நூல் அறிமுகம்: சமயவேலின் ‘கண்மாய்க்கரை நாகரிகம்’. கோ.வசந்தகுமாரின் ‘அரூப நர்த்தனம்’ – ச.வின்சென்ட்

நூல் அறிமுகம்: சமயவேலின் ‘கண்மாய்க்கரை நாகரிகம்’. கோ.வசந்தகுமாரின் ‘அரூப நர்த்தனம்’ – ச.வின்சென்ட்

 



கண்மாய்க்கரை ஆட்டங்களும் அரூப நர்த்தனங்களும்

சமயவேலையும் வசந்தகுமாரனையும் ஒன்றாகச் சேர்த்து விமர்சனம் செய்வதற்கு இருவரிடமும் என்ன ஒற்றுமைகளைக் கண்டீர்கள் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இது ஓர் ஒப்பாய்வுக் கட்டுரை இல்லை. ஆனால் இரண்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளையும் ஒன்றாக அறிமுகத்திற்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

இன்று தமிழில் நவீனத்துவக் கவிதைகள் எழுதுகிறவர்கள், பின் நவீனத்துவக் கவிதை எழுதுகிறவர்கள், பின் பின் நவீனத்தில் சோதனைக் கவிதைகள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும்போது, நான் உண்டு என் அனுபவம் உண்டு என்று இப்படிப்பட்ட மாயவலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எழுதுகிறவர்கள் இவர்கள். நான் இதை உணர்கிறேன், எனது மனம் இப்படிச் சொல்கிறது. அதை நான் கவிதையாகச் சொல்கிறேன் என்று கூட இவர்கள் சொல்லிக் கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் புதுவகையான, சிக்கலான படிமங்கள் இருக்காது, குறியீடுகளை இவர்கள் தேடமாட்டார்கள். இவர்களிடம் உள்ளது இந்தப் பொதுத் தன்மைதான்.

முதலில் கவிஞர் சமயவேலின் கண்மாய்க்கரை நாகரிகம் என்ற கவிதைப் படைப்பை எடுத்துக் கொள்வோம்.

நீங்கள் கிராமத்துக் குளக்கரையில் உட்கார்ந்திருக்கிறீர்கள். இன்னும் குளங்கள் இருக்கின்றன. அவற்றில் உட்காருவதற்குக் கரைகளும் இருக்கின்றன என்பது ஓர் அனுமானம். என்ன பார்ப்பீர்கள்? தண்ணீர் இருக்கிறது. ஓரத்தில் புதர்கள். ஒரு சில மரங்கள்; என்ன மரங்கள்? எப்போதாவது வந்துஅமரும் பறவைகள்; என்ன பறவைகள்? யாருக்குத் தெரியும். வேறு என்ன? அவ்வளவு தான். காற்றாட உட்கார்ந்து விட்டு இருட்டுவதற்கு முன்னர் எழுந்துவிடுவீர்கள். நம்மால் முடிந்தது அவ்வளவு தான்.

ஆனால் இந்தக் கவிஞர் முன் கண்மாய்க்கரையில் எத்தனை காட்சிகள் விரிகின்றன? நீர்ப்பரப்பு சிற்றலைகளாய்ச் சுருளுகின்றது. துள்ளி வரும் கெண்டையைப் பிடிக்காமல் ஏமாறும் புள் பரவசத்துடன் பறந்து போகிறது. கரம்பையைத் தொடும் அலைகள் இவர் கால்களையும் நனைக்கின்றன. அந்தி ஒளியில் தீப்பிடிக்கும் நீர்ப்பரப்பு, துவைத்த துணியைத் தோளில் போட்டு நிற்கும் பெண் – சிலைபோல,- செம்மறியாடுகளின் கண்களில் ஒளிரும் மரகதப்பச்சைப் பளிங்குப் புள்ளிகள், மந்தைப் புளுக்கை வாசம் (!) இவை எல்லாம் உட்கார்ந்திருக்கும்போது காணக் கிடைப்பவை. எழுந்து இச்சி மரத்தில் சாய்ந்தாயிற்று. இப்போது துணிவெளுக்கும் ஆண் பெண்கள் வெள்ளாவி எல்லாம் தெரிகின்றன. இப்போதெல்லாம் இந்தக் காட்சி தெரியாது. எந்திரம்தான் தெரியும். இச்சி மரமும் தெரியாது. புள்ளும் தெரியாது; கூகுளில் தேடவேண்டும்.

கண்மாய்க் கரையில் இருந்தால் காசுக்கரட்டி பார்க்கலாம், நேற்றுப்பெய்த மழையில் இன்று முளைத்த குடைக்காளான்களைப்பார்க்கலாம். அவை வீட்டிலும் சமையலாகின்றன. சொடக்குத் தக்காளிச் செடியின் மணக்கும் முத்துப் பழங்கள், மண்ணில் ஆட்டம்போடும் சிறார் கூட்டம், தியானம் செய்யும் கொக்குகளும் காக்கைகளும், கோடையில் வறண்டுபோன கண்மாயில் இளைஞர்களின் ஆட்டம், சின்னக்குருவம்மாவின் ஓலைப்படகு விளையாட்டு, பொற்கொல்லனின் கைவண்ணம்போன்ற புளியம்பூ, மஞ்சள்பூ பூசிய கடுகுச்செடி, கருநிற மூளைகளாய் மஞ்சனத்திப் பழங்கள்—எத்தனை விதமான விபரங்கள்! கண்மாய்க்கரையில் மனிதருக்கும் குறைவில்லை. துவைத்தவேட்டியைக் குடையாகப் பறக்கவிடும் ஆதிமூலம், மழைக்காக ஏங்கும் குருசாமி அய்யா, முதல் கல்லூரி மாணவி வேணி வரையில் சுரைக்காயைக் காக்கும் தாத்தா முதல் மடை திறக்கும் குடும்பர் வரையில், சாவதற்கென்றே கண்மாய்க்கரைக்கு வந்த பால்பாண்டி முதல் எல்லாம் போனபிறகும் ’கம்மாத்தண்ணி இருக்கும் வரை இருப்போம்’ என்று சமாதானம் சொல்லும் மாமா வரையில் மனிதர்கள், கண்மாய்க்கரைக்காரர்கள்.

எத்தனை நாளைக்கு? கண்மாயில் தண்ணீர் வற்றுகிறது, தவளைகள் தற்கொலை செய்துகொள்கின்றன. வடக்கே வந்த பெரிய மில் நீரைக் குடித்துவிட நீர்வருவதில்லை. கிடங்குகளும் வேலிக்கருவேல் முள்ளுக்காடும் என ஆகிப்போகிறது கண்மாய்.. இவ்வாறு கவிஞர் சமயவேல் ஒரு சமுதாய வரலாற்றையே படமாய்ப் பிடித்துக் காட்டிவிட்டார். இன்றில்லாமல் போய்விட்ட அந்தக் கண்மாய்க்கரை நாகரிகத்தை ஏக்கத்துடன் வாசிக்கத்தான் முடியும்..

சமயவேலின் குட்டிக் கவிதைகள் இயற்கையின் மெய்நிலைகளை அவற்றின் இன்றைய சரிவுகளை ஆதுரத்துடன் சொன்னால் வசந்தகுமாரனின் குறுங்கவிதைகள் காதலைச் சொல்கின்றன. தனிமனித அவலங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. காதலை ஒரு வரியிலும் சொல்லலாம், ஒரு காப்பியமாக்கவும் செய்யலாம். நெடுங்காலமாய் பலரும் பாடிவரும் காதல் கவிதைகளை விட்டுவிட்ட மற்ற கவிதைகளைப் பார்ப்போமே!

மனிதர்கள் இரட்டை முகம் கொண்டவர்கள். புகைப்படத்திற்கு என்று ஒருமுகம், வெளி மனிதர்க்குக் காட்டுவதற்கு என்று அந்த முகம்; ஆனால் உள்ளே இருப்பது? தனிமனித நிலையை – மனத்தைக் காட்டும் கவிதைகள் சில; கடவுளாகப் பிறந்து பாவம் செய்து பாவம் செய்து மனிதராகத் தேய்ந்து போகிறோம். மனிதன் தன்னை அறியாமல் செய்த குற்றமும் தீமை விளைவிக்கும். காலில் இடறிய கல்லைத் தூக்கிப் புதரில் எறிந்தாலும் புதரிலுள்ள காட்டுப் பறவையின் மேல் பட்டால் வலிக்கத்தானே செய்யும்? துன்பங்களை அனுபவிக்காதவர் யார்? எல்லாத் துன்பங்களுக்கும் மருந்து வேண்டுமா? கிடைக்குமா? சிலர், கவிஞரைப் போல, காயங்களால் சுவாசிக்கிறவர்களும் இருப்பார்கள்- துன்பமே உயிர் மூச்சாய். வெற்றியைத் தேடித்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். வெற்றி நிழலா? நிழலையா தேடி அலைகிறோம்? வெற்றிக்கோட்டை அவன் தொடுவதற்கு முன் அவன் நிழல் அதனைத் தொட்டுவிடுகிறதாமே? கவிஞர் சொல்லும் இந்த மெய்ஞானம் எல்லாம் இருக்கட்டும். அவை எல்லாம் எப்போது பயன்படுமென்றால், மனிதன் தன்னை அறிந்து கொள்ளும்போதுதான்:

அவனைத் தெரியும்
இவனைத் தெரியும்.
எல்லாம் சரிதான்.
உன்னைத் தெரியுமா
உனக்கு?

அப்படித் நம்மை ஆராயும்போதுதான், நாம் மற்றவர்களைப் போல நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து நம்மைப்போல இருக்க முடியவில்லையே என்று உணர்ந்து கொண்டு நமக்கு மட்டுமாவது உண்மை உள்ளவர்களாக இருப்போம்.

கவிஞருக்கு இயற்கையின் மேல் அக்கறையும் உண்டு. சுற்றுச் சூழல்பால் பற்றும் உண்டு.

ஒரே நேரத்தில்
இரண்டு பாவங்கள் செய்கிறான்
மனிதன்
மரத்தையும் மரத்தின் நிழலையும்
வெட்டிச் சாய்த்து.

பட்டாம் பூச்சியைத் துரத்தும் நேரத்தில் இரண்டு பூச்செடிகளை நட்டுவைத்தால் பட்டாம் பூச்சிகள் தாமாக வந்து சேரும் என்பது கவிஞர் கூறும் அறிவுரை. சிறகுகள் முறிக்கப்பட்டு உயிருக்குத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு அவர் என்ன உதவி செய்யமுடியும். கையாலாகாத தனது கவிதையைத்தான் சவத்துணியாகப் போத்தமுடியம் என்று அங்கலாய்க்கிறார். காடுகளை அழித்து விட்டோம். இனி வருந்தி என்ன பயன்? மரத்தை வெட்டிக் காகிதம் செய்து அதில் காடுகளைக் காப்பாற்றுவோம் என்று கவிதைதான் எழுதுகிறோம்.

தன்னைப்பற்றியும் தன்னைச்சுற்றிய உலகைப் பற்றியும் குறும் கவிதைகளில் சொல்லும் வசந்தகுமாரன் எப்படி இருந்தாலும் இல்லாமல் போவதிலும் இருக்கத்தான் செய்கிறது ஏதோ ஒன்று என்று நம்புகிறார். இத்தனையூண்டு நக்கக் கிடைத்த ஊறுகாய் இந்த வாழ்க்கை என்று தேற்றிக் கொண்டு காயங்களை எண்ணி நேரத்தைச் செலவிடாமல் போய்க்கொண்டே இருப்போம் என்பது கவிஞரின் இப்போதைய மன நிலை;. தனது கண்ணீரைத் தானே குடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்.

இந்த இரண்டு நூல்களையும் படித்து முடித்தபிறகு நம்மிடம் எஞ்சியிருப்பது இந்த எந்திர உலகின் மேல் எரிச்சலா, சினமா, வருத்தமா? மனிதர் தங்களையும் காத்துக்கொண்டு இயற்கையையும் காப்பார்கள் என்ற நம்பிக்கை துளியேனும் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன். உங்கள் கருத்தென்ன? நூல்களை வாங்கி வாசித்து தெளிவு பெற அழைக்கிறேன்.

ச.வின்சென்ட்

சமயவேல். கண்மாய்க்கரை நாகரிகம். தமிழ்வெளி, 2023
பக்கம்: 80 விலை ரூ 100

கோ. வசந்தகுமாரன். அரூப நர்த்தனம். தமிழ் அலை, 2023
பக்கம்: 160 விலை ரூ 100

நூல் அறிமுகம்: தமிழில் ச.வின்செண்ட்டின் “பண்பாட்டு முகப்பில்” – சுப்ரபாரதிமணீயன்

நூல் அறிமுகம்: தமிழில் ச.வின்செண்ட்டின் “பண்பாட்டு முகப்பில்” – சுப்ரபாரதிமணீயன்




”நான் யாருக்காக எழுதுகிறேன். அணி வகுத்துச் சொல்லும் படைக்கு முன்னணியில் செல்பவர்களுக்காக பன்னாட்டுப் பெரும் போராட்டத்தை நடத்தி வருபவர்களுக்காக எழுதுகிறேன். அதில் பெறும் வெற்றி எல்லைகளற்ற, வகுப்புகளற்ற மனித சமுதாயத்தை அமைப்பதை உறுதி செய்யும் பொதுவுடமைக் கட்சி ஒன்று தான் சமூக செயல்பாட்டிற்கான உலக அளவிலான கட்சி. எந்த விதிவிலக்கும் சமரசமும் இல்லாமல் கொடியை ஏந்தி கவனமான மன உறுதி கொண்டவர்கள். விலைஉயர்ந்த மேலை நாடுகளை வெற்றி கொள்வதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற படையின் மீதிப் பகுதி தொலைவில் இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் விட்டு விட்டுப் போனாலும் பின் வாங்கினாலும் தொடரும். எழுத்தாளர்களாகிய நாம் பின்தங்கி விடுவோரை வேகப்படுத்தித் தூண்டுகிறோம். ஆனால் அவர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம்மை முந்திச் செல்வது அவர்களது வேலை. முன்னேறி செல்லும் படையணி நிற்பதில்லை- நான் ஓய மாட்டேன் “

இது வங்காள திரைப்பட மேதிஅயும் எழுத்தாளருமான ரித்விக் கட்டக்கின் கடந்து போன பாதையில் ஒரு வசனம். ஓர் பொதுவுடமைக் கட்சிக்காக எழுதிய ஆவணத்தில் ஒரு பகுதி.

நாட்டின் ஆளும் வர்க்கங்களின் கருத்துமுதல்வாத கோட்பாடுகளுக்கும் அழகியல் கோட்பாடுகளுக்கும் எதிராக அப்படிப்பட்ட கோட்பாடு வளரவேண்டும். அப்படிப்பட்ட கோட்பாடுகள்  மிகவும் வலுவாக இருக்கின்றன. இதன் நிழலில் இந்த நாட்டின் பண்பாடும் அழகியலும் வளர்ந்திருக்கின்றன. எனவே பண்பாட்டின் தன்மையையும் சிறப்புகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் மெய்யியல், மதம் ஆகியவற்றுடன் சலிக்கப்பட்டு மதிப்பிடப்படும் பொழுது அதனை சரியாக ஆராய வேண்டும் ஆராய முடியும் இத்தத்துவமும் மதமும் இந்தியாவின் பொருளாதார வரலாற்றின்  மேற்கட்டங்கள்தான். இந்த நிகழ்வு  நிலை முழுவதையும் புரிந்து கொள்ள  வரலாற்று ஆய்வு செய்வது தேவைப்படுகிறது.

கருத்து முதல் வாதத்தின் ஆதிக்கத்தில் இருந்து மக்களை வெளியில் கொண்டுவர இந்திய புரட்சி வெற்றிபெற தத்துவார்த்த முறையில் நாம் போரிட வேண்டும். மக்கள் தெரிந்த  உலகம் பற்றி தத்துவார்த்தமாக சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

அதற்கான சிந்திப்புக்களை அவர் தன் திரைப்படங்கள் மற்றும் இலக்கியப்படைப்புகளில் தந்தவர் .

சாதாரண மக்களைப்பற்றி எழுதிய அவர்,, படமெடுத்த அவர் முதலில் சாமானிய கலைஞர்களை நம் பக்கம் கொண்டு வரமுடியும் என்று நம்பினார் .” அவர்களை நாம் சென்றடைய வேண்டும் இப்போது நம்மை சுற்றி நண்பர்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் அவர்களில் பலர் உண்மையில் கலை ஞானம் உடையவர்கள். ஆனால் இப்போது கவிஞர்களும் கூறிய நேர்மையும் அதோடு மனிதனுக்கு உரிய நேர்மையும் கொண்டிருக்கிறாய் உண்மையான சாமானிய கலைஞர்களை நாம் சென்றடைய வேண்டும் குறைந்தது அவர்கள் மிகுந்த கவனத்துடன் தங்கள் வாழ்க்கையில் கலையை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.” என்றார்

1993  இல் இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சாரியா கல்கத்தாவில் பொதுவுடமைக் கட்சியின் அலுவலகத்தில் பழைய கோப்புகளைத் தேடிக்கொண்டிருந்த போது கையெழுத்துப் பிரதியாக இருந்த ரித்விக் கட்டக்கின்  ஆவணம் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. பொதுவுடமை கட்சியின் பண்பாடுகளைப் பற்றி அவர் ஒரு ஆவணத்தை எழுதி இருந்தார் என்பதுதான் அது. அது அப்போது எழுதப்பட்ட காலத்தில் வெளிவரவேயில்லை 1954ம் ஆண்டு கட்சிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட  ஆவணம் அது.

இதுபோல் ஆவணத்தை அவர் தயாரித்த பின்னால் 55 இல் அவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர் இல்லை என்று தெரிவித்து கடிதம் பதிலாக அனுப்பப்படுகிறது

அவருடைய முதலாவது முழு நீளப்படம்  நாகரிக் 1977  வரையில் வெளியிடப்படாது போல இந்த ஆவணமும் இது வரை ஒடுக்கப்பட்டுக் கிடந்த்து.

 இந்த  பிரதிகள் பொதுவுடமைக் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு ஆர்வலர்கள் மத்தியில் உலவிக் கொண்டே இருந்தது.

“ பண்பாடு பற்றி கட்சியின் நிலைப்பாடு குறைவாகவே இருக்கிறது கட்சியை நீ பற்றி கவலைப்படுவதில்லை நாம் இப்போது வேலை செய்வது பற்றி கட்சியை மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய சிக்கல் பற்றி எங்களுக்குத் தெரியாது எங்களுக்கு இன்னும் வேலைகள் இருக்கின்றன இன்னும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது பிரச்சனை சம்பந்தமாக வேலைகள் உள்ளன எங்களுக்கு வேலை அதிகம் மக்களை கண்களை கட்டி எழுப்பும் மக்களாட்சி முன்னணி போன்றவற்றில் கட்சியில் தாக்கத்தை விரிவாக்கத்தை சமாளிக்கும் போராட வேண்டியிருக்கிறது .வேறொரு சமயம் பார்ப்போம் தோழர்களை ” என்று பண்பாடு பற்றி ஏதாவது பேச்சு வரும்போது கட்சி  முடிவுகள் வந்திருக்கின்றன”

இது எல்லாக் காலங்களிலும் கலை இலக்கிய பண்பாட்டு குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தச் சோர்வை தான் இந்த ஆவணத்தில் பதிவு செய்திருக்கிறார். நாம் தனிமையாக தாக்கப்பட்டு நமது சமநிலை இழந்து நமது நோக்கத்தை நாம் தோற்கடித்து விடுவோம். ஆதலால் நடுத்தர வர்க்கத்தினரின் பண்பாடு உடனே முக்கியத்துவம் பெறும் என்பதை ஒத்துக் கொண்டுதான் நாம் செயல்பட வேண்டும் என்றம் சமாதானங்கள் எழுந்திருக்கின்றன புதிய சிந்தனைகளோடு சேர்ந்து முழுமையாக  ஓய்வற்ற முறையில் கண்காணித்து சரியான தளத்தில் தொடர்ந்து வைக்கப்படும்போது அனைத்தும் இணைந்து கடைசியில் மக்களுக்குரிய கலைவடிவங்களில் மக்களாட்சி முன்னணியை கட்டி எழுப்புவதே காணமுடியும் இந்த சிக்கல்களை புரிந்துகொண்டு அவற்றை சந்தித்து வெற்றி காண முடியும் முரண்பாடுகளும் அவை தீர்க்கப்படும் கட்சியிலுள்ள எங்களுடைய நிலைப்பாடு பற்றி  ரித்விக் கடக்  எழுப்பிய கேள்விகளின் ஆதாரமாக இந்த ஆய்வேடு இருக்கிறது

”நான்காம் சுவர் என்பதில் பார்வையாளர்களையும் நடிகர்களையும் ஒரு கண்ணுக்கு தெரியாத பிரிக்கிறது பார்வையாளர் இச்சுவர் வழியாக பார்க்கலாம். ஆனால் நடிகர்கள் அவர்களைப் பார்க்க முடியாது என்பது போல் கற்பனை செய்து கொண்டே இருப்பார்கள். இன்று நான்காவது  சுவர்  என்பது ஒரு உருவகம். நாடக மேடையில் ஒரு அறையில் மூன்று சுவர் இருக்கும் நான்காவது சுவர் ஒரு நாடக மேடை மரபு அது பார்வையாளர்களை பிரிக்கும் கற்பனைச் சுவர். இந்த மரபு மீறப்பட்டு பார்வையாளர்களுக்கு இது நாடகம்தான் என்று நினைவுறுத்தும் யுத்திகள்  பயன்படுத்தப்படும்போது இந்த நான்காவது கற்பனை சுவர் உடைகிறது ”

ரித்விக்கடக் குறிப்பிடும் நான்காம் சுவரில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கட்சியினரை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

இந்த நிலை இன்றும் எழுத்தாளர்களுக்கும் தொடர்கிறது இந்த கேள்வியை தொடர்ந்து அவர்களும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் அவர்களை சமாதானம்  கொள்ளச்செய்யும் பதில்கள் வேறுவகையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன..

இதை மொழிபெயர்த்திருக்கும்  ச.வின்செண்ட் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் 30க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பல நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார் அவரின் சிறந்த மொழிபெயர்ப்பிலும் ஊடாக காலத்தின் கட்டாயமான ஒரு ஆவணத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.

கட்சிக்கும் எழுத்தாளருக்குமான இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிறது என்பதை 65 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது

நூல்: பண்பாட்டு முகப்பில்
ஆசிரியர்: தமிழில் ச.வின்செண்ட்
வெளியீடு: கருத்துப்பட்டறை மதுரை
விலை: 130 ரூபாய் )

 சுப்ரபாரதிமணீயன்

நூல் அறிமுகம்: தமிழில் பேரா. ச. வின்சென்ட் உருமாற்றம் – பொன் விஜி

நூல் அறிமுகம்: தமிழில் பேரா. ச. வின்சென்ட் உருமாற்றம் – பொன் விஜி




அன்பான நண்பர்களே,
இப்படியாகத் தொடங்குகிறது சிறுகதைகள். தனது நீண்ட நித்திரைக்குப் பின், கனவு கண்டு விழித்த போது, தான் ஒரு இராட்சத வண்டாக உருமாறியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படும் கிரோக்கோர், ஆரம்பத்தில் தந்தையைத் தவிர மற்றவர்களால் அரவணைக்கப்பட்டாலும், இறுதியாக எல்லோராலும் வெறுக்கப்படுகிறான். அவரது நடமாட்டம் ஒரு அறைக்குள்ளேயே இடம் பெறுகிறது. அதேவேளை 3 முறைதான் அவருக்கு வெளியில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவரது யோசனைகள், மற்றவர்களின் கற்பனைகள், நடைமுறைக்குக் கொஞ்சம் சாத்தியமற்ற பல நிகழ்ச்சிகளைத் தனது கதாபாத்திங்களின் மூலம் நகர்த்துகிறார் காஃப்கா அவர்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர் ச. வின்சென்ட் அவர்கள் கூறியதுபோல் காஃப்கா வின் நாவல்கள் புரிந்து கொள்ளவது கொஞ்சம் கஷ்டம் தான், கொஞ்சமில்லை சில வேளைகளில் என்னைப் பொறுத்தவரை தலை சுற்றும் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த மாதிரி என்பார்கள். சொல்ல வந்ததை மிகவும் நீட்ட்ட்ட்ட்டிக் கொண்டே போவார்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று நான் என்னையே கேள்வி கேட்டேன். இருப்பினும் நாம் வாசிக்கும் போது முழுக் கவனமும் புத்தகத்திலேயே செலுத்தி விட்டால், கடைசியில் என்ன சொன்னார் என்பதனை தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம். ச. வின்சென்ட் மொழிபெயர்த்த ஃபிராய்ட் நாவல் (ஆசிரியர். ஜோனத்தன்) வாசிக்கக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. காரணம், ஆசிரியர் ஜோனத்தன் ஃபிராய்ட்டின் தத்துவங்களை ஆய்வு செய்து இரண்டுபக்க நியாயங்களையும் தந்துள்ளார். எனது பார்வையில் உள்வாங்க சிரமமாயிருந்தது என்றே சொல்லுவேன். காஃப்கா வின் மொழி நடை வித்தியாசமானது என்றே கூறலாம். விசாரணை கூட இதே நடைபோல் தான் எனக்குப் படுகிறது. (அவர் சொல்ல வரும் விடையம்)

உருமாற்றத்தில் காஃப்கா தான் மட்டும் உருமாறியதுடன் மற்றவர்களையும் உருமாற்றி விட்டார் என்றே தோன்றுகின்றது. அவரது அப்பா, அம்மா, தங்கை, வேலைக்காரி உட்பட எல்லோரையும்.. மனிதன் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் அதனை உள்வாங்குவதில்லை. அதனை நாம் ஒவ்வொரு குடும்பத்திலும், சமூகத்திலும் காணலாம். அதனைத் திரும்பிப் பார்ப்பதில்லை. இயந்திர வாழ்க்கை அவற்றையெல்லாம் எங்கேயோ தூக்கி எறிந்து விட்டது. தனி மனித தெரிவுக்கு ஒரு போதும் இடமே இல்லை, இந்த ஓட்டுமொத்த சமுதாயமே அவனைச் சிந்திக்க விடாது பெரிய சுத்தியலால் மண்டையில் போட்டுக் கொண்டே இருக்கின்றது. இதனைக்தான் காஃப்கா இங்கே படம் பிடித்துக் காட்டுகிறார். இதனை வாசிக்கும் போது பல குடும்பங்களில் இவற்றைக் காணலாம். ஆனால் அவை ஒரு புகைப்படச் சட்டத்திற்குள் பூட்டி வைக்கப்பட்ட படமாகவே எங்கும் காணப்படுகிறது. இவரது படைப்புக்களில் கதாபாத்திங்கள் குறைவாகவும் எங்கோ தொடங்கி எங்கோ முடிவதுபோல் இருந்தாலும், சொல் வந்த கருத்தை சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை நண்பர்களே.

இந்நாவலின் சிறுகதைகளை

* உருமாற்றம்.
* சீனாவின் நெடுஞ்சுவர்.
* ஒரு நாயின் ஆராய்ச்சி.
* தண்டனைக் குடியிருப்பில்.
* இராட்சத மூஞ்சுறு.

ஆகிய தலைப்புகளில் காணலாம்.
இங்கே இருப்பியலை இரண்டு வகையாகப் பார்க்கிறார் காஃப்கா. முதலில் 2வது உலக மகா யுத்தத்தின் பின்னர், அறிவுக்கு சவால் விடும் அளவிற்கு ஒரு அபத்தத்தை ஏற்படுத்தும் சமூகம், அடுத்தது ஒரு அரசு, மக்களின் சுயவிழிப்பை அறுத்து விட்டு, புதியதொரு இயந்திரமயத்தை அறிமுகம் செய்வதாகக் குறிப்பிடுகிறார். அடுத்தது, புறக்கணித்து ஒதுக்கப்படுத்துதல். தனிமனிதனிலும் சரி, குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி, இந்த மனோநிலமையை மாற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் அவர், தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட தாக்கத்தினை அடிப்படையாக வைத்து, மற்றும் முதலாளி, தொழிலாளிக்குமிடையேயுள்ள வேறுபாட்டைக் கிண்டல் செய்கிறார்.

அறியாமையும், முரன்பாடுகளுமே குவிந்து கிடப்பதையும், அதனையே மக்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறார்கள் எனக் கூறும் அவர், நெடுஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டதாக அரசு அறிவித்தாலும் ஆனால் முழுமை பெறாத நிலையில் சுவர் உள்ளதற்கு, இன்னும் பல ஓட்டைகள் இருப்பதைக்காட்டி, அது எந்தக் காலத்திலும் அடைக்கவே முடியாது என்ற உவமையோடு தனது தத்துவக் கருத்தை இங்கு பதிவு செய்கிறார் காஃப்கா.

தண்டனைக்குரியவர், ஆய்வாளர், அலுவலர், பொலிஸ் அதிகாரி, இவர்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் குழப்பங்களினால், மரணதண்டனைக்குரியவர் விடுதலையாகிறார், அலுவலர் மீது தண்டனை சுமத்தப்பட்டுகிறது. புரிதல் இன்றி இயங்கும் நிர்வாகச் சீர்கேடுகளை மிகவும் தமாஷாகக் காட்டுகிறார்.

விலங்குகளயே வைத்து, மறைமுகமாக தனது சுய வாழ்க்கையை முன்வைக்கும் அவர், பூமி இந்த உணவை எங்கிருந்து பெறுகிறது  என்றும், மிதமிஞ்சிய உணவு இருப்பின், இல்லாதவர்களுக்குக் கொடு என்ற தத்துவத்தைக் காட்டுகிறார். இராட்சத மூஞ்சுறு எப்படி வந்தது என்று ஆராய வரும் தொழில் அதிபர், அங்குள்ள கிராமத்து ஆசிரியர், கல்வியாளர்களும் மோதும் இடம் மிக அருமையாக படம் பிடித்துக் காட்டும் காஃப்கா, இறுதியாக, உருமாற்றம் பெற்ற இராட்சத வண்டு தொடர்ந்தும் வாழ்ந்ததா? அல்லது தொலைந்து போ என அடித்துக் கொல்லப்பட்டதா? சரிதான் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்களா? அறிய நாவலை வாசியுங்கள் நண்பர்களே..

என்னைப் பொறுத்த வரை மிக அருமையான நாவல். எங்கள் வீட்டுக்குள் கூட இப்படியான உருமாற்றத்தைக் கண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த விதமான உருமாற்றம் நடைபெற்றிருக்கும். அதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனக்கூறி, ஏற்கனவே பலராலும் வாசிக்கப்பட்ட இச் சிறுகதைகள் இன்னும் வாசிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை உங்களோடு பகிர்வதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல்: உரு மாற்றம்
ஆசிரியர்: ஃபிரான்ஸ் காஃப்கா
தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
நூல் வெளியீடு: எதிர் வெளியீடு 
விலை: 280/-
பக்கம்: 238
முதற் பதிப்பு: டிசம்பர் 2014
இரண்டாம் பதிப்பு: ஜூலை 2021
புத்தகம் வாங்க: 24332924

https://thamizhbooks.com/product/urumaatram-5801/

Karunjivappu Eesalgal Book By Thamizhavan Bookreview By S. Vincent நூல் அறிமுகம்: தமிழவனின் கருஞ்சிவப்பு ஈசல்கள் - ச. வின்சென்ட்

நூல் அறிமுகம்: தமிழவனின் கருஞ்சிவப்பு ஈசல்கள் – ச. வின்சென்ட்



ஈசல்களும் வரலாறும்

ஒரு சிறுகதையில் கதை இருக்கும், அதாவது முடிச்சோடு கூடிய நிகழ்ச்சி இருக்கும். ஒரு முக்கிய பாத்திரம் இருக்கும், வாசகனிடம் ஒரு உணர்ச்சி எழுப்பப்படும், கதை நிகழ ஒரு காலமும் இடமும் அல்லது சமுதாயப் பின்புலமும் இருக்கும். ஒரு கருப்பொருள் இருக்கும். ஒரு கதையில் இந்தக் கூறுகளில் ஒன்றோ இரண்டு முதன்மை இடத்தைப் பெறும்; மற்ற கூறுகள் இடம் பெறாமல் கூட இருக்கலாம். எனினும் பாத்திரங்கள் முழுமையான வளர்ச்சியடைய முடியாவிட்டாலும். கதை முடிச்சில் அதிகம் சிக்கல்  இல்லாமல் இருந்தாலும் கதை ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த  வேண்டும்.

தமிழவனின் கருஞ்சிவப்பு ஈசல்கள் என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளும் பெரும்பாலும் வாசகரிடம்  ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனச் சொல்லலாம். அதனை ஏற்படுத்த என்ன யுத்திகளைக் கையாள்கிறார்? தமிழவனே கதைகளை இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். அவற்றில் முதல் பகுதியை முதலில் பார்க்கலாம்.

முதல் மூன்று கதைகளிலும் கதை மாந்தரே முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள். ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் ”கருஞ்சிவப்பு ஈசல்கள்”. பழைய கதையின் தொடர்ச்சி என்று சொல்வதை விட அதன் நீட்சி என்று சொல்லலாம். போராட்டக்கார கௌதமன் ஞானோதையம் பெற்றுவிட்டான் போலும். பழைய நினவுகளின் நிழல்களில் மனிதர்கள் அவசரப்பட்டு அல்லாடுகிறார்கள், தான் எதற்காக வாழ்கிறோம் என்று கேள்விகேட்பனவாக இருக்கிறான், பழைய யசோதராவிடம் திரும்பிவந்த புத்தன். இரண்டாவது கதையான “புத்திஜீவி கே. யின் வாழ்வும் பணியும்” கே. யைப்பற்றிய கதை. அவனுடைய போட்டியாளனான ஆனந்ததீர்த்தனும் கதை சொல்லியும் இருந்தாலும் கே. தான் அந்த உயர்நிலை ஆய்வு வளாகத்தின் மூலை முடுக்குகளை வெளியில் கொண்டுவரக் காரணியாக இருப்பவன்.

இன்றைய உயர்நிலை ஆய்வுமையங்கள், பல்கலைக்கழகங்களின் அவலங்கள் அறிவுஜீவிகளின் வக்கிரங்கள் கதையின் பின்புலமாக இருந்தாலும் செத்தும் ஆக்கிரமிப்பவன் கே. தான். தனக்குப் பழக்கமான புத்தகக் கடையைத் தேடிப்போகின்றவரின் கதை “புத்தகக் கடை.” இரண்டாண்டுகள் தன்னைவிட்டுப் பிரிந்துபோன மனைவியின் நினவில் வாழ்கிறாரா அல்லது தான் யாரென்று தேடிக்கொண்டு அலைகிறாரா என்பது தான் வாசகன் கேட்கும் கேள்வி. புத்தகத்தை தேடுகிறார், அறிவைத் தேடுகிறார். அவை எல்லாம் கிடைக்கக் கூடியவை. தவறான வழிகாட்டல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சரியான புரிதல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  அவற்றை அடைந்து விட முடியும். ஆனால் தன்னைத் தேடுவதில் தனது அடையாளத்தைத் தேடுவதில் வெற்றிகொள்வது எளிதில்லை. அவனோடு இரண்டாண்டு வாழ்ந்தவளுக்கு அவனைத் தெரியும். ஆனால் அவனுக்குத் தெளிவில்லை. தனக்குள்ளேயே வாழும்போது புகைமூட்டம்; கார் கதவைத் திறக்கும்போது தெளிவு; எனினும் இப்போது மற்றவர்களுக்குமே இவன் யார் என்று தெரியவில்லை. அடையாளத்தைத் தேடும் ஒரு மனிதனின் கதை.

அடுத்த பகுதியில் ஏழு கதைகள். பெரும்பாலும் ‘வரலாற்று’க் கதைகள் என்று சொல்லலாம். இவற்றில் வரலாறும் அது சொல்லும் சமுதாயமும், மக்கள் இனங்களுக்கிடையே இருக்கும் வெறுக்கத்தக்க முரண்பாடுகளும் பின் புலமாக இருக்க காலனிய காலத்து வரலாற்றில் நிகழ்ந்தனவாகக் கருதப்படக்கூடியவற்றின் இன்றைய தாக்கம் என்றும் சொல்லலாம். ஆசிரியர் தன்னுடைய முன்னுரையில் சொல்வது போல காலனிய கால முரட்டுத்தனமான அழகியலை வெளிப்படுத்துபவையாக இருக்கலாம். அல்லது பின்காலனிய அழகியலைக் காட்டுபவையாகவும் இருக்கலாம். அவற்றையும் தாண்டி புதிய வரலாற்றியக் கோட்பாட்டைப்பயன்படுத்திப் பார்த்தால்தான் ஓரிரு கதைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கலாம்.

அழகியல் என்று சொல்லும்போது அங்கே அழகு இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கலைப்படைபின் நுணுக்கங்களை ஆராயும்போது கிடைக்கும் இன்பத்தை அழகியல் குறிப்பதாகக் கொள்ளலாம். இது  இலக்கியம் உட்பட்ட கலைப் படைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிப்பார்க்கும் ஒரு வழிமுறை. கலை, இயற்கை, பண்பாடு ஆகியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்துவது அழகியல். பெரும்பாலும் பின்காலனிய இலக்கியவாதிகள் அழகியலை வழக்கமான அழகைக் காணும் கருத்தியலை ஏற்றுக் கொள்வதில்லை. எனினும் ஆஷ்க்ராஃப்ட் போன்ற பின்காலனியக் கோட்பாட்டாளர்கள் கலைப்படைப்புகளை அதற்கு அடுத்த நிலையில் காண்கிறார்கள். இரு பண்பாடுகளுக்கு இடையே ஏற்படும் ஒட்டுதலால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள் .அதை transformational exchange  என்கிறார்கள்.

அடையாளம், உரிமை, அதிகாரம் ஆகியவற்றில் உரையாடல்கள் நிகழ்கின்றன. மரபுகளின் பன்முகத்தன்மைக்கு அவை காரணிகளாக ஆகின்றன.  ஒருவகைக் கலப்புக் கலாச்சாரம் ஏற்படுகிறது.. குடியேற்ற ஆதிக்கவாதிகளைக் காட்டிலும் ஒடுக்கப்பட்டோரின் மேல் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வரலாற்று ரீதியான வன்முறையின் கோரம் ஒரு அழகியலாக உருவாகிறது. இன்றைய தலைமுறையினர் காலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களின் வாரிசுகளாக எப்படிச் செயல்படுகிறார்கள், ஆதிக்கவாதிகளின் வாரிசுகள் அவற்றை எப்படிப் பார்க்கிறார்கள் என்று காட்டுவது இன்றைய படைப்பாளியின் பணி. இன்ஸ்டாக்ராம் கவிஞரான இந்திய வம்சாவளி கனடா நாட்டு ரூபா கவுர் கொண்டாட்டமாக, மீட்டெடுத்தலாக, எதிர்ப்பாக இவற்றை வெளிப்படுத்துகிறார். தமிழவன் இதன் சில பக்கங்களை மறைமுகமாக வரலாற்றுக் கதைகள் சொல்வது போலச் சொல்லித் தொட்டுக் காட்டுகிறார்.

”மணிக்கூடுகளுக்கு இடையே நடந்த ஒரு வழக்கு” கதை புதியதில்லை. மேட்டுக் குடியனரான கொண்டைகட்டி சமூகத்தினருக்கும் எழைகளான கட்டையன்  சமுகத்தாருக்கும் இடையில் நடந்த மோதல் மேட்டுக்குடியினரின் சதியால் கட்டையர்களுக்கு எதிராகச் சோடிக்கப்பட்டு நீதிபதி ஆர்பத்நாட் நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. கட்டையர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும்  அவர்களுடைய குற்றமின்மைபற்றியும் கொண்டைகட்டிகளின் சதிச்செயல் பற்றியும் ஆங்கில ஆதிக்கவாதிகள் வெளியில் சொல்லவில்லை. இரு நூற்றாண்ட்டுகளுக்குப் பிறகு வந்த ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடிக்கிறார். விடுதலைக்குப் பிறகும்கூட இதேபோன்ற யுத்தி மேல்மட்டத்தினரால் நான்கு முறை பயன்படுத்தப்பட்டது. யூகங்களும் கொடூரங்களும் நிறைந்த கதைகள் மறக்கபட்டது அல்லது மறைக்கப்பட்டது மக்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது என்பது ஆய்வாளரின் முடிவு. பின்காலனிய அழகியல் தொடர்கிறது!

“எழுதப்பட்டிருந்த ஜான் ஸ்டுயர்ட்டின் கதை” பதினாறாம் நூற்றாண்டில் நடந்த கதை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் குடும்பத்தில் வாழ்ந்த பெண்ணின் பார்வையில் அதுவும் ஒரு நாவலின் அடிப்படையில் மீட்டெழுதப்படுகிறது. இங்கே வரலாற்றின் பல பகுதிகள் மிகைப்படுத்தப்படுகின்றன. திருத்தப்படுகின்றன. அதிலும் கூட அடிமைப் படுத்தலின் கொடுமைகளை எதிர்த்த ஸ்டுயர்ட்டின் தாய் போன்றவர்களும், குருவானவர் போன்றவர்களும் இருந்தார்கள் என்பதுதான் வரலாற்றின் மறுபக்கம். கதையில் ஷேக்ஸ்பியர் வருகிறார், ஜெ. எஸ். மில் ஜான் ஸ்டுவர்ட்டாகவும் மில்லாகவும் ஆகிறார். செர்வாண்டிஸ் வருகிறார். எட்மண்ட் ஸ்பென்சர் வருகிறார். ஆதிக்கவாதிகளின் பொய்கள் அம்பலமாகின்றன.

”கைகள் வெட்டப்பட்ட அனார்கிஸ்ட்” ஆதிக்கவாதிகளின் வாரிசுகள் தங்களது முன்னோரைப்பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினால், “தூத்த்குக்குடியில் ஒரு கொலை” காலனியாதிக்கத்தின் போது கிறிஸ்தவத்தின் மனச்சான்றில் ஏற்படும் போராட்டத்தைக் காட்டுகிறது. அது சரி, போர்த்க்துக்கீசியரோடு கறுப்பரும் இங்கு வந்திருந்தார்களா? ஆனால் இந்தக் கதைகளில் வரலாற்றுத் துல்லியங்களை நாம் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாமல் ஆசிரியர் செய்துவிடுகிறார்.

”காந்தி லிபி”யையும்,, “தலைவனையும்”  பின்காலனிய அழகியல் கொண்டு பார்த்தாலும், அவை புதிய வரலாற்றியக் கோட்பாட்டின் கூறுகளையே அதிகம் காட்டுவதாகத் தோன்றுகிறது. நமது தலைவர்களைச் சாகவிடமாட்டோம். சுபாஷ் சந்திர போசை எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ வைத்திர்ந்தோம்! ஈழத்துப் பிரபாகரன் இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். தலைவன் கதையே அதுதான். சுடப்பட்டவர் காந்தி இல்லை என்று நம்பியவர்கள் “காந்தி லிபியில்” சுட்டப்படுகிறார்கள். இந்த நம்பிக்கைகள் வரலாற்றில் ஏற்றிக் கதைகளாக உருப்பெறுகின்றன.    

தமிழில் புதிதாகச் செய்யவேண்டும் என்பது தமிழவனின் ஆசை. ஆனால் அதற்கு மாதிரிகள் மேலை நாட்டு இலக்கியங்களில் தான் கிடைக்கின்றன என்பதுதான் நகைமுரண். பத்துக் கதைகளையும் படிப்பது நல்ல அனுபவம்.

நூல்: கருஞ்சிவப்பு ஈசல்கள்
ஆசிரியர்: தமிழவன்
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ரூ 200.