தங்கேஸ் கவிதைகள் 34 Thanges Poems 34

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
கண்களை மூடிக்கொள்கிறேன்
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
அந்த இளவேனிற் காலம் திரும்பி வரும்போது
ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில்
நாம் பசுந்தளிர்களிடம் உரையாடியபடி நடந்து கொண்டிருப்போம் !
பால்கொடிகள் என் மேனியெங்கும் பற்றிப் படர
மெய்சிலிர்ப்பில் நான் மீண்டும் பனிச்சிலையாகி விடுவேன்.

தெளிந்த வானமும்
அதன் மீது நிலவும்
அரைவட்டமடித்துப் போகும்
வெண்நாரைக்கூட்டங்களும்
மீண்டும் தோன்றும் போது
கடைக்கண்ணோரம் துளிர்க்கும்
ஒரு துளி கடலில்
நீ படைத்த அத்தனை உயிரினங்களும் உன் முன்னால்
இரகசியமாய் நீந்தி மறைந்து விடும் கண நேரத்தில்

கவிதை 2
கடவுள் புன்னகைக்க வந்து விடுவார்
காற்றில் மிதந்து வரும் வார்த்தைகளென
தாழப்பறக்கின்றன
அதிகாலையின் முதல் பதிவை எழுதும்
வண்ணத்துப்பூச்சிகள்

காலைப்பறவைகள்
பனித்துளிகளில் தேங்கியிருக்கும்
ஈரக்காற்றை இறக்கைகளால் கிழிக்காமல்
கவனமாக நீந்திப்போகின்றன
மரங்கள் தியானித்துக்கொண்டிருக்கின்றன
இன்னும் கண் திறக்காமல்

செங்கல் பொடியையும் சாம்பலையும்
வரிகளாய் உடம்பில் தெளித்திருக்கும்
சங்குப்பூனையும்
உறுத்தும் மியாவிற்குப் பயந்து
நீட்டி சோம்பல் முறிக்கும்
அருக்கம் புல் புதரிலிருந்து

தெருநாய்கள் அடையாளம் தொலைந்து
சண்டையிடாமல் இருக்கும்
சற்று வெயிலேறும் வரைக்கும்

நசுக்கப்பட்ட சிவப்புத்தக்காளியாய்
தோற்றம் கொள்ளக் காத்திருக்கிறது
இன்றைய அதிகாலைச்சூரியன்

இன்னொரு தென்னங்கீற்றாய்
தலைகீழாகத் தொங்கி கிடக்கிறது
பச்சை அரவம் ஒன்று
கடைசி இரவும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
இருள் நதியாய்
அதன்மீது

தாயின் வெப்பச் சிறகுகளுக்குள் பதுங்கியிருக்கும்
காக்கைக் குஞ்சுகளுக்கும்
தாய்ப் புறாவின் வெது வெதுப்பில்
கண்ணயர்ந்திருக்கும் புறா குஞ்சுகளுக்கும்
இந்த நாள்
இன்னும் ஒரு காணாத
கனவென
இருக்கக்கூடும்

டப் டப் டப்டப் டப் டப்
இன்றைய அதிகாலையின் முதல் பதிவு
பூமியின் தோலை கிழித்துப்பறக்கின்றன
நான்கு கால்கள் இரண்டு கால்கள்

பெட்ரோலைக் குடித்துப்
புகையைத் துப்பி
சற்றதிர்ந்து விழித்த
அதிகாலையின் முகத்தில்
கரியைப் பூசி
விரைகின்ற ஒரு காரியமாய்

தென்னையில் அமர்ந்திருந்த
குரங்கொன்று அதிர்ந்து
பட படத்து
கிளைக்குக் கிளை தாவ
காக்கைகள் பட படத்து
ஓலமிட்டு அலற

காயை காலை நீட்டி
கதை கதையாய்க் கதைத்து
நடக்கிறார்கள்
அஷ்ட கோணலாய்

கும்பல் கும்பலாய் நின்று
செய்கிறார்கள் சிரிப்பு வைத்தியம்
அணில் பிள்ளைகள்
தலை தெறிக்க ஓடுகின்றன
மறு கூடு தேடி

மது வாசனையும்
சிகரெட் புகையும்
ஊது வத்தி வாசனையும்
பரவ ஆரம்பிக்கிறது
தெருக்களில்

குப்பைத் தொட்டிக் கருகில்
குவிந்து கிடக்கின்றன
காலி மதுப்புட்டிகளும்
சுருட்டி மடக்கப்பட்ட
பேப்பர் பொட்டலங்களும்
தண்ணீர் பைகளும்
குரல் உயர்த்தாத தெருநாய்களும்

மற்றும் நைந்த துணிகளுக்குள்
நைந்த உடல்களும்
சற்று நேரத்திற்கெல்லாம்
கடவுள் வந்து விடுவார்
ஒரு உக்கிரக புன்னகையோடு

Kaviyoviyathodar Yuthageethangal - Pattapoochiyin siragugalum vettukiliyin kalgalum 34 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34 – நா.வே.அருள்




பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும்
********************************************************************
கடவுளின் தலையை
ஞானி பொருத்திக் கொள்கிறபோது
அவனது பெயர் விவசாயி.

விவசாயியின் இதயம்
எப்போதும் தரிசாய் இருப்பதில்லை
அது
நாற்காலிகளை மரங்களாக்கிவிடுகிறது
மரங்களைத் தோப்பாக்கிவிடுகிறது
தோப்புகளை வனமாக்கிவிடுகிறது.

உலகத்திலேயே தனக்குப் பிடித்தமான ஒன்றை
இடச்சொல்லி
விவசாயியிடம் ஓர் உண்டியலைக் கொடுத்தால்
அவன் ஒரு விதையைத்தான் தேர்ந்தெடுப்பான்.

அவன் வளர்த்த அட்டைகள்
அவனது வயலில்
அறுவடைகளை உறிஞ்சத் தொடங்கிய பின்புதான்
அவனது உடலின் குருதி குறைய ஆரம்பித்தது.

அவனது கவலையெல்லாம்
விளைச்சலில் இறங்கும் பூச்சிகள் அல்ல
அவனது வயலில் இறங்கிய
திசையெல்லாம் பறந்துகொண்டிருக்கும்
பட்டாம் பூச்சியின் சிறகுகளும்
வெட்டுக்கிளியின் கால்களும் கொண்ட
புதிய விலங்குகள்!
அவை விநோத மொழி பேசுகின்றன
அவை
பாசனத்திற்கான தாகத்தின் கடலைப்
பருகிவிடுகின்றன.

அவனது கூரையின் வானமும்
தரையின் மண்ணும் களவாடப்படுகின்றன.

அவன் மீது மரணம்
ஒரு மலிவான பொருளைப்போலத் திணிக்கப்படுகிறது.

சாணம் பூச மறந்த விதை
கெட்டுப் போவதைப்போல
எதிரிகளின் மூளை செயலற்றுவிடுகிறது.

விவசாயிகளை வெல்ல நினைப்பவன்
முதலில் ஆயுதங்களைக் கீழே எறிந்தாக வேண்டும்
விவசாயிகள் முன் நிராயுதபாணியாக
நிற்க வேண்டும்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்