நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ‘மின்னற்பொழுதுகள்’ – பாவண்ணன்

நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ‘மின்னற்பொழுதுகள்’ – பாவண்ணன்



அகத்தூண்டுதலும் அற்புதத்தருணங்களும்
பாவண்ணன்

அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்

இது தேவதேவனின் கவிதை. விட்டல்ராவ் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரைத்தொகுதியின் பெயர் மின்னற்பொழுதுகள். அந்தத் தலைப்பை வாசித்ததுமே மனத்தில் தேவதேவனின் கவிதை வரிகள் எழுந்தன. தோணி, புறக்கண்ணால் பார்க்கமுடிகிற ஓர் உருவம். தீவு, அகக்கண்ணுக்கு மட்டுமே தென்படும் உருவம். பார்க்கும் மனவார்ப்பு உள்ளவருக்கே தென்படக்கூடிய அபூர்வமான உருவம் அது. அப்படிப் பார்க்கக்கூடியவர்களுக்கு அக்காட்சி மின்னலடிக்கும் நேரத்தில் தெரிந்து மறைந்துவிடுகிறது. பிறகு அந்தக் காட்சியை நினைவிலிருந்து மீட்டிமீட்டித்தான் பார்க்கவேண்டும்.

விட்டல்ராவ் தன் கட்டுரைத்தொகுதியில் தான் சந்தித்த பதினெட்டு நண்பர்களைப்பற்றிய நினைவலைகளைப் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலானோர் எழுத்தாளர்கள். ஒருவர் ஓவியர். ஒருவர் வாசகர். ஒருவர் பால்யகாலத்து நண்பர். ஒவ்வொரு நினைவலைத்தொகுப்பும் தனித்ததொரு புகைப்படத்தொகுப்பைப்போல உள்ளது. அவர் அளிக்கும் விவரங்களின் ஊடே மின்னல் போல சிற்சில தருணங்கள் கடந்துபோவதை உணரமுடிகிறது. தோணி தீவாகத் தெரிவதுபோல, அத்தருணங்களில் எழுதாத சிறுகதைகளின் வடிவங்களைப் பார்க்கமுடிகிறது. மின்னல் வெளிச்சத்தில் தெரியும் மரத்தைப்போல, மனமொன்றிய வாசிப்பின் வெளிச்சத்தில் அவ்வடிவங்கள் பளிச்சிடுகின்றன. தான் பெற்ற அபூர்வமான நண்பர்களோடு செலவழித்த மின்னற்பொழுதுகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் விட்டல்ராவ் எழுதியிருக்கும் இக்கட்டுரைகளில் புதையல்களைப்போல அத்தருணங்கள் மறைந்திருக்கின்றன.

அசோகமித்திரனைப்பற்றிய நினைவுத்தொகுப்பில் அவரும் தானும் இணைந்து மிதிவண்டியில் பயணம் செய்து பார்த்த அமெரிக்க இயக்குநர்களின் திரைப்படங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார் விட்டல்ராவ். அப்போது பழைய இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை மெல்ல முணுமுணுத்தபடி மிதிவண்டியை ஓட்டும் அசோகமித்திரனைச் சித்தரிக்கிறார். அபூர்வமான ஒரு காட்சிச் சித்திரம் அது. ஒருநாள் அவருடைய வளர்ப்புநாயை நகராட்சியைச் சேர்ந்த குழுவினர் பிடித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். நாய்களை வளர்ப்பதற்கு கட்டாயமாக உரிமம் வைத்திருக்க வேண்டிய காலம் அது. தனியாளாக அவர்களிடம் பேசி அவரால் நாயை மீட்க முடியவில்லை. நண்பரான விட்டல்ராவை தொலைபேசியில் அழைத்து நாயைப் பிடித்துச் சென்றுவிட்ட செய்தியைத் தெரிவிக்கிறார். நாயை எப்படியாவது காப்பாற்றி அழைத்து வரவேண்டுமே என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்.

அக்கணத்தில் விட்டல்ராவுக்கு தன் நண்பரும் எழுத்தாளருமான மா.அரங்கநாதன் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவது நினைவுக்கு வருகிறது. அவருக்கு தகவலைத் தெரியப்படுத்தி உதவி கேட்கிறார்கள். அவர் அசோகமித்திரனை அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்கிறார். வந்தவுடன் அரங்கநாதனே அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு நாய்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குச் செல்கிறார். நூற்றுக்கணக்கான நாய்கள் அடைபட்டிருக்கும் அந்தச் சூழலில் அசோகமித்திரனால் தன் நாயைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எல்லா நாய்களும் ஒரே மாதிரி இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. கண்டுபிடித்துக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தும் நாயைக் காப்பாற்ற வழியில்லாமல் போய்விடுகிறது. அசோகமித்திரனின் கதையுலகம் ஏராளமான கையறு தருணங்களால் நிறைந்த ஒன்று. அவரைப்பற்றிய விட்டல்ராவின் நினைவுப்பதிவிலும் அப்படிப்பட்ட ஒரு தருணம் இடம்பெற்றிருப்பது இயல்பான ஒன்றாகவே தோன்றுகிறது.

பத்திரிகையாளர் சாவியைப்பற்றிய நினைவலைக்குறிப்பில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும் அபூர்வமான தருணமொன்றின் சித்திரத்தை வழங்கியிருக்கிறார் விட்டல்ராவ். ஒரு சமயத்தில் ஆனந்த விகடன் ஒரு நாவல் போட்டியை அறிவிக்கிறது. நடுவர் குழுவுக்கு அனுப்பும் முன்பாக கையெழுத்துப் பிரதிகளைப் படித்துப் பார்த்து தகுதியடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, அங்கே பணிபுரியும் மணியனுக்கு அளிக்கப்படுகிறது. சாவி அதே அலுவலகத்தில் பணிபுரிகிறார். விருதுக்குரிய பிரதிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்படாத பிரதிகளை அனுப்பும் பணி தொடங்குகிறது. திரும்பப் பெற்றுக்கொள்வதற்குப் போதிய அஞ்சல் தலைகளை இணைத்து அனுப்பியவர்களுக்கு மட்டுமே பிரதிகள் அனுப்பப்படுகின்றன. அஞ்சல் தலைகளை இணைக்காதவர்களின் பிரதிகளை குப்பைக்கூடையில் வீசிவிடுகிறார் மணியன்.

ஓர் ஆர்வத்தின் காரணமாக அப்பிரதிகளைச் சேகரித்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கிறார் சாவி. அவற்றில் நடைபாதை என்னும் நாவல் பிரதி அவருடைய மனத்தைக் கவர்கிறது. அது வெற்றி பெற்றிருக்க வேண்டிய படைப்பு. அந்த எழுத்தாளரின் திறமையின் மீது அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அவர் வளர வேண்டிய ஓர் எழுத்தாளர் என்னும் எண்ணம் எழுகிறது. உடனே முதன்மை ஆசிரியரான வாசனை நேரில் சந்தித்து செய்தியைச் சொல்லி அந்தப் பிரதியையும் கொடுக்கிறார். ஒரே இரவில் அதைப் படித்து முடித்த வாசனும் அதன் சிறப்பைப் புரிந்துகொள்கிறார். ஆனால் நடுவர் தீர்ப்பில் குறுக்கிட அவருக்கு விருப்பமில்லை. அதே சமயத்தில் அதை வெளியிடும் வாய்ப்பைத் தவறவிடவும் விருப்பமில்லை. அதனால் அப்பிரதியை தனியொரு தொடர்கதையாக விகடனிலேயே வெளியிட ஏற்பாடு செய்யும்படி சொல்கிறார்.

அந்த நாவலை எழுதிய இதயன் உண்மையிலேயே பம்பாய் நகரத்தில் ஒன்பது ஆண்டு காலமாக நடைபாதையில் ஊதுவத்தி முதலான பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர். அந்த அனுபவங்களின் தொகுப்பைத்தான் அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அவரை உடனே அலுவலகத்துக்கு வரவழைக்கும்படி சொல்கிறார் வாசன். அலுவலகத்துக்கு வரும் இதயனுக்கு விகடனிலேயே வேலையும் கிடைக்கிறது. பம்பாயை விட்டு சொந்த ஊரான வேலூருக்கு வந்து பிழைக்க வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த இதயனின் வாழ்வில் அது ஒரு திருப்புமுனையான தருணமாக அமைகிறது.

ஒரு படைப்புக்கான அகத்தூண்டுதல் ஒரு படைப்பாளிக்கு எங்கிருந்து கிடைக்கிறது, யார் வழியாகக் கிடைக்கிறது என்பது, அது நிகழும் கணம் வரை அந்தப் படைப்பாளியே அறிந்துகொள்ள முடியாத ஒரு செய்தி. அந்த விசித்திரத்தன்மையே அந்தக் கணத்தை நோக்கிய செய்தியை மனம் ஆர்வத்தோடு கவனிக்கிறது. கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி பற்றிய விட்டல்ராவின் கட்டுரையில் அப்படிப்பட்ட ஓர் அபூர்வமான தருணத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவல் ஒரு விழாவில் வெளியிடப்படுகிறது. அதைப்பற்றி பலர் மேடையில் பேசுகிறார்கள். அந்த விழாவுக்கு மாசிலாமணி வந்திருக்கிறார். பல எழுத்தாளர்களும் வாசகர்களும் வந்திருக்கிறார்கள். விமர்சகரான சிட்டி தன்னுடன் பார்வையற்ற நண்பரொருவரோடு வந்திருக்கிறார். அந்த நண்பர் சுதந்திரப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். சற்றே வயதானவர். விழா முடிந்ததும் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடுகிறார் விட்டல்ராவ். அப்போது விட்டல்ராவின் குடும்பப்பின்னணி விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் அவர். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களுடன் தனக்கு இருந்த அறிமுகத்தையும் அவர்களுடைய பங்களிப்பையும் சொல்லியிருக்கிறார் அவர்.

அச்செய்திகளால் மனம் தூண்டப்பட்ட விட்டல்ராவ், அந்தத் தகவல்களின் பின்னணியில் ஒரு நாவலை தன்னால் எழுதமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார். அக்கணமே, அந்த நாவலின் ஒரு முன்வடிவம் அவர் மனத்தில் கருக்கொண்டு விடுகிறது. நண்பர் மாசலாமணியிடம் அக்கதையின் கோட்டுச்சித்திரத்தை விவரிக்கிறார். அக்கதையின் மையத்தால் ஈர்க்கப்பட்ட மாசிலாமணியும் நாவல் எழுதும் வேலையை உடனே தொடங்கும்படி தூண்டுகிறார். மன எழுச்சி கொண்ட விட்டல்ராவ் பார்வையற்ற நண்பர் சொன்ன தகவல்களை தன் தாயிடம் பகிர்ந்துகொள்கிறார். அதன் தொடர்ச்சியாகவும் அவர் தாயாரும் தனக்குத் தெரிந்த பூர்வீகத் தகவல்கள் அனைத்தையும் விவரிக்கிறார். விட்டல்ராவின் மனத்தில் மெல்ல மெல்ல அந்த நாவலின் வடிவம் விரிவடைந்தபடி செல்கிறது. சில மாதங்களின் கனவுக்கும் உழைப்புக்கும் பிறகு அவர் நதிமூலம் நாவலை எழுதி முடிக்கிறார்.

கோவையில் அருவி என்னும் அமைப்பை நடத்தியவர் சீனுவாசன். தொழில்முறையாக வழக்கறிஞர் என்றபோதும் கலை இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருக்கிறார் விட்டல்ராவ். கடலோடி நரசய்யாவும் அந்நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிகிறது. அவசர வேலை காரணமாக நரசய்யா உடனடியாக கிளம்பிவிட, விட்டல்ராவை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் சீனிவாசன். தன் வீட்டையொட்டி சுற்றுச்சுவரிடப்பட்ட ஒரு மைதானத்தைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தை ஒரு பூங்காவாக மாற்றவிருக்கும் திட்டத்தைப்பற்றிச் சொல்கிறார். அங்கே புதிய வகை செடிகளையும் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கவிருப்பதாகவும் சொல்கிறார். பல மரங்கள் நெடுநெடுவென வளர்ந்து நிற்க, ஏராளமான பறவைகள் அங்கே வந்து செல்வதைப் பார்க்கவேண்டுமென்றும் அவை போடும் சத்தக்களைக் கேட்க வேண்டும் என்றும் தான் விரும்புவதாகவும் தன் கனவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

மதிய உணவை முடித்துக்கொண்டு அறையில் அமர்ந்து தன் குடும்பக்கதைகளை விரிவாகச் சொல்கிறார். விட்டல்ராவின் குடும்பக்கதையையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். மாலையில் தேநீர் வேண்டுமா காப்பி வேண்டுமா என்று கேட்கிறார். பிறகு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அலுவலக வேலையொன்றைப் பார்ப்பதற்காகச் செல்கிறார். பத்து நிமிட இடைவெளியில் அவருடைய அறையிலிருந்து யாரோ அலறி அழும் சத்தம் கேட்கிறது. ஓடிச் சென்று பார்க்கும்போது சீனிவாசன் படுக்கையிலிருந்து கீழே சரிந்து விழுகிறார். இதய இயக்கம் நின்று அப்படியே உயிர் பிரிந்துவிடுகிறது. இப்படி மகிழ்ச்சியும் மரணமும் அடுத்தடுத்து நிகழ்ந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்துகிறது.

சித்ரதுர்கா கோட்டையைப் பார்ப்பதற்காகச் சென்ற அனுபவத்தை விட்டல்ராவ் விவரித்திருக்கும் விதமே ஒரு சிறுகதையைப் படிப்பதுபோல இருக்கிறது. அங்கே செல்வதற்கு முன் அக்கோட்டையைப்பற்றி அவருக்கு அதிக அளவில் எதுவும் தெரியாது. அந்த ஊரிலிருக்கும் வெங்கணாச்சார் என்னும் பேராசிரியரைச் சந்தித்தால் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்னும் தகவலோடு அந்த ஊருக்குச் செல்கிறார். ஆனால் அவரைப்பற்றி எங்கே விசாரிப்பது யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமலேயே கோட்டைக்குச் சென்றுவிடுகிறார்.

கோட்டை மதிற்சுவரையொட்டி நுழைவுச்சீட்டு கொடுப்பவருக்கான அறை இருக்கிறது. அதற்கு அருகிலேயே ’இங்கே யாரும் புகைபிடிக்கக்கூடாது, மீறினால் இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று எழுதிவைக்கப்பட்ட அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தப் பலகைக்கு அருகிலேயே நின்றுகொண்டு ஒருவர் அவசரமாக புகைபிடித்துக்கொண்டிருக்கிறார். பிறகு பாதி எரிந்த சிகரெட் துண்டை அங்கேயே வீசி காலால் நசுக்கிறார். அந்தக் காட்சிகளின் முரண்களால் ஈர்க்கப்பட்ட விட்டல்ராவ் தன் கேமிராவில் அவ்விரண்டு காட்சிகளையும் படமாகப் பிடித்துவிடுகிறார்.

அங்கே புகை பிடித்தவர் வெளியாள் அல்ல, அங்கேயே வேலை செய்பவர் என்பது அவர் நுழைவுச்சீட்டு கொடுக்கும் அறைக்குள் நுழையும்போதுதான் புரிகிறது. நுழைவுச்சீட்டு கொடுத்துவிட்டு படம்பிடித்த விட்டல்ராவிடம் ”நீங்கள் பத்திரிகைக்காரரா?” என்று விசாரிக்கிறார். அவர் சற்றே பதற்றத்தில் மூழ்கிவிடுகிறார். சிறிது நேரத்தில் வேறொருவரும் வந்து அவரிடம் அதே கேள்வியைக் கேட்கிறார். சுற்றிப் பார்க்கத் தொடங்கிய பிறகு மற்றொருவரும் அவரை நிறுத்தி அதே கேள்வியைக் கேட்கிறார். பிறகு தன் மேலதிகாரி சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்து, விட்டல்ராவை அதிகாரியுடைய அறைக்கு அழைத்துச் செல்கிறார். அவரும் நீங்கள் பத்திரிகைக்காரரா என்று அதே கேள்வியைக் கேட்கிறார். தான் எழுத்தாளர் என்றும் அக்கோட்டையைப்பற்றி எழுதுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் விட்டல்ராவ்.

அதற்குப் பிறகே அங்கே அவர்களுடைய பதற்றம் குறைந்து சற்றே நிம்மதி நிலவத் தொடங்குகிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு, கோட்டையைப்பற்றிய பிரசுரங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று விசாரிக்கிறார் விட்டல்ராவ். “பிரசுரங்கள் வழியாகத் தெரிந்துகொள்ள இயலாத தகவல்களைச் சொல்லும் அறிஞரொருவர் இங்கே இருக்கிறார். அவர் பெயர் வெங்கணாச்சார். அவரை நீங்கள் சந்தித்து உரையாடலாம்” என்று சொல்கிறார் அதிகாரி. அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்கிறார். எந்த வெங்கணாச்சாரை எப்படிச் சந்திக்கப்போகிறோம் என நினைத்து குழப்பத்துடன் வந்தாரோ, அதே வெங்கணாச்சாரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிகரெட் துண்டு வழியாகக் கிடைத்துவிடுகிறது.

இத்தொகுதியில் முகம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. உயர்நிலைப்பள்ளியில் தன்னோடு படித்த ஒரு நண்பரை சேலத்துக்குச் சென்று சந்தித்த அனுபவத்தை அதில் எழுதியிருக்கிறார் விட்டல்ராவ். வேறொரு நண்பர் வழியாக அவருடைய தொலைபேசி எண் கிடைக்கிறது. இரண்டுமூன்று முறை உரையாடுகிறார்கள். அந்த நண்பர் விட்டல்ராவை சேலத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறார். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்க சேலத்துக்குப் புறப்படுகிறார். தன் பயணத்தைப்பற்றி அவரிடம் தெரிவித்துவிட்டு பள்ளிப்பருவத்தில் சுற்றியலைந்த இடங்களுக்கு இருவரும் சேர்ந்து சுற்றி வேடிக்கை பார்க்கவேண்டும் என்னும் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்கும்போதுதான் அவர் தனக்குக் கண்பார்வை போய்விட்டது என்னும் தகவலைப் பகிர்ந்துகொள்கிறார். அவர் மேற்கொண்ட ஏராளமான மருத்துவ முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சேலம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வண்ண உடைகளை அணிந்துகொண்டு நிற்பதாகவும் அந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு தன்னைக் கண்டுபிடித்துவிடும்படியும் சொல்கிறார். அப்படித்தான் அவர்கள் இருவரும் அன்று சந்தித்துக்கொள்கிறார்கள்.

அந்த நண்பர் வேறொரு அதிசய மனிதரை விட்டல்ராவுக்கு அறிமுகப்படுத்துகிறார். காந்தி சிலைக்கு அருகில் தினந்தோறும் வந்து நிற்கிறார் அந்த மனிதர். ஒவ்வொரு நாளும் காலையில் பத்து மணிக்கு அங்கே வந்து நிற்கிறார் அவர். மது அருந்தாதீர்கள், மது குடும்பத்தையும் நாட்டையும் அழிக்கும் என பல விதமான வாசகங்களை எழுதிய அட்டைகளை அனைவரும் பார்க்கும் வகையில் கையிலேந்தி நிற்கிறார். அவர் பெயர் ஃப்ராங்க்ளின் ஆஸாத் காந்தி. கிறித்தவம், இஸ்லாம், இந்து என மூன்று மத அடையாளங்களையும் இணைக்கும் விதமாக தன் பெயரை அப்படி வைத்திருக்கிறார். அந்த மனிதரை விட்டல்ராவுக்கு அறிமுகப்படுத்துகிறார் நண்பர். அவரோடு கைகுலுக்கி உரையாடுகிறார் விட்டல்ராவ். அவர் முகம் எங்கோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது ஆனால் எங்கு எப்போது பார்த்தோம் என்பது அவருக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. . பழைய நினைவுகளைத் துழாவிக்கொண்டே உரையாடலையும் தொடர்கிறார் விட்டல்ராவ். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு இருவரும் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

ஏதேதோ உரையாடல்களில் பொழுதுகளைக் கழித்தாலும் அவர் மனம் அந்த மனிதரைப்பற்றிய யோசனைகளிலேயே மூழ்கியிருக்கிறது. விடாமுயற்சியின் விளைவாக, ஒரு கட்டத்தில் அந்த முகத்தின் ஊற்றுக்கண்ணை அவர் கண்டுபிடித்துவிடுகிறார். அவருக்கு பதினாலு வயசிருக்கும்போது அவருடைய அப்பா உடல்நலம் கெட்டு படுத்த படுக்கையாக இருந்தார். வீட்டுக்கு அருகிலேயே இருந்த ஒரு டாக்டர் வீட்டுக்குச் சென்று அப்பாவின் நிலையை எடுத்துச் சொல்லி அவரைப் பார்க்க வருமாறு கெஞ்சிக் கேட்டார். அவரும் மனமிரங்கி அச்சிறுவனோடு வந்து அப்பாவின் உடல்நிலையை ஆய்வு செய்தார். பரிசோதித்துவிட்டு உடனடியாக அவரை அரசாங்க மருத்துவ மனைக்குச் செல்வதுதான் நல்லது என்று சொன்னார். வீட்டிலிருப்பவர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதைப் பார்த்து நிலையைப் புரிந்துகொண்டு தன் பையிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். உடனே அரசு மருத்துவமனைக்கு தன் அப்பாவை அழைத்துச் சென்றார் விட்டல்ராவ். ஆனால் இரு தினங்களுக்குப் பிறகு அங்கிருந்து அழைத்துச் சென்றுவிடும்படி அங்கிருக்கும் மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். நிலைமை கைமீறிப் போய்விட்டது. வேறு வழியில்லாமல் அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார்.

அடுத்தநாள் காலையில் அவர் உடல் அசைவற்றுப் போய்விடுகிறது. சிறுவனான விட்டல்ராவ் அதே டாக்டரின் வீட்டுக்குச் சென்று தகவலைச் சொல்லி கையோடு அழைத்து வருகிறார். அப்பாவின் நாடியைப் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். அவர் இறந்ததற்கான சான்றிதழையும் அவரே கைப்பட எழுதிக் கொடுக்கிறார். புறப்படும்போது இரண்டு ரூபாய்த்தாளை எடுத்து கொடுத்துவிட்டுச் செல்கிறார். அன்று கனிவோடும் இரக்கத்தோடும் பணம் கொடுத்துவிட்டுச் சென்ற டாக்டர்தான் காந்தி சிலைக்கு அருகில் நின்ற மனிதர் என்பதை அவர் அறிந்துகொள்கிறார். அடுத்த நாள் மீண்டும் காந்தி சிலைக்கு அருகில் சென்று அதே மனிதரைச் சந்தித்து உரையாடுகிறார். கிச்சிப்பாளையத்தில் கிளினிக் வைத்திருந்த டாக்டர்தானே நீங்கள் என்று கேட்கும்போது அந்த மனிதரின் முகம் மலர்கிறது. அதே சிரிப்பு அதே கண்கள். பழைய கதைகளைச் சொல்லிவிட்டு விடைபெறுகிறார் விட்டல்ராவ்.

பார்த்துப் பழகிய பதினேழு ஆளுமைகளைப்பற்றிய நினைவுகளை வெவ்வேறு கட்டுரைகள் வழியாக இத்தொகுதியில் பதிவு செய்திருக்கிறார் விட்டல்ராவ். கதைத்தன்மையுடன் கூடிய ஒவ்வொரு கட்டுரையிலும் ஆவணப்படக் காட்சிகள் போல பல்வேறு தருணங்களின் சித்தரிப்புகள் அடங்கியுள்ளன. அகத்தூண்டுதலை அளிக்கும் அற்புதத் தருணங்கள் மின்னற்பொழுதுகள் புத்தக வாசிப்பை மகத்தான அனுபவமாக்குகின்றன.

( மின்னற்பொழுதுகள். விட்டல்ராவ். பேசும் புதிய சக்தி வெளியீடு. 29 காம்ப்ளெக்ஸ் தெற்குத்தெரு, திருவாரூர் – 610001. விலை. ரூ.180 )

கலை இலக்கிய சங்கதிகள் கட்டுரை – விட்டல் ராவ்

கலை இலக்கிய சங்கதிகள் கட்டுரை – விட்டல் ராவ்



1.குழந்தைகள் வாசிப்பு

எதற்கும் ஒரு பழக்கம் வேண்டும். அதைவிடத் தீவிரமானது பயிற்சி. பயிற்சிக்கான ஆதார ஆரம்பமாய்ப் பழக்கமும் இருக்கக் கூடும். பழக்கம், பழக்கமாக மட்டுமே தொடர்ந்து, குறிப்பிடும்படியான வளர்ச்சி காணாது போய்விடவும் கூடும். பயிற்சி -சிந்தனை, ஆக்கம், சோதனை போன்ற வளர்ச்சிகளை உள்ளிட்டது.

வாசிப்பைப் பொருத்த அளவு தினசரிகளைப் படிப்பதற்கும் வார, மாத இதழ்களைப் படிப்பதற்கும் வெறும் பழக்கமே போதுமானது. “பத்திரிகை படிக்கிற பழக்கமேயில்லே” என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். ஆனால் அதைவிட இன்னும் சில படிகள் மேலே சென்று தீவிரமான, கனமான சங்கதிகளைக் கொண்ட பத்திரிகைகள், நூல்களை வாசிக்க நிறைய பயிற்சி தேவை. வாசிப்புப் பயிற்சிக்கு ஆதாரமான வாசிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்திலிருந்தே வருதல் ஆணிவேர் போன்றது.

வாசிப்பைப் பொருத்த அளவு, ‘குழந்தைகள்” என்று வரம்பு கட்டுவதிலும் இடற வேண்டியிருக்கிறது.

இப்போதென்றில்லை, பல வருஷங்கள் முந்தியும் கூடக் குழந்தைகள் என்னென்ன வாசித்தார்கள், எதெல்லாம் விரும்பி வாசித்தார்கள், அவர்களுக்கு எதெல்லாம் வாசிக்கக் கொடுக்கப்பட்டன, அந்த வாசிப்பு அவர்களில் எவ்வளவு விஸ்தாரத்தை ஏற்படுத்திற்று என்றெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஐம்பதுகளில் பாலர் மலர், டமாரம் பத்திரிகைகளில், “விச்சுவின் வனவாசம்” தொடர் வாசித்த குழந்தை, அப்போது கலைமகளில் வெளியான ஆனைக்குஞ்சித பாதம் எழுதி பரபரப்பூட்டின “நல்ல பிசாசு” கதையைச் சுவாரசியத்தோடு படித்தது. குஞ்சிதபாதமும் தன் குழந்தை வாசகர்களை வளர்க்க ‘வால் முளைத்த சாமியார்” எனும் திகில் கதையைத் தனி வெளியீடாய் வெளியிட்டார்.

நல்ல பிசாசையும் சேர்த்து ‘கலைமகளை’ முழுக்க வாசித்த வயது வந்தோர் டமாரத்தையும் அணிலையும் விட்டு வைக்கவில்லை. சிறுவர் பகுதி, பாப்பா மலர் என்று சில பக்கங்களையே நிரந்தரமாய்க் குழந்தைகளுக்கென ஒதுக்கிய பத்திரிகைகளுக்குக் குழந்தைகளிடையே செல்வாக்கு ஏற்பட்டது. 50-களில் ‘ஆனந்த விகட’னில், ‘சின்ன ஜமீன்தார்’ தொடர் வந்தபோது, அப்படித்தான் அது ஒரு முழுக் குடும்பப் பத்திரிகையாயிற்று.

அதேசமயம் தினமணியில், “மாண்ட்ரேக் என்னும் மந்திரவாதி” வண்ணச் சித்திரத்தொடர் வந்தபோது குழந்தைகளின் வாசிப்பில் தினசரியான தினமணியும் சிக்கினதோடு, அப்போது அதில் வெளியான ஆளவந்தார் கொலை வழக்குச் செய்தியும் அவர்களின் வாசிப்பில் அடங்கிற்று.

இன்றைக்கு வரிந்துகட்டி எழுதப்படும் அறிவியல் கதைகள் மற்றும் மர்மக் கதைகள் எல்லாம் குழந்தைகள் வாசிப்புத் தரத்துக்கு மேல் போகவில்லை . சில பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகள் குழந்தைகளுக்கான எழுத்துகளோ எனும்படியாயிருக்கின்றன.

ஆயினும் குழந்தைகளுக்கெனப் பத்திரிகைகள், நூல்கள் நிறையவே அன்றிருந்தன.

தினமணியின் மாண்ட்ரேக்கும், கதிரில் வந்த டப்பாச்சி முதலிய கதைகளும் குறிப்பிடத்தக்கன.

குழந்தைகளுக்கெனவே வெளியிடப்பட்ட பாலர் மலர், வாசிப்புப் பழக்கத்தை மட்டுமே தூண்டியது. புதுமொழிகளை வெளியிட்ட டமாரம், புதுமொழியின் ஆதிப் பழமொழி எது என்று கேட்டு குழந்தைகளைத் தேடச் செய்தது.

அணில், ஜில் ஜில் எனும் குழந்தைப் பத்திரிகைகள் சித்திரங்களில் கவனம் செலுத்தியதோடு, குழந்தைகளுக்கான சிறப்பு வெளியீடுகளையும் அழகிய முகப்புடன் வெளியிட்டன. ‘அழகி தாமரை’ போன்ற ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கதைகளும், அணில் வெளியீடுகளில் இடம் பெற்றன.

50-களில் நெ.சி.தெய்வசிகாமணியை ஆசிரியராய்க் கொண்டு ‘அம்பி’ மாதமிருமுறையாக வெளிவந்தபோது, குழந்தைகள் வாசிப்பில் பழக்கம் எனும் சாதாரணத் திறனை மாற்றி, பயிற்சி எனும் சிந்தனை சம்பந்தமான திறனைத் தூண்டிவிட்டது. வழக்கமான அம்சங்களான ‘கிளிக்கூண்டு” போன்ற தொடர்கதைகள், சிறுகதைகளோடு ‘அம்பி’யில் சிறுகதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டன.

”சுழலும் ரங்கராட்டினத்தைப் பார்த்துக் கொண்டே…” என்ற வாக்கியத்தை ஆரம்பமாகக் கொண்டு சிறுகதை எழுதியனுப்பச் சொல்லிப் போட்டி வைக்கப்பட்டது.

குழந்தைகள், வாசிக்கும் பழக்கம் என்பதிலிருந்து வாசிப்புப் பயிற்சி பெற்று அதன் பயனாய்ப் பெருக்கிக் கொண்ட சிந்தனை – கற்பனைத் திறனைப் பிரயோகித்துப் பார்க்க ‘அம்பி’ வகை செய்தது. ஜ.ரா.சுந்தரேசனின் ‘நொண்டி” எனும் சிறுகதை முதல் பரிசு பெற்றது. அம்பி தன் பங்கிற்குத் தீபாவளி மலர் மற்றும் குழந்தைகளுக்கான தனி வெளியீடுகளைப் பதிப்பித்தது. சிப்பாய் சின்னச்சாமி, இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் (நெ.சி.தெ.). பட்டுப்பூச்சி (தங்கமணி) என்பவை அவை.

‘அம்பி’ நின்றுபோன அதே சமயம் அந்த இடத்தை அதைவிடப் பன்மடங்கு உறுதியாகவும், அதிகமாகவும் பிடித்துக்கொண்ட குழந்தைகள் பத்திரிகை, கலைமகள் குடும்பத்தைச் சேர்ந்த ‘கண்ணன்’ பத்திரிகை. குழந்தைப் பத்திரிகைகளிலேயே தரம், அழகான அமைப்பு, சிறப்பான விஷயங்கள் ஆகியவற்றைக் கொண்ட பத்திரிகை ‘கண்ண ன்’தான். ஆர்.வி. அதன் ஆசிரியர். அட்டைப்படம் ஒரு பத்திரிகையின் பரவலுக்கு வழி செய்யும் என்ற கருத்துக்குக் ‘கண்ணன்’ சிறந்த சான்று.

ஓர் அட்டைப் படத்தில் அரை நிஜார் போட்ட பையனும், முழு நிஜார் போட்ட பையனும் கையை மடக்கி, கையைத் தூக்கி ரோஷமாய்ச் சண்டைக்கு நிற்பது போன்று சித்தரித்தார் ஓவியர் சசி. இதைப் பாராட்டி வந்த குழந்தை வாசகர்களின் கடிதங்கள் பிரசுரமாயின. பிறகு பல பத்திரிகை விளம்பரங்கள் அந்தப் படத்தை உபயோகிக்கித்தன.

நீச்சல் கற்றுக் கொள், கிரிக்கெட் கற்றுக்கொள் – எனும் பகுதிகள் சம்பந்தப்பட்ட வல்லுநர்களின் விளக்கத்தோடு கண்ணனில் தொடர்ந்து வெளிவந்தன. அதே சமயம் இதில் ஆர்வி தாம் எழுதிய ஜக்கு, ஜக்கு துப்பறிகிறான், ஜம்பு, மாஸ்டர் பாலகுமார் ஆகிய தொடர் கதைகளில் சர்க்கஸ், புலி-சிங்கப் பயிற்சியாளர் களையெல்லாம் பயங்கர வில்லன்களாய்க் காட்டியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தோ எனும்படியிருக்கிறது. அன்றைக்குக் கண்ணனின் வாசகக் குழந்தைகளுக்கு சர்க்கஸ் என்றால் ஒவ்வாமையாக இருந்திருக்கலாம்.

‘கண்ணன்’, வாசிப்பு என்ற பழக்கத்தைத் தாண்டி, வாசிப்புப் பயிற்சி என்ற தளத்திற்குக் குழந்தைகளை உயர்த்தியதோடு, பெரியவர்களையும் சேர்த்துக் கொண்டது. ‘கண்ணன் கழகம்’ என்று ஒன்றை ஏற்படுத்தித் தமிழகமெங்கும் அதற்குக் ‘கண்ணன்’ கிளைக் கழகங்களை உண்டாக்கி வைத்தது. பிரதி மாதம் இதழ்களில் வரும் கிளைக் கழக அங்கத்தினர் கூப்பன்களைக் கத்தரித்து பூர்த்தி செய்து அனுப்பினால் அங்கத்தினராகலாம்.

வெளிர் நீலத்தில், வெண்ணெய்த் தாழியுடன் மண்டியிட்ட கண்ணன் மோனோகிராம் போட்ட இனாமல் பாட்சு அங்கத்தினருக்கு அனுப்பப்படும். சென்னையில் வருஷ மாநாடும் நடக்கும். தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் கண்ணன் கிளைக் கழக அங்கத்தினர்கள் சென்னைக்கு வந்து மாநாட்டில் கலந்து கொண்டது சாதாரணமானதல்ல. குழந்தைகளின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லெண்ணப் பரிமாற்றம், தலைமை தாங்கும் பொறுப்பு எனப் பல உயர்ந்த சங்கதிகளை உள்ளடக்கி வளர்த்த பெருமை ”கண்ணன்” பத்திரிகைக்கும், கண்ணன் கழகத்திற்கும் உண்டு.

”அம்புலிமாமா’ வாசிப்புக்கு வயதுக் கணக்கேயில்லை. அதற்கும் அதற்குப் போட்டியாகப் புறப்பட்ட ‘பாலமித்திரா’வுக்கும் எவ்வயதினரும் வாசகர்களாயிருந்தனர்.

‘கல்கண்டு’ – குழந்தைகள் பத்திரிகையென்றுதான் தொடங்கப்பட்டது. வாசகர்களை ஈர்த்த கல்கண்டு, குழந்தைகளை – குழந்தைத்தனமான – வாசிப்பு – எல்லையிலிருந்து வேறு பிராந்தியங்களுக்கு இழுக்க முயற்சி செய்தது. தொடர்கதைப் பக்கத்திற்கு முன் பக்கத்தில் “நியூஸ்” என்ற செய்திப் பகுதியை முதன் முதலில் தொடங்கிய குழந்தைப் பத்திரிகை கல்கண்டு. தமிழ்வாணனைத் தவிர ராஜன் என்பவரும் (சின்னத் தம்பி) தொடர்கதையொன்று எழுதினார். ஏராளமான திகில் – மர்மக் கதைகளைக் கல்கண்டு வழங்கினாலும், வன்முறை மேலோங்கிய கதைகளை அது கொண்டிருக்க வில்லை .

ராஜனை ஆசிரியராய்க் கொண்டு “மிட்டாய்” என்ற குழந்தைப் பத்திரிகையொன்று வெளிவந்து சீக்கிரமே நின்றும் போனது. பிறகு வந்த ‘கரும்பு’ம், ‘பூஞ்சோலை’ யும் நிறைய தகவல்களையும் கதைகளையும் கொடுத் தன. குமுதத்தின் அச்சுக் கூடத்திலிருந்து வெளிவந்த “ஜிங்கிலி’யும் கல்கண்டு அளவுக்குப் பேர் சொல்லிற்று.

ஓவியர் சந்தனு, “சித்திரக்குள்ளன்” என்ற தன் பத்திரிகையின் மூலம் நவரசத்தையும் குழந்தைகளுக்கு வழங்கி வந்தார். கண்ணன், கல்கண்டு அளவுக்கு இது பிரபலமாகவில்லை.

மாயம், மர்மம், பயங்கரம் என்ற பதங்கள் பெரிதும்’ கதைவாசிப்பில் குழந்தைகளுக்கென வார்த்துக் கொடுக்கப்பட்டன. மாயக்கள்ளன், மர்ம மனிதன், பயங்கர நகரம் (கல்கண்டு – தமிழ்வாணன்), ரிவால்வர் ராஜா (ஜிங்கிலி – ரங்கராஜன்), பயங்கரப் பாதை (மிட்டாய் – ராஜன்), மாயத் தம்பி (நெ.சி. தெய்வ சிகாமணி), ஆற்றிலே மிதந்து வந்த பிரேதம் (தமிழ் வாணன்) என்று குழந்தைகளுக்காகத் திகில் – மர்மம் மிக்க அதே சமயம் வன்முறையை மிகவும் அடக்கி வாசித்த இந்தக் கதைகளால் சூழ்ந்த குழந்தைகளின் வாசிப்பு உலகில் குழப்பமும் நிகழ்ந்ததுண்டு.

இந்தச் சமயம் புதுமைப்பித்தனின் மொழி பெயர்ப்பில், “பிரேத மனிதன்” என்ற புத்தகமும் வெளிவந்து புத்தகக் கடைகளில் தொங்கிற்று. மர்மம், திகில் என்று மண்டையில் சரக்கேற்றப்பட்ட பல சிறுவர்கள் (குழந்தைகள்), குழந்தைப் புத்தக வரிசையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு புதுமைப் பித்தனின் பிரேத மனிதனையும் வாங்கிச் சென்று படிக்கத் தொடங்கி, படிக்க ஓடாமல், திணறிப்போய்ப் போட்டுவிட்டது வேறு விஷயம்.

குழந்தைகளுக்கென அன்று திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. பெற்றோர்களோடு மாமூல் படங்களையே விரும்பிப் பார்த்து, அதைப்பற்றி மற்றவர்களோடு பேசுவதுமாயிருந்த குழந்தைகள், வயது வந்த பத்திரிகைச் சங்கதிகளில் சஞ்சரிக்கவும் தயங்கவில்லை. டப்பாச்சி – படித்த கையோடு, கதிரில் வந்த கிராம மோகினி, துறைமுகக் காதலி, தாரா, பிரின்சிபால் கொலை முதலிய தொடர் கதைகளையும், விகடனில் நாயக்கர் மக்கள், சிஐடி சந்துரு, கட்டபொம்மு கதை ஆகியவற்றையும் வாசிக்காமல் விடவில்லை. குழந்தைகளுக்கெனத் தனி எழுத்து, தனிப் படைப்பு, தனிப் பத்திரிகை, சினிமாவென்று பிரத்தியேகமாகக் கொண்டு வந்தாலும், அதை வாசிப்பதோடு பிற வயதினருக்காய் அச்சேறுபவைகளையும் குழந்தைகள் படித்தே வைக்கின்றன.

பொதுவாக வாசிப்பு என்பது எல்லோரையும் வயதைப் புறக்கணித்த, வயதை மீறின கதியில் ஆழ்த்தச் செய்துவரும் ஒன்று என்பது ஐம்பதுகளிலிருந்தே நிரூபணமாயிருக்கிறது.

நன்றி:
திணமணிச்சுடர்.
(தமிழ்மணி – 1991 )

தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



 ஜெர்மன் சினிமா – இரண்டு

– விட்டல்ராவ்

புதிய ஜெர்மன் சினிமா இயக்குனர்கள் ஹாலிவுட் சினிமாவின் கதைக்கூறல் முறையுடன் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஸ் புதிய அலை சினிமாவின் கூர்மையான நவீனத்துவத்தையும் யதார்த்தத்தையும் இணைத்த நூதனமான ஜெர்மன் வகைமையாக உண்டாக்கிக் காட்ட முயற்சித்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ரெய்னர் வெர்னர் ஃபாஸ் பைண்டர் (Rainer Werner Fassbinder) பாஸ்பைண்டர் புதிய அலை ஜெர்மன் சினிமாவின் முதன்மையான சக்தியாகக் கருதப்படுபவர். தமது பதினான்கு வருட திரைப்பட பயணத்தில் 40 திரைப்படங்களையும் தொலைக் காட்சி நாடகங்களையும் எழுதி மேடையேற்றியவர். 1945இல் ஜெர்மனியின் பவேரியாவில் பாஸ் பைண்டர் பிறந்தார். இவரது குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் தனிமையிலேயே கழிந்திருந்த சமயம் ஏராளமான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். தனது 21வது வயதிலேயே இவர் ஒரு முழுமையும் எளிமையுமான நவீன நாடகக் கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தவர். நாடகங்கள் எழுதுவதும் அவற்றை இயக்குவதுமாயிருந்த பாஸ்பைண்டர் தமது முதல் திரைப்படத்தை 1969ல் இயக்கினைார். இதன் மூலம் சர்வதேச கவனத்தையும் பெற்றார். ஆனால் இவரது சொந்த வாழ்க்கை அவ்வப்போது கஷ்டங்களுக்குள்ளாகி முதலில் குடியில் மூழ்கியவராயும் பிறகு இறுதிவரை மீள முடியாத மீளவிரும்பாத போதை மருந்துக்கு அடிமையானவராயும் தமது 37வது வயதிலேயே மரணமடைந்தார்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

1947இல் பாஸ்பைண்டர் இயக்கிய  Ali: Fear Eats The Soul எனும்  படம், Douglassirk என்பவர் 1955இல் இயக்கிய  All that Heaven Allows  எனும்  திரைப்படத்தின் பாதிப்பைக் கொண்டது. 1972இல் பாஸ்பைண்டர்   The Bitter Tears of petra vonkant  எனும் அரிய திரைப்படத்தின் மூலம் பெரிதும் கவனம் பெற்றார். இவரது மிக முக்கியமான திரைப் படம்  The marriage of maria Braun (1979) மிகப் பெரிய வெற்றியைத் தந்த யுத்தப் பின்னணியிலான படம். இவர் 1980இல் தயாரித்து இயக்கிய  Berlin Alexanderplatz எனும் தொலைக் காட்சித் தொடர் சித்திரம் மறக்க முடியாத ஒன்று. ஜெர்மனிய கலாச்சாரத்தின் அடிநாதமாய் அமுங்கியுள்ள மன இறுக்கங்களை வெளிக் கொணரும் தருணங்களில் பாஸ்பைண்டர், ஐரோப்பிய கலைப் பாரம்பரியத்தின் மெலோடிராமா வகை உணர்ச்சிபூர்வ வெளிப்பாட்டை வெற்றிகரமாய் சினிமாவாக்கித் தருகிறார்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

Ali: Fear Eats the soul (1974) எனும் திரைப்படம், அலி எனும் 40 வயது அரேபிய தொழிலாளிக்கும், 60வயது எம்மி குரோவ்ஸ்கி எனும் போலந்தில் பிறந்து ஜெர்மனியில் நிரந்தரமான சுத்திகரிப்பு பணிபுரியும் பெண்ணுக்கும் இடையேயான காதல் உறவாகும். எம்மி விதவை. மகளைத் திருமணம் செய்து அனுப்பிவிட்டு  தனியாளாயிருப்பவள். அலி, தன்போல அரேபிய பகுதிகளிலிருந்து வந்து பணிபுரியும் ஐவரோடு ஓர் அறையிலிருப்பவள். எம்மி, தன் வேலை முடிந்து வீடு திரும்புகையில் மழை பிடித்துக் கொள்ளவே, மழைக்கு ஒருஅரேபிய பார் ரெஸ்டாரண்டில் ஒதுங்குகிறாள். அங்கு மதுவருந்தும் பாரில் பணிபுரியும் அலிக்கும் எம்மிக்கும் அறிமுகம் ஏற்பட்டு அவனது வேண்டுகோளுக்கிணங்கி அவள் அவனோடு நடனமாடுகிறாள். இருவருக்குமிடையே உறவு மலர்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். எம்மியின் திருமணமான மகளும் மருமகனும் இதை விரும்புவதில்லை. கடைக்காரர்களும், மதுவருந்துமிடங்களிலுள்ளவர்களும் இந்த உறவைப் பிரிக்கும் யத்தனிப்பில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒரு நாள் பொறுக்காத வயிற்று வலியால் அலி மயங்கி விழுந்துவிட அவனை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். எம்மியும் அலியும் வெளியுலகத்தின் அச்சுருத்தலுக்கு மத்தியில் பயந்தபடியே மகனாக பாஸ்பைண்டரே நடிக்கிறார். பாஸ்பைண்டருக்கென்று பிரத்தியேகமானதொரு காட்சி ரூபம் உண்டு. இதை அவரது வித்தியாசமான காமிரா நமக்கு ஒளிப்பதிவாளர் ஜுர்கென் ஜுர்கெஸ் வழியாக புலப்படுத்துகிறது. காமிரா, அசைவற்ற நிலையான முகங்களைக் காட்டுகிறது. இந்தியாவில் மணிகவுலின் உஸ்கி ரோட்டி” முதலான திரைப்படங்களில் கே.கே.மகாராஜன் கையாண்ட காமிரா கோணங்கள், நகர்வுகளை கூடவே நினைவுக்கு கொண்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் அன்றாட செயல்பாடுகளினின்று கிரகித்துக் கொண்டதாய் இப்படத்தின் போக்கு நமக்குப்படுகிறது. ஓட்டலில் ஜுக் பாக்ஸ் இசைப் பெட்டியிலிருந்து வரும் பாமர நயமான பாடலும், அலியாக வரும் எல்ஹெடி பென்சலேம் (El Hedi Ben Salem) என்ற அரேபிய கலைஞரின் நடிப்பும், எம்மியாக வரும் பிரிஜெட் மைராவின் நடிப்பும் அந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன.

பாஸ்பைண்டரை ஜெர்மனியின் ஜார்ஜ் கூக்கர் எனலாம். அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஜார்ஜ் கூக்கர் பெண் பாத்திரங்களில் பிரதானமான கதைகளைத் திரைப்படமாக்கியதில் முதன்மையானவர் Gas Light, Camille, Bowani Junction, My Fair Lady) அவரைப் போலவே ரெய்னர் வெர்னர் பாஸ்பைண்டரும் பெண் பாத்திரங்களை முதன்மைப்படுத்திய ஜெர்மன் திரைப்படங்களைக் கையாண்டிருப்பவர். அவற்றில் முக்கியமான படம் மரியா ப்ரானின் திருமணம் (Marriage of Maria Braun) 2-ம் உலகப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்த நாளில் ஜெர்மனியின் கீழ் மத்திய வர்க்க மக்களில் பெரும்பாலும் ஆண்கள் போருக்குச் சென்று விட்டார்கள். ஏராளமானோர் போரில் மாண்டுவிட்ட நிலையில் ஜெர்மனியில் பெண்கள் எண்ணிக்கை அதிகம் என்றிருந்ததை இப்படத்தின் தொடக்கத்தில் மரியா தன் அம்மாவிடம் வெளியில் போய்விட்டு வந்தவளாய் பேசும் வசனத்தில் பாஸ்பைண்டர் வெளிப்படுத்துகிறார்.

திருமணத்துக்கான பெண் உடைகள் வேண்டியிருக்கவில்லை. பெண்கள் அதிகமாயுள்ளனர். கல்யாணங்கள் நடப்பது குறைவாயிருக்கு. எனறு கூறுகிறாள் மரியாப்ரான் படத்தின் தொடக்கத்தில் மரியாவுக்கும் ராணுவ சீருடையிலேயே இருக்கும் ஹெர்மனுக்கும் குண்டுவீச்சு நடக்க நடக்க பதிவுத் திருமணம் நடக்கிறது. ஜெர்மனிமீது பயங்கர வான்வழி தாக்குதல் நடைபெறுகிறது. பதிவுத் திருமணம் நடக்கிறது. ஜெர்மனி மீது பயங்கர வான் வழிதாக்குதல் நடைபெறுகிறது. பதிவுத் திருமண அலுவலக கட்டிடம் தகர்க்கப்படுகையில் திருமணப் பதிவு அதிகாரி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார். மணமகன் ஹெர்மன் அதிகாரியை மடக்கி திருமணப் பதிவுக்கான சான்றிதழில் கையெழுத்தும் முத்திரையும் போட வைக்கும் காட்சி நல்ல நகைச்சுவை. ஆனால் ஹெர்மன் போரிலிருந்து திரும்பவில்லை. போர் ஓய்ந்து உலகம் அமைதி நிலைக்கு திரும்புகையில் மரியா வசிக்கும் பெர்லின் அமெரிக்க ராணுவத்தின் கீழ் வருகிறது. போர் அரங்குகளிலிருந்து கப்பலில் தினமும் வந்திறங்கும் சிப்பாய்களில் தங்கள் கணவன், சகோதரர்கள், பிற உறவுகளில் யாரும் இருக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து அப்படியான நபரின் பெயர் எழுதப்பட்ட அட்டையை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு அலைகிறார்கள். மரியா ப்ரானும் அவர்களில் ஒருத்தி போருக்குப் போன தங்கையின் கணவன் முழுசாகத் திரும்பி வந்தவன், ஹெர்மன் இறந்துவிட்டான், என்று மரியாவிடம் சொல்லுகிறான். மரியா கூறுகிறாள், ஆனால், காதலுக்கு சாவே கிடையாது என்று.

காபரே, விடுதியொன்றில் மரியா வேலை செய்கிறாள். அதே சமயம் இளமையோடிருக்கும் மரியாவின் விதவைத்தாய் மறுமணம் செய்துகொள்ளத் தயாராகிறாள். காபரே விடுதியில் அமெரிக்க சிப்பாய்கள் விடுதிப் பெண்களோடு சல்லாபம், நடனமென்றிருக்கையில் தனிமையிலிருக்கும் மரியாவுக்கும் ஒரு கருப்பு அமெரிக்க சிப்பாய்க்கும் உறவேற்படுகிறது. அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் அவனுக்கு கட்டிலில் இடம் கொடுத்து கற்பமும் பெறுகிறாள். இருவரும் அந்தரங்கமாயிருக்கையில் தன் எதிர்கால கருப்புக் குழந்தை குறித்து பேசுகிறாள் மரியா.

மரியா ரயில் பயணத்தின்போது ஆஸ்வால்டு எனும் பிரெஞ்சு தொழிலதிபரைக் கவர்கிறாள். இவளது அறிவையும் கண்டு தனக்கு அந்தரங்க காரிய தரிசியாக மரியாவை ஆஸ்வால்டு நியமித்துக் கொள்ளுகிறார். மரியா பதவி உயர்ந்து நிறைய சம்பாதிக்கிறாள். மரியாவைத் திருமணம் செய்து கொள்ளவிருப்பம் தெரிவிக்கும் ஆஸ்வால்டின் முடிவை நிராகரித்த அவள் இன்னொருமுறை திருமணம் செய்ய முடியாதென்கிறார் ஆஸ்வால்டுக்கு ஆசை நாயகியாய் இருந்து வருகையில் அவனை கருப்பு அமெரிக்க சிப்பாய் நெருங்கும் ஓர் இரவில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. போரில் செத்துவிட்டதாய் சொல்லப்பட்ட அவள் கணவன் ஹெர்மன் திரும்பி வருகிறான். சிப்பாயிக்கும் அவனுக்கும் சண்டை நடக்கையில், மரியா நீக்ரோவை பலமாய் தலையில் தாக்கிச் சாகடிக்கிறாள், போலீஸ் வருகையில் தான் தான் கொன்றதாகக் கூறி ஹெர்மன் ஆயுள் தண்டனையில் சிறை செல்கிறான் மரியா அடிக்கடி சிறைக்குச் சென்று அவனை சந்திக்கிறாள். ஆஸ்வால்டு நிறைய பணம் கட்டி ஹெர்மனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். ஆனால் மரியாவை ஏற்பதில் உறுதியில்லாத ஹெர்மன் தென்னமெரிக்க நாடொன்றுக்குப் போய் விட்டு மீண்டும் அவளிடம் வருகிறான். அந்த சமயம் ஆஸ்வால்டு இறந்துபோகிறார். தன்னுடைய தொழிற்கூடங்கள் பணம், சொத்து எல்லாவற்றையும் மரியாவுக்கும் ஹெர்மனுக்கும் எழுதிவைத்திருக்கிறார் ஆல்வால்டு. அந்த உயிலை அவரது வக்கீல்கள் படித்துக் காட்டிவிட்டு வைத்துப் போகிறார்கள். அவர்கள் கேட்டைக் கடப்பதற்குள் பயங்கர வெடிச் சத்தத்தை தொடர்ந்து மரியாவின் வீடு எரிகிறது. அவளது அஜாக்கிரதையால் சமையல் எரிவாயு வெடித்து தீப்பற்றி மரியாவும் ஹெர்மனும் சகலமும் எரிந்து கருகுகின்றன.

படம் மெலோடிராமாதான். ஆனால் அதையே எவ்வளவு இயல்பாகவும் யதார்த்தமாயும் இயக்கியிருக்கிறார் பாஸ்பைண்டர். அவர் மெலோடி ராமா வகைக்காரர்தான் என்பது புதியதுமல்ல ஆனால் படம் தரும் நம்பகத்தன்மைக்கான நுணுக்க விவரணைகள் அசத்துகின்றன. மரியா ப்ரானாக ஹன்னா ஸ்கைகுல்லாவும்  Hanna Schygulla ஹெர்மனாக க்ளாஸ் லோவிட்ஸ் என்பவரும் ஆஸ்வால்டாக காட்பிரைடு ஜானும் Gottfred John மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்கு பொறுப்பான காமிரா கலைஞர் மைகேல் பால்ஹாஸ் (Michael Ballhaus).

ரெய்னர் வெர்னர் பாஸ் பைண்டரின் ரியோ தஸ் மோர்டஸ் எனும் படம் 2001இல் வெளியானது. அவ்வாண்டின் சிறந்த படமென்று அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது ஓரளவுக்கு இன்றைய ஜெர்மனியின் இளம் தலைமுறை ஆண் பெண்களின் வாழ்க்கை முறையை உரசிச் செல்லும் படம். நமக்கு காதல் உணர்வென்பது திருமணத்துக்கும் உடலுறவுக்கும் முகமன் கூறும் விசயமாக நமது கதாசிரியர்கள், சினிமா பெரும்பான்மைகளில், தெய்வீகம்” என்றும் தியாகம் என்றும் அர்ச்சிக்கப்பட்ட மேம்பட்டதொன்றாகக் கொள்ளப்பட்டதொன்று அதே சமயம், இந்த நூற்றாண்டின் தொடக்ககாலப் படமான இதில்

பாஸ்பைண்டர் காட்டும் ஐரோப்பிய காதலென்பது உடலுறவு பாலியல் சமாச்சாரங்கள் அப்பட்டமாய் உள்ளிட்ட விவகாரமாகவே இருக்கிறது.

ஹன்னா இளம் பெண், அவளது ஆண் உறவுமைக் என்பவன். இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பன் குந்தர். ஹன்னாவும் மைக்கும் அவ்வப்போது உடலுறவு கொள்ளும் காதலர்கள். மைக் மகா முரடன். குந்தர் கருப்பின கலப்பினர். கொஞ்ச காலம் கடற்படையில் சேவை புரிந்து உலகின் பல்வேறு துறைமுகங்களை மிதித்திருப்பவன். இவ்விருவரும் கிடைத்த வேலையைச் செய்பவர்கள். ஒரு வீட்டில்  சில்லகை கட்டிடவேலை கிடைத்தாலும் செய்வார்கள். குளியலறை சுவர்களுக்கு செராமிக் ஓடுகளை ஒட்டும்  வேைலயின் போது கூட அலுப்பையும் சலிப்பையும் கொள்ளுகிறார்கள். மைக் எப்போதும் எதிலும் எங்கும் பொறுமை காப்பவனில்லை. இந்த குணநலன்களை இந்த பாத்திரங்கள் வாயிலாக மிக நேர்த்தியுடன் வெளிக்கொணர்கிறார் பாஸ்பைண்டர். போலவே, அப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் நடிகர்களும், ஹன்னாவாக  ஸ்கைகுலா (Schygula) மைக்காக கோனிக், மற்றும் குந்தராக காஃப்மனும் (Kaufmann) மிகச் சிறப்பாக அதை நடிப்பில் வெளிப்படுத்துகின்றனர். ஹன்னாவை படம் ஆரம்பிக்கும் காட்சியில் பொய்யளாய், நரிக்குணமுடையவளாய்  காட்டுகிறார். இயக்குனர் முக்கால் நிர்வாண கோலத்தில் அவள் பாலியல் உணர்வைத் தூண்டும் பாடலொன்றைப் போட்டுக் கேட்டபடியே தன் அம்மாவிடமிருந்து வந்த தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்கும் காட்சி பிரமாதம். அம்மாவின் கேள்வி நமக்குக் கேட்கவில்லை மகளின் பதிலைக் கொண்டே தாயின் கேள்விகளை இயக்குனர் நமக்குத் தெரிய வைக்கும் நல்ல உரையாடலை ஏழுதியவர் பாஸ்பைண்டரே. இச்சமயம் ஹன்னா சிகிரெட் புகைத்தபடியிருப்பாள். இச்சமயம் ஹன்னா சிகிரெட் புகைத்தபடியிருக்கிறாள்.

இல்லேம்மா, நான் வெறும் வயித்தில சிகிரெட்” புகைக்கிறதில்லே. என்கிறாள் ஹன்னா. அப்போதுதான் அவள் அலாரம் டைம் பீஸின் பித்தானை அமுக்கி நிறுத்திவிட்டு எழுந்து சிகிரெட் பற்ற வைத்தவள். அம்மா எப்போது டெலிபோன் செய்தாலும் ஹன்னாவின்  கல்யாணத்தையே ஞாபகமூட்டுவது ஹன்னாவுக்கு சலிப்பும் எரிச்சலுமாயிருக்கிறது.

மைக்கும் குந்தரும் ஒன்றுமேயில்லாத விசயத்தில் வாக்குவாதம் ஆரம்பித்து அடித்துப் புரண்டு கிட்டதட்ட கொலையே நிகழ்ந்து விடுமளவுக்கு உச்சத்துக்குப் போய் சண்டையை நிறுத்துகிறார்கள். இவர்களிருவரும் ஜெர்மனியிலிருந்து வெளியேறி தென்னமெரிக்க நாடான பெருவில், ரியோ தஸ்மோர்டெஸ் பகுதியில் மாயர்களால் புதைக்கப்பட்டிருப்பதாய் நம்பும் பதயலைத் தேடிப் புறப்படத் திட்டமிடுகின்றனர். அவர்களின் பயணத்துக்கு முக்கியமாய் வேண்டியிருப்பது ஏராளமான பணம். ஹன்னாவிடம் தன் திட்டத்தைச் சொல்லி பணம் புரட்டித்தர வேண்டுகிறான். அவளையும் தங்களோடு பெருவுக்கு அழைத்துப்போக இருப்பதாய்க் கூறவே, அவள் தன் மாமா ஒருவரிடம் அழைத்துப் போகிறாள். மாமா முந்தைய தலைமுறை மனிதர். குடுமிகட்டி, அங்காங்கே கிழித்து விட்டுக் கொண்ட ஜீன்சில் பரதேசிக் கோலத்தில் இன்றைய ஹிப்பி கலாச்சார ரத்து இளைஞர்களைச் சகல கோணங்களிலும் ஒவ்வாமையுணர்வோடேயே பார்ப்பவர் ஹன்னாவின் மாமா.

பெருவின் வரைபடம் (M.A.P) இருக்கா?” என்று கேட்கிறா MAP என்று எதுவுமில்லையே,” என்று கூறும் மைக் மாமாவின் அடுத்தடுத்த கேள்விகள் எதற்குமே இல்லை என்ற மாதிரியான பதில்களையே தந்து, பணம் இல்லை என்ற மாதிரியான பதில்களையே தந்து, பணம் இல்லை என்று அவர் கூற எழுந்து போய்விடுகின்றனர். எப்படியோ இறுதி முயற்சிகளில் அவர் உதவி செய்து விடுகிறார். நண்பர்களிருவரும் ஹன்னாவிடமும் சொல்லிக் கொள்ளாமல் விமான நிலையத்துக்கு ஓடுகிறார்கள். ஹன்னாவும் கோபங்கொண்டு பின் தொடருகிறாள். இவள் விமானத்தையடையும்போது மைக்கும் குந்தரும் விமானத்தை நெருங்கிவிடும் தருணம் ஹன்னா கைப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அவர்களை குறிபார்த்தபடி இருவரையும் சுட்டுவிடுவதாகக் கத்துகிறாள். அவர்கள் விமானத்தின் நுழைவாயிலை நெருங்கிவிடும் நிலையில், பாஸ்பைண்டர் படத்தை முடித்துக் கொள்ளுகிறார். இப்படத்தின் கதைக்கான மூலக்கரு ஓல்கர் ஸ்குலோண்டோர்ஃப்  Volker, schlondorf)  என்பவரிடமிருந்து பாஸ்பைண்டருக்குக் கிடைத்தது.

படத்தின் உயரிய காமிரா கோணங்களை ஒளிப்பதிவாக்கியவர் பீட்ரிச் லோஹ்மன் (Dietrich Lohmann).

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

(Tin drum)”, தகர டமாராம் என்ற அற்புத ஜெர்மன் நாவலை 1959இல் குந்தர் கிராஸ் எழுதி வெளிவந்ததும் பலத்த புழுதிப் புயலைக் கிளப்பிற்று. குந்தர் கிராசுக்கு 70களில் இலக்கியத்துக்கான நோபல்பரிசு அளிக்க விவாதிக்கப்பட்டபோது அவரைகம்யூனிஸ்டு என்று ஓரம் கட்டி மற்றொரு ஜெர்மன் எழுத்தாளர் ஹைன்ரிச்பாய்ல் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. குந்தர் கிராசுக்கு 1999இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதே சமயம், 2006இல் கிராஸ் தாம் 2ம் உலகப் போரின்போது ஹிட்லரின் கொடிய படைப் பிரிவான Waffen-ss இல் சேர்ந்து சேவை செய்ததாக தாம் எழுதிய, Peeling the Onion என்று தலைப்பிட்ட நினைவுகள் தொகுப்பில் ஒப்புக் கொண்டு பலத்த கண்டனத்துக்கு ஆளானவர்.

புத்தகங்கள் என்றாலே புனிதமானவை தான். மோசமான புத்தகங்களும் புத்தகங்களே. எனவே அவையும் புனிதமானவை, என்று தகர டமாரம் நாவலில் வருகிறது. குந்தர்கிராசின் Dogs years, The Cat and Mouse, Local Anaesthetic என்பவையும் உயரிய நாவல்களே, லோகல் அனீஸ்தெடிக் என்ற நாவலின் ஒரு காட்சி விவரிப்பு, நான் எழுதிய சில அமர்வுகளும் ஒரு முடிவும், என்ற சிறுகதை உருவானதற்கு ஓர் உந்துதலை அளித்தது. குந்தர் கிராஸ் 2012இல் ஒரு நீண்ட வசன கவிதை எழுதினார். அதில் அவர் இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு மிகப் பெரிய அச்சுருத்தளிக்கும் நாடு என்று சொல்லியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. குந்தர் கிராசின் கவிதைத் தொகுப்பிலுள்ள Inside the egg என்ற அற்புதமான கவிதை 70களில் மொழி பெயர்க்கப்பட்டு இலக்கிய சிற்றிதழ் கசடதபற-ல் வெளிவந்தது முட்டையினுள் என்று மொழி பெயர்த்தவர் ஆர். சுவாமிநாதன். இந்தியாவுக்கு வந்த குந்தர் கிராஸ், 80களில் பல மாதங்கள் கல்கத்தா பெருநகரில் தங்கியிருந்தார். கல்கத்தா பெருநகரில் தங்கியிருந்தார். கல்கத்தா தமக்கு மிகவும் பிடித்த நகரம் என்றார் கிராஸ் அப்போது தேசிய விருது பெற்ற திரைப்படக்காரர் கெளதம் கோஸ், ஓவியர் சிவப்பிரசன்னா அருகிலிருக்க குந்தர் கிராஸை ஓர் ஆவணப் படம் செய்திருக்கிறார் கிராஸ் தமது கல்கத்தா அனுபவங்களை, Show Younger Tongue உன் நாக்கைக் காட்டு” என்ற தலைப்பில் நினைவலைகளாய் எழுதியுள்ளார். நாக்கைக் காட்டு என்று கல்கத்தா காளியின் தோற்றச் சித்தரிப்பைக் குறியீடாக்கிக் காட்டுகிறார் கல்கத்தா காளியுருவங்கள் தொங்கப் போட்ட நாக்குகளோடு சித்தரிக்கப்படுபவை.

குந்தர் கிராஸ் 2015-ல் ஜெர்மனியில் காலமானார். டின் ட்ரம் மிகச் சிறப்பான திரைப்பட வடிவம் பெற்று 1979-ல் வெளியானது. நாவலின் காட்சி விவரணைகள் ரீதியாகவே திரைப்படம் இருந்தது. நாவலை வாசிக்கையில் விவரமறிந்த வாசகன் தான். ஒருவித மாந்திரீக யதார்த்தப் போக்கில் பயணமாய்க் கொண்டிருப்பதாய் உணரக்கூடும். அந்த உணர்வை நீக்கிவிட்டு எளிய வடிவில் திரைப்படமாக்கியிருக்கிறார் ஜெர்மன் திரைப்பட இயக்குனர் வோல்கெர் ஸ்லோன்டோர்ஃப் (Volker Sch Londoref) ஆஸ்கார் மெட்ஸெராத் (oskar Medzerath) என்பவனின் சுய வரலாறாக எழுதப்பட்டுள்ள டின் ட்ரம் நாவலைப் படமாக்கியிருப்பதும் அவ்வாறே. 30 வயதான ஆஸ்கார் மனநிலை மருத்துவ மனையில் தான் செய்யாத ஒரு கொலைக் குற்றத்துக்காக சேர்க்கப்படுகிறான். ஆஸ்கார் தாயின் வயிற்றிலிருந்து வெளியில் வருவதற்கு சில தினங்கள் முன்னால் கருப்பைக்குள்ளிருந்தவாறே, தன் பெற்றோர்கள் அவனுக்கான எதிர்காலத் திட்டங்களைப் பேசிக் கொள்ளுவதை ஒட்டுக் கேட்டு விட்டு அதை தவிடுபொடியாக்க முடிவு செய்வதாக நாவலும் படமும் தொடர்கிறது. இந்நிகழ்வின் போது காமிரா காட்சியமைப்பு அற்புதம். ஒளிப்பதிவாளர் ஐகோர் லூதர் காமிரா மாய உலகை சிருஸ்டித்திருக்கிறது. குந்தர் கிராசின் முட்டையினுள்” கவிதையில், முட்டைக் குள்ளிருந்தவாறு கரு பேசும் சங்கதியை, ஆண்கார் தாயின் கருப்பைக்குள்ளிருந்தவாறு சொல்லும் வார்த்தைகளாய்த் தோன்றுகின்றன. பிறவியிலேயே வளர்ச்சியின்றி, முதிர்ச்சியடைந்த மனத்தைக் கொண்டவனாயிருக்கிறான் ஆஸ்கார். அவன் மூன்று வயதில் படிகளில் உருண்டு விழுந்து முதுகெலும்பில் அடிபட்டதன் காரணமாக உடல் வளர்ச்சி அத்தோடு நின்றுபோய் பல ஆண்டுகளுக்கு மூன்றடி உயரமும் குழந்தையின் பேச்சும் கொண்டு வாழ்கிறான். மூன்றாவது வயதில் அவனுக்கு அம்மா முதல் தகர டமாரத்தை வாங்கித் தருகிறாள். இறுதி காலம் வரை அதை வாசித்தே தன் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துகிறான். அதைவிட்டு ஒருகணமும் ஆஸ்கார் பிரியமாட்டான். அத்தோடு அவனுக்கு இயற்கையிலேயே ஒரு விசித்திர சக்தி கண்ணாடிகள் உடைபட்டு நொறுங்கி விழச் செய்ய வல்ல சக்தி கொண்டது. டாக்டரிடம் காட்டப்படுகையில் எரிச்சல் கொண்ட ஆஸ்கார் கத்தவும் டாக்டரின் அறையிலுள்ள சுவர் கடிகாரம் முதல், திரவங்களில் வைக்கப்பட்ட பிராணிகள், முதலியன அடங்கிய கண்ணாடி ஜாடிகள், வரை உடைந்து, அதிலிருந்த பிராணிகளின் உடல்கள் வெளியில்
விழுகின்றன.

ஆஸ்காரைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புகிறார்கள். ஆஸ்காருக்கு தன்டமாரத்தை விட்டுப் பிரியவே முடியாது. கர்ணனின் கவச குண்டலம் போன்றது உறங்கும்போதும் அதைக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பான் சூழ்நிலைக்குத் தக்கவாறு, தன்னுள் ஏற்படும் மனவோட்டத்துக் கேற்ப டமாரத்தைக் குச்சிகளால் அடிப்பான். அவனது டமாரதாள நயம் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப பல்வேறு ரிதம்களை உண்டு பண்ணக்கூடிய வகையில் டமாரமடிப்பான். வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்துவதில் அவனுக்கு ஒரு வித இசை நயம் கிட்டியதால் விடாமல் டமாரமடிக்கிறான். டமாரமடிக்கக் கூடாதென்று ஆசிரியை எவ்வளவு சொல்லியும் அவன் நிறுத்தாததால், அவள் அதைப் பிடுங்குகிறாள். ஆஸ்கார் தன் கடைசி ஆயுதமாய் உச்சஸ்தாயிடமும் கத்துகிறான். ஜன்னல் கண்ணாடிகளும் ஆசிரியையின் மூக்குக் கண்ணாடியும் தூள் தூளாக உடைந்து சிதற அதுவே அவனுடைய படிப்புக்கும் முற்றுப்புள்ளியாகிறது. மனம் வளர்வதுபோல உடல் வளர்வதில்லை. ஒரு டமாரம் பழுதானால் இன்னொரு டமாரம் வருகிறது.

நாஜிகளின் பேரணியும் பெரும் பேச்சும் ஏற்பாடு செய்யப்படுகையில் சிறுவர் சிறுமியர் சீருடையில் டிரம், பியூகிள் வாசித்து, ஹை ஹிட்லர்” பாணி சல்யூட் செய்கிறார்கள். படைகள் ராணுவ நடையில் போட்டிக்கு மறைவிடத்திலமர்ந்து ஆஸ்காரும் தகர டமாரம் கொட்டுகிறான். அவனது வாசிப்பு வித்தியாசமாயிருக்க சிறுமிகள் வேறு திசையில் ஹை ஹிப்லர் நீட்டுகின்றனர். இராணுவ நடையில் பிசிறு தட்டி, தவறாக அடியெடுத்து வைத்து பேரணி அபஸ்வரமாகிறது.

ஆஸ்கார் உடல் ரீதியாய் வளராவிடினும் மன முதிர்ச்சியடைகிறான். பாலுணர்வு மலர்கிறது. அவனது குறுகிய உடல் வடிவு வழியே ஆஸ்கார் தன்னைச் சுற்றியுள்ள வளர்ந்த பருவத்தினரை அவர்களின் காதல், பாலியல் உறவுகளை ஆர்வத்தோடு கவனிக்கிறான். அவனது அம்மா உறவினன் ஒருவனோடு கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை ஆஸ்கார் பார்த்துவிடும் கட்டம் அருமையாய்ப் படமாக்கப்பட்டுள்ளது. அவள் தன் கருவைக் கலைக்க பச்சை மீன்களை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு வாந்தியெடுத்து மரணமடைகிறாள். தந்தை மிகச் சிறிய பெண்ணை வைப்பாட்டியாகக் கொள்ளுகையில் ஆஸ்காருக்கும் அவள் வயதே- பதினாறு. அவள் பேரில் காதல், ஆஸ்காரும் அவளும் உடலுறவு கொள்ளுகின்றனர். அவளுக்கு ஆண் குழந்தைப் பிறக்கையில், அது தன்னால் உண்டானதென்று நம்புகிறான் ஆஸ்கார்.

ஹிட்லர் காலத்து ஜெர்மன் வாழ்க்கையை டின்ட்ரம் ஆஸ்காரின் பார்வையில் நக்கல் நையாண்டி செய்கிறது. ஹிட்லரும் கோபத்தில் கிறீச்சிட்டு கத்துவார். அப்போது பலரின் உள்ளமும், உடலும் ஊரும் கட்டிடங்களும் உடைந்து சிதறியது போர்க்கால யதார்த்தமன்றோ. யுத்தம் வருகையில் ஆஸ்காரின் தந்தை போலீஸில் சேர்ந்து நாஜிடூட்டி பார்க்கிறார். நாஜி ராணுவத்தினருக்கு குஸிப்படுத்தும் வகையில் கேளிக்கைகள் நடத்தப்படுகின்றன. ஊரில் பெரிய சர்க்கஸ் வருகிறது. சர்க்கஸ் பார்க்க ஆஸ்காரை அழைத்துப் போகின்றனர். சர்க்கஸ் குள்ளர்கள் ஆஸ்காரை கவரவும், அவர்களைச் சந்திக்கிறான். ஆனால் அந்தக் குள்ளர்களும் அவர்கள் உடல் கூறும் ஆஸ்காரின் உடல் கூறும் மனவளர்ச்சியும் வேறு வேறு. 53வயது தலைமைக்குள்ளர் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. இராணுவத்துக்கான கேளிக்கை நிகழ்ச்சியொன்று பிரத்தியேகமாக சர்க்கஸ் குள்ளர்களைக் கொண்டு நடத்தப்படுகையில் ஆஸ்காரையும் சேர்க்கின்றனர். அவனும் மேடையில் தோன்றி டமாரம் அடித்தும், கிறீச்சிட்டுக் கத்தி கண்ணாடி மது கோப்பைகளை உடைய செய்தும் மிகப் பெரிய கைத் தட்டல் ஆரவாரத்தைப் பெறுகிறான்.

ஓர் அழகிய குள்ளியின் உறவும் கிடைத்து நெருங்கிப் பழகி உடலுறவும் கொள்ளுகிறான். உலகப் போர் முடிவுக்கு வருகையில் பெர்லின் ரஸ்ய படைகளால் சூழப் படுகையில் ஆஸ்காரின் தந்தையும் குள்ளக் காதலியும் குண்டடிபட்டுச் சாகின்றனர். அவனது தந்தையின் சவ அடக்கத்தின்போது சவக்குழியில் மண்போடுகையில் தன் தகர டமாரத்தையும் குழிக்குள் எறிந்துவிட்டு இனி டமாரம் வேண்டாம் என்கிறான் ஆஸ்கார். ஆஸ்காரும் தாக்குதலில் அடிபட்டு முப்பது வயதையடைந்த நிலையில்தான் செய்யாத கொலையொன்றுக்காக கைதாகி மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறான். திரைப்படத்தில் ஆஸ்காராக நடித்திருக்கும் சிறுவன் டேவிட் பென்னெண்ட் David Bennent) அதி சிறப்பாக செய்திருக்கிறான். இயக்குனர் ஓல்கர் ஸ்க்லோன்டோர்ஃப் பல இடங்களில் முத்திரை பதித்திருக்கிறார்.

கடினமான கதையமைப்பு கொண்ட டின் ட்ரம் மிக எளிமையாக திரை வடிவம் பெற்றிருக்கிறது. படத்தின் உயரிய ஒளிப்பதிவை பல இடங்களில் வியக்க வைத்திருப்பவர் காமிரா கலைஞர் இகோர் லூத்தெர் படத்துக்கு மூவர் இசையமைத்திருக்கின்றனர். லோதெர் ப்ரூஹீனெ (Lother Bruhne) மாரிஸ் ஜேர் (Maurice Jarre) மற்றும் ஃப்ரீட்ரீச் மேயெர் (FreidrichMeyer) என்பவர்கள். இவர்களில் மாரிஸ் ஜேர் அமெரிக்க சினிமாவின் David Leen இயக்கிய பிரம்மாண்ட படங்கள் லாரன்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ ரயான்ஸ் டாட்டர், ஏபாஸேஜ் டு இண்டியா என்பனவற்றின் அரிய இசைக் கோர்வையை இயற்றியவர்.

உனக்கு என்னைத் தெரியாது. ஆனால் எனக்கு உன்னைத் தெரியும்” இது தான் 2006ல் வெளிவந்த மகத்தான ஜெர்மன் அரசியல் படம். லத்தீன் அமெரிக்க அரசியல் படங்கள், கோஸ்டர் காவ்ராவின் பிரெஞ்சு அரசியல் படங்கள், ஹங்கேரிய படங்கள் என்பவற்றுக்கு இணையான படம்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

2006இல் வெளியான மற்றவர்களின் வாழ்க்கைகள்” Lives of others எனும் ஜெர்மன் திரைப்படம் மிகச் சிறந்த அயல் மொழிப் படம் என்ற ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் பெற்ற ஒன்று. பெர்லின் சுவர் இடிக்கப்படுவதற்கு சிறிது காலம் முந்தி கிழக்கு ஜெர்மனியின் பொது வாழ்வு நிலை குறித்த திரைப்படம். வருடம் 1983. கிழக்கு பெர்லின் பகுதி. அரசியல் ரீதியாக, இப்படியுமிருந்தால், எப்படியிருந்திருக்கும்” என்று திரைக்கதை வடிவம் தந்து படத்தை அதி சிறப்பாக இயக்கிய ஃப்ளோரியன் ஹெங்கெல்வான் போன்னெர்ஸ்மார்க் (Florian Henckelvon Donnersmark) சிந்தித்திருக்கக்கூடும். மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதும்,

அந்தரங்கத்தை கவனிப்பதும் ஹிட்லரின் காலத்தில் பயங்கரமாக இருந்திருக்கிறது. ரோமானிய சாம்ராஜ்யத்தில் சீசருக்குப் பின் பல நகரங்களில் பாம்பி உட்பட ஒருவர் அந்தரங்கத்தை மற்றொருவர் ராஜீய ரீதியாக ஒட்டுக் கேட்டிருந்தது வரலாற்றில் கசியும் உண்மை. தங்கள் அதிகாரம் நீடிப்பதற்கும், இருத்தலுக்கும் புகழுக்கும் இடைஞ்சல், ஆபத்து என்று வரக்கூடுமோவென்று கொள்ளும் சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் அரசு இயந்திரமே தான் அவ்வாறு சந்தேகிக்கும் நபர்களின் பேச்சுமற்றும் அந்தரங்க வாழ்க்கையை ரகசியமாய் கவனிப்பதும் ஒட்டுக்கேட்பதும் அதைக் கொண்டு அரசு இயந்திரங்களை முடுக்கி சிறப்பு காவல்படை முதலியவற்றை ஏவி பல்வேறு சோதனைகள், கைது, விசாரணை, சித்திரவதை சிறை என மேற்கொள்ளுவதும் நிகழ்கிறது. மிக சமீபத்தில் இஸ்ரேல் நிறுவனம் தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்றதாகக் கருதப்படும் பயங்கர ஓட்டுக் கேட்கும் கருவி, பெகாசஸ்” பற்றி நம் நாட்டில் பலத்த சர்ச்சைகள், விவாதங்கள், நீதிமன்ற வழக்கு என்று போயிருக்கும் ஓட்டுக் கேட்கும் சமாச்சாரத்தின் ஒருவடிவம்தான் இந்த சிறந்த ஜெர்மன் திரைப்படம்.

ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி அசைவற்ற புன்னகையற்ற முகமும், தன்னை மற்றவர்களின் அன்றாட வாழ்க்கையின் அசைவுகளை, பேச்சை ஓட்டுக்கேட்க நியமித்த டூட்டியில் எந்நேரமும் தலையில் மாட்டிய ஹெட்ஃபோன் சகிதமாய் தோன்றுகிறார். அதே சமயம் இந்த போலீஸ்காரர் எந்த நிலையிலும் உணர்ச்சிவயப்பட்டுவிடலாகாது. 1983 ன் கிழக்கு பெர்லின் அரசின் ரகசிய போலீசான ஸ்டாசி (Stasi)யின் அமைப்பும் நடவடிக்கையும் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் அறிவதற்கு ஒரு சந்தர்ப்பமளிக்கிறது படம். மற்றபடி பிரஜைகள் சராசரி நல்ல வாழ்க்கையையே நடத்திக் கொண்டு போவதாயும் படம் தெரிவிக்கிறது.

இப்படத்தின் கதை ஒரு ஸ்டாஸி அதிகாரியை மையமாக்கிச் செல்லுவதுதான். ஜெர்டு வீஸ்லெர் ஒரு புகழ் பெற்ற ஜெர்மன் நாடக ஆசிரியர் ஜியோர்க் டிரேமன் (Georg Dreman) இவனது அழகிய காதலியும் புகழ் பெற்ற நாடக நடிகையுமானவள் கிறிஸ்டா மரியா சீலண்டு (Christa Maria Sieland) ஆசிரியரிடமிருந்து அரசுக்கு எதிரான விசயங்கள் இருக்கிறதாவென்று அவரையும், அவரது நடிகைக் காதலியையும் ஒட்டு கேட்கும் பணியில் அமர்த்தப்படுகிறான் வீஸ்லர். இவனுக்கு ஒரு பணிமனையை நாடகாசிரியன் டிரேமன் வசிக்கும் ஸ்விட்சுகளுக்குள்ளும், அறைகளின் சுவர்களிலும் அவன் இல்லாத நேரத்தில் வீட்டைத் திறந்து நிறைய ஓட்டுக் கேட்கும் மைக்ரோஃபோன்களை வைத்து அவற்றின் மூலம் ஒவ்வொரு பேச்சையும் விவாதங்களையும் அசைவுகளையும் அந்தரங்க காதல், உடலுறவு ஆகியவற்றையும் கேட்கவும் காணவும் முடியும் வகையில் அமைக்கப்பட்ட மைக்ரோ ஃபோன்களைத் தொடர்பு கொண்டு கவனிக்க ஒலி வாங்கிகளும் காணொளிக்கான டிவியும் மேல்மாடியிலுள்ள வீஸ்லரின் பணிமனையில் பொறுத்தப்படுகின்றன.

ஓட்டுக் கேட்கத் தொடங்கிய சில நாட்களில் அவ்விருவரிடமும் காணப்பட்ட அடிப்படை நாகரிகமான ஒழுக்கமும் மனிதத் தன்மையும் கண்டுவீஸ்லரால் பாராட்டமலிருக்க முடியவில்லை. ஆனால் இந்த திட்டத்தின் முழு நோக்கமும் வேறு. நாடகாசிரியர் டிரேமனுக்கு ஸ்டாசி ஒரு பெயரை ரகசியமாக லாஸ்லோ” என சூட்டி இந்த ஒட்டுக் கேட்கும் ஏற்பாட்டுக்கு, Operation laslo என அழைக்கிறது. இவை யாவும் கிழக்கு ஜெர்மனியின் கலாச்சார அமைச்சர் ப்ரூனோ ஹெம்ப் (Bruno Hempe)பின் கட்டளையின்படி கடத்தப்படுகிறது. மந்திரிக்கு நடிகை கிறிஸ்டாமீது ஆசை. அவளை நிரந்தரமாய் அடைய அவளது, காதலன், நாடகாசிரியர் டிரேமனை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் அமைச்சர் அதை ஸ்டாசி மூலம் செய்து முடிக்க நினைத்து இந்த ஓட்டுக் கேட்கும் வலையை விரிக்கிறார். இதனிடையில் இரவில் சாலையில் நடந்துபோகும் கிறிஸ்டாவை வற்புறுத்தி தன் காரில் ஏற வைத்து காரிலேயே வல்லுறவு கொள்கிறார் அமைச்சர். இதனால் அவள் போதை மருந்தை முயற்சிக்கிறாள்.

இந்த சமயம் நிஜமாகவே நாடகாசிரியர் ஸ்டாசியிடம் மாட்டுகிறார். கிழக்கு ஜெர்மனியரசின் சர்வாதிகாரி பிரஜைகள் மேற்கு ஜெர்மனியுடன் ஏதாவது விதத்தில் தொடர்பு கொண்டதாய் கூறி கடுமையான தண்டனை தருகிறது. இதனால் கிழக்கு ஜெர்மனியில் நிறைய பேர் தற்கொலை புரிந்து சாகிறார்கள். இதை அரசு காதில் போட்டுக் கொள்வதேயில்லை. ஸ்டாசியின் கொடுமை தாங்காது நிகழும் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இந்த தற்கொலை விவரத்தை மேற்கு ஜெர்மனியிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரையாக எழுதியனுப்புகிறான் நாடகாசிரியர் டிரேமன். இதற்கெல்லாம் முக்கியமான விசயம் நாடகாசிரியரின் நெருங்கிய அறிவு ஜீவி எழுத்தாளர் Hanser என்பவர் மேற்கு ஜெர்மனியில் நிகழ்ந்த இருந்த ஓர் உரை. அந்த உரையை விரும்பாத கிழக்கு ஜெர்மனி அரசு அவரது பயணத்தைத் தடை செய்வதால் மனமொடிந்த அவர் தற்கொலை செய்து கொள்ளுகிறார். இது அந்த கட்டுரையின் மையமாகிறது. கட்டுரையை ரகசியமாய் அனுப்ப சிவப்புநிற நாடாவில் டைப் செய்ய வகை செய்த வெளிநாட்டு டைப்ரைட்டிங் மிசின் ஒரு முக்கிய தடயமாகிறது. அந்த சின்ன மிசினை நாடகாசிரியன் தன் வீட்டு தரையில் ஒளித்து வைப்பதை காதலி கிறிஸ்டாவும் பார்க்கிறாள். இப்போது கிறிஸ்டாவை ஸ்டாசி குறிவைக்கிறது. அவளை அழைத்து வந்து தனியறையில் வீஸ்லெர் விசாரிக்கிறார். அவரது கேள்விகளில் சிக்குண்ட நடிகை அந்த தட்டெழுத்து இயந்திரம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சொல்லிவிடவும் அவளைவிட்டு விடும் ஸ்டாசி மீண்டும் டிரேமனின் வீட்டை சோதிக்கிறது. கிறிஸ்டா குறிப்பிட்ட இடத்தில் தரையில் பலகையை அகற்றிப் பார்க்க அங்கு மிஷினில்லை.

அந்த சிறிய இயந்திரம் அங்கு இருந்ததற்கான ஒரு தடயமுமில்லை. மன்னிக்க கோரி விட்டுஸ்டாசி குழு வெளியேறுகையில் வீஸ்லெர் ஓரிடத்தில் நின்று கிறிஸ்டா வெளியேறி நடப்பதை கவனிக்கிறார். தூரத்தில் நிற்கும் சிறு லாரியையும் கவனிக்கிறார். திடீரென கிளம்பி வேகமாய் வந்த அந்த வண்டி கிறிஸ்டாவை இடித்துத் தள்ளுகிறது. அவள் அந்த இடத்தில் மரணமடைகிறாள். அது விபத்து என்றாகிறது. மறுவருடம் சோவியத் யூனியன் உடைபடுகிறது. பெர்லின் சுவர் தகர்க்கப்படுகிறது. ஜெர்மனி ஒன்றாக இணைக்கப்படும் கட்டம். கிழக்கு ஜெர்மனியின் கலாச்சார மந்திரியாயிருந்த ப்ரூனோ ஹெம்ப் நாடகாசிரியரை இறுதிச் சந்திப்பாக சந்திக்கும் காட்சியும் நெகிழ்ச்சியானது. ஓட்டுக் கேட்கும் பணியிலமர்த்தப்பட்ட போலீஸ் அதிகாரி வீஸ்லெர், இந்த முழு நாடகமும், கலாச்சார அமைச்சர் நாடக நடிகை கிறிஸ்டா மீது கொண்ட இச்சையால், அவளது காதலன் நாடகாசிரியர் டிரேமனை கண்காணித்து அவன் மீது ஏதாவது தேசதுரோக குற்றத்தை சுமத்தி ஒழித்துக் கட்ட பின்னப்பட்ட ஒன்று என்பதை அறிய வருகையில் தன் உயர் அதிகாரியிடம் வேதனையோடு கேட்கிறார், இதற்காகவோ நம்மை இந்த ஆபரேசனில் அமர்த்தினார்? என்று, வீஸ்லர் நடைபாதையில் மெதுவாக நடந்து போகையில் கண்ணாடிக்குள் ஒரு விளம்பரத்தைக் கண்டு நிற்கிறார். அது நாடகாசிரியரின் Georg Dreyman-ன் பெரிய கண்ணப்படம், அவன் எழுதியிருக்கும் புதிய நூல் ஒன்றுக்கான விளம்பரம். அது அவனது நினைவலைகளைக் கொண்ட புதிய வெளியீடு. அந்த இடம் புகழ் பெற்ற புத்தக நிலையம். வீஸ்லெர் உள்ளே நுழைந்து அந்தப் புத்தகம் தனக்கு வேண்டுமெனக் கேட்டு அதற்கான விலை மதிப்பைத் தருகிறார். கடைக்காரர் கேட்கிறார், பரிசுக்கான பொட்டலமாகக் கட்டித்தரவா? என்று இல்லை, என் சொந்த உபயோகத்துக்குத் தான். அப்படியே தாருங்கள்,” என்கிறார் வீஸ்லெர் படம் முடிகிறது.

ஜெர்டு வீஸ்லெராக உயரிய நடிப்பைத் தருபவர் உக்ரிச் முஹே (Ulrich mijhe) நாடகாசிரியர் ஜியார்க் ட்ரேமனாக செபாஸ்டியன் கோச் கிறிஸ்டா மரியா சீலண்டாக மார்டினா ஜெடெக்கும் (Martina Gedek) சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கலாச்சார அமைச்சராக தாமஸ் தியெம் அப்பழுக்கின்றி நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப் பதிவு ஒப்பற்றது. ஒவ்வொரு உருவமும் பின்னணியோடு கலந்து நிற்கிறது. ஹேகன் போக்டான்ஸ்கி யின் காமிரா அசத்தலானது.

Or Annadukatchiyin Selam Book written by vittal Rao Bookreview by Pavannan. நூல் மதிப்புரை – விட்டல்ராவின் ஓர் அன்னாடு காச்சியின் சேலம் – பாவண்ணன்

நூல் மதிப்புரை – விட்டல்ராவின் ஓர் அன்னாடு காச்சியின் சேலம் – பாவண்ணன்




நம் நாடு விடுதலையடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நம் நகரங்களும் கிராமங்களும் அப்போது இருந்ததைவிட இன்று பல மாற்றங்களுடன் வளர்ந்துவிட்டன. நம் வாழ்க்கைச்சூழலிலும் கருத்துநிலைகளிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய புகைப்படத் தொகுப்பையோ அல்லது பழைய நாட்குறிப்பையோ அல்லது பழைய புத்தகத்தையோ பார்க்கும்போது, அந்த மாற்றங்கள் துல்லியமாகப் புலப்படுவதை உணரலாம்.

இன்று பெருநகர மாநகராட்சியாக உயர்த்தப்பட்டிருக்கும் நகரம் சேலம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக ஐந்தாவது இடத்தில் அமைந்திருக்கும் முக்கியமான நகரம். இது சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ளது. சேர + அரையன் என்பதன் திரிபே சேர்வராயன் ஆகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். ஏத்தாப்பூரில் கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டில் இந்த நகரம் சாலிய சேரமண்டலம்  என்றே குறிப்பிடுகிறது. தொடக்கத்தில் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, பிறகு மதுரைக்கும்  மைசூருக்கும் இடையில் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஹைதர் அலியின் கட்டுப்பாட்டுக்குச் சென்று, இறுதியாக கிளைவ்  காலத்தில் ஆங்கிலேயர் வசமாகிவிட்டது. அவர்கள் அந்த நகரத்தில் கோட்டை கட்டி இராணுவத்தளமாக மாற்றிக்கொண்டனர். 

பொதுவாக ஒரு நகரத்தின் கதையைச் சொல்பவர்கள் இப்படி வரலாற்றுத் தரவுகளை இணைத்தும் தொகுத்தும் சொல்வதுதான் வழக்கம். ஒரு நகரத்தின் வரலாற்றைப் புறவயமாகப் புரிந்துகொள்ள அது ஒரு வழிமுறை. எளிய நகர மனிதர்களின் அன்றாட வாழ்க்கைச்சித்திரங்கள் வழியாகப் பார்ப்பது இன்னொரு வழிமுறை. ஆய்வாளர்கள் முதல் வழிமுறையைப் பின்பற்றும்போது, எழுத்தாளர்களுக்கு இரண்டாவது வழிமுறை உகந்ததாக உள்ளது. எழுத்தாளர்கள் தீட்டிக் காட்டும் மனிதர்கள் இப்போது மறைந்துபோயிருக்கலாம். அந்த இடங்களும் உருமாறிப் போயிருக்கலாம். அந்த வாழ்க்கை முறையே வழக்கொழிந்துபோயிருக்கலாம். ஆனால் எழுத்தாளனின் ஆவணத்தில் அவர்கள் இடம்பெற்றவுடன் அவர்கள் காலத்தின் அடையாளமாக மாறிவிடுகிறார்கள். 

விட்டல்ராவ் புதிதாக எழுதி சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் புத்தகத்தை தாராளமாக நாம் ஒரு சமூக ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம். நாற்பதுகளை ஒட்டிய சேலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாம் இந்தப் புத்தகத்தில் காணமுடியும். ஏராளமான எளியவர்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பல இடங்களில் ஒரு சிறுவனாக அன்று தான் கண்ட மனிதர்களையும் காட்சிகளையும் ஒரு புனைகதைக்கே உரிய மொழியில் அழகாகச் சித்தரித்துள்ளார் விட்டல்ராவ்.  இந்தப்  பார்வைக்கோணம் இந்தப் புத்தகத்துக்கு ஒருவித தனித்துவத்தை அளிக்கிறது. ஒரு பக்கம் அவருடைய தன்வரலாற்றின் சித்திரங்களையும் இன்னொரு பக்கம் நகரம் சார்ந்த கதைகளையும் நம்மால் பார்க்கமுடிகிறது. 

இடமாற்றம் தொடர்பான அரசு ஆணை காரணமாக மனைவி, பிள்ளைகளோடு சேலத்துக்கு வருகிறார் ஒருவர். சேலம் அக்குடும்பத்துக்கு முற்றிலும் புதிய நகரம். அலுவலக வழியில் அறிமுகமான ஒரே ஒரு நண்பர் மட்டுமே சேலத்தில் அவருக்குத் தெரிந்த ஒரே முகம். அவர் ஊட்டிய தைரியத்தில்தான் அக்குடும்பம் சேலத்துக்கு வந்து சேர்கிறது. அப்போது சேலத்தில் பெரிய சத்திரங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு எட்டணா வாடகைக்கு அங்கு அறைகள் கிடைக்கின்றன. தொடக்கத்தில் அந்தச் சத்திரத்தில் சில நாட்கள் தங்கியிருக்க ஏற்பாடு செய்கிறார்  நண்பர். பிற்பாடு ஊருக்குள் வாடகைக்கு வீடு கிடைத்ததும் குடும்பம் அங்கே குடிபோகிறது. ஏற்கனவே ஒரு கோவில் வழிபாட்டுக்காக அப்படி வந்து சத்திரத்தில் தங்கிச் சென்ற அனுபவம் இருந்ததால் அந்தக் குடும்பம் தைரியமாக சேலத்துக்கு வந்து சேர்கிறது. அந்தக் குடும்பத்தில் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனொருவன் இருக்கிறான். அவன் பார்வை வழியாகவே சேலம் அனுபவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. மலை, கோவில், கடைத்தெரு, திரையரங்குகள், தெருக்கள் திருவிழா அனைத்தும் அச்சிறுவனின் நினைவுத்தொகுப்பாக உள்ளன. 

ஒரு காலத்தில் நகரத்தின் மையத்தில் ரயில் தண்டவாளப்பாதைகள் சாலையின் குறுக்கே சென்றன. ரயில்கள் நகரத்துக்குள் வரும்போதும் நகரைவிட்டுச் செல்லும்போதும் சாலை மூடப்படுவதால் ஒவ்வொர் நாளும் இரு பக்கங்களிலும் வாகனங்கள் முன்னேறிச் செல்லமுடியாமல் நின்று தடுமாறின.  போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக தண்டவாளப்பாதைகளின் மேல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது. வாகனங்கள் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் நடந்து செல்லும் மனிதர்களுக்கு புதிதாக பிரச்சினை உருவானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏறி இறங்கவேண்டியிருந்தது. விளையாட்டாகவும் வேதனயோடும் அவர்கள் அந்தப் பாலத்தை ‘ஏத்துமதி இறக்குமதி’ என்ற சொல்லால் குறிப்பிடத் தொடங்கினார்கள். கசப்பை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அச்சொல் மெல்ல மெல்ல மக்களிடையில் வேகமாகப் பரவி அந்த அடைமொழியே அந்த இடத்துக்குரிய அடையாளமாக மாறிவிட்டது. “ஏத்துமதி எறக்குமதிகிட்ட வந்து நில்லு” “ஏத்துமதி எறக்குமதிகிட்ட வண்டிய நிறுத்து” என்று சொல்லும் அளவுக்கு அனைவருடைய நாவிலும் படிந்து ஒரு வரலாற்றுச் சொல்லாகிவிட்டது.

இன்னொரு சம்பவம். திருவிழாவுக்குச் சென்ற குடும்பம் கோயிலிலிருந்து வீட்டுக்கு குதிரைவண்டியில் திரும்பிவருகிறது. வண்டிக்குள் ஏறியவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், வண்டிக்காரரால் வண்டியைச் சரியாக ஓட்டமுடியவில்லை. முன்பாரம் அதிகமாக இருக்கும்போது பின்னால் செல்லும்படியும் பின்பாரம் அதிகமாக இருக்கும்போது முன்பக்கம் நகரும்படியும்  மாறிமாறிச் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டுகிறார் வண்டிக்காரர்.  பிரயாணிகளும் அதற்கு இசைவாக மாறிமாறி உட்கார்கிறார்கள். அவர்களும் வண்டியில் ஏறி அனுபவம் இல்லாதவர்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் வண்டிக்காரரின் கட்டுப்பாட்டை மீறி வண்டி குடைசாய்ந்துவிடுகிறது. பயணிகள் கீழே விழுந்துவிடுகிறார்கள். ஒரு கதைத்துணுக்கு போல சித்தரிக்கப்பட்டிருக்கும் இக்காட்சி நாற்பதுகளுக்கே உரிய சித்திரம்.

திருவிழாவையும் பொருட்காட்சியையும் முன்னிட்டு ஊருக்கு வரும் சர்க்கஸ் ஊர் மைதானத்தில் முகாமிடுகிறது. ஊருக்குள் சர்க்கஸ் நடக்கப் போகிறது என்பதை ஊர்மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக விலங்குகளை ஏற்றிய வண்டிகளை ஊரின் முக்கியத் தெருக்கள் வழியாக ஓட்டிச் செல்கிறார்கள். யானைகளும் குதிரைகளும் நடந்துவருகின்றன. சர்க்கஸ் ஊழியர்கள் தனியாக வண்டியில் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி வருகிறார்கள். இந்திப்பாடலையும் மேனாட்டு இசைப்பாடலையும் பாடியபடி சர்க்கஸ் பேண்ட் குழுவும் வருகிறது. சர்க்கஸ் குள்ளர்களும் பஃபூன்களும் ஆரவாரத்தோடு பாட்டுப் பாடியபடி வருகிறார்கள். விசித்திரமான அமைப்பிலிருக்கும் பலவண்ணக் குல்லாய்களை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். பின்னாலேயே ஓடிவரும் சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் பாடுகிறார்கள்.

அப்பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பிள்ளைகளும் குதித்துக்கொண்டே திரும்பப் பாடுகிறார்கள். ‘ஒத்தைக்குல்லா சந்திலே ரெட்டைக்குல்லா முக்கிலோ சேலம் சிவப்பு, செவ்வாப்பேட்டை கருப்பு, ஒடைச்சா பருப்பு, தின்னா கசப்பு’ என்னும் பாடல் அவர்கள் நடந்து செல்லும்  திசையிலெல்லாம் ஒலிக்கிறது. ஊரே திரண்டு சர்க்கஸ் பார்க்கப் போகிறது. சர்க்கஸ் முடிந்ததும் மக்கள் வெளியேறும் சமயத்தில் ஒரு புதுவிதமான இசை ஒலிக்கிறது. ”கதம் கதம் படாயே ஜா, படாயே ஜா குஷி கெ கீதெ காயா ஜா காயா ஜா” என்ற வித்தியாசமான இசை அனைவரையும் ஈர்க்கிறது. அனைவரும் அப்பாடலை ஆர்வத்துடன் நின்று கேட்கிறார்கள். பாடல் விவரங்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மியின் நடைப்பயிற்சிக்குரிய பாட்டு அது. நேதாஜியின் ராணுவப்பாடல் இங்கேயும் பொதுமக்கள் கேட்கும் வகையில் பாடப்பட்டது என்பதற்கு விட்டல்ராவ் சித்தரித்திருக்கும் இக்காட்சியே ஒரு வரலாற்றுச் சான்று.

சுதந்திரத்துக்குப் பிறகு நெசவாளர்கள் வாழ்க்கையை வறுமை சூழ்ந்தது. நெசவுக்குத் தேவையான நூல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நெய்த துணிகள் விற்பனையாகவில்லை. கூலிக்கு நெய்வதற்குக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. குடும்பம் குடும்பமாக நெசவாளர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி சேலத்தை நோக்கி வந்தனர். கஞ்சிக்காக பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் செல்லும் நிலை உருவானது. இளம்வயதில் தன் வீட்டைத் தேடி வந்த ஒரு நெசவாளர் குடும்பத்தைப்பற்றிய உருக்கமான சித்திரமொன்றை விட்டல்ராவ் ஒரு கட்டுரையில் தீட்டியிருக்கிறார்.

வாசலில் வந்து நின்ற குடும்பம் வயிற்றையும் பச்சைக்குழந்தையையும் தொட்டுக் காட்டி உதவி கேட்கிறது. ”எங்க குடும்பத்திலயும் ஏழு பசங்க இருக்குது. நாங்களும் கஷ்டத்திலதான் இருக்கிறோம்” என்று தெரிவிக்கிறார் அம்மா. ”வடிச்ச கஞ்சியாவது குடு தாயி” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் அவர்கள். தொடர்ந்து அன்று இரவு திண்ணையில் படுத்துறங்க அனுமதி கேட்கிறார்கள். அக்கா அதை அனுமதிக்காமல் அனுப்பிவிட முயற்சி செய்கிறாள். ஆனால் அப்பா குறுக்கிட்டு அக்காவைத் தடுக்கிறார். தங்கிக்கொள்ள அனுமதி கொடுக்கிறார். ஓர் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரும் குவளையும் கொண்டுவந்து அவர்கள் அருகில் வைத்துவிட்டுச் செல்கிறார். அக்காவுக்கு அதில் உடன்பாடில்லை.

அவர்கள் இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு சென்றுவிடக் கூடும் என்று அக்கா விவாதிக்கிறாள். யாரையும் அப்படி அவநம்பிக்கையுடன் பார்க்கக் கூடாது எனு எடுத்துச் சொல்கிறார் அப்பா. பஞ்சத்தின் காரணமாகத்தான் அவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார்களே தவிர, அவர்கள் எப்பொருளையும் எடுத்துச் செல்லும் பழக்கமுள்ளவர்கள் இல்லை என்று அவளுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்கிறார். விடிந்ததும் குடும்பமே எழுந்துவந்து வாசல் திண்ணையைப் பார்க்கிறது. வந்தவர்கள் திண்ணையில் இல்லை. காலையிலேயே எழுந்து சென்றுவிட்டார்கள். அந்தத் தண்ணீர்ச் செம்பும் குவளையும் கூட வைத்த இடத்தில் வைத்த நிலையிலேயே இருக்கிறது. ஒருவாய் தண்ணீர் கூட அந்தச் செம்பிலிருந்து யாரும் எடுத்துப் பருகவில்லை. அக்காட்சியைப் படிக்கும்போது மனம் கரைந்துபோகிறது.

சேலத்தில் ஓரியண்டல் தியேட்டரும் நியூ சினிமா தியேட்டரும் அந்தக் காலத்தில் மிகப்பெரிய திரையரங்குகள். நூறு நாள் ஓடிய பல சாதனைப்படங்கள் அந்தத் தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கின்றன. இப்போது இரண்டு அரங்குகளும் இல்லை. எப்போதோ இடிக்கப்பட்டு வணிகவளாகங்களாக மாறிவிட்டன.

ஹிண்டு மாடர்ன் கஃபேயும் தேவபிரகாஷ் விடுதியும் நாற்பதுகளில் சேலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இடங்கள். இவையிரண்டும் ராகவேந்திர ராவ் என்ற எளிய மனிதர் உருவாக்கியவை. ஒரு சமூக நாவலைப்போன்ற அவருடைய வாழ்க்கைச்சம்பவங்கள் படித்த கணத்திலேயே நெஞ்சில் இடம்பிடித்துவிட்டன. மூத்த மகனுக்கு தான் நடத்திய ஓட்டலை அளிக்கும் தந்தையார் இளையமகனான ராகவேந்திர ராவிடம் ஐயாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து பிழைக்க வழி தேடிக்கொள்ளும்படி அனுப்பிவைத்துவிட்டார். பம்பாய் பக்கம் சென்ற ராவ் சில ஆண்டுகள் பல இடங்களில் அலைந்து பலவிதமான இனிப்பு வகைகளையும் தோசை வகைகளையும் செய்வதற்குக் கற்றுத் தேர்ந்து சிறந்த சமையல்கலைஞராக உருவானார். 

உடனே சேலத்துக்குத் திரும்பி கையிலிருக்கும் பணத்தை முதலீடாகப் போட்டு சின்ன ஓட்டலொன்றை முதலில் தொடங்கினார். முதலாளியாகவும் தொழிலாளியாகவும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். அவர் கடையின் சிற்றுண்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் தாமாகவே அமைந்தார்கள். வருமானம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகியது.  அடுத்த நடவடிக்கையாக அவர் நகரத்திலேயே ஒரு நல்ல இடத்தைப் பார்த்து புதிதாக வேறொரு ஓட்டலைத் தொடங்கினார். சிறிது காலத்துக்குப் பிறகு, ஓட்டலுக்குப் பக்கத்தில் கோயம்பத்தூர் லாட்ஜை போக்கியத்துக்கு எடுத்து நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. உடனே அதை எடுத்து ’ஹிண்டு மாடர்ன் கஃபே’ என்று பெயர் மாற்றி வெற்றிகரமாக நடத்தினார். போர்டிங் அண்ட் லாட்ஜிங் அவருக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதித்துக்கொடுத்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்க வந்த நடிகநடிகையர் அனைவரும் அங்கேயே தங்கியதால் விரைவிலேயே பிரபலமானது. 

பக்கத்தில் விற்பனைக்கு வந்த இடத்தை வாங்கி புதியதொரு கட்டடத்தை சொந்தமாகவே கட்டியெழுப்பி விடுதியை அங்கே மாற்றினார். அவர் வருமானம் பெருகிக்கொண்டே சென்றது. உடனே திரைப்படங்களை வாங்கி விநியோகிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். குளிர்சாதன வசதியோடு தேவபிரகாஷ் என்னும் விடுதியை உருவாக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தினார். செர்ரி ரோடில் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவர் பெயரே பெரிய அடையாளமாக மாறியது. தொடங்கியதில் இருந்து ஏறுமுகமாக அமைந்த அவருடைய வாழ்க்கை ஒரு தொன்மக்கதையைப்போல அமைந்திருக்கிறது. ஓர் எளிய மனிதன் வசதி மிக்க ஆளுமையாக வளர்ச்சி பெற்று ஒரு நகரத்தின் முகமாக மாறுவது என்பது சாதாரண விஷயமல்ல.

செவ்வாய்ப்பேட்டையில் செளராஷ்டிர மொழியைப் பேசும் நெசவாளர்கள் ஆண்டுதோறும் நடத்திய இசைவிழா, அங்கு நடைபெற்ற நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதசுரக்கச்சேரி, சேலம் ஜெயலட்சுமியின் தமிழிசைக்கச்சேரி, பித்துக்குளி முருகதாஸின் பஜனையிசை ஆகிய செய்திகளைப் படிக்கும்போது, அவரோடு சேர்ந்து நாமும் அந்த இசையரங்கின் வாசலில் நிற்பதைப்போலவே உள்ளது. ஊற்றுப்பேனா பழுது பார்ப்பவர்களைப் பற்றிய பகுதியைப் படிக்கும்போது, ஊற்றுப்பேனாவே வழக்கொழிந்துவிட்ட இக்காலத்தில் ஒருவித நினைவேக்கத்தை எழுப்புகிறது. ஒருவகையில் இத்தொகுதியில் உள்ள பன்னிரண்டு கட்டுரைகளையும் சேலம்வாழ் நினைவுகள் என்று குறிப்பிடலாம். மனிதர்களைப் பேசுவதன் வழியாக இத்தொகுதி நகரத்தைப்பற்றிப் பேசுகிறது. 

நூல்: ஓர் அன்னாடு காச்சியின் சேலம்
ஆசிரியர்: விட்டல்ராவ்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை. ரூ.150