ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்

ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்




ஒரு பூ
ஓர் ஆணிற்குப் பெண்ணின் நினைவாய்
ஒரு பெண்ணிற்கு ஆணின் நினைவில்

தெய்வங்கள் சூடிக்கொள்ளும்
மறதியின் ஒரு பூ
யாருக்குமே கிடைக்காது
மண்ணோடு மண்ணாகி
மறைகிறது ஒரு பூ

இங்கு எனக்குக் கிடைத்திருக்கும்
ஒரு பூ
ஒரேயொரு ஒற்றை இலவம் பூ
சிவந்தவிழ்ந்த இதழ்களும்
நடுவே காத்து நிற்கும் மகரந்தக் கூட்டமும்


எனக்கெனவும் ஒரு பூ இங்கு மலரத்தான் செய்கிறது

*************************************************************

ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பெயர் உண்டு நம்மிடம்
மரங்களுக்கோ அவை ஏற்றுள்ள பெயர்கள்
நிச்சயம் வேறொன்றாகத்தான் இருக்கும்

அவை நமக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கும்
அந்த பெயரில் நம்மை நினைவு கூறும்
ஒவ்வொரு கனியிலும் பூவிலும் இலையிலுமென
அவற்றின் நினைவுகள் படர்ந்து நிற்பதாய் தோன்றுகிறது

நம் பெயரின் நினைவிலும் ஒரு பூ மலர்ந்திருக்கும்
ஒரு கனி காய்த்திருக்கும்
ஓர் இலை துளிர்த்திருக்கும்
உதிர்வதற்கு

விக்னேஷ்குமார்,
காஞ்சிபுரம்.