ந.க.துறைவன் : கவிதைகள் kavithaigal by na.ka.thuraivan

ந.க.துறைவன் : கவிதைகள்


அலைகள் தெரியாத குளம்

நீர்மறைக்கும் ஆகாயத்தாமரைகள்
கரையில் மீன்பிடித் தூண்டில்காரன்.

*

பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மையை ஏமாற்றி
இரை தேடும் குருவிகள்.

*
எழுத்து ரூபம்
சொற்கள் அரூபம்
பேச்சினிடையே மௌனம்.
*

அழகு சிதைந்த மலைக்கோட்டை
யாருமற்ற பழைய அரண்மனை
உள்ளே விறகு வெட்டி.

*

மேகங்கள் பயணம்
எதையோ தேடி வானில்
அலையும் ஒற்றை பறவை.

*

இலைகள் மகிழ்ச்சி
வயல் நாற்றுகள் சிரிப்பு
வசந்த காலம்.

*

தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழை குறித்து விமர்சனம்.

*

சூடான பால்
சர்க்கரை போட்டதும் மிதந்தது
உயிரற்ற எறும்புகள்.

*

கடந்து போகிறது காற்று
கடந்து போகிறது நிழல்
கடந்து போகிறது மனம்.

*
வாசலில் கோலம்
அழித்து விட்டு போகிறது
பால்காரன் சைக்கிள் டயர்.
*
அழகு மூலிகை வனம்
கொட்டும் அருவி
குரங்குகள் பருகும் குடிநீர்.

*

வாசலில் பூத்திருக்கு
சிவந்த செம்பருத்தி பூக்கள்
தெருவிற்கு அழகு.

Muyarchiyin Muthal Karu Muyalamai Shortstory By Karkavi. முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை - கார்கவி

முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி

அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது…..

பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று, ஆங்காங்கே அமர்ந்து இறைகளை தின்று கக்கி எசறிவிட்டு சென்றது….

கார்காலம் முடிந்து பனிக்காலம் வந்தது, வெயில் காலம் பல் இழித்து பச்சை உயிர்களுக்கு உயிர் கொடுத்தது……

அயராது காற்றில் ஓங்கி பறந்த செத்தைகள் மறந்தை தாண்டி, மறப்பொந்தையும் அடைந்தன…

அளவான வெயில் விழும் தருணம், பதமான மழைநீரின் தேங்கல்,.. காற்று நுழைந்து வெளிவர ஏற்ற தகவமைப்பு,….

அன்று சுத்திய காகமோ, பருந்தோ அள்ளி எசறி தின்று மென்று துப்பி விட்டு போன எத்தனையோ எச்சத்தில் ஒன்று இன்று துளிர்த்து…..

அந்த ஐம்பதடி வளைநெழி பனையில் அயராது அழகால் கொத்தி எதர்ச்சையாக விட்டு சென்ற மரங்கொத்தியின் பல நாள் உழைப்பு துளையில்…

இன்று பல இயற்கை மாற்றத்தில் மரத்தினுள் உள்ளே ஓர் விதை துளிர்விட்டது….

இதுவே *இயற்கை எனும் முயற்சியின் முதல் கரு* ஆனது….

மனிதனின் மனம் அப்படித்தான்…

எங்கோ பணியாற்றி இரத்தத்தை சிந்தி பலன் கிடைக்கும். சமயத்தில் சந்தர்ப்ப சூழலால் அதை விட்டு விலகி வர வேண்டிய நிலை உருவாகிறது…

இருப்பினும் மனிதன் அதனை மனதில் கொள்ளாது முயற்சியை கையில் கொண்டால்…

மென்மேலும் எந்த இடர் வந்தாலும் பயம் இன்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்…

வாழ்வில்… அடுத்த நிலைக்கு செல்லாத காரணம்…

முயற்சியின் முதல் கரு முயலாமை….

முயற்சி நல் வினை ஆக்கும்…..

Eththanai Pinangalai Puthaippathu Poem By Adhith Sakthivel ஆதித் சக்திவேலின் எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை

எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல்




குளிர் காலம்
அதற்குரிய குளிர் இல்லாவிடினும்
அது குளிர் காலம் தான்

பக்கவாட்டில் போர்த்திக்கொண்ட சிற்றுந்தின்
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல யாருமின்றிப் பயணித்தன
இன்னும் தார் அணிந்து கொள்ளா
கிராமத்துச் சாலைகள்
நிர்வாணமாய்
தம் மேடு பள்ளங்களை மறைக்க முடியாமல்

விதைக்கப்பட்ட எல்லைக் கற்களுடன்
நாற்புறமும் வயல்கள்
கான்கிரீட் விளைச்சலுக்குத் தயாரானபடி
உயர்ந்து பறந்து அதைக் கொண்டாடிய
பல வண்ணக் கொடிகள்

பனிக்கிரீடம் சூடியும்
தன்னடக்கம் காத்து
தலை சாய்ந்த புற்கள் வரப்புகளில்
அந்த அதிகாலை வேளையிலும்
சிற்றுந்தை விழுங்கிய புழுதி மூட்டம்
கடைசி நிறுத்தம் வந்ததை
மூச்சுத் திணறலோடு சொன்னது

நூற்றுக்கும் குறைவான வீடுகள்
தேவைக்கும் அதிகமான தேநீர்க்கடை ஒவ்வொன்றும்
பெயர்ப்பலகை இல்லா
அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகம்
எந்த அரசியலையும்
சூடாக்கிடும் தேநீர்க் கடையின் இருக்கைகள்
அச்சூட்டைத் தணித்திடும் சூடான தேநீர்
காலை நாளிதழ்கள் வாசிக்கக்
காத்திருந்த மேசைகள்

குக்கிராமத் தகுதிகளைத் தாண்டிய குக்கிராமம்
வாட்ஸ் அப் வரை வளர்ந்துவிட்ட தொழில் நுட்பம்
பண மதிப்பு இழப்பு ஜிஎஸ்டி யானைகளைக்
காரசாரமாகத் தடவிக் கொண்டிருந்தவர்கள்
என்னை எளிதில் அடையாளம் கண்டனர்
என் அப்பாவின் பட்டப் பெயரோடு
நண்பனின் மறைவு பற்றியும் சொன்னார் அதில் ஒருவர்

நானும் ஒரு தேநீரை வாங்கிக் குடித்த பின்
குவளையைக் கழுவிக் கவிழ்த்து வைத்தேன்
அதற்குரிய இடத்தில்
குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் நண்பன்
அவன் முகமும் ரோஜா மாலையும் வாடாமல்
நண்பனின் முகத்தை வருத்தத்தில்
வருடினேன் கண்ணாடியில்

என் கண்ணீரைத் துடைக்க
சில நேரங்களில்
கைக்குட்டை போதவில்லை
சில நேரங்களில்
அதற்குச் சாமர்த்தியம் போதவில்லை
துக்கத்தின் சுவை உப்பு எனச் சொன்னது
அதைக் கரைத்து வந்த கண்ணீர்

நண்பனை அடக்கம் செய்ய மாலை ஆனது
ஊருக்கு வெளியே
வெகு தொலைவில் தனித்து இருந்த சுடுகாட்டில்
சாதிக் கட்டுப்பாடு பிணங்களுக்கும்

“எவ்வளவு சாலைகளில் நடக்கவேண்டும் ஒரு மனிதன்
அவனை நீங்கள் மனிதன் என்று அழைப்பதற்கு?” எனத் தொடங்கும்
பாப் டிலனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன
இரவில் நான் சிற்றுந்து ஏறுகையில்
எத்தனை (தலை)முறை நாங்கள் பயணிக்கவேண்டும்
உங்களுடன் முன் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க?

எத்தனைக் குவளைகளை நாங்கள் கழுவ வேண்டும்
உங்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த?
எத்தனைப் பிணங்களை நாங்கள் புதைக்க வேண்டும்
உங்கள் பிணங்களோடு எங்கள் பிணங்களைப் புதைக்க?
அருகிலிருந்த ஒரு சிறு நகரம் செல்லும் வரை
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல
யாருமின்றிப் பயணித்தன………..எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல்