத்தார். தமுஎகச மேடையின் நள்ளிரவுகளில் அந்தப் பாடலை அவர் பாடுகையில் கேட்பவர் கண் குளமாகிப் போவதைக் கணக்கற்ற முறை கண்டிருக்கிறேன். இப்படித்தான் தொடங்கும் அந்தப்பாடல்,

“ஒரு ஊருல
ஒரே ஒரு கிழவி
அவ உருவம்
ஒடஞ்ச பாதி வளவி

வெத்தல போட்ட வாயி
காவிய உடுத்தும் – அவ
துப்புன ஒடமெல்லாம்
ஓவியம் கிடக்கும்

கட்ட சாஞ்சிக்கிட
கையகல வீடு
வாழுதய்யா தனியா – ஒரு
வயசான கூடு”
Paadal Enbathu Punaipeyar Webseries 2 Written by Lyricist Yegathasi தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி“அவள் பெயர் தமிழரசி” திரைப்படம் விஜய் ஆண்டனி இசையில் நண்பர் இயக்குநர் மீரா கதிரவன் முதன் முதலாக இயக்கியது. என் நண்பர் தமிழரசன் மூலம் மீரா கதிரவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்தப் படத்தில் ஒரு பாடல் வாய்ப்புத் தருவதாச் சொல்லி பாடலுக்கான மெட்டை எனக்குத் தந்தார் இயக்குநர். ஒரு பாட்டுக்கு ஒன்பது பாடல் எழுதிச்சென்று காண்பித்தேன். என் எழுத்துக்களும் உழைப்பும் இயக்குநருக்கு மிகவும் பிடித்துப் போனது. இசை இயக்குனர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும் என் எழுத்துக்களைப் பிடித்துப்போக அந்தப் படத்தில் ஐந்து பாடல்களை எழுதினேன். அவள் பெயர் தமிழரசி படம் தான் என்னை ஒரு எழுத்தாளனாக தமிழ் சமூகம் அறிந்துகொள்வதற்கான இடத்தைத் தந்தது.
Paadal Enbathu Punaipeyar Webseries 2 Written by Lyricist Yegathasi தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிஇயக்குநர் மீரா கதிரவன் ஒரு கவித்துவமான ஆள். அவர் என் பாடல்களில் மட்டும் அந்த கவித்துவத்தை ரசிக்கவில்லை. அவரோட ஸ்கிரிப்ட்டை நான் வாசிக்க நேர்ந்தபோது அந்த ஸ்கிரிப்ட்டின் ஒவ்வொரு அங்குலமும் கவித்துவமாகத்தான் இருந்தது. அந்த படத்தின் பாடல்கள் மிக நன்றாக வந்ததற்கு காரணம் அவரின நுட்பமான கதை நகர்த்தலும் அவர் எனக்குத் தந்த சுதந்திரமும் தான். காடு கரை தெரு திண்ணையென அலைந்து திரிந்து விளையாடும் சிறுவர் கூட்டத்தின் புழுதி மணக்கும் சூழல் தான் இயக்குநர் எனக்கு முதலில் தந்த மெட்டு அதற்குமுன் அதே படத்தில் காதலியைப் பிரிந்திருக்கும் காதலனின் கண்ணீர் மாலையில் உங்களுக்காக ஒரு சரணம்.

“நீ மொகம் பாக்கும் கண்ணாடில
ஓ நெத்திப் பொட்டு இருக்கு
நீ குளிச்ச எடத்திலதான்
மஞ்ச துண்டு கெடக்கு
விட்டத்தில செருகிவச்ச
கோழி றெக்க இருக்குதடி
நீ சிக்கெடுத்துப் போட்டமுடி
காலச்சுத்திக் கெடக்குதடி

ஒன்னச் சுத்தி எல்லாமே
உம்பேரத்தான் சொல்ல – என்ன
ஒத்தையில விட்டுப்புட்டா
நானெங்க சொல்ல”