தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்? - Why is the water supplied to Chitlapakkam areas of Tambaram unfit for use? -https://bookday.in/

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?   தாம்பரம் குடியிருப்பு வாசிகள், தங்களது வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் மனிதர்கள் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் மலத்தில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். குடிநீரில்…
சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார்

சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார்

  செய்யறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும்பாலான துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் முன்பை விட வேகமாகவும் பயனளிப்பதாகவும் பரந்த அளவில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது. செய்யறிவு தொழில்நுட்பம் உயிரியல் துறைகளையும் ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்கிறது. மனித வாழ்க்கையுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. இதனால் சமூகத்திலும்…
thodar 22 : sanmakaalaa sutrusuzhal savaalgal - prof ram manohar தொடர் 22: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 22: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

ஆலைகளின் அதிக நீர் பயன்பாடு! அறியாத நம் மக்கள் படும் பாடு! சமீபத்தில், கோடை கால நாட்களில், ஒரு சம்பவம் நினைவு! நான் தெருவில் நடந்து செல்லும்போது கண்ட காட்சி, பல்வேறு எண்ணங்களை என்னுள்ளே ஏற்படுத்தின அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.…
மழையில் நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது சிறு வயதில் நனையாதே யென்று கையை பிடித்து உள்ளே அழைத்து தன் மாராப்பு துணியால் ‌ தலை துவட்டி விட்ட அம்மாவின் பழைய நினைவின் துளிகள் ,

நினைவு மழை கவிதை கவிஞர் சக்தி ninaivu mazhai kavitha sakthi


மழையில்
நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது
சிறு வயதில்
நனையாதே யென்று
கையை பிடித்து
உள்ளே அழைத்து
தன் மாராப்பு துணியால் ‌
தலை துவட்டி விட்ட
அம்மாவின் பழைய
நினைவின் துளிகள் ,
பரக்கத் சிறுகதை – மு.அராபத் உமர்

பரக்கத் சிறுகதை – மு.அராபத் உமர்




”எக்கா….. ஜன்னத்தக்கா…. இங்க வந்து பாரு ஓ மகே செஞ்சுருக்க காரியத்த….” என்று தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டே சத்தம் போட்டாள் பேகம். பெரிய இரண்டு தெருக்களை இணைக்கும் சந்தில் தெருக்குழாய் அமைந்திருந்தது. சிறிது சிறிதாக நான்கு ஐந்து முட்டுச் சந்துகளும், அடர்த்தியாக வீடுகளும் அங்கிருந்தன. அந்த ஊரிலேயே முதன் முதலில் அவர்களின் சந்துக்கு தான் அடிகுழாய் போட்டார்கள் என்று புதிதாக வருபவர்களிடம் பெருமை பேசுவார்கள் அப்பகுதி மக்கள்.

அதிகமாக அந்த தெருவில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்காரர்களாகவே இருந்தனர். இரண்டு மூன்று அடுக்கு மாடி வீடுகளும், நிறைய குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் இருந்தன. அதில் ஒரு பெரிய காம்பவுண்டு வீடும் இருந்தது. அந்த தெருவில் ஜன்னத் கணவன் இன்றி ஒரு மகனுடன் ஒரு சிறிய குடிசை வீட்டில் இருந்தார். ஜன்னத்திற்கு ஒரு கண்ணில் பூவிழுந்தது என்று கூறுவார்கள். அன்று வெள்ளிக்கிழமை காலையில் தெருக்குழாயில் தண்ணீர் வந்து விட்டது. பெண்கள் காலை வேலைகளைப் பார்த்துக்கொண்டே தண்ணீர் பிடிப்பது என்பதே சிரமமான வேலை. அதிலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் இவை நடந்தால்…

“நாசமா பேறவே…. எந்த நேரத்துல தண்ணிவிடனும்ன்னு தெரியாதா.. பொசகெட்டவே” இன்னும் திட்டுவதற்கு என்ன என்ன வார்த்தைகள் உள்ளதோ அனைத்தையும் பெண்களிடம் இருந்து கேட்கலாம், தெருக்குழாய்களில் தண்ணீர் வரும் போது.

“ஆமாடி… அவே…. நாசமா போனா பத்து நாளைக்கு விடுற தண்ணியும் விடமாட்டே. கொடம் நெறஞ்சுருச்சு மூடிட்டு தூக்கிட்டுப்போ..” என்றாள் பக்கத்தில் நிற்கும் பெண் ஒருத்தி. இவ்வளவு பரபரப்பிலேயும் ஜன்னத்தின் மகனைப் பார்த்தவுடன் சத்தம் குடுத்தாள் பேகம்.

பேகத்தின் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் ஜன்னத். மனதிற்குள் ஏதேதோ ஓடின ”அவனுக்கு தண்ணி போடும் பழக்கம் இல்லையே. அத எங்கினையும் பழகிட்டானா….” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே வெளியில் வந்தாள். அந்த சந்தின் துவக்கத்திலேயே அவனையும், உடன் ஒரு பெண்ணையும் நிற்க வைத்திருந்தனர். அவனைச் சுற்றி பெண்கள் கூடிவிட்டனர். ஜன்னத்திற்கு ஒரு கண்ணில்தான் பார்வை என்பதால் பதறிய நிலையிலேயே அருகில் போனாள். ஜன்னத் பார்ப்பதற்கு குட்டையாக இருந்தாலும், உழைத்து உழைத்து இறுகிய உடல். மகன் நிஜாம் லாரியில் டிரைவராக வேலை செய்கிறான். ஆந்திராவுக்கு அடிக்கடி லாரியில் போனவன் அங்குள்ள பெண்ணை விரும்பி தன்னுடன் அழைத்து வந்துவிட்டான். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவள். ஒல்லியான உடல் வாகு. வெள்ளைநிறம், சுருட்டை முடி. பார்த்த உடன் ஈர்க்கும் முக அமைப்பு. நேர் வாகு எடுத்து பின்னலிட்டிருந்த சடை. இடுப்புவரை நீளமிருந்தது. புடவையை தலையில் பேட்டு அவனுடன் நின்றிருந்தாள். இதற்கு நேர் எதிரானவன் நிஜாம். நிஜாமின் மீது கொண்ட அதீத அன்பினால் அவனுடன் வாழ ஆசைப்பட்டு வந்துவிட்டாள். தமிழ் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தாள் அந்த பெண். லாரியில் இருந்து இறங்கும் நாள் என்று எதிர் பார்த்து காத்திருந்த ஜன்னத்திற்கு அந்த நிகழ்வு அதிர்வை ஏற்படுத்தியது.

”அடப் பாவி யாருஞ் செய்யாத காரியத்த, ஏண்டா இப்டி ஏ தலையில கல்லத்தூக்கி போட்ட… பாவிப்பயலே…. எந்தக் காட்டுச் சிறுக்கியோ… எங்க இருந்துடா இவள இழுத்துட்டு வந்த ” என்று அழுது கொண்டே அவனை அடித்தாள் ஜன்னத்.

“ம்ம்மா… நல்ல புள்ளமா… எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதேம்மா… அவளுக்கு யாருமில்லமா, நம்மாளுகதே…” என்று கெஞ்சும் தொனியில் அவன் சொல்லி முடிப்பதற்குள் ஜன்னத் துவங்கினாள்.

“அட நாசமா பேற பயலே, யாருமில்லாத அனாதச் சிறுக்கிதான ஒனக்கு கிடச்சுச்சு… அதுவு……மில்லாம மூஞ்சியப் பாத்தா நம்மாளுக மாறியா இருக்கு….காஃபிரு {மற்ற மதத்தினரை அவ்வாறு கூறுவார்கள்} கூப்ட்டு நடுமனைல ஏத்தவா” என்று கத்திக்கொண்டே அவளையும் கன்னத்தில் இரண்டு அறை அறைந்தாள் ஜன்னத். 

“ம்ம்ம்மா…… காஃபிரு இல்ல உருது பேசுற முஸ்லிதே” என்றான் நிஜாம்.

“துலுக்க பய… மாதுரியடா பேசுர….. காஃபிருகலோட சேந்து சேந்து எப்டி பேசுறே பாரு” என்று கோபத்திலும், பதட்டத்திலும் என்ன பேசுவதென்றே தெரியாமல் புலம்பினாள் ஜன்னத்.

சத்தம் கேட்டு பெரிய வீட்டு அத்தா வெளியில் வந்தார். அவர் பெயர் கான் முகமது என்றாலும் அந்த தெருவில் பெரிய வீட்டுஅத்தா என்றே அழைப்பார்கள். அவர் பேச்சிற்கு மறுப்பு கூற மாட்டார்கள். அனைவருக்கும் அவர்மேல் தனி மரியாதை உண்டு. உதவி என்று கேட்பதற்கு முன்பே அவர்களின் நிலை புரிந்து உதவி செய்வார். அவரின் சொந்த வீடுதான் அந்த காம்பவுண்டு வீடு. மிகவும் குறைந்த பணத்திற்கு வாடகைக்கு விடுவார். அங்கு வாடகைக்கு வந்து தங்குபவர்கள் வெளியூர்களுக்கு சென்றால் மட்டுமே மாறிப்போவார்கள்.

“ஏ…. ஜன்னத்து ஏ…. என்ன சத்தம் போட்டுட்டு இருக்க” என்றார்.

“அத்தா… இவஞ் செஞ்ருக்க காரியத்த பாத்திங்களா..” என்று கதறினாள் ஜன்னத்.

“ம்ம்ம்ம்… கேட்டுக்கிட்டுதே இருந்தேன். அவனுக்கு புடிச்ச புள்ளைய கட்டலாம்ன்னு கூப்ட்டு வந்துருக்கான். முஸ்லிம் புள்ள தான. என்ன நாம தமிழ் பேசுவோம்… அவங்க உருது பேசுவாங்க… அவ்வளவுதேன. அவே விருப்பத்த ஒண்ட்ட தான சொல்றேன். எங்குனையும் போய் கல்யாணம் பன்னியா கூட்டிட்டு வந்துட்டான்.. அத்தா, அம்மா இல்லாத புள்ள ஜன்னத்து ஒன்னிய அண்டி இருந்துக்கும்… வீட்டுக்கு கூப்ட்டு போ. ஆக வேண்டியதப் பாரு” என்றார்.

“கல்யாணோம் என்னாண்டு முடுச்சானோ வீட்ல என்னான்டு ஏத்துறதுத்தா”  கொஞ்சம் நிதானித்துக்கொண்டு  ஜன்னத் கேட்டாள். அதற்குள் முந்தரிக் கொட்டையாய் முந்தினான் நிஜாம்

“இன்னுங் கல்யாணம் முடிக்கலத்தா… ”

”கல்யாணம் முடிக்காம சின்னப்பிள்ளையை வீட்ல வைக்க முடியாது நிஜாமு… இன்னக்கி சாந்தரோ மகரிபுக்கு அப்புறோம் கல்யாணம் முடிச்சர்லாம்… நா ஜமாத்துல பேசிர்றேன்” என்றார் கான் முகமது. 

பேகம் முன் வந்து  “கல்யாணம் முடியுற வரைக்கும் பொண்ணு எங்க வீட்ல இருக்கட்டும்” என்றாள். மாலையில் மகரிபு தொழுது முடித்து வீட்டிற்கு வரும்போது கான் முகமது ஜமாத்துடன் வந்தார். 

“பொண்ணு பேரு என்ன நிஜாமு… அதாவது தெரியுமா…?” கான் சிரித்துக் கொண்டே கேட்டார். “வச்ச பேரு நொக்கத்து…. நான் பரக்கத்துன்னு கூப்டுவேன்” என்றதும் கான் சிரித்துக்கொண்டே 

“பரக்கத்….. நல்ல பேரு …. அதுவே இருக்கட்டும்… நம்ம பக்கம் நொக்கத்துண்ணா புரியாது” என்றார். அனைவரின் சம்மதத்துடன் கல்யாணம் நடந்து முடிந்தது. ஜன்னத் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானமானார்.

“அத்தா… ஒன்னு சொல்லனு” தயக்கத்துடன் ஜன்னத் கூறினாள்.

“ என்ன… சொல்லு” என்றார் கான்.

“வீடு சின்னது அங்க தங்க சவுரியம் பத்தாது… அதுனால தனியா வீடு பாத்து வச்சுறலாம்ன்னு யோசிக்கிறேன்” என்று இழுத்தாள்.

“ம்ம்ம்… புரியுதும்மா…. நம்ம காம்பவுண்டு வீடுகல்ல ஒன்னுகாலியாத்தே இருக்கு அதுல இருக்கட்டும்” என்றார் கான்.

“சரிங்கத்தா… “ என்று ஜன்னத்தின் மகன் கூறினான்.

” சரிப்பா…. மாசம் இருபது ரூபா வாடக குடுத்துரு, அம்மாவையும், சம்சாரத்தையும் நல்லா பாத்துக்க” என்றார் கான்.

”சரிங்கத்தா…” என்று சந்தோஷத்துடன் சென்னான் நிஜாம்.

புது வீட்டில் வாழ்க்கையைத் துவங்கினார்கள். ஜன்னத்தும் முதலில் கோபமாக இருந்தாலும், மகனின் பாசம் அவளை மாற்றியது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவள் என்றாலும், தமிழ் நாட்டில் ஒரு பகுதியில் உள்ள முஸ்லிம் கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டாள். அங்கிருந்தவர்கள் ஒரே குடும்பத்தினரைப் போன்று பழவதால் அவர்களின் பேச்சு வழக்கு அவளுக்கும் அப்படியே வந்து விட்டது.

திருமணமாகி எட்டு மாதங்கள் ஆயின. அந்த தெருவில் இருந்தவர்கள் பரக்கத்திடம் ஏதும் விசேசமில்லையா என்று கேட்க துவங்கினர். ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்தாள் பரக்கத். ஒரு நாள் இரண்டு நாள் தள்ளி இருந்தாலே இந்த மாதம் கரு உருவாகிவிட்டதோ என்று எதிர்பார்த்தாள். ஓரிரு நாட்களிலேயே தலைக்கு குளிக்கும் போது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. திருமணமாகி ஒரு வருடம் முடிந்தது. முதல் திருமண நாள் அன்று லாரி ஓட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டான் நிஜாம். பரக்கத்தை வெளியில் கூட்டிக்கொண்டு போக ஆசைப்பட்டான். 

“பரக்கத்து… நாளைக்கு நாம வெளியில போகனும். சீக்கிரமாவே கெளம்பிரு. ஏ ஃபிரண்டுட்ட பைக்கு கேட்ருக்கி அதுல போலாம்” என்றான் நிஜாம்.

“எங்க போறோம்” என்றாள் பரக்கத்.

“அதெல்லாம் சொல்லமுடியாது…. நம்ம போகும்போது பாத்துக்க” என்றான் கொஞ்சும் தொனியில் நிஜாம்.

“இல்லங்க இன்னக்கி பீரியட் ஆக வேண்டியது….. இன்னு வரல நாமவெளில போய் அலையுறதுல வந்துருச்சுன்னா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றாள் பயத்துடன்.

“இங்க வாடி…. ஏ அருமபொண்டாட்டி. புள்ள அல்லா குடுக்குறது. நம்ம எதுவு செய்ய முடியாது. அவனுக்கு தெரியும்ல எப்ப குடுக்கனும்ன்னு. சும்மா…. மூச்சுக்கு முன்னூறுதடவ அல்லா, அல்லான்னு சொன்னா போதுமா … நம்பு” என்று அவளை சமாதானப் படுத்தி சம்மதிக்க வைத்தான்.

மறுநாள் காலையில் பரக்கத் சீக்கிரமாக கிளம்பினாள். நிஜாம் வாங்கிக் கொடுத்த புதுச் சேலையை கட்டி, தலை நிறைய பூவைத்து அது வெளியில் தெரியாத வாறு தலையில் சேலையை போட்டுக்கொண்டு வண்டியில்  ஏறினாள். முதல்முறை என்பதாள் வண்டியில் உள்ள கம்பியை ஒருகையில் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். இன்னொரு கையில் சேலை தலையிலிருந்து கீழே விழாமல் அதையும் அவ்வப்போது சரி செய்து கொண்டாள். அவள் முகத்தில் தெரியும் சந்தோசத்தை  கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்துகொண்டே வண்டியை ஓட்டினான் நிஜாம்.

நேராக வண்டி வைகை டேமை நோக்கி போய் நின்றது. பரக்கத்திற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. 

“ஏங்க இந்த எடத்த நா ஒரு படத்துல பாத்துருக்கே…” என்று பரபரப்பாக கூறினாள். நிஜாமின் ஊரில் இருந்து நாற்பது நிமிடம். ஆனாலும் சந்தோசத்தில் களைப்பே தெரியவில்லை இருவருக்கும். டிக்கட் வாங்கிவிட்டு உள்ளே போனதும், அங்கு இருக்கும் செடி, கொடியில் மலர்ந்திருக்கும் பூக்கள், பூப்போன்று தண்ணீர் வருவது அனைத்தையும் அதிசயமாக பார்த்தாள். சிறிது தூரம் மேலே சென்றவுடன் குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்றவுடன் பரக்கத்திற்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. கீழே விழுவது போல சிரித்தாள். நிஜாமிற்கு எதுவும் புரியாமல் அவள் சிரிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். இங்கு வந்த பிறகு, அப்படி அவள் சிரித்து ஒரு முறைகூட அவன்  பார்த்தது இல்லை.

“ஏண்டி இப்டி சிரிக்கிற, என்ன….” என்று அவனும் சிரித்துக்கொண்டே கேட்டான்.

ஒரு யானையின் சிலையை காண்பித்து மறுபடியும் சிரிக்க தொடங்கினாள்.

“என்னடி லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்க, என்னன்னு சொல்லிட்டு சிரி” என்றான்.

“அந்த யானைய பாத்திங்களா குண்டி வழியா போய்ட்டு வாய்வழியா வர்ர மாதிரி கட்டிருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே குழந்தை போல மறுபடியும் சிரித்தாள். சிரிது நேரத்திலேயே அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து அவளும் விளையாட துவங்கினாள். அங்கு விற்ற மாங்காய், சிப்ஸ், சர்பத் என்று சாப்பிட்டதால் மதிய உண்வு தேவைப்படவில்லை இருவருக்கும். மாலை மணி ஐந்தை நெருங்கியது. வீட்டிற்கு போவதற்கு தயாரானாள். இரவு நன்றாக தூங்கினாள் பரக்கத். பத்து நாட்கள் கடந்த பின்பு காலையில் எழுந்ததும் ஒமட்டிக்கொண்டு வாந்தி வந்தது. பரக்கத்தின் மாமியாரின் வருகைக்காக காத்திருந்தாள். பத்துமணிக்கு அவள் வந்ததும், பரக்கத் அவளிடம் கூறினாள். “நாள் தள்ளிப் போயிருக்கு மாமி…” ஜன்னத்திற்கு மகிழ்ச்சி தலைக்கேறியது

“இதுக்கு பேருதேல மசக்க… ஒனக்கு புடிச்சத சாப்டு. இனிதே நீ கவனமா இருக்கனும். புடிச்சத சாப்டனும்ன்னு இஷ்ட்டத்துக்கு சாப்ட்டுட்டு இருக்க கூடாது. சத்தானதா சாப்டு. ஒனக்கு என்னா வேணுமே எண்ட்ட கேளு… அவன்ட்ட சொல்லிட்டியா” என்றாள் ஜன்னத்.

“வெளிய பேய்ருக்காங்க வரவும் சொல்லனும்” என்றாள் பூரிப்புடன். நிஜாமிடம் சொன்னதும் தலைகால் புரியவில்லை. வேலைக்கு போன நாட்கள் போக வீட்டில் இருக்கும் நாட்களில் அவளைத் தாங்கினான். பத்து மாதத்தில் ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றாள். அழகாக நாட்கள் நகர்ந்தது. மாதங்கள் போய் வருடங்கள் ஆகின. 

“ஏங்க இந்த மாசம் லாரிக்கு போய்ட்டு சீக்கிரம்மா வந்துருங்க புள்ளைக்கு பொறந்த நாள் வருது” என்றாள். மறுநாள் லாரிக்கு கிளம்பினான்.

“பரக்கத்து நா ஓனர்ட்ட பேசிட்டீ… லாரி திரும்ப லேட் ஆச்சுன்னா நா அந்த தேதிய ஒட்டி பஸ்ல வந்துர்ரீ. கூட வர்ரவுங்க லாரிய எடுத்துட்டு வந்துருவாங்க” என்றான்.

நாட்கள் கடந்து பிறந்த நாள் தேதி வந்தது. பரக்கத்தும் குழந்தையும் ஆவலுடன் எதிர் பார்த்தனர். பரக்கத்தின் கணவன் வேலை செய்யும் லாரியின் ஓனர் பெரிய வீடு அத்தா கானை பார்க்க வந்தார். ஜன்னத்தையும், பரக்கத்தையும் கான் ஆள்விட்டு அழைத்தார். இருவரும் வந்ததும் லாரியின் முதலாளி ஜன்னத்திடம் தயங்கித் தயங்கி வார்த்தைகள் தடுமாறி 

”அம்மா……. லாரி திரும்ப வரும்போது மதுர பக்கத்துல வேற ஒரு லாரில மோதிடுச்சு………” என்று அவர் முடிப்பதற்குள் 

“அவருக்கு ஒன்னு ஆகலைலண்ணே…….” என்றாள் பரக்கத்.

“இல்லம்மா……ரெண்டு பேரு……..” என்று அவர் கூறும்போதே புரிந்தது அவர்களுக்கு. 

ஜன்னத் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்… “என்ன…. பெத்தவனே…… எனக்கு முன்னாடி என்னிய விட்டுட்டு போய்ட்டியா, ஏ புள்ள இல்லாம நா என்னாம்பி…… ஏ ராசாவ நா என்னாண்டு பாப்பி….” ஜன்னத்தின் குரல் கேட்டு தெருவே கூடின. பரக்கத்தால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடிய வில்லை. உலகமே நின்றதுபோல இருந்தது.

“அங்க ஆக வேண்டியத நான் பாத்துட்டீன்த்தா இன்னு மூனுமணி நேரத்துலகொண்டு வந்துருவாங்க, இங்க நீங்க பாத்துக்கோங்க…” ஜன்னத்தின் அருகில் போய்  “உங்களுக்கு எந்த உதவினாலும் கேளுங்கம்மா…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் முதலாளி.

கான் கூறுவதற்கு வார்த்தைகள் அற்று அமர்ந்திருந்தார். அங்கு கூடியவர்கள் பரக்கத்தை அழைத்துக்கொண்டு போனார்கள். பரக்கத்தின் அமைதியைப் பார்த்து ”அழுதுரு அழுதுரு..” என்று கூறிப்பார்த்தனர். ஆனால் அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மீண்டும் அனாதை ஆகிவிட்டதுபோல உணர்ந்தாள். உலகமே இருட்டிவிட்டது போல இருந்தது.

மூன்று மணி நேரத்தில் பரக்கத்தின் கனவனைக் கொண்டு வந்தனர். போஸ்ட்மார்டம் செய்து குடுத்திருந்ததால் முகத்தை முழுமையாக யாராலும் பார்க்க முடியவில்லை. எல்லோரும் கதறும் சத்தம் கேட்டும் பரக்கத் அமைதியாகவே இருந்தாள். நிஜாமின் உடல் அருகில் அமர்ந்து முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். அரை மணி நேரத்தில் உடலை பள்ளிவாசலுக்குத் தூக்கிச்சென்றனர். அப்போதும் பரக்கத் அழவேயில்லை என்பதை தெருவே பேசியது. ஒரு வாரம் கடந்தது, பரக்கத் மகனையும் மறந்து தன் நினைவே இல்லாமல் இருந்தாள். ஜன்னத்திற்கு பயம் வந்தது. எழுந்து பரக்கத்தின் அருகில் போனாள். பேகம் பரக்கத்திடம் ஏதேதோ பேசிப்பார்க்கிறாள், எதற்கும் அசைவு இல்லை அவளிடம். 

ஓங்கி பளார் என்று பரக்கத்தின் கன்னத்தில் அறைந்தாள் ஜன்னத். அப்போது தான் நிலைகுத்தி நின்றிருந்த கண்கள் அசைந்தன.

“என்னாடி ஆச்சு ஒனக்கு, நீயு இப்டி இருந்து போய்ட்டனா புள்ளைய தெருவுலையாடி விட முடியு. அவெஞ் சாப்டானா இல்லையான்னு பாத்தியா. ஏ எனக்கு மட்டு புள்ளையில்லையா நிஜாமு….. கஷ்டமாத்தே இருக்கு அதுக்கு அப்டியே ஒக்காந்திருந்தா போனது திரும்ப வந்துரும்மா…. வருத்தோ வயித்துக்கு தெரியுமா, அடுத்தவேலையே பசிக்கும். அதாண்டி வாழ்க்க.. எந்திருச்சு பொழப்ப பாப்பிய இருளடிச்ச மாதிரி ஒக்காந்துருக்கா” என்று கண்களில் கண்ணீருடன் சொல்லிக்கொண்டே நடந்தாள். நின்றிருந்த அம்மாவை ஓடி வந்து கட்டி அனைத்தான் பரக்கத்தின் மகன் காஜா.

“ம்ம்மா…. பசிக்கிது, ஏதாவது செஞ்சு குடும்மா” என்றான் காஜா. வெளியில் வந்தாள் பரக்கத் மகனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அப்போது கண்ணீருக்கு இடையில் ஒன்றை முடிவு செய்தாள். மகனை பசியுடன் விட்டுவிடக் கூடாது என்று. கையில் இருந்த பணத்தை வைத்து ஒரு மாதம் ஓடியது. தினமும் பேகம் பரக்கத்தை வந்து பார்த்துவிட்டு குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை சாப்பிடுவதற்கு கொண்டு வருவாள். வீட்டுக்கு வந்த ஜன்னத்திடம் 

“மாமி கையில பணம் ஏது இல்ல அடுத்த மாசத்துல இருந்து என்ன பன்றதுன்னு தெரியல” என்றாள் பரக்கத். பகலில் வேலையை முடித்துவிட்டு பரக்கத்திற்கு துணையாக வந்துவிடுவாள் பேகம். அன்றும் அவள் உடனிருந்தாள் 

”ஏதாவது வேலைக்கு போகவா” என்றாள் பரக்கத்.

“புள்ளையை என்ன செய்வ… ஒன்னையவிட்டுட்டு இருக்க மாட்டானே” என்றாள் ஜன்னத்.

ஆழ்ந்து யோசித்துவிட்டு  ”பேசாம ஏதாவது கட போடுறியா” என்றாள் ஜன்னத்.

”ஏ…. இட்லி கட போடுல நல்லா…. ஏவாறோ ஆகும் . அதும் ஒ பஞ்சு போல இட்லி, தண்ணியா தேங்கா சட்னி, கூடவே அந்த மொளகா சட்னி எல்லருக்கு புடிக்கும்ல நமக்கு தெரிஞ்ச வேலைய நம்ம திருப்தியா பன்னலாம். என்னா ஜன்னத்தக்கா நா சொல்றது” என்றால் பேகம்.

“ஆமா பரக்கத்து அல்லா மேல ஈமான வெச்சு ஆரம்பிக்கலாம். ஒங்க மாமா ஒ… புருசே சின்ன பயலா இருக்கும்போதே எறந்துட்டாரு. என்னா பன்றதுன்னு ஒன்னு வெளங்கல. நாம சும்மா இருந்தாலு நம்ம வயிறு சும்மா இருக்குமா. புள்ளைக்காக வாவது ஏதாவது செய்யனும்ல. வட சுட்டுத்தே விக்க ஆரம்பிச்சேன், அதுல இருந்து வந்த பணத்துலதே அவன ஆளாக்குனே… அதுலதே ஏ… பேரு ஊர்ல எல்லாரு வட ஜன்னத்துன்னு கூப்ட ஆரம்பிச்சாக. நோம்பு நேரத்துல நல்லா ஏவாரம் இருக்கும். இட்லிக்கடைல என்ன வந்தர போகுதுன்னு யோசிக்காத அல்லா மேல ஈமான வை, அவே வெதச்சதுக்கு தண்ணி ஊத்த மாட்டானா” என்றாள் ஜன்னத்.

பரக்கத் மிகவும் தயக்கத்துடன் கேட்டாள்

“ இல்ல மாமி இன்னு இத்தா முடியல, அதா யோசனையா இருக்கு”.

“படச்சவனுக்கு தெரியாதா..? யாரு….எதுக்காக என்னா செய்யிறாங்கன்னு..? சட்ட திட்டமெல்லா நம்ம போட்டுக்கிட்டதுதானே… ஊரு பேசும்ன்னா, நேத்து என்னைய பேசுச்சு, இன்னக்கி ஒன்னைய பேசும், நாளைக்கு யாரையோ…. எப்பிடி இருந்தாலும் பேசுவளுக பேசிக்கிட்டுத்தான் இருப்பாளுக… பேச்சு வரத்தாஞ் செய்யும்….கண்டத யோசிக்காம வேலைய ஆரம்பி..” என்று சொல்லிக்கொண்டே வெளியே நடந்தாள் ஜன்னத். பரக்கத்தின் மனதில் நம்பிக்கை துளிர்த்தது.

பரக்கத்தின் இத்தா காலம் முடிவதற்குள் வீட்டு வாசலில் ஒர் இட்லிக் கடை உருவாகிவிட்டது. இட்லியைப் பற்றிய பேச்சு தெரு முழுவதும் நிறைந்திருந்தது. யாரும் இத்தாவைப் பற்றி பேசவேயில்லை.

– மு.அராபத் உமர்
[email protected]

நூல் அறிமுகம் : நக்கீரனின் கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் – சூரியா சுந்தரராஜன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் – சூரியா சுந்தரராஜன்




சூடா ஒரு டீ சாப்பிடலாமா?

வாங்க…வாங்க….!

ஒரு 238 லிட்டர் தண்ணி சாப்டு போங்க…

என்ன புரியலையா? ஒரு குவளை தேநீரை தான் (அதான்பா டீ) அப்படி சொல்றேன்.

என்ன சொல்றீங்க! ஒரு கப் டீயே அதிகபட்சமா 30 மி.லி. தானே இருக்கும்னு கேக்குறீங்களா? நானும் அப்படித்தான் நெனச்சிட்டு இருந்தேன் இந்த புத்தகத்தை படிக்கிற வரைக்கும்.

அப்படி என்ன சொல்லியிருக்கு இந்த புத்தகத்துல?
வேற என்ன?
எல்லாம் மூன்றாம் உலகப்போருக்கு காரணகர்த்தாவான “தண்ணீர்” மகாபிரபுவ பத்திதான். இவரென்ன பண்றாருனா வளரும் நாடுகள்/ மூன்றாம்தர நாடுகள் என மேற்குலகினால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளிலுள்ள மக்களின் தாகத்தைக் கூட சரியாக போக்காமல், வளர்ந்த நாடுகள் எனக் கூறிக்கொள்ளும் மக்களின் காலணிகளினுள்ளும், ஆடைகளினுள்ளும் ஒளிந்து கொள்கிறார். இதைத் தான் ‘மறைநீர்’ (virtual water) என்கிறார் நூலின் ஆசிரியர்.

விவரமாகவே சொல்கிறேன். நெல் மணிகளை உற்பத்தி செய்வதற்கு நீர் தேவைப்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால், நெல் விளைந்தவுடன் அதற்கு தேவைப்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. அதேசமயம் அந்த நீர் அந்த நெல்லிற்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே? அந்த நீர் தான் ‘மறைநீர்’. இந்த மறைநீர்தான் உலகவர்த்தகத்தின் ஆஸ்தான நாயகன். இதனடிப்படையிலான பொருளாதாரம் ‘மறைநீர் பொருளாதாரம்’ என நாமகரணம் செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் புரிந்துக்கொள்ள சில கேள்விகளை நம்முன் வைக்கிறார் நூலின் ஆசிரியர். (பதில்களையும் அவரே கொடுத்துவிடுவார், கவலை வேண்டாம்.)

“பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல்நாட்டினருக்கு, பின்னலாடை தொழிநுட்பம் தெரிந்த மேல்நாட்டினருக்கு, அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல்நாட்டினருக்கு, இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா? பின் ஏன் அதை மட்டும் இங்கே உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறார்கள்?”

“காலணி (shoe) தயாரிப்பிற்கு புகழ் பெற்ற இத்தாலி, ஏன் வாணியம்பாடியிலிருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை இறக்குமதி செய்கிறது? அதுவே பதப்படுத்திக் கொண்டால் இலாபம் இன்னும் இரட்டிப்பாகுமே?”

இப்படி பல ‘ஏன்’களுக்கு முதலாளித்துவ பொருளாதார பார்வை, அளிக்கும் பதில் “மலிவான மனிதவளம்” (அதாவது, நிறையபேர் வேலையில்லாத வெட்டிபசங்களா இருக்காங்கோமா, போனாபோகுதுனு நமக்கு அவங்க வேலைபோட்டுத் தாங்களாம்). இதுதான் உற்பத்தியை பெருக்க சரியான பொருளாதார உத்தி என, எனது பொருளாதார ஆசிரியர் கூறியதை நினைத்துக் கொண்டேன். அப்படி எனில் மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறார் ஆசிரியர்,

“சிக்கன நீர்ப்பாசன வேளாண்மைக்கு புகழ்பெற்ற இஸ்ரேல், பல வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஏன் ஆரஞ்சு பழங்களை ஏற்றுமதி செய்வதில்லை?”

“கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த சவூதி அரேபியா ஏன் உற்பத்தியை குறைத்துவிட்டு இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது?”

“பன்றி இறைச்சியை சீனர்கள் விரும்பி உண்ணும் போது, சீன அரசாங்கம் அதன் உற்பத்தியை கட்டுபடுத்தி வருகிறது?”

இங்கெல்லாம் “மலிவான மனிதவளம்” எனும் பதம் எந்த வினையையும் ஆற்றவில்லையே. ஆக, இந்த எல்லா கேள்விகளுக்குமான ஒருவரி பதில் ‘நீர் அரசியல்’ பலவரி பதில் ‘மறைநீர் பொருளாதாரம்’.(விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதே அளவுநீர் தான் இன்றும் உள்ளது. ஒரு சொட்டுகூட கூடவும் இல்லை, குறையவும் இல்லை. இது அறிவியல் உண்மை. பின் ஏன் இந்த அளவுக்கு நீர் தட்டுப்பாட்டு? இந்நூலின் ஆசிரியர் உலகநாடுகளைச் சுற்றிவந்து பல காரணங்களை அடுக்குகிறார். இங்கு, நாம் தமிழ்நாட்டிலிருந்து சில உதாரணங்களை மட்டும் காண்போம்.

சென்னை, ‘இந்தியாவின் டெட்ராய்ட்’என்ற பெருமையின் பின் 1.1 டன் எடையுள்ள ஒரு கார் உற்பத்திக்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீரைத் தாரைவார்க்கும் ஏமாளித்தனம் ஒளிந்துள்ளது. விளைவு, மாநிலத்தின் தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரே ஒரு பின்னலாடையின் மூலம் 2700 லிட்டர் தண்ணீர் கப்பலேரி செல்கிறது. நாம், உலகிலேயே மிக வேகமாக வளரும் நகருங்களுள் திருப்பூர்தான் முதலிடம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறோம்.வாணியம்பாடியிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் 1 கிலோ பதப்படுத்தப்பட்ட தோலின் மறைநீர் அளவு 16,600 லிட்டர். விளைவு, வேறென்ன பாலாறுக்கு பால் ஊற்றியது தான். இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தில் ஏமாளியாக இருந்த ஆப்பரிக்க நாடுகளின் தற்போதைய நிலமையை நம் நகரங்களோடு ஒப்பிட்டு பீதியை கிளப்புகிறார் ஆசிரியர். மேலும், மறைநீர் பொருளாதாரம், தண்ணீர் தட்டுப்பாடு இவற்றிற்கிடையேயுள்ள உறவையும் இதன் பின்னணியில் இருக்கும் சூழலியல் தீமைகளையும் அவர் பட்டியலிடும் போது ஆச்சரியகுறி எனும் அணிகலனை முகம் அணிச்சையாக அணிந்துகொள்கிறது.

ஒரு அணையின் மேல்பகுதியில் இருக்கும் மக்கள் அதை திறக்கக்கூடாது எனப் போராடுவதும், கீழ்ப்பகுதியில் இருக்கும் மக்கள் திறக்க வேண்டுமென போராடுவதும் உலக வழமை வேளாண் அரசியல். காவிரி நதிநீர் பிரச்சனையில் கூட தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையில் நடப்பது இதுதான். ஆனால் இதற்கு நேர்மாறாக உள்ளது தமிழகத்தில் ஓர் அணை. திருப்பூர் நகரிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள ஒரத்துப்பாளையம் அணைதான் அது. காவிரியின் துணைநதியான நொய்யலின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தான் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்ஞாகி அணைக்கு மேல்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக தான் அணையின் கீழ்ப்பகுதி மக்கள் அணையை திறக்க வேண்டாம் என போராட்டம் செய்கிறார்கள். இதன் கொடூரம், ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் இளநீர் செந்நிரமாக மாறி போனதால் குடிக்க எவருமின்றி தொங்கிக்கொண்டிருப்பதில் வெளிப்படுகிறது. வாணியம்பாடி தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றை இராசயண கழிவுநீர் தொட்டிபோல் மாற்றிவிட்டன.

இந்த பின்னணியில் தண்ணீர் தட்டுப்பாட்டை பாருங்கள், ஒருபக்கம் தண்ணீர் மறைநீராக ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், இருக்கும் சொற்பநீரும் மாசடைந்து கிடக்கிறது. இங்குள்ள குடிநீரில் 72 விழுக்காடு குடிக்க லாயக்கற்றது என்று தமிழக பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது.

(குறிப்பு: இந்த இரசாயண கழிவுகள் ஒரு வழியாகக் கடலை அடையும்போது, கடலோர காடுகளான கண்டல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கண்டலைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள நக்கீரனின் இன்னொரு புத்தகமான அலையாத்தி காடு என்பதை படிக்கவும்).
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் சாயத்தொழிற்சாலைகளோ, தோல் பதனிடும் தொழிற்சாலைகளோ இல்லை. இப்பொருட்களை அந்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது. இக்காரணத்தில் இந்நாட்டின் தலைநகரம் ‘நீரின் நகரம்’ என அழைக்கப்படுகிறது.

தண்ணீரும் அதைச்சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்த்து இது போன்ற வளர்ச்சி எனும் ஆயுதம் தாங்கிய தொழிற்சாலைகளினால் ஏற்படுத்தப்படும் சுகாதார, உடல்நல கேடுகள் எனும் காயங்கள் நிகழ்கால கண்ணீர் சாட்சியங்கள். அதற்கு தனியே மேலும் சில புத்தகங்களை எழுத வேண்டும். இறுதியாக, வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் உள்ள செல்வ சீமாட்டிகள் ஆடம்பர கட்டிலில் புரண்டு விளையாட, ஏழைகளும், ஏழைநாட்டு மக்களின் வளங்களும் வதைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ‘சிவப்பு பொருளாதாரத்தை’ கைவிட்டு, ‘பச்சை பொருளாதாரத்தைக் கையிலெடுக்க அரசுகள் முன்வர வேண்டுமென இப்புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

– சூரியா சுந்தரராஜன்

உழவுக்கு வெந்நீர்! கவிதை – கோவி.பால.முருகு

உழவுக்கு வெந்நீர்! கவிதை – கோவி.பால.முருகு




உழவுக்கு வெந்நீரை
ஊற்றுகின்றான்-கார்ப்பரேட்
உரம்பெறவே தண்ணீரைப்
பாய்ச்சு கின்றான்!
நிழலுக்குள் நெருப்(பு) அள்ளி
வீசுகின்றான்-கார்ப்பரேட்
நிலைத்திடவே நிழமல்தந்து
போற்று கின்றான்!

சேற்றிலே நிற்போனைத்
துரத்துகின்றான்-கார்ப்பரேட்
செழித்திடவே அவன்காலை
நக்குகின்றான்!
சோற்றிலே நஞ்சினைக்
கலக்குகின்றான்-கார்ப்பரேட்
சோம்பேறி வாழ்வுபெற
போற்றுகின்றான்!

கஞ்சிக்கு உழைப்போனைக்
கலங்க வைப்பான்!-கார்ப்பரேட்
கால்பிடித்து அரியணையில்
அமர வைப்பான்!
கிஞ்சித்தும் உழுவோனைக்
கருத மாட்டான்-கார்ப்பரேட்
கீழிருக்கும் வஞ்சகத்தை
உணர மாட்டான்!

பொன்முட்டை இடும்வாத்தை
அறுத்துப் பார்ப்பான்-கார்ப்பரேட்
பொல்லாதக் குழு வாழ
விருந்துவைப்பான்!
கண்குத்தி உழுவோனைக்
குருட னாக்கி-கார்ப்பரேட்
கண்ணுக்கு விருந்திட்டு
மகிழு கின்றான்!

– கோவி.பால.முருகு

நூல் அறிமுகம்: டாக்டர். பெரு.மதியழகனின் தமக்கென வாழாதவை – கு.செந்தமிழ் செல்வன்

நூல் அறிமுகம்: டாக்டர். பெரு.மதியழகனின் தமக்கென வாழாதவை – கு.செந்தமிழ் செல்வன்




அறிவுத்தோட்ட்த்தில் சென்ற மாதம் நடைபெற்ற விவசாயிகள் மாதாந்திரக் கூட்டத்தில் டாக்டர் பெரு. மதியழகன், பதிவாளர் ( ஓய்வு), கால்நடைப் பலகலைக்கழகம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

கால்நடைத்துறையில் மிகப் பெரும் ஆளுமை அறிவுத்தோட்டத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியில் திளைத்த தருணத்தில் எனக்கு நினைவுப் பரிசாக ஒரு சிறு புத்தகம் அளித்தார். தனக்கென வாழாத தன்மைக் கொண்ட உங்களுக்கு இந்த புத்தகத்தை கொடுப்பது மிகப் பொருத்தம் எனக் குறிப்பிட்டார்.
புத்தகத்தின் தலைப்பு : “தமக்கென வாழாதவை” . இது ஒரு கவிதைத் தொகுப்பு. தனது கல்லூரி நாட்களிலிருந்து 30 ஆண்டுகளாக எழுதியவைகளின் தொகுப்பு.
கல்லூரி வாழ்க்கை, கவிதை இரண்டினையும் இணைப்பது காதல்தான். எனவே , காதல் கவிதையாகத்தான் இருக்கும் என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் இருந்து விட்டேன்.. ஆனால், பத்து நாட்களுக்கு பிறகு அதனை புரட்டும் போதுதான் தெரிந்த்து. அது உன்னதக் காதலை அடிப்படையாக்க் கொண்டது. இதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்றாக தான் கற்று , பணியாற்றும் துறையான கால்நடைகளைப்பற்றிய கவிதைகள்.. சக மனிதர்களை புகழ்ந்து எழுதப்படும் கவிதைகளுக்கு இடையே வாழ்நாள் முழுவதும் மனிதர்களுக்காக உழைத்து மாளும் ஆடு, கோழி, மாடுகளைப் பற்றியது என்ற போது மெய்சிலிர்த்தது.
பணவள பெருகிட பால்வளம் விளைத்திடும்
பண்பின உடையது பசுவினம்
கனமிகு சுமைப்பொறி கட்டைவண்டியை
களிப்புடன் இழுப்பவை எழுதுகள்
இப்படி நீள்கிறது அந்த தலைப்புக்கவிதை.

கால்நடைகள் பராமரிப்பதற்கும் நோய்களுக்கான தீர்வுகளையும் எளிய கவிதையில் கொடுத்திருப்பது அற்புதம்.

கோமாரி என்றொரு நோய்யுண்டு அந்த
கொடும் நோயில் கால், வாயில் புண்கள் தோன்றும்
கால் நோய் வாய் நோய் என்றும் சொல்வர்
கட்டாயம் தடுப்பூசி போட்டோர் வெல்வர்

ஆமை புகுந்தால்
வீட்டுக்கு ஆகாது – இது
அஞ்ஞானம்
ஆர்பி புகுந்தால்
ஆட்டுக்கு ஆகாது – இது
விஞ்ஞானம்

கிரகங்கள் தாண்டி விசாலப்பட்டு சிந்திக்கும் வித்தகராக எழுதுகிறார் :

இந்த நூற்றாண்டின்
முதல் பொங்கலை
பூமியில் வைத்தோம்
இறுதி பொங்கலை
செவ்வாயில் வைப்போம்.

இயற்கை உரத்திற்கும் இசைவான கவிதையினையும் கொடுத்துள்ளார்:

வேதி உரங்கள் போட்டுப் போட்டு
பாதிப்படைந்த பாழ் நிலம் திருத்த
ஆட்டுப் பட்டியை அந்த நிலத்தில்
நாட்டி வைத்து கிடை போட்டாலே
நாட்டு நிலமெல்லாம் நன்னிலமாகும்
வாட்டும் நோய்வரா நன்னிலை மலரும்

விவசாயியின் எதார்த்தமான பிரச்சனையிலும் கவிதையினைப் பிணைக்கிறார்:

தட்டுவிலையும் ஏறிப்போச்சு
தவிட்டு விலையும் ஏறிப்போச்சு
பொட்டுவிலையும் ஏறிப்போச்சு
பிண்ணாக்கும் ஏறிபோச்சு

ஒரு ரூபா பால்விலைய
உயர்த்தியதைத் தாங்காம
வால்வால்னு கத்துராங்க
வயித்தெரிச்சல் கொட்டுராங்க

குடிதண்ணீர் லிட்டருக்குக்
கொடுக்கிறாங்க பத்து ரூபா
மடிக்கறந்த பால்கொடுத்தா
மலைக்கிறது எதனாலே?

தொழில் நுட்பத்தை சாதாரண விவசாயிகளுக்கு சேர்க்கவும் புதிய வேலை வாய்ப்புக்க்ளை இளைஞர்களுக்கு உருவாக்கவும் உருகிஉருகி கவிதைகள் தந்துள்ளார்.
அழகியலோடு கவிதைகள் அழகாகப் பாய்ந்துள்ளன.

மாடாய் உழைக்கும் மனிதர்களுக்கே மதிப்பில்லா இந்த உலகில்
மாடாய்,ஆடாய், கோழியாய் தனக்கென வாழாதவைகளுக்கு குரல் கொடுக்கும் இந்த கவிதைப் புத்தகம் அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

நூல் : “தமக்கென வாழாதவை”
ஆசிரியர்: டாக்டர் பெரு. மதியழகன், 9443728122
வெளியீடு : இலக்கிய வீதி, சென்னை
விலை: ரூ 50

வாழ்த்துக்களுடன்,
கு.செந்தமிழ் செல்வன், 9443032436
அறிவுத்தோட்டம், வேலூர்

The definitive version of the Herman Brock novel Article By S. Devadoss ஹெர்மன் ப்ரோக் நாவலின் அறுதி வடிவம் - சா. தேவதாஸ்

ஹெர்மன் ப்ரோக் நாவலின் அறுதி வடிவம் – சா. தேவதாஸ்

கடவுளர் தெய்விக மானவரல்ல என்பதை
அறிய சிரிப்பெழுந்தது, கடவுளரிடம்
சிரிப்பை வரவழைத்தது மனிதரே
மனிதரிடம் சிரிப்பை மூட்டியது மிருகங்கள் என்பது போல…

சிரிப்பில் விலங்கு, மனிதன், கடவுள் மூவரையும் ஒருங்கிணைத்து விடும் ஹெர்மன் ப்ரோக் ஆஸ்திரிய நாட்டு நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாளர், நாடகாசிரியர் (1886-1951). பொறியாளராகப் பயிற்சி பெற்று,  தந்தையின் ஜவுளித் தொழிலை நிர்வகித்து, பின் எழுத்தாளரானவர். யூதராயிருந்து கத்தோலிக்கரானவர். 1938இல் ஆஸ்திரியா, ஜெர்மனி வசமானதும் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஹெர்மன், ஜேம்ஸ் ஜாய்ஸ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் தலையீட்டால், விடுபட்டு, இங்கிலாந்து வந்து, பின் அமெரிக்காவில் தங்கி இயங்கியவர். அதுவரை நாவலின்  உச்சம் என்றால் ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலீஸஸ்தான். ஹெர்மனின் Sleepwalkers, The Death of Uirgiltக்குப் பின் யுலீஸஸைத்தாண்டி ஓரடி எடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது.

ஒரு வாக்கியம், ஆறேழு வரிகள் ஒரு பத்தி என நீண்டு செல்ல, முடிவி்ல்லாத எண்ணவோட்டங்களாக போய்க் கொண்டேயிருக்கிறது அவரது எழுத்து. ஒரு தொடரை, வாக்கியத்தை ஆரம்பிக்கும்போதே அவ்வெழுத்தாளருடன் கலைஞனும் தத்துவாசிரியனும் தீர்க்கதரிசியும் இசைவாணனும் இணைந்து கொள்கின்றனர். அரும்பும் அழகிலிருந்து இசைப்பாடலாக புலம்பித் திரியும்….. வரை பரவசக் காட்சிகள், தீவிர சிந்தனைத் தெறிப்புகள், தத்துவ விசாரம், ஆன்மாவின் வேட்கை என விரிந்து செல்கிறது. படைப்பின், பிரபஞ்தத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான வரலாற்றின் கதி, தத்துவப்போக்கு, மனித உச்சம் அதவ பாதாளம் என அனைத்தும் துவக்கமாகின்றது. கவிதையும் உரைநடையும் இணைந்து உறைந்து கிடக்கும் பனிக்கட்டியைக் காட்டும்போது, தெறித்து வீழும் எரிமலைப் பிழம்பையும் தகிக்கச் செய்து விடுகிறார்.

ஈஸிட் என்னும் காப்பியத்தை கவிதையில் வடித்த விர்ஜிலின் இறுதி 18 மணிநேரங்களை தன் நாவலின் காலமாக பின்புலமாக்கி, தன் நிறைவுறாத பிரதியை எரித்து விடும் முனைப்பில் உள்ள விர்ஜிலையும் அப்பிரதியை எப்படியேனும் பாதுகாத்து வெளியிட்டுவிடும் முனைப்பில் உள்ள மன்னன் அகஸ்டஸையும் உரையாட வைக்கின்றார் ஹெர்மன்.

ஒட்டுமொத்த வாழ்வையும் தன் பிரதியில் உள்ளடக்கிட விரும்பும் அதே வேளையில் ஒட்டு மொத்த வாழ்விலிருந்து விடுபட்டுவிடும் வைராக்கியமும் இங்கே சேர்ந்து விடுகின்றது. ‘‘ஒரு சிந்தனை ஒரு கணம் – ஒரு வாக்கியம்’’ என்ற ரீதியில் ஹெர்மன் தியானிக்கிறார் இப்பிரதியில் சற்று கவனம் பிசகினாலும் இப்பிரக்ஞையோட்டம் பிடிபடாது நழுவிப் போகிறது, அதன் திசைவழியை அறிய இயலவில்லை. எதுவும் கருத்துக்களாக இல்லாததால், சுலபத்தில் உள்வாங்கிக் கொள்ள இயலாததாக, தர்க்கத்தில் சிக்காததாக இருந்து விடுகிறது.

மொழியில் சிக்கவோ விவரிப்பில் பிரச்சனைகளோ இல்லாமல் தெளிவாகவே எடுத்துரைக்கிறார் ஹெர்மன். ஆனால் அது அனுபவ விவரிப்பாக இல்லை. கருத்துக்களின் மோதலாக முரணாக இல்லை. சிந்தனையின் வடிவம் மொழியின் வெளிப்பாடு பெறும் முன்னரே, பிரக்ஞையோட்டத்தைக் கைப்பற்றிடும் எத்தனமாகி விடுகிறது. அப்போது உரைநடை கவிதையின்  நெருக்கமும் நெகிழ்ச்சியும் கொண்டு விடுகிறது. இங்கே வெளிப்பாட்டினை விடவும் பதிந்தால் போதும் என்ற நெருக்கடி அவசரம், மரணத்தின் மிதவையில் திரும்பிக் கொண்டிருக்கும் விர்ஜில், எண்ணவோட்டங்களின் அலையடிப்பில் அகமன நினைவோட்டங்களில் ஆழ்ந்தவராக இருக்கிறார். சிலுவைப்பாடுண்ட கிறித்துவின் தனிமையும் அத்தீவிரத்தில் மின்னல் வெட்டில் பிரக்ஞை உச்சத்தில் பொறி பறந்திடும் கீற்றுக்களும் இங்கே நெருக்கம் காண்கின்றன.

ஆயுள் முழுதும் உடல் நலமின்றியும் தன்பால் காமத்தினராயும் விளங்கிய, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த விர்ஜில் (கி.மு.10-19), மன்னன் அகஸ்டஸின் வேண்டுதலால், தனது இறுதி 11 ஆண்டுகளில் ஈனிடை எழுதிக் கொண்டிருக்கிறார். ரோமானியரின் தேசிய இலக்கியமாக விளங்கப்போகும் அது, ட்ராய் நகரம்  வீழ்ந்ததும், வீரன் ஈனியஸ் அகதியாகி, இத்தாலிய இளவரசன் டர்னஸுடன் சண்டையிட்டு, ரோம்நகரம் நிர்மாணம் ஆவதற்கு காரணமாயிருப்பதை விவரிக்கிறது.

கி.மு. 19 இல் தனது கையெழுத்துப் படியை திருத்திச் சரி செய்ய, கிரேக்கம் சென்ற விர்ஜில், ஏதென்ஸில் அகஸ்டஸைச் சந்திக்கிறார். ரோம் திரும்பிவிட முடிவெடுத்த வேளையில், காய்ச்சல்கண்டு பிரண்டிஸியம் துறைமுகத்திலேயே இறந்துபோகின்றார்.

தனது பிரதி முழுமைபெறாது இருப்பதால் அதனை நூலாக வெளியிட வேண்டாம் என மன்னனிடம் வாதிடுகிறார். 11 ஆண்டுகாலம் உழைத்து உருவாக்கிய காவியத்தை வெளியிட விரும்பாததற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் எனச் சந்தேகம் வருகின்றது மன்னன் அகஸ்டஸுக்கு. அது தனது முடிவில்லை, கடவுளின் முடிவு என்று சொல்லிப் பார்க்கிறார் விர்ஜில். மன்னன் சமாதானமாகவில்லை.

உங்கள் கவிதையில் மிக உயரிய விஷயஞானம் உள்ளது. நூல் முழுவதும் ரோம் பிரகடனம் செய்யப்படுகிறது. கடவுளர், வீரர், குடியானவர்  ஆகியோருடன் ரோமினைப் புரிந்து கொள்கிறீர்கள். அதன் கீர்த்தியையும், பக்தியையும் விவரிக்கிறீர்கள். ரோம் முழுமையினையும் ட்ரோஜன் மூதாதையரிலிருந்து அதன் காலகட்டத்தினையும் உள்ளடக்குகிறீர்கள். இது போதாதா…? என்று குறுக்கீடு செய்கிறான். ஒரேயொரு பார்வையில் தனியொரு படைப்பில் தனியொரு கண்ணோட்டத்தில் வாழ்வனைத்தையும் கொண்டு வந்துவிடுகிறீர்கள். இது போதா? என்கிறான். வாழ்வைப் புரிந்து கொள்வதை நோக்கியது உங்கள் இலக்கில்லை எனில் வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறான். மரணத்தைப் புரிந்து கொள்வதை நோக்கியது என்கிறார் விர்ஜில்.

எப்படி? வாழ்வின் அளப்பரிய அர்த்தம், மரணத்தால் வெளிப்படும் அர்த்த முழுமையிலிருந்த வர முடியும் எனது செயல்பாடு கவிதையாயிருக்கும் பட்சத்தில் அது தான், இலக்கு ஏனெனில் அது தான் தூய கவிதையின் இலக்கு.

விர்ஜில் இறந்ததும் முழுமையாகாமல் விடப்பட்டிருந்த வரிகள் சரி செய்யப்பட்டும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் ஈனிடை வெளியிட ஏற்பாடு செய்தார் என்கிறது வரலாறு.

அகதியாகும் ஈனியஸ் ரோமின் நிர்மாண வீரனாக, ஈனிடின் நாயகனாக இருப்பதில் தன்னை அடையாளங் கண்டு கொள்ளும் ஹெர்மன், தன்னுயிர் பரிதவிக்கையிலும் எழுத்தின் நாணயத்திற்காக உண்மைக்காக நோக்கத்திற்காக இறுதிக் கணம் மட்டும் போராடிப் பார்க்கும் விர்ஜிலிடமும் தன்னைக் கண்டு கொள்ளவே செய்கிறார். அவரது வாழ்வும் அவரது எழுத்தும் அதுவாக அமைந்து போனதால். அவசரத்தில் கொந்தளிப்பில் எழுதும்போதும் நாவலின் முழுமையினைக் கைப்பற்றி விடுவதிலேயே கவனம் குவிப்பு கொண்டிருந்தார்.

மிலன் குண்டேரா வாதிடுவதன் நாவல்கலையின் சாரத்தை நிறைவேற்றுபவராக ஹெர்மன் ப்ரோக்கும் ராபர்ட் மூஸிலும் உள்ளனர். இருவரும் ஆஸ்திரிய நாவலாசிரியர்கள். நாவலிடத்தே அளப்பரும் பொறுப்புகளைத் தந்து, கவிதை, மாயப்புனைவு, தத்துவம், செறிவான வாசகம் கட்டுரை என அனைத்தையும் ஒன்றிணைத்துவிடும் அளப்பரும் ஆற்றல் கொண்டதாக ஆக்கிவிடுவார் ஹெர்மன். “நாவல் மட்டுமே கண்டறியக் கூடியதை” கண்டறிந்திட முற்பட்டவர்.

அத்துடன் தன் பிற்கால வாழ்வில் அய்ரோப்பிய அகதிகளுக்கு உதவிடும் அமைப்பை நிறுவிடும் அக்கறையும் ஆர்வமும் மிகுந்திருந்தவர் ஹெர்மன்.

மரணம் பற்றிய தனது அறிவின் மூலமாக முடிவிலியை உணர்ந்து கொள்பவனே, படைப்பினைத் தக்க வைத்துக் கொள்பவனாக, ஒட்டுமொத்தப் படைப்பில் தனியொரு பகுதியினையும் தனியொரு பகுதியில் ஒட்டு மொத்தப் படைப்பினையும் தக்க வைத்துக் கொள்பவனாக மாறுகிறான். ஏனெனில் பகுதியால் தன்னை தக்க வைத்துக் கொள்ள இயலாது. தனது சட்டப்பூர்வ சூழலினூடேதான் தனது உணர்த்துதல்களில் மட்டுமே அதனை தக்க வைத்துக் கொள்ள இயலும்…” என்பது போன்று ஒவ்வொரு பத்தியினையும் செதுக்கிச் செதுக்கி தன் நாவல் என்னும் பிரும்மாண்ட சிற்பத்தை உருவாக்கி நிறுத்துகிறார் ஹெர்மன்.

Water, Fire, Earth, Air என்னும் நான்கு பதிகளாக ஒரு இசைக் கோவையை அமைத்து, சந்தத்துடன் இணக்கத்துடன் இணைத்து மாபெரும் இசைக் கோவமாக இசைக்கவிடுகிறார் ஹெர்மன்.

ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ழீன் ஸ்டார் அண்டர் மெயர் ஒரு கவிஞர்  4 ஆண்டு கால ஈடுபாட்டில், உழைப்பில் இதனை முடித்துள்ளதாகக் கூறுகிறார். இந்த நாவலை எழுதுவது சவாலான நடவடிக்கை எனில், மொழி பெயர்ப்பதும் சவாலான நடவடிக்கையே.

இந்நாவலையும் ஒரு கவிதையாகவே பார்க்கிறார் மொழி பெயர்ப்பாளர். கவிதையை மொழி பெயர்ப்பது எவ்வளவு சிரமமிக்கதோ அவ்வளவு சிரமமிக்கதாக இம்மொழி பெயர்ப்பும் இருந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். இந்நாவல் தனியொரு தன்னுணர்ச்சிப் பாங்கான பீறிடலாகவோ, தனியொரு மையக் கருத்திழையில் அமைந்த கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாத போதும், ஒரு கவிதையே 500 பக்கங்களில் தன் தொன்மையான இதிகாசங்களுடன் தொடர்புடையதாக, இரு பண்புகளை உள்ளார்ந்ததாகப் பெற்றிருக்கிறது. வெளிப்பாட்டின் முழுமை வார்த்தைகளில் மட்டுமின்றி அவற்றிற்கிடையிலான வெளியிலும் அமைந்துள்ளது. இரண்டாவது பண்பு அதன் இசைக் கட்டமைப்பு…’

மிருகத்தையும் மனிதனையும், தெய்வத்தையும் சிரிப்பை முன்னிட்டு ஒரு வரிசையில் நிறுத்திவிடும் ப்ரோக், சிரிப்பினை மரணத்தின் சகோதரியாயும் சித்தரித்து விடுகிறார்.

‘‘ஆணோ பெண்ணோ அல்லாத சிரிப்பு, பாழின் வெற்று தடதடப்பே’’ என்னும்போது, ஒரு வட்டத்தை முழுமை செய்து விடுவார்.

ஆதாரங்கள்:

  1. The Death of virgil/ iterman Broch/Tr by Jean Start Untermeyer/ Vintage international 1945(1995)
  2. The Art of Fiction- Interview with milan kundera/ par is Review, 194 Summer.