அய்யனார் ஈடாடி : கவிதைகள் Ayyanar Edadi : kavithaigal

அய்யனார் ஈடாடி : கவிதைகள்


மிதப்பலைகள்
அடர்ந்த பனையின்
நிழல் விழுந்து
நுரைமிதக்கும்
தாமரைக்குளத்தில்
சாயம் வெளுத்துப்போன
கொடிச்சீலைகளோடு
பயணிக்கும்
அகண்ட நெகிழிகள்
மீன்குஞ்சுகளோடு
தொட்டலையும் போது
பூத்தெழுகிறது மிதப்பலைகள்
ஆழத்தின் மற்றொரு பக்கம்…

 

மகிழ்ச்சிப் படலம்

கண்ணீரின் சுவையறிந்த
அம்மாவின் முத்தங்கள்
அழுத குரலோடு
வீட்டைக் கடக்கையில்
சிறுவன் மீது
பூ உதிர்க்கும்
மரமல்லி மரமென
உதிர்கிறது முத்தப்பூக்கள்…

எதிரெதிர் முகங்களாக
உடைந்த போதிலும்
நிலைக்குத்தி நிற்பது
சூழப்பட்ட
மகிழ்ச்சிப் படலத்தில்
எச்சமிருக்கும்
கண்ணாடித் துண்டுகளே…

சோகத்தின் வலிகள்

புகை கலைந்து போகும்
வெதுவெதுப்பான
யாருமற்ற  வெளியில்
வெந்நீர் அடுப்பின்
பக்கவாட்டில் காயும்
இறகுகள் நனைந்த
ஈரக்கோழிக்குஞ்சினை
தொலைவு நீண்டு வந்த
அடி சருகொடிந்த பருந்து
தூக்கிச் செல்லும் போது
சோகத்தின் வலிகள்
வெகுண்டெழுகிறது
வெள்ளனத்தில திறந்துவிட்ட
மூங்கி பஞ்சாரத்தின்
அருகே நகரும் போது…

பெருஞ் சுவடுகள்
வெறிச்சோடிய தெரு முற்றத்தின்
தந்தி மரத்தில்
அமர மறுக்கும்
தாயற்ற கூட்டுப்பறவைகள்
எத்தனிக்கும்
அந்தர வெளியின்
நிர்வாணக்கொடியை
மேவி மறைக்கும்
ஈரச்சொடுக்கு வழிந்து
காயும் சீலைகளில்
வந்தமரும் போதெல்லாம்
உதிர் சருகுக்காக
காத்துக்கிடக்கின்றன
காயம்பட்ட உள்ளத்தின்
பெருஞ் சுவடுகள்…

குமரகுருவின் கவிதைகள்

குமரகுருவின் கவிதைகள்




குமரகுரு கவிதைகள்
************************
பார்த்ததைப் பற்றிய யோசனை
பார்த்த பின் அதிகரித்துக் கொண்டேயிருந்தது!

பார்த்த போதொரு காட்சியாகவும்
பிறகொரு அனுபவமாகவும்
பாடங்களை உதிர்த்தபடி
நிகழ்ந்து போனது!!

**********************
அருவியினடியிலொரு
மீன் துள்ளியபடியிருந்தது
அதன் துள்ளலுக்கேற்ப என் விழிகளை நகர்த்தி கொண்டேயிருந்தேன்!
விழியின் துள்ளலுக்கேற்ப இப்போது மீன் துள்ளிக் கொண்டிருந்தது!!

**********************

கிளிக்கொரு பழமெனப்
பழுக்க வைத்துக் காத்திருக்கும்
மரத்திற்கு வராத கிளிகளே!!
எங்கேயோ இல்லாத பழத்தைத் தேடிக் கொண்டிருக்கவா
இம்மரம் காய்த்தது?

***********************

கண நேரம் உன் கைப் பிடித்திருந்தேன்
பெருங்கடலொன்று அலையலையாய் ஊர்ந்து செல்ல முயல்வதைப் போல்
தன் பரந்து விரிந்து இறக்கைகளால் பறந்து போகும் வானம் போல்
மௌனம் நம்முள் மிதக்கத் துவங்கியது!

**********************

படகினடியில்
நாய்க்குட்டி போல்
துடுப்பை விரட்டி வரும் அலைகளைப் பாரேன்!
ஒரு கணம் கூட ஓயாமல் விரட்டி கரை சேர்த்ததும் தான்
சற்று ஓய்ந்து மீண்டும் கடலுக்குள் செல்கிறது!

***********************

ஓரிகாமி பறவையொன்றைச் செய்ய நினைத்தவள்,
யூடியூப்பில் காணொளி பார்த்துக் காகிதத்தை மடக்குகிறாள்
மடக்குகிறாள்
திடீரென அடித்த காற்றில்
அவள் கை கதகதப்பிலிருந்து
தப்பிப் பறந்தோடுகிறது
அந்த பாதி பறவை!!
விடுவதாயில்லை
அவள் அதை மீண்டும் பிடித்து
மடக்குகிறாள்
மடக்குகிறாள்
வீடியோ முடிந்ததும்
முழுதாகாத பறவையை செய்து முடிக்க
மீண்டும் ரீவைண்ட் செய்கிறாள்
மீண்டும்
தப்பிப் பறக்கிறது
அந்த முக்கால் பறவை…
மெதுவாய் பிடித்து
மீண்டும் மடக்குகிறாள்
மீண்டும் மடக்குகிறாள்

இப்போது “அப்பா! இங்கே பாரேன்!! பறவை செய்துவிட்டேன்!!” என்று என்னிடம் காண்பித்தாள்…
பறக்கவியலா ஓரிகாமி பறவை
கசங்கிய காகிதத்தில்
ஒடுங்கி கிடந்தது!!
“நல்லாயிருக்குமா!! ஆனா!! அந்த காகிதம் ஒரு கூண்டு போல்,
உன் பறவையால் பறக்க முடியல,
அதைப் பிரித்து பறக்க விடேன்!” என்று சொன்னதும்…

“போப்பா!!” என்றபடி அந்த பறவையை மடக்கி
புத்தகத்துக்குள் மறைத்து விட்டாள்.
“நான் நாளை என் பள்ளி தோழிக்கு காட்டுவேன்!!” என்றபடி!

காலைக்குள் அந்த முழு பறவை
மீண்டும்
பறந்திடாமல் இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்!

குமரகுரு
9840921017

கானல்வரிகள் சந்திப்பதில்லை கவிதை – புதியமாதவி

கானல்வரிகள் சந்திப்பதில்லை கவிதை – புதியமாதவி




யுகங்களின் சூரியக்கதிர்கள்
அவள் மேனியில் விதைத்த
வேர்வையின் துளிகள் பெருகி
அலைகளாயின.
அடங்காத அலைகளுக்கு அடியில்
அவள் பனிக்குடம் நிரம்பி
பூமி பிரசவிக்க ஆரம்பித்தது.
அவள் கடற்கரைக்கு வந்தாள்.
பட்டினப்பாக்கம் அசதியில்
தூங்கிக்கொண்டிருந்தது.
கானல்வரி பாடிப் பிரிந்தவர்கள்
சந்திக்கவே இல்லை.
உடைந்து கிடந்த யாழின் நரம்புகளில்
துடித்துக்கொண்டிருந்தது
இன்னும் பாடாத பாடலின் இசை.
பறந்தலை அவள் நரம்புகளைக் கிழித்து எறிந்து
கருப்பையில் பசியாறிக்கொள்கிறது.
உழிஞை மரத்தடியில்
அவள் இப்போதும் காத்திருக்கிறாள்.

புதியமாதவி