Ippellam Yarunga Saathi Pakkura Poem By Nallu R Lingam. இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க? கவிதை - நல்லு ஆர் லிங்கம்

இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க? கவிதை – நல்லு ஆர் லிங்கம்




ஊரிலிருந்து வந்த அலைபேசி அழைப்பு
மரணச் செய்தி ஒன்றை அறிவித்தது
உறவினர் ஒருவரும் இணைந்துகொண்டார்
துக்கம் விசாரிக்கவும் வழித்துணையாகவும்
சாலையைப்போலவே அரட்டைகளும் நீண்டன
சினிமாவில் தொடங்கி அரசியலை அலசி
சமூகத்தின் பக்கம் பேச்சை நகர்த்தினோம்

ஊர் நெருங்கும் நேரத்தில் உரையாடல் நடுவே
‘இப்பல்லாம் யாரு மாப்ள சாதி பாக்கறாங்க?’ என்றார்
எதைச் சொல்லியும் அவருக்குப்
புரிய வைத்துவிட முடியாது என்றுணர்த்த
அவருடைய வசனமே போதுமானதாயிருந்தது

ஊருக்குள் நுழையும் முன்பு
வண்டிக்குக் கொஞ்சம் ஓய்வளித்து
‘வாங்க தோழர், ஒரு டீ குடிப்போம்’ என்றேன்
புருவங்களின் சுருக்கம் சொல்லாமல் சொன்னது
தோழர் என்ற சொல் அவர் நெஞ்சுக்குள் தைத்ததை
மச்சான் முறை கொண்டவன் தோழர் என்றழைத்தால்
தைக்காமல் வேறென்ன செய்யும்?

‘இப்போதெல்லாம் கிராமத்தில்கூட
இரட்டைக் குவளை இல்லை பாத்திங்களா?’ என்றார்
‘தேங்காய் சிரட்டைக்கு மாற்றாக
யூஸ் அன்ட் த்ரோ வந்தபின்னால்,
எச்சில் கிளாஸ் பிரச்சினையும் முடிந்தது’ என்றேன்
‘எல்லாத்துக்கும் ஒரு பதில்
இன்ஸ்டன்ட்டா வச்சிருப்பிங்களே’ என்றார்

தேநீர் முடித்து இழவு வீட்டுக்கு நடந்தோம்
தெரு முனை நெருங்கும்போதே
செவிப்பறை கிழித்தது தோல் பறையொலி
மலர் மாலையை மடிந்தவருக்குச் சாத்திவிட்டு
எங்கள் உடலை நெகிழி நாற்காலியில் சாத்தினோம்
அதிரடி இசைக்கேற்ப அங்கம் வியர்க்க
டாஸ்மாக் பானத்தின் உற்சாகம் கொப்பளிக்க
நடனக் கச்சேரி நடந்தேறிக் கொண்டிருந்தது

இறுதிப் பயணம் தொடங்கும் நேரம்
மரணத்திற்கு முன்பான மருத்துவமனை நாட்களில்
முளைத்த மயிரை மழிக்க வந்தார் ஒருவர்
உடலைக் குளிப்பாட்டி கோடி உடுத்தியபின்
சங்கு ஊதியபடி பட்டினத்தார் பாடல் பாட ஒருவர்
மூங்கில் கம்பில் பச்சை மட்டை வைத்து
சக்கரமற்ற வண்டியான பாடை கட்ட ஒருவர்
உறவுகள் தூக்கி அமரர் ஊர்தியில் வைக்க
ஊர்வலமாக வண்டி ஓட்ட ஒருவர்

மங்கையின் கூந்தல் மனிதரின் கடவுள்
இரண்டையும் சேர முடியாத மலர்கள்
இறுதி அஞ்சலியாக சாலையெங்கும்
அனுமார் போல வாலில் தீ வைக்கப்பட்ட வெடிகள்
வழியெங்கும் ஒலிபரப்பிச் சிதறின
இடுகாடு சேர்ந்து சடங்குகள் முடித்தபின்
பிணத்தைக் கிடத்தி கட்டையை அடுக்கி
எரியூட்ட ஒருவர் இருக்கின்றார் தயாராக

கொள்ளி வைத்த சொந்தங்கள்
இல்லம் நோக்கித் திரும்ப
பறையடித்தவர், நடனம் ஆடியவர்,
முழி மழித்தவர், சங்கு ஊதியவர்,
பாடை கட்டியவர், வண்டி ஓட்டியவர்
இரவு முழுக்கப் பிணத்தை எரிப்பவர்
எல்லோரும் சேர்ந்து வரவு செலவு பார்க்க
சிதையில் எரிபவரின் புண்ணியத்தில்
சில வேளை அடுப்பெரியும் இவர்கள் வீட்டில்

வந்தவழி திரும்புகையில்
வழியில் கிடந்த மாலைகளை
வெடித்துச் சிதறிய காகிதங்களை
விரைந்து வந்து அள்ளிக் கொண்டிருந்தனர்
துப்புரவுப் பணி செய்யும் சோதரர்கள்
மாநகர எல்லைக்குள் நுழைந்த போது
சாலையெங்கும் சாக்கடை பெருக்கெடுத்தது

நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தி
சேற்று நீர் தெரிக்காமல் காலைத் தூக்கினார்
எல்லா இடத்திலும் ஹைஜீனிக் பார்ப்பவர்
வீடு திரும்பும் சந்திப்பில் இருந்த
பாதாளச் சாக்கடை மூடியை நகர்த்தி
அருவருப்பு என்கிற அடையாளமே இன்றி
ஊரார் வெளியேற்றிய மலக்குழிக்குள் இறங்கி
அடைப்பை நீக்கிவிட்டு அயர்ச்சியோடு வந்தார்
அறுபதை நெருங்கும் முதியவர் ஒருவர்

காலை முதல் கண்ட காட்சிகள் யாவையும்
மீள்பார்வை செய்யும்படி உடன் வந்தவரிடம் சொல்லி
‘இவர்களில் ஒருவர்கூட
ஆண்ட பரம்பரையில் ஏன் இல்லை?
என்பதை மட்டும் எண்ணிப் பாருங்கள்’ என்றேன்
எப்போதும் என் கருத்திற்கு
ஏளனப் பார்வை வீசும் அவர்
ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார்

வீட்டுக்கு வாங்க, டீ குடிச்சிட்டுப் போலாம் என்றேன்
இருவரும் இணைந்து இல்லம் நுழைந்தோம்
இருக்கையில் அமர்ந்து, இல்லாள் தந்த
தேநீர்க் கோப்பையைக் கையில் ஏந்தி
தொலைக்காட்சியை இயக்கினேன்
வரிசையாக வந்து விழுந்தன
சாதிக்கு ஒரு மேட்ரிமோனியல் விளம்பரங்கள்

‘இப்பலாம் யாருங்க தோழர் சாதி பாக்கறாங்க?’ என்றேன்
எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டார்
அவர் கையில் இருந்த தேநீர்க் குவளைக்குள் விழுந்தன
இரு கண்ணீர்த் துளிகள்.

Payanam Thodarnthathu Short Story By Shanthi Saravanan. பயணம் தொடர்ந்தது.... சிறுகதை - சாந்தி சரவணன்

பயணம் தொடர்ந்தது…. சிறுகதை – சாந்தி சரவணன்




யாழினி பயங்கர கோபத்தோடு இருந்தாள். என்னாச்சு இந்த புவனா அம்மாவிற்கு. ஊரடங்கு, கொரானா தொற்று என உலகமெங்கும் முடங்கி கிடப்பதால் , வீட்டு வேலை செய்யும் புவனா அம்மாவை அந்த காலனியில் இருக்கும் அனைவரும் நிறுத்திவிட்டனர். ஆனால் யாழினி மட்டுமே அவர்களை நிறுத்தவில்லை. காரணம் தினமும் பேப்பர் போடுகிற பையன், பால் பெக்கட், காய் கறிகள் விற்கும் அண்ணா என இவர்களிடம் இருந்து வராத கொரானாவா இந்த வீட்டு வேலை செய்யும் புவனாவிடமிருந்து மட்டுமா வந்துவிட போகிறது? அதுமட்டுமின்றி. அவளின் 9 வயது மகன் பாலு அவளையே நம்பியே இருக்கிறான்.

அவளின் கணவன் அவன் பிறந்து இரண்டு வருட குழந்தையாக இருந்த போது திடிரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டான். பாலுவை நல்லபடியாக வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே புவனாவின் இலக்கு. இது யாழினிக்கு நன்கு தெரியும். அதனால் தான் அவள் புவனா மேல் சற்று அளவிற்கு மிறிய கரிசனத்தோடு நடந்து கொள்வாள். ஊரடங்கு தொடங்கியவுடன் பாலுவின் பள்ளிக்கும் முற்று புள்ளி வைத்துவிட்டாள் புவனா. யாழினி கணவன் அமுதனிடம் சொல்லி அவள் வீட்டில் கார் துடைக்கும் பணிக்கு அவனை வேலைக்கு அமர்த்தினாள்.

அதுமட்டுமின்றி தன் தோழிகளிடமெல்லாம் அவனை சிபாரிசு செய்து பல இடங்களில் அவனுக்கு கார் துடைக்கும் வேலையை வாங்கி கொடுத்தாள். அதில் அவளுக்கு பெருமை. அதுமட்டுமல்ல மாலையில் பூ கட்டி கடையில் அமர்ந்து விடுவாள் புவனா அம்மா. பாலு தான் வீதி வீதியாக சென்று பூக்களை விற்று வருவான்.

தன் மகன் சித்தார்த் வயது ஒத்த பாலுவை அவளுக்கு அவளுடைய மகனாகவே தோன்றும். அதனால் தான் புவனா அம்மாவிற்கு வீட்டு வேலை தொடர்கிறது.

காலிங்பெல் சத்தம் கேட்டு புவனா அம்மா தான் என வேகமாக போய் கதவை திறக்க போகையில் இருக்கிறது இந்த புவனா அம்மாவிற்கு இன்று என யோசித்தப்படி திறந்தவளுக்கு பாலு அழுத நிலையில் நின்று கொண்டு இருந்தை பார்த்து வந்த கோபம் பறந்தது.

வாடா பாலு, “என்னாச்சு, அம்மாவிற்கும் பிள்ளைக்கும் இரண்டு நாளா ஆளைக் காணோம்”

உடனே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் பாலு.

“அக்கா அம்மா அம்மா”

“என்னாச்சு டா”, அம்மாவிற்கு

அம்மாவிற்கு இரண்டு நாளாக நல்ல காய்ச்சல். கொரானாவா இருக்கலாம் என அம்மாவை கவர்மென்ட் அஸ்பட்டலுக்கு ஆம்புலன்ஸ்க்கு போன் போட்டு பக்கத்து வீட்டுகாரவுங்க அனுப்பி விட்டாங்க.

அதனாலா தான் வரல, என பேசிக் கொண்டே இருக்கும் போது யாழினிக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது.

அய்யோ அப்ப நம்ம எல்லாம் முதல் கொரோனா செக் செய்யனும்.

சரியாகிவிடும். சரி, “நீயும் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ..”.

“அம்மா வந்துடுவாங்க”, என்றாள் மனிதாபம் எல்லாம் மறந்து போய்….

“அவன் அழுதபடி சென்றான்.”

சிறிது நேரத்தில் தகவல் புவனா அம்மா இறந்து விட்டார். தகனத்திற்கு கூட உடலை தரவில்லை. இனி பாலுவின் நிலை? பெரிய கேள்விக்குறியாக யாழினி நெற்றியில்.

அன்று இரவு மனம் சுழன்றுக் கொண்டே இருந்தது. விரைவில் தூங்கிவிட்டாள்.

குட்டி மனிதர்கள் தவழந்தும், மூட்டி போட்டு கொண்டும், நடை வண்டி பிடித்து கொண்டும், நடந்தும் ஓடியும் குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டிற்கு வேகமாக வந்து கொண்டே இருந்தனர். மாநாடு துவங்கி விட்டது.

இது என்ன மாற்றம். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என சமூக ஆர்வலர்கள் தான் கொடி பிடிப்பார்கள். இது என்ன புதுசா இருக்கே? குழந்கைகளே தங்கள் உரிமைகளை கேட்கின்றனரே!

தீப்பெட்டி பெக்டரியில் பணிபுரியும் குட்டி மனிதர்கள், சாயப் பட்டறையில் பணிபுரியும் குட்டி மனிதர்கள், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் குட்டி மனிதர்கள், உணவு விடுதிகளில் வேலைச் செய்யும் குட்டி மனிதர்கள், பழைய குப்பைகளை அகற்றும் குட்டி மனிதர்கள், பால் போடும் குட்டி மனிதர்கள், பேப்பர் போடும் குட்டி மனிதர்கள், பூ விற்கும் குட்டி மனிதர்கள் மட்டுமே குழந்தை தொழிலாளர் என தவறுதலாக நினைக்கும் உங்களை என்ன சொவ்வது?

திரைப்படத்தில் பிறந்தவுடன் காட்சிகளில் காட்டப்படும் மழலை. ஊடகங்களில் டைபர் விளம்பரத்தில் வரும் இரண்டு மாத குழந்தை? அது சம்பாதித்து தருவதும் பணம் தானே! அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?

வூட்வர்ஸ் விளம்பரம்
பேம்பர்ஸ் விளம்பரம்
அனையாடை விளம்பரம்
ஹல்த் டிரிங்ஸ் விளம்பரம்
சாக்லேட் விளம்பரம்
ஆடை விளம்பரம்
மருந்து விளம்பரம்
தின்பண்டங்கள் விளம்பரம்!
அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?
இதுமட்டுமா?

சீரியலில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து போட்டி பொறாமை போன்ற தூர் எண்ணங்களை மழலையர் மனதில் விதைப்பது. அவர்களின் நடிப்பை காசாக்குவது! அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?

ஸ்டேஜ் ஷோ என்ற பெயரில் குழந்தைகளை ஆடல் பாடல் என மேடைகளில் அவர்களை வதைப்பது? யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர்…. இன்னும் ஏதாவது இப்படி எத்தனை வெளி தளங்களில் இந்த குட்டி மனிதர்களின் உணர்வை சிதைப்பது! அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?

பெரிய பணக்கார வீடுகளில் அவர்கள் குழந்தைகளை தூக்கி கொள்ள 7 வயது சிறார்களை பணியில் அமர்ந்துவது.! அவர்கள் குழந்தை தொழிலாளி இல்லையா?

இப்படி விளம்பரங்களில் அவர்களை நடிக்க வைத்து பணம் சாம்பாதித்தால் அவர்கள் குழந்தை தொழிலாளி இல்லையா?

குழந்தைகள் என்ற பெயரில் இந்த குட்டி மனிதர்கள் ஒவ்வொன்றும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல திரானியில்லாமல் திணறினரார்கள் …… அவர்களை பல விதங்களில் ஆட் கொண்டவர்கள்?

அந்த கூட்டத்தில் பாலுவின் மெல்லிய உருவம் யாழினியின் மேல் கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தது.

சித்தார்த்தை கார் துடைக்க விடுவிர்களா அக்கா? அப்படி இருக்கும் போது எனக்கு தாங்கள் செய்தது நியாயமா? நானும் படிக்க வேண்டும் என ஆசையாக இருந்தேன். முன்னாடி ஒரு வேளை சோறு கிடைக்கும் என என் அம்மா வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்பினார்கள்? ஆனால் கொரோனா ஏற்படுத்திய புதிய யூகம் ஆன்லைன் வகுப்பு. அலைபேசி வாங்கவோ கணினி வாங்கவோ எது எங்களிடம் காசு? என் கற்றல் நின்றது. தொழில் தொடங்கியது. இப்போது அம்மா கூட இல்லை. தற்காலிக குழந்தை தொழிலாளியாக இருக்கும் என்னை இந்த சமூகம் இனி நிரந்தர குழந்தை தொழிலாளியாக உருவாக்கிவிடும். ஏன் படிப்பு கனவாகி காலாவதியாகும்…. என அவனது தொடர் கேள்வி ஏவுகணைகள் அவள் மேல் பாய்ந்துக் கொண்டே இருந்தது?

“அதிர்ந்து கண் விழித்தாள்”, யாழினி.

உடல் முழுவதும் வேர்த்து போய் இருந்தது.

“அமுதனை எழுப்பினாள்”

“என்னப்பா இந்த நேரத்தில்”, என்றான்

“தயவு செய்து வாங்க பாலுவை போய் அழைத்து வரலாம்”, என்றாள் கலக்கத்தோடு

“அரை தூக்கத்தில் எழுந்த அமுதன் விழித்தான்”

“என்னடி உளருர”

“இல்லைங்க…..”

“எனக்கு அவன் இப்போ இங்கே வேண்டும் என அழ ஆரம்பித்தாள்”.

அமுதன், “சரி சரி அழாதே நான் போய் அழைத்து வருகிறேன்”, என கிளம்பி சென்று குடிசையில் தனியாக தூங்கி கொண்டு இருந்த பாலுவை அழைத்து வந்தான்.

யாழினி அவனை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

காலம் யாருக்காகவும் காத்து இருக்காது. நாட்கள் கடந்தன.

கொரோனா அலை ஒயிந்தது மக்கள் இயல்பு நிலை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.

பள்ளிகள் வழக்கம் போல துவங்கியது.

சித்தார்த், பாலு இருவரும் ஒரே அரசு பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.

யாழினி இருவருக்கும் உணவு கட்டிக் கொண்டு இருந்தாள்.

அமுதன் அவர்களை அழைத்துச் செல்ல ஆயுதமாகிக் கொண்டு இருந்தான்.

தொழிலுக்கு மட்டுமன்றி பாலுவின் கல்வி நிற்றலுக்கும் முற்று வைத்து பாலுவின் கல்வி பயணம் தொடங்கியது……..

Appatha Short Story By Era Kalaiyarasi அப்பத்தா சிறுகதை - இரா.கலையரசி

அப்பத்தா சிறுகதை – இரா.கலையரசி




விடியலுக்கு விளக்கம் கேட்டபடி, இரவை விலக்கி காலையை புலர செய்து இருந்தது பூமி.

வாசலில் கிடந்த செத்தைகளை பொத்துனாப்புல கூட்டி பெருக்கிகிட்டு இருக்கிறாள் “அப்பத்தா”

ஏலேய்! மாடசாமியால வண்டியில போறது? அங்கன மாசாணன் கடையில வெத்தல பாக்கு வாங்கியாந்துருடானு சொல்லிகிட்டே சில்லரை காச எடுத்து குடுத்தா.

என்னா! அப்பத்தா எனக்கு சோளி இருக்குனு சொன்னவன், பிறகு காசை வாங்கிகிட்டான். பின்கொசவத்த இறுக்கிகிட்டு, வாசலை தூத்தினா அப்பத்தா.!

யாத்தே! கொஞ்சம் உறைமோரு இருந்தால் தாயேன்னு வந்து நின்னா ஈஸ்வரி. வாங்கிக்கடினு உள்ள போயி கெட்டி தயிர ஊத்தி எடுத்தாந்தா அப்பத்தா. எப்புடியும், நல்ல தயிரு வரும்னு ஈஸ்வரிக்கு தெரியும். மெச்சு போயி வாங்கிகிட்டு போனா.

அப்பத்தா வச்சு இருக்கிற ரெண்டு பால்மாட்ட பால் பீச்ச வந்துட்டான் பலராமன்.”கிணிங் கிணிங்” சத்தம் உள்ளே இருந்தத அப்பத்தாவ அழைக்க பூனைங்க எல்லாம் அவள் கால சுத்தி விளையாடுச்சுங்க.

என்னா! அப்பத்தா உங்கள் வீட்டு ஆளுங்க உன்னையவே சுத்திகிட்டு இருக்காங்க போல! மியாவ் என்று சீறியது ஒரு கருப்பு பூனை.

மா! மா! என மாடுகளும் அப்பத்தாவை கூப்புட்டாங்க. அப்பத்தா, நீ வந்து அங்கன நில்லு அப்பதான் பால் பீச்ச விடுங்க உன் புள்ளைங்க என்றான் பலராமன். சொன்னது சரிங்கறது போல தலையை ஆட்டின பால்மாடுகள்.

செவத்திக்கு கொஞ்சம், புல்ல போட்டு மெல்ல தடவிக் கொடுத்தாள். வாஞ்சையுடன் அப்பத்தா கைகளை நக்கி அன்பை வெளிபடுத்தினாள் செவத்தி. கருப்பிக்கு கோபம் வந்து தலையை ஆட்ட, அவளையும் தட்டிக் கொடுத்தாள் அப்பத்தா.

மடி இறங்கி பால் பீச்ச தயாரானான் பலராமன். அப்பத்தாவை பார்த்துக் கொண்டே மடியை இறக்கின செவத்தியும் கருப்பியும். சூடு குறையாத பாலை வாங்கிகிட்டாள். இப்ப பொழுது நல்லா விடிஞ்சிருச்சு.

கைகுழந்தைகள தூக்கிகிட்டு அஞ்சாறு பொம்பளைங்க அப்பத்தா வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்பத்தா! அப்பத்தா! என்று சத்தம் போட, கையில பால் எடுத்துகிட்டு
வந்துட்டாள் அப்பத்தா.

வீட்டுக்கு கொஞ்ச பாலை எடுத்துகிட்டு மிச்சத்த, பால் பத்தாத புள்ளைங்களுக்கு குடுத்திருவாள். இந்தா வாரேன்டினு வெளியே வந்தவள், டேய்! படப்பு னு தலையில நிறைய முடி இருக்கற புள்ளைய கொஞ்சுனா. அவனும், அப்பத்தாவை பார்த்து ஆசையா சிரிக்கிறான்.

வந்த பொம்பளைங்க எல்லாம், தண்ணீர் கலக்காத சூடு குறையாத பாலை வாங்கிகிட்டு போனாங்க. அவங்கள பார்த்து செவத்தியும், கருப்பியும், தலைய ஆட்டி ஏதோ? சொல்லி அனுப்பறாங்க.

அடுக்களைக்குள்ள போனவள் பழைய சோத்துல ஊத்தி வச்ச நீச தண்ணிய எடுத்து குடிச்சா. வகுத்துக்குள்ள ஆத்து தண்ணிய இறக்குன மாதிரி குளுகுளுனு இருந்துச்சு. அடிச்சு வச்ச கம்ப நல்லா பொடச்சு வச்சிருந்தாள். கம்பங்களில கெட்டி தயிர ஊத்தி காலை சாப்பாட முடிச்சுகிட்டா அப்பத்தா.

அப்பத்தா! அப்பத்தா! என்றபடி உள்ளே வந்தார் ராசு. இந்த வருசம் நல்ல விளைச்சல். நம்ம வயலில் விளைஞ்ச நெல்லுமணிகள் முத்து கெனக்கா இருக்கு. எல்லாம் அப்பத்தா ராசினு வாயெல்லாம் பல் கொல்லாமல் சிரித்தார்.

அம்பது மூடை நெல்ல இறக்கிடுறேன். வந்த விளைச்சலில் அப்பத்தா எனக்கு கொஞ்சம் கவனிக்கனும் என்றார். அப்பு! உன் மகளுக்கு கல்யாணம் வச்சு இருக்க, தெரியும். எனக்காக இத்தனை வருசம் பாடுபட்டு இருக்க, பொறு வாரேனு உள்ளே போனாள் அப்பத்தா.

அலமாரிய திறந்து, அவள் கல்யாணத்துக்கு போட்ட ரெட்டைவட சங்கிலியை எடுத்தாந்தா. இந்தாய்யா ராசு, இத உன் மகள் கல்யாணத்துக்கு வச்சுக்க என்று கொடுத்தாள். வேணாம் அப்பத்தா! ஏதோ! சின்னதா உதவி செஞ்சா போதும்! னு மறுத்த ராசு கையில திணிச்சா அப்பத்தா.

கண்கள் கண்ணீரை தெளித்து விட காத்து இருந்தது. அழுத ராசுவை, அட! என்னாப்பா இப்பிடி அழுகறவன். இத உன் மகளுக்கு தான் கொடுக்கனும்னு என்னைக்கோ முடிவு செஞ்சது தான். வச்சுக்க என்றாள்.

மதியானம் போல மாசாணம் வந்தாள். என்ன அப்பத்தா? என்னா செய்யிற என்றாள். என்னாடி! காரியம் இல்லாமல் வர மாட்டியே என்றாள் அப்பத்தா! ஆமாம் உன் காரியமா தான் வந்து இருக்கேன்.

ஊருக்கு மேற்க இருக்கற இடத்தை எனக்கு கை மாத்தி விடுறது? நல்லா கவனிக்கறேன் என்றாள். இங்கேருடி நீயும் நிறைய தடவை கேட்டு வந்துட்ட. நானும் மாட்டேன்னு சொல்லிட்டேன் விடாமல் விரட்டுனா எப்புடி என்றதும் வீட்டு வாசலில் வந்து நின்றார் பேரரசு ஐயா!

அப்பத்தா! என்றபடி வந்தார். அப்பத்தாவின் கைகளை பிடித்தபடி இந்த ஊரு புள்ளைங்களுக்கு நீங்கள் செஞ்ச உதவி ரொம்ப பெருசு என்று நா தழுதழுத்தார். மேற்க இருந்த இடத்த பள்ளிக்கூடம் கட்டுறதுக்கு குடுத்த உங்கள புள்ளைங்க மறக்க மாட்டாங்கனு சொல்லி கை கூப்பினார்.

புள்ளைங்க படிப்பு முக்கியமே! காலத்துக்கும் பயன்படும்லனு சொவ்லி உதட்டை சிரிப்புக்கு குடுத்தா அப்பத்தா. மாசாணம் ஒண்ணும் சொல்லாமல் அங்க இருந்து கிளம்பிட்டாள்.

“கீச் கீச்” னு குருவிங்க அப்பத்தாவ கூப்டுச்சுங்க. அப்ப தான் அதுக கூடு கட்டி இருந்துச்சு. கொஞ்சம் கம்பு எடுத்து போட்டாள் அப்பத்தா.

பொட்டுகடலை விக்கிற பொன்னுசாமி அந்தப் பக்கமா வந்தார். தவுச்சு போயி அப்பத்தா திண்ணையில உக்காந்தார். ஆரு! நான் தான் பொன்னுசாமி அப்பத்தா என்ற குரல் கேட்டதும், கையில் சொம்பு மோருடன் வந்தாள் அப்பத்தா. குடியா பொன்னு என்றார். மறுக்காமல் வாங்கி குடித்து தாகம் தீர்த்துக் கொண்டார்.

அப்புறம் வியாபாரம் எப்புடி போகுது? என்றவளிடம், வருசகெனக்கா இந்த பொட்டுகடலை வியாபாரந்தான். பெருசா படிப்பு இல்ல. புள்ள குட்டிய காப்பாத்த எதையாவது செய்யனும்ல அப்பத்தா என்றபடி வாரேன்னு சொல்லி மிதிவண்டியை மிதித்தார்.

அன்றைய நாள் மெதுவாக நகர, ட்ரங்குப் பெட்டியை திறந்தாள் அப்பத்தா. அவளுடன் ஒரு மாதமே வாழ்ந்த கணவனின் ஆசை முகத்தை பார்த்துக் கொண்டாள். கூடை நாற்காலியில் அமர்ந்து இருந்த தன் ஒரு வயது மகனையும் பார்த்தாள். ஏனோ? அழுகையே வரவில்லை அவளுக்கு.

திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் கணவன் காலராவில் போய் சேர, அவன் வாரிசை சுமந்தவள் ஆண் மகவை பெற, அதுவும் ஒரு வருடத்தில் இறக்க,வாழ்வின் இரக்கமற்ற போரில் அவளின் மொத்தமும் போனது.

தனக்கான ஒரு வாழ்வை அவள் கோரவில்லை. மற்றவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத நபராக தன்னை மாற்றி தகவமைத்து கொண்டாள். சின்ன புள்ளைங்களுக்கு பால் தர ஆரம்பிச்சவள ஆசையா புள்ளைங்க அப்பத்தானு கூப்புட அந்த பேரையே எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

“அழகம்மாள்”ங்கற அவளோட பேர விட அப்பத்தாங்கற பேரு நல்லா தான் இருக்கு. இரவின் மடியில் உறக்கத்திற்கு வழி விட்டு ஊர் உறங்க, பழைய நினைவுகளில் உறக்கத்தை தேடுகிறாள் அப்பத்தா.!

Iniya Sorkal Short Story by Shanthi Saravanan இனிய சொற்கள் சிறுகதை - சாந்தி சரவணன்

இனிய சொற்கள் சிறுகதை – சாந்தி சரவணன்




கோதை பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். பள்ளிக் குழந்தைகள் தேனீக்கள் போல் ஓடி வந்து பேருந்தில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் படிக்கும் காலத்தில் காலார நடந்து சென்று நண்பர்களோடு விளையாடிய நாட்கள் கண்முன் நிழலாடியது.

நல்லூர் கிராமம் அவளின் ஊர. 50 வருடங்கள் முன்பு இருந்த கிராம சூழல். பாரதிராஜா படங்களில் வரும் கிராமம் நம் கண் முன்னே கற்பனை செய்து கொள்ளலாம்.

பச்சைப் பசேல் புல்வெளி. மண் கலந்த வீதிகள். சாலைகளின் இருபுறமும் புளிய மரங்கள், பனை மரங்கள், ஆல மரங்கள். ஆல மரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் விளையாட்டு. மூக்குத்திப் பூ எடுத்து பெண்கள் மூக்கு குத்தி கொண்டும், காதில் பூ எடுத்து கம்மலாக பாவித்து போட்டு கொண்டு விளையாடுவது. இதற்கிடையில் சிட்டுக் குருவிகள் வழிநெடுக பறந்த வண்ணம் இருக்கும் அழகைப் பார்ப்பது…

பள்ளி வாசலில், கொய்யா, நாவல் பழம், மாங்காய், தேன் மிட்டாய், தேங்காய் பர்பி, ஸ்டார்ங் மிட்டாய், மிட்டாய் வாட்ச், இப்படி எத்தனை எத்தனை பொருட்கள். அவற்றை ருசி பார்த்துக் கொண்டை நடக்கும் நடை பயணம் உடலுக்கும் மனதிற்கும் அளிக்கும் புத்துணர்ச்சியே ஒரு அலாதி சுவை.

அதிலும் மிட்டாய் வாட்ச் செய்து கொடுக்கும் அண்ணன் இரண்டு சக்கர மிதிவண்டி பார்த்து விட்டால் பிள்ளைகள் கூட்டம் அந்த வண்டியை சுற்றி அவரை “அண்ணா அண்ணா….” என அழைத்தே அவர் அனைவரின் அண்ணன் ஆகிவிடுவார்.

அடுத்து குச்சி கலர் ஐஸ். பல வண்ணங்களில் அந்த குச்சி ஐஸ்ஸை ரசித்து ருசித்து சாப்பிடும் அழகே தனி. இதற்கிடையில் ஆசிரியர் யாராவது கடந்து சென்றால், “வணக்கம் அய்யா’ என வழியிலும் ஆசிரியருக்கு என்ற மரியாதை மனதிலிருந்து வார்த்தைகளாக மலரும்.

“அய்யா வகுப்பு ஆரம்பித்து விடுவார்கள். சீக்கிரம் போக வேண்டும்” என்ற மாணவர்களது கெஞ்சல் உரையாடல், நாம் கடந்து செல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஆனால் இப்போது மாணவர்களின் உரையாடல் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. வழியில் ஆசிரியர் சென்றாலும் டேய் “வாத்தி” டா என்று அவர்கள் பேசிக் கொள்ளும் சொல்லாடல் பல ஆசிரியர்களுக்கு மன வலியை உண்டாக்குகிறது. அது மட்டுமல்ல ஆசிரியரைத் தாக்கும் ஆயுதங்களாக மாணவர்கள் மாறிவிடும் அபாயமும் ஆங்காங்கே நடக்கின்றது. விதிவிலக்கு அனைத்திலும் உண்டு.

கோதை ஆசிரியராக வேண்டும் என்பதற்காகவே சிறு வயது முதல் எண்ணம் கொண்டு “ஆசிரியர்” என்ற ஸ்தானத்தை அடைந்தாள். அவள் தொழிலாக ஆசிரியர் பணியை பார்க்கவில்லை. சிலாகித்து விருப்பத்துடன் அந்தத் துறையை தேர்வு செய்து ஆசிரியராக பணிபுரிகிறாள். ஆதலால் தற்போதைய மாணவர்களின் உரையாடல் அவளை பெருங் கலக்கம் கொள்ள செய்கிறது.

“நற்சொற்கள்” நம்மை விட்டு நாடு கடத்தபட்டதற்கு காரணம் என்ன? என்று யோசித்த வண்ணம் கோதை பயணித்து கொண்டு இருந்தாள். சில ” இனிய சொற்கள் ” அவள் காதுகளில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருந்தது.

“வணக்கம்”.
“ஆசிரியர் வந்தால் எழுந்து மரியாதை அளிப்பது”.
*எப்படி இருக்கிங்க?”
“சாப்பிட்டிங்களா? ”
“பூக்கார அக்காவிடம் பேரம் பேசாமல் பூ வாங்குவது? ”
“ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிய தொகையை விட கூட கொடுப்பது”.
கோரியர் போஸ்ட் மானியம் எடுத்து வருபவரிடம் , “தண்ணீர் வேண்டுமா என கேட்பது.”
“நன்றி” என கூறுவது
“வாழ்த்துகள்” தெரிவிப்பது.
“புன்னகையை” விசாலமாக கொடுப்பது
“பகிர்ந்து உண்பது”

“வெறுப்பை உமிழாமல் அன்பை அள்ளி அள்ளிக்கொடுப்பது பொறாமையையும், கோபத்தையும் அனல் பறக்க சக தோழமைகள் மேல் தெறிக்கவிடாமல், தென்றல் தீண்டும் சுகத்தை இனிய மொழியில் தருவது.

எப்படி நமது நாக்கு நற்சுவையையே விரும்புகிறதோ அதே போல நம் வாயில் இருந்து உதிரும் வாக்கும் சுவையானதாக இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும். அதையே நமது பிள்ளைகளுக்கு நமது வருங்கால சந்ததியினர் அறியும் வண்ணம் அந்த சுவையை அவர்களை பருக வைக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை தானே. பெற்றோர்களாக, ஆசிரியராக, உறவுகளாக, நண்பர்களாக, சமூகமாக ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என சிந்தனை அவளை மேலும் ஆட்கொண்டது.

அவளின் அரசு பள்ளி பேருந்து நிலையம் நிறுத்தம் வந்தது. தனது வகுப்பிற்கு சென்று கரும்பலகையில், “இன்று முதல் நற் சொற்கள் பேசும் மாணவர்கள் பட்டியல் எடுக்கப்படும். மாதம் ஒருமுறை அந்த மாணவருக்கு பரிசு வழங்கப்படும்” என்று எழுதிவிட்டுப் பாடம் எடுக்க துவங்கினாள்.

மாணவர்கள் மத்தியில் சலசலப்பு.

சிறிது நேரத்தில் அந்த சலசலப்பு காணாமல் போனது. ஒவ்வொரு மாணவர்களும் இனி நற் சொற்கள் மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் என்பதை அவர்களின் முகம் பிரதிபலித்தது. கோதை வகுப்பை விட்டு வெளியே வர எழுந்த போது, டேய் “வாத்தி போயிடுச்சு டா” என்ற சொல்லாடல் மறைந்து “நன்றி அம்மா” என்ற பிள்ளைகளின் குரல் கோதை காதுகளில் ரீங்காராமாக ஒலித்தது. சிறிய மாற்றம் தான் பெரிய மாற்றத்தின் துவக்கம் என்பது நாம் அறிந்ததே.

“ஓருவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பிலே “ மட்டுமே அல்ல, ஆசிரியரின் வழிநடத்தலிலும், சமூகத்தின் மன்னிப்பு அளிக்கும் தனிமையில் உள்ளது என நினைத்து கொண்டே மன நிம்மதியோடு பேருந்து நிலையத்தில் பேருந்து வருகைக்காக காத்து இருந்த கோதையின் கண்களில் பள்ளியின் சுவரில் ..
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”.
என்று திருக்குறள் எழுதப்பட்டிருந்தது.

Rendu Jodi Short Story by Sutha சுதாவின் ரெண்டு ஜோடி சிறுகதை

ரெண்டு ஜோடி சிறுகதை – சுதா




ஊ…ஊ….ஊ……என்ற சங்கு சத்தம் உடல் முழுவதும் பரவி நரம்புகளில் ரசாயன மாற்றத்தை யாரையும் அறியாமல் அனைவர் மீதும் ஊடுருவிக் கொண்டிருந்தது. கதிர் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான் பத்து மணிக்கெல்லாம் காரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுள்…

கற்பகம் இறந்து இரண்டு மணி நேரம் தான் ஆகுது. கற்பகத்துக்கு வரவேண்டியவங்க யாரும் இல்ல. கதிர் தான்…அவனும் உசிர் போவதற்கு முன்னமே வந்துட்டான். அதுவே கற்பகத்தின் ஆத்மா சாந்தி அடையும்…

கதிர் கற்பகத்தின் ஒரே பையன் கதிரின் அப்பா கற்பகத்தையும் கதிரையும் விட்டு விட்டு காணாமல் போய் பல வருஷம் ஆச்சு. காட்டு வேலையும் நாலு ஆட்டுக்குட்டியும் தா கதிர படிக்கவச்சது…வெள்ளாமை இல்லா காட்டுல விதைக்கு என்ன வேலைனு ஒதுங்காம கற்பகம் தன் மாமியாரையும் காத்து காடு சேர்த்தா…

அப்ப கதிருக்கு பதினேழு வயசு இருக்கும். கதிரோட அப்பா இறந்து விட்டதாக செய்தி வர கற்பகமும்.. ஊர்க்காரங்க நாலு பேரும் போயி அடக்கம் பண்ணிட்டு வந்துட்டாங்க.இதுல பெருசா வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ கதிருக்கும் அவன் அம்மாவுக்கு ஒண்ணுமே இல்ல…

கதிர் கற்பகத்தின் கஷ்டம் உணர்ந்து படிச்சான். கவர்மெண்ட் பேங்க்ல நல்ல உத்தியோகம் கற்பகத்தின் பாடு அப்போதுதான் விடிஞ்சது. கொஞ்சம் கொஞ்சமா கற்பகத்தின் ஓட்டம் கொறஞ்சது ஓடிய கால்கள் கொஞ்சம் இளைப்பாறுச்சு கதிர் கற்பகத்த கண்ணுல வச்சு பார்த்துகிட்டான்…

யார் கண்ணு பட்டுச்சோ கற்பகத்துக்கு உடம்பு முடியல. எத்தனை ஆஸ்பத்திரி பார்த்தும் ஒன்னும் கேட்கல. இந்த சமயத்துலதா கற்பகத்த பார்க்க கற்பகத்தோட சினேகிதி சரசா வந்தா. வந்தவ உள்ள வராம வெளியில் நின்றபடியே கற்பகம் கற்பகமுனு கத்திகிட்டு இருந்தா…வெளில இரண்டு ஜோடி செருப்பு கிடந்துச்சு யாரோ உள்ள இருக்காங்கன்னு யூகிச்சிட்டா சரசா…

கட்டில்ல படுத்தபடியே உள்ள வான்னு சொன்னா கற்பகம். சினேகிதிய பார்த்த சந்தோஷம் அவளுக்கு…பால்ய கால கதை எல்லாம் பேசி பாதி நாள் கழிஞ்சு போச்சு..பேச்சுவாக்கில் சரசா கேட்டா நீ உன் பையன் கூடவே போயிடலாம்ல. அவன் உன்னை பார்த்துப்பான்ல இங்கே இருந்து ஏன் கஷ்டப்படுற. கேட்ட வாய் மூடுவதற்குள் அய்யோ என்னால இருக்க முடியாது பா..டவுன்ல போயி என்னால இருக்க முடியாது கதிர் தான் அப்பப்போ வரான்ல அதுவே போதும் என்று சொல்லி கற்பகம் நகர்ந்தா.

இப்பயும் சரசா விடுறதா இல்லை கற்பகம் கேட்கணும்னு நினைச்சேன். நீ ஒரு ஆளு உனக்கு எதுக்கு ரெண்டு ஜோடி செருப்பு…சிரித்தபடியே கற்பகம் சொன்னாள் நான்தான் ஒத்தையா இருக்கேனே அது இரண்டு ஜோடியா இருக்கணும்னு தான் போட்டு வச்சிருக்கேன் அப்படின்னு சொன்னா.

நாட்கள் நகர நகர செருப்பு மட்டும் தான் மாறிகிட்டே இருந்துச்சு. அவ நெலம மாறவில்லை.போகப்போக உடம்பு மோசமாகி இறந்தும் போய்ட்டா மவராசி…
கதிருக்கு இது பெரிய இழப்பு தான்ஆனாலும் இனிமே அம்மாவுக்கு வலிக்காது என நினைக்கும்போது மனசுக்கு நிம்மதியா தான் இருந்துச்சு. கற்பகத்தை குளிப்பாட்டி பட்டு கட்டி படுக்க வைத்திருந்தத பார்க்க. தன்னோட அம்மா தூங்குற மாதிரியே தெரிந்தது கதிருக்கு…

காரியம் எல்லாம் முடிஞ்சது. கதிர் அம்மாவின் இறந்த உடலை தூக்கிட்டு சுடுகாட்டுக்கு போனாங்க…கற்பகம் பயன்படுத்தின பொருட்களையும் சேர்த்து தூக்கிட்டுப் போனாங்க. வீட்டு முற்றத்துல கிடந்த அந்த ரெண்டு ஜோடி செருப்ப மட்டும் யாரும் கவனிக்கல…

Maari short story Era Kalaiarasi இரா.கலையரசியின் சிறுகதை மாரி

மாரி சிறுகதை – இரா.கலையரசி



சித்திரைக்கு வெயிலை தாரை வார்த்துக் கொடுத்து இருந்தது பூமி. மலைகளும் கூட செத்த தளர்ந்து தான் போச்சு. மழை பேயாமல் வெள்ளாமை எதுவும் வரல. மானம் பார்த்த பூமி ஒத்த சொட்டு தண்ணீய கூட காங்கல. மரம், செடி,”கொடி மனுசன்னு எல்லாரும் காஞ்சு போயி கிடந்தாங்க.

அக்கம் பக்கத்து ஊர்ல லேசா எட்டிப் பார்க்கிற மேகம், கரிசனூத்து பக்கம் வாரதே இல்லை. மக்கள் வாடி வதங்கிப் போனாங்க. வச்சு இருந்த தெவசமும் தீர்ந்து போக, ஊருக்குள்ள களவு கூடிருச்சு. பெத்தணன் வீடும் அதுல ஒண்ணு. ஒத்த ஏக்கர மொத்த குடும்பமும் நம்பி இருக்குது. மழைய நம்பி சோளத்த போட்டாரு பெத்தணன். கிணத்து தண்ணீர் காணாமல் போயி பல நாள் ஆகிருச்சு. ஊத்து பூராவும் அத்து போச்சு.புள்ள குட்டிங்க எல்லாம் துவண்டு போய் கிடக்குக.

ஊர் பஞ்சாயத்து கூடுச்சு. நம்ம ஊர்ல இப்ப இருக்கிற நிலவரம் எல்லாருக்கும் தெரியும். எப்பவும் மழை வாராட்டி, நம்ம ஊரு அம்மனுக்கு நேர்ந்துகிட்டு வீட்டுக்கு ஒருத்தரு பூகுழி இறங்கனும். அதுக்கு சிட்டையில பேர் எழுதி குடுங்க. கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். அதுக்கு வேண்டிய வசூல சரியா குடுத்திரனும் என்றார்.

இந்தக் காலத்துல கழுதைக்கு கல்யாணமானு எழுந்துச்சு இளந்தாரி இளங்கோ குரல். அட! சும்மா இருப்பா? வில்லங்கமா பேசிகிட்டு. எங்க? நீயி வானத்த பொளந்து மழைய கொண்டாந்துரு பார்ப்போம். மழையக் கொண்டார வேண்டியது தான் இப்ப முக்கியம். உங்கள் அறிவு ஆர்ப்பாட்டங்கள கொண்டு போயி வேற இடத்துல வச்சுக்கங்கனு கோவிச்சாரு கருத்தணன்.

எதையும் உங்களுக்கு புரிய வைக்க முடியாதுயா?னு சொன்ன இளங்கோவ இந்தாப்பா! நீ கிளம்பு ன்னு ஊர் சனங்க சத்தம் போட்டாங்க. பூக்குழி இறங்க பேர் தர ஆரம்பிச்சாங்க. கல்யாண ஏற்பாடும் தயாராகிட்டு இருந்துச்சு. மாரி கண்ண திறக்கனும்னு வானத்த பார்த்து கும்பிட்டுகிட்டாங்க சனங்க. பொழுது மசங்க, இருட்ட விளாவி புழுக்கத்த நிரவுச்சு இரவு. நட்சத்திரம் எல்லாம் ஒண்ணுகூடி என்னமோ பேசிகிட்டு இருந்தாங்க.

பெத்தணன் வீடு இருட்டுக்கு சவால் விட்டு இருண்டு கிடந்துச்சு. கருக்கல் அரிசிய பொங்கி போட்டு புள்ளைங்கள தூங்க வச்சு இருந்தாள் பொன்னம்மாள். வெக்கைய வெறட்ட முடியாமல் புழுங்கி அவிஞ்சு கிடக்குது ஊர் சனங்க. பின்சாமம் நெருங்கிருச்சு. சின்ன சூரி கத்திய எடுத்துகிட்டு, உடம்புல எண்ணெய தேய்ச்சு ஒண்ணுமில்லாத வீட்டுக்குள்ள திருட வந்துட்டான் திருடன்.

பசியும், அலுப்பும் ஒண்ணா சேர்ந்துகிட்டு தூக்கத்த கொண்டாடியது. மெதுவா ஊர்ந்து வந்தவன், அரிசி, கம்பு, சோளம்னு ஏதாவது இருக்கானு பொறுமையா தேடுனான். ஒண்ணும் கிடைக்காத விரக்தியில வெளிய ஓட, அங்ஙன இருந்த பெத்தணன் கால் இடரி கீழே விழுந்தான்.

அப்புடியே எந்திரிச்ச பெத்தணன் கழுத்த புடிச்சு திருக நெம்ப முடியாமல் வழுகிக்கு போக பார்த்தான் திருடன். சூரி கத்திய எடுக்க, அவன் கைய வளைச்சு தட்டி விட்டாரு பெத்தணன். முகத்த விலக்கி பார்க்க, அதிர்ந்து போனாரு பெத்தணன். ஊருக்கே புத்தி சொல்லுற இளங்கோ திருடனா வந்திருக்கான். ஏலேய்! என்னடா பய நீயி? உன்னய எம்புட்டு பெருசா நினச்சுக்கு இருக்கேன். இப்புடி செஞ்சுபுட்டியேடா நீ? என அலுத்துக் கொண்டார். அவன் திருடியதை ஏற்க முடியவில்லை பெத்தணணுக்கு.

மாமா! மன்னிச்சிரு. வகுத்துக்கு ஒண்ணும் அகப்படல. என் மகள் பசியில வறண்டு கிடக்கு. விட்டால் செத்துப் போயிரும்னு அழ ஆரம்பித்தான். மனசு அடித்துக் கொண்டது பெத்தணணுக்கு. வீட்டு கொல்லைக்கு கூட்டிகிட்டு போனாரு. அவரு குடும்பத்துக்கு வச்சு இருந்த கருக்கல் அரிசிய எடுத்து துண்டுல கட்டிக் குடுத்தாரு.

அவர் காலை கட்டிகிட்டு அழுதான் இளங்கோ! எந்திரிடா! என்னடா மனுச பய பொழப்பு! போடா!னு அனுப்புனாரு. வறண்டு போன கண்ணுல கண்ணீர்
எட்டி பார்த்துச்சு இளங்கோவுக்கு. இளங்கோ நகர, வானம் இருட்டு கட்டியது. மேகங்கள் ஒன்று கூடி பேசி நல்ல முடிவை எட்டின.”நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை”னு பேசுச்சு போல!

வச்ச சோதனையில மனுச பயலுக செயிச்சுடாய்ங்கன்னு மேகங்க சந்தோசமாகி மாரிய இறக்கி விட்டாங்க. பூமி தொட ஓடி வந்தாள் மாரி! அந்த பின்சாமத்துல இறங்குன மழை வெளுத்து வாங்க ஆரம்பிச்சிருச்சு. ஆத்தாவ நினச்ச உடனே கண்ண தொறந்துட்டா. சனங்க பூக்குழிக்கு தயாரானாங்க. கழுதைகளுக்கு கண்ணாளமும் நடத்துனாங்க. இந்தா மழை ஆரம்பிச்சிருச்சு. கனிஞ்ச மனசு கொண்ட பெத்தணன் போன்றவங்கள பார்க்கறதுக்காகவே வர்ரா மாரி!